Friday, April 15, 2016

எம்ஜிஆர் 100 | 40 - சகலகலாவல்லவர்!


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போலவே அவரது ரசிகர்களும் கூர்மையானவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம். நேற்றைய தொடரில் மதுரையில் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனைகளை பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில் ‘மதுரை வீரன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய 6 வெள்ளிவிழாப் படங்களில் ஒன்றான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ விடுபட்டுவிட்டது என்றும் ‘இதயக்கனி’ படம் 20 வாரங்களுக்கு மேல் ஓடியதாகவும் ஏராளமான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் 20 வாரங்கள் ஓடிய படங்களை பட்டியலிட்டால் அதில் சதவீத அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களே அதிகம் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இதுபோன்ற கூர்மையான ரசிகர் களுள் ‘கவர்ச்சி வில்லன்’ என்று புகழப்பட்ட நடிகர் கே.கண்ண னும் ஒருவர். பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றியவர். சொந்த ஊரான சிவகங்கையில் ராம் தியேட்டரில் எம்.ஜி.ஆர். படங்கள் எல்லாவற்றையும் கண்ணன் விடாமல் பார்த்து விடுவார். அவரது நடிப்பையும் வசனங்களையும் கூர்ந்து கவனித்து, மாலை வேளைகளில் நண் பர்களிடம் எம்.ஜி.ஆரைப் போலவே நடித்து அவர்களை மகிழ வைப்பார்.

பின்னர், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த கண்ணன் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தபோது, ‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளே எம்.ஜி.ஆருடன் வசனம் பேசி நடிக்கும் காட்சி. கதைப்படி வீரனின் நண்பர்களில் ஒருவராக கண்ணன் நடித்திருப்பார். வீரனின் நண்பர்களை தளபதியாக வரும் நடிகர் பாலையா கொடுமைப்படுத்துவார். அங்கு வரும் எம்.ஜி.ஆர். தனது நண்பர்களை காப்பாற்றுவார். ‘‘அது சென்டிமென்டாக அமைந்து நிஜவாழ்க் கையிலும் அப்படியே எம்.ஜி.ஆர். எங்களை எல்லாம் காப்பாற்றினார்’’ என்று பின்னர், கண்ணன் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.

‘மதுரை வீரன்’ படம் தொடங்கி எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருடன் பல படங்களில் கண் ணன் நடித்திருக்கிறார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் பல காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக் கப்பட்டன. 26 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது.

எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டனவே தவிர, கண்ணனுக்கு வேலை இல்லை. மாலையில் படப்பிடிப்பு முடிந்து கண்ணனை சந்திக்கும் எம்.ஜி.ஆர். அவரிடம் ‘‘என்ன கண்ணன்? நன்றாக சாப்பிட்டாயா? தூங்கினாயா?’’ என்று விசாரிப்பார். கண்ணன் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டு போய்விடுவார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் பிற்பகல் இரண்டு மணிக்கு எம்.ஜி.ஆர். திடீரென ஏழு பக்க வசனங்களை கொண்டுவந்து அதன் ஒரு பகுதியை கண்ணனிடம் கொடுத்தார். மற்றொரு பகுதியை நடிகை லதாவிடம் கொடுத்தார். ‘‘இருவரும் வசனங்களை பாடம் செய்து விட்டு நான்கு மணிக்கு தயாராக இருங்கள். படப்பிடிப்பு இருக்கிறது’’ என்றார்.

படம் சரித்திரக் கதை என்பதால் நீண்ட வசனங்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாடம் செய்து தயாராக வேண்டுமே என்று கண்ணனுக்கு குழப்பம். அதை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். ‘‘இன்றுடன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை சென்னை புறப்படு கிறோம். நாடகத்தில் பல பக்க வசனங்களை மனப்பாடம் செய்த உனக்கு இது பெரிய காரியமா? ஐந்து மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் சரியாக இருக்காது. சீக்கிரம் தயாராகு’’ என்று சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார்.

எம்.ஜி.ஆர். சொன்னபடி கண்ணன் வசனங்களை பாடம் செய்து நான்கு மணிக்குத் தயாராக இருந்தார். கதைப்படி ஒரு நாட்டின் மன்னராக இருக்கும் கண்ணன், போருக்கு புறப்படுவார். அவரை லதா தடுத்து நிறுத்த முயற்சிப்பார். அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான வாதங்கள்தான் அன்று எடுக்கப்பட இருந்த காட்சி.

இந்தக் காட்சியை எடுக்க எப்படியும் ஒரு நாளாவது ஆகும். படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு கோணங்களில் படமாக்க வேண்டும். நான்கு மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்து ஐந்து மணிக்குள் எப்படி எம்.ஜி.ஆர். படமாக்கப் போகிறார் என்று கண்ணனுக்கு ஆர்வம்.

கண்ணனை விட சுறுசுறுப்பாக காட்சியை படமாக்குவதற்காக எம்.ஜி.ஆரும் தயாராக வந்தார். வசனங்களை கண்ணனும் லதாவும் பாடம் செய்து கொண்டிருந்த நேரத்துக் குள், காட்சியை விரைவாக படமாக்க எம்.ஜி.ஆர். செய்திருந்த ஏற்பாடுகளை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் கண்ணன்.

படத்தில் இடம்பெறும் பிரம் மாண்டமான போர்க் காட்சிகளை பட மாக்குவதற்காக ஒன்பது கேமராக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. கண்ண னும் லதாவும் பேசும் வசனக் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து அதற்காக, ஒன்பது கேமராக்களையும் ஒன்றின் பார்வை ஒன்றின் மீது விழாத வகையில் திறமையாக கோணங்களை அமைத் திருந்தார். 4.15 மணிக்கு எம்.ஜி.ஆர். ‘ஸ்டார்ட்’ சொல்ல, 4.30 மணிக்கு காட்சி ஓ.கே. ஆகிவிட்டது. கண்ணனும் லதாவும் ஒரே ‘டேக்’கில் நடித்த காட்சி இது.

ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு நடத்தி எடுக்க வேண்டிய காட்சியை பதினைந்து நிமிடத்தில் எம்.ஜி.ஆர். எடுத்து முடித்து விட்டார். அந்தக் காட்சியை ஒரே நேரத்தில் படமாக்கியது கூட பெரிதல்ல; அதை மிகச் சரியாக ஒன்பது ‘ஷாட்’களாக பிரித்து எடிட் செய்தார். இப்போதுகூட படத்தில் அந்தக் காட்சி பல கோணங்களில் பல முறை எடுக்கப்பட்ட காட்சி போலத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல; திரைப்படத்துறையில் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவர்.


தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

- தொடரும்...

எம்ஜிஆர் 100 | 43 - மழையில் உதவிய கரங்கள்

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R.புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்களை பெருமளவில் இன்றும் காணலாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது ரிக்ஷாக்காரர்கள் அன்பைக் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம், அவர்களின் நலனில் எம்.ஜி.ஆர். அக்கறை காட்டியதுதான்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையையும் ஊரே வெள்ளக்காடானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கே கடும் மழை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலில் நீண்ட கரங்கள் எம்.ஜி.ஆருடையவை.

சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறி விடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களி லும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.

ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்.

கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண் டிருந்தது. ரிக் ஷாக்காரர் ஒருவர் மழை யில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.

தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக் ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். ‘‘பாவம்தான். ஆனால், அதற்காக ரிக் ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக் ஷாவை ஓட்டுவார்கள்?’’ என்று கேட்டார்.

மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ‘‘ஏன் கூடாது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக் ஷாக்காரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதித்த நேரம். உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். ‘‘சென்னையில் எவ்வளவு ரிக் ஷாக் காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின் கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள்’’ என்று கூறினார்.

தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுகள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000-க்கும் மேற்பட்ட ரிக் ஷாக் காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை ரிக் ஷா ஓட்டுநர் கள் நன்றியுடன் வணங்கினர். நன்றியை செயலிலும் காட்டினர். தங்கள் ரிக் ஷாக் களில் எம்.ஜி.ஆரின் படங்களையும் போஸ்டர்களையும் ஒட்டினர்.

1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ படத்துக்கு அடுத்த படியாக பெரிய வெற்றி பெற்ற படம் ‘நம்நாடு’. இப்படத்தில் தனது அண் ணனாக நடிக்கும் டி.கே.பகவதியின் முதலாளியாக வரும் எஸ்.வி.ரங்கா ராவின் தவறுகளை எம்.ஜி.ஆர். கண் டிப்பார். இதனால், கோபமடைந்து

எம்.ஜி.ஆரை வீட்டை விட்டு வெளி யேறுமாறு டி.கே.பகவதி கூறுவார். எம்.ஜி.ஆரும் வீட்டில் இருந்து வெளி யேறி சேரிப் பகுதியில் தங்கியிருப்பார்.

நடிகைகள் குட்டி பத்மினி யும் தேவியும் டி.கே.பகவதியின் குழந்தைகளாக நடித்திருப்பார்கள். சித்தப்பாவான எம்.ஜி.ஆரைத் தேடி அவர் இருக்கும் வீட்டுக்கு இரு குழந்தைகளும் வந்து விடும். அவர்களிடம், ‘‘எப்படி இங்கே வந்தீர் கள்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.

‘‘ரிக் ஷாக்காரரிடம் உங்கள் பெயரை சொன்னோம். அவர் இங்கே கொண்டு வந்து விட்டார்’’ என்று குட்டி பத்மினி சொல்வார். எம்.ஜி.ஆர். பெயரை சொன் னாலே ரிக் ஷாக்காரர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதைப் போல இந்த வசனம் அமைந்திருக்கும்.

இதைவிட முக்கியமாக, எம்.ஜி.ஆர். மீது ரிக் ஷாக்காரர்களுக்கு இருக் கும் அளவற்ற அன்பையும் மரியாதை யையும் வெளிப்படுத்துவது போல, குழந்தையாக நடிக்கும் தேவி, எம்.ஜி.ஆரிடம் சொல்வார்....

‘‘காசு கூட வாங்கலே சித்தப்பா’’




எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப் படுத்தி தூர்வார ஏற்பாடுகள் செய்தார். மழை யால் வெள்ளம் ஏற்பட்டபோது முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தார்.

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் தரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் தருக்கு பயம் வந்து விட்டது.

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவ தோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று தர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் தர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு தரை நெகிழ வைத்தது.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…

‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்

ஆனாலும் உழைத்தே வாழுங்கள்

வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்

இரண்டும் உலகில் தேவை

ஆடும்போதும் நேர்மை வேண்டும்

என்றோர் கொள்கை தேவை’

படங்கள் உதவி: ஞானம்

‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.

படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது.

- தொடரும்...

Thursday, April 14, 2016

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்
DINAMALAR

பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 'புளூ பிரின்ட்' அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டாலும், புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த, முதல் பிரிவு மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகினர்.

எனவே, இந்த ஆண்டு கணிதத்துடன் இணைந்த அறிவியல் பிரிவு மாணவர்களை விட, வெறும் அறிவியல் மற்றும் வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, மாநில, 'ரேங்க்' பட்டியலில் முன்னணி பெற வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு, முதல் மூன்று இடங்களை, வணிகவியல் பிரிவு மாணவர்களே பெற்றனர்.அதேபோல், அதிக மதிப்பெண் எடுப்பதிலும், வணிகவியல் பிரிவு மாணவர்கள் சாதிக்க வாய்ப்புஉள்ளது. அதனால், கலை கல்லுாரிகளில் பி.காம்., படிப்புக்கு இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்படும்.

கூடுதல் இடங்களை தயார்படுத்த வேண்டும்:இதுகுறித்து, பேராசிரியர் சிலர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பி.காம்., 'சீட்'டுக்கு அதிக போட்டி ஏற்பட்டது. ஆனால், கல்லுாரிகளில் இடம் தான் கிடைக்கவில்லை. சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை போன்ற பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதலாக, 20 சதவீதம் வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த அனுமதி வர தாமதமானதால், தகுதியான பல மாணவர்கள் அதிக பணம் கொடுத்து, சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்தனர். எனவே, இந்த ஆண்டு கல்லுாரி நிர்வாகங்கள்,
முன்கூட்டியே பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதல் இடங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

DINAMALAR
சண்டிகர்:யூனியன் பிரதேசமான சண்டிகரில், கடுமையான கோடை காரணமாக தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீரை சேமிக்க, மாநகராட்சி
நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் நேரமான, காலை 5:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை, நீரை வீணாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த சமயத்தில், கார்களை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது; மீறுபவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏப்., 15 முதல், ஜூன் 30ம் தேதி வரை, இந்த தடை அமலில் இருக்கும். தொடர்ந்து தண்ணீரை வீணாக்குவது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

DINAMALAR

சிவகங்கை;கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது. பங்கேற்க செல்வோர் ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு சமர்ப்பிக்காதோர், அவற்றின் நகல்களை ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல் நேரில் வர இயலாதோர், ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் வாழ்வுரிமைச் சான்றை இணைத்து கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும் என, கருவூல கணக்குத்துறை தெரிவித்துள்ளது.இதில் 70 வயதை கடந்த ஓய்வூதியர்கள் சிலரது கைகளில் ரேகை அழிந்துவிட்டன. மேலும் ஆதார் எண் எடுப்போர் பல ஆண்டுகளாக ஒரே இயந்திரத்தை பயன்படுத்துவதால், தெளிவான கைரேகை இருந்தால் மட்டுமே பதிவாகிறது. இதனால் ஓய்வூதியர்களில் சிலர் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

தற்போது ஆதார் அட்டை இல்லாதோரை நேர்காணல் நடத்தாமல் கருவூல கணக்குத்துறை
அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் ஓய்வூதியர்கள் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆதார் எண் கொடுக்காத சிலருக்கு மார்ச் மாத பென்ஷனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆதார் அட்டை எண் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்,'' என்றார்.

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு பரிமாற்றம் செய்யும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு வசதி இருந்தால் போதுமானது. தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

NEWS TODAY 25.12.2025