Friday, November 11, 2016

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் குவிந்தன: டெல்லி, மும்பையில் வருமான வரி சோதனை

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் குவிந்தன. இதனிடையே, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

நாடு முழுவதும் காலாவதியான ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் நேற்று வங்கிக் கிளைகளை முற்றுகையிட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

கருப்புப் பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாத நிதியுதவி ஆகியவற்றைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதேநேரம், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் 2 நாட்களுக்கு பழைய நோட்டுகள் பெறப்படும் என அறிவித்தார். இதனால் பெரும்பாலானோர் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டதால் அங்கும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமலும், ஓட்டலில் சாப்பிட முடியாமலும் திண்டாடினர்.

இதனிடையே, நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1,000 பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கென ஒரு படிவம் தரப்பட்டது. அதை நிரப்பி அதனுடன் அடையாள அட்டையின் நகலையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் காலையிலேயே பொதுமக்கள் வங்கிகள், அஞ்சலகங்களை முற்றுகையிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் சென்றனர்.

மேலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சில வங்கிகள், அஞ்சலகங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. சில வங்கிகளில் ஒருசில மணி நேரங்களிலேயே புதிய நோட்டுகள் தீர்ந்துவிட்டன.

பழைய நோட்டுகளுக்கு பதிலாக ஒவ்வொருவரும் தலா ரூ.4,000 வரை மட்டுமே புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், சில வங்கிக் களைகளில் ரூ.2000 மட்டுமே வழங்கப்பட்டதாக மக்கள் புகார் கூறினர். அதேநேரம், பழைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

இங்கு சில்லறை கிடைக்கும்: மாற்றி யோசித்த மற்றும் சிலர்

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மக்கள் சில 'உத்தி'களைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், நம் மக்கள் சில உத்திகளைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க 36 கிளைகளைக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சரவண பவன் உணவகத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதுகுறித்து சரவண பவன் உணவக நிர்வாகி கே. கமலக்கண்ணன் கூறும்போது, ''நாங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்கிறோம். வங்கிகள் திறந்தவுடன் அவற்றை மாற்றிக் கொள்வோம்'' என்றார்.

சில சுவாரஸ்யமான தீர்வுகள்

சில வாடிக்கையாளர்கள் இந்தப் பிரச்சனைக்கு வேறு விதமாகத் தீர்வு கண்டனர். சாப்பிட்ட/ செலவழித்த இருவரின் தொகையை ஒருவரே செலுத்த மற்றொருவர், அவருக்கு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்துவிடுவதாக உறுதிகூறிச் சென்றார்.

இன்னும் சிலர் காஃபி குடித்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலமாக அதற்கான தொகையைக் கட்டினர். இது இந்திய வழக்கமில்லைதான். ஆனால் மாறித்தானே ஆகவேண்டும். சின்னத் தொகையாக இருந்தாலும், பணமில்லாத இந்த நேரத்தில் இதுவே சிறந்த வழியாக இருக்க முடியும்.

''யூடூ டாக்ஸி நிறுவனம் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கிறது. அதே நேரம் மீதிச் சில்லறையைத் தருவதில்லை. அதற்குப் பதிலாக அடுத்த பயணத்துக்கான அட்டையை வழங்கிவிடுகிறது'' என்கிறார் அதன் வாடிக்கையாளர் சிவசங்கரன்.

இண்டஸ்இண்ட் வங்கி, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 மடங்கு அதிக பாயிண்டுகளை வழங்குகிறது.

பிரச்சனைகள் எழும்போதுதான் மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக மாறுகிறார்கள் போல!

நெட்டிசன் நோட்ஸ்: செல்லாத நோட்டுகளும் மளிகைக்கடை நடத்தும் நல்லவரும்!

கோப்புப் படம்
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து, புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, நெட்டிசன்கள் அதன் சாதக, பாதகங்களை அடுக்கி வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

விலாசினி ரமணி

நேற்றுதான் கையில் இருந்த கடைசிப் பணம் வரை ஹாஸ்பிடலில் செலுத்தினேன். இன்று காலையிலிருந்து எங்கும் வெளியில் செல்லவில்லை. குழந்தைகள் உண்டியலில் சில்லறையாக 200 ரூபாய் தேறும். பக்கத்திலுள்ள எல்லா ஏ.டி.எம்மும் அத்தனை கூட்டமாகவும் பணம் இல்லாமலும் இருக்கின்றன. வீட்டில் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் எதுவும் இல்லை. என் வங்கிக் கணக்கிலிருந்து எப்படி பணம் எடுப்பேன்? வீட்டிற்கு எப்படி பொருட்கள் வாங்குவேன்?

Amudha Suresh

இந்த ஐநூறு ஆயிரம் புரட்சியில் அந்தக் காவேரி வாரியமும், விவசாயிகள் தற்கொலையும், கூடங்குளமும் மறைஞ்சு போச்சு!

Marx P Selvaraj

காலையில் இருந்து உழைத்து மாலையில் கையில் வாங்கிய பணத்தை இரவில் செல்லாது என்று சொல்லும் ஒரு அரசு யாருக்காக இயங்குகிறது?

பொன் கார்த்திக்

நல்லதோ கெட்டதோ இதுவரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள்தானே பொறுத்துக்குவமே... இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கருப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம்.

அரசு + மக்கள் இணையும் போது தான் எந்த திட்டமும் வெற்றி பெறும். திட்டங்கள் வெற்றி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும். இரு கைகள் இணைந்தால்தான் ஓசை வரும். ஒரு கையிலயும் ஓசை வரும், ஆனா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். வலி பொறுப்போம். வலிமை பெறுவோம்....

Ram Kumar

நாம் கொடுத்த எட்டணா, நாலணாவை வாங்க மாட்டேன் எனச் சொன்னக் கடைக்காரர்கள் எல்லாம், சில்லரைக்கு பதிலாக மிட்டாய் கொடுத்தக் கடைக்காரர்கள் எல்லாம் இனி வாலன்டியராக நம்மிடம் சில்லரைக்காகத் தவம் இருப்பார்கள்.. அரசியல்வாதி, உழைப்புறிஞ்சி முதலாளிகள், குறிப்பாக திடீரென முளைத்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் என எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி இது.

Umamaheswari ‏

ஆயிரம் ரூபாய் நோட்டு. காந்தி சிரிக்கிறார் மக்கள் அழுகின்றனர்.

சிவாஜி ‏

மோடியின் இந்த அதிரடி திட்டத்தால் கருப்பு பணம் ஒழியுதோ இல்லையோ, கள்ள நோட்டு ஒழியும்!

Dinesh N

கருப்புப் பணத்துக்கெதிரான இந்த அதிரடி முடிவு திடீரென்று எடுத்த முடிவல்ல....ஆட்சி அமைத்த உடனேயே SIT எனப்படும் ஸ்பெக்ஷல் இன்வஸ்டிகேக்ஷன் டீம் கருப்புப் பணம் குறித்த தகவல்களை திரட்டத் தொடங்கப்பட்டது. பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் வாயிலாக சாமான்ய இந்தியனும் வங்கிக் கணக்கு தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது....உள்நாட்டில் தானே முன் வந்து கணக்கில் காட்டப் படாத பணத்தை முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Mugil Siva

'எல்லாரும் நம்ம ரெகுலர் கஸ்டமர்ஸ்தாண்ணே. திடீர்னு சொன்னா எங்க போவாங்க. நேத்து நைட்ல இருந்து நிறைய பேருக்கு அக்கவுண்ட்ல எழுதிதான் பொருள் கொடுத்துக்கிட்டிருக்கேன்' என்று நோட்டை எடுத்துக் காண்பித்தார் எனது ஏரியாவில் மளிகைக்கடை நடத்தும் நல்லவர்.

Pattukkottai Prabakar Pkp

பிரதமர் மோடியின் இந்த அதிரடியான நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். பொது மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதன் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களின்போது சமாளிக்கவில்லையா என்ன? பஞ்சம், போர் சமயங்களில் முன் தலைமுறை மக்கள் சந்திக்காத பிரச்சினைகளா?

இந்த நடவடிக்கையின் மூலம் கண்டிப்பாக கணிசமாக கருப்புப் பணம் ஒழியும். தவிர.நம் நாட்டுக்குள் இறக்கி விட்டிருக்கும் கள்ள நோட்டுகள் பெரிய அளவில் கட்டுக்குள் வரும். நேர்மையாளர்களும், நாட்டில் தூய்மை பரவ வேண்டும் என்று விரும்புபவர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்க மாட்டார்கள்.

Prabhu Mpr

இனி கேஷ் டிரான்ஸாக்‌ஷன்ஸ் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மட்டுமே கொண்ட நாடாக மாறும். நாட்டில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளும் கணக்கில் வரும்போது அரசின் வருமானம் கூடும். லஞ்சம் மற்றும் முறையற்ற, விஷயங்களை தவிர்க்க முடியும்.

தேர்தலின் போது வோட்டுக்கு பணம் கொடுக்கும் அனைவரும் கருப்பு பணத்தையே நம்பி இருக்கிறார்கள். இனி அது சாத்தியமில்லை. பெரும்பாலும் நல்ல விஷயங்களே இதில் இருப்பதாக தெரிந்தாலும் நிஜமான பாதிப்புகளை ஓரிரு மாதங்கள் கழித்தே சொல்ல முடியும். சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நாட்டின் நலனுக்காக மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமரும் அறிவித்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

Sowmiya

இன்று பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பாட்டி ஆயிரம் முறை அவரிடம் இருந்த அந்த மூன்று நூறு ரூபாய் தாள்களை திருப்திப் பார்வை பார்த்துக் கொண்டே வந்ததார். அந்த பாட்டிக்கு பேங்குக்கு போகத் தெரியுமாங்கறத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு ..!

Vaa Manikandan

புழக்கத்தில் இருக்கிற அதே சமயம் கணக்கில் வராத பணத்தை முடக்குவதுதான் முதல் காரியமாக இருக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறார்கள். இதோடு எல்லாமும் முடிந்துவிடுவதில்லை. இன்னமும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த திட்டத்துக்கான முக்கியக் காரணம் வெளியிலிருந்து வரும் ஹவாலா பணத்தைத் தடுப்பது, இங்கேயிருந்து வெளிநாடு செல்லும் பணத்தை முடக்குவது என என்னுடைய குருவி மண்டைக்கே நிறையத் தோன்றுகிறது. நாட்டை ஆள்கிறவர்களும் பொருளாதார வல்லுநர்களும் யோசித்திருக்க மாட்டார்களா? செய்வார்கள் என நம்பலாம். என்னவோ ஒரே ராத்திரியில் மோடி முடிவெடுத்துவிட்டு ஸ்டண்ட் அடிப்பதாக எழுதியும் பேசிக் கொண்டிருப்பவர்கள் துளியாவது யோசித்துப் பார்க்கலாம். இது அவ்வளவு எளிய முடிவா? ரிசர்வ் வங்கியிலிருந்து, பொருளாதார நிபுணர்கள் வரை ஆலோசனை நடத்தாமலா முடிவெடுத்திருப்பார்கள்? ஏதாவது குதர்க்கம் நிகழ்ந்தால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிடும் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலா அறிவித்திருப்பார்கள்? பிசகினால் நாடு திவாலாகிவிடும்.

Aishwarya Govindarajan

ரயிலில் சுண்டல் விற்கும் நரைமுடி ஊமை ஆச்சிக்கும், 16 வயதிலேயே கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கடலை மிட்டாய் விற்கும் சிறுமிக்கும் தங்கள் கையில் இருக்கும் பத்து ரூபாயை கொடுத்து வீணடிக்க வேண்டாம் என பத்திரப்படுத்துகிறார்கள் சக பயணிகள். அவர்களது இந்த இரண்டு நாட்களை நரகமாக்கிவிட்டு அரசும் சட்டமும் அப்படியென்ன தன் கடமையை செய்துவிடப் போகிறது.. !

P Kathir Velu

பொருளாதாரம் பேசுவது, அரசைக் குறை சொல்வது, அவகாசம் கொடுத்திருக்கலாமே எனச்சொல்வது, அந்த பதினைந்து லட்சம் என்னானது எனக்கேட்பது, தொலைக்காட்சியில் நாம எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம்ங்க தினக்கூலிகளை நினைச்சுப் பாருங்க எனச்சொல்வது, பதுக்கல் பணக்காரர்கள் சிக்கல் குறித்து மகிழ்வது... ஆகியவற்றிற்கு முன்னால் அவசியமான ஒன்று இப்படியான பதைபதைப்புக்குள்ளாகும் மனிதர்களை ஆற்றுப்படுத்துவது.

சாமானியர்களுக்கு தாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து, கையில் வைத்திருக்கும் பணத்திற்கு உத்திரவாதம் தேவைப்படுகிறது. அவர்களை எந்த வகையிலும் பதட்டப்படுத்தாமல், நிதானமான வழிகளைச் சொல்லி, அவர்களின் பணம் எவ்வகையிலும் இழப்பாகிவிடாது என்பதை அழுத்தமாகச் சொல்லி வழி நடத்துவது படித்தவர்கள், நிலைமை புரிந்தவர்களின் கடமை.உண்மையில் இப்போது பலருக்கு உடனடியாகப் பணம் தேவையில்லை. ஆறுதலும், நம்பிக்கையும் தான். அதைக் கொடுங்கள்.

பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம்

அதிக அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் பல்வேறு வங்கிகளின் கிளைகளில் மாறி மாறி செலுத்தினால், வருமான வரித் துறையிடம் இருந்து தப்பிக்க முடியுமா என்பது குறித்து அதிகாரி கள் விளக்கம் அளித்துள்ளனர்.
காலாவதியாகும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 2000, புதிய 500 ரூபாய் நோட்டுகள் அல்லது 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘500, 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் வைத்திருப்பவர்கள் ஒரேயடியாக வங்கியில் செலுத்தினால்தான் கேள்விகள் எழும். அதற்கு பதிலாக, பல்வேறு வங்கிகளின் கிளைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்தினால், வருமான வரி செலுத்தாமல் தப்பிவிடுவார்களே’ என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இது சாத்தியமா? என்று கேட்டதற்கு வருமான வரித் துறை மற்றும் வங்கி அதிகாரிகள் அளித்த விளக்கம் வருமாறு:

எந்த வங்கிக் கிளையிலும் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்தும்போதோ, எடுக்கும்போதோ கண்டிப்பாக வருமான வரி நிரந்தர கணக்கு (PAN) எண்ணை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்போது, பல் வேறு வங்கிகளின் எத்தனை கிளை களில் தனித்தனியாக பணம் செலுத் தினாலும், குறிப்பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை முழுவதும் ‘பான் எண்’ வாயிலாக வருமான வரித் துறையினருக்கு தெரிந்துவிடும்.

கணிசமான தொகையை பரிவர்த் தனை செய்பவர்கள் பற்றிய விவரங் களை வங்கி நிர்வாகமே வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதும் உண்டு. ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்’ (நோ யுவர் கஸ்டமர்) என்ற முறையின் கீழ் வங்கிகள் சேகரித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரங்களை வருமான வரித் துறையினர் கேட்டுப் பெறவும் செய்யலாம்.

ஒருவர் குறிப்பிட்ட வங்கியின் பல்வேறு கிளைகளில் வங்கிக் கணக்கு தொடங்கும்போது கணக்கு வைத்திருப்போருக்கான பிரத்யேக எண் (வாடிக்கையாளர் ஐடி) ஒன்று ஏற்படுத்தப்படும். அது வாடிக்கை யாளருக்கு தெரியாது. அவர் எத் தனை கிளையில் கணக்கு தொடங்கி னாலும் அவருக்கு ஒரே ஒரு எண் தான். அந்த எண் மூலம் அவரது மொத்த பணப் பரிவர்த்தனை விவரங்களை அந்த வங்கியிடம் இருந்து வருமான வரித் துறையினர் பெறலாம்.

அதேநேரத்தில், பல்வேறு வங் கிக் கிளைகளில் தினமும் ரூ.49 ஆயி ரம் வீதம் பணம் செலுத்தினால், அதைக் கணக்கிட இயலாது. அது போன்ற சூழலில், யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, புகார் வந் தாலோ, அதன் அடிப்படையில் குறிப் பிட்ட நபரின் பணப் பரிவர்த்தனை சோதித்து அறியப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித் தனர்.

இதற்கிடையே, குறிப்பிட்ட வங் கிக் கணக்கில் தினமும் ரூ.49 ஆயிரம் வீதம் பணம் செலுத்துவோர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை வருமான வரித் துறை கேட்டிருப்பதாகத் தெரிகிறது.

Thursday, November 10, 2016

அமெரிக்காவின் 45-வது அதிபர் டொனால்டு ட்ரம்ப்: உலகை வியப்பில் ஆழ்த்திய முடிவுகள் ... பிடிஐ

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், நியூயார்க் நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று பேசினார். உடன் அவரது குடும்பத்தினர். | படம்: ஏஎப்பி

பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி: நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (70) வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்பாராத இந்த வெற்றியால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதேநேரம், நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக தலைவர்கள் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது. ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் (69) குடியரசு கட்சி சார்பில் அரசியல் அனுபவம் இல்லாத கோடீஸ்வர தொழிலதி பரான டொனால்டு ட்ரம்பும் (70) போட்டியிட்டனர்.

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் வகை யில் அமைந்தது. பிரச்சாரத்தின் போது, இருவரும் பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

அமெரிக்காவில் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப் பேன், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்ற ட்ரம்பின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மீது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனால், அவரது கட்சிக்குள் ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான ஊடகங்களும் ட்ரம்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்தன. இதனால், ஹிலாரி வெற்றி பெறுவார் என பல்வேறு நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

எனினும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது தனது தனிப்பட்ட இ-மெயில் சர்வரை அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி யதாக ஹிலாரி மீது ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது ஹிலாரிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதால் ட்ரம்பின் செல்வாக்கு சற்று அதிகரித்தது. எனினும், ஹிலாரியே வெற்றி பெறுவார் என இறுதிக் கட்ட கருத்து கணிப்புகளும் தெரிவித்தன.

இந்நிலையில் 8-ம் தேதி 50 மாகாணங்களிலும் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. தொடக்கத்தில் இருவருக்கும் இடையே, இழுபறி நிலவியபோதிலும், யாருமே எதிர்பாராத வகையில் பல்வேறு கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக, பென்சில்வேனியா, ஓஹியோ, புளோரிடா, டெக்சாஸ், அலாஸ்கா மற்றும் வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்கள் ட்ரம்பின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன.

நாட்டின் முதல் பெண் அதிபரா வார் என ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் (69) அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். மொத்தம் உள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் இதுவரை ட்ரம்புக்கு 289-ம், ஹிலாரிக்கு 218-ம் கிடைத்துள்ளது.

இன்னும் சில மாகாண முடிவுகள் வர வேண்டி உள்ளது. எனினும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்பதால் ட்ரம்ப் வெற்றி பெறுவது உறுதி.

இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் மாதம் முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார். இவர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

தேர்தல் வெற்றி குறித்து தனது பிரச்சார தலைமை அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசும்போது, “நாம் அனை வரும் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் இது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் அதிபராக இருப்பேன் என உறுதி கூறுகி றேன். ஹிலாரி கிளின்டன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்தார். கடுமையான போட்டியாக விளங்கிய அவருக்கு நன்றி தெரி வித்தேன்” என்றார்.

நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், முதல்முறை அதிபராக பொறுப் பேற்றவர்களில் அதிக வயது டையவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ட்ரம்பின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களும் குடியரசு கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.

உலக தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, துருக்கி பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் என உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர் பாராதவிதமாக ட்ரம்ப் வெற்றி பெற்ற தால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. அமெரிக்க டாலர் மதிப்பும் கடுமையாக சரிந்தது.

ஹிலாரி மீதான இ-மெயில் புகாருக்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. எனினும், இ-மெயில் விவகாரம் தொடர்பான புதிய புகார் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கடந்த மாத இறுதியில் எப்பிஐ இயக்குநர் தெரிவித்தார். இது ஹிலாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

எனினும், வாக்குப்பதிவுக்கு 2 நாள் முன்னதாக, இந்தப் புகாருக்கு ஆதாரம் இல்லை என அறிவித்தார். ஆனாலும் காலதாமதமாக இந்த அறிவிப்பு வெளியானதால் ஹிலாரி யின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

NEWS TODAY 24.05.2026