Sunday, March 19, 2017

Posted Date : 12:03 (19/03/2017)

: 12:03 (19/03/2017)
JUNIORVIKATAN


உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்.... ஒரு பூசாரி முதல்வர் ஆன கதை!




இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் முதல்வராய்ப் பொறுப்பேற்க இருக்கும் யோகி ஆதித்யநாத், இதற்குமுன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி., பெரும்பான்மையாக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே மாபெரும் வெற்றிபெற்ற பி.ஜே.பி., புதிய முதல்வரைத் தேர்வுசெய்ய ஒருமனதாக முடிவு செய்தது. இதில், அந்த மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச புதிய முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நேரத்தில், அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்துகொண்டிருக்க... மற்றொரு புறம், அவர் முன்னர் ஏற்படுத்திய சர்ச்சைகளும்... வழக்குகளும் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

''ராமர் கோயில் கட்ட முடியும்!''

உத்தரகாண்ட்டில் உள்ள கட்வால் என்ற கிராமத்தில் பிறந்தவர், ஆதித்யநாத். அஜய் சிங் பிஷ்ட் என்று பெயர்கொண்ட இந்த யோகி, ''ஆதித்யநாத்தை, உத்தரப்பிரதேச முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டும்; அவர் முதலமைச்சர் ஆனால்தான் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட முடியும்'' என, அங்கு கடந்த ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை பி.ஜே.பி நிராகரித்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த முடிந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தல் வெற்றிக்குப் பெரும்பான்மையான பங்கு இவருடையதே என்று சொல்லப்படுகிறது.

கோரக்பூர் ஆலயத்தின் தலைமை பூசாரி!

அரியாசனத்தில் அமர்வதற்கு அல்லும்பகலும் உழைத்த ஆதித்யநாத், அதற்கான பயனைத் தற்போது அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் அவருடைய பழைய புராணங்களைக் கொஞ்சம் பார்ப்போம். இருபது ஆண்டுகளுக்கு முன்... கோரக்நாத் ஆலயத்தால் நடத்தப்பட்டுவரும் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், ஜவுளி எடுக்க ஒரு கடைக்குச் சென்றனர். அங்கே அந்தக் கடைக்காரருக்கும் இவர்களுக்கும் வாதம் ஏற்பட, கடைசியில் அந்தக் கடைக்காரர் கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். இந்த நிகழ்வு நடந்த இரண்டு தினங்கள் கழித்து, அந்தக் கடைக்காரருக்கு எதிராக ஒரு யோகி தலைமையில், போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அதற்குத் தலைமை தாங்கிய யோகிதான் தற்போதைய உத்தரப்பிரதேச மாநில அரியாசனத்தில் அமரயிருக்கும் ஆதித்யநாத். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான், மிகவும் பிரசித்தி பெற்ற கோரக்பூர் ஆலயத்தின் தலைமை பூசாரியாக, அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றுமுதல் கோரக்பூரின் அரசியலில் நாயகராக வலம்வரத் தொடங்கினார். இதன் காரணமாகக் கோரக்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் ஈர்க்கப்பட்டார். இந்து மகாசபை தலைவராகவும் உருவெடுத்தார்.

சுடுகாடு முற்றுகை!

விரைவிலேயே நன்கு பிரபலமான ஆதித்யநாத், தன் கருத்துகளால் சர்ச்சைகளுக்குள் சிக்கியும்கொண்டார். மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்ச் ரூக்கியா என்ற கிராமத்தில் இரண்டு பிரிவினருக்கிடையே பிரச்னைக்கு உரியதாக இருந்த சுடுகாட்டை, கைப்பற்றும் நோக்கத்தில் களத்தில் இறங்கினர் ஆதித்யநாத்தும் அவரது ஆதரவாளர்களும். அந்தச் சுடுகாட்டை முற்றுகையிட்ட அவர்கள், அங்கே ஓர் ஆலமரத்தையும் நட்டனர். இதனால் அங்கு, கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட... அவரைக் கைதுசெய்தது போலீஸ். அத்துடன், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

சிறைத்தண்டனை!

மேலும், கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், இந்து இளைஞர் கொலை தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்தார். இதையடுத்து, கோரக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் நடந்தது. இதில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஆதித்யநாத், கடந்த 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 15 நாள்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார். இந்த இரண்டு வழக்குகளின் மீதான விசாரணை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அமீர்கானுடன் மோதல்!

இதுதவிர, கடந்த 2014-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,''இந்துக்கள் மீது சிறுபான்மையினர் தாக்குதலில் ஈடுபட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ, அதே விதத்தில் இந்துக்கள் பதிலடி தருவார்கள்'' என்று சிறுபான்மையினருக்கு எதிராகச் சொன்ன கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ''நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது... வேறு நாட்டுக்குச் செல்கிறேன்'' என்று சொன்ன நடிகர் அமீர்கானையும், அவர் விட்டுவைக்கவில்லை. ''அமீர்கான் செல்வதை யாரும் தடுக்கவில்லை. மேலும், அவர் நாட்டைவிட்டுச் சென்றால் மக்கள்தொகையைக் குறைக்க உதவும்'' என்று அவருக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார்.

மிஸ்டு கால் பிரசாரம் !

அமெரிக்காவில் தற்போது புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், ஏழு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இன மக்கள் அந்த நாட்டுக்குள் வர தடைவிதித்தார். இதற்கு ஆதித்யநாத், ''அதிபர் டிரம்ப், பிறப்பித்த குடியேற்றத் தடை உத்தரவு போன்ற ஒன்று, இந்தியாவுக்குத் தேவைதான். இந்துப் பெண்களைக் காதலித்து மதம் மாறச்செய்யும் லவ் ஜிகாத் ஆகிய விஷயங்கள் தேர்தலில் முக்கியத் துருப்புச் சீட்டுகளாக எங்களுக்கு இருக்கும்'' என்றார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வலியுறுத்தி, அவர் மிஸ்டு கால் பிரசாரம் செய்தார். மேலும், ''சூரிய நமஸ்காரம், யோகாவை எதிர்ப்பவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டில் அறையில் வாழ வேண்டும்'' எனப் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் பேசியிருக்கிறார்.

இப்படி அவர் பேசிய கருத்துகளுக்கு எதிராகக் கண்டனங்கள் கிளம்பியதுடன், வழக்குகளும் பதியப்பட்டன. ''தொடர்ந்து இதுபோன்று அவருக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்ததனாலேயே, ஐந்து முறை எம்.பி-யான ஆதித்யநாத்துக்கு, மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அத்துடன், ஓர் ஆண்டாக உத்தரப்பிரதேசத்தில் யோகிகள் இவரை முதல்வராக நிறுத்த வேண்டும் என்று சொன்ன கருத்தையும் பி.ஜே.பி ஏற்றுக்கொள்ளவில்லை'' என்று சொல்லும் பி.ஜே.பி நிர்வாகிகள், ''உத்தரப்பிரதேசத்திலாவது சர்ச்சையின்றிப் பேசாமல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தட்டும்'' என்கின்றனர்.

இனிமேலாவது சர்ச்சைக்கு இடமின்றி ஆட்சிபுரிந்தால் சரிதான்!

அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து... ஏன் மூன்று முடிச்சு போடனும்? #சம்பிரதாயம் அறிவோம்

SAKTHIVIKATAN

இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. நம்முடைய இந்து மதத்தில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வாழ்க்கைமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
பிரம்மச்சாரிகளுக்கும், வானபிரஸ்தர்களுக்கும், சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைத் தரும் கிருஹஸ்தம் என்னும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களே மிகவும் சிறப்புக்கு உரியவர்கள் என்றும், இல்லற தர்மத்தில் இருப்பவர்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள் என்றும் கௌதம மகரிஷி கூறி இருக்கிறார்.
மூன்று முடிச்சு  
சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் ஓர் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் என்ற பந்தத்தில்தான் தொடங்குகிறது.
இந்தத் திருமண வாழ்க்கை பயனுற அமையவேண்டுமானால், திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் கணவன் - மனைவி இருவர் மனதிலும் அன்பும் அறமும் பொருந்தி இருக்கவேண்டும். 
சிறப்பு மிக்க கணவன் - மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் உள்ள சடங்குகளையும் அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம். 
பெண் பார்க்கும் படலம்:
திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது, பிள்ளையின் மனம் முதலில் பெண்ணிடம் லயிக்கவேண்டும். விருப்பம் ஏற்படவேண்டும். இதுதான் முதல் படி. இந்த நிலையில் பிள்ளைக்கு பெண்ணையோ, பெண்ணுக்கு பிள்ளையையோ பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. பிள்ளை வீட்டார்தான் முதலில் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து பெண் கேட்கவேண்டும். அனைத்து பொருத்தங்களும் முடிந்த பிறகு முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்படும். 
நிச்சயதார்த்தம்:
இல்லற வாழ்க்கையின் தொடக்கத்துக்கு ஒரு முன்னுரை போல் அமைந்திருப்பது நிச்சயதார்த்தம் என்னும் சடங்கு. நிச்சயதார்த்தத்தின்போது சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. அந்த மந்திரங்கள் அவர்களுடைய மணவாழ்க்கையை வளம் பெறச் செய்ய தேவர்களை அழைக்கும் மந்திரங்கள் ஆகும்.  
'வருண பகவானே! எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என் உடன் பிறந்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதவளாக இருக்கட்டும்'
அடுத்ததாக இந்திரனைப் பார்த்து, 'இந்திர தேவனே! எனக்கு மனைவியாக வர இருப்பவள் தன்னுடைய பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பவளாக இருக்கட்டும்'
தொடர்ந்து சூரியபகவானைப் பார்த்து, ''இவள் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்றவளாகத் திகழட்டும்'
பிறகு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, ''பெண்ணே! நீ அழகிய கனிவு நிரம்பிய கண்களை உடையவளாகவும், கணவனாகிய எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை அளிப்பவளாகவும், நல்ல மனம் உள்ளவளாகவும், தேஜஸ் நிரம்பப் பெற்றவளாகவும் திகழ்வாயாக. தீர்க்காயுள் உள்ள பிள்ளைகளைப் பெறுபவளாகவும், தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவளாகவும், அனைவருக்கும் நன்மையை செய்பவளாகவும் இருப்பாயாக'' என்ற பொருளுடைய மந்திரத்தைச் சொல்கிறான்.
இந்த மந்திரங்களைப் போலவே மற்ற அனைத்து திருமண மந்திரங்களும் அர்த்தம் உள்ளதாகத் திகழ்கின்றன.
திருமணம் 
காசி யாத்திரை:
வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது விரக்தி ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும்போது, அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான தூண்டுகோலாக அமைந்திருப்பதுதான் காசி யாத்திரை விஷயம். எதற்கெடுத்தாலும் நான் சந்நியாசியாகப் போய்விடுவேன் என்று சொல்லும் சஞ்சல மனம் ஆண்களுக்கே இயல்பானது. அப்படி மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதற்காகத்தான், ''வேண்டாம் இந்த துறவற மனோபாவம். இல்லறமே நல்லறம். அந்த நல்லறத்தில் நீ ஈடுபடுவதற்காக, நான் இதுவரை செல்லமாக வளர்த்த என் பெண்ணையே உனக்குத் தருகிறேன்'' என்று சொல்லும் நிகழ்ச்சிதான் காசி யாத்திரை. பிற்காலத்தில் கணவனுக்கு எப்போதேனும் மனச் சஞ்சலம் ஏற்படும்போது, இந்த காசி யாத்திரை வைபவத்தை நினைத்துப் பார்த்து மனம் மாறவேண்டும் என்பதற்காகவே காசியாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கூறைப் புடைவை:
காசி யாத்திரை நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்ணுக்கு மணமகன் வீட்டு சார்பில் கூறைப் புடைவை கொடுக்கப்படும். கொடுக்கும்போது ஒரு மந்திரத்தை மணமகன் சொல்லவேண்டும். அந்த மந்திரத்தின் பொருள், ''என்னுடைய வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவளே! இந்தப் புடைவை உன் மேனியைச் சுற்றி உன்னைப் பாதுகாப்பாகவும், உன் அழகைப் பராமரிக்கவும் பயன்படுவதைப் போலவே, தர்ம தேவதைகள் உன்னைச் சூழ்ந்திருந்து, உன்  பண்பு, அழகு ஆகியவற்றையும் பாதுகாக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்பதாகும்.
பெண்ணின் இடுப்பில் தர்ப்பையால் கட்டுதல்:
கூறைப்புடைவை அணிந்து வந்த பெண்ணின் இடுப்பில் தர்ப்பையில் செய்த கயிற்றைக் கட்டுவார்கள். 'நல்ல மனம், குழந்தைகள், சுமங்கலியாக நீண்ட நாள் வாழும் தன்மை, ஆரோக்கியமான நல்ல உடல், இவற்றை வேண்டிப் பெற்றுக்கொண்டவளாகவும், கணவனை நல்லொழுக்கத்துடன் பின்பற்றும் விரதத்தை மேற்கொள்பவளாகவும், இவள் தூய்மையை உணர்த்தும் நெருப்பின் முன் நிற்கிறாள். இவளைத் தர்ப்பையாகிய கயிற்றால், விவாகம் என்னும் புனிதமான காரியத்துக்காகக் கட்டுகிறேன்' என்பதே இதன் பொருள். 
தேவதைகளை வேண்டும் தேவதா சம்பந்தம் உள்ள மந்திரம் இதை அடுத்துச் சொல்லப்படுகிறது. மணப்பெண்ணை, சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதன் பின்னரே அவள் மணமகனுக்கு உரியவளாகிறாள்.
இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, 'தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவளை எப்படி மனைவியாக ஏற்கலாம்?' என்று கேட்கத் தோன்றும்.  ஆனால், உண்மை அதுவல்ல... ஒரு பெண்ணை சிறுவயதில் எத்தனையோ பேர் ஆசையாகத் தூக்கியிருப்பார்கள்... இதனாலெல்லாம் அந்தப் பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டு விடுகிறதா என்ன?
ஒரு பெண்ணின் சரீரத்தில் ரோமம் உண்டாகும்போது சோமன் என்ற தேவன் அவளைப் பாதுகாக்கிறான். 'ரஜஸ்' ஏற்படும்போது (ருதுவாகுதல்) கந்தர்வன் அவளைப் பாதுகாக்கிறான். சோமதேவன் கன்னிப்பெண்ணுக்கு உடல் பலம் அளிப்பவன்; கந்தர்வன் அவளுக்கு அங்க அழகுகளை கொடுப்பவன்; அக்னி அவளுக்கு யௌவனத்தின் பிரகாசத்தைக் கொடுப்பவன். இவற்றைப் பெற்று, இந்த இயற்கை சக்திகளின் ஆசி உடலில் மேன்மையை அளித்த பிறகுதான், அவள் கணவனை அடைய முழுத்தகுதி பெறுகிறாள்.
அவ்வாறு அந்தப் பெண்ணைக் காத்து அருள்பாலித்த தேவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. 
கன்னிகாதானம்:
தானங்களிலேயே மிகவும் உத்தமமான தானமாகப் போற்றப்படுவது கன்னிகாதானம். தான் அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை, தகுந்த வரனுக்கு தானமாகத் தருவதே கன்னிகாதானம். கன்னிகாதானம் செய்பவரின் 21 தலைமுறைகள் நற்கதி அடைவார்கள் என்பது சாஸ்திரம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் தந்தை ஒரு மந்திரம் சொல்வார். அந்த மந்திரத்தின் பொருள்: "பொன்நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ள என் கன்னிகையை திருமாலின் சொரூபியான திருநிறைச்செல்வா! உனக்குத் தானமாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்.. என் மூதாதையர்களும், வருங்கால சந்ததிகளும் பிரும்மலோகத்தில் நித்யானந்த பதவியைப் பெறவே இந்த உத்தமமான மகாதானத்தைச் செய்திருக்கிறேன். இந்த தானத்தால் என் பித்ருக்கள் கடைத்தேறுகிறார்கள். இந்த மங்களயோகத்திற்கு இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்) சாட்சிகள். எல்லா தேவதைகளும் சாட்சிகள். என் பெண்ணே! நீ என் எதிரில் என்றும் காட்சியளிப்பாயாக! உன் இரு பக்கங்களிலும் பரமேசுவரியே காட்சி தருகிறாள். நீ தேவி அருள் பெற்ற உத்தமி. நீ எனக்கு எல்லாப் பக்கங்களிலும் பெருமை அளிப்பாயாக. உன்னை இந்த நல்ல மணமகனுக்குத் தானம் அளிப்பதால், நான் நற்கதி அடைவேன். மோட்ச சாம்ராஜ்யத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலி நான்!"
திருமண மாங்கல்யம் 
மாங்கல்யதாரணம்:
அடுத்து மாங்கல்யதாரணம் நிகழ்கிறது. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் காட்டும் அடையாளம் அது!
'மாங்கல்யம் தந்துநாநே' - என்ற மந்திரம் சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான். அந்த மந்திரத்தின் பொருள்: ''இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!' 
அப்போது போடப்படும் 'மூன்று முடிச்சு'கள் அர்த்தபுஷ்டியானவை. கணவன் ஒரு முடிச்சு போட, கணவர் வீட்டார் சார்பில் கணவனின் தங்கை மற்ற முடிச்சுகளைப் போடுகிறாள். ஏன்? கணவன் மட்டுமல்லாது, கணவனின் வீட்டாரும் அவளை மகிழ்ச்சிகரமாக தம் குடும்பத்தோடு இணைந்து பந்தத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். 
இந்த மூன்று முடிச்சுகளில் பல தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். அதுமட்டுமின்றி, உலகியல்படி, தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் அவள் மதிக்கவும் - திரிசுரணசுத்தியாக மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் காக்கவும் - முக்காலமும் உணர்ந்து இல்லறதர்மத்தைப் பேணவும் - இந்த மூன்று முடிச்சுகள் அடையாளமாகத் திகழ்கின்றன. 
சப்தபதி:
இதைத் தொடர்ந்து சப்தபதி என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்து சட்டங்கள் கூட இந்த சப்தபதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த 'சப்தபதி' முடிந்தால்தான் முழுமையாகத் திருமணம் நிறைவேறியதாக அது ஏற்றுக்கொள்கிறது.
மணமகளின் கால்கட்டை விரலைப் பற்றி, மணமகன் தன் வலது கட்டைவிரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்கிறான். இந்த ஏழு அடிகளையும் யோக பூமியாகப் பாவித்து அவற்றின் மூலம், அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்த்து, ஓருயிராக இணைத்துக் கொள்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்:
"ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன். நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் - பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம். நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம். நான் ஸாமாவாக இருக்கிறேன்; நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்; நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய். இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் - பிறசெல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ வருவாயாக!" என்று இந்த நிகழ்ச்சியில் மணமகன் மணமகளை அழைக்கிறான். இந்த மந்திரத்திற்கு 'ஸகா' என்று பெயர். மனோதத்துவ அடிப்படையில் ஒருவரையொருவர் சார்ந்தும் இணைந்தும் வாழத் தயார் செய்து கொள்கிறார்கள் இந்த அர்த்தமுள்ள சடங்கில்! 
திருமண சடங்கு
அம்மி மிதிப்பது:
அடுத்த சடங்கு அம்மி மிதிப்பது. மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.
பொரியிடுதல்:
இன்னொரு முக்கியமான சடங்கு பொரியிடுதல் (லாஜ ஹோமம்). மணப்பெண்ணின் சகோதரன் பொரியைச் சகோதரியிடம் கொடுத்து அக்னியில் இடச் செய்கிறாள். கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், புத்திசாலிகளான - ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவும், ஒளிமயமான சூரியதேவனுக்குப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதில் பிள்ளை வீட்டாரின் சகோதரர்களையும் ஈடுபடுத்துவது, இரு குடும்பங்களும் இணைவதை உணர்த்துகிறது.
தாலி, சடங்குஅருந்ததி தரிசனம்:
அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின்  ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி. 
நிறைவாக, மணமக்களுக்குப் பெரியவர்கள் அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்கள். ஆசீர்வாதம் செய்ய வருபவர்களுக்கு பன்னீரும் - சந்தனமும் தருகிறார்கள், ஏன் தெரியுமா? இந்த மணமக்களைப் பற்றி சிலர் பல்வேறு காரணமாக பகை கொண்டிருந்தாலும், அந்த வினாடியில் கசப்பு மாறி, குளுமையாகவும் - இனிமையாகவும் ஆசி வழங்கத்தான் பன்னீர், சந்தனம், கற்கண்டு விநியோகம்.  
-க.புவனேஷ்வரி

கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், உடல்நலக்குறைவால் காலமானார்.



நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால், உயிரிழந்துள்ளார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம்தான் சந்திரஹாசனின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்த இரண்டு மாதங்களில் சந்திரஹாசனும் உயிரிழந்துள்ளார்.

'காவலர்கள் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க வேண்டும்' - காவல்துறை தலைமையகம் உத்தரவு

அனைத்து காவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியில் சேரும் காவலர்களுக்கு அடையாள அட்டை காவல்துறை தலைமையகத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை.
மாறாக காவலர்களுக்கு சீருடை, லத்தி, ஷூ உள்ளிட்டவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் தான் அடையாள அட்டையையும் வழங்கி வருகிறது. இதனால் எளிதாக போலியாக அடையாள தயார் செய்யும் வாய்ப்புகள் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் காவலர்கள் போல வேடமிட்டு பணம்பறிப்பு, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் செயல்கள் நடைபெறுகின்றன.
இதனை தடுக்கவும், அடையாள அட்டையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் அனைத்து காவலர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
போலியாக அடையாள அட்டை தயார் செய்து காவலர்கள் போல் உலவுபவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து அவசரத் தேவைகளுக்கும் ஒரே எண்... முன்னோடியாக செயல்படும் கேரளா!



கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, மத்திய அரசு 'அவசர எண்களை' ஒருங்கிணைக்க திட்டம் ஒன்றை வகுத்தது. தற்போது, அந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைப்புக் காட்டுகிறது கேரள அரசு.

இது குறித்து கேரள போலீஸ் தரப்பு, 'இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களில் அவசர எண்களை ஒருங்கிணைக்கும் திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படும். அதற்கான, பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்த ஒருங்கிணைந்த எண்ணை எந்த ஒரு அவசரத் தேவைக்கும் அழைக்கலாம். எந்த தேவைக்காக அழைப்பு விடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட துறைக்கு தகவல் கொடுக்கப்படும். பின்னர், அந்த குறிப்பிட்ட துறை, அவசர தேவைக்கான சேவையை வழங்கும்' என்று கூறியுள்ளது.

கேரளாவில் அமலாகப் போகும் இந்தத் திட்டத்துக்கு, 112 அவசர எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் வீடியோவுடன் கூட்டு சேர்கிறது வோடபோன்!

அமேசான் ப்ரைம் வீடியோ சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவில் அறிமுகமானது. பல்வேறு பாலிவுட், ஹாலிவுட், டி.வி சீரியல்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் அமேசான் ப்ரைம் அறிமுகமானதால், இந்தியாவில் அதற்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் வோடபோன் இந்தியா நிறுவனம், அமேசான் ப்ரைமுடன் பார்ட்னர்ஷிப் போட்டுள்ளது.
இதன் மூலம், வோடபோன் வாடிக்கையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோக்களை ஆஃபர் விலையில் சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்த முடியும். வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்த புதிய வசதியை வரும் மார்ச் 22-ம் தேதி முதல் அனுபவிக்க முடியும். 
இது குறித்து வோடபோன் இந்தியா நிறுவனம், 'வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட விஷயங்கள் மூலம் பொழுதுபோக்கு பெறுகிறார்கள் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல், மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோ இதைத்தான் செய்கிறது. இதன்மூலம், எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தனித்துவமான மற்றும் சிறந்த சேவையை அளிக்க முனைகிறோம்' என்று கூறியுள்ளது. 
 
இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | கோப்பு படம்


இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள்.

இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் கடந்த வாரம் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார். என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.
அதில், இளையராஜாவிடம் முன்னனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால் அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை துவக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

ஏற்கெனவெ கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை.

அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தருணத்தில், எனது வேண்டுகோள் எல்லாம் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது மட்டுமே. இது கடவுளின் கட்டளை என்றால் அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு வெற்றி பாடல்களைக் கொடுத்த கூட்டணி, தற்போது பிரிந்துள்ளதால் இசை ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

NEWS TODAY 23.12.2025