Sunday, September 6, 2015


logo


ஆசிரியர் கல்வியின் தரம்!

ஆசிரியர்கள்தான் சமுதாயத்தில் மிக அதிகமான பொறுப்புவாய்ந்த முக்கியமான அங்கம் வகிப்பவர்கள். ஏனெனில், அவர்களின் தொழில் ரீதியான முயற்சிகள் பூமியின் தலைவிதியிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார், ஆஸ்திரேலிய நாட்டு பெண் எழுத்தாளரான மருத்துவர் ஹெலன் கால்டிகாட். அந்த வகையில், நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. சமீபத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜனாதிபதி பதவியைவிட ஆசிரியராக பணியாற்றத்தான் விரும்பினார். அவர் எழுதிய ‘தூண்டப்பட்ட மனங்கள்’ என்ற ஆங்கில நூலில்கூட, ‘ஒரு குழந்தையின் கற்றலுக்கும், அறிவாற்றலுக்கும் ஆசிரியர்தான் ஜன்னல் போன்றவர். அந்த குழந்தையின் படைப்புத்திறனை உருவாக்குவதில் அவர்தான் முன்மாதிரியாக திகழவேண்டும்’ என்ற அற்புதமான தத்துவத்தை உலகிற்கு படைத்துவிட்டு சென்றார்.

இன்றைய காலக்கட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்தால்தான், போட்டி மிகுந்த உலகில் அவர்களால் வெற்றிகாணமுடியும். அதற்கு ஆசிரியர்களின் கல்வித்தரமும் மிகவும் உச்சத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அத்தகைய அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவை என்பதால்தான், கட்டாய கல்வி சட்டத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்கள்தான், வரும் காலங்களில் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை பார்க்கும்போதுதான், ஆசிரியர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நிலைமை தெளிவாகிறது. மத்திய அரசாங்கத்தின் கல்வித்திட்டத்தின்கீழ் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான் இத்தகைய பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை நாடு முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றமுடியும். 722 ஆசிரியர் பட்டப்படிப்புக்கான கல்லூரிகளையும், 1,018 ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வை எழுதிய ஆசிரியர்களில் 40 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள் என்றால், இந்த தேர்வை எழுத முடியாத அளவில்தான் நமது ஆசிரியர் கல்வித்தரம் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தமிழக கல்வித்துறையும், சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பல ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், துணிவில்லாமல் இந்தத்தேர்வை எழுதவே இல்லை. தற்போது, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங் களில், கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி நிலவரப்படி
2 லட்சத்து 29 ஆயிரத்து 400 இடைநிலை ஆசிரியர்களும், 3 லட்சத்து 92 ஆயிரத்து 383 பட்டதாரி ஆசிரியர்களும், 2 லட்சத்து 70 ஆயிரத்து 912 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்விலும், மத்திய கல்வி திட்டத்துக்காக நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பு பெறக்கூடிய மத்திய ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றிபெற்றால்தான் முடியும். இவர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியேவரும் ஆசிரியர்களும் இனி வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றாலும் சரி, திறமைமிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாலும் சரி, அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பரன்சிங், ஆன்–லைன், இண்டர்நெட் மூலம் கல்வி கற்றுக்கொடுக்க பயிற்சி அளிக்கவேண்டும். அறிவாற்றல்மிக்க ஆசிரியர் களால்தான் ஒளிமிகுந்த மாணவர் சமுதாயத்தை படைக்கமுடியும்.

Saturday, September 5, 2015

நல்லாசிரியர் யார்?

Dinamani



By பா. நாகலட்சுமி

First Published : 05 September 2015 01:41 AM IST


"மாதா பிதா குரு தெய்வம்' என்ற மந்திர மொழி நமது பண்பாட்டை உணர்த்தும் உன்னத மொழியாகும். கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை உயர்வாக மதிக்கிறோம்; தெய்வமாகத் துதிக்கிறோம். திறமையாக, அன்பாக, அக்கறையாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மாணாக்கர் மனத்தில் தனியாசனம் உண்டு.
"கற்பித்தல்' என்பது வேலையன்று; அது ஓர் உன்னதமான பணி; தொண்டு; சேவை. இதனை உணர்ந்து ஆசிரியப் பெருமக்கள் தம் பணியை ஆற்ற வேண்டும். மாணவச் செல்வங்களைத் தம் சொந்தக் குழந்தைகளாகக் கருதுகின்ற தாய்மை உள்ளம் ஆசிரியர்களுக்கு வேண்டும்.
ஆசிரியன் என்ற சொல் ஆசு + இரியன் எனப் பிரிந்து பொருள் தரும். "ஆசு' என்பதன் பொருள் குற்றம் என்பதாகும். "இரியன்' என்பதன் பொருள் கெடச் செய்பவர் என்பதாகும். மாணவரது குற்றம், குறைகளைக் கெடச் செய்யும் ஆசிரியர்கள், தாம் குற்றங்குறைகட்கு அப்பாற்பட்டவராய் இருத்தல் வேண்டும். மாணாக்கர் என்ற சொல் மாண் + ஆக்கர் எனப் பிரிந்து நின்று மாண்பினை ஆக்கிக் கொள்பவர் என்ற பொருள் தரும்.
கற்றுக் கொடுக்கும் பாடத்தில் ஆழங்காற்பட்ட அறிவு ஆசிரியருக்குத் தேவை. அப்போதுதான் மாணாக்கர் முன் தன்னம்பிக்கையோடு, கம்பீரமாக நின்று கற்பிக்க முடியும். நல்லாசிரியருக்கு உரிய தன்மைகளைக் கூறும் நன்னூல் என்ற இலக்கண நூல் "கலை பயில் தெளிவு' என்று இதனைக் கூறுகிறது.
உலகில் துறைதோறும் புதுமைகள் மலர்கின்றன; நாள்தோறும் புதுமைகள் வளர்கின்றன. அவற்றைக் கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்களது கற்பித்தல் பணி முழுமை பெறும்; அப்பொழுது மட்டுமே முழுமை பெறும்; செம்மை பெறும். கற்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் சொல்வன்மை ஆசிரியர்களின் அடிப்படை இயல்பாக அமைதல் வேண்டும். "கட்டுரை வன்மை' என இதனை நன்னூல் குறிப்பிடுகின்றது.
மாணவர் மனம் கொள்ளும் வகையில் பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். மாணவர்கள் பல தரத்தினர்; பல நிலையினர். சிலருக்குக் கற்பூர புத்தி இருக்கும். சிலருக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தர வேண்டியிருக்கும்.
மற்றுமொரு முக்கியமான விஷயத்தை ஆசிரியர்கள் மனங்கொள்ள வேண்டும். அவர்கள் பேரறிஞர்களாக இருக்கலாம். ஆனால், கற்பிக்கும்போது, மாணவர்கள் நிலைக்குத் தம்மைத் தாழ்த்தி அவர்களது அறிவுக்கு எட்டும்படி கற்பிக்க வேண்டும்.
யாருடைய பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் (செப்டம்பர் 5) கொண்டாடுகிறோமோ அந்த மாபெரும் ஆசிரியரும், தத்துவ மேதையுமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: 'A good teacher must himself be a fellow traveller in exciting pursuit of knowledge' ("நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப் பயணிக்க வேண்டும்').
'The true teacher is he who can immatiately come down to the level of the student and transfer his soul to the student's soul' ("மாணவர் நிலைக்கு இறங்கி வந்து தமது ஆன்மாவையே மாணவனிடத்து மாற்றியமைக்கும் வல்லமை பொருந்தியவரே உண்மையான ஆசிரியர்') என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதை மறத்தலாகாது.
கற்பித்தல் என்பது ஒரு வழிப் பாதை அன்று. மாணவரும் அதில் பங்கு பெற வேண்டும். வினாக்களைக் கேட்டுப் பதில் கூறத் தூண்டி அதன் மூலம் அவர்களைச் சிந்திக்க வைப்பதும், சிந்தனையைத் தூண்டி அவர்களை வினாக்கள் கேட்க வைப்பதும் கற்பித்தலின் முக்கியமான கூறுகள். கற்பிக்கும் முறையில் புதுமைகளைப் புகுத்துதல் வேண்டும்.
பாடத்தோடு, வாழ்க்கைப் பாடமும் நடத்த வேண்டிய கடப்பாடு உடையவர்கள் ஆசிரியர்கள். நேர்மை, வாய்மை, ஒழுக்கம், மனிதாபிமானம், சமுதாய அக்கறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புணர்வு ஆகியனவும் ஆசிரியர் கற்றுத்தர வேண்டிய பாடங்கள். இவைதவிர, அன்றாட நாட்டு, உலக நடப்புப் பற்றியும் மாணவர்கள் அறியுமாறு செய்தல் வேண்டும்.
ஆசிரியரிடத்து கற்பித்தல் கலைக்குத் துணை போகும் நல்லியல்புகள் இருத்தல் வேண்டும். அவற்றுள் தலையாயது பொறுமை. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகில் மாணவர் சிந்தனையைத் திசை திருப்பும் விஷயங்கள் பல உள்ளன. அந்த மாய வலையில் மாணவர்கள் சிக்காத வண்ணம் தடுப்பதற்கும், சிக்கிய மாணவர்களைப் பத்திரமாக மீட்டெடுப்பதற்கும் பொறுமை என்னும் ஆயுதம் ஆசிரியர்க்குத் தேவைப்படுகிறது.
"எந்த நாட்டில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாகக் கற்பிக்கிறார்களோ அந்த நாடு முன்னேறும். ஆசிரியர்கள்தான் அச்சாணிகள். அவர்கள் முகமலர்ச்சியுடன் கற்பிக்க வேண்டும்' என்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளரும், "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' இதழின் ஆசிரியருமான சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் அண்மையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறுமையும், அருளும் கொண்ட ஆசிரியப் பெருமக்கள் மாணவர்கள் திசை மாறிச் செல்லும்போதும், தீயவற்றைச் செய்யும்போதும் அவர்களை வருத்த நினைக்க மாட்டார்கள்; திருத்தவே முற்படுவர். தமது "மனக்குகைச் சித்திரங்கள்' என்ற நூலில், ஆத்மார்த்தி, தமது பள்ளித் தலைமை ஆசிரியரைப் பற்றிக் கூறியுள்ள கருத்தும் ஒரு நிகழ்வும் சுட்டத்தக்கன.
1993-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. இரவு படிக்கும்போது "ஒலியும் ஒளியும்' பார்க்க வேண்டும் என்ற மோகத்தில் வகுப்பறை பல்பில் நாலணா காசை வைத்து, ஸ்விட்ச் போட்டு மின் தடை ஏற்படுத்தினர் மாணவர்கள்; பின்னர் கூப்பாடு போட்டு அனைவரும் வீடு திரும்பினர்.
மறுநாள் தலைமை ஆசிரியர் நடன குருநாதன், மாணவர்களைப் பள்ளி மைதானத்துக்கு அழைத்து விசாரித்தார். தவறு செய்தவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை தாம் வெயிலில் நின்றார்; மாணவரை வகுப்புக்கு அனுப்பினார்.
"எனக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டு கற்றல் வாய்ப்புகளில் நான் மனம் கசிந்து உருகிக் கலைந்து வேறொருவனாக மாறியது அன்றுதான். எங்களை அடித்து இருந்தால் அதுவும் ஒரு நிகழ்வென்று போயிருக்கும். ஆனால் அவரது அஹிம்சை, அவரை வருத்திக் கொண்ட விதம் எனக்குள் பல கசடுகளை அறுத்தது.
அதன்பின் வியர்வைத் தெப்பத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்த நடன குருநாதன், தவறை ஒப்புக் கொண்ட மூன்று மாணவர்களையும் கடுமையாகத் தண்டிக்காமல் மன்னித்துப் பள்ளியில் மீண்டும் அனுமதித்தார்' என்கிறார் ஆத்மார்த்தி.
கோடிக்கணக்கான மாணவர்களுக்கு உந்துசக்தியாக இப்போதும் விளங்கிவரும், அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தனது ஆசிரியர் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
"எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் முழு ஈடுபாட்டுடன் மனப்பூர்வமாக பாடம் நடத்துவார். அவர் பாடம் சொல்லிக் கொடுப்பதை ஒரு கடமையாகக் கருதாமல் அதை ஒரு லட்சியமாகவே நினைத்துப் பாடம் நடத்துவார்.
அந்த ஆசிரியரின் பழக்க வழக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு ஓர் ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்று சொன்னால் ஒருபோதும் கோபப்பட மாட்டார்'.
ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார் கலாம்: "ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையையும் செம்மைப்படுத்த வேண்டும். லட்சியம் உருவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்குப் புரியும் வரை பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாகக் கருதாமல் பாக்கியமாகக் கருத வேண்டும்'.
கலாம் தன் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்த பெயர் லடிஸ்லாஸ் சின்னத்துரை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விண்வெளி இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர். தனது மரணத்துக்கு 9 நாள்களுக்கு முன்புகூட திண்டுக்கல் வந்த கலாம், தனது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து, கெüரவித்து நினைவுகளில் மூழ்கினார்.
91 வயதாகும் சின்னத்துரை, கலாம் பற்றி பெருமிதம் ததும்பப் பேசுகிறார்: 1952-54இல் கலாம் என்னிடம் படித்தார். விண்வெளி இயற்பியலில் அவருக்கு கூடுதல் ஆர்வம். நிறைய சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே இருப்பார்.
மூன்று மணி நேரம் பாடம் நடத்தி, பாடத்தை முக்கால் பாகத்தோடு நிறுத்தி விடுவேன். நிறைவுப் பகுதியை நூலகம் சென்று படித்துத் தெரிந்துகொண்டு வந்து நாளை சொல்ல வேண்டும் என்று கூறிவிடுவேன். கலாம் ஆர்வமாக நூலகத்தில் படித்துவிட்டு வந்து சரியாக விளக்கம் சொல்லி சபாஷ் பெற்றுவிடுவார்.
தென் மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் என்னை அவர் சந்திக்காமல் சென்றதே இல்லை. 60 ஆண்டுகள் கடந்தும் ஆசிரியரை மதித்து ஒரு மாணவர் ஆசிபெற்றுச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று கூறும்போது சின்னத்துரை முகத்தில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
கலாமுக்கு சிவசுப்பிரமணிய அய்யர், சின்னத்துரை போல, ஹெலன் கெல்லருக்கு ஓர் ஆசிரியர் அருமையாக வாய்த்தார். அவர் ஆன் சல்லிவன் மேரி; விவேகானந்தருக்கு அருமையாக வாய்த்த ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நம்மில் பலருக்கும் அருமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் கிடைத்திருக்கும்.
அர்ப்பணிப்புதான் ஆசிரியர் பணியின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் கடைசிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன், என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்று கைகூப்பும்போதுதான் ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது.
விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் ஆசிரியர் வித்தாகப் புதைந்து கிடக்கிறார் என்பதே உண்மை.

கட்டுரையாளர்:
பேராசிரியை (ஓய்வு).

மறதி - சோர்ந்த மனத்தின் நழுவும் நினைவுகள்!

Dinamani




பொழுது விடிஞ்சுது! பெட் ரூம் டீபாய்ல, பாத்ரூம் சிங்குல, டைனிங் டேபிள் மேல, ஜன்னல் கட்டைல - எங்கேயும் இல்ல! எங்க கழட்டி வெச்சேன்? மூக்குக் கண்ணாடிய தேடறதே வேலையாப் போச்சு. 'என்ன தேடறீங்க?' என்று கேட்ட மகளிடம், 'மூக்குக் கண்ணாடி' என்றேன். சிரித்துவிட்டு, என்னைத் தள்ளிக்கொண்டுபோய் நிலைக் கண்ணாடி முன் நிறுத்தினாள். என் மூக்கின் மேலேயே கண்ணாடி இருந்தது!

இது ஒரு வகை மறதி. வயதாகும் எல்லோருக்கும் வருவது.

காலையில், முதலில் என்னைச் சந்திக்க வந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை. கலைந்த தலைமுடி, முகம் முழுக்க கவலையின் ரேகைகள், கண்ணில் ஓர் அச்சம் கலந்த எதிர்பார்ப்பு - மெள்ள உள்ளே வந்து, என் எதிரில் அமர்ந்தார்.

‘கொஞ்ச நாளா எல்லாம் எனக்கு மறந்துடுது டாக்டர். காலைல ஏதோ யோசிச்சிக்கிட்டே கடைக்குப் போய்ட்டு வந்தேன் - பேப்பர் வாங்க மறந்துட்டேன். சில சமயங்கள்ல, போற கடையையோ, வீட்டையோ தாண்டி, கொஞ்ச தூரம்கூட மறந்தா மாதிரி போயிருக்கேன் டாக்டர். இது அல்சைமர்ஸ் டிமென்ஷியாவா டாக்டர்?’ என்றார், கவலையுடன்.

இது தேவையற்ற கவலை. மறதி நம்முடன் பிறந்தது. இறுதிவரை உடன் வருவது! நாமும் பேனா, பர்ஸ், வாட்ச் என ஏதாவது ஒன்றை மறதியாக எங்கேயாவது வைத்துவிட்டு, இல்லாத இடத்தில் தேடி அல்லாடுவது தினமும் நம் வீடுகளில் நடப்பதுதான்!

அதுபோலவே வழியில் பார்த்து, முகம் மலர்ந்து, ‘பார்த்து ரொம்ப நாளாச்சு, செளக்கியம்தானே?’ என்று இரண்டு மூன்று நிமிடங்கள் வம்படித்துப் பிரிந்த பிறகு, ‘அவர் யார்?’ என்று வெகுநேரம் நினைவுக் குப்பையில் தேடுவதும் உண்டு!

சில நாட்கள், சில நிகழ்வுகள், சில சந்திப்புகள், சிறு தகவல்கள் என அவ்வப்போது நாம் மறப்பது சகஜம்தான் – அதுவும், ஏராளமான விவரங்களை மூளையில் ஏற்றிவைக்கும்போது, அவற்றில் சில இப்படி நினைவிலிருந்து நழுவி நம்மை சங்கடப்படுத்தும்!

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறதியால் தொலைத்த நல்ல தருணங்கள் - நல்லதொரு வாக்கியம், நல்ல இசை, நண்பனின் சந்திப்பு என ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கும். அதுபோலவே, தீய அல்லது தேவையற்ற ஒரு நிகழ்விலிருந்து, மறதியினால் தப்பித்த அனுபவமும் ஒரு சிலருக்கு இருக்கும்!

ஐம்பது வயதுக்கு மேல், நமக்கு மிகவும் நெருங்கிய சிலரின் பெயர்கள்கூட மறந்துவிடும். முகத்திலிருக்கும் மச்சம், பேசிய பேச்சு, அணிந்திருந்த உடை, சந்தித்த இடம், சந்தர்ப்பம் என அனைத்தும் நினைவில் இருக்கும் - பெயர் மட்டும் ‘சட்’டென்று நினைவுக்கு வராது! சிறிது நேரம் அல்லது சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று ‘அந்த’ப் பெயர் நினைவுக்கு வரும்! இது, மூளையின் தாற்காலிக மறதி சார்ந்த குறைபாடு - யாருக்கும் வரலாம்!

காலச்சக்கரம் சுழலும்போது, மிகப் பழைய நினைவுகள் தொலை தூரம் சென்று, சிறியதாகி, மங்கி, நம்மைவிட்டு மறைந்து விடும் - இது ஒருவகை நிரந்தர மறதி. குழந்தைப் பருவத்து பல நிகழ்வுகள், பிறர் சொல்லக் கேட்கும்போது, நமக்குப் புதியதாகத் தோன்றுவது, இவ்வகை மறதியினால்தான்!

நாமே விருப்பப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஒன்றை மறத்தல் என்பது நம் வாழ்வில் முடியாது. மறக்க நினைப்பதை, மறக்கவே முடியாது! மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்கக்கூடாது என்று டாக்டர் சொல்ல, அந்த மருந்தைப் பார்க்கும்போதெல்லாம் குரங்கை மறக்க முடியாமல் அவதிப்படும் நோயாளியைப் பற்றிய கதை கற்பனையே என்றாலும், உண்மையில் மனம் விரும்பினாலும், ஒன்றை மறக்கமுடியாதுதான்!

ஏதோ ஒன்று, ஆழ்மனத்தில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்கும் – இங்கே, மறதி தாற்காலிகமானது! நான் மறந்து விட்டேன் என்று கூறுவது உண்மையில் மறதியல்ல - மறக்க விரும்புகிறேன் என்பதே அதன் பொருள்! எனவே, தன்னிச்சையாக மறக்க முயலாதீர்கள், தோற்றுப்போவீர்கள்!

புராணங்களில், மறதி ஒரு சாபமாகவே கருதப்படுகிறது! தான் ஒரு சத்ரியன் என்பதை கர்ணன் மறைத்ததால், முனிவர் பரசுராமரால் ‘பிரம்மாஸ்திர மந்திரத்தை முக்கியமான தருணத்தில் மறந்துவிடுவாய்’ என சாபமிடப்படுகிறான் – அதுவே, அவன் போரில் அர்ச்சுனனிடம் தோற்பதற்கு ஒரு காரணமாகிப்போகிறது.

காதலில் தன்னை மறந்துகிடந்த சகுந்தலை, துர்வாச முனிவரால் சபிக்கப்படுகிறாள் – அந்தச் சாபத்தினால், துஷ்யந்தன் தான் கொடுத்த அடையாள மோதிரத்துடன், சகுந்தலையையும் மறந்துவிடுகிறான்! காதலில் தன்னை மறந்ததால், காதலனால் மறக்கப்படுகிறாள் சகுந்தலை!

திரைக்கதையில் சுவாரசியம் கூட்டுவதற்காக, திரைப்படங்களில் மறதி பல வகைகளில் உபயோகப்படுகிறது! சட்டை, டை எல்லாம் அணிந்து, பேண்ட் போட மறந்து சாலையில் நடப்பது; வாயில் மறதியாக சிகரெட்டுக்குப் பதில் வெடியை வைத்துப் பற்றவைப்பது, சாலை விபத்துகளில் வாழ்வின் ஒரு பகுதியையே மறந்துபோவது போன்ற கற்பனைகள் எப்போதும் உண்டு.

சமீபத்தில் வெளிவந்த, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம்கூட, தாற்காலிக மறதியின் விரிவாக்கம்தான்! ஆனாலும், நிஜ வாழ்க்கையில் நீண்ட கால மறதியும், பின்னர் நினைவு திரும்புவதும் நிகழ்வது மிக அரிதான ஒன்றே!

வள்ளுவரும், யாரிடத்தும் சினம் கொள்ளாமல் மறந்துவிட வேண்டும் என்கிறார்! ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க - இது மறதி அல்ல; தவறியும் என்று கொள்ளலாம்; அல்லது மறந்த நிலையில், ஒருவகை ‘அம்னீஷியாவில்’ உள்ளபோதும், பிறன்கேடு சூழற்க எனக் கொள்ளலாம். காதலனை மறப்பதால் வரும் துயரம், பிரிவுத் துயரத்துடன் கொடுமையானது - ‘மறப்பின் எவன் ஆவன் மன்கொல்? என்பதில், பிரிவதைவிட மறப்பது மோசமானது என்றாகிறது!

மருத்துவத்தில் மறதி

மறதி தாற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ இருக்கமுடியும். நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கும் மூளையின் சில பகுதிகள், முதுமை அல்லது சில நோய்களால் பாதிக்கப்படும்போது, ‘மறதி’ ஏற்படுகிறது.

மறதியினால், புதிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்; அல்லது ஏற்கெனவே அறிந்திருந்த விவரங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியாமலும் போகலாம்!

காலையில் சாப்பிட்ட இட்லியை மறந்துவிடும் சிலர், ஹிட்லர் போர் புரிந்த இடம், வருடம் போன்ற விவரங்களை நன்கு நினைவில் வைத்திருப்பர்!

தலைக் காயம் பட்டவர்களுக்கு, மறதி (அம்னீஷியா) வரும் வாய்ப்புகள் அதிகம். அடிபடுவதற்கு முன்போ அல்லது அடிபட்ட பின்போ, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்தவற்றை மறந்துபோகின்ற அபாயம் உண்டு. காக்காய் வலிப்பு வந்த பிறகு, சிறிது நேரத்துக்கு நடந்தது எதுவும் நினைவில் நிற்பதில்லை!

முதுமையில் தவிர்க்க முடியாதது மறதி!

பொருட்களை இடம் மாறித் தேடுவது, நாள், கிழமை மற்றும் மிகச் சிறிய நிகழ்வுகள் நினைவுகளில் இருந்து நழுவுவது, முதுமையில் நாம் அன்றாடம் காண்பதுதான்.

மூளையின் டெம்போரல், ஃப்ரான்டல் பகுதிகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் மறதி, அல்சைமர்ஸ் போன்ற வியாதிகளைக் குறிக்கக்கூடும் (பிறந்தது முதல் நாம் கற்றவை, அறிந்தவை கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து தொலைவது, டிமென்ஷியா எனப்படும்).

அன்றாட ஏற்படும் சின்னச் சின்ன மறதிகளை, இந்த வியாதிகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. சோர்ந்து, தளர்ந்த மனது எதையும் மறந்துவிடும் தன்மையுடையது! மனதுக்குப் பிடிக்காதது, எளிதில் நினைவிலிருந்து நழுவிவிடும்.

தாற்காலிக மறதி பற்றி ஏதோ எழுத வந்தேன் - மறந்துவிட்டேன். மீண்டும் எழுதுகிறேன், நினைவுக்கு வந்தால்…



டாக்டர். ஜெ.பாஸ்கரன்,
அலைபேசி - 098410 57047

Friday, September 4, 2015

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிப்பு

logo

சென்னை,

தமிழகத்தில் 84 சதவீதம் பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு எந்த திட்டத்திற்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஆதார் அட்டை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சிலர் ஆதார் அட்டை விண்ணப்பத்தை எங்கு வாங்குவது?, எப்படி ஆதார் அட்டை வாங்குவது? போன்ற தகவல்கள் தெரியாமல் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

5.26 கோடி பேர்

தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணி 2010-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. மொத்த மக்கள் தொகை 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேரில், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி 5 கோடியே 26 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 39 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு, மற்ற விவரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 84 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்துடன் இந்த பணியை நிறைவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது.

டிசம்பர் வரை நீட்டிப்பு

ஆனால் எஞ்சிய 1 கோடியே 48 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேருக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே டிசம்பர் மாதம் வரை காலஅவகாசம் அளித்து அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இதற்காக பொதுமக்கள் அவசரப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டியதில்லை.

வசிக்கும் வீடுகள் அருகிலேயே உள்ள ஆதார் அட்டை வழங்கும் முகாம்களுக்கு சென்று முறைப்படி விண்ணப்பித்து பெறலாம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 78 மையங்கள்

தமிழகம் முழுவதும் 522 மையங்களில் இந்த பணி தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்தப்பணியை தீவிரப்படுத்த கூடுதலாக 120 மையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் 640 மையங்களில் இந்தப்பணி நடந்து வருகிறது.

சென்னையில் மண்டல அலுவலகங்களில் உள்ள 10 நிரந்தர மையங்கள் உள்பட 78 மையங்கள் செயல்படுகிறது.

ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையத்துக்கு எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணி முடிவடைந்து 2 மாதங்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு பதிவு தபாலில் ஆதார் அட்டை அனுப்பப்படும்.

ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைந்து போனாலோ அல்லது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தாலோ அவற்றையும் ஆன்-லைனில் திருத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி


சென்னை,

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் தியாகராயநகர் ராமநாதன் தெருவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி ராதிகா செல்வி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பிரமுகர்கள்-வியாபாரிகள்

தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அவரது மகன் பா.சிவந்தி ஆதித்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க நிர்வாகி அலிமா சம்சுகனி மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வியாபாரிகள், உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

யோக ரத்னத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பு. இவர் 1969-ம் ஆண்டு சென்னை ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர் கடையை தொடங்கினார். இவர்களது சகோதரர்கள் ராஜரத்னம், நவரத்னம், செல்வரத்னம். இவர்களின் அயராத உழைப்பினால் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சென்னையில் புகழ்பெற தொடங்கியது.

தகனம்

யோகரத்னத்தின் சகோதரர்கள் செல்வரத்னம், நவரத்னம் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பே மரணம் அடைந்து விட்டனர். யோகரத்னத்துக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், பல்லாக்கு துரை, சண்முகதுரை, பொன்துரை, சிவா அருள்துரை ஆகிய 4 மகன்களும் உள்ளனர்.

யோகரத்னம் மரணம் அடைந்ததால் ரங்கநாதன் தெருவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் 3 மணிக்கு யோக ரத்னம் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சரத்குமார் இரங்கல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்து சிறிய அளவிலிருந்து வணிகம் தொடங்கி இன்று நுகர்வோர் பொருட்களின் விற்பனை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியிருக்கும் அளவிற்கு உய்ர்ந்திருக்கும் மாமனிதர் அவர். கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததோடு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் அளவிற்கு வரலாறும் படைத்திருக்கக்கூடிய சாதனையாளரும் ஆவார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்கள் மற்றும் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தூக்குதண்டனை வேண்டாமே

logo

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.ஷா, தற்போது சட்டஆணைய தலைவராக இருக்கிறார். இந்த சட்டஆணையம் 9 உறுப்பினர்களைக்கொண்டது. இதில், தலைவரைத்தவிர, மூன்று முழுநேர உறுப்பினர்கள், 2 முன்னாள் அரசு அதிகாரிகள், 3 பகுதிநேர உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் இந்த சட்டஆணையம் தனது 262–வது அறிக்கையில் வழங்கிய பரிந்துரை, நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. முழுமையான தூக்குதண்டனை ஒழிப்புதான் இலக்கு என்ற நோக்கில் தற்போது தீவிரவாத குற்றங்கள் மற்றும் தேசவிரோத கொடுஞ்செயல்களைத்தவிர, மற்ற குற்றங்களுக்கு தூக்குதண்டனையை ரத்து செய்துவிடலாம் என்று சட்டஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முழுநேர உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி உஷா மெஹ்ரா, சட்ட அமைச்சகத்துக்குட்பட்ட சட்டமன்றத்துறை செயலாளர் சஞ்சய் சிங், சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பாக தூக்குதண்டனை வேண்டும் என்ற கருத்தை பிரதிபலித்து இருக்கிறார்கள்.

தூக்குதண்டனை ரத்து என்பது காலம்காலமாக பலரால் பேசப்பட்டுவந்த கோரிக்கையாகும். எந்த உயிரையும் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதுதான் நீதி, அந்த தண்டனை உயிரைபோக்கும் வகையில் இருப்பது இயற்கைக்கு மாறானது. உயிரை பறித்தான் என்பதற்காக, அதை கொடுங்குற்றம் என்று கருதி சட்டத்தைக்கொண்டு அவனுக்கு தூக்குதண்டனை விதித்து உயிரைப்பறிப்பது எந்த வகையில் சரியாகும்? என்றும் கருத்துக்கள் கூறப்படுகின்றன. நீதிமன்றத்தின் நீண்டபடிக்கட்டுகளில் ஏறி, பல கட்டங்களைக் கடந்து தூக்குதண்டனை பெற்றவர்களில் இறுதியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி, தூக்குக்கயிற்றில் இருந்து தப்பியவர்கள்தான் ஏராளம். முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திரபிரசாத் காலத்தில் இருந்து தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதுவரை அனுப்பிய கருணை மனுக்களில் 306 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தூக்குக்கயிற்றில் இருந்து தப்பி ஆயுள் தண்டனை கைதியாகியிருக்கிறார்கள். 131 பேர்களின் மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிலும், கடந்த 11 ஆண்டுகளில் 3 பேர்கள்தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். உலகில் பெரும்பாலான நாடுகளில் இப்போது தூக்குதண்டனை கிடையாது என்ற நிலையில், இந்தியாவிலும் தூக்குதண்டனைக்கு டாட்டா காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்திய அரசியல் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டங்களில் பொதுவாக எல்லாகுற்றங்களுக்கும் தகுந்த சிறைத்தண்டனை வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த தண்டனையை அனுபவித்து புதுமனிதர்களாக மீண்டுவரவைப்பதே சிறந்தது. மேலும், ஒரு குற்றத்துக்காக தண்டனை விதிக்கும்போது, அந்த குற்றத்தை மீண்டும் செய்யக்கூடாது என்ற உணர்வை அவருக்குள் உருவாக்கி வெளியே கொண்டுவருவதுதான், அந்த தண்டனையின் சிறந்த நோக்கமாக இருக்கவேண்டும். அதனால்தான் சிறைச்சாலை என்பது சீர்திருத்தக்கூடமாக இருக்கவேண்டுமே தவிர, தண்டனைக்கூடமாகவோ, சித்திரவதைக்கூடமாகவோ இருக்கக்கூடாது என்பதுதான் ஆன்றோர்களின் கருத்தாகும். எனவே, எந்தவொரு குற்றத்துக்கும் சிறைதான் சிறந்த தண்டனையாக இருக்குமே தவிர, தூக்குதண்டனை விதித்து உயிரை பறித்துக்கொள்வதால் எந்த பயனும் விளையப்போவதில்லை.

இதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால், தூக்குதண்டனையை ரத்து செய்யவேண்டியது மிகமிக அவசியமாகும். இந்த நிலையில், சட்டஆணையத்தின் பரிந்துரை மிகமிக வரவேற்புக்குரியது என்றாலும், இதில் பாகுபாடு தேவையில்லை. தீவிரவாத குற்றங்கள், மற்ற குற்றங்கள் என்று பிரித்துவைத்து தூக்குதண்டனை ரத்து என்ற பரிந்துரைக்கு பதிலாக, முழுமையாக ரத்து செய்திருந்தால் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்திருக்கும். என்றாலும், பாராளுமன்றம் இந்த பரிந்துரை தொடர்பான விவாதத்தை எடுத்துக்கொள்ளும்போது முழுமையான தூக்குதண்டனை ரத்து என்ற வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.

Thursday, September 3, 2015

ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்


ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5

நம் நாட்டில் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்' எனப் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்குத்தான் வழங்கி இருக்கிறார்கள் இல்லையா? இறைவனுக்குக்கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான். அறிவு விதையை நமக்குள் விதைக்கும் ஆசிரியர்களை ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்றும், ‘ஏற்றி விடும் ஏணி’ என்றும் பெருமையாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் போற்றும் நாளான ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதிதான் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடிவருகிறோம். இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு துணைத் தலைவரும்கூட.

இவர் எங்கே பிறந்தார் தெரியுமா? அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்குட்பட்ட திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி என்ற கிராமத்தில்தான் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைத் திருத்தணியில்தான் படித்தார். உயர் நிலைக் கல்வியைப் படிப்பதற்காகத் திருப்பதிக்குப் போனார். ராதாகிருஷ்ணின் சிறு வயது காலம் திருத்தணி, திருப்பதியிலேயே கழிந்தது. பள்ளிப் படிப்பை முடிந்ததும் கல்லூரிக்குப் போக வேண்டுமில்லையா?

அதற்காக அப்போது வேலூருக்குப் போனார். அங்குள்ள ஊரிஸ் கல்லூரியில்தான் ராதாகிருஷ்ணன் படித்தார். 17 வயதாகும்போது சென்னைக்கு வந்து மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் தத்துவப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் மேலும் பல உயர் படிப்புகளைப் படித்தார். இப்படி அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படித்தார்.

அப்படி அவர் படித்ததற்குப் பலனும் கிடைத்தது. தனது திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

இளம் வயதிலேயே ராதாகிருஷ்ணன் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் நிறைய சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். அவையெல்லாம் அவருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமை சேர்த்தன. பல நாடுகளிலும் அவரைக் கவுரவிக்கும் வகையில் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 133 டாக்டர் பட்டங்கள்! இவை எல்லாமே கல்வியால் அவர் கண்ட பலன்கள்.

கல்வியில் சிறந்த விளங்கிய ராதாகிருஷ்ணன் ஆசிரியர்கள் என்றால் மிகவும் மதிப்பு கொடுப்பார். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சில மாணவர்களும், நண்பர்களும் அவரிடம் போய், அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஆசிரியர்களைப் போற்றும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதனால், 1962-ம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இத்தனைக்கும் இவர் பள்ளி ஆசிரியர்கூட இல்லை. கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இருந்தாலும் பள்ளி, கல்லூரி என்று பேதம் இல்லாமல் எல்லாருமே ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கல்வி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வார்கள். அப்படிச் சிறப்பு பெறக் கல்வியைப் புகட்டும் உங்கள் ஆசிரியர்களைக் கொண்டாடத் தயாராகிவிட்டீர்களா?

NEWS TODAY 2.5.2024