Sunday, April 7, 2019

போதை' ஆசிரியர்கள் சஸ்பெண்ட் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி

Added : ஏப் 07, 2019 06:16

  சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், குடிபோதையில் பாடம் நடத்திய, உதவி பேராசிரியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் துறை, உதவி பேராசிரியர்கள், அன்பு, 40; மணி, 38. இருவரும் பணி நேரத்தில், குடிபோதையில் வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம், போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர். இது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் துறையில் இரு பேராசிரியர்களையும் அழைத்து, பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்துள்ளது.அப்போது, இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதிலும், இரு உதவி பேராசிரியர்களும் குடிபோதையில் இருந்தது ஊர்ஜிதமானது.

அதையடுத்து, இரண்டு பேராசிரியர்களையும், 'சஸ்பெண்ட்' செய்து, பல்கலைக்கழக நிர்வாகம்,அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதையறிந்த பேராசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்வதாக கடிதம் கொடுத்து சென்று விட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024