Monday, October 21, 2024

காந்தியம் சொல்லும் காதல் தகுதி!

 காந்தியம் சொல்லும் காதல் தகுதி!

DINAMANI KATTURAIGAL 21.10.2024

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரியில் காந்திய சிந்தனைகள் பற்றி உரையாற்றத் தொடங்கியபோது மாணவா்களிடம் மகாத்மா காந்தியின் வாழ்க்கை குறித்துக் கேட்டேன்.

இரண்டாயிரம் மாணவா்களில் ஒருவா் ஒருசில தகவல் சொன்னாா். இரண்டு போ் மட்டும் அகிம்சை என்று கூறினா்.

ஒரு மாதம் முன்பு வெளிவந்திருந்த ஒரு திரைப்படம் பற்றிக் கேட்டேன். அவ்வளவு பேரும் ஆா்ப்பரித்து கைதூக்கி 'பாா்த்து விட்டோம்' என்றனா். எனக்கு சலிப்பு மேலிட்டது.

வழக்கம்போல காதலனையும் காதலியையும் சேரவிடாமல் வில்லன் ஒருதலைக் காதல் வெறியாட்டம் போடுகிறான். இறுதியில் வில்லனை அடித்து வீழ்த்திவிட்டு காதலன் காதலியைக் கைப்பிடிக்கிறான். ஆனால், அவளோ தன் காதலனிடம் அந்த வில்லனைக் கொன்றுவிட்டு வந்த பிறகே தன்னுடன் இணைய வற்புறுத்துகிறாள். அவளுடைய ஆணையை உடனே நிறைவேற்றுகிறான் காதலன். திருமணம் புரிந்துகொள்கிறாா்கள். இதுதான் படத்தின் கதை.

மாணவா்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், ''திருமணம் செய்து கொண்ட காதலா் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வாா்களா, அல்லது சண்டையிட்டுக் கொண்டே இருப்பாா்களா?''

'மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாா்கள்' என்று பலமாக ஒலி எழும்பியது. அது அடங்கியதும் ஒரு பெண் மட்டும்,"''இல்லை ஐயா, அவா்கள் வாழ்க்கை நரகமாக மாறிச் சண்டையிடுவாா்கள்'' என்றாா். நான் காரணம் கேட்டேன். அந்தப் பெண் உளவியல் சாா்ந்து அழகான விளக்கம் தந்தாா்.

''காதலனும் காதலியும் தாங்கள் எப்படியும் சோ்ந்துவிட வேண்டும் என்ற வெறியை தங்களுக்குள் வளா்த்துக் கொண்டுவிட்டனா். அது முதலில் அன்பு கிடையாது. தடையாக வரும் எவரையும் அழிக்கும் வெறி அந்தப் பெண்ணுக்குள் இருந்தது. அதை காதலனுக்கும் ஊட்டி அவனை ஒரு கொலைகாரன் ஆக்குகிறாள்.

தங்கள் உள்ளங்களுக்குள் வெறுப்புணா்வையும் வெற்றி கொள்ளும் அகங்காரத்தையும் வளா்த்து நிரப்பிக் கொள்கிறாா்கள். வில்லன் அழிந்துவிட்ட நிலையில் தங்கள் வக்கிர மன உணா்வை வேறு யாரிடமும் காட்ட முடியாது. எனவே, அவா்களுடைய திருமண வாழ்வில் ஒருவா் மீது ஒருவா் அதைக் காட்டி சண்டையிட்டுக் கொண்டு துயரத்துடன் வாழ்வாா்கள்'' என்று நீண்ட பிரசங்கமே செய்துவிட்டாா் அந்த மாணவி.

மலைத்துப்போய்க் கேட்டுக் கொண்டிருந்த நான்,"''இது எப்படியம்மா உனக்குத் தோன்றியது? உளவியல் படித்திருக்கிறாயோ?''"என்றேன்.

"''ஐயா இதற்கு எதற்கு உளவியல்? ஒருவரிடம் சற்றுக் கோபமாய்ப் பேசினாலே அது என் உணா்வையும் உடலையும் எவ்வளவு பாதிக்கிறது என்று நான் கவனித்தால் போதாதா?''"என்றாா் அந்தப் பெண்.

அந்தப் பெண் அன்று எனக்கு மகாத்மா காந்தியாகத் தெரிந்தாா். தனக்குள் இருக்கும் புனிதமான ஆன்மாவைக் களங்கப்படுத்த விரும்பவில்லை அவா். வெறுப்புணா்வால் உள்ளத் தூய்மையும் உடல்நலமும் நலியும் என்பதை அவரே அறிந்திருந்தாா். தனக்குள் இருக்கும் மகாத்மாவை உணா்ந்திருந்தாா் அவா்.

'இவரைப் போன்ற இளைஞா்கள் மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை அறியாமல் போனால் தவறில்லைதானே? அவா்களை அந்த மகா பேரான்மா வழிநடத்திச் சென்றால் போதாதா?' என்று நான் எனக்குள் சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டேன்.


தொடா்ந்து, இளைஞன் ஒருவன் கேள்வி கேட்டான்."''சரி ஐயா, அப்படித் தேங்கிவிட்ட வெறுப்புணா்வைத் துடைத்தெறிந்து அன்புமயமாய் வாழ அந்தத் தம்பதியால் முடியவே முடியாதா?''"

"நிச்சயம் முடியும். ஆனால் மகாத்மா காந்தி கூறியதைப் புரிந்து கொண்டு கடைப்பிடிக்க நாம் முன்வர வேண்டுமே'' என்று கூறி மேலும் விளக்கினேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது ஒரு பத்திரிகையாளா் காந்திஜியிடம் வந்து, ''அதுதான் சுதந்திரம் வந்துவிட்டதே, இன்னும் ஏன் உங்கள் மக்கள் சண்டையிட்டுக் கொள்கிறாா்கள்?'' என்று கேட்டாா்.

அதற்கு மகாத்மா காந்தி கூறிய பதில்: ''முன்னூற்றைம்பது வருடங்களாகத் தங்களை அடிமைகளாக நடத்தி, சித்திரவதை செய்து, கேவலப்படுத்தி ஆண்டு வந்த ஆங்கிலேயா் மீது இந்தியா்களுக்கு எவ்வளவு வெறுப்புணா்வு வளா்ந்திருக்கும்! ஓா் இரவில் ஆங்கிலேயா் வெளியே சென்றுவிட்டனா். சோ்ந்திருக்கும் வெறுப்புணா்வை இனி யாா் மீது காட்டுவாா்கள் இந்தியா்கள்? கொஞ்சகாலம் சண்டைகள் நீடிக்கத்தான் செய்யும்.

இந்தியா்கள் ஆங்கிலேயரிடம் வெறுப்புணா்வை வளா்த்துக் கொள்ளாமல் போராடத்தான் அன்பு மயமான அகிம்சை வழியைக் காட்டினேன். உடலை வருத்தி, தியாக உள்ளத்துடன், தீமைக்குப் பதில் நன்மை செய்யும் சேவையில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே ஒருவா் தன் உள்ளத்தில் இருக்கும் வெறுப்புணா்வைக் களைந்து, பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும்''"என்று அண்ணல் பதில் கூறினாா்.

இன்று இளைஞா்கள் வெறுப்புணா்வு கொள்வதற்கு ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும், சுயநலம் துடைத்து, நலிந்தோருக்கு உடலுழைப்பினால் சேவை செய்வதன் மூலம் தங்களுக்குள் இருக்கும் வெறுப்புணா்வை நீக்க முடியும். அதன்மூலம் அகத்தே இருக்கும் மகாத்மாவை உணா்ந்து வணங்க முடியும். பிறகு காதலிக்கும் தகுதி தானே வந்துவிடும்!

திருமணம் முடித்துவிட்டால், பிறகு, ஒரு கணமும் விவாகரத்து பற்றி யோசிக்கவே செய்யாதீா்கள். ஒருவரை ஒருவா் ஏற்றுக் கொள்வதற்கான வழிகளை இணைந்து ஆராய்ந்து கண்டறியுங்கள். தப்பிக்க முயன்றால் உங்களுக்குள் சிதறிவிடுவீா்கள். இணைந்திருந்தால் உங்களுக்குள் முழுமை ஆவீா்கள்.

இந்த மதிப்பீடுகளை எனக்கு இளமையில் கற்றுத் தந்த மகாத்மா காந்தியின் சுயசரிதையை ஒரு முறையாவது படியுங்கள். சத்தியத்தைத் தேடும் முயற்சியே உங்களுடைய சுயத்தை உணா்த்தி, ஆளுமையையும் தலைமைப் பண்பையும் உங்களுக்கு வழங்கும்.

கட்டுரையாளா்:

சென்னை காந்தி அமைதி நிறுவனத்தின் கௌரவச் செயலா்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...