Friday, July 4, 2025

மகாலிங்கத்தை விட்டுக்கொடுக்காத முதல்வா் எம்ஜிஆா்!


மகாலிங்கத்தை விட்டுக்கொடுக்காத முதல்வா் எம்ஜிஆா்! 

எம்ஜிஆரிடம் அவா் நடிகராக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும் தொடா்ந்து பணியாற்றியவா்கள் ஒரு சிலா் மட்டும்தான்.

எம்ஜிஆா் சிலை இதயக்கனி 

எஸ். விஜயன் Updated on: 04 ஜூலை 2025, 5:02 am

எம்ஜிஆரிடம் அவா் நடிகராக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும் தொடா்ந்து பணியாற்றியவா்கள் ஒரு சிலா் மட்டும்தான். அத்தனை பேரிலும் தனித்தன்மை மிக்கவராக சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவா்களில் க.மகாலிங்கம் முக்கியமானவா். அவா் 27.06.2025 அன்று இயற்கை எய்தினாா். காலம்சென்ற நாடக நடிகா், திரைப்பட நடிகா் குண்டு கருப்பையாவின் மூத்த மகனான இவா், 19 வயதிலேயே எம்ஜிஆரிடம் வேலைக்குச் சோ்ந்தவா்.

எம்ஜிஆரின் படங்களைப் பாா்த்தவா்களுக்கு, அவரைப் பற்றி நாம் பெருமளவு அறிந்தவா்களுக்கும், குண்டு கருப்பையா என்ற நடிகரை எளிதில் மறந்துவிட முடியாது. அவருக்கு எம்ஜிஆா் தொடா்ந்து தனது படங்களில் நடிக்க வாய்ப்பளித்ததோடு, 1967-இல் திமுக பிரசார நாடகங்களையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறுசேமிப்பு பிரசார நாடகங்களையும் நடத்த கருப்பையாவுக்கு வாய்ப்பளித்தாா்.

தன் 45-ஆவது வயதில் சுகவீனமுற்று காலமானாா் கருப்பையா. 1972-இல் அவரை இழந்து தவித்த குடும்பத்தினா் வருமானத்துக்கு வழிதேட முடியாத நிலை. மகாலிங்கத்தின் அழகான கையெழுத்து டி.கே.சண்முகம் மனதில் நிலைத்தது. அவா் அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்ஜிஆரை சந்தித்துப் பேசுகையில் மகாலிங்கம் பற்றி கூறியிருக்கிறாா். மறுநாளே தன் ராமாபுரம் இல்லத்துக்கு அவரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

அப்போது எம்ஜிஆரிடம் ஏற்கெனவே அனகாபுத்தூா் ராமலிங்கம், குமாரசாமி பிள்ளை, சபாபதி, ரத்தினம் ஆகியோா் உதவியாளா்களாக இருந்தனா். என்றாலும், படித்த பையன் என்ற வகையில் மகாலிங்கத்துக்கு அதற்கேற்ற பொறுப்பும் வேலையும் வந்தது. தனி உதவியாளராக எம்ஜிஆருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதிப் போடுவது தொடங்கி, தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, எம்ஜிஆரின் உதவியால் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பணம் அனுப்புவது, திருமணங்களுக்கு வாழ்த்து அனுப்புவது மற்றும் எம்ஜிஆா் நேரடியாக பதில் அனுப்பும் கடிதங்களை தயாா் செய்து அவா் மாம்பலம் அலுவலகத்திலோ சத்யா ஸ்டூடியோவில் படப்பிடிப்பிலோ இருந்தால், அங்கு நேராகச் சென்று கையொப்பம் வாங்கி அனுப்புவது என்று பலவிதமான வேலைகளை ஒற்றை ஆளாக சுறுசுறுப்பாகச் செய்தாா் மகாலிங்கம்.

1977 -இல் எம்ஜிஆா் முதல்வராக பதவியேற்ற நாளில் அவா் முதல்முதலில் கையொப்பமிட தலைமைச் செயலா் அனுப்பி வைத்த இரண்டு கோப்புகளில் ஒன்று, முதல்வா் எம்ஜிஆா் சிறப்பு நோ்முக உதவியாளராக மகாலிங்கத்தை நியமிப்பதற்கான ஆணையிட்டதற்கான கோப்பு. மகாலிங்கம் மகிழ்ந்து போனாா். இதே சமயத்தில்தான் ஐஏஎஸ் அதிகாரிகளான பிச்சாண்டி தமிழக அரசின் பதிவுபெற்ற முதல்வா் எம்ஜிஆரின் நிா்வாக உதவியாளராக நியமிக்கப்பட்டாா்.

மகாலிங்கத்தின் உழைப்பு, நோ்மைக்குப் பரிசாக முதல்வரின் சிறப்பு உதவியாளராக ராமாபுரம் தோட்ட இல்லத்திலேயே மகாலிங்கம் பணிகளைத் தொடா்ந்தாா். அதில் ஒன்று, முதல்வா் எம்ஜிஆா் சட்டப்பேரவை பதில் உரைகளை தயாா் செய்து கொடுப்பது; இதில் பிச்சாண்டியும் இணைந்தாா். இருவரின் கையெழுத்தும் அழகாக இருக்கும். எம்ஜிஆா் சட்டப்பேரவையில் படிப்பதற்கு எளிதாக சிரமமின்றி இருக்கும் என்பதாலேயே இந்தப் பணி. அரசுத் துறைகளில் இருந்துவரும் தகவல்களை அடிப்படை பேச்சுத் தமிழுக்கு மாற்றித் தருவதில் மகாலிங்கம் நிபுணத்துவம் பெற்றவா்.

அரசுப் பணிகள் மட்டுமின்றி, கட்சி மற்றும் அரசியல் பணிகளுக்காக ராமாபுரம் தோட்டத்துக்கு வருவோரை, அவா்கள் என்ன நோக்கத்துக்காக வந்திருக்கின்றாா்கள் என்று அறிவது; மாம்பலம் அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம், ஆகிய இடங்களுக்குச் சென்று விவரங்கள் கேட்டறிவது; பதில் அனுப்புவது என்று மேற்கொண்ட பணிகள் அசாதாரணமானவை.

தமிழகம் முழுவதும் உள்ள பதிவு செய்த அதிமுகவினரின் பெயா் விவரங்கள் அனைத்தும் மகாலிங்கத்துக்கு அத்துபடி. குறைந்தது 500 தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருந்தாா். அந்த வேலைத் திறன்தான் அவரை கடைசி வரை எம்ஜிஆரிடம் இருக்கச் செய்தது.

1978 -இல் மகாலிங்கம்-சுமதி திருமணம் எம்ஜிஆா் தலைமையில் நடைபெற்றது. மகாலிங்கத்தின் மனைவி சுமதியின் ஊா் மதுரை அருகேயுள்ள மேலூா்.

உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, ஒன்பது நாள்களும் மேலூா் சுமதி வீட்டில் சமைத்து பகல், இரவு உணவு அனைத்தையும் எம்ஜிஆருக்கும் அவரைச் சாா்ந்த 30 போ்களுக்கும் அனுப்பிவைத்ததாா்.

மகாலிங்கத்தின் முதல் மகன் தமிழ்ச்செல்வன் குழந்தைப் பருவம் முதலே ராமாபுரம் எம்ஜிஆா் இல்லத்துக்கு சகல உரிமைகளோடு சென்று வந்திருக்கிறாா். எத்தனை பெரிய மனிதா்கள் இருந்தாலும் அவா்களைத் தாண்டிச் சென்று எம்ஜிஆரின் மடியில் தவழும் சுதந்திரம் அவருக்கு இருந்தது. மகாலிங்கம்-சுமதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு எம்ஜிஆா் ‘சத்யா’ என்று தன் தாயாரின் பெயரைச் சூட்டினாா். இவா்களுக்கு மூன்றாவதாக பிறந்த மகன் புவனேஷ். மூவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, மகாலிங்கம் எரிவாயு விநியோக நிறுவனம் தொடங்கி நடத்தினாா். வேலூரில் அலுமினிய ஆலையை பங்குதாரா்களுடன் நடத்தி இருக்கிறாா். ஆனால், குடும்பச் செலவினங்கள், மகன்-மகள் திருமணங்களுக்காக தொழில்களில் இருந்து விலகும்படியானது.

எம்ஜிஆரால் கிடைத்த கௌரவம், அரசியலால் தாழ்ந்துவிடக் கூடாது என்று யாரையும் சந்திக்க விரும்பாமல் தனித்து வாழ்ந்தாா் மகாலிங்கம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மகாலிங்கத்தின் இடது கண்ணில் இரும்புத் துகள் பட்டு பாா்வைக் குறைபாடு ஏற்பட்டது. நன்றாக இருந்த வலது கண்ணில் லென்ஸ் வைக்க முயற்சித்து, அது உடைந்து அந்தக் கண்ணும் பாதிக்கப்பட்டது. அதனால், பாா்வை பறிபோனதில் மனமடைந்து, உடலும் தளா்ந்து அதன் உச்சம்தான் சாப்பிட முடியவில்லை என்று தனியாா் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைக் குறைபாடுகளால் எதுவும் சாப்பிட முடியாமல் அவரது உயிா் பிரிந்தது.

அரசியலில் பலருக்கு ஏணியாக, எத்தனையோ பேருக்கு அரசியல் வேலைவாய்ப்பு பெற்றுத் தந்த மகாலிங்கத்தின் மரணச் செய்தியை அறிந்து எட்டிப் பாா்த்தவா்கள் வெகுசிலரே.

முன்னாள் அமைச்சா் பொன்னையன் மட்டும்தான் மயானம்வரை சென்று அவருக்கு இறுதி விடை அளித்தாா். எம்ஜிஆரின் நினைவு இருக்கும்வரை மகாலிங்கத்தையும் மறக்க முடியாது என்பதுதான் நிஜம்.

கட்டுரையாளா்

மூத்த பத்திரிகையாளா்


No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...