Thursday, October 27, 2016

கம்ப்யூட்டரும் குழந்தை மாதிரி தான்... 

By ஜெ. வீரநாதன்  |   Last Updated on : 26th October 2016 05:37 PM  |   அ+அ அ-   |  
இருபதாம் நூற்றாண்டு கொடுத்த அறிவியல் படைப்புகளில் தலைசிறந்ததாகத் திகழ்வது கணினி தொழில்நுட்பமே. மேசைக் கணினி, மடிக்கணினி, உள்ளங்கைக் கணினி ஆகிய நேரடியான கணிப்பொறிகள் மட்டுமல்லாது, கணினியைவிட மேம்பட்டதாக உருவாக்கப்பட்டு கிடைக்கும் திறன்பேசியும் கணினி தொழில்நுட்பத்திலேயே இயங்குகின்றன. இந்தக் கருவிகளை விலைகொடுத்து வாங்குவது இன்று மிக எளிதாகிவிட்டது. 

 இதனால் இன்று குடிசை வீடு முதல் அடுக்கு மாடிக் குடியிருப்பு வரையிலும் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன, கணினி தொழில்நுட்பத்தால் இயங்கும் மின்னணுக் கருவிகள்.

 குறிப்பாக, மேசைக் கணினி மற்றும் மடிக்கணினிகளின் பராமரிப்பு பற்றிச் சொல்ல வேண்டும். எளிதாக வாங்கும் இந்தக் கருவிகளைப் பராமரிப்பது என்பது மிக எளிதாக மறந்துவிடுகின்ற செயலாகவே இருக்கின்றது. சரியாகச் சொல்வதென்றால் இந்தக் கருவிகளுக்குப் பராமரிப்பு என்பது தேவையற்றதாகவே கருதப்படுகிறது. இதன் விளைவு, மிகவும் அவசரமான, அதிகத் தேவையுள்ள நேரத்தில் இந்தக் கருவிகள் செயலற்றுப் போய்விடுகின்றன. அதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. 
 கணினிகளை வன்பொருள் மற்றும் மென்பொருள் என்ற இரண்டு வகைகளின் அடிப்படையில் பராமரிக்க வேண்டும். அப்படிப் பராமரிப்பதைப் பழக்கத்தில் கொண்டுவந்துவிட்டால் மிகவும் எளிதாகப் போய்விடும்.
இதனை, தினசரி, வாரம், மாதம் என்று குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுத்த வேண்டியனவாகப் பிரித்து வைத்துக் கொண்டு தவறாமல் செயல்படுத்த வேண்டும். இவற்றிற்காக செலவு என்பது நேரம் மட்டுமே. பொருளாக ஏதும் தேவையில்லை என்றே சொல்லலாம். அவற்றை இங்கு காணலாம். 
தினசரி செய்ய வேண்டியவை 
கணினி திரையை உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள்.
கணினியைச் சுற்றியுள்ள இடத்தைத் தூய்மைப்படுத்துங்கள்.
சிபியூ, மவுஸ் மற்றும் விசைப்பலகையையும் உலர்ந்த துணியால் துடைத்துத் தூய்மைப்படுத்துங்கள்.
தேவையென்றால் இதற்கென பிரத்யேகமாக திரவ நிலையில் கிடைக்கும் க்ளீனர்களையும் பயன்படுத்தலாம்.
வாரம் ஒரு முறை  குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டியவை 
டிஸ்க் ஸ்கேன் செய்யவும்.
டிஸ்க் க்ளீன் செய்யவும்.
தேவையெனில், தினசரி தொடர்ந்து நிறைய ஃபைல்களைக் கையாண்டிருந்தால், டிஸ்க் டிஃப்ராக்மென்ட் செய்யவும்.
தேவையான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரீசைக்கிள் பின்னை காலி செய்யவும்.
தேவையற்ற ஃபைல்களை டெலிட் செய்யவும். குறிப்பாக தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்கிவிடவும்.
ஆன்டி வைரஸ் மென்பொருளை அன்றைய தினத்தின் அளவிற்கு அப்டேட் செய்யவும்.
ஆன்டி வைரஸ் மென்பொருளை செயல்படுத்தி கணினியின் அனைத்து பகுதிகளையும் தூய்மை செய்யவும்.
மாதம் ஒரு முறை செயல்படுத்த வேண்டியவை 
தேவையற்ற, பயனற்ற மென்பொருட்களை ஆய்ந்தறிந்து நீக்கிவிடவும்.
மவுஸின் அடிப்பகுதியைத் தூய்மைபடுத்தவும்.
விசைப்பலகையின் விசைகளுக்குக் கீழ் பகுதியை தூய்மைப்படுத்தவும்.
கணினிக்கான மின் இணைப்புகள் உள்ளிட்டவற்றைச் சோதித்து அறியவும்.
காலாண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டிய தூய்மைப் பணிகள் 
டெஸ்க் டாப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஃபைல்கள், ஃபோல்டர்களை டிஸ்கிற்கு மாற்றவும். தேவையற்றனவாயின் டெலிட் செய்துவிடவும்.
பாஸ்வேர்டு சொற்களை மாற்றியமைக்கவும்.
சிபியூ உள்ளிட்ட வன்பொருட்களைத் தூய்மைப்படுத்தவும்.
கணினியின் ஹார்டிஸ்க்கின் சி டிரைவை மூன்று அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை ஃபார்மேட் செய்து கொள்ளவும்.
ஆண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டியவை 
உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆன்டி வைரஸ் உள்ளிட்ட மென்பொருட்களின் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும்.
பேக்கப்பில் சேர்த்து வைத்துள்ளவற்றைச் சோதித்து, அதில் உள்ள தேவையற்றவற்றை டெலிட் செய்யவும்.
Prevention is better than cure... என்பது கவனத்தில் கொள்ளப்பட்டால் நடைமுறையில் பல தொல்லைகளிலிருந்து விடுபடலாம். கணினி பராமரிப்பில் இது முதல் நிலையில் மனதில் வைத்திருந்து செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

விதிமீறல்களும் ஒலிமீறல்களும்!

விதிமீறல்களும் ஒலிமீறல்களும்!

By ஆசிரியர்  |   Last Updated on : 27th October 2016 06:04 AM  |   
அண்மையில் சிவகாசி பட்டாசுக் கடை தீவிபத்தின்போது, தனியார் ஸ்கேன் மையத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியபோது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர்: "பட்டாசுக் கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்படும்போது அந்தக் கடைகளை ஆய்வு செய்வதுண்டா?'
"விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிமம் புதுப்பிக்கப்படுகிறது. தீபாவளி காலங்களில் வேலைப் பளு காரணமாக அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய முடிவதில்லை' என்பதுதான் இதற்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இணை தலைமை அலுவலர் நேரில் அளித்த பதில், தமிழகத்தில் 5,530 தாற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,039 தாற்காலிக பட்டாசுக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை, வருவாய் துறை, காவல்துறை ஆகியவற்றின் தடையில்லா சான்று பெறாமல் இந்த அனுமதி கிடைக்காது. அவர்கள் ஆய்வு செய்தோம் என்று கூறுவார்கள். விபத்தும் உயிரிழப்புகளும் நேரிடும்போதுதான், இவர்கள் தங்களின் பணிபளு பற்றி மெல்ல எடுத்துரைப்பார்கள். தீபாவளி நெருக்கத்தில்தான் இந்த உரிமங்கள், அவசரஅவசரமாக வழங்கப்பட வேண்டுமா? நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே, இத்தகைய விண்ணப்பங்களைப் பெற்று, பணிபளு இல்லாதபோது முறையான ஆய்வுகள் நடத்தி வழங்கப்படலாகாதா?
பெரும்பாலான பட்டாசுக் கடைகளுக்கான உரிமங்கள் என்பது வெறும் கையூட்டு அடிப்படையில், இருக்கையில் இருந்தபடியே அனுமதிக்கப்படும் நடைமுறைதான் என்பது அனைத்து வணிகர்களுக்கும் தெரியும். தீபாவளி காலத்தில் ஒரு வாரம் பட்டாசு விற்பனைக்கு தாற்காலிக அனுமதி கிடைத்தாலும், போட்ட முதலீட்டைவிட அதிக லாபம் பார்த்துவிட முடியும் என்ற நடைமுறை உண்மையால், கையூட்டு கொடுத்து அனுமதி பெற விழைகின்றனர் வணிகர்கள். இதற்குக் காரணம் பட்டாசுக்கான விலையைக் கடைக்காரர்கள் தீர்மானிப்பதுதான். அவர்களையும் சொல்லிக் குற்றமில்லை. அத்தனை காவல்துறையினருக்கும், உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இலவசமாகப் பட்டாசுகள் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறதே.
உரிமம் அல்லது தாற்காலிக அனுமதி அளிக்கப்படும் பட்டாசுக் கடைகள் எத்தகைய பட்டாசுகளை விற்பனை செய்யலாம் என்பதிலும், அந்தக் கடையில் எந்த அளவுக்கு பட்டாசுகள் கையிருப்பு வைக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்த வரைமுறையும் இல்லை. அவர்களது விற்பனை விதி குறித்து எந்தவிதக் கட்டுப்பாடும் வெளிப்படைத்தன்மையும் இல்லை.
ஒரு பட்டாசு வெடிக்கும்போது, நான்கு மீட்டர் தொலைவில் அதன் ஒலி 125 டெஸிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வெடிமருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒரு விதிமுறை வைத்துள்ளது. இந்த விதியின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என்கின்ற கண்காணிப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. தாற்காலிக உரிமம் பெறும் கடைகளில் விற்கப்படும் பட்டாசுகள் இந்த அளவுக்கு மிகாமல் இருக்கும் வெடிகளா என்ற கண்காணிப்பும் இல்லை.
பெருஞ்சத்தம் ஏற்படுத்தும் வெடிகளை பொதுஇடத்தில் வெடிப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு வெடி வைத்து ஒலி மாசு ஏற்படுத்தியவர்களை கைது செய்யலாம். ஆனால் இந்த விதிமுறை எந்த இடத்திலும், உற்பத்தி, விற்பனை, தெருவில் கொண்டாட்டம் என எங்குமே மீறப்படுவதாகவே இருக்கிறது.
தாற்காலிக கடைகள் உரிமம் புதுப்பிக்கப்படும்போது, கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட அதே இடம்தானே என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது. அந்த இடத்துக்கு அருகே இந்த ஆண்டு புதிதாக ஒரு முதியோர் இல்லமோ அல்லது தனியார் மருத்துவமனையோ தொடங்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. அத்தகைய அலட்சியம்தான் சிவகாசி விபத்தில் தனியார் ஸ்கேன் மையத்தில் பட்டாசு விபத்துப் புகையால் ஒன்பது பேர் மூச்சுத்திணறி இறக்கக் காரணம்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சொல்கிறது. மீறினால் தண்டனை என்கிறது. உரிமம் புதுப்பிக்கப்படும் கடைகளுக்கும், தாற்காலிக விற்பனை கடைகளுக்கும் சென்று பார்க்கவே பணிபளு இருக்கும் அதிகாரிகள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை எவ்வாறு கண்காணிப்பார்கள்? பட்டாசு வெடிப்பது தவறில்லை. எத்தகைய பட்டாசு என்பதிலும் அவை ஏற்படுத்தும் காற்று மாசும், ஒலிமாசும்தான் கவனிக்கப்பட வேண்டியவை.
பட்டாசுக் கடைக்கு உரிமங்கள் வழங்குதல், புதுப்பித்தல், தாற்காலிகக் கடை அனுமதி எல்லாமும் ஒவ்வொரு ஆண்டும் நேரில் ஆய்வு நடத்திய பிறகே வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், அதிக ஒலி தரும் வெடிகளை தயாரிக்க, விற்க தடை விதித்து, அத்தகைய பட்டாசுகளை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு வெடியிலும், இந்த வெடியின் ஒலி, 125 டெஸிபல் அளவுக்குட்பட்டது என்ற உத்தரவாதம் எழுத்தால் பதிவு செய்யப்படும் நிலைமை உருவாகவேண்டும்.
மத்தாப்பு போன்ற ஆபத்தில்லாத சிலவற்றை வீட்டில் கொளுத்தவும், வெடிகளை ஊர் மைதானத்தில் அல்லது விளையாட்டுத் திடலில் வெடித்துக் கொண்டாடவுமான நிலைமை உருவாக வேண்டும். அதுதான் பாதுகாப்பான தீபாவளிக்கு வழிவகுக்கும். பட்டாசுக்கடை விதிமீறல்களுக்கும் பட்டாசு ஒலிமீறல்களுக்கும் காரணம் பணிபளு அல்ல, கையூட்டு பளுவே!

நடிகர் சிவகுமாரின் 50 ஆண்டு டைரி குறிப்பு


நாள் தவறாமல் டைரி எழுதும் பழக்கம் உள்ள சிவகுமார், தான் நடிக்க வந்த 1965-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையிலான இந்த 50 ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒரு சம்பவத்தை தன் டைரியில் இருந்து புரட்டித்தருகிறார்...

1965, ஜூன் 19: ஏவி.எம்-ன் 'காக்கும் கரங்கள்’ வெளியீடு. இன்று மாலை 4.50 மணி அளவில், தமிழகம் எங்கும் என்னைத் திரையில் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 6'x5.5' அளவு அறையில் 7 ஆண்டு தங்கி ஓவியம் படித்த ஓர் இளைஞன் நடிகனாக, உலகுக்கு அறிமுகம் ஆகிறான்.

1966, அக்டோபர் 6: அறிஞர் அண்ணா தலைமையில் என் நாடகம். திரு.சீனி.சோமு என்ற விளம்பர டிசைனர் எழுதி இயக்கிய நாடகம் 'அடல்ட்ஸ் ஒன்லி’. அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றம். அண்ணா தலைமை. மேஜர் சுந்தர்ராஜன், சோ, கல்யாண்குமார், வெண்ணிற ஆடைமூர்த்தி... நாடகம் பார்த்துப் பாராட்டினர்.

1967, ஜனவரி 12: கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துவரும் எம்.ஜி.ஆர் அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் சுடப்பட்டார்.



1968 செப்டம்பர் 2: 'அம்மன் தாலி’ நாடக அரங்கேற்றம். 'நாடகத்தில் நடிப்பைப் பயின்றாலொழிய திரையுலகில் கால் ஊன்ற முடியாது’ என சுகி சுப்ரமணியம் அவர்களின் புதல்வர் எம்.எஸ்.பெருமாள் கல்கியில் எழுதியிருந்த குறுநாவலை நாடகமாக்கி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் இன்று அரங்கேற்றம் செய்தேன்.

1969, அக்டோபர் 19: விகடன் தீபாவளி மலருக்காக 'நட்சத்திர சமையல்’ நிகழ்ச்சி. திருமதி.சௌகார் ஜானகி வீட்டில் நடைபெற்ற இதில் முத்துராமன்-வி.கோபால கிருஷ்ணனுடன் நானும் கலந்துகொண்டேன். நடிகைகள் ராஜஸ்ரீ, கிருஷ்ணகுமாரி, ஷீலா, சிவகாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1970, டிசம்பர் 8: சொந்த வீடு வாங்கினேன். 1958 ஜூனில் சென்னை வந்து 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, இரண்டு ஆண்டுகள் திரையுலகில் குருவிபோல் சேர்த்து 40 ஆயிரம் ரூபாயில், மூன்றாயிரம் சதுர அடியில் தி.நகரில் இப்போது குடியிருக்கும் எண்.17, கிருஷ்ணா தெரு வீட்டை விலைக்கு வாங்கினேன்.

1971, மார்ச் 6: 'அம்மன் தாலி’ நாடக பொன்விழா. இரண்டரை ஆண்டுகள் சென்னை உள்ளிட்ட தமிழக முக்கிய நகரங்களுக்கு சிவா டூரிஸ்ட் பஸ்ஸில் நாடகக் கலைஞர்கள், உபகரணங்களுடன் சென்று நாடகங்கள் நடத்தி, இன்று ஏ.பி.என் அவர்கள் தலைமையில் ஜெமினி, நாகேஷ் போன்றோர் கலந்துகொள்ள என்.கே.டி கலா மண்டபத்தில் நடைபெற்றது.

1972, ஜனவரி, 31: பருந்துப் பார்வையில் பம்பாய் ஓவியம். என்.எஸ்.என் தியேட்டரில் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் குழுவுடன் பம்பாய் சென்று, கிங் சர்க்கிளில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் தங்கி, நாடகங்களில் நடித்துவிட்டு - இன்று 2:30-க்கு தொடங்கி 6:15-க்குள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தின் 25-வது மாடியில் இருந்து, பம்பாயின் அழகை பென்சில் ஸ்கெட்ச் செய்தேன்.



1973, மே, 18: பாண்டிச்சேரியில் 'சொந்தம்’ நாடகம். பாண்டியில் இருந்து கான்ட்ராக்டர் பஸ் அனுப்பாததால் நாடகக் குழுவினர் திண்டிவனம் - மரக்காணம் -சூணாம்பேடு வழி செல்லும் ரூட் பஸ்ஸில் பாண்டி சென்று நாடகம் நடத்திவிட்டு, அரசு பஸ்ஸில் மேஜரும் நானும் சென்னை திரும்பினோம்.

1974, ஜூலை 1: சிவகுமார் - லட்சுமி திருமணம். கோவை, அவினாசி-புளியம்பட்டி சாலையில் தண்டுக்காரன் பாளையத்தில் 5,000 பேர் அமர்வதற்கு ஏற்ப வேலு மணியம்மாள் பந்தல் போட்டுத்தர, சென்னையில் இருந்து விசேஷ ரயில் பெட்டியில் மேஜர் நாடகக் குழு, பத்திரிகையாளர்கள் இரவே வந்து இறங்க, ஜாம் ஜாம் என்று திருமணம். உச்சிமோந்து ஆசி கூறவேண்டிய தாயார், காலில் அடிபட்டு தனியாக கிராமத்தில் இருந்தார்.

1975, ஜூலை 23: ஆண் குழந்தை பிறந்தது. மயிலாப்பூர் கல்யாணி நர்சிங்ஹோமில் இன்று அதிகாலை 2:51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார். (அந்த 'சரவணன்’தான் இன்று சூர்யா!)

1976, அக்டோபர் 11: பம்பாய் விமான விபத்து. இன்று இரவு பம்பாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்த சில நொடிகளில் தீப்பற்றி கீழே விழுந்ததில், அதில் பயணம் செய்த 95 பேரும் எரிந்து சாம்பல் ஆயினர். என் 'பத்ரகாளி’ பட கதாநாயகி ராணிச்சந்திராவும், அவரது தாயார் மற்றும் மூன்று சகோதரிகளும் தீக்கு இரையானார்கள்.

1977, நவம்பர் 14: நாகையைத் தாக்கியது புயல். இன்று வங்கக் கடலில் இருந்து வீசிய புயல் நாகப்பட்டினம், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரைப் பறித்துவிட்டது. தயாராருடன் கோட்டைக்குச் சென்று புயல் நிவாரண நிதியாக ரூ.10,000-க்கான செக்கை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கொடுத்தேன்.

1978, அக்டோபர் 10: சிறைக் கைதிகளுக்கு உணவு. நாடு சுதந்திரம் அடைந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூரும் வகையில், சிறை அதிகாரி பகவதி முருகன் அவர்கள் முன்னிலையில் சிறையில் அடைபட்டு இருக்கும் சகோதரர்களுக்கு (2,700 பேர்) உணவு வழங்கினேன்.

1979, மே 26: 100-வது பட விழா. 14 வயதுவரை 14 திரைப்படங்களே பார்த்த சிறுவன் கதாநாயகனாகி 14 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்து முடித்தேன். முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயம் கொடுத்து என் தாயார் ஆசியுடன் 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யைத் தொடங்கிவைத்தார்.



1980, செப்டம்பர் 25: கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் இறுதிப் பயணம். 1934-ல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி 'நந்தனார்’ படத்தில் நடித்தவர். 'ஒளவையார்’ படத்தில் நடிக்க 4 லட்சம் பெற்றவர். 64 வயதில் 'காரைக்கால் அம்மையாராக’ நடித்து எனக்காக ஒரு பாடல் பாடியவர். கொடுமுடி கோகிலம் கே.பி.எஸ் விடைபெற்றுக் கொண்டார்.

1981, அக்டோபர் 16: ஊட்டியில் இருந்து முத்துராமன் உடல் சென்னைக்கு. 'ஆயிரம் முத்தங்கள்’ படப்பிடிப்புக்கு வந்த முத்துராமன் கால்ஃப் காட்டேஜில் இருந்து பிராணவாயு குறைவாக இருந்த மூடு பனியில் 'ஜாக்கிங்’ செய்யப்போய், மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். ஐ.ஜி.பரமகுரு அவர்கள் உதவியுடன் ஊட்டி மருத்துவமனை வேனில் உடலை வைத்து, 12 மணி நேரம் பயணம் செய்து, அதிகாலை 3 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

1982, மார்ச் 12: இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் 27-வது மாநாடு நுவராலியாவில் நடைபெற்றது. ஜனாதிபதி ஜெயவர்த்தனே கலந்துகொண்டார். அமைச்சர் தொண்டைமான் அவர்கள் ஏற்பாட்டில் திருமதி மனோரமாவுடன் நானும் சென்று, வாலி அவர்கள் எழுதிய 'இந்தியா டுடே’ நாடகத்தின் ஒரு பகுதியில் நான் பாரதி, மனோரமா கண்ணம்மாவாக 15,000 பேர் முன்னிலையில் நடித்தோம்.

1983, நவம்பர் 20: டாக்டர் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு. பாரதிராஜா, பஞ்சு அருணாசலம், பாக்யராஜ் ஏற்பாட்டில், டாக்டர் பட்டம் பெற்ற எம்.ஜி.ஆருக்கு நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. சிவாஜி சிறப்புப் பேச்சாளர்.

1984 பிப்ரவரி 24: தலைக்கு மேலே விமானம். கோவை பீளமேடு விமான நிலைய ரன்வேயில் நான் கார் சவாரி செய்ய, தலைக்கு மேலே கிளைடர் விமானத்தில் ராதிகா பறந்து வருவதுபோல 'நிலவு சுடுவதில்லை’ படத்தின் 'பாரிஜாதம் பகலில் பூத்ததோ’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிறுவயதில், தலைக்குமேலே 100 அடி உயரத்தில் கிராமத்தில் போர் விமானங்கள் பறந்தபோது, செடிக்குள் பதுங்கியது நினைவுக்கு வந்தது.

1985 பிப்ரவரி 4: அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர் வந்தார். பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெற, அள்ளி எடுத்து வேனில் ஏற்றி அமெரிக்க புரூக்லின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர், சிகிச்சை முடிந்து துள்ளி நடந்துவந்து கோடிக்கணக்கான இதயங்களில் பால் வார்த்தார்.



1986 ஜூலை 1: மதுரையில் 'சிந்து பைரவி’ 200-வது நாள் விழா. இந்தப் படத்தில் பங்குபெற்ற பலருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. படைப்பாளி பாலசந்தருக்கும் கொடுத்திருக்க வேண்டும். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்ந்த ஒரு காட்டுவாசி இளைஞனை, ஜே.கே.பி. என்ற கர்நாடக சங்கீத வித்வானாக நடிக்கவைத்த கே.பி சாருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

1987 அக்டோபர் 4: 'இது ராஜபாட்டை அல்ல’ நூல் வெளியீடு. நான் ஜூனியர் விகடனில் 45 வாரங்கள் தொடராக எழுதிய தமிழ்த் திரைப்பட வரலாறு, வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. அகிலனின் தவப்புதல்வன் கண்ணன், 'தமிழ் புத்தகாலயம் மூலம் முதல் நூலாகக் கொண்டுவந்தார்.

1988 நவம்பர் 15: கலைஞர் வருகை. பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் என்றும் தமிழ் மக்களால் மறக்கமுடியாத அரசியல் தலைவர், தமிழைக் கொண்டாடுபவர், நினைவாற்றல் மிக்கவர், தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர் கலைஞர் அவர்கள் ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோருடன் எங்கள் இல்லம் வந்து 90 மணித்துளிகள் என் ஓவியங்களை ரசித்துப் பார்த்தார்.

1989 அக்டோர் 25: அன்னையார் இறைவனடி சேர்ந்தார். என்னை ஈன்றெடுத்து, வறுமை தெரியாமல் வளர்த்து, என் விருப்பப்படி ஓவியக்கலை படிக்கவைத்து, நடிகனாக 25 ஆண்டுகள் பார்த்து உச்சிமோந்த அந்த தெய்வம் இறைவனடி சேர்ந்தது. முதல்வர் கலைஞர், சிவாஜி, ராஜ்குமார் தொடங்கி பலதுறை பெருமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

1990, அக்டோபர் 27: ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் 60-ம் ஆண்டு மணிவிழா. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தொகுத்து வைத்திருக்கும் நடமாடும் என்சைக்ளோபீடியா ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலைவாணர் அரங்கில் மணிவிழா.

1991 ஜூன் 14: 1974-ல் தீவிபத்தில் காலமான நடிகர் சசிகுமார் 10 வயது தாண்டாத 2 குழந்தைகளை விட்டுச் சென்றார். அவர்களின் படிப்புக்கு திரையுலக முக்கிய புள்ளிகள் உதவினோம். இன்று வளர்ந்துவிட்ட அவர் மகள் துர்கேஷ் நந்தினி-சுப்ரமணியம் திருமணம் பெசன்ட் நகரில். குழந்தைகளை வாழ்த்திவிட்டு 30 ஆண்டுகளாக மவுனவிரதம் இருக்கும் சசிகுமாரின் தந்தை பேராசிரியரிடம் ஆசிபெற்றேன்.

1992 அக்டோபர் 4: சிட்னியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு. எண்மோர் தியேட்டரில் வசந்தமாலை நிகழ்ச்சி. 'தாகம் நாட்டிய நாடகம்’, சிட்னி ஈழத்தமிழர் கழக கலைக்குழு நிகழ்ச்சி. 'நான் கண்ட திரையுலகம்’ பற்றி கடைசியில் 1 மணி நேரம் பேசினேன்.

1993 அக்டோர் 8: 'மேஸ்ட்ரோ’ இளையராஜாவுக்குப் பாராட்டு. 1813-ல் துவக்கப்பட்டு 180 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு பல மேதைகளின் சிம்பொனியை வாசித்துள்ளது. ஜான் ஸ்காட் கண்டக்டராக இருந்து இளையராஜாவின் சிம்பொனியை ஒலிப்பதிவு செய்தார். காமராஜர் அரங்கில் சிவாஜி தலைமையில் இன்று பாராட்டு விழா.

1994 ஜூன் 22: எல்.வி.பிரசாத் மறைவு. ஆந்திராவில் பிறந்து, பம்பாய் ஸ்டுடியோ வாட்ச்மேனாக வாழ்க்கையைத் தொடங்கி, இந்தியாவின் முதல் பேசும் படம் 'ஆலம் ஆரா’வில் தலைகாட்டி 15 ஆண்டு அனுபவத்துடன் சென்னை வந்து 'கிருகப்பிரவேசம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து, டைரக்ட் செய்து, 'சம்சாரம்’, 'சௌகார்’, 'கல்யாணம் பண்ணிப்பார்’, 'மனோகரா’, 'மங்கையர் திலகம்’, 'மிஸ்ஸியம்மா’, 'இதயக் கமலம்’ இயக்கி தென்இந்தியாவின் மிகப் பெரிய படைப்பாளியாக விளங்கிய எல்.வி.பிரசாத், 86 வயதில் விடை பெற்றார்.



1995 ஜூலை 31: இலங்கை ஈடன் ஓட்டலில் படப்பிடிப்பு. ராதிகா உடன் நடித்த 'மீண்டும் மீண்டும் நான்’, தொலைக்காட்சி தொடர். மனோபாலா இயக்கம். கொழும்பில் இருந்து தெற்கே 60 கி.மீ தூரத்தில் களுதறை தாண்டி காலி ரோட்டில் பேருவலையை அடுத்து வருகிறது ஈடன் ஓட்டல். ரிசப்ஷன் லாபியின் அழகு ஒன்று போதும் அந்த ஓட்டல் பெருமை சொல்ல.

1996 ஜூலை 20: வாலியின் அவதார புருஷன் வெளியீடு. கவியரசு கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் கப்பல் விட்டுக்கொண்டிருந்த திரைக்கடலில், படகு விட்ட வாலி, அவர்களைவிட அதிக ஆண்டு வாழ்ந்து அதிக பாடல்கள் எழுதியவர். இது, கம்பராமாயணத்தைப் படித்து கம்பன் வார்த்தைகளைப் பயன்படுத்தாத உரை நடைக் கவிதை நூல்.

1997 ஜூலை 15: சிவாஜிக்கு பால்கே விருது. இந்தியாவின் பெருமைக்கு உரிய திரைப்பட விருதான பால்கே விருதினை இன்று மாலை குடியரசுத் தலைவரிடம் உலகின் ஒப்பற்ற நடிகர்களில் முதன்மையான சிவாஜி பெற்று, அந்த விருதுக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 6: 'நேருக்கு நேர்’ படத்தில் சூர்யா அறிமுகம்.

1998 மார்ச் 27: 'காதலுக்கு மரியாதை’ 100-வது நாள் விழா. 'உயிருக்குயிராகக் காதலித்தவர்கள் பெற்றோருக்காக தங்கள் காதலைத் தியாகம் செய்ய - பின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற ஜோடி தேடி, தோற்று, மீண்டும் காதலர்களை இணைத்துவைக்கும் ஃபாசிலின் அற்புதப் படம்.

1999 ஜூலை 1: 25-வது ஆண்டு திருமண நாள். எதிர்காலத்தில் தாடி வளர்த்து ஏதாவது கோயில் மடங்களில் சாமியாராக முடங்கிக் கிடப்பேன் என்று நம்பினேன். ஆனால் என்னைச் சகித்துக்கொண்டு, என் விருப்பப்படியே என்னை வாழவிட்டு, என்னோடு 25 ஆண்டுகள் வாழ்ந்த பெண்மணியைப் பார்த்து மலைக்கிறேன்.

2000 ஜூலை 31: கன்னட ராஜ்குமார் கடத்தப்பட்டார். எங்கள் இளையமகன் கார்த்திநியூயார்க்கை அடுத்த பிங்காம்டன் பல்கலையில் படிக்க இன்று இரவு அமெரிக்கா பயணமானான். இதே இரவு தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் தாளவாடியை அடுத்த கஞ்சனூர் பண்ணை வீட்டில் இருந்து கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

2001 மே 29: 'பூவெல்லாம் உன் வாசம்’ கடைசி நாள் படப்பிடிப்பு. 36 ஆண்டுகள் பெரிய திரையில் நடித்து பொறுமையின் சிகரமான தமிழ் மக்களை என் நடிப்பின் மூலம் சோதித்தது போதும் என, இன்றுடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவுசெய்தேன்.

2002 ஜனவரி 4: அண்ணாமலை தொடர் படப்பிடிப்பு. அம்பாசமுத்திரத்தை அடுத்து உள்ள கைலாசநாதர் கோயிலில் படப்பிடிப்பு. லண்டன் நண்பர் உமாகாந்தன் கொண்டுவந்த பென்டாக்ஸ் காமிராவால், கைலாசநாதர் கோயிலை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன்.

2003 நவம்பர் 9: வெள்ளி விழா நாயகன் சத்யராஜுக்கு பாராட்டு. 25 ஆண்டுகள் திரையுலகில் பவனிவந்த சத்யராஜுக்கு அவருடைய நண்பர்கள், கோவை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பாராட்டு விழா. கமல்ஹாசன், விஜயகாந்த், மணிவண்ணன், வடிவேலு, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமாருடன் நானும் கோவை சென்று வாழ்த்தினேன்.

2004 ஜூன் 18: இசைக்குயில் எம்.எஸ்.ஸுடன் சந்திப்பு. தெய்வீகக் குரல் அரசி 'சேவாசதனம்’ படத்தில் கே.சுப்ரமணியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, 'சகுந்தலை’, 'மீரா’ படங்களில் தன் இனிய குரலால் தமிழ் மக்களை வசீகரித்த எம்.எஸ் அம்மாவின் பாதம் தொட்டு வணங்க, என் மகள் பிருந்தாவை அழைத்துச் சென்றேன். 'சாதகம் செய்துகொண்டே இரு. பயிற்சிதான் குரு’ என்றார்.

2005 ஜூன் 30: இளையராஜா சிம்பொனியில் திருவாசகம். 100 ஆண்டுகளுக்கு முன் ஜி.யு.போப், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இப்போது இளையராஜா திருவாசகத்தை 'அரேபோரியோ’ முறையில் உருவாக்கியுள்ளார். ஆஸ்கர், கிராமி விழாக்களில் வாசிப்பவர்கள் இளையராஜாவுடன் கைகோத்துச் செய்தனர். வைகோவின் உரை உச்சம்.

2006 செப்டம்பர் 11: கலைஞர் தலைமையில் சூர்யா-ஜோதிகா திருமணம். 'பராசக்தி’ வசனகர்த்தாவாக என் இதயங்களில் இடம்பிடித்தவர் 5-வது முறை தமிழக முதல்வராகி மணமக்களை வாழ்த்த வந்தார். உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைய தலைமுறையினர், அவரவர் நாட்டில் உள்ள தெய்வீகத் தலங்களுக்குச் சென்று, இந்த ஜோடி வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்த அன்பை, இணையதளத்தில் பார்த்து மலைத்தேன்.

2007 டிசம்பர் 29: எம்.ஆர்.ராதா 100-வது ஆண்டு விழா. தி.க-வில் உறுப்பினராகாமல், பெரியாரை ஒப்பற்ற தலைவராகவும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வாழ்வின் வேதமாகவும் ஏற்றுக்கொண்டு, நாடகத்தின் மூலம் பல எதிர்ப்புகளை, தடைச் சட்டங்களைத் தாண்டி, அந்தச் சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டுசேர்த்தவர். 'ஒழுங்கா ஓவியம் படித்து உருப்படற வழியைப் பாரு. கூத்தாடி வேலைக்கு வராதே’ என்று எனக்கு அறிவுரை செய்தவர். பிப்ரவரி 23: 'பருத்தி வீரன்’ வெளியீடு. கார்த்தி அறிமுகம்.

2008 செப்டம்பர் 19: பாட்டி பேச்சியம்மாள் (108) இயற்கை எய்தினார். குடியிருந்த வீட்டை தானே பெருக்கி, சானமிட்டு திண்ணை மெழுகி, கைத்தடி பிடிக்காமல் கொல்லைப்புறம் சென்று குவளையில் தண்ணீர் மொண்டு ஊற்றி, புடலை கொடியை முளைக்கவைத்து, மூக்குக் கண்ணாடியின் துணை இன்றி அரிசியில் கல் பொறுக்கி, மருந்து, மாத்திரை, ஊசி நெருங்கவிடாமல் 108 வயது வாழந்த பாட்டி பேச்சியம்மாள், சூர்யா - ஜோதிகாவை வாழ்த்தி 2 ஆண்டு கழித்து விண்ணுலகம் பயணமானார்.



2009 ஜனவரி 28: 100 பாடல்களில் கம்பராமாயண உரை. ஈரோடு தண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப் பளியில் புத்தகக் காட்சியில் கம்பராமாயணத்தில் 100 பாடல்களை எடுத்துக்கொண்டு நிகழ்த்திய உரை எனக்கு, மேடைப் பேச்சாளன் என்ற அங்கீகாரத்தை அளித்தது.

2010 செப்டம்பர் 21: டாக்டர் கலாம் சந்திப்பு. சன் டி.வி-க்கு விசேஷப் பேட்டி எடுக்க டெல்லி சென்று டாக்டர் கலாம் அவர்களைச் சந்தித்தேன். பேட்டி எடுக்கும்போது என் குடும்பத்தையும் குழந்தைகளையும் வாழ்த்தி என் ஓவியங்களையும், 'கம்பன் என் காதலன்’ உரையையும் நெகிழ்வுடன் பாராட்டினார்.

2011 ஜூலை 8: முதல்வர் ஜெயலலிதா என் இல்லம் வருகை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் நடித்த சக கலைஞரை மதிக்கும் வகையில் முதல்வர் ஜெ. வீடு வந்து கார்த்தி-ரஞ்ஜினியை மனமார வாழ்த்திச் சென்றார்.



2012 ஜூலை 12: சூர்யாவின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி கடைசி நாள். பிறந்தது முதல் 30 வருஷமாகப் பேசிய வார்த்தைகளைவிட, 100 மடங்கு பேசி, மௌன சாமியார் வாயாடியாகவும் தன்னைக் காட்டிக்கொள்ள முடியும் என்று சூர்யா நிரூபித்த நிகழ்ச்சி.

2013 ஜனவரி 11: கார்த்தி-ரஞ்சனிக்கு மகள் பிறந்தாள். வெள்ளைச் சேலை-வியர்வை-வெயிலில் பாடுபட்டு கருத்துப்போன உடம்பு... இப்படித்தான் என் தாயாரை நான் பார்த்திருக்கிறேன். கணவன் விட்டுப்போன குழந்தைகளைக் காப்பாற்ற, காட்டில் அலைந்தே அவர் வாழ்க்கை கழிந்துவிட்டது. கார்த்தியின் மகள் உமையாள் வடிவில் என் தாய் பிறந்து பாசத்தைப் பொழிகிறாள்.



2014 ஜூலை 24: 80 வயது ஜே.கே., 91 வயது கோபுலு பாராட்டு விழா. கார்ட்டூன், கேரிகேச்சர், தாண்டி புராண, சரித்திர கால மன்னர்கள், மக்கள், இக்கால மக்களின் நடை, உடை, பாவனைகளை கோபுலு அளவுக்கு ஓவியம் தீட்டியவர்கள் தமிழகத்தில் இல்லை. ஜெயகாந்தன் போல விளிம்பு நிலை மனிதர்களின் எளிய, கொடிய வாழ்க்கையை தன் பேனா மூலம் இலக்கியமாக்கிய எழுத்தாளரும் இல்லை. அன்று கௌரவிக்கப்பட்ட விகடன் பாலன், ஜெயகாந்தன், கோபுலு மூவருமே இன்று இல்லை!

Tuesday, October 25, 2016


பண்டிகை கால சொந்த ஊர் பயணம்: சவால்களும் சர்ச்சைகளும்
பாரதி ஆனந்த்
Inline image 1

பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்குச் செல்வது, அதுவும் குறிப்பாக சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வது பெரிதினும் பெரிய சவால். அந்தச் சவாலை சமாளித்து டிக்கெட் வாங்கிவிட்டாலும் பயணத்தை சுற்றியிருக்கும் சர்ச்சைகள் ஏராளம்.

ஆம். வழக்கமாக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என்று வாடிக்கையாளர்களை வரவேற்றுக் கொண்டிருக்கும் அரசு, ஆம்னி பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் அன்றுமட்டும் ஒரு கடினமான அதிகாரியாக மாறியிருப்பார்கள்.

"சீட் இல்லைப்பா, எல்லாம் ஃபுல், வேற பஸ் பாருங்க, சீசன் டைம்ல இப்ப வந்தா எப்டி.., கடைசி சீட் வேணா இருக்கு.." இப்படி விதவிதமாக பதில்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள்

உற்றார், உறவினருக்கு வாங்கிய பரிசுப் பொருட்களுடனும், எப்படியாவது வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்ற கனவுடனும் அரசுப் பேருந்துகள் நிற்குமிடத்துக்கும் ஆம்னி பேருந்துகள் நிலையத்துக்கும் இடையே 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வேகத்தில் ஓடித்திரியும் உசேன் போல்டுகளைப் பார்க்கலாம். உணர்வுபூர்வமாக சற்றே பரிதாபமான காட்சியே அது.

உங்களுக்கும்கூட இந்த அனுபவம் இருந்திருக்கும். அத்தகைய அனுபவமும் அதைச் சார்ந்த அரசியலும் குறித்ததே இந்த செய்தி அலசல்.

இதற்கான மெனக்கெடலில் முதல் முயற்சியாக சீசன் வேளையில் உங்களது வெளியூர் பயணம் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் என முகநூலில் தோழர்களிடம் கேட்டிருந்தேன்.

பெரும்பாலோனோர் நெருக்கடி காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, கட்டணத்துக்கேற்ற வசதியை அளிப்பதில்லை, அச்சுறுத்தும் வேகத்தில் பேருந்துகளை இயக்குகின்றனர் என அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தனர்.

மக்கள் புகார்களை தொகுத்துக் கொண்டு மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சலை அணுகினோம். அவர் கூறியதாவது: "தீபாவளி நெருங்கிவிட்டது. இந்த தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் இவ்வளவு கட்டணம்தான் பெற வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க உத்தரவு. நீதிமன்ற அறிவுறுத்தலை கடைபிடிக்க அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர், சங்கம் நிர்ணயித்த கூடுதல் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகள் வாங்கியவர்களுக்கு அவற்றைத் திருப்பிச் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இவ்வளவு முறையாக விஷயங்கள் நடைபெறுகிறது என்றால் பிரச்சினை எங்கு இருக்கிறது எனக் கேட்டபோது, அவர் சொன்ன பல விவரங்கள் அரசால் கவனிக்கத்தக்கது.

"கூடுதல் கட்டணப் புகார்களில் சிக்கும் பேருந்துகள் எல்லாமே சிலரால் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுபவை. மக்களின் அவசரத்தை அறிந்து கொண்டு அதைவைத்து பேரம் பேசி சிலர் முறைகேடாக தொழில் செய்கின்றனர். அவ்வாறான ஒப்பந்ததாரர்களை பலமுறை அழைத்து நாங்கள் பேசியிருக்கிறோம். ஆம்னி பேருந்துகள் நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கவும் வலியுறுத்திவிட்டோம். ஆனால், அவர்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் வர விரும்பவில்லை. காரணம் ஓரிரு தினங்களிலேயே கிடைத்துவிடும் கொள்ளை லாபம். இப்படி பேருந்து நிலையங்களில் இல்லாமல் கண்ட இடங்களில் பயணிகளை ஏற்றும் பேருந்துகளில்தான் கூடுதல் கட்டணம்; சில நேரங்களில் இருமடங்குகூட கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன.

இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை நினைத்தால் மட்டுமே முடியும். ஆனால், சில இடங்களில் கடமையைத் தாண்டியும் லஞ்சம் ஓங்கி நிற்கிறது. விளைவு, பயணிகள் அசவுகரியம். கட்டணத்தையும் கொட்டிக் கொடுத்து, வசதியில்லாத பேருந்தில் ஏறிக் கொண்டு ஓட்டுநர் பேருந்தை விரட்ட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சொந்த ஊர் செல்கிறார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்குபவர்களை நெறிமுறைப்படுத்த மாநில காவல்துறையும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து செயல்பட்டாலே மக்கள் பயணத்தை இனிதாக்க முடியும்” என்றார்.

அப்போது எனக்கு அண்மையில் நேர்ந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு சில கேள்விகளை முன்வைத்தேன்.

ப்ளாஷ் பேக்...

ஆயுதபூஜையை ஒட்டி 5 நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போதுதான் ஊரில் இருந்து ஒரு சோகத் தகவல் வர, ஆன்லைனில் அவசரமாக டிக்கெட்டுகளைத் தேடினேன். இரவு 10.30 மணிக்கு ஒரு ஸ்லீப்பர் ஏ.சி. பேருந்தில் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. உடனே அதில் ஒன்றை புக் செய்துவிட்டு 10.10 மணியளவில் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த போர்டிங் பாயின்டுக்குச் சென்றுவிட்டேன்.

அவர்கள் கொடுத்திருந்த எண்ணில் தொடர்பு கொண்டு, அசோக் பில்லரில் நிற்கிறேன் என்றேன். மறுமுனையில், 'மேடம் வெயிட் பண்ணுங்க. கொஞ்சம் லேட்டாகும். சீசன் டைம்னால ஒரே டிராபிக். ஸாரி' என்ற கனிவான குரல் கேட்டது. சரியென்று நின்றிருந்தேன் மணி 11.00. மீண்டும் அதே நம்பருக்கு அழைத்தேன். இதோ வந்துவிடும்.. என்ற அவசரமாக துண்டிக்கப்பட்டது அழைப்பு. 11.30 மணியிருக்கும் என்னைக் கடந்து நான் செல்ல வேண்டிய பேருந்து அதிவேகமாக பாய்ந்து செல்வதைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.

அதே டிராவல்ஸ் பெயர், அதே ஸ்லீப்பர் ஏ.சி. பேருந்து. செய்வதறியாது ஒரு சில நொடிகள் பதற்றத்துக்குப் பின் மீண்டும் அந்த எண்ணுக்கு போன் செய்தேன். "மேடம்.. நீங்க இன்னும் ஏறலையா. பஸ் வந்திருக்குமே.. டிரைவர் நம்பர் தாரேன் பேசுங்க" என்றவுடன் எனக்கு ஆத்திரம் வந்தது. "நீங்கள் சொன்ன இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைத் தாண்டி அந்த பேருந்து செல்கிறது. இப்போ நான் எதுக்கு டிரைவரிடம் பேச வேண்டும். ஏமாற்றாதீர்கள். நான் பத்திரிகையில் பணிபுரிகிறேன்" என்றேன். எதிர்முனையில் பம்மிய நபர் இதோ லைன்ல வரேன் என்று சொல்லி துண்டித்தார்.

அசோக் பில்லரில் இருந்து மீண்டும் மைலாப்பூரில் உள்ள வீட்டுக்குச் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே ஓர் அழைப்பு. "மேடம் நான் டிரைவர் பேசுறேன். உங்களுக்கு கால் பண்ணி பார்த்தோம்.. நாட் ரீச்சபிள்னு வந்துச்சு. 5 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு கிளம்பிட்டோம். இப்ப வண்டி ஆலந்தூர் மெட்ரோ கிட்ட இருக்கு. உங்களுக்காகவே வெயிட் பண்ணிட்டு இருக்கோம். வந்துடுங்க ப்ளீஸ்" என்றார் டிரைவர்.

"பொய் சொல்லாதீங்க சார். என் கண் முன்னாடியே உங்க பஸ் போறத நான் பார்த்தேன். பிக்அப் பாயின்டுன்னு நீங்க சொன்ன இடத்துலதான் நின்னேன். அந்த இடத்தில் நீங்க நிறுத்தல. அது உங்களோட தப்பு. இப்ப என்ன ஆலந்தூர் வரச் சொன்னா எப்படி வர முடியும்?” எனக் கேட்க.. மறுபடியும் எதிர்முனையில் கெஞ்சல்.

துக்க நிகழ்வுக்கு செல்லாமல் இருக்க முடியாது. மேலும், அசோக் பில்லரில் இருந்து தனியாக மைலாப்பூர் செல்வதைக் காட்டிலும் ஆலந்தூர் பக்கமே. ரூ.1265 டிக்கெட் செலவு வேறு.

எல்லாவற்றையும் யோசித்து ஒரு ஆட்டோவில் ஆலந்தூர் புறப்பட்டேன். ஆனால், ஈக்காட்டுத்தாங்கல் பாலம் ஏறும்போதே பயம் தொற்றிக் கொண்டது. மீண்டும் பஸ் டிரைவருக்குப் பேசி நான் வந்து கொண்டிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளரையே நீங்கள் இப்படி ஏமாற்றினீர்கள் என்றால் சாதாரண மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுவீர்கள் என கடிந்து கொண்டேன். என் நோக்கம், நான் செல்லும் ஆட்டோ ஓட்டுநருக்கும் நான் ஒரு பத்திரிகையில் பணிபுரிகிறேன் என்பதை கன்வே செய்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.

சில நிமிடங்களில் பேருந்தை பார்த்துவிட்டேன். "என்னைவிட்டுச் சென்றதற்கு தண்டனையாக ஆட்டோ கட்டணத்தை நீங்களே கொடுங்கள்" என்று கூறிவிட்டு பஸ்ஸில் ஏறினேன்.

அன்றைய தினத்தின் அந்த ஒரு மணி நேரம் ஏற்படுத்திய கோபம், அச்சம், கசப்புணர்வுகள் என்றும் என் நினைவிலிருந்து நீங்காது. ஒருவகையில் இந்த கசப்பனுபவம்கூட இந்தச் செய்திக்கான உந்துதல் என்றால் அதுமிகையல்ல.

இந்த பிளாஷ்பேக்கை சுருக்கமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அப்சலிடம் கூறினேன். நான் பயணித்த டிராவல்ஸின் பெயரையும் கேட்டுக் கொண்டு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பற்றி பேசத் தொடங்கினார்.

அவர் மேலும் கூறியதாவது:

"முதலில் நீங்கள் பயணித்த அந்த டிராவல்ஸ் நான் ஏற்கெனவே கூறியதுபோல் ஒப்பந்த அடிப்படையில் இயங்குவதாகும். இப்படி ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஆம்னி பேருந்துகளின் தவறுகளால்தான் ஒட்டுமொத்தமாக ஆம்னி பேருந்துகள் அனைத்துமே களங்கத்துக்குள்ளாகின்றன.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் பதிவு செய்யும் தனியார் நிறுவனங்கள் புற்றீசல்போல்கள் போல் பெருகிவிட்டன. ஏதோ வெளிநாடுகளில் இருந்துகொண்டு இவற்றின் முதலாளிகள் இங்கே வர்த்தகம் செய்கின்றனர். அவர்களது முழு இலக்கு பிசினஸ் மட்டுமே. ஒரு பெரிய ஆன்லைன் பிராண்ட் இத்தகைய டிராவல்ஸ் நிறுவனத்தை பரிந்துரைக்கும்போது வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி டிக்கெட் முன்பதிவு செய்யத்தான் செய்வார்கள்.

டிராவல்ஸ் நிறுவனங்களின் சேவை தரத்தைப் பொறுத்தே அவற்றைப் பட்டியிலிடுவது குறித்து இத்தகைய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், எத்தனை நிறுவனங்கள் அவ்வாறாக செய்கின்றன? தொழில் இலக்கு லாபமாக இருந்தாலும் அது நியாயமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள் இதுபோன்ற அசவுகரியங்களை சந்திக்கும்போது எந்த ஆன்லைன் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்தார்களோ அந்த நிறுவனத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும். தொடர்ச்சியாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு நிர்பந்திக்கப்படுவார்கள்.

இதுதவிர போக்குவரத்து அமைச்சகமும் இத்தகைய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுவனங்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்து கண்காணிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

முறையாக ஆம்னி பேருந்து போக்குவரத்து மையங்களில் இருந்தும் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும்போது கட்டணக் குறைபாடோ, அதிவேகமாக பஸ் இயக்கப்பட்டாலோ, அல்லது ஓட்டுநர், நடத்துநர் பெண் பயணியிடம் தகராறு செய்தாலோ 9940155547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேக புகார் எண் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதைக்கு இல்லை. இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் அது அனைத்து பேருந்து உரிமையாளர்களுடனும் விரிவான பேச்சுவார்த்தை ஏற்படுத்தியே செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த முறை பெண்களுக்காக தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் ஒரே ஒரு அனைத்து மகளிர் பஸ் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சரி ஆம்னி பேருந்துகளில் மட்டும்தான் இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றனவா அரசுப் பேருந்துகளில் சீசன் பயணம் சுமுகமாக இருக்கிறதா என்று கேட்டால், அங்குள்ள சிக்கல்கள் குறித்து மக்கள் கூறுவது இன்னும் மலைப்பாக இருக்கிறது.

சக ஊழியருக்கு சொந்த ஊர் திருத்தணி. அவர் பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் சென்றபோது நேர்ந்த அனுபவத்தைக் கூறினார். "பண்டிகை காலத்தில் திருத்தணிக்குச் செல்ல சென்னை - திருப்பதி பேருந்தில் ஏறினேன். அதில்மட்டுமே இடமிருந்தது. ஆனால், நடத்துநர் என்னிடம் திருப்பதிக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டார். ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியால் வேறு வழியின்றி திருப்பதிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு திருத்தணியில் இறங்கினேன். மீறி பேசினால், பேருந்து பைபாஸில் செல்லும் நீ இறங்கிக் கொள் என்பார் நடத்துனர். அந்த அனுபவமும் இருக்கிறது."என்றார்.

மற்றொரு சகா கூறும்போது, "பண்டிகை காலத்தைவிடுங்க மூன்று நாள் சேர்ந்தாப்ல் லீவு விட்டுட்டா போதும் இந்த பஸ்காரங்களுக்கு.. படி காசு கல்லா கட்றதுலயே குறியா இருப்பாங்க. சின்ன குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தா உட்கார இடம் தரணும். ஆனா, அரை டிக்கெட்டும் வாங்கிவிட்டு குழந்தைய மடியிலும் உட்கார வைக்கச் சொல்வார்கள். அப்புறம், சென்னை - மதுரை பேருந்தில் ஏறினால் வழியில் எங்கு இறங்கினாலும் விழுப்புரம் டிக்கெட்தான் வாங்க வேண்டும்" என்றார். இப்படித்தான் சீசன் நேரத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இடையில் ஏதாவது ஊரில் இறங்க வேண்டும் என்றாலும் இலக்குக்கான கட்டணமே பெற வேண்டும். இந்த கட்டண கொள்ளையை எந்த வகையில் சேர்ப்பது என பொதுமக்கள் சிலர் பொருமுகின்றனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். மதுரை மண்டல வணிகப் பிரிவு துணை மேலாளரான அவர் "சென்னையில் இருந்து மதுரைக்கு என்று பிரத்யேகமாக இயக்கப்படும் பேருந்துகளில் மதுரை செல்லும் பயணிகள் மட்டுமே ஏற்றப்படுகின்றனர். இதுதவிர வழியில் உள்ள பிற இடங்களிலும் நின்று செல்லும் ரூட் பஸ்களை மாநில விரைவு போக்குவரத்துக் கழகமே இயக்குகிறது. இத்தகைய புகார்கள் மதுரை மண்டலத்துக்கு வந்ததில்லை. அதேபோல். அரை டிக்கெட் கொடுத்தால் அந்த குழந்தைக்கு தனியாக இருக்கை ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டால் 94875 99019 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதேபோல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக புகார் எண் இருக்கிறது. பொதுமக்கள் மண்டல வாரியான புகார் எண்களை தெரிந்து கொண்டு புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பண்டிகைக்கு ஊருக்குச் செல்லும்போது முன் கூட்டியே பயணத்தை திட்டமிட்டால் இத்தகைய அசவுகரியங்களை தவிர்க்கலாம் என்ற அறிவுரை ஏற்புடையதுதான் என்றாலும், அத்தனை பேரும் அரசு ஊழியராக இருந்தால் விடுமுறையை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளலாம்; இங்கு வேலை பார்ப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவனத்தினர். சிலருக்கு முதல்நாளன்றுதான் விடுப்பு உறுதியாகிறது. அத்தகையோரும் இனிமையாக பயணிக்க வேண்டாமா?. அவர்கள் பயணத்தை இனிதாக்கும் பொறுப்பு பேருந்து உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து அதிகாரிகள், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் என அனைவருக்குமே இருக்கிறது.

பேருந்து பயணங்கள் இப்படி இருக்க ரயில் டிக்கெட் முன்பதிவு பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கு ஒரு தனி கட்டுரையே எழுத வேண்டும். ஆம்னி பேருந்துகளைப் பார்த்துதான் ரயில்வே துறை சுவிதா ரயிலை இயக்குகிறது. பண்டிகைக் காலங்களில் முன்பெல்லாம் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஆனால், இப்போதெல்லாம் சிறப்பு ரயில்கள் பெரும்பாலானவை சுவிதா ரயில்களாகவே இருக்கின்றன என அங்கலாய்த்துக் கொள்கின்றனர் பயணிகள்.

எத்தனை, எத்தனை சங்கடங்கள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தாங்கிக் கொள்வது, பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவேண்டும் என்ற ஏக்கத்தில்தானே!

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

த.நீதிராஜன்

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?

என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில் சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக் கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத் தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி. அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும் அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை வாங்கியிருக்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப் போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.

“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள். தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை. பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக் குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள் போய்விட்டிருக்கிறாள்.

பெற்றோர் மீது புகார்

1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில் சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன. “இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்” என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர் தாமஸ் ஜெயராஜ். “முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள். தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான் பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம். குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர் மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது. ‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’ என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி அந்தக் குழந்தைகளை மீட்டது. ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைதுசெய்யப்பட்டனர். குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள். மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன. குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும் நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.

மனதை உலுக்கும் சூழல்

இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக 2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள் 40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள். இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில் 18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப் பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.

தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள் கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல் எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள் புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட 10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி, 20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும் கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம் என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.

வெட்கமாக இல்லையா?

எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு? சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில் காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு, விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை? ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை ஏன் யாரையும் உலுக்கவில்லை?

உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச் செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம் ‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’ என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. யாருக்குமே வெட்கமாக இல்லையா?

பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை. அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும். எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்; எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்; குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப் படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள். அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில் அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க வேண்டும். முதலில் பேசுங்கள்!

- தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

த.நீதிராஜன்

கொண்டாடவிருப்பது ஹெல்தி தீபாவளியா? கொலஸ்டிரால் தீபாவளியா?!

healthy_diwali
தீபாவளி வந்தாலும் வந்தது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் கூட்டம், கூட்டமாக புத்தாடை பர்சேஸ், பண்டிகைப் பலகாரங்கள், ரிடர்ன் கிஃப்ட்ஸ், விழாக்கால சொந்த ஊர் பயணங்களுக்கான திட்டமிடல் என்று ஒரே பிஸியோ பிஸி! இதற்கு நடுவில் தான் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும்கலந்து கட்டிப் பார்க்க வேண்டி இருப்பதால் அவரவர் உடல் நலன்களை பராமரிப்பதில் தீபாவளி முடியும் வரை பலதரப்பினரும் மெத்தனமாகத் தான் இருக்கிறார்கள் என்றால் அது பொய்யில்லை.
உடல் நலனுக்கென்று ஸ்பெஷலாக எதுவும் செய்யாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் நிறைய தண்ணீர் அருந்துங்கள், தினமும் அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள், அது கூடப் போதுமானது என்கிறார் ஓரிஃபிளேம் இந்தியாவின் நியூட்ரிசன் எக்ஸ்பர்ட் 'சோனியா நரங்'. இதைக் கூட கடைபிடிக்கா விட்டால் பிறகு தீபாவளி முடிந்ததும் டாக்டர்களைத் தேடிக் கொண்டு ஓட வேண்டியது தான்.
ஹெல்தி தீபாவளி கொண்டாட ’சோனிய நரங்’ தரும் ஹெல்த் டிப்ஸ்கள்:
கவனம் செலுத்த வேண்டியவை:
தீபாவளி முடியும் வரை உணவுக்கு ரெஸ்டாரெண்டுகளை நம்பியிருக்கும் பெண்களின் கவனத்துக்கு:
தீபாவளியை எப்படியெல்லாம் சிறப்பாகக் கொண்டாடுவது என்று திட்டமிடுவது தொடங்கி தீபாவளி முடியும் வரை யாருக்கும் யோசிக்கக் கூட நேரமிருக்காது. முக்கியமான விசயம் வீட்டுச் சாப்பாடு என்பது தொல்லை மிகுந்த விசயமாக மாறி மூன்று வேலைக்கும் ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடத் தொடங்குவீர்கள். இதில் குழந்தைகள், பெரியவர்கள் பேதமெல்லாம் கிடையாது, பெண்கள், அவர்கள் இல்லத்தரசிகளானாலும் சரி, வேலைக்குப் போகும் பெண்களானாலும் சரி பர்சேஸ், பலகாரங்கள் தயாரித்தல் அதோடு கூடிய அலுவலக வேலைகள் போன்ற அலுப்புகளில் முறையாக சாப்பிடுவதிலிருந்து விலகி எளிதாக சாப்பாட்டை முடிப்பதாக எண்ணிக் கொண்டு நேரம் கெட்ட நேரத்தில் பீட்ஸா, பர்கர், சமோசா, பிரெட் ஜாம் என்று சாப்பிடத் தொடங்குவோம். குழந்தைகளுக்கும் அதையே தான் சாப்பிடத் தருவோம். இதெல்லாம் எதில் போய் முடியும்? அதிக்கப்படியான கொழுப்பு மிக்க உணவுகலை எரித்து மாளாமல் உடல் அவற்றை கொலஸ்டிரால்களாக திசுக்க ஒல்லி பெல்லிகளை ஃபேட்டி ஆன்ட்டிகளாக மாற்றத் தொடங்கும்.
ஆகவே தீபாவளி என்றில்லை எந்த விழாவுக்காக திட்டமிடுவதாக இருந்தாலும் பெண்களே முதலில் உங்கள் வீட்டு ஃப்ரிஜ்ஜில் நிறைய ஃப்ரெஷ் காய்கறிகள் மற்றும் பழங்களை நிரப்பிக் கொள்ளுங்கள், பிறகு எங்கே வேண்டுமானாலும் நேரம் செலவழித்து விட்டு சாப்பிட வீட்டுக்கே திரும்புங்கள். சமைக்க சோம்பலாக இருந்தால் தயவு செய்து பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமே கூட சாப்பிட்டு விட்டு மறக்காமல் வாக்கிங் செல்லுங்கள். முடிந்த வரை அதிகமாக தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள் என்கிறார் சோனியா நரங்.
ஆல்கஹாலால் விழாவைச் சிறப்பிக்க காத்திருக்கும் ஆண்களின் கவனத்துக்கு:
குடியில் விருப்பமே இல்லாத ஆண்கள் மேலே பெண்களுக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ்ஸையே பின்பற்றிக் கொள்ளலாம். கூடுதலாக ஸ்பெஷல் கேட்டகிரி லிஸ்டில் வரத் தகுதியான இந்த எக்ஸ்ட்ரா பத்தியை வாசிக்காமல் தவிர்த்தும் விடலாம். ஆல்கஹாலில் விருப்பமுள்ள ஆண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், விழாக்கால சிறப்புச் சலுகையாக ஆல்கஹாலில் பெரு விருப்பம் கொண்ட பேரின்பவாதிகள் தங்களுடைய ”குடி” படைக் கூட்டாளிகளுடன் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் குடித்து தீபாவளிக்கு சிறப்புச் செய்யலாம் என்று முன்பே திட்டமிடத் தொடங்கி இருப்பார்கள். இதுவும் தான் எதில் போய் முடியும்? தீபாவளி குடிக் கொண்டாட்டத்தில் நண்பர்களோடு கூடி ரகளையாக ட்ரிங் செய்கிறேன் பேர்வழியென்று முதலில் முட்டக் குடித்து விட்டு பிறகு சைட் டிஷ்களை மொக்குவோர் இருப்பார்கள், அவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி, குடிப்பது என்று முடிவு செய்து விட்டால் முதலில் ஹெல்தியாக சாப்பிட்டு விட்டுப் பிறகு குடிப்பீர்களாம். ஏனெனில் இரைப்பையில் இருக்கும் என்ஸைம்கள் குடித்து விட்டு எத்தனை ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் கூட ஆல்கஹாலைத் தான் முதலில் எரிக்கத் தொடங்குமாம். பிறகு நீங்கள் உண்பதெல்லாம் என்ன ஆகக் கூடும்?! காக்கா தூக்கிச் செல்ல அதென்ன பாட்டி சுட்ட வடையா? வயிற்றுக்குள் போன வஸ்துக்களாயிற்றே... ஆகவே கொழுப்பாக மாறி திசுக்களில் சேகரிக்கப் படும். இது தொடர்கதையானால் பின் நாட்களில் பைபாஸ், ஆஞ்சியோ என்று அவலாஞ்சிக்கு உள்ளாக்கும். எனவே குடிப்பதில் ஆர்வமுள்ள குடிமகன்களே கவனமாக இருப்பீர்களாக. என்று சொல்கிறார் சோனியா நரங்.
ஒரு நியூட்ரிசனிஸ்ட்டால் என்ன செய்ய முடியும்? ஆலோசனை மட்டுமே தர முடியும். அதைப் பின்பற்றி நம்மையும் நம் உடல் நலனையும் பாதுகாக்க வேண்டிய வேலை இனி நம்முடையது.  அவர் சொல்வதைச் சொல்லி விட்டார். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும், குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது வாக்கிங் செல்வதும் அப்படியொன்றும் கஷ்டமான பராமரிப்பு வேலையில்லை தானே!  சரி...சரி  இனி வரப்போவது  தீபாவளியா? இல்லை தீபா’வலியா’? என்று  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஒருநாள் மன்னன்

By சி.வ.சு. ஜெகஜோதி  |

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில். இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து "தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும். எனது தலைமையில் தேர் செய்யப்படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது. தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார். இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்து விட்டது. அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார். இதன்பின் அவரை அழைத்தனர்.
பெரிய மருது "தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்' என்றார். அதற்கு சிற்பி "உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.
மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணி
ந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர். தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.
"பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.

"மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும். வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

போரில் சரணடையா விட்டால் நீங்கள் கட்டிய காளையார்கோயிலை இடித்து விடுவோம் என்று ஆங்கிலேயர்கள் கூறியதால் தங்களது உயிரை விட கோயிலே முக்கியம் என்று ஆங்கிலேயரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டவர்கள் மருது சகோதரர்கள்.

நாட்டுக்காகவும், கோயில்களுக்காகவும் வாழ்ந்த மருதுபாண்டியர்கள் 24.10.1801-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
தொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லை வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ்.சில் வாழ்த்து பரிமாற்றம்

சென்னை,

தொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லை. மாறாக வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்துகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

தீபாவளி வாழ்த்து அட்டை

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், மற்றும் பண்டிகைகள், பிறந்தநாட்களில் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் தங்களுடைய அன்பையும், மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கம் இருந்து வருகிறது.

தொழில்நுட்ப புரட்சியால் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் வழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து மறைந்து வருகிறது. வாழ்த்து அட்டைகளை வாங்கி அவற்றுக்கான தபால் தலைகளை ஒட்டி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட காலம் போய், தற்போது செல்போன் மூலம் வாழ்த்துகளை பதிவு செய்து, யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய செல்போன் எண்களுக்கு வாழ்த்துகளை விரைவாக அனுப்பும் பழக்கம் வந்து விட்டது.

வாழ்த்துக்காக ரீசார்ஜ்

தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வாட்ஸ்–அப், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக வாழ்த்துகளை அனுப்பும் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. வாழ்த்து அனுப்புவதற்கு தபால் உறைகள், தபால் தலைகள் வாங்குவதற்கு தபால் துறைக்கு செலவழிக்கும் தொகை தற்போது செல்போன் ரீசார்ஜ் செய்ய தொலைபேசி துறைக்கு செலவழிக்கும் நிலைக்கு மாறி உள்ளோம்.

வாழ்த்துகள் அனுப்புவதற்கு செலவிடப்படும் துறைகள் தான் மாறி உள்ளதே தவிர வாழ்த்துகளில் எந்த மாற்றமும் இல்லை. தபால் அலுவலகங்களில் கூடிய கூட்டம் தற்போது தொலைபேசி துறை அலுவலகங்களில் காணப்படுகிறது. மாறாக வாழ்த்து அட்டை கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சிக்கனமான நடைமுறை

வாழ்த்து அட்டை அனுப்புபவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய தினங்களுக்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஆனால் தற்போது செல்போன் மூலம் அனுப்பப்படும் வாழ்த்துகள், பண்டிகை மற்றும் முக்கிய தினங்களில் அன்றைய தினமே அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் விரைவாகவும், சிக்கனமாகவும் அனுப்பப்படுவதுடன், நேரமும் மிச்சப்படுத்தப்படுகிறது.

10 சதவீதம் பயன்பாடு

இதுகுறித்து சென்னை பாரிமுனையில் வாழ்த்து அட்டை விற்பனை செய்யும் என்.முகமது பைசல் கூறியதாவது:–

தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் மக்களிடம் இருந்து படிப்படியாக அதனுடைய மவுசு குறைந்து வருகிறது. தற்போது 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். ஆசிரியர் தினத்துக்கு தான் அதிக வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது அந்த தினத்திலும் வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லாமல் விற்பனை குறைந்துவிட்டது. பண்டிகை, அன்னையர் தினம் போன்றவை சீசனில் மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால் பிறந்தநாள் வாழ்த்து அட்டை ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வாழ்த்து அட்டைகளின் தேவை குறைந்ததால் விற்பனை முற்றிலும் சரிந்து உள்ளது.

தீபாவளி பண்டிகை கால வாழ்த்து அட்டை விற்பனை வெகுவாக குறைந்து உள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு மழை பெய்ததால் கடந்த ஆண்டும் விற்பனை இல்லாத நிலை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம்,



சவுமியா கொலை வழக்கில் தவறு ஏற்பட்டதற்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம்: கட்ஜூ மீண்டும் விமர்சனம்

சவுமியா கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தவறு ஏற்பட்டதற்கு நீதிபதிகளின் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம் என்று மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.


கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற இளம்பெண் கடந்த 2011–ம் ஆண்டு திருச்சூரில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ, இந்த உத்தரவு குறித்து திறந்த கோர்ட்டில் மீண்டும் விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.


கட்ஜூவின் இந்த விமர்சனத்துக்கு அதிருப்தி வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் (நவம்பர்) 11–ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கட்ஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சம்மன் அனுப்பியிருப்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் நவம்பர் 11–ந்தேதி நேரில் ஆஜராக இருப்பதாக கட்ஜூ தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியிருந்தார்.


இந்த நிலையில், அதிகப்படியான வேலைப்பளு காரணமாக சவுமியா வழக்கில் நீதிமன்றம் தவறு இழைத்திருக்க கூடும் என்று மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளது மீண்டும் நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பேஸ்புக் பக்கத்தில் மார்கண்டேய கட்ஜூ இன்று இது குறித்து கூறியிருப்பதாவது:- “ கேரள நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை மறு ஆய்வு செய்து உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பு தவறானது என்று நான் நம்புகிறேன்.அதிகப்படியான பணிச்சுமை காரணமாக இந்த தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், தனக்கு சம்மன் அனுப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் கிடைத்ததும் மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் தன்னை அவமதிக்கும் நோக்கில் சம்மன் அனுப்பட்டிருக்கலாம் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ள அவர், உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீஸை படித்து பார்த்த பிறகு மிகவும் மரியாதைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. எனக்கு உத்தரவு போடப்படவில்லை. வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. எனவே நான் வரும் 11 ஆம் தேதி ஆஜராக முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.


தொடர்ந்து தனது பதிவில், பிரபலமான பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ள கட்ஜூ, “ தவறுகளே செய்யாத ஒரு நபராக நீதிபதிகள் பிறக்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். அனைவரும் தவறுகள் செய்வோம். ஆனால், பண்புள்ள ஒருவர் தனது தவறை புரிந்து கொண்டு திருத்தம் செய்ய முற்படுவார்” என்று தெரிவித்தார்.

Running clinics is not a commercial activity: HC

A clinic run of a private doctor or their partnership firm can't come under the definition of 'commercial establishment' as per the Bombay Shops and Establishments Act, 1948, the Nagpur bench of Bombay High Court has held. Pronouncing the verdict on the plea filed by the Indian Medical Association(IMA) challenging the validity of Section 2 (7) of the Act, a division bench comprising justice Vasanti Naik and justice Indira Jain, made it clear that doctors or their partnership firms come under the category of 'professionals'.

While quashing an amendment of 1977 carried out in the Bombay Shops and Establishments Act, 1948, the judges termed it as ultra vires (beyond the powers). The Maharashtra government through an amendment had brought all these professionals under the Act's ambit through an amendment and issued notices to them in 2005. They were threatened with imposition of fine which will increase with each passing day.

In 2005, the Indian Medical Association (IMA), through counsel Bhanudas Kulkarni, challenged this amendment of inclusion of doctors contending that since they are governed by different Acts and even statutory bodies like Medical Council of India(MCI), and hence they are professionals.

Citing Supreme Court's 1968 verdict and one more by the high court while hearing a criminal appeal, Kulkarni argued that the maternity home/clinic run by the doctor can't be termed as a commercial activity, as doctors provide service to patients. He pointed out that chains of hospitals can be termed as commercial activity, as doctors were paid for rendering their service.

The government opposed his contentions, stating that similar plea by Matru Seva Sangh (MSS) was dismissed by the court earlier, but it failed cut ice with judges.

Saturday, October 22, 2016

தமிழகத்தில் முதன் முறையாக வண்டலூரில் 6 வழிப்பாதை உயர்நிலை மேம்பாலம்: ரூ.55 கோடியில் அமைக்கப்படுகிறது; 2018-ல் பயன்பாட்டுக்கு வரும்


வண்டலூரில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ கத்திலேயே முதன்முறையாக ரூ.55 கோடியில் 6 வழிப்பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் முதல் திருச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-45) தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான நெடுஞ் சாலையாக விளங்குகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாக னங்கள் இந்த தேசிய நெடுஞ் சாலையை பயன்படுத்துகின்றன.

எனினும், வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் தினசரி குறைந்தது ஒரு வாகன விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகளில் கடந்த சில ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வாகனங்கள் மோதலால், அடிக்கடி போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது.

பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக ஆங்காங்கே அமைக் கப்பட்டுள்ள சிக்னல்களால், சீரான போக்குவரத்து இல்லாமல் நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக வண்டலூர் சந்திப்பில் ரூ.55 கோடியில் உயர் நிலை மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 வழிப்பாதையுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் மற்றும் கிளம்பாக்கம் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறு கின்றன. மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக சாலையை சமன்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வண்டலூர் - கேளம்பாக்கம் சந்திப்பில் ரூ.55 கோடியில் மேம் பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மேம்பாலம் 6 வழிகளைக் கொண்டதாக அமைக்கப்படும். மேம்பாலத்தின் நீளம் 700 மீட்டர், அகலம் 24 மீட்டர் மற்றும் தற்போதைய சாலையின் நடுவே 9 தூண்கள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் 2018-ல் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்கு முதலில் தீர்வு காணும் வகையில், தற்போது வண்டலூர் சந்திப்பு முதல் ஊரப்பாக்கம் வரை சாலை அகலப்படுத்தப்படு கிறது.

தமிழகத்தில் வேறு எங்கும் 6 வழிப்பாதையாக உயர்நிலை மேம்பாலம் இதுவரை அமைக்கப் படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ள மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், ‘2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க அரசு தரப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறை வடையும் வகையில் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள் ளன’ என்று தெரிவித்தனர்.

G.O. comes to rescue of Good Samaritans

In order to encourage more people to come forward to help people injured in road accidents, the Tamil Nadu government has issued directions that Good Samaritans or bystanders in case of road accidents shall not be liable for any civil or criminal liability or be coerced into revealing their names or personal information.

The State government on Friday issued directions with regard to protection of Good Samaritans or bystanders especially in road accidents in a G.O.

The Central government had earlier issued such directions based on an order of the Supreme Court.

As per the directions, Good Samaritans or bystanders, including an eyewitness of a road accident, “may take an injured person to the nearest hospital, and…should be allowed to leave immediately, except after furnishing address by the eyewitness only and no question shall be asked to such bystander or the Good Samaritan”.

The order also makes it clear that lack of response by a doctor in an emergency situation in road accident cases, where he or she is required to provide care, will constitute “professional misconduct” under Chapter 7 of the Indian Medical Council Regulation, 2002, and disciplinary action shall be taken against such doctor under Chapter 8.

Says those who come forward to help the injured in road accidents should not be harassed or intimidated





×

 Tainted Indian doc made WMA President 


59-year-old tainted Indian doctor Ketan Desai took over as the President of World Medical Association (WMA) on Friday. Even as he faces legal cases in India, a massive delegation of hundred doctors applauded cheerily as Desai took on the dias at Taipei in Taiwan.

Ironically, in his inaugural speech at WMA, Desai identified himself as a 'committed educational reformist,' and talked about how he was instrumental in putting tough medical regulations in place.
 
In a case filed in New Delhi in 2010, Desai faced corruption charges for allegedly accepting a bribe of Rs2 crore from a medical college.

"There is only one case pending against Dr Desai at the moment in Delhi, over which the Supreme Court has issued a stay order," said Dr KK Agarwal, Incoming President of Indian Medical Association, New Delhi told DNA.

The hearings in the New Delhi case against Desai, however, are ongoing. SC has set the next date for the hearing on November 4 and has mandated that he be personally present for each hearing.

Doctors' community in India are vehemently opposing Desai's selection. "Desai was caught red-handed accepting bribe, along with the middleman by the CBI in the case of Gian Sagar Medical College in Rajpura, Punjab, where Desai had sanctioned increase of hundred seats. He was also jailed in the case. He has yet not been absolved of his charges. They are pending in the court. To make him the President of WMA gives a very wrong impression of Indian doctors to the world," said Dr Gurinder Grewal, President, Punjab Medical Council.

Interestingly, promoter of Gian Sagar Medical College and owner of Pearl Group, Nirmal Singh Bhangoo is currently behind bars over Rs45,000 crore scam for duping investors.

Following allegations, MCI had ordered state-body of Gujarat Medical Council (GMC) to cancel Desai's medical registration. "This never happened as Desai enjoys ample clout. GMC refused to execute MCI's orders," said Dr Grewal.

In 2010, following controversies, MCI was dissolved and a three-member committee headed by Justice Lodha was put in place to oversee its functioning.

Dr Desai's claims at WMA platform are contradictory to a scathing report tabled by the Parliamentary Standing Committee criticizing MCI of falling short of setting ethical standards in the field of medicine.

The report released earlier this year states: "If the MCI is aware of the fact that denial of recognition of a medical college or grant of seats and then its permission or reduction leads to corruption, then the committee wonders why it has failed to put in place a framework or system which can plug these loopholes?," reads the report of the same Parliamentary panel.

Dr Abhay Shukla, Alliance of Doctors for Ethical Healthcare (ADEH), said, "A person on whom serious corruption charges have been levelled and has a track record of being imprisoned briefly, is now President of WMA. This is a highly paradoxical situation. WMA is supposed to be promoting ethics in global community. Also, there lies a question mark on bodies such as Indian Medical Association who have promoted Dr Ketan Desai."

HC ruling on claiming gratuity by government servants


The Madras High Court Bench here has held that a government servant not permitted to retire from service, even after attaining the age of superannuation, pending conclusion of departmental proceedings, shall not be eligible to claim even a part of the gratuity amount due to him or her.

Justice S. Vimala passed the order while disposing of a writ petition filed by M. Moorthi seeking a direction to Thoothukudi Collector and other revenue officials to disburse 80 per cent of his gratuity amount working out to Rs. 5.16 lakh pending the conclusion of departmental proceedings initiated against him.

Although the petitioner relied upon Rule 60(1)(c) of the Tamil Nadu Pension Rules, 1978 to substantiate his claim that even those facing departmental enquiry were entitled to receive a part of gratuity amount, the judge said the rule would apply only to those who had been allowed to retire from service without prejudice to the departmental proceedings.

Rule 60(1)(c) states that no gratuity shall be authorised to a government servant until the conclusion of departmental proceedings and passing of final orders.

However, a proviso to the rule states that no such gratuity shall be withheld with respect to a government servant who had been permitted to retire without prejudice to the proceedings.

Further, a second proviso to the rule states that if the proceedings had been initiated with respect to causing pecuniary loss to the government, then the gratuity can be disbursed after deducting the maximum computed financial loss to the government if the servant was allowed to retire from service without prejudice to the proceedings.

Hence, the judge agreed with an Additional Government Pleader that in any case, allowing a government servant to retire from service was a condition precedent for claiming either full or part of gratuity and therefore, those who had not been allowed to retire from service could not claim payment of gratuity.



×

Friday, October 21, 2016

ஆதார் விவரமும், கை ரேகையும் எதற்கு.. பர்சனல் தகவல்களை பறி கொடுக்கிறார்களா ஜியோ வாடிக்கையாளர்கள்? By: Veera Kumar Updated: Friday, October 21, 2016, 12:52 [IST]
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aadhaar-details-getting-free-jio-connection-265408.html

சென்னை: இலவசம் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால், இந்த மனிதர்கள் எத்தனையோ உரிமைகளை அடமானம் வைக்கிறார்கள். அதில் புதிதாக சேர்ந்திருப்பதுதான், தனிமனித தகவல் தகவல்களை பங்குபோடும் ஜியோ. அழைப்புகள், இணையம் அனைத்தும் இலவசம் என்றதும் ஜியோ சிம் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் முண்டியடிக்கிறார்கள். வாக்களிப்பு நாளில் கூட வரிசையில் நிற்காத மக்கள், சிம் கடைகள் முன்பாக டிராபிக் ஜாமை உண்டு செய்தது நமது சம கால சோகங்களில் ஒன்று.

இவ்வளவு முண்டியடித்து, வாங்கப்படும் சிம் கார்டுகாக்க நமது அடிப்படை உரிமையை இழக்கிறோம் என்று என்றாவது நினைத்து பார்த்ததுண்டா. இந்தியாவில் உள்ள சில வங்கிகள் வழங்கிய ஏ.டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ள இந்த சூழலில் இக்கேள்வி அவசியமாகிறது. ஆதார் கார்டு இல்லாமல் மற்ற சான்றிதழ்களான ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றை சமர்ப்பித்தால் சிம் செயல்படுத்த இரண்டிலிருந்து மூன்று நாட்கள் ஆகும். ஆனால் ஆதார் கார்டை சமர்ப்பித்தால் 15 நிமிடத்தில் சிம் கார்டு செயல்படுத்தப்படுகிறது. இ ஆதார் கார்டு மூலமாக்கூட இந்த சிம் கார்டை வாங்கலாம் என முதலில் கூறியிருந்தனர். 

இதை நம்பி, சென்றவர்களை திருப்பியனுப்பிவிட்டன பல கடைகள். பாஸ்போர்ட் ஆபீஸ்களில் கூட இ ஆதார் ஏற்கப்படும் சூழலில், ஏன் ஒரிஜினல் ஆதார் கார்டை ஒரு சிம் கார்டு நிறுவனம் கேட்கிறது என்பதை கூட யோசிக்காமல், ஆதார் அட்டையோடு அலைபாய்ந்து செல்கிறார்கள் இளைஞர்கள். இதன் பின்னணி இதுதான்: ஜியோ சிம் வாங்க விரும்பும் ஒருவரின் ஆதார் எண் மற்றும் அவரது கைவிரல் ரேகையை கணினியில் பதிவு செய்து, அதை ஆதார் விவரங்களுடன் சரிபார்த்த பின்னரே சிம் வினியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் மிகவும் பாதுகாப்பாக உள்ள நம்முடைய ஆதார் விவரங்கள், ஜியோ நிர்வாகத்தால் எப்படி ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது என்ற கேள்வி இதுவரை எழவில்லை? நாட்டு மக்களின் ஆதார் விவரங்கள் யாருக்கும் பகிரப்படாது என்பது மத்திய அரசின் வாதம். சுப்ரீம் கோர்ட்டிலும் அரசு இதையே கூறியுள்ளது. ஆனால், அந்த விவரங்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கீழ் வரும் ஜியோவுக்கு கிடைத்தது எப்படி? ரிலையன்ஸிடம் இருக்கும் மத்திய அரசின் ஆதார் விவரங்களுடன், நம்முடைய கைவிரல் ரேகையை ஒப்பிட்டு சரிபார்த்து ஜியோ சிம் வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் அதிகரித்துள்ள நிலையில் அதை மத்திய அரசு விளக்கவில்லை.

 மிகப்பெரிய தனியார் நிறுவனத்திற்கு, ஆதார் எண் விவரங்கள் அனைத்தையும் மத்திய அரசு அளித்திருந்தால், அது வாக்குறுதிக்கு எதிரானது மற்றும் மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. நாட்டின் பாதுகாப்புக்கே கூட எதிராக முடியலாம், முகேஷ் அம்பானியின், ஜியோ விளம்பரத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்த பிரதமரின் செயலே சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஆதார் தகவல்களை ஜியோ எப்படி ஒப்பிட்டு பார்க்கிறது என்பது பொருத்திப்பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்த தகவலை தொடர்ந்துதான், இலவச கால் கூட வேண்டாம் என்று பல வாடிக்கையாளர்கள் இன்னமும் ஜியோ சிம் கார்டை வாங்காமல் இருக்கிறார்கள். 

ஆனால் கவர்ச்சி விளம்பரத்தால் கவரப்பட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர், தங்கள் பர்சனல் டேட்டாக்களை வழங்கி, ஜியோ சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aadhaar-details-getting-free-jio-connection-265408.html
ஜியோ   சிம் வாங்க கடைசி நாள் டிசம்பர் 3 ..!!! அடிச்சி புடிச்சி எப்படியோ வாங்கிடுங்க.....

about an hour ago

#லைப் ஸ்டைல்



ஜியோ   சிம் வாங்க கடைசி நாள் டிசம்பர் 3 ..!!!அடிச்சி புடிச்சி எப்படியோ வாங்கிடுங்க.....

ஜியோவின்  அளவில்லா  சலுகையான “ ஜியோ வெல்கம் ஆபர் ”    பெறுவதற்கு, வரும்   டிசம்பர் 3  ஆம்  தேதியே  கடைசி நாள்  என   ஜியோ  தெரிவித்துள்ளது. அதாவது,  வரும்   டிசம்பர் 3  ஆம்  தேதிக்குள்,  ஜியோ  சிம்  வாங்கி   ஆக்டிவேட் செய்தால்  மட்டுமே, ஏற்கனவே   சலுகை  அறிவித்தபடி,  வரும்  டிசம்பர்  31  ஆம்   தேதி வரை  , இதனை  பயன்படுத்த  முடியும்  என  ஜியோ தெரிவித்துள்ளது.

ஒரு  வேளை , டிசம்பர் 3  ஆம்  தேதிக்குள்,  ஜியோ  சிம்  வாங்க  முடியவில்லை  அல்லது ஆக்டிவேட் செய்ய  முடியவில்லை   என்றாலும்  கவலை  இல்லை..

ஏனெனில், டிசம்பர் 3  ஆம்  தேதிக்கு  பிறகு ,ஜியோ  சிம்  வாங்கினால்,   அட்டகாசமான  பிற  சலுகைகளை  வழங்க  ஜியோ  தயாராக  உள்ளதாக.... தெரிவித்துள்ளது.

இந்த  சலுகையின் படி, குறைந்தபட்சமாக  ரூபாய்    149   முதல், அதிகபட்சமாக  ரூபாய் 4,999 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  விவரம்  அட்டவணையில்   கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே  ஜியோ  சிம்  வாங்குபவர்கள்  மூன்று மாதம்  மட்டும் தான் சலுகையை பயன்படுத்த முடியும் என்று நினைக்க வேண்டாம்,,,,,,,,, ஜியோ வாங்கினாலே நமக்கு  சிறந்த நன்மை என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.......  மறுக்கவும்  முடியாது என்பது  உண்மை............. !!!  

 ஜியோ  வாங்குங்க .........மறக்காதிங்க  சலுகையை  பயன்படுத்திகோங்க .........!!!

Provide compassionate employment out of turn: High Court


The Madras High Court Bench here has directed Home Secretary, Director General of Police and Madurai Commissioner of Police to consider on priority basis the plea of an individual for employment on compassionate grounds and provide him a job out of turn though he was listed in the 1,667th place in State-wide seniority list maintained for compassionate appointment.

Justice S. Vimala passed the order on a writ petition filed by K. Arun Prasad whose mother R. Jaya had died on September 14, 2008 while serving as a Sub-Inspector of Police in Madurai city limits. Claiming that his father had predeceased his mother and that his sister and grandmother were now dependent on him, the petitioner had urged the court to consider his request for compassionate employment on priority basis.

The petitioner stated that his sister had given a letter of consent for him to seek public employment and the Inspector of District Special Branch police had also recommended his case to the Superintendent of Police on August 1, 2011. Subsequently, he received a communication from the office of the Commissioner of Police stating that his name had been included in the State-wide seniority list for compassionate employment.

Pointing out that the objective of compassionate employment was to provide immediate assistance to the family of a government servant who died in harness, the petitioner’s counsel contended that maintaining a State-wide seniority list even for such employment ran counter to the very purpose of the scheme. Since the petitioner had lost both his parents, the lawyer insisted that his case should be considered out of turn.



×

NEWS TODAY 25.09.2024