Tuesday, October 25, 2016

திருவனந்தபுரம்,



சவுமியா கொலை வழக்கில் தவறு ஏற்பட்டதற்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம்: கட்ஜூ மீண்டும் விமர்சனம்

சவுமியா கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தவறு ஏற்பட்டதற்கு நீதிபதிகளின் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக இருக்கலாம் என்று மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.


கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற இளம்பெண் கடந்த 2011–ம் ஆண்டு திருச்சூரில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ, இந்த உத்தரவு குறித்து திறந்த கோர்ட்டில் மீண்டும் விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.


கட்ஜூவின் இந்த விமர்சனத்துக்கு அதிருப்தி வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் (நவம்பர்) 11–ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கட்ஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சம்மன் அனுப்பியிருப்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் நவம்பர் 11–ந்தேதி நேரில் ஆஜராக இருப்பதாக கட்ஜூ தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியிருந்தார்.


இந்த நிலையில், அதிகப்படியான வேலைப்பளு காரணமாக சவுமியா வழக்கில் நீதிமன்றம் தவறு இழைத்திருக்க கூடும் என்று மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளது மீண்டும் நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பேஸ்புக் பக்கத்தில் மார்கண்டேய கட்ஜூ இன்று இது குறித்து கூறியிருப்பதாவது:- “ கேரள நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை மறு ஆய்வு செய்து உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பு தவறானது என்று நான் நம்புகிறேன்.அதிகப்படியான பணிச்சுமை காரணமாக இந்த தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், தனக்கு சம்மன் அனுப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் கிடைத்ததும் மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் தன்னை அவமதிக்கும் நோக்கில் சம்மன் அனுப்பட்டிருக்கலாம் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ள அவர், உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீஸை படித்து பார்த்த பிறகு மிகவும் மரியாதைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. எனக்கு உத்தரவு போடப்படவில்லை. வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. எனவே நான் வரும் 11 ஆம் தேதி ஆஜராக முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.


தொடர்ந்து தனது பதிவில், பிரபலமான பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ள கட்ஜூ, “ தவறுகளே செய்யாத ஒரு நபராக நீதிபதிகள் பிறக்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். அனைவரும் தவறுகள் செய்வோம். ஆனால், பண்புள்ள ஒருவர் தனது தவறை புரிந்து கொண்டு திருத்தம் செய்ய முற்படுவார்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024