Saturday, October 29, 2016

சான்றிதழ் வேணும்னா 3 ஆயிரம் ரூபாய் வேணும்; இலஞ்ச கேட்ட அதிகாரி.

சான்றிதழ் கேட்டுவந்த விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பொடிவைத்து பிடித்துக் கைது செய்தனர்.

கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (53). இவர் ஒரு விவசாயி. இவருடைய மாமனார் தண்டபாணி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் குணசேகரன் தன்னுடைய மாமனார் தண்டபாணி இறப்புச் சான்றிதழ் கேட்டு நீட்திமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதற்காக கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அவருக்கு இறந்து போன தண்டபாணியின் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் தேவைப்பட்டது. இதனை அடுத்து குணசேகரன் நகராட்சி பிறப்பு - இறப்பு சான்றிதழ் பிரிவில் உதவியாளராக இருக்கும் கடலூர் அன்னவெளி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ராமன் (39) உதவியை நாடினார்.
பின்னர் அவரிடம் என்னுடைய மாமனார் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு உதவியாளர் ராமன், குணசேகரனிடம் ரூ.3 ஆயிரம் இலஞ்சம் தந்தால் உனக்குச் சான்றிதழ் தருகிறேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் இது பற்றி குணசேகரன் கடலூர் இலஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறிய அறிவுரைப்படி, இரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் பிரிவில் இருந்த ராமனிடம் வெள்ளிக்கிழமை குணசேகரன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த இலஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், திருமால் ஆகியோர் ராமனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், ஏற்கனவே தயாராகி இருந்த 100 பிறப்பு - இறப்பு சான்றிதழ்களையும் இலஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைப்பற்றினர். அந்த சான்றிதழ்களை ஏன்? இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என்றும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராமன் மீது ஏற்கனவே நில அளவீடு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு உள்ளது

குறிப்பிடத்தக்கது. நகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024