Wednesday, October 12, 2016

நெட் தேர்வு: விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள்: முதல்முறையாக"யோகா' பாடம் சேர்ப்பு


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான "நெட்' தகுதித் தேர்வு, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு வரும் 17 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது. தற்போது வரும் டிசம்பர் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது 2017 ஜனவரி 22 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு http://cbsenet.nic.in/cms/public/home.aspx என்ற இணையதளம் மூலம் வரும் 17-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க நவம்பர் 16 -ஆம் தேதி கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 17 -ஆம் தேதி வரை செலுத்த முடியும். தேர்வு தொடர்பான முழு விவரங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
முதன் முறையாக யோகா பாடம்: வழக்கமாக பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் என 80 -க்கும் அதிகமான பாடப் பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும். இந்த முறை 100 பாடப் பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் யோகா பாடம் இம்முறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
யோகா பாடத் திட்டமும், அதிலுள்ள முக்கிய அம்சங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024