Friday, October 21, 2016


சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் தொடர்பு: மருத்துவர், குழந்தைக்கு மரபணு பரிசோதனை: உயர்நீதிமன்றம் உத்தரவு
By மதுரை | Last Updated on : 21st October 2016 07:39 AM | அ+அ அ- |


சிகிச்சைக்கு வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மருத்துவர் ஏமாற்றியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பெண் குழந்தை, மருத்துவர் ஆகியோருக்கு மரபணு பரிசோதனை நடத்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கமர்நிஷா தாக்கல் செய்த மனு: எனது கணவரின் தோல் நோய்க்கு மருத்துவர் ராஜேந்திரன் சிகிச்சை அளித்தார். அப்போது எனது கணவரும், மருத்துவர் ராஜேந்திரனும் நண்பர்களாகினர். இதன்பிறகு எனக்கும் மருத்துவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இது தெரிந்ததால் எனது கணவர் விலகிச் சென்றார். மருத்துவருடனான உறவு தொடர்ந்ததால் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியபோது என்னை புறக்கணிக்கத் தொடங்கினார். அவரை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. இதனால் அவர் மீது பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்மீது போலீஸார் 2014 ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்தனர். அதற்கு பிறகு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மேலும் எனது குழந்தை மற்றும் மருத்துவர் ராஜேந்திரனுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி கே.கல்யாண சுந்தரம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் குழந்தை மற்றும் மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 1-ஆம் தேதி மரபணு சோதனை நடத்த உத்தரவிட்டார். சோதனை அறிக்கையை பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024