’விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது மதம், சாதியை இந்தியன் என்றே குறிப்பிட்டேன்’
Published : 23 Oct 2017 13:35 IST
சென்னை
விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது மதம், சாதியை இந்தியன் என்றே குறிப்பிட்டேன் என்று இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடப்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற குறித்த வசனங்களை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தினர்.
மேலும் பாஜக தலைவர் ஹெச்.ராஜா மெர்சல் திரைப்படத்தில் இடப்பெற்றிருந்த காட்சியை சுட்டிக் காட்டி ,"சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளிக் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் விஜய்யின் மதத்தை குறிப்பிடும் வண்ணம் அவரின் வாக்காளர் அடையாள அட்டையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உண்மை கசக்கத்தான் செய்யும் என்று மீண்டும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்தப் பேட்டியில் பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் கூறியதாவது, ”என் பெயர் சந்திரசேகர். ஒருவரின் பெயரை வைத்து அவரின் மதத்தை நிர்ணயிப்பது சிறுபிள்ளைத்தனமானது. நான் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது பள்ளி நிர்வாகம் அளித்த விண்ணப்பித்தில் மதம், சாதியில் இந்தியன் என்றே குறிப்பிட்டேன். பள்ளி நிர்வாகம் நீங்கள் தவறாக விண்ணப்பித்துள்ளீர்கள் என்றார்கள். நான் கூறினேன் நான் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவன். எனது மனைவி இந்துக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது நாங்கள் என்ன மதம் என்று அந்த தலைமையாசிரியரிடம் கேட்டேன்.. இரண்டு மதத்தையும் சேர்த்து ஏதாவது மதம் உள்ளதா? அவள் ஒரு மனுஷி... நான் ஒரு மனிதன்.. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றேன்.
என் மகனின் நான்கு வயதில் அவன் இந்த மதம் என்று முத்திரை குத்தப்பட நான் விரும்பவில்லை. அவன் மனிதன் என்ற முத்திரை குத்தவே நான் விரும்பினேன்.
நாடாளுமன்றத்தில் மதங்கள் இல்லை என்று சொல்லிவிட்டு நான்கு வயதில் இவன் இந்த மதம்தான் என்று குத்தப்படுவது ஏன்? ஏதற்கு?
அதனாலேயே அவனை மனிதன் என்று சேர்த்துவிட்டேன். அந்தப் பள்ளி நிர்வாகம் ஒன்றுமே கூறவில்லை. சேர்த்துக் கொண்டார்கள்.
இன்றுவரை விஜய் மனிதனாக இருந்து கொண்டு இருக்கிறார். பெயரைப் பற்றி கவலைப்படாதீர்கள். பெயர் ஜோசப்பாக இருக்கலாம், வேறு ஏதாவதாக இருக்கலாம். பெயரில் ஒன்றும் கிடையாது. நமது நடத்தையில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். எங்களுக்கு மனிதம்தான் மதம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.