Monday, December 22, 2014

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது



2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.

கள்ள நோட்டு ஒழிக்க...

நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது.

அதாவது, 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதியது. இதனால், 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22–ந் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

(ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்கும். இப்படி அச்சிடும் நடைமுறை 2005–ம் ஆண்டுக்கு பின்னர்தான் வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்காது. இதை வைத்து 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.)

‘கெடு’ முடிகிறது

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள, 2005–ம் ஆண்டுக்கு முன்பாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற தொடங்கினார்கள்.

இப்படி மாற்றுவதற்கான கால ‘கெடு’ வரும் ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.

எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கெடு முடிவதற்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுவரை எவ்வளவு?

இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.52 ஆயிரத்து 855 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்துள்ளது.

இதே போன்று, ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் ரூ.73.2 கோடி மதிப்பிலான ரூ.100 நோட்டுகளையும், ரூ.51.85 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகளையும், ரூ.19.61 கோடி மதிப்பிலான ரூ.1,000 நோட்டுகளையும் மாற்றிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Sunday, December 21, 2014

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?
இரா.ரூபாவதி

‘எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?’’ என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

“வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.



பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.

நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.



இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.

இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார்.

இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.

மழைப் பிரசங்கம்

யாரங்கே?
வாருங்கள்...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை மழை
மழை மழை மழை

மண்ணின் அதிசயம் மழை

பூமியை வானம்
புணரும் கலை மழை

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை

மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொர் இலையிலும்
உயிர் சோம்பல்முறிக்கிறது

இது என்ன...?

மழையை இந்த மண்
வாசனையை அனுப்பி
வரவேற்கிறதா?

என்ன...?
என்ன சத்தம்...?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா?
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்...?
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப்போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை

வாருங்கள்

மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்


  • கவிஞர் : வைரமுத்து

மீத்தேன் திட்டமென்ற பூதம்

தஞ்சை மாவட்டத்தில், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், திட்டத்துக்கு உரிமம் பெற்ற ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ தன்னுடைய அலுவலகத்தைக் காலி செய்து கிளம்பிவிட்டதாக செய்தி ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது நிரந்தர வெளியேற்றமா, அல்லது பதுங்கித் தாக்குவதற்கான முன்னேற்பாடா என்று தெரியவில்லை. தமிழக அரசு அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிதல் ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிவடைந்தாலும், அதை மறுபடியும் புதுப்பிப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவரப் போவதால் மக்கள் படப்போகும் பாடு பற்றி அச்சம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தினால் அடிபணிந்து ஐம்பூதங் களை வணங்கிய மனிதனின் பேராசை, அவற்றை அடக்கியாண்டு பொருள் சேர்க்க முற்பட்டதில், பெரும் சேதமடைந்தது தஞ்சைத் தரணியே. நெல் உற்பத்தியைப் பெருக்குவோமென்று வேதிப்பொருட்களினாலான உரத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் இட்டு மண்ணை விஷமாக்கியதோடு, குறுகிய காலப் பயிர்களால் நீரின் தேவையைப் பெருக்க வைத்து தஞ்சை விவசாயிகளைத் தரித்திரமாக்கியது மத்திய அரசின் விவசாயக் கொள்கைகளே. ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடப்பட்ட காவிரியும் குறுகிய நீர்ப் பாசனக் கொள்கையினால் முடமாக்கப்பட்டாள்.

உள்நாட்டிலேயே இடப்பெயர்வு

நிலவளத்தைப் பெருக்கி உணவு உற்பத்தியை உயர்த்த முன்வராத அரசுகள், பெருவாரியான விளைநிலங்களைக் கட்டுமானத்துக்கும் இதர தொழில்களுக்கும் கபளீகரம் செய்ய முற்பட்டன. காவிரிப் படுகையில் எண்ணெய் வளம், இயற்கை வாயு கிடைக்கிறதா என்று மண்தோண்டும் ராட்சச இயந்திரங்களுடன் முதலில் களமிறங்கியது எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி) மாபெரும் குழாய்களைப் பதிக்கத் தோண்டிய முயற்சி களில் பல கிராமவாசிகளின் வீடுகள் இரண்டாகப் பிளந்தன. இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு களை அதிகரிப்போமென்று விளம்பரப்படுத்திய அந்நிறுவனத்தில், மண்ணின் மைந்தர்கள் சிலர் மட்டுமே காவலர்களாகவும், கடைநிலை ஊழியர்களாகவும் அமர்த்தப்பட்டார்கள்.

தொழிற்பேட்டைகளும் தொழிற்பூங்காக்களும் தமிழகம் முழுதும் அமைக்கப்போகிறோமென்று 1997-ல் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு தொழில் காரணங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் சட்ட’த்தின்கீழ், ஆயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் அரசால் சொற்ப நஷ்டஈட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அடி மாட்டு விலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் வழங்கப்பட்டதும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக ஆக்கப்பட்டதும் கொடுமையிலும் கொடுமை.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபின், ஒவ்வொரு புதிய மாவட்டத்திலும் ஆட்சியருக்கான நவீன அலுவலக வளாகங்கள் கட்டுவதற்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட அலுவலகம் அமைக்க முயன்றதில் விளமல் கிராமமே காணாமல் போய்விட்டது.

விளமலா, லண்டனா?

அந்தக் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியபோது முதல்வர் கருணாநிதி, 27.7.2010 ஆற்றிய உரையின் ஒரு பகுதி:-

“என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து, ‘என்னப்பா, திருவாரூரே மாறிப்போய்விட்டதே!’ என்று வியப்புடன் சொன்னேன். காரணம்? இந்த விளமல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவசமடைந்திருக்கும் அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்த தில்லை. இன்றைக்கு விளமல் நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக இத்தனை கட்டிடங்களா? நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? இல்லை, தமிழ் நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கிறேனா? என்று ஐயப்படும் அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றினால் கட்டிடங்களாக_- வரிசையாகத் தென்படும் அந்தக் காட்சியை நாம் காண்கிறோம். இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்சாவூரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல், எல்லா ஊரிலும் இத்தகைய கட்டிடங்கள், இத்தகைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும்.”

நிலக்கரிப் படுகை மீத்தேன்

அந்தப் பூமியில்தான் இன்று புதிதாக மீத்தேன் திட்டமென்ற பூதம் கிளம்பியுள்ளது. அது என்ன மீத்தேன் திட்டம்? தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, முஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதிவரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அதனுடன் சேர்ந்த மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இயற்கை எரிவாயுவின் மிக முக்கியமான ஆற்றல் தரும் வாயு மீத்தேன். நிலக்கரிப் படிமங்களில் காணப்படும் மீத்தேன் ‘நிலக்கரிப் படுகை மீத்தேன்’ என்றழைக்கப்படுகிறது. நிலக்கரி மீது நுண்ணுயிர்கள் செயல்புரிந்ததாலோ அல்லது அதி யாழத்தில் புதைந் துள்ள நிலக்கரிப் படிமங்கள்மீது உருவான கடும் வெப்ப உயர்வாலோ ‘நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு’ உருவாகியிருக்க வேண்டும். நீரில் மூழ்கியுள்ள நிலக்கரியோடு நீர் அழுத்தத்தால் மீத்தேன் வாயுவும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. நிலத்தைத் தோண்ட உரிமை வழங்கி, மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் அளிக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2011 தேதியன்று அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் திடப்பட்டது.

நீராதாரத்தை அழிக்கும் திட்டம்

மீத்தேன் வாயுவை வணிகப் பயன்பாட்டுக்காக வெளியே கொண்டுவருவது எப்படி என்பது பற்றி தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டுள்ள மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு விளக்கக் கையேடு இவ்வாறு கூறுகிறது:

“மன்னார்குடிப் பகுதி நிலக்கரிப் படுகைகள் தரைமட்டத்துக்குக் கீழே 500 அடி முதல் 1,650 அடி ஆழம் வரை காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படுகைகளை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறைமீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே, மீத்தேன் வாயு வெளிவர முடியும். அடுத்த கட்டமாக, வெற்றிடம் உண்டாக்கும் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1,650 அடிவரை வெளியேற்றப்படும்போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவதோடு மன்னார்குடி நிலக்கரிப் படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்குத் தொடர்புள்ள நிலத்தடி நீர்த் தாரைகள் அனைத்தும் வறண்டுபோகும். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக அருகில் உள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும்போது, காவிரிப் படுகையே உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், நிலம் உள்வாங்குதல் போன்ற அபாயங்களும் நிகழ வாய்ப்பு உண்டு.”

நவீன அடிமைத்தனம்

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்திலும் தங்கள் பிடிப்பை வலுப்படுத்திக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய - மாநில அரசுகளை என்ன சொல்வது? உலகமயமாக்கலிலும் தனியார்மயத்திலும் நமது வாழ்வாதாரங்களைப் பறித்து, மீண்டுமொரு நவீன அடிமைத்தனத்துக்கு நாம் உள்ளாக்கப்பட்டுவருவதன் அடுத்த அவதாரம்தான், தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்போகும் மீத்தேன் வாயுத் திட்டம். பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேனை வெளிக்கொண்டுவந்து, அதை வணிகரீதியில் பயன்படுத்த விழையும் பன்னாட்டு நிறுவனங்கள் பல. அந்த நிறுவனங்களை அழைத்து அனைத்துச் சலுகை களையும் வழங்கும் அதே சமயத்தில், விளைநிலங்களை வீணடித்து நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளைகள்பற்றி மக்களிடையே சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.

நிலமிழக்கப்போகும் விவசாயிகள் மட்டுமன்றி, அப்பகுதி மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் தலித் மக்களையும் இணைத்து நடத்தப்போகும் எழுச்சிப் போராட்டங்கள் மட்டுமே மீத்தேன் திட்டமென்ற பூதத்திட மிருந்து தஞ்சைத் தரணியை மீட்கும்.

- கே. சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

ஊனமுற்றோர், முதியோருக்கான ரயில் கட்டண சலுகை ரத்தாகுமா?

புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரயில்வே துறை வருவாய் இழப்பை சரிக்கட்ட, இலவச அல்லது சலுகை கட்டண ரயில் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

உடல் ஊனமுற்றோர்,மூத்த குடிமக்கள்,விளையாட்டு வீரர்கள்,மாணவர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட, 53 வகையான பிரிவினருக்கு,ரயில்களில், இலவசமாகவோ அல்லது சலுகை கட்டணத்திலோ பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இப்படி இலவச அல்லது சலுகை கட்டணத்தில் பயணிப்பவர்களால் மட்டும், கடந்த நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் அளவுக்கு, ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே துறையின் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்காக, டி.கே.மிட்டல் என்பவர் தலைமையில், உயர்மட்டக் கமிட்டி ஒன்றை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நியமித்துள்ளார்.இந்த கமிட்டியானது, நிலுவை யில் உள்ள திட்டங்கள் உட்பட, ரயில்வேக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறது. அதில், ஒன்றாக, 'இலவச மற்றும் சலுகை கட்டண பயணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.




இருந்தாலும், 53 வகையான பிரிவினருக்கு வழங்கப்படும், இலவச அல்லது சலுகை கட்டண பயணத்தை ரத்து செய்தால், அது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே முடிவு எடுக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும், சலுகை கட்டணத்தில் பயணிக்கும் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் அல்லது இத்தகைய பயணங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, December 20, 2014

எம்.ஜி.ஆர் வாங்கிய கடன்


எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியைக் குவித்த படங்களில் ஒன்று ‘நாடோடி மன்னன்’. ஆனால் இந்தப் படத்தை எடுத்து முடிக்க, அவர் பட்ட பாடுகள் அதிகம்.

சொந்தப்பட நிறுவனம் தொடங்கிய போதே எம்.ஜி.ஆருக்கு மறைமுக அர்ச்சனைகள் நடந்தன. “'நடிச்சு நாலு காசு சம்பாதிச்சோம்னு இல்லாம இதெல்லாம் தேவையா?” என்று பலரும் அக்கறை(?)ப்பட்டார்கள் . அவர்தான் இயக்கப்போகிறார் என்பதை அறிந்ததும் விமர்சனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்தில் இறங்கினார் எம்.ஜி.ஆர். தனக்கு திருப்தி தராத காட்சிகளை மீண்டும் மீண்டும் படம்பிடித்தார். காட்சிகளின் நேர்த்தி கருதி, ஆயிரக்கணக்கான அடி பிலிம் சுருள்களை வீணாக்கவேண்டிய சூழ்நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டுடியோக்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஒரு படத்துக்கான பிலிம் ரோல்களை வாங்கமுடியும். ஆயிரம் அடி பாசிட்டிவ் பிலிமின் நியாயமான விலை 75 ரூபாய் மட்டுமே. அதுவே வெளிமார்க்கெட்டில் 500 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. ஆனாலும்

எம்.ஜி.ஆர் காசைப்பற்றிக் கவலைப்படாமல் பிலிம் ரோல்களை வாங்கிப் படமெடுத்தார்.

படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தன. படத்தை சென்சாருக்கு அனுப்பவேண்டிய கட்டம் வந்தது. கூடவே கஷ்டமும் வந்தது. பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய நிலை. யாரிடமாவது கடன் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

எதிரிக்கும் கொடுத்துப் பழகிய எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு உதவ, ஒரு ராமச்சந்திரன் வந்து சேர்ந்தார். அவர்தான் 'கெயிட்டி' திரையரங்கத்தை நடத்திவந்த ராமச்சந்திர ஐயர். ஏவி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித்தருவதாக உறுதி யளித்தார். எம்.ஜி.ஆரின் முகத்திலும் அகத்திலும் பரவிய மகிழ்ச்சி ரேகையை அழிப்பதற்காகவே புறப்பட்டவர்போல வந்துசேர்ந்தார் எம்.கே.சீனிவாசன். அவரது ஆலோசனைப்படிதான் ஏவி.எம் நிறுவனம் கொடுக்கல்- வாங்கல்களுக்கு சம்மதம் சொல்லும்.

கடன் வாங்கவேண்டும். ஆனால் கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது, வந்தாலும் ஒப்புக்கொள்ளக்கூடாது என் பதில் உறுதியாக இருந்தார் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன். “கடன் கொடுப்பதற்கு ஏவி.எம் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், எம்.ஜி.ஆரின் கையெழுத்து அவசியம்” என்றார் எம்.கே.சீனிவாசன்.

கடைசியாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். “எங்களது தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை சினிமாஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகையை, நாங்கள் வாங்கும் கடனுக்கு அடமானமாக வைத்துக்கொள்ளும் வகையில், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை உங்களிடம் தந்துவிடுகிறோம். நானும் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியும் கையெழுத்துப் போடுகிறோம்”என்று சீனி வாசனிடம் சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். இந்த டீல் ஓகே ஆனது.

பணம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, பிலிம் சுருள் வாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். பணம் வாங்கி வருவதற்காக எவிஎம்முக்குச் சென்றார் ஆர்.எம்.வீ. “எந்த பத்திரத்திலும் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடமாட்டார் என்கிறீர்கள். ஆனால், இலங்கை சினி மாஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத் தில் எம்.ஜி.ஆர்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தை அட மானம் வைத்துதான் கடன் கேட்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் வாங்க விரும்பும் தொகைக்கான கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டும்” என்று கறாராக சொல்லிவிட்டார் சீனிவாசன்.

ஆர்.எம்.வீயும் சக்ரபாணியும் எம்.ஜி.ஆருடன் ஆலோசனை நடத்தினார்கள். அவர்களிடம் எம்.ஜி.ஆர் ஒரு அணுகு முறையை சொல்லி அனுப்பினார். அதையே ஆர்.எம்.வீரப்பன் பின்பற்றினார். “ இலங்கை சினிமாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று இருந்தது. அந்த நேரத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால் ஒப்பந்தத்தில் அவரது கையெழுத்து இடம்பெற்றது. இப்போது கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்று மாற்றப்பட்டுவிட்டது. நிர்வாக இயக்குநராக நான்தான் இருக்கிறேன். எனவே, நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் கையெழுத்துப் போட்டாலே செல்லுபடி ஆகும்” என்றார் ஆர்.எம்.வீரப்பன். கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான கோப்புகளையும் ஒப்படைத்தார்.

“கடன் கொடுப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்றார் சீனிவாசன். கையெழுத்துகள் பதிவானது. இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும்போது வேறொரு அறையில் இருந்தார் ஏவி.எம் முதலாளியான ஏவி.மெய்யப்ப செட்டியார். பிறகு பஞ்சாயத்து அறைக்கு வந்தார். “எம்.ஜி.ஆரின் கையெழுத்தைக் கடன்பத்திரத்தில் வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம். கடைசியில் அவர்தான் ஜெயித்துவிட்டார்” என்று ஆர்.எம்.வீயிடம் சொன்ன செட்டியார், உடனடியாக பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

TATA, SINGAPORE AIRLINE VENTURE VISTARA TO TAKE OFF ON JANUARY 9

New Delhi: 

Singapore Airlines Ltd's Indian joint venture with the Tata conglomerate, Vistara, will start flying from January 9, the airlines said.

Based in New Delhi, the full service Vistara will begin operations with a fleet of new Airbus A320-200s with 148 seats, Tata SIA Airlines Ltd said in a statement late on Thursday.

Vistara will offer flights to Mumbai and Ahmedabad initially, it said.
Tata, Singapore Airline venture Vistara to take off on January 9
Vistara will offer flights to Mumbai and Ahmedabad initially, the airline said.


The announcement comes in the middle of a particularly testing week for the airlines industry in India, with budget carrier SpiceJet struggling for survival.

The Tata Group and Singapore Airlines announced the plan to launch Vistara on September 19, adding a deep-pocketed player to a fast-growing but competitive Indian aviation sector where most operators lose money.

NEWS TODAY 25.05.2026