Sunday, February 15, 2015

கபில் தேவின் 175 ரன் இன்னிங்ஸைக் கண்டு மிரண்டு போனேன்: கிரேம் ஹிக்

1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் கேப்டன் கபில் தேவ் 175 ரன்கள் எடுத்ததை நேரில் பார்த்து மிரண்டு போனேன் என்று ஜிம்பாப்வே நாட்டுக்காரரான முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மென் கிரேம் ஹிக் கூறியுள்ளார்.

கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக்.

இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பதிலி வீரராக பவுண்டரி அருகே பீல்ட் செய்து கொண்டிருந்தேன். எப்படியும் என்னிடம் கேட்ச் கொடுப்பார் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.” என்று கபிலின் உலகப் புகழ் பெற்ற இன்னிங்சை விதந்தோதியுள்ளார்.

கிரேம் ஹிக், இங்கிலாந்துக்கு விளையாடிய ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர். 65 டெஸ்ட் போட்டிகளில் 3,383 ரன்களை 31.32 என்ற சராசரியில் எடுத்தவர். இதில் 6 சதங்கள் 18 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார். 120 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3,846 ரன்களை 5 சதங்கள் 27 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் 178, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: 126 நாட் அவுட்.

முதல் தர கிரிக்கெட்டில் 526 போட்டிகளில் 41,112 ரன்களை 52.23 என்ற சராசரியின் கீழ் 136 சதங்கள், 158 அரைசதங்களுடன் எடுத்தவர். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 405 நாட் அவுட்.

கெவின் பீட்டர்சன் போல் திறமை மிக்க பேட்ஸ்மென் கிரேம் ஹிக். ஆனால் டெஸ்ட் வாழ்க்கையில் இவர் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவுக்கு சோபிக்கவில்லை. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இவரை பாடாய்ப் படுத்தி எடுத்தனர். ஆனாலும் கடினமான பிட்ச்களில் இவரது திறமை பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் குறையாத எதிர்பார்ப்பு



இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே ரசிகர்களின் இருதயத் துடிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம்...

உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதேயில்லை என்ற ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து கடுமையாக அதிகரித்துள்ளது.

"‘உலகக்கோப்பையை வென்றால் போதும், இந்தியாவுடன் தோற்றால் கவலையில்லை." என்று பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதற்கு நேரெதிரான மன நிலையில் உலகக்கோப்பை வெல்வது முக்கியம்தான் ஆனால் பாகிஸ்தானுடன் தோற்றுவிடக்கூடாது என்பதே அதைவிட முக்கியம் என்பதாகவே ரசிகர்களின் மனநிலை இதுவரை இருந்து வந்துள்ளது இப்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்காக ஐதராபாத்தில் ரசிகர்கள் சிலரைச் சந்தித்து இந்தியா-பாக் மோதல் பற்றி ரஞ்சனி ராஜேந்திரா சேகரித்த செய்திகள் வருமாறு:

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் டிரெய்னராக இருக்கும் டி.ராகுல் என்பவர் கூறும்போது, “இந்தப் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், இந்தியா வெற்றி பெறும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்திய பேட்ஸ்மென்களுக்கும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக இந்தப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய பேட்டிங் பலமாக உள்ளது.” என்றார்.

நரேஷ் வீரவல்லி என்ற பொறியியலாளர்: "இந்தப் போட்டியை நான் நிச்சயம் பார்க்காமல் விடப்போவதில்லை. நண்பர்களுடன் ஸ்போர்ட்ஸ் பார் அல்லது என் வீட்டில் ஒன்று சேர்ந்து ஆட்டத்தை ரசிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்திருக்கிறோம்.” என்றார்.

குரிஷாப் சிங் என்ற உணவக உரிமையாளர் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர். இவர் கூறும்போது, “இந்தியா தோற்றுவிடும் என்று என் உளமனது கூறுகிறது. சமீபமாக நம் அணி சிறப்பாக விளையாடவில்லை. குறைந்த தரமான அணிகளிடம் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி சந்தேகத்திற்கிடமாக உள்ளது. ஆனாலும், எனக்கு இந்தப் போட்டி ஆர்வமூட்டுகிறது, இந்தியா எப்படியாவது வென்று விடும் என்றே நான் நினைக்கிறேன். மேலும் அன்று ஞாயிற்றுக் கிழமை வணிக ரீதியாக உணவகத்தில் அதிக கூட்டம் வரும் நாள். ஆனாலும், உணவகத்தில் உள்ள தொலைக்காட்சியில் எப்படியும் லைவ் காட்சிகளை பார்ப்பேன் என்றே கருதுகிறேன்.” என்றார்.

இந்தப் போட்டியில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வர்ணனையாளராகச் சேர்க்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமிதாபின் குரல் நிச்சயம் அந்த ஆட்டத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு: சிங்கப்பூரில் மே, ஜூனில் நடைபெறும்



தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கில் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டுத் தலைவர் எஸ்.மணியம் கூறியதாவது:

தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) சார்பில் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் வரும் மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பங்கேற்பாளர்கள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

பயிற்சிப் பட்டறை

இணையப் பக்கங்கள் உரு வாக்குவது, வலைப் பதிவுகள், முகநூல் போன்றவை தொடர்பாக மாநாட்டில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். கணினியில் தமிழ், கையடக்கக் கருவிகள், வலைப் பயன்பாடு ஆகியவற் றில் மாணவர்களின் திறன் களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப் படும்.

மாநாட்டில் தேசிய மொழித் தேர்ச்சி மைய நிர்வாகி முனை வர் லிசா மூர், இந்திய தொழில் நுட்ப வளர்ச்சித் துறை இயக்குநர் குமாரி சுவரன் லதா, அமெரிக்காவின் ஓக்லேண்ட் பல்கலைக்கழக தகவல் அறிவியல் துறைத் தலைவர் விஜயன் சுகுமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு எஸ்.மணியம் கூறினார்.

அண்ணாமலை பல்கலைக் கழக மொழியியல் உயர்ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் கணேசன், பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக கணிப்பொறி பேராசிரியர் ஸ்ரீராம், காந்தி கிராமப் பல்கலைக்கழக தமிழ்த் துறை துணைத் தலைவர் சி.சிதம்பரம், பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் உடன் இருந்தனர்.

விற்கும் வீட்டுக்கு வரி உண்டா?



நாம் ஈட்டும் வருவாய்க்கு வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டும் காலம் இது. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் ஈட்டிய வருவாய், முதலீடுகளுக்கெல்லாம் ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வீட்டுக் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கியிருந்தால், அந்தப் பணத்தைத் தவணை முறையில் கட்டி வரும் சூழ்நிலையில் அதற்கு வரிச் சலுகை கிடைக்கிறது. ஒரு வேளை வாங்கிய வீட்டை விற்று லாபம் கிடைத்திருந்தால் அப்போது வரிச்சலுகை கிடைக்குமா? அல்லது வரி கட்ட வேண்டுமா?

உண்மையில் ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம் லாபம் சம்பாதித்தார் என்றால், அந்த லாபத்துக்கு நிச்சயமாக வரி செலுத்த வேண்டும் என்றே வருமான வரியின் நடைமுறைகள் கூறுகின்றன. இப்படிச் செலுத்தப்படும் வரியை மூலதன வரி என்று சொல்லுகிறார்கள். இந்த வரியை இரண்டு வகையாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள். நீண்டகால மூலதன வரி, குறுகிய கால மூலதன வரி என்பதுதான் அந்த இரண்டு வகைகளும்.

ஒரு நபர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு வாங்கி அந்த வீட்டை இப்போது விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி விற்பதன் மூலம் லாபம் கிடைத்தால் அதுதான் ‘நீண்டகால மூலதன லாபம்’. இந்த லாபத் தொகைக்கு 20.6 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் வாங்கிய வீட்டை, இப்போது விற்றால் அதிலிருந்து கிடைக்கும் லாபத்தைக் குறுகிய கால மூலதன லாபம் என்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் வருமான வரி செலுத்தினால் எந்த விகிதத்தில் செலுத்துவாரோ, அந்த விகிதத்தில் குறுகிய கால மூலதன லாப வரியைச் செலுத்த வேண்டும்.

சாதாரணமாக வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால், மீதம் வருவது லாபம் இல்லையா? நீண்டகால மூலதன லாபத்தைக் கணக்கிட ‘இண்டக்ஸ்’ முறை கையாளப்படுகிறது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இண்டக்ஸ் குறியீடு அட்டவணை தயாரிக்கப் படுகிறது.

பணவீக்கம் உயர்ந்தால் விலையும் உயரும். இந்த இண்டக்ஸ் முறை 1981-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1981-1982-ம் நிதியாண்டில் இண்டக்ஸ் 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது அது 1024 புள்ளிகளாக உள்ளது. இப்போது அது 10 மடங்கு உயர்ந்துவிட்டது.

சாதாரணமாக வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால், மீதம் வருவது லாபம் இல்லையா? நீண்டகால மூலதன லாபத்தைக் கணக்கிட ‘இண்டக்ஸ்’ முறை கையாளப்படுகிறது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இண்டக்ஸ் குறியீடு அட்டவணை தயாரிக்கப் படுகிறது.

பணவீக்கம் உயர்ந்தால் விலையும் உயரும். இந்த இண்டக்ஸ் முறை 1981-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1981-1982-ம் நிதியாண்டில் இண்டக்ஸ் 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது அது 1024 புள்ளிகளாக உள்ளது. இப்போது அது 10 மடங்கு உயர்ந்துவிட்டது.

உதாரணத்துக்கு ஒருவர் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீடு வாங்கினார். அப்போது அதன் விலை ரூ.5 லட்சம். இப்போது அதை ரூ. 30 லட்சத்துக்கு விற்கிறார். அவருக்குக் கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபம் என்ன தெரியுமா? 2000-ம் ஆண்டில் இண்டக்ஸ் புள்ளிகள் 406 ஆக இருந்தது.

அப்போது வீட்டை வாங்கிய விலை ரூ.5 லட்சம். தற்போதைய இண்டக்ஸ் புள்ளிகள் 1024 ஆக உள்ளது இல்லையா? ஆனால், இப்போது வீடு ரூ.30 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. அப்படியானால் கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? 25 லட்ச ரூபாய் என்று எண்ணிவிடக் கூடாது. லாபத்தைக் கண்டறிய ஒரு சூத்திரம் உள்ளது. அது,

வீடு வாங்கிய விலை* இப்போதைய இண்டக்ஸ் குறியீடு/அப்போதைய இண்டக்ஸ் குறியீடு

ரூ.5,00,000 * 1024 / 406 = ரூ.12,61,083

நீண்ட கால மூலதன லாபம் என்பது (30,00,000 - 12,61,083) ரூ.17,38,917 ஆகும். இதுதான் நீங்கள் லாபமாக ஈட்டிய தொகை. இந்த லாப தொகைக்குத்தான் வரி செலுத்த வேண்டும்.

இந்த வரியைச் செலுத்தாமல் இருக்கவும் ஒரு வழி இருக்கிறது. கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்தைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய வீடு ஒன்றை வாங்கினால் அதற்காகச் செலவு செய்யப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. உதாரணத்துக்கு ரூ.17 லட்சம் நீண்டகால மூலதன லாபம் கிடைத்திருக்கிறது.

அதில் ரூ.16 லட்சத்துக்குப் புதிய வீடு வாங்குகிறோம் என்று வைத்துக் கொண்டால், மீதமுள்ள ரூ.1 லட்சத்துக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இதில் ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அப்படி வாங்கும் புதிய வீட்டை 3 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்பதுதான் அது.

மூலநோய் வருவது ஏன்? by டாக்டர் கு. கணேசன்



நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

எது மூலநோய்?

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன; ரத்தம் தேவையில்லாமல் சிரைக் குழாய்களில் தேங்கி நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்தத் தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை.

இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள இரண்டு சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போலத் திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

காரணங்கள்

மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின்போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.

வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

மூலநோய் வகைகள்

மூலநோய் இரு இடங்களில் ஏற்படுகிறது. 1. ஆசனவாயின் வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளிமூலம்' . 2. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாக புதைந்திருப்பது 'உள்மூலம்'.

சாதாரணமாக, நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால், அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

அறிகுறிகள்

ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது. அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசியும். அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும். சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர் சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும். சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.

அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பு, வலி தொல்லை தரும். அதனால் மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும், மலச்சிக்கல் ஏற்படும். 'முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி' என்று சொல்வது, இதற்கு மிகவும் பொருந்தும். ஆசன வாயில் வெடிப்பு (Anal fissure) புண், சுருக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான வலி, தொல்லையைத் தரும்.

மூலநோய் அறிகுறிகளை நான்கு நிலைகளாக மருத்துவர்கள் பிரித்திருக்கிறார்கள். காரணம், இந்த நோய்க்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் எந்தச் சிகிச்சை முறை குறிப்பிட்ட நோயாளிக்கு நல்ல பலனைத் தரும் என்று முடிவு செய்வதற்கு இது உதவும். மூலநோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை தரப்பட்டால் மட்டுமே, நோய் முழுவதுமாக குணமாகும். அப்படி இல்லாதபோது மூலநோய் மீண்டும் வந்துவிடும்.

மூலநோய் நிலைகள்

முதலாம் நிலையில், சிறிய அளவில் தடிப்பு அல்லது வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும். மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும். மூன்றாம் நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். நான்காம் நிலையில், வீக்கத்தில் புண் ஏற்படலாம். வலி அதிகமாகலாம். அடிக்கடி ரத்தம் மிக அதிகமாக வெளியேறும்.

முக்கியக் குறிப்பு

பெருங்குடலில் ஏற்படும் புண், வீக்கம், புற்றுநோய், ஆசனவாயில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாகவும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். ஆகவே, ஒருமுறை ஆசனவாயிலிருந்து ரத்த ஒழுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்து, காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இது மூலநோயாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்துவிடக் கூடாது.

சிகிச்சை முறைகள்

மூலநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் மருந்து, மாத்திரை, களிம்புகளில் குணப்படுத்திவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை பெற்றுவிட்டால் போதும். மூலநோயும் விடைபெற்று விடும். மூலநோய்க்குப் பல்வேறு சிகிச்சைமுறைகள் உள்ளன. அவை:

1. சுருங்க வைத்தல் 2. வளையம் இடுதல் 3. உறைய வைத்தல் 4. அறுவைச் சிகிச்சை 5. கதிர்வீச்சு சிகிச்சை 6. லேசர் சிகிச்சை 7. ஸ்டேப்ளர் சிகிச்சை. நோயாளியின் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை மருத்துவர் தேர்வு செய்வார்.

தடுப்பது எப்படி?

மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.

சிகிச்சை முறைகள்

சுருங்க வைத்தல்:

ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தை ஊசிக்குழாயில் எடுத்துக்கொண்டு மூலநோய் ஏற்பட்டுள்ள இடத்தில் செலுத்தி, தடித்துள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இந்த சிகிச்சையின் முக்கிய செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவும்.

வளையம் இடுதல்:

இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக்குழாய் வீக்கத்துக்குள் ரத்தம் வருவது தடைப்பட்டுப்போகும். இதனால் வீக்கம் சுருங்கிவிடுகிறது. இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

உறைய வைத்தல்:

திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால், அதில் உள்ள ரத்தக்குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இரண்டாம் நிலை, மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

அறுவைச் சிகிச்சை:

நாள்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை சிறந்த பலன் தரும்.

கதிர்வீச்சு சிகிச்சை:

ஐ.ஆர்.சி. ( IRC Infra red Coagulation) என்ற கருவி மூலம் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிரை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலநோய்க்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்திவிடும். இதனால் மூலநோய் வீக்கம் சுருங்கிவிடும்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலையில் உள்ள முதியவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

லேசர் சிகிச்சை:

லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது, இந்தச் சிகிச்சையின் செயல்முறை. ஆனால், இதற்கு ஆகும் பணச்செலவு சிறிது அதிகம்.

ஸ்டேப்ளர் சிகிச்சை:

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறை இது. இதற்கு ஆகும் பணச்செலவும் அதிகம்தான். என்றாலும், இதுதான் மிக எளிய சிகிச்சை முறை. நவீன ஸ்டேப்ளர் கருவியைக் கொண்டு மூலநோயின் மேல்பகுதியைத் தையலிட்டு இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப்பகுதியையும் வெட்டி எடுத்து தையலிட்டுவிடுகிறார்கள்.

இது மூலநோயை நிரந்தரமாக குணப்படுத்திவிடும். மூலநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்தச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

திருமண செலவில் குரங்கு வாடகை ரூ.10,000: ஆக்ராவில் வினோதம்

திருமண செலவில் குரங்குகளை வாடகைக்கு அமர்த்துவதும் கட்டாய மாகி விட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில்தான் இந்த வினோதம் நடந்து வருகிறது.

ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம். திருமண விசேஷங்கள் நடைபெறும் இடங்களுக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. அவற்றை விரட்ட சாம்பல் நிற லங்கூர் வகை குரங்குகளை திருமண வீட்டார் வாடகைக்கு அமர்த்தி வருகின்றனர்.

சாம்பல் நிற லங்கூர் குரங்கு களுக்கு மற்ற குரங்குகளைக் கண்டால் பிடிக்காது. அவற்றை துரத்தி விட்டுவிடும். எனவே, லங்கூர் குரங்களை வைத்திருக்கும் குரங்காட்டிகளுக்கு நல்ல தேவை உள்ளது. குறிப்பாக திருமண சமயங்களில் இவர்களுக்கான தேவை அதிகரித்து விடுகிறது. திருமண வீட்டார் இவர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு ரூ.3,000 கொடுத்தால் போதுமானது. இல்லாவிட்டால், விசேஷத்தில் குரங்குகள் புகுந்து விட்டால் அவற்றை விரட்ட ரூ.10 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கும்.

குறிப்பாக குளிர்காலங்களில் நடைபெறும் திருமணங்களில் இவர்களுக்கான தேவை அதிக மாகவே உள்ளது. இதனால், திருமணத்தில் மற்ற செலவுகளுடன் லங்கூர் குரங்குகளுக்கான வாடகைச் செலவும் கட்டாயம் இடம்பெறுகிறது.

ஆக்ராவில் கடந்த சில ஆண்டுகளில் குரங்குகளின் எண் ணிக்கை பல மடங்கு அதி கரித்து விட்டது. வட இந்தி யாவின் பெரும்பாலான நகரங் களில் குரங்குகளின் தொல்லை அதிகரித்திருக்கிறது. தோட்டங் களைச் சிதைத்தல், வீடு, அலுவலகங் களின் மேற்கூரையில் அமர்தல், உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்துதல், உணவுக்காக மனிதர்களைத் தாக்குதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன.

எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? by பாரதி ஆனந்த்

படங்கள்: க.ஸ்ரீபரத்.

ஒவ்வொரு ஆண்டும் வருகிறது இந்த காதலர் தினம். அந்த நாள் வருவதற்கு முன்னரே 'நாங்கள் எதிர்க்கிறோம்', 'நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்', 'நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்' என மிரட்டல், கண்டன அறிக்கைகள் வந்துவிடுகின்றன.

சிலர் (கலாச்சாரக் காவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்) அறிக்கைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், களத்திலும் இறங்குகின்றனர்.

அன்றைய தினம் இவர்கள் கையில் கொடி, தடியுடன் புறப்பட்டுவிடுகிறார்கள். இவர்களது மெயின் டார்கெட் பஸ் ஸ்டாண்ட், பீச், பார்க், மல்டி பிளக்சுகள் இத்யாதி இத்யாதி இடங்கள். கண்ணில் ஏதேனும் ஜோடி சிக்கினால் போதும் நீங்கள் கணவன், மனைவியா என்ற கேள்வி தொடங்கி அறிவுரை என்ற பெயரில் நாராசமான வார்த்தைகளும் சொல்லப்படுகின்றன. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் காதலர்களை கையாளும் விதத்தை விட்டுவிடுவோம். அது இங்கு விவாதப் பொருளல்ல.

இந்த ஒட்டுமொத்த காதலர் தின எதிர்ப்பு நிகழ்ச்சியிலும் வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், நாய்களுக்கு நடத்தப்படும் திருமணம். நாய்களுக்கு ஏன் திருமணம் நடத்த வேண்டும். காதலர் தினத்துக்கும் நாய்களுக்கும் என்ன சம்பந்தம். காதலர்களை இழிவுபடுத்த நாய்களுக்கு திருமணம் செய்வது காதலர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பிராணிகள் ஆர்வலர்களுக்கு வேதனை அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாய்கள், நாம் பழக்கப்படுத்தும் வகையில் வாழும் ஜீவன்கள். உயிருள்ளவரை எஜமானனுக்கு விசுவாசமாகவே இருக்கின்றன. தனிமையில் வாழும் எத்தனை, எத்தனையோ முதியவர்களுக்கு உற்ற தோழமையாக இருக்கின்றன. உள்ளூர் உதாரணம் ஒன்று சொல்ல வேண்டுமானால், சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த விபத்தின் போது ஆட்கள் புக முடியாத இடங்களுக்குள் எல்லாம் நுழைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினருக்கு அடையாளம் காட்டி உதவின சில நாய்கள்.

இறைவன் படைப்பில் எந்த ஒரு ஜீவராசியையும் தாழ்வாக நினைக்க யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது கலாச்சாரத்தை காக்க நாய்களுக்கு திருமணம் செய்வது மிகவும் அபத்தமானது. அலங்காரம் செய்து, சீர்வரிசை வைத்து, முடிந்தால் தாலி கட்டக்கூட வைத்து நீங்கள் செய்யும் அத்தனை அக்கிரமங்களுக்கும் எதுவும் அறியாமல் துணை போகின்றன என்பதற்காகவே அத்துமீறலாமா?

கலாச்சாரக் காவலர்களே, காதலர் தினத்தை எதிர்க்கும் உங்கள் கருத்துகளுக்கு பின்னணியில் நியாயமான காரணங்களே இருக்கலாம். ஆனால், அதற்காக நாய்களுக்கு திருமணம் செய்வதற்குப் பின்னணியில் எந்த நியாயமும் இருக்க முடியாது.

அடுத்த ஆண்டும் காதலர் தினம் வரும். அப்போது நாய்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், பூமாலை, அலங்காரத்துடன் காட்சியளிக்கும் நாய்களின் கண்கள் 'எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்?' என்று கேட்பது போலவே உள்ளன.

குறிப்பு: எதற்கும், நாய்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

NEWS TODAY 20.08.2026