Tuesday, September 27, 2016



வெள்ளிக்கு 50 கோடி டீல்... தங்கத்துக்கு தகரடப்பா!


ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.

இந்த ஒலிம்பிக் சீசனை பொறுத்தவரை மாரியப்பன் அடைந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு சமமான ஒன்றுதான். பாராலிம்பிக்கர் என்ற வகையில் மாரியப்பனுக்கு கிடைத்தது வெறும் இரண்டே முக்கால் கோடிதான். சிந்துவைப் பொறுத்த வரை, இரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை கொடுத்தன. சச்சின் தலைமையில் சிந்து, சாக் ஷி, தீபா, சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கபப்பட்டது. இதில் எதுவும் தவறில்லை.

இதுவெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்போது சிந்துவுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளன. இதனால், சிந்துவின் விளம்பர விவகாரங்களை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கவனிக்க உள்ளது. சிந்துவின் புகைப்படங்கள் உரிமம் முதற்கொண்டு , இந்த நிறுவனத்திடம்தான் 3 ஆண்டுகளுக்கு இருக்கும். முதற்கட்டமாக 9 நிறுவனங்கள் சிந்துவை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், 7 நிறுவனங்கள் சிந்துவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் சாராத ஒரு விளையாட்டு வீராங்கனை இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இப்போதுதான். சிந்துவின் திறமைக்கு கொடுக்கப்பட வேண்டியதுதான் மறுக்கவில்லை. அதே வேளையில், கிட்டத்தட்ட அதற்கு ஈடான முயற்சிகள் செய்துதானே மாரியப்பன் போன்றவர்கள் தங்கம் வென்றிருக்கின்றனர்.



மாரியப்பன் பின்னணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும். மாரியப்பனை விடுங்கள். அழகிகளை ஒப்பந்தம் செய்ய வாரி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும்பாலான தடகள வீராங்கனைகளின் வாழ்க்கைப் பற்றித் தெரியுமா?. தீவிர பயிற்சி காரணமாக தடகள வீராங்கனைகள் பெண்மைக்குரிய அடையாளங்களையே இழக்கிறார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தால் தெரியும். உடலைப் பார்த்தால் தெரியும். நரம்பு முறுக்கேறிய கைகளைப் பார்த்தாலும் புரியும். சில சமயங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட சிரமம்தான்.ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை ஈடு செய்ய முடியாத விஷயம்.

இந்த ஒலிம்பிக்கில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் லலிதா பாபர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு 10 லட்சம் கூட கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தண்ணீர் கூட தரவில்லை என்று ஜெய்சா கதறினார். இப்போது எப்படி இருக்கிறார் என்ற நினைப்பே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கணபதி. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தச் சம்பளமே 20 ஆயிரம் ரூபாய்தான். அதில்தான் தனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது பயிற்சிக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார். பயிற்சிக்காக இவர் வாங்கிய வங்கிக்கடன் 3 லட்சம். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இவரும் ஒரு ஒலிம்பியன்தான். ஒலிம்பியன் என்ற பெயரோடு ஒளிந்து கிடக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் கடன் வாங்குவார். கடைசியில் வட்டி கட்ட முடியாமல் போகும்.

இந்தியாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் போலத்தான் சமச்சீரற்ற விளையாட்டுத்துறையும். ஒரே பக்கம் பணம் சேர்வது போல... ஜெயித்தால் ஒரே அடியாக அவர்கள் கால்களில் பணத்தைக் கொண்டு கொட்டுவார்கள். விளம்பரம் விளம்பரம் என்று பின்னாலேயே அலைவது. ஜெயிப்பவர்கள் மட்டும் கண்ணுக்கு தெரிவதால், தோற்பவர்கள் காணாமலேயே போய் விடுகிறார்கள். அந்த வீராங்கனையை வைத்து அடுத்த தலைமுறையும் அந்த விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் மட்டும் கொஞ்சம் வீரர்- வீராங்கனைகள் உருவாகி வருவார்கள். மற்ற விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டிருக்கும். கிரிக்கெட்டுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் காணாமலேயே போய் விட்டன.

இதனால்தான் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், ''நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் சமயத்துலத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருமோ? மத்த சமயத்துல நாங்க இருக்கோமா செத்தோமானுகூட பார்க்க மாட்டீங்கனு.'' காட்டமாகக் கேட்டார். ஆப்ரிக்காவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், தனது கிராமத்துக்கே மின்சாரம் பெற்றுத் தந்தார் ஒரு தடகள வீராங்கனை. அந்த நாட்டை விட பல மடங்கு பொருளாதார பலமும் வசதியும் திறமையும் உள்ள நாடு இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல். விளையாட்டுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விளையாட்டு அமைப்புத் தலைவர்கள். இதையெல்லாம் விட ஜெயித்தால் ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது. இதனால், சில பேட்மின்டன் வீரர்கள் உருவாகி வரலாம். சிந்துவும் பணத்தில் கொழித்து விடலாம். ஆனால், லலிதா பாபர் போன்ற தடகள வீராங்கனைகள்?

எல்லாரையும் சமமாக நடத்துங்கள். வெற்றியோ தோல்வியோ... பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்!

-எம். குமரேசன்

விமானத்தில் வைஃபை?


THE HINDU

முன்பெல்லாம் விமான போக்குவரத்துதுறை பற்றி யாரும் பெரியதாக கண்டு கொண்டதில்லை. அந்த துறையைப்பற்றி பேசுவதற்கு காரணம் இல்லை, கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தது தவிர இந்த துறையில் பெரிய போட்டியும் இல்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு. இந்த துறையில் போட்டி அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்பதால் நடுத்தர மக்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது.

விமானத்தில் செல்வது ஆடம்பரமாகத் தெரிந்தாலும், அடிக்கடி செல்பவர்களிடம் கேட்டால்தான் தெரியும் அவர்களின் அவஸ்தையை. மூன்று மணிநேரம் போன் பயன்படுத்த முடியாது. பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச முடியாது. படிக்கிற பழக்கம் இருப்பவர்கள் படிக்கலாம். அந்த பழக்கமும் இல்லை என்றால் அந்த பயணம் போர்தான்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத் துக் கொள்வதற்கும், அவர்களுக்கு கூடுதல் வசதி வழங்குவதற்கும் விமான நிறுவனங்களிடையே போட்டி நடக்கிறது. இப்போது வைஃபை வசதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் 2009-ம் ஆண்டே இந்த வசதி இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் இது குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றன.

விமானங்களில் வைஃபை வசதி அளிப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்னும் அனுமதிக்கவில்லை. விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.சௌபே இம்மாத தொடக்கத்தில் கூறும்போது இன்னும் சில நாட்களில் இது குறித்து நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை இது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.

விமானங்களில் வைஃபை வசதி குறித்து விமான நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வைஃபை வசதிக்கு அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக 220 மணி நேரத்துக்கு பொழுதுபோக்காக இலவச செயலியை வெளியிட்டிருக்கிறது. வரும் மார்ச் 2017 முதல் இந்த செயலியை பயன்படுத்த முடியும். இது வைஃபை வசதி இல்லை என்றாலும் விளையாட்டு, திரைப்படங்களை வாடிக்கையார்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இண்டிகோ நிறுவனம் கூறும்போது இந்தியாவில் அதிகபட்ச பயண நேரம் சுமார் மூன்று மணிநேரம். இதற்கு ஏன் அதிக செலவு பிடிக்கும் வைஃபை வசதியைச் செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தது. பட்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த வசதியை செய்யும் போது டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் கூறியிருக்கிறது.

ஆனால் விஸ்தாரா நிறுவனம், இது ஒரு சாதகமான மாற்றம். அரசு கொள்கை முடிவுகளை அறிவிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்று கூறியிருக்கிறது. இது செலவு பிடிக்கும் விஷயம், அதனால் உள்நாட்டு விமானங்களில் இது தேவையா என்னும் முடிவை எடுக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இது தேவை என்று கூறியிருக்கிறது.

புதிதாக வரும் மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக ஏர் ஏசியா இந்தியா இருக்கிறது. இதன் தாய் நிறுவனமான ஏர் ஏசியா மலேசியா சில குறிப்பிட்ட வழித்தடங்களில் வைஃபை வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

செயற்கைக்கோளுடன் சர்வர்களை இணைக்கும்பட்சத்தில்தான் விமானங் களில் வைஃபை வசதி கொடுக்க முடியும். விமானங்களில் வைஃபை வசதி செய்து தரக்கூடிய முக்கியமான நிறுவனம் கோகோ. மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அதிக செலவாகும் விஷயம் என்பதால் இந்திய நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குமா அல்லது கட்டணம் வசூலிக்குமா? எவ்வளவு என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

சர்வதேச அளவில் சில விமான நிறுவனங்கள் இலவச வைஃபை சேவை வழங்குகின்றன. சில விமான நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் வசூலிக்கின்றன. உதாரண மாக இங்கிலாந்தில் சராசரியாக 6 மணி நேரத்துக்கு 30 பவுண்ட் வசூலிக்கிறார்கள். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் தினசரி மாதாந்திர பாஸ்களும் வழங்கப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட ஜிபி வரை இலவசமாக வழங்குகின்றன.

இன்னும் சில மாதங்களில் வாடிக்கை யாளர்களை கவரும் உத்திகளில் ஒன்றாக வைஃபை இருக்கப்போகிறது.

மது போதையால் தொடரும் கார் விபத்துகள்: குற்றவாளிகளை உடனே தண்டிக்க சட்டத்திருத்தம் வருமா?


சாலை விபத்துகளுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் போதையில் கார் ஓட்டுவது முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் 2014-ல் 67,250 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 15,190 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காய மடைந்து முடங்கியுள்ளனர். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் ஒருபுறம் இருக்க, தற்போது சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி நடக்கும் விபத்துகள் அதிகரித்துள்ளன.

மெரினாவில் நின்றிருந்த போலீஸ்காரர் சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் ஆகியோர் மீது 3 ஆண்டுகளுக்கு முன்னர் கார் மோதியது. இதில், அனைவரும் பலியாகினர். போதையில் கார் ஓட்டிய அன்பு சூரியன் கைதானார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தொழில் அதிபரின் மகன் ஷாஜி என்பவரது சொகுசு கார் மோதியதில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த முனிராஜ் (12) என்ற சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த பிப்ரவரியில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் முகமது சபீக் அண்ணாசாலையில் போதை யில் ஓட்டிய கார் மோதி ராயபுரம் கெவின்ராஜ் (25) பலியானார். திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் கடந்த ஜூலை 2-ம் தேதி வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் முனுசாமி என்பவர் பலியானார். போதையில் கார் ஓட்டிய தொழில் அதிபர் மகள் ஐஸ்வர்யா கைதானார்.

ஆழ்வார்பேட்டையில் சில தினங்களுக்கு முன்னர் கார் பந்தய வீரர் விகாஷ் போதையில் ஓட்டிய சொகுசு கார் மோதி திருத்தணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் மரணமடைந்தார். சில தினங்களுக்கு முன்னர் திரைப்பட நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இப்படி சென்னையில் போதையில் கார் ஓட்டி விபத்துகள் நடப்பது அதிகமாகி வருகிறது.

இந்த சாலை விபத்துகளில் பலியானோரின் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. ஆனால், விபத்தை ஏற்படுத்தி யவர்கள் நீதிமன்றம் வாயிலாக ஜாமீன் பெற்று சுதந்திரமாக வெளியே உலவுகின்றனர். எனவே, குற்றவாளிகளை உடனே தண்டிக் கும் வகையில் உடனடி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.எஸ் ராஜூ கூறியதாவது:

விபத்து ஏற்படுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ (அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல்) என்ற பிரிவில் வழக்கு பதியப்படுகிறது. இதற்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. மேலும் சில பிரிவுகளும் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் உடனே வெளியே வந்து விடுகிறார்.

இந்த விபத்துகளில் பாதிக்கப் பட்டவரின் குடும்ப பின்னணி பரிதாபமாக இருக்கும். அவர் களுக்கான இழப்பீடும் உடனடி யாக அல்லது போதுமானதாக இருப்பதில்லை. எனவே, குற்ற வாளிகளை உடனே தண்டிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்துக்கு அதிக இழப்பீடு கிடைக்கும் வகையிலும் உடனடி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை போக்கு வரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி கூறும்போது, “போதையில் வாகனம் ஓட்ட கூடாது என்பதை வலியுறுத்தி தற்போது விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப் படுத்தியுள்ளோம். துண்டு பிரசுரங் கள் விநியோகிக்கப்பட்டு வருகின் றன. போதையில் வாகனம் ஓட்டு பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க போக்குவரத்து போலீ ஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Monday, September 26, 2016

மனமே நலமா? - எங்கே போனது அந்தக் குழந்தையின் கரிசனம்?

டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
வெப்பத்தோடும் புழுக்கத்தோடும் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு குழந்தை முகத்தைச் சுழித்து, கண்களை இறுக மூடிக்கொண்டு, உச்ச ஸ்தாயியில் 'வீர் வீர்'ரென்று கத்த ஆரம்பித்தது. குழந்தையின் அம்மாவும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். குழந்தையின் அழுகை குறைந்தபாடில்லை. சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது வெறுமனே திகைத்து நின்றனர். அந்த அம்மாவின் முகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் வாடிக் கிடந்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பக்கத்தில் தன் தாயின் இடுப்பில் உட்கார்ந்திருந்த இன்னொரு குழந்தை, தன் வாயில் இருந்த ரப்பர் உறிஞ்சியை எடுத்து, அழுதுகொண்டிருந்த குழந்தையிடம் நீட்டியது. அழுத குழந்தை ஒரு கணம் அழுகையை நிறுத்தி, தனக்கு உதவி செய்யவந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தது. இந்த மகத்தான தயாள குணத்தைக் கண்ட நான், அந்தக் குழந்தையின் தாயிடம் குழந்தைக்கு எத்தனை வயது என்று கேட்டேன். இரண்டு வயது என்றார் அவர்!

மற்றொருவரின் மனநிலையை உணர்ந்துகொள்ளும் இந்த மானுடப் பண்பு, உளவியலில் ஒத்துணர்வு (empathy) எனப்படுகிறது. இது இரண்டாவது வயதிலேயே தோன்றிவிடுவது எத்தனை ஆச்சரியம்?

வளர்ச்சிக் கோலங்கள்

குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் புலன் சார்ந்த உடல், உளவியல் மாற்றங்கள் குறித்துப் பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் தரும் வியப்புகள் குறைவதேயில்லை. கருவில் உள்ள சிசுவுக்கு, ஆச்சரியப்படும் பல திறன்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. பார்வையைத் தவிர மற்ற புலன் உணர்ச்சிகள் யாவும், கருவில் இருக்கும்போதே வளர்ச்சி பெற்றுவிடுகின்றன.

வெளிக்காற்றை சுவாசித்த நாள் முதல், தன் தாயின் குரலைக் குழந்தையால் இனம் கண்டுகொள்ள முடிகிறது. மற்ற பெண்களின் குரலைவிட தன் தாயின் குரலை நீண்ட நேரம் கவனிப்பதிலிருந்து, இது தெரியவருகிறது. கருப்பையில் இருக்கும்போது தன் தாயின் குரலைக் கேட்பதால், அதைப் பின்னாளில் சரியாக அடையாளம் காணவும் முடிகிறது. இப்போதெல்லாம் கர்ப்பத்தின்போது, புத்திசாலித் தாய்-தந்தைகள் கருப்பையில் இருக்கும் குழந்தையுடன் பேசுவதும் தாலாட்டுப் பாடுவதும் வழக்கத்துக்கு வந்துவிட்டன.

இதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை தாயின் வாசனையை வைத்து, தன் தாயை அடையாளம் கண்டுகொள்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்குச் சுவையை உணரும் திறனும் உண்டு. இதனால் கர்ப்பக் காலத்தில் தாய் உண்ணும் உணவு வகைகளில், குழந்தைகளுக்குப் பின்னாளில் அதிக நாட்டம் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

பிறந்த முதல் சில ஆண்டுகளில் குழந்தைகளிடம் காணப்படும் உளவியல் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. மழலைக் குழந்தைகள் சுமார் 12 மாதங்களில் (‘அம்மா', ‘அப்பா' என்ற சொற்களைத் தவிர்த்து) கூடுதல் சொல்லைப் பேசும் ஆற்றலைப் பெறுகிறார்கள். ஐந்து வயதில் அதே குழந்தையால் கிட்டத்தட்ட வயது வந்தவர்களைப் போலவே தெளிவாகப் பேச முடிகிறது. அதாவது, நான்கே ஆண்டுகளில் எவரும் முறைப்படியாகக் கற்றுக்கொடுக்காமலே, இந்தப் பேச்சுத் திறன் வளர்ச்சி பெற்றுவிடுகிறது. இது குழந்தைப் பருவத்தின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

கேளா ஒலிகள்

பிறந்த சில மாதங்கள்வரை, உலகின் எல்லா மொழிகளில் உள்ள பேச்சு ஒலிகளையும் கற்றுக்கொள்ளும் ஆற்றல் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால், நாள் போகப்போக இந்த ஆற்றல் குறைந்துவிடுகிறது. பத்து மாதங்களில் தாங்கள் கேட்கும் மொழியை, அதாவது தனது தாய்மொழியில் உள்ள ஒலிகளை மட்டுமே, அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. முதல் 10 மாதங்களில் கேட்காத ஒலிகளை, திரும்ப ஒலிக்கும் திறனைக் குழந்தைகள் இழந்துவிடுகின்றன.

இதனால்தான் ஜப்பானியர்களால் ‘ர' என்ற ஒலியை உச்சரிக்க முடிவதில்லை; அவர்கள் ‘ர' என்ற ஒலியை, ‘ல' என்றே உச்சரிக்கிறார்கள். உதாரணமாக, ராதா என்ற பெயரை லாதா என்கிறார்கள். வங்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘வங்கம்' என்பதை ‘பங்கா' என்று சொல்வதும் இப்படித்தான். அவர்கள் ‘வ' ஒலிக்குப் பழக்கப்படவில்லை. வயது வந்த பின் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பவர்களின் ஆங்கில உச்சரிப்பு, பிரிட்டன் ஆங்கிலேயர்களின் உச்சரிப்புபோல ஏன் இருப்பதில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!

மனிதருக்குப் பேச்சுத் திறன் உடன்பிறந்த ஒன்று. ஆனால், வாசிப்புத் திறன் (படிப்பு என்பதும் வாசிப்பு என்பதும் வித்தியாசமானவை என்பதில் சந்தேகம் தேவையில்லை) அப்படி அல்ல; அது பெற்றுக்கொள்ளப்படும் பண்பு (வாசிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கிறார்கள்). எனவே, முறைசார்ந்த கல்வி வழியாகவே, வாசிப்பைக் கற்றுக்கொள்கிறோம்.

இரண்டாம் வயதிலேயே குழந்தைகளிடம் ஒத்துணர்வு உணர்ச்சி தோன்றிவிடுகிறது என்பதைத் தொடக்கத்தில் கூறியிருந்தேன். ஒத்துணர்வு என்பது ‘ஐயோ பாவம்' என்று அனுதாபப்படுவதில் இருந்து வித்தியாசமானது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒத்துணர்வு என்பது வேறு, பரிவு அல்லது இரக்கம் (sympathy) என்பது வேறு. மற்றவர் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து, அவர்கள் படும் வேதனையைத் தான் அனுபவிப்பதாக உணர்வதுதான் ஒத்துணர்வு. இதன் அடுத்த கட்டம்தான், அதைத் தீர்க்கத் தானாக உதவ முன்வருவது; இது பொதுநலப் பண்பு (altruism) எனப்படுகிறது.

இந்த இரண்டு மாபெரும் மானுட குணங்களும் நம்மோடு உடன்பிறந்தவை என்பதை, பேருந்தில் நான் கண்ட அந்தக் குட்டியூண்டு இரண்டு வயதுக் குழந்தை எனக்கு உணர்த்தியது. அதேநேரம், எந்தப் புள்ளியில் இந்த உணர்வை நாம் இழந்துவிடுகிறோம் என்பது தீவிரச் சிந்தனைக்குரியது.

- டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Sunday, September 25, 2016

காதல் வழிச் சாலை 02: பார்த்ததுமே பற்றிக்கொள்ளுமா?


தன்னுடன் படிக்கும் மாணவன் மீது நதியாவுக்கு ஏற்பட்டிருப்பது என்ன? நதியாவுக்கு மட்டுமல்ல, நதியாவின் வயதில் உள்ள இளைய சமூகத்தினருக்கு எதிர்பாலினத்தவர் மீது ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர்? ஈர்ப்பு. ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும் பார்த்ததுமே ஏற்படுகிற அழகான உணர்வே இந்த ஈர்ப்பு. ஆங்கிலத்தில் இதை ‘இன்ஃபாச்சுவேஷன்’ என்று சொல்வோம்.

தயக்கமும் வெட்கமும் கலந்த ஒரு குறும்புப் புன்னகை முகத்தில் குடிகொள்ளும். அவர்களை நினைக்கும்போதே உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவும். பசி மறந்துபோகும், தூக்கம் தொலைந்துபோகும். அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு காலைப் பொழுதும் மிகவும் ரம்மியமாகக் காட்சிதரும். அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அதனாலேயே வேறு எதையும் பார்க்கத் தோன்றாது. அவர்களது நடை, உடை, சின்னத் தவறு, செல்லக் கோபம் என்று எல்லாமே பிடித்துப்போகும்.

கண்டதுமே காதலா?

தன்னையே மறக்கிற அளவுக்கு ஒருவரைப் பிடிக்கிறதே, இது காதலா என்றால் நிச்சயம் இல்லை. கண்டதுமே காதல் சத்தியமாக வராது. திரைப்படங்களில் வரலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரலாம். ஆனால் வாழ்க்கை என்னும் முழுநீளப் படத்தில் கண்டதுமே காதல் பெரும்பாலும் சாத்தியமில்லை. இங்கே ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ இல்லை. கண்டதுமே ஈர்ப்பு மட்டும்தான் ஏற்படும்.

காதலுக்கும் ஈர்ப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. காதல் ஆழமானது. ஈர்ப்பு மேலோட்டமானது. காதல் புற அழகைத் தாண்டியும் ஆழமான நேசம் கொண்டது. பிடித்தவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு வைப்பதும், அவர்களின் சுக துக்கங்களில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களுக்காக விட்டுக்கொடுக்கத் தயங்காமல் இருப்பதுமே காதலாக அறியப்படுகிறது. ஆனால் ஈர்ப்பு புற அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அகம் எப்படி இருக்கும் என்ற தேடலோ அக்கறையோ இல்லாதது.

ஈர்ப்பு என்பது கண நேரப் பரவசமும் மகிழ்ச்சியும் தருவது. அதைக் காதலுடன் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம். அப்படியொரு குழப்பம்தான் நதியாவுக்கும். அதனால்தான் சக மாணவர்மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பை என்னவென்றே இனம் காணமுடியாமல் குழம்பினார். பருவ வயதின் இனிய இம்சைகளில் இந்த ஈர்ப்பு முதன்மையானது.

தீபாவளியின்போது நாம் கொளுத்தும் புஸ்வாணம் போன்றது ஈர்ப்பு. நெருப்புப் பற்றியதுமே சடசடவென தீப்பூக்கள் உயர்ந்து சிதறும். அடுத்த நொடியே அடங்கிப் போகும். அப்படித்தான் ஈர்ப்பும். அந்த வயதில் பட்டென்று பற்றிக்கொண்டு உடல் முழுக்கப் பரவசத்தைத் தரும். ஆனால் அதற்கு நீடித்த ஆயுள் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் அது மிகப் பெரிய உன்னத உணர்வு என்று நினைத்துப் புலம்புவார்கள்.

பொய்களும் அழகே

இன்னொரு விஷயம் தெரியுமா? காதல் உண்மையானது. அதற்குப் போலித்தனம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஈர்ப்புக்குச் சின்னச் சின்னப் பொய்களும் நடிப்பும் தேவைப்படும். எதிர்பாலினத்தவரைக் கவர வேண்டும், அவர்கள் முன்னால் ஹீரோ அல்லது ஹீரோயின் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக இல்லாத வித்தையை எல்லாம் செய்யச் சொல்லும். நம்முடைய இயல்பைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்கச் சொல்லும். நம் சுயத்தை இழந்து அல்லது மறைத்து நடிக்கிறோம் என்ற குற்றவுணர்வு அங்கே தோன்றாது. காரணம் ஈர்ப்பு என்பது மேலோட்டமானது. அந்த நேரத்து மகிழ்ச்சியை மட்டுமே வேண்டுவது.

ஈர்ப்பில் எல்லாமே உடனுக்குடன் தேவைப்படும். ஒரு நாள் பார்க்கவில்லை என்றால், பேசிக்கொள்ளவில்லை என்றால் அந்த நாளே நரகமாகத் தெரியும். பெரிதாக ஏதோவொன்றை இழந்தது போல சோகம் சூழும். பிரியும்போது பதற்றம் ஏற்படும். மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற பரிதவிப்பு தொடரும். இதெல்லாம் ஈர்ப்பின் விளைவுகள். ஆனால் காதல் அப்படியல்ல. விலகிச் சென்றாலும் நெருங்கி வருவதே காதல்.

எதிர்பாலினக் கவர்ச்சிதான் காதலுக்கும் ஆரம்பப் புள்ளி என்றாலும் அது பயணிக்கும் பாதை வேறு.

ஈர்ப்பில் எதற்கெடுத்தாலும் சந்தேகமும் பயமும் இருக்கும். அவன்/அவள் நம்முடையவராக நீடிப்பாரோ என்ற கவலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இதையெல்லாம் கடந்த நிலையே காதல்.

மலர்வதும் உதிர்வதும்

ஈர்ப்பு மேலோட்டமானது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். வாசுவும் கீதாவும் கல்லூரி நண்பர்கள். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள் அல்லது அப்படி நம்பினார்கள். கீதா அணிந்துவரும் ஆடைகள் வாசுவுக்கு மிகப் பிடிக்கும். வாசுவின் தெளிவான பேச்சுக்கு கீதா ரசிகை.

கீதா அணிந்துவரும் ஆடைகளில் மயங்கிய வாசுவுக்கு, கீதா ஒரு முன்கோபக்காரி என்பதும் அலட்சிய மனோபாவம் கொண்டவள் என்பதும் தெரியாது. வாசுவின் பேச்சில் மயங்கிய கீதா, அவன் தன் நண்பர்களுடன் இருக்கும்போது உதிர்க்கிற மட்டரகமான வார்த்தைகளை அறிந்துகொள்ளவில்லை. இருவருமே இருவரின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே அறிந்துவைத்திருந்தார்கள். காரணம் ஈர்ப்புக்கு அது மட்டும் போதும். நெகட்டிவ் சங்கதிகளைத் தெரிந்துகொள்ள விரும்பாதது பெரிய குற்றமல்ல. அதைத் தெரிந்துகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடலாம். காரணம் ஈர்ப்புக்கு ஆயுள் குறைவு. இருவரின் நெகட்டிவ் குணங்கள் தெரிந்த பிறகும் இருவருக்குள்ளும் புரிதல் தொடர்ந்தால்தான் அந்த ஈர்ப்பு காதலின் சாலையில் பயணிக்கும்.

அதனால் காதலையும் ஈர்ப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஈர்ப்பு வருவது ஒரு பூ மலர்வதுபோல மிக இயல்பானது. சில நாட்களில் அந்தப் பூ வாடிப்போய், புல்வெளியில் அழகாக உதிர்ந்தும் போகலாம். அதுவும் இயல்புதான். அதைப் புரிந்துகொண்டால் ஈர்ப்பு நல்லது!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

Saturday, September 24, 2016

தொலையாத இளமையின் வசீகரம்

படங்கள் உதவி: ஞானம்
இன்று போய் நாளை வா!- 35 ஆண்டுகள்

உங்களுக்கு ‘பெல்ஸ்' பேன்ட் ஏன் பிடிக்கும்?

இதுபோன்ற பல கேள்விகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். நமக்குப் பிடிக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்னாலும் யாரேனும் ஒரு இரண்டாம் நபர் அல்லது மூன்றாம் நபர் நேரடியாகவோ, முறைமுகமாகவோ காரணமாக இருக்கலாம்.

இந்தக் கேள்விக்கு உங்களில் பலர் பலவிதமான பதில்களைச் சொல்லக் கூடும். நான் கூறும் ஒரே பதில்... நடிகர் பாக்கியராஜ்!

சமீபத்தில் எல்விஸ் ப்ரெஸ்லியின் ‘கான்ட் ஹெல்ப் ஃபாலிங் இன் லவ்' பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது அவர் அணிந்திருந்த பெல்ஸ் பேன்ட்டின் மீது நினைவை நிறுத்தியது. அந்த பெல்ஸ் பேன்ட் என்னை பாக்கியராஜைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. பாக்கியராஜ் என்னை ‘இன்று போய் நாளை வா' படத்தை அசைபோட வைத்தார். அந்தப் படத்துக்கு இந்த ஆண்டு 35 வயது!

அது 2000களின் ஆரம்பம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்துவிட்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த காலம். அன்றைய நாட்களில் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்த ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சிதான்.

எஸ்.ராமகிருஷ்ணன் தன் கட்டுரை ஒன்றில் சொல்வதுபோல 'வேலையற்றவனின் பகல்' சுட்டெரித்துக்கொண்டிருந்த ஒரு நாள். ஏதோ ஒரு சேனலில் பாக்கியராஜின் ‘இன்று போய் நாளை வா' படம் ஒளிபரப்பாகியிருந்தது.

சினிமாக் கனவுகளும், கவிதை கிறுக்கும் ஆசைகளும் அப்போதுதான் முளைவிட்டிருந்தன. எனக்கு நினைவு தெரிந்து நான் ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனித்த முதல் படம் அது.

கருப்புச் சட்டை, வெள்ளை பேன்ட் அணிந்து கொண்டு தன் வீட்டின் முன் ராதிகாவுக்காகக் காத்திருக்கும் அந்த பழனிச்சாமி கதாபாத்திரம் மனதில் நின்றது. அதைக் காட்டிலும் அந்தக் கதாபாத்திரம் அணிந்திருந்த பெல்ஸ் பேன்ட் மீது இனம் புரியாத ஆசை உண்டானது.

இடுப்பில் இருந்து தொடை வரை ‘ப்ளீட்' வைக்காமல் இறுக்கமாகவும் பிறகு கணுக்கால்கள் வரை ஒரே சீராக வளர்ந்து, கணுக்கால் முடிகின்ற இடத்துக்குச் சற்றும் மேலிருந்து பாதம் வரை அகலமாக விரிந்து ‘எம்மிங்' செய்யப்பட்டிருக்கும்.

அப்படியான பேன்ட்டையும், கழுதைக் காது வைத்த கலர் சட்டைகளையும் அணிந்து திரிந்த 80களின் ‘யூத் ஃபீவரை' முழுமையாக ‘எக்ஸ்ப்ளாய்ட்' செய்த முக்கியமான படங்களில் ஒன்று... ‘இன்று போய் நாளை வா!'

ஒரு பெண். மூன்று இளைஞர்கள். அந்தப் பெண்ணின் மனதை வெல்வது யார் என்பது போட்டி. அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள். இடையில் ஒரு வில்லன். கடைசியில் சுபம்.

உணர்வு பூர்வமான காதல் திரைப்படமாகவோ அல்லது ஆக் ஷன் படமாகவோ வந்திருப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் உள்ள கதை. ஆனால் அப்படியான திரைப்படமாக வந்திருந்தால் அது நிச்சயம் தோற்றுத்தான் போயிருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பின்னியதால்தான் இந்தப் படம் இன்றளவும் ‘எவர்க்ரீன்' படமாக இருப்பதற்குக் காரணமாகிறது.

படத்தைத் தாங்குவது பாக்கியராஜ் மட்டுமே அல்ல, அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்களாக வரும் பழனிச்சாமி, ஜி.ராம்லி ஆகியோரும்தான். இந்தி தெரியாத நிலையில் நம்மில் பலரும் காமெடியாகச் சொல்லும் ‘ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா' என்ற ஒரு வரியே போதும். இந்தப் படம் இந்தி தெரியாதவர்கள் இருக்கும் வரை வாழும் என்பதில் சந்தேகமில்லை. ‘காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வான்' கதாபாத்திரத்தில் வாழ்ந்த கல்லாப்பெட்டி சிங்காரத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

அன்றைய நாட்களில் கோவை மாவட்டத்தில், இப்படத்தில் இடம்பெற்ற ‘மேரி ப்யாரி தில்கே ராணி' பாடல் ஒலிக்காத காலேஜ் கல்ச்சுரல்ஸ் எதுவுமே இல்லை என்ற ஒரு தகவலுண்டு. அந்தப் பாடல் காட்சியேகூட பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி.கல்லூரியின் ஆண்டு விழாவின்போது பாடப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.






இந்தப் படம் கோவையில் சக்கை போடு போட்டதற்குக் காரணம், இதில், முழுக்க முழுக்க பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, காந்திபுரம், நிர்மலா காலேஜ், விமன்ஸ் பாலிடெக்னிக், எனக் கோவை மாவட்டத்தின் அடையாளங்கள் பலவற்றை வசனங்களில் பயன்படுத்தியிருப்பார்கள். கோவையில் நடப்பது போன்ற கதை அமைந்திருந்தாலும், அந்த மாவட்டத்துக்குரிய விஷயங்கள் எதுவும் அவ்வளவாகக் காட்டப்படாதது ஒரு குறை.

நண்பர்கள் மூன்று பேரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவது, ராதிகாவிடம் லெட்டர் கொடுக்கும்போது வெங்கட் கதாபாத்திரம் பேசும் ஜெயகாந்தனின் நாவல் வரிகளைக் கொண்ட வசனம், சிகரெட் துண்டுகளை 'ஜெயா' என்ற பெயரின்

வடிவில் அடுக்கிவைத்து பாக்கியராஜ் சோகத்தில் திளைப்பது எனக் காட்சிகளில் பல சுவாரஸ்யங்கள் அழகாகக் கோர்க்கப்பட்டிருப்பது, நம்மைத் திரைக்கு வெளியே இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் இன்னொரு கதா பாத்திரமாக மாற்றிவிடுகிறது.

எதிர்வீடுகளின் இளம்பெண்கள் வாலிபர்களுக்குத் தேவதைகளாகத் தெரிவதும், அதே எதிர்வீடுகளின் ஆண்கள் இளம்பெண்களுக்கு ராஜகுமாரர்களாகத் தெரிவதும் இளமையின் வசீகரங்களில் ஒன்று.

அந்த வசீகரத்தை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட படம் இது. நீங்கள் இளைஞராகவோ அல்லது முதுமையின் வாசலில் இருப்பவராகவோ இருக்கலாம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது உங்களால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தால், கதையின் ஓட்டத்தில் உங்களால் லயிக்க முடிந்தால் உங்களுக்குள் அந்த வசீகரம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக அர்த்தம்!

Friday, September 23, 2016

Samsung Note 2 catches fire on flight to Chennai, DGCA asks flyers to be careful with all Samsung Note devices

TIMES OF INDIA 

NEW DELHI: A Samsung Note 2 phone emitted smoke after reportedly catching fire on a Singapore-Chennai flight of IndiGo on Friday morning when the plane was about to land.

The phone was kept in the overhead bin. "The crew noticed smoke from the bin and found the device was emitting smoke after possibly catching fire. They used fire extinguishers on it," said a spokesperson of Directorate General of Civil Aviation (DGCA).


"We advise flyers to exercise caution while flying with Samsung Note devices . They should either keep these devices switched off or not travel with them," said a DGCA spokesman.

An IndiGo statement said: "IndiGo confirms that a few passengers travelling on 6E-054 flight from Singapore to Chennai noticed the smoke smell in the cabin this morning (September 23, 2016) and immediately alerted the cabin crew on board.

 The crew quickly identified minor smoke coming from the hat-rack of seat 23 C and simultaneously informed the pilot-in-command who further alerted the ATC of the situation on board."

The airline added: "Taking precautionary measure, the cabin crew on priority relocated all passengers on other seats, and further observed smoke being emitted from a Samsung note 2 which was placed in the baggage (of a passenger) in the overhead bin. The crew discharged the fire extinguisher which is as per the standard operating procedures prescribed by the aircraft manufacturer, and quickly transferred the Samsung note 2 into a container filled with water in lavatory."

A Samsung spokesperson said: "We are aware of an incident involving one of our devices. At Samsung, customer safety is our highest priority. We are in touch with relevant authorities to gather more information, and are looking into the matter."

The aircraft made a normal landing at Chennai airport, and all passengers were deplaned as per normal procedure. The Samsung mobile will be further examined by the concerned departments. IndiGo has voluntarily informed the DGCA.

NEWS TODAY 02.01.2026