Wednesday, November 16, 2016

அன்றும் இன்றும்! எஸ்.வி.சேகர்

By மாலதி சந்திரசேகரன்  |   Published on : 16th November 2016 10:36 AM  |
தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான நடிகர், நகைச்சுவைப் படங்களில் கதாநாயகனாக நடித்து கோலோச்சி வரும்  நட்சத்திரம், சிறந்த தயாரிப்பாளர், இயக்குனர், புகைப்படக் கலைஞர், திரைக்கதாசிரியர், நாடகக் குழுவை (நாடகப்ரியா) தலைமை பொறுப்பேற்று வழிநடத்துபவர், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (Central Board of Film Certification), பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினர் என இப்படி பன்முகத்டுடன் சகலகலா வல்லவரான எஸ்.வி.சேகர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரைக் கண்டதுமே ‘நம் குடும்பம்’ தொடர் ஞாபகம் வந்தது. உற்சாகமாக பேச்சைத் துவக்கினோம்.
நம் குடும்பம் தொடரின், நீங்கள் சினிமா கதாநாயகனாக மிளிர வேண்டும் என்கிற எண்ணத்தில், உங்களின் மனைவியாக பாத்திரமேற்று நடிப்பவர் ‘டயட் கண்ட்ரோல்’ டயட் கண்ட்ரோல் என்று கூறிக் கொண்டு, தண்ணீரைக் குடிக்கச் சொல்லில் உங்கள் வயிற்றை நிரப்பி அனுப்புவாரே! அப்படி நிஜ வாழ்க்கையில் டயட் சிஸ்டம் உண்டா?’ 
நான் பொதுவாகவே எதையும் அதிகமாக சாப்பிட மாட்டேன். போதாத குறைக்கு பதினைந்து வருடங்களாக சர்க்கரை வியாதி வேறு சேர்ந்திருக்கிறது. எனவே உணவைச் சுருக்கமாக முடித்துக் கொள்வேன்.  நான் காபி பிரியன். ஒரு தம்ளர்
காபியை சர்க்கரை சேர்க்காமல், கால் கால் க்ளாஸ்களாக நான்கு தடவைகள் குடிப்பேன். என்னுடைய அன்றாட அட்டவணையைக் கூறுகிறேன். அதற்கு முன்பாக ஒன்றைக் கூற வேண்டும். நான் சுத்த சைவம். காரம் கூட சாப்பிட மாட்டேன். எப்போதாவது ஊறுகாய் சாப்பிடுவதாக இருந்தால் கூட, அதை நன்றாக கழுவி காரத்தை எடுத்து விட்டுத்தான் சாப்பிடுவேன்.
முதலில் காலை எழுந்தவுடன் ஒரு பெரிய தம்பளரில் வெந்நீர் குடிப்பேன். பின் குளித்து முடித்துவிட்டு, ஸ்வாமிக்கு பூ பறித்துக் கொண்டு வந்து, வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு காபி குடிப்பேன். அந்த காபி, ஹோட்டல் மினி காபியிலும் பாதிதான் இருக்கும். பிறகு சிற்றுண்டி வேளைக்கு இரண்டு தோசை சாப்பிடுவேன். பிறகு தேவைப்பட்டால் பதினொரு மணிக்கு காபி அல்லது வெஜிடபிள் சூப், சில சமயங்களில் மோர் குடிப்பேன். மதிய சாப்பாட்டுக்கு அரிசி உணவைத் தவிர்த்து விடுவேன். காய்கறி வகைகள் எடுத்துக் கொள்வேன். அப்போது மோர் குடிப்பேன். சாயந்திரம் ஸ்நாக்ஸ் டயத்துக்கு தாளித்த அரிசி பொரி ஒரு கப் உண்பேன். இரவு ஆகாரத்துக்கு இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு தோசை சாப்பிடுவேன். இரவு சுமார் பத்தரை மணிக்கு ஒரு கப் பால் குடித்துவிட்டு உறங்கப் போவேன். ஜுரம் வந்தால் மட்டும் தான் இட்லி சாப்பிடுவேன். எங்கள் வீட்டில் ‘டயட்’ என்றால் அது பால் தான். டோன்டு மில்க்தான் உபயோகப்படுத்துகிறோம். நான் வெள்ளைப் பண்டங்களான சர்க்கரை, அரிசி, மைதா மூன்றையுமே உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
சில சமயங்களில் விசேஷ நாட்களில் யாராவது இனிப்பு பண்டத்தினைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு நேராக வாஷ்பேசின் அருகில் சென்று விடுவேன். கொடுத்தவரின் மனத்தை நோகடிக்க விரும்பாமல், வாயில் போட்டுக் கொண்டு நன்றாக சுவைத்துவிட்டு பிறகு துப்பிவிடுவேன். இரண்டு பேரின் நோக்கமும் நிறைவேறிவிடுகிறது இல்லையா? 
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷம் என்பது வெளியில் இல்லை. தேடிப் போக வேண்டிய அவசியம் கிடையாது. நமக்குள்ளே இருக்கும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மனம் லேசாக இருந்தால், முகமும் மலர்ச்சியாக அழகாகத் தென்படும். இது என் தந்தை எனக்குக் கற்றுத்தந்த பாடம். 
மணல் கயிறு இரண்டாம் பாகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...
மணல் கயிறு சினிமா 1982-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து வெளியாகும் இப்படத்தில், முதல் பாகத்தில் நடித்த விசு, குரியகோஸ் ரங்கா, நான் மூவரும் அதே கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறோம். முதல் பாகத்தில் கிட்டுமணியாக நடித்த நான், நாரதர் நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த விசுவிடம், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் எப்படிப்பட்ட பெண் அமைய வேண்டும் என்பதற்கு எட்டு கண்டிஷன்கள் போடுவேன். இரண்டாம் பாகத்தில் என் மகள் (மணப்பெண்) எட்டு கண்டிஷன்களைப் போடுகிறாள். இது அடுத்த தலைமுறை பற்றிய கதையாக வருகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் (உலக திரைப்பட வரலாற்றில் என்று கூறலாமா என்று தெரியாது) முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து, ஒரே படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர்களே மீண்டும் இதில் நடிக்கிறார்கள் என்பது இதுதான் முதல் தடவை. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்க, மதன் குமார் இயக்கத்தில், தரன் இசையில், என் மகன் அஷ்வின் சேகர் கதாநாயகனாகவும், பூர்ணா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இதன் திரைக்கதையை நான் எழுதியிருக்கிறேன்.
தற்போது மொத்த நாடே நம் பிரதமரைப் பற்றித் தான் பேசுகிறது. நீங்கள் நம் பாரதப் பிரதமரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்?
பிரதமர் மோடிஜியை எனக்கு 2010-லிருந்தே பழக்கம். சோ அவர்கள் தான் எனக்கு மோடிஜியை அறிமுகப்படுத்தினார். சோ அவர்கள் என் மானசிக குரு. அடுத்த முறை நான் மோடிஜியை சந்தித்த போது, அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? நம்ம ராஜகுரு எப்படி இருக்கிறார்? என்றுதான். அடுத்ததாக பழக்கம் ஆன ஒரு மாதம் கழித்து ஒரு நாள், நான் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக ஃபோன் செய்தேன். அப்போது அவர் குஜராத்தில் இருந்தார். போனை அவருடைய சீஃப் செகரட்டரி தான் எடுத்தார். என்னைப் பற்றிய தகவலைத் தெரிவித்ததும், என் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டு, மோடிஜி மீட்டிங்கில் இருப்பதால் அவரிடம் தெரிவிப்பதாகக் கூறினார். நம்பராவது வாங்கிக் கொண்டாரே என்று நான் திருப்தி பட்டுக் கொண்டேன். ஆனால் மாலை சுமார் ஏழு மணி அளவில் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. எடுத்தவுடன் ‘சேகர்ஜி, ஐம் மோடி ஹியர்’ என்றார். அதையெல்லாம் விட அவர் கூறியதில் என்ன ஆச்சரியமான விஷயம் என்றால், ‘நீங்கள் ஃபோன் செய்தீர்கள் பதிலுக்கு நான் செய்கிறேன். இது ஒரு அடிப்படை மரியாதை’ என்றவுடன் நான் ஆடிப் போய் விட்டேன். 
பிறகு ஒருமுறை குஜராத்தில் ஒரு கல்யாணத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அப்போது நான் மோடிஜிக்கு போன் செய்து, நாங்கள் மூன்று நாட்கள் குஜராத்தில் இருப்போம். ஏதாவது ஒருநாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டேன். அவர், சரி நாளை மதியம் மூன்று மணிக்கு வாருங்கள் என்று கூறினார். அடுத்த நாள் காலை எனக்கு பத்து மணிக்கு ஃப்ளைட். ஒரு மணிக்கு குஜராத் போய்விடலாம். மூன்று மணிக்கு அவரை சந்தித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால் மறுநாள், ஃப்ளைட் மூன்று மணிக்குத்தான் கிளம்புவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் அறிவித்தார்கள். நான், உடனே அவருக்கு SMS அனுப்பினேன். அதில தமிழ்நாட்டில் சீதோஷ்ண நிலை சரியில்லாததால் ஃப்ளைட் இங்கிருந்து கிளம்புவதில் தாமதமாகிறது. நீங்கள் கொடுத்த நேரத்தில் உங்களை சந்திக்க முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. பெரிய மனது செய்து வேறு அப்பாயிண்ட்மெண்ட் தர முடியுமா? என்று கேட்டிருந்தேன். அடுத்த நாள் வாருங்கள் என்று எழுதி நேரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். இன்னொருத்தராக இருந்தால், ‘நான் அவகாசம் கொடுத்தும் உன்னால் வர முடியவில்லையா? என்று கோபித்துக் கொண்டு பதில் கூட சொல்ல மாட்டார்கள். அவர் பிறரை வணங்கும் போது கூட உடலை வளைத்து, சிரம் தாழ்த்தி தான் வணங்குவார். அவ்வளவு பண்பானவர், பணிவானவர், அன்புள்ளம் கொண்டவர். நாட்டு நலனில் அக்கறை கொண்டவர். அவரை பிரதமராக அடைந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.’ என்று முடித்தார்.
கலைவாணர் விருது, கலைமாமணி, வசூல் சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளை வாங்கியிருக்கும் எஸ்.வி.சேகரிடம் மணல் கயிறு 2 வெற்றி பெற வாழ்த்திவிட்டு விடை பெற்றோம்.
- மாலதி சந்திரசேகரன்

எல்லா செலவுகளுக்கும் ரூ.4,500 போதுமா? விரலில் மை வைப்பதில் எழும் சந்தேகங்களும், கேள்விகளும்!

By DIN  |   Published on : 16th November 2016 10:47 AM  
சென்னை: வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி வேறு நோட்டுகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?
*ஒரு முறை விரலில் மை வைக்கப்பட்டவர் மறுமுறை எப்போது வந்து வங்கியில் பணம் எடுக்கலாம் என்பதை நிர்ணயித்துள்ளார்களா?
* குடும்பத்தில் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் கையில் இருக்கும் பணத்தை வங்கிக்குச் சென்று மாற்றி வருவார் எனில், அவரது விரலில் மை வைக்கும் பட்சத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும், கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து வங்கிக்குச் சென்று வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமா?
*கர்ப்பிணியின் மருத்துவ செலவுக்காக கையில் வைத்திருக்கும் பணத்தை அவரது கணவர் மாற்றி வருவதற்கு இந்த மையால் தடை ஏற்படுமாயின், கர்ப்பிணியே நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலை உண்டாகுமா?
* இரண்டு வயதான தம்பதிகள் இருக்கும் வீடுகளில் ஒருவர் முடியாமல் இருந்தால், மற்றொருவர் மட்டுமே வங்கிக்குச் சென்று பணத்தை மாற்றி வருவார். அப்படி இருக்கும்போது, அவருக்கு மை வைத்தால், முடியாமல் இருக்கும் மற்றொரு முதியவரை கட்டிலோடு வங்கிக்கு தூக்கிச் செல்ல வேண்டுமா?
* வாடகை, மளிகை, பள்ளிக் கட்டணம் என அனைத்தையும், இந்த வங்கிகள் ஒரே ஒரு முறை கொடுக்கும் 4,500 ரூபாயில் செலுத்தி விட முடியுமா? அல்லது வாடகை, ரயில், பேருந்து கட்டணம், மளிகை என எல்லா வற்றையும் மத்திய அரசு இந்த மாதத்துக்கு மட்டும் தள்ளுபடி செய்து விடுமா?
இந்த கேள்விகளுக்கு மை வைக்கும் முடிவை அறிவித்தவர்களே பதிலையும் சொல்ல வேண்டும்.

பண அட்டை மோசடிகள்

By எஸ். ராமன்  |   Published on : 16th November 2016 12:39 AM 
கடந்த அக்டோபர் மூன்றாவது வாரம் வெளியான திடுக்கிடும் பத்திரிகை செய்தி, வங்கி வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது எனலாம். அந்த செய்தியை கேட்டு, பல வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குகளை சரிபார்க்க வங்கி கிளைகளுக்கு படை எடுத்தனர்.
32 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். அட்டைகளின் (Debit cards)   ரகசிய குறியீட்டு தகவல்கள் திருடப்பட்டிருப்பதற்கான(hacking of confidential data) சாத்திய கூறுகள் உள்ளன என்ற பீதி அளிக்கக் கூடிய செய்திதான் அது.
அம்மாதிரி திருட்டு மூலம், 19 வங்கிகளை சேர்ந்த 641 வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, ரூ.1.3 கோடி அளவு நிதி திருட்டு நடந்திருக்கிறது என்று பின்னூட்டு செய்திகள் சம்பவத்தை ஊர்ஜிதம் செய்தன. இந்திய வங்கிதுறையின் அட்டை மோசடி சரித்திரத்தில் இது ஒரு மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக கருத்தப்படுகிறது.
அட்டையின் எண், துவக்க மற்றும் காலாவதி தேதி, ரகசிய குறியீட்டு எண் ஆகிய திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி, நகல் அட்டைகள்(Cloned cards)   உருவாக்கப்பட்டு, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், நிலுவையில் இருக்கும் பணத்தை திருட அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் தங்கள் வங்கி கணக்கை தினமும் ஆராய்ந்து, விழிப்போடு செயல்பட்ட சிலரின் புகாரால் இந்திய வங்கிகள் விழித்துக்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சந்தேகத்துக்குள்ளான பல லட்சம் அட்டைகள் வங்கிகளால் உடனடியாக முடக்கப்பட்டன. ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனடியாக மாற்றும்படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். முடக்கப்பட்ட அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகள், எந்தவித கட்டணமும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
ஸ்டேட் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பாங்க், ஆந்திரா பாங்க் உள்பட பல அரசு வங்கிகள், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ், யெஸ் பாங்க் போன்ற தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருடப்பட்ட தொலைபேசி மற்றும் இ-மெயில் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி, வங்கிகள் கேட்பதுபோல், பணத்தை எடுப்பதற்கு தேவைப்படும் மேலும் சில நுண்ணிய விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்டு, மோசடிக் கும்பல் வேகமாக செயல்பட்டிருக்கிறது. வங்கிகள் என்று ஏமாந்து, மோசடிக்காரர்களிடம் தங்களை பற்றிய முழு விவரங்களை அளித்தவர்கள், இந்த சம்பவத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
திருட்டு, இயற்கை சீற்றங்கள் ஆகிய எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து தாங்கள் சேமித்த பணத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் வங்கி கணக்குகளை நாடியவர்களுக்கு, இந்நிகழ்வு கேள்வி குறியாகிவிட்டது.
இந்திய வங்கிகளின் ஏ.டி.எம். இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் தளத்தின் (Hitachi Payment Services Platform)  பாதுகாப்பு அரண்களை  (Anti virus system),  சில தீய மென்பொருள்கள்(Malware)   மூலம் உடைத்து, ஊடுருவுவதில், மோசடிக்காரர்கள் இம்முறை வெற்றி கண்டிருக்கின்றனர் என்பதை இதுவரை வெளியான தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.
அரண்மனையை (ATM ser vers)  சுற்றி எதிரிகள் நுழைய முடியாத வகையில், பெரும் முதலைகள் (Anti virus program) அடங்கிய அகழிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், முதலைகளை விட கொடிய விஷ ஜந்துக்களை (Malware)  பயன்படுத்தி, அவைகளை செயல் இழக்க செய்து, அரண்மனைக்குள் எதிரிகள் நுழைவது போன்ற நிகழ்வுதான் இது.
ஏற்கெனவே நிலுவைத் தொகை இருக்கக்கூடிய வங்கி கணக்குகள் சார்ந்த அட்டைகள் மட்டும்தான் (Debit cards)  இந்த மோசடி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. கடன் சார்ந்த அட்டைகளுக்கு (Credit cards) எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் தகவல் அறிக்கையின்படி, ஸ்ஹிம்மர் ஸ்டிக்கர் போன்ற மென்பொருள் வைரஸ், இந்த நிகழ்வின் வில்லனாக, மோசடிக் கும்பலால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்புலங்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் ஆகியவைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, இந்திய பணப்பட்டுவாடா வாரியத்தால் (Payment council of India)  நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வங்கி வாடிக்கையாளர்களிடையே இரு வகையான அட்டைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. பணப்பரிமாற்ற நிகழ்வுகளில், மின்காந்த தகடுகள் (Magnetic stripes)  பொருத்தப்பட்ட அட்டைகளில் அடங்கியிருக்கும் தகவல் பரிமாற்றத்தின்போது, அத்தகவல்களை எளிதாக கடத்திவிட முடியும்.
நுண் தகடுகள் (Micro chips) பதிக்கப்பட்ட மற்றொரு வகையான அட்டைகளில், தகவல்கள் சங்கேத முறையில் பரிமாறப்படுவதால், இம்மாதிரியான அட்டைகளிலிருந்து தகவல் திருட்டு அவ்வளவு எளிதல்ல.EMV (Europay, Master, Visa)  என்று சுருக்கமாக அழைக்கப்படும் அட்டைகளில் இத்தகைய பாதுகாப்பு வசதி அடங்கியிருக்கிறது.
வங்கி அட்டை தகவல் திருட்டு குற்றங்கள், நம் நாட்டுக்கு மட்டுமான தனிப்பட்ட பிரச்னை இல்லை. சமீபத்தில், உலகின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஒரு மாதிரி சர்வேயின்படி (Sample survey)  டெபிட், கிரெடிட் மற்றும் டிராவல் அட்டை வைத்திருப்பவர்களில் 30 சதவீதத்தினர், கடந்த ஐந்தாண்டுகளில் ஏதாவது ஒரு தருணத்தில் அட்டையின் தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் 17 சதவீதத்தினர், டெபிட் அட்டை தகவல் திருட்டுக்கு பலியானவர்கள் ஆவர்.
மூன்றாவது நபரால் விளையும் அட்டையின் தகவல் திருட்டால், நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கும் செலவினங்களை தவிர, தங்கள் வாடிக்கையாளர்களையும் வேகமாக இழக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கணக்குகளை மேற்கொண்டு தொடர வாடிக்கையாளர்கள் உணர்வுபூர்வமாக பயப்படுவதே அதற்கு முக்கிய காரணமாகும். இந்த பய உணர்வுக்கு Back-of-wallet syndrome என்று பெயர். ஒரு முறை பாதிக்கப்பட்டவர்கள், இம்மாதிரி நவீன சாதனங்களின் மீது அவர்கள் இழந்த நம்பிக்கையை மீட்க நீண்ட காலம் பிடிக்கும்.
2015-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 2016 நிறுவனங்களில் இம்மாதிரியான தகவல் திருட்டுகள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்ஸிகோ (56%), பிரேஸில் (49%), அமெரிக்கா (47%) ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.
வாடிக்கையாளர்களின் பணத்தை நிர்வகிக்கும் நிதி நிறுவனங்கள் மட்டும் இம்மாதிரி மோசடி நிகழ்வுகளுக்கு முழுக் காரணம் அல்ல. வாடிக்கையாளர்களின் தவறான பழக்க வழக்கங்களும் மோசடிகளுக்கு வித்திடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2014-இல், அமெரிக்க பல்பொருள் அங்காடியான டார்கெட்டில் (Target) நிகழ்ந்த தகவல் திருட்டு பெரிய அளவில் பேசப்பட்டது. பில் தொகையை, தங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்திய 40 மில்லியன் வாடிக்கையாளர்களின் அட்டை தகவல்கள், மோசடிக்காரர்களால் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களிலிருந்து திருடப்பட்டன.
வாடிக்கையாளர்கள் அட்டையை பயன்படுத்தும்போதே மோசடிக்காரர்கள் அட்டை தேய்க்கப்படும் இயந்திரங்களில் முன்கூட்டியே பதித்து உலவ விட்டிருந்த தீய மென்பொருள்கள், வாடிக்கையாளர்களின் அட்டை தகவல்களை ரஷியாவில் இயங்கிக் கொண்டிருந்த அவர்களின் கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொண்டிருந்தன.
இம்மாதிரி மோசடிகளை தடுப்பதற்காக டார்கெட் நிறுவனம், நிகழ்வுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தீய மென்பொருள்களை கண்டறிந்து தடுக்கும் மென்பொருளை தங்கள் கம்ப்யூட்டர்களில் பதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தின் காரணங்களுக்கான ஆய்வுகளின்போது, டார்கெட் நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் விசாரிக்கப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஒப்படைத்த பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வங்கிகளை சார்ந்ததாகும். அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செயல் முறைகளில் போதிய அரண்களை அமைத்து, அவைகளின் செயல்பாடுகளை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்துவதில் வங்கிகள் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தற்போது பல பண பரிவர்த்தனை செயல்பாடுகள், வங்கிகளால் வெளி நிறுவனங்களுக்கு "அவுட் சோர்ஸ்' செய்யப்படுகின்றன. அம்மாதிரி செயல்பாடுகளின் பாதுகாப்பு பற்றிய முழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
அட்டை மோசடிகளை தடுக்கும் விஷயத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவும் பின் நம்பர்களை வங்கிகளின் வழிமுறைகளின்படி அடிக்கடி மாற்றி அவைகளுக்கு உரிய ரகசியத்தை பாதுகாக்க வேண்டும்.
பண பரிவர்த்தனைகளை தெரியப்படுத்தும் வங்கி குறுந்தகவல் வசதியை கேட்டுப் பெற்று, பெறப்படும் குறுஞ்செய்திகளை கவனமாக ஆராய்ந்து, தவறான பரிவர்த்தனைகளை வங்கிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். பணம் எடுக்கும்போது அறிமுகமாகாத அந்நியர்களின் உதவி பெறுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சமீபத்திய நிகழ்வுகளின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மோசடிகளை தடுக்கும் சாதனங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியிருக்கும் செய்தி வரவேற்கத்தக்கதாகும்.
இம்மாதிரி சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கிகளின் கூட்டமைப்பும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிந்தித்து செயல்படுத்தினால்தான் நவீன பண பட்டுவாடா சாதனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை கூடும்.
டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனைகள், கருப்பு பண புழக்கத்தை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வல்லமை படைத்தவை. அதற்குரிய அடித்தளம், அம்மாதிரி பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடையே பரப்புவதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

ராஜதந்திர நெருக்கம்!

By ஆசிரியர்  |   Published on : 16th November 2016 12:40 AM  |   
நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, அரசுமுறைப் பயணமாகச் சென்ற முதல் நாடு ஜப்பான்தான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு என்பது நெருக்கமானதும், நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டதுமான ஒன்று. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு உதவ முன்வந்த நாடும் ஜப்பான்தான். அரசு நிறுவனமான எச்.எம்.டி. கைக்கடிகாரம் தயாரிக்க முற்பட்டபோதும் சரி, மாருதி கார்கள் தயாரிக்க முடிவெடுத்தபோதும் சரி, நமக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கி இந்தியாவின் தொடக்க காலத் தொழில் வளர்ச்சியில் கணிசமாக பங்காற்றி இருக்கும் தேசங்களில் ஜப்பானும் ஒன்று. இந்தப் பின்னணியில்தான், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தை நாம் பார்க்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தில், ஜப்பானுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தாலும்கூட, அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது என்னவோ, இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம்தான். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்த முறையும் கையெழுத்தாகாது என்று அனைவரும் கருதி இருந்த நிலையில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் காட்டிய முனைப்பால், ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் ஜப்பான் இதுவரை அணுசக்தி உடன்பாடு செய்துகொண்டதில்லை. இந்தப் பிரச்னைதான் இத்தனை ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கு இடையேயும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம். அந்த முட்டுக்கட்டை சாதுர்யமாக இப்போது அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.
இந்த உடன்படிக்கை கையெழுத்தாகி இருப்பதாலேயே ஜப்பானின் துணையோடு இந்தியாவில் நிறைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை. அதற்கு முதலீடு, அரசியல் ரீதியிலான முடிவுகள், மக்கள் எதிர்ப்பு என்று பல பிரச்னைகளை எதிர்கொண்டாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடன்படிக்கையில் ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா எந்தக் காரணத்திற்காகவும் அணுஆயுத சோதனை நடத்த முற்பட்டால், இந்த அணுசக்தி உடன்பாடு உடனடியாக ரத்தாகிவிடும் என்பதுதான் அது.
பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருந்தாலும்கூட, இந்த உடன்படிக்கையால் ஜப்பானிடமிருந்து தொழில்நுட்பக் கூட்டுறவு எல்லா துறைகளிலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, உலகில் நிறுவப்படும் எந்தவொரு அணுமின் உலையாக இருந்தாலும் அதில் முக்கியமான பாகங்களும், சில அடிப்படைத் தொழில்நுட்பமும் ஜப்பானியர்களுடையதுதான். அதனால், எந்தவொரு நாட்டுடன் அணுமின் உற்பத்திக்கான முயற்சியில் நாம் இறங்கினாலும் இந்த ஒப்பந்தம் தேவைப்படுகிறது. அது அமெரிக்காவோ, பிரான்úஸா, ஏனைய நாடுகளோ, அவர்களிடமிருந்து அணுமின் உலைகளை வாங்குவதற்கு ஜப்பானின் சம்மதம் தேவைப்படுகிறது.
அடுத்தபடியாக, நாம் பாரீஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். அதன்படி, கரியமில வாயுவைக் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டும். சூரிய மின்சக்தியும், காற்றாலை மின்சாரமும் மட்டுமே நமது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு, ஆபத்துகள் நிறைந்த அணுமின்சக்தியைத்தான் நாம் நம்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அணுமின்சக்தி உடன்படிக்கை மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையே இன்னும் பல முக்கியமான உடன்படிக்கைகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும், முதலீடும் கணிசமாக அதிகரிக்க இந்த அரசுமுறைப் பயணம் வழிகோலி இருக்கிறது. ஏனைய உலக நாடுகள் அனைத்தையும்விடக் குறுகிய காலத்தில், மிக அதிகமான வர்த்தக உதவி ஜப்பானுடன் மேம்பட்டிருக்கிறது. ஜப்பானின் உதவியும் முதலீடும் சேர்ந்து ஆண்டொன்றுக்கு 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33,750 கோடி) எனும்போது, இது சீனா போன்ற நாடுகளைவிட மிக அதிகம்.
ஏனைய நாடுகளுடனான தொடர்பைவிட, ஜப்பானுடனான நமது தொடர்பு சற்று வித்தியாசமானது, ஆக்கபூர்வமானது. தொழிற்பேட்டைகளையும் "கன்டெய்னர்' முனையங்களையும் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் உருவாக்குவதில் ஜப்பானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் இந்தியாவுக்கு பலமான அடித்தளத்தையும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் உற்பத்திக்கு வழிகோலும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதையும் ஜப்பான் உறுதி செய்கிறது. பொலிவுறு நகரங்கள் நிர்மாணிப்பது, அதிவேக ரயில்களை இயக்குவது உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நாடும் ஜப்பான்தான்.
மோடி - அபே கூட்டு அறிக்கையில் தென்சீனக் கடல் பிரச்னை குறித்துக் கூறியிருப்பது சீனாவைக் கோபப்படுத்தக்கூடும். ஆனால், இந்தியா அணுசக்தி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சேர்வதை எதிர்ப்பதிலும், பயங்கரவாதிகள் ஹபீஸ் சையது, மசூத் அஸார் ஆகியோருக்கு எதிரான தடை குறித்தும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுக்கும்போது, இந்தியாவும் முக்கியமான பிரச்னைகளில் எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட இருக்கும் சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு நெருங்கிய நண்பர்கள் தேவைப்படுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான், பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் அணுகப்பட வேண்டும்!

"ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால் ஊழலை ஒழித்துவிட முடியாது'

By DIN  |   Published on : 16th November 2016 12:28 AM  |   
புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால், ஊழலுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் கய் சோர்மன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறும் இந்திய அரசின் முடிவானது, புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கை ஆகும். ஆனால் இந்நடவடிக்கையால் ஊழலுக்கு முடிவு கட்டி விட முடியாது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையும், புத்திசாலித்தனமானதுதான். இருந்தபோதிலும், இந்நடவடிக்கையானது வர்த்தக செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
அதிக அளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட பொருளாதாரத்தில் ஊழல் எப்போதும் மிகுந்து இருக்கும். ஊழலை கட்டுப்படுத்துவதற்கு விதிகளை தளர்த்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றார் கய் சோர்மன்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறை முன்னாள் முதன்மை ஆலோசகரும், பிரபல பொருளாதார நிபுணருமான இலா. பட்நாயக் கூறியபோது, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி திடீரென செல்லாது என்று அறிவித்திருப்பதற்கு பல்வேறு நோக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலவரத்தை எப்படி கையாள்வது? இதற்கு தீர்வு காண்பதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம்? என்ற திகைப்பில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகளவு பணத்தை வைத்திருப்போர் உள்ளனர்.
அதேபோல் புதிதாக வெளியிடப்படும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை இனிமேல் ஊழலுக்கோ அல்லது பதுக்கி வைக்கவோ பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், இதுபோன்று மீண்டும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க டாலர்கள், தங்கம் அல்லது வைரம் ஆகியவற்றை சட்டவிரோத செயலுக்கு அதிகளவுக்கு பயன்படுத்தப்படலாம் என்றார் பட்நாயக்.

Tuesday, November 15, 2016

பணம் எடுப்போர் விரலில் 'மை'- ரூபாய் நோட்டுகளை மாற்ற மத்திய அரசு புதிய கட்டுப்பாடு


ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பணம் எடுப்பவர்கள் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில் பணப் புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப் பட்டது.

இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி:

1. பழைய ரூ.1000, 500 மாற்றுவோரின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும்

2. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்பதாலேயே கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க 'மை' நடவடிக்கை

3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.

4. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

5. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம் செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

6. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும் ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.

7. கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த இரண்டு பேரில், நீங்கள் உண்டா?


உலக நீரிழிவு நோய் நாள்: நவ. 14

பரபரப்பான பணி அவருக்கு. எப்போதும் அலுவலகம், களப்பணி என்று 24 மணி நேரமும் டென்ஷன்தான். இத்தனைக்கும் அவர் வேலை பார்த்தது மருத்துவத் துறை. நீரிழிவு நோய் இருப்பது அவருக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?, சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் அது என்ன பாடுபடுத்தும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த நீரிழிவு நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார்.

‘அடப் போகும்போது என்னத்த அள்ளிட்டுப் போகப் போறோம், பாக்காலாம்ங்க. வாயைக் கட்டுப்படுத்திக்கிட்டு எப்படிங்க இருக்க முடியும்; அப்படி ஒரு வாழ்க்கைத் தேவையா’ என்று சொல்லி எந்த உணவுக் கட்டுப்பாடுமில்லை; பரபரப்பு, டென்ஷனில் இருந்து அவர் தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை. விளைவு, ஒரு நாள் நள்ளிரவில் கடுமையான மாரடைப்பு. மனைவியையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார்.

நீரிழிவு நோய் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அந்நோய் இருப்ப வர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடம்பில் வேறு ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடித்ததாகத்தான் பலரும் சொல்வார்கள். அதற்குள் உடலில் நீரிழிவின் பாதிப்புகள் ஏற்கெனவே உடலில் தொடங்கியிருக்கும்.

குழந்தைகளும் விதிவிலக்கல்ல

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கணிசமான மாணவர்களுக்கு - அதிலும் வளரிளம் மாணவிகளுக்கு ‘டைப் 2’ நீரிழிவு நோய் வருவதற்கான தொடக்கநிலை சாத்தியக்கூறு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றமும், தவறான உணவுப் பழக்கமும்தான்.

இந்தக் காலக் குழந்தைகள் உணவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், நொறுக்குத்தீனியை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாய்க்குள் நுழையாத பெயர் கொண்ட நொறுக்குத்தீனிகளின் பட்டியல் நீளமானது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இவற்றைத் தின்கிறார்கள். போதாததற்கு சக்கை உணவையும் (Junk food) இஷ்டம்போல் வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். குளிர்பானங்களையும் விட்டுவைப்பவதில்லை. சில உணவகங்களில் ‘காம்போ ஆபர்’ என்ற பெயரில் சக்கை உணவுடன் விலை மலிவாகவோ அல்லது இலவசமாகவோ தரப்படுகிறது.

விளையாட்டு அவசியம்

குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளியிலிருந்து வந்தவுடன் டியூஷன். பின்னர் ஹோம் ஒர்க், டியூஷன் ஹோம் ஒர்க் முடிக்கவே இரவு வெகு நேரமாகிவிடுகிறது. பிறகு எப்போது விளையாடுவது? பள்ளியிலும் விளையாட்டு பீரியடின்போது போர்ஷன் முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக, படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 80 விழுக்காடு மாணவர்கள் வாரத்தில் ஒருநாள்கூட வீட்டுக்கு வெளியில் விளையாடுவதே இல்லையாம். இவையெல்லாமே குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும், பின்னாளில் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லவேண்டும். வீட்டிலும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய வைக்கவேண்டும். உடல் நலமாக இருப்பதற்கு அளவான, சரிவிகித உணவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைக் குழந்தை களுக்குப் புரியவைக்க வேண்டும். இதன்மூலம் நீரிழிவு இளவயதில் எட்டிப்பார்ப்பதைத் தடுக்க முடியும்.

தேவை துரித நடவடிக்கை

நீரிழிவு நோயைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி 40 வயதை நெருங்கும்போது நீரிழிவுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதுதான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது தொடர வேண்டும். ஒருவேளை நீரிழிவு இருந்தால், தொடக்க நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். நீரிழிவுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்வது, நீரிழிவின் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இதற்கான மருந்து மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைத் துரிதப்படுத்தா விட்டால் 2040-ல் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 64 கோடியாகிவிடும் என்று ‘உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு’ தெரிவிக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், தகுந்த உணவு பழக்கம் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது அதன் பக்கவிளைவுகளிலிருந்து தடுத்துக்கொள்ளவோ முடியும்.

நீரிழிவு நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ளாததால் ஏற்படும் பக்கவிளைவுகளைச் சமாளிக்க மிகுந்த கஷ்டப்பட வேண்டியதை நினைக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தப் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய் நமக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நோய் உறுதிப்படுத்தப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு நீரிழிவு நோயாளிகளில், நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்.

கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

NEWS TODAY 24.05.2026