Wednesday, March 22, 2017

ரூ. 9க்காக பணி நீக்கம் : கண்டக்டருக்கு பணப்பலன்கள்

மதுரை: பணியின்போது பையில் 9 ரூபாய் கூடுதலாக இருந்ததாக கூறி, பணி நீக்கம் செய்யப்பட்ட கண்டக்டருக்கு முந்தைய கால பணப்பலன்களை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் ராஜூ என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். பணியின்போது 'டிக்கெட்' பையில் 9 ரூபாய் கூடுதலாக இருந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்து, நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது. 

ராஜூ விளக்கம் அளித்தார். 2001ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தில் ராஜூ மனு செய்தார்.நீதிமன்றம், 'பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கவில்லை. பணி நீக்க காலத்தில் வருவாய் இல்லை என்பதை மனுதாரர் நிரூபிக்க தவறிவிட்டார். இதனால் முந்தைய காலத்திற்குரிய சம்பளம் வழங்க வேண்டியதில்லை,' என 2016 செப்.,2 ல் உத்தரவிட்டது. 2016 மார்ச் 31ல் பணி ஓய்வுக்குரிய வயதை ராஜூ அடைந்தார்.

 தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் ராஜூ மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு:மனுதாரர் மீதான குற்றச்சாட்டை பொறுத்தவரை, தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை என்ற தொழிலாளர் நீதிமன்ற உத்தரவு ஏற்புடையதல்ல. மனுதாரர் தவறு செய்ததை போக்குவரத்து கழக நிர்வாகம்தான் நிரூபிக்க வேண்டும். அதை நிரூபிக்கவில்லை. தொழிலாளர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரருக்கு முந்தைய கால பணப்பலன்களை நிர்வாகம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை போக்குவரத்து கழக நிர்வாகம் 45 நாட்களில் நிறைவேற்றாவிடில், தொழில் தகராறு சட்டத்தின் கீழ் மனுதாரர் உரிய இடத்தில் புகார் செய்யலாம்.
அதன் அடிப்படையில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ஏ.டி.எம்.மில் சரியாக அச்சிடப்படாத ரூ.500 நோட்டுகள்




ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பரோடா வங்கி கிளையின் ஏ.டி.எம்., மிஷனில், ரூ.10 ஆயிரம் பணம் எடுத்த அல்டாப் சாகி அதிர்ச்சியடைந்தார். அவர் எடுத்த பணத்தில் சரியாக அச்சிடப்படாத ரூ.500 மதிப்புள்ள 6 கரன்சி நோட்டுகள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி கிளையில் புகார் அளித்து விசாரணைக்கு பின் மாற்று நோட்டுகளை பெற்றுள்ளார்.
மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்

மதிப்பெண் சான்றிபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும். மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.

இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்து மாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்.

- நமது நிருபர் -
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு ஏப்ரல் 1 முதல் வினியோகம்

தமிழகத்தில், ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஐந்து பிரிவுகளில் கார்டு அச்சிடும் பணி, முழு வீச்சில் நடக்கிறது. அதை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தொகுதி மக்கள் முற்றுகையிட்டு வருவதால், அவர்கள், சென்னையில் முகாமிட்டு உள்ளனர். இதனால், ஸ்மார்ட் கார்டு வினியோகத்துக்கு, அவர்கள் தேதி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், அடுத்த மாதம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்காக, மேற்கண்ட நபர்களிடம், முன்கூட்டியே தேதி பெற்று, அந்த விபரத்தை, இம்மாதம், 24ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, உயரதிகாரிகள் தெரிவித்தனர்.எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டால், 'பிசியாக இருக்கிறார்' என, அவரின் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அவர்களை அழைக்காமல், ரேஷன் கார்டுகளை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
செல்லாத நோட்டு: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு களை 'டிபாசிட்' செய்ய, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அவகாசம் அளித்துள்ளபோது, இந்தியர்களுக்கு ஏன், கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, 2016, நவ., 8ல் பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது, 2016, டிச., 30க்குள், செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்ளாதவர்கள், 2017, மார்ச், 31 வரை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என, அறிவித்தார்.ஆனால், 2016, டிச., 30க்கு பின், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவோ, வங்கிகளில் டிபாசிட் செய்யவோ முடியாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், 2017, மார்ச், 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளில் மாற்றலாம் என, அறிவிக்கப்பட்டது.இவ்வாறு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளபோது, செல்லாத ரூபாய் நோட்டு வைத்துள்ள, இந்தியர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு அளிக்க சட்டப்படி சாத்தியமிருந்தும், ஏன் அளிக்கவில்லை என்பது குறித்து, ஏப்., 11க்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

 இவ்வாறு செல்லாத ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள், தகுந்த காரணங்களுடன், அதை மாற்றிக் கொள்ள மற்றொரு வாய்ப்பு அளிக்கப் படுமா என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

அதிக மதிப்புடைய நோட்டுகள் குவிவதை தடுக்கும் நோக்கில், இனி, 500 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை பதிப்பித்து, வினியோகம் செய்வதில், மத்திய அரசு கவனம் செலுத்தும்.
சக்திகாந்த தாஸ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர்

எஸ்பிபி., சர்ச்சை: இளையராஜா செய்தது சரியே!

இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் சரியா... தவறா...? என்ற விவாதம் போய் கொண்டிருக்கும் வேளையில், தனது காப்புரிமையை நிலைநாட்ட இளையராஜா செய்தது சட்டப்படி சரியே. சட்டத்தை மதிக்கும் எஸ்.பி.பி.,யும் இதை நிச்சயம் புரிந்து கொண்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ்த் திரையிசை உலகில் இப்படி ஒரு மோதல் ஏற்படும் என்று ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தங்களது நட்பைப் பற்றி பல மேடைகளில் இளையராஜாவும், எஸ்பிபியும் வெளிப்படுத்தியவர்கள். அவர் இவரைப் பற்றிப் புகழ, இவர் அவரைப் பற்றிப் புகழ என பல இசை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தவர்கள்தான் நாம். ஆனால், ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சியின் மூலம் இருவருக்குள்ளும் இப்படி ஒரு மோதல் நடந்தது எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் இந்த மோதல் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது.
இளையராஜா கடந்த வருடம் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை அந்த நிகழ்ச்சியில் பாட அழைத்ததாகவும், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக 7 லட்சம் ரூபாய் வாங்கும் எஸ்பிபி, 20 லட்ச ரூபாய்க்கு குறையாமல் கொடுத்தால்தான் வருவேன் எனச் சொன்னதாகவும் 'வாட்ஸ்-அப்'பில் தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கின்றன. 

இளையராஜாவின் நிலைப்பாடு
2015ம் ஆண்டு தன்னுடைய பாடல்களை ஒலி, ஒளிபரப்புவதும் மற்ற ஊடகங்களில் பயன்படுத்துவது குறித்தும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தார் இளையராஜா. இளையராஜாவின் அறிவிப்பைத் தொடர்ந்து 'எப்எம்' வானொலிகள் பலவும் அவருடைய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தின. இருந்தாலும் இளையராஜா தனக்கென தனி ஊடக அமைப்புகளை 'யு டியூப், ஃபேஸ்புக், இணையதளம்' ஆகியவற்றில் ஏற்படுத்தி அதன் மூலம் ரசிகர்கள், அவருடைய பாடல்களைக் கேட்க வழி செய்தார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல்போன் நிறுவனங்கள் தான் இப்படிப்பட்ட பாடல்களைப் பணமாக்கும் வித்தையை சுலபமாக ஆரம்பித்து வைத்தன. பாடல்கள் டவுன்லோடு, ரிங்டோன் என பல விதத்தில் அவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலை ஆரம்பித்தனர். ஏதோ ஒரு மணியோசையை ரிங்டோனாக வைத்துக் கொண்டிருந்த பலரும், தங்களுக்குப் பிடித்தமான பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

ரூ.100 கோடி ராயல்டி வர வேண்டியுள்ளது
அதே சமயம் தனக்கு வரவேண்டிய ராயல்டி தொகையே சுமார் 100 கோடி இருக்கிறது, அது வசூலானால் அதிலிருந்து பாதித் தொகையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்குத் தருவதாகவும் இளையராஜா அறிவித்தார். அதோடு, தன் பாடல்களை சாதாரணமான கலை நிகழ்ச்சிகளில் பாடும் இசைக் குழுக்களுக்குப் பெருந்தன்மையோடும் அனுமதி அளித்தார். யு டியூபில் அதிகாரப்பூர்வமில்லாத பல கணக்குகளில் இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களையும் லட்சக் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அதை முறைப்படுத்தினால் அதன் மூலமே காப்புரிமை வைத்திருக்கும் இளையராஜாவிற்கு வருமானம் வரும்.
 
காப்புரிமை என்பதில் யாருக்குச் சொந்தம் அதிகம் என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பாடல்களைப் பொறுத்தவரையில் இசையமைப்பாளருக்கு, பாடலாசிரியருக்கு, தயாரிப்பாளருக்கு பங்கிருப்பதாகவும் அதைப் பாடியவர்களுக்கும் பங்கில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால், 2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின் படி பாடியவர்களுக்கும் பங்குண்டு என்கிறார்கள். இந்த சட்டம் பற்றி திரையிசை உலகில் ஒரு குழப்பமான தன்மையே நிலவுகிறது.

நோட்டீஸ்
இந்த சூழ்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் தற்போது நடத்தி வரும் இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பாடல்களுக்கு ராயல்டி தராமல் பாடக் கூடாது என்று இளையராஜா மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

பிரச்னைக்கு காரணம்
அந்த நோட்டீசிற்கு பதில் நோட்டீஸ் அனுப்பாமல் அந்த விவகாரத்தை பொதுவெளியில் எஸ்பிபி ஃபேஸ்புக் மூலம் வெளிப்படுத்தியதுதான் பிரச்சனைக்குக் காரணமாக அமைந்தது. அடுத்த நாள் இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள், இளையராஜா பாடலை பாடச் சொல்லிக் கேட்கக் கூடாது என்பதற்காகவே எஸ்பிபி இந்த வேலையை செய்தார். அதற்குப் பதில், ‛‛இளையராஜாவின் அனுமதி பெறவில்லை அனுமதி பெறாமல் பாடுவது தவறு. எனவே அனுமதி பெற்ற பிறகு அவரது பாடல்களை பாடுகிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை என்று கருதுகிறார்கள் ரசிகர்கள். ஆனால் அதை விடுத்து, ‛‛ராயல்டி பற்றியோ, காப்புரிமை பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறியதுதான் ஆச்சரியமாக இருந்தது.

ராயல்ட்டிக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள்
காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அதற்கு இந்தியாவில் ஐபிஆர்எஸ்., பிபிஎல்., சிம்கா, இஸ்ரா... போன்ற இந்திய அரசால், சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்துமே இசை கலைஞர்களுக்கு அவர்களின் ராயல்டி உரிமையை பெற்று தரவே தொடங்கப்பட்டுள்ளது. 

இளையராஜா செய்தது சரியே...!
அப்படி பார்க்கையில், ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும். எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். அப்படி வசூலிக்கப்படும் பணத்தில் பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு கொடுக்கிறார்கள். அப்படியே அதில் ஒரு பகுதியை படைப்பாளியான இளையராஜாவிற்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. தனக்கான உரிமையை சட்டப்படி நிலை நாட்ட இளையராஜா முயன்றால் அது எப்படி பேராசையாகும்.

இது ஏதோ இளையராஜா மட்டும் செய்வது போன்று தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. இளையராஜா மட்டுமல்ல ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்தியாவின் டாப் இசை கலைஞர்கள் பலரும் ராயல்டி விஷயத்தில் ஐபிஆர்எஸ்., பிபிஎல்., உள்ளிட்ட அமைப்புகள் சொல்படியே நடக்கின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான். 

இஸ்ராவில் எஸ்பிபி.,யின் பங்கு
2013ம் ஆண்டு சென்னையில் ISRA என்ற இந்திய பாடகர்கள் உரிமை அமைப்பின் சென்னைப் பிரிவை பி.சுசீலா, கே.ஜே.யேசுதாஸ், எஸ்பிபி, ஹரிஹரன் உள்ளிட்டோர் ஆரம்பித்தார்கள். அப்போது பேசிய எஸ்பிபி, “இந்த அமைப்பு யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல. எங்களுக்கு உண்டான உரிமையைக் கேட்டுப் பெறுகிறோம். பணம் சம்பாதிப்பது ஒரு பிரச்சனையோ அல்ல,” என்றார். 

தங்களுக்கான ராயல்ட்டி தொகை கிடைக்க வேண்டும் என்று தானே இவர்கள் குரல் கொடுத்தனர். அப்படி இருக்கையில், இளையராஜா செய்தது மட்டும் எப்படி தவறாகும். இந்த விஷயத்தில் இளையராஜா சட்டப்படி தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஆகவே சட்டப்படி இது எந்த விதத்திலும் தவறாகாது என்பதே நிதர்சனமான உண்மை!

இளையராஜா - எஸ்பிபி., இருவரும் தேவை
இளையராஜா ஏதோ பணத்திற்காக செய்கிறார் என்று எஸ்பிபி., மனதில் கொள்ளாமல் 40 வருட நட்பிற்கும், சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் நம்பாமல், நட்பையும், சட்டத்தையும் நம்பினார் என்றால் இளையராஜா செய்தது சரி தான் என்று எஸ்பிபி., நிச்சயம் உணருவார். நாளையே எஸ்.பி.பி., ஒரு பாடலை எழுதி, இசையமைத்தார் என்றால் அவருக்கும் இதே சட்டம் தான் பொருந்தும். சட்டம் தெரிந்த எஸ்பிபி., நிச்சயம் இளையராஜாவின் சட்டத்தையும் ஏற்பார். தமிழ் சினிமாவிற்கு ராஜாவும் தேவை, எஸ்பிபி.,யும் தேவை, இருவரும் இணைந்து இந்த சச்சரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் மேடையில் தோன்றி இசை ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

முடிவுக்கு வருமா...?

இளையராஜாவின் ரசிகர்களுக்கும், எஸ்பிபி ரசிகர்களுக்கும் இடையேயான மோதல், சமூக வலைத்தளங்களில் வரம்பு மீறிச் சென்றுவிட்டது. எப்படியோ இளையராஜா - வைரமுத்து, இளையராஜா - பாரதிராஜா ஆகியோரின் பிரிவு போல, இளையராஜா - எஸ்பிபி இடையேயான பிரிவு பெரிதாகிவிடாமல் இளையராஜா - எஸ்பிபி.,யே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி 3 பேர் கைது

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்ச் 22, 04:41 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்த இருப்பதாக சுங்க இலாகா பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானத்தில் ஏற வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் செல்ல சென்னையை சேர்ந்த அப்துல் சலாம் (வயது 30), அப்துல் ரசாக் (35) ஆகியோர் வந்திருந்தனர்.பணம் பறிமுதல்

சந்தேகத்தின் பேரில் அவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை சோதனை செய்தனர்.

அதில் முறுக்கு, மிக்சர் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் அமெரிக்க மற்றும் யூரோ டாலர்கள் இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து 2 பேரிடமும் இருந்த ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.3 பேர் கைது

இதே போல் சிங்கப்பூருக்கு செல்ல இருந்த மற்றொரு விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த காதர்பாஷா (39) ஏற வந்தார். அவருடைய பெட்டியை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள அரபு நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற 3 பேரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWS TODAY 23.12.2025