Wednesday, March 22, 2017

ரூ. 9க்காக பணி நீக்கம் : கண்டக்டருக்கு பணப்பலன்கள்

மதுரை: பணியின்போது பையில் 9 ரூபாய் கூடுதலாக இருந்ததாக கூறி, பணி நீக்கம் செய்யப்பட்ட கண்டக்டருக்கு முந்தைய கால பணப்பலன்களை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் ராஜூ என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். பணியின்போது 'டிக்கெட்' பையில் 9 ரூபாய் கூடுதலாக இருந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்து, நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது. 

ராஜூ விளக்கம் அளித்தார். 2001ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தில் ராஜூ மனு செய்தார்.நீதிமன்றம், 'பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கவில்லை. பணி நீக்க காலத்தில் வருவாய் இல்லை என்பதை மனுதாரர் நிரூபிக்க தவறிவிட்டார். இதனால் முந்தைய காலத்திற்குரிய சம்பளம் வழங்க வேண்டியதில்லை,' என 2016 செப்.,2 ல் உத்தரவிட்டது. 2016 மார்ச் 31ல் பணி ஓய்வுக்குரிய வயதை ராஜூ அடைந்தார்.

 தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் ராஜூ மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு:மனுதாரர் மீதான குற்றச்சாட்டை பொறுத்தவரை, தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை என்ற தொழிலாளர் நீதிமன்ற உத்தரவு ஏற்புடையதல்ல. மனுதாரர் தவறு செய்ததை போக்குவரத்து கழக நிர்வாகம்தான் நிரூபிக்க வேண்டும். அதை நிரூபிக்கவில்லை. தொழிலாளர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரருக்கு முந்தைய கால பணப்பலன்களை நிர்வாகம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை போக்குவரத்து கழக நிர்வாகம் 45 நாட்களில் நிறைவேற்றாவிடில், தொழில் தகராறு சட்டத்தின் கீழ் மனுதாரர் உரிய இடத்தில் புகார் செய்யலாம்.
அதன் அடிப்படையில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...