Wednesday, September 6, 2017

சாம்பாரே மருந்து!

Published : 02 Sep 2017 10:44 IST

எல். ரேணுகா தேவி




நமது விருந்துச் சாப்பாட்டின் தனித்துவமான அம்சம் கமகமக்கும் சாம்பார். சாதாரணச் சாப்பாட்டிலும்கூட வாரத்தின் இரண்டு மூன்று நாட்களாவது சாம்பார் இடம்பெற்றுவிடுகிறது. சாப்பாட்டுடன் சாம்பாரைக் கலந்து சாப்பிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், சாம்பாரை சர்பத் போலக் குடிப்பவர்கள் இன்னொரு ரகம்.

அதைப் பார்த்து யாராவது இனி உங்களை ‘சரியான ‘சாம்பார்’ கணேசனாக இருப்பே போலிருக்கே’ என்று சொன்னால், சந்தோஷமாகச் சிரியுங்கள். ஏன் தெரியுமா, அவர்களைக் காட்டிலும் குடல் புற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியம் உங்களுக்கு மிகவும் குறைவு.

ஆம், தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

புற்றைத் தடுக்கும் மஞ்சள்

மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து தென்னிந்தியர்களின் முக்கிய உணவான சாம்பாரில் குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.

மருந்தியல் ஆய்வாளர்கள் வி.கங்கா பிரசாத், அல்பி பிரன்சிஸ், கே. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘பார்மகோக்னாஸி மேகசின்’ எனும் மருந்தியல் இதழில் சமீபத்தில் வெளியாயின.

உலகளவில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளில் அதிக அளவு மஞ்சள் உட்கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

உணவும் மருந்தும்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதியான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

“அதிக அளவு மஞ்சள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் கொண்ட வெங்காயம் சேர்த்த உணவுப் பொருட்களில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது” என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் ‘பாலிப்ஸ்’ எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம். இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.

சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசாலாவின் மகிமை

மும்பை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் முதன்மை ஆய்வாளர் ஒருவர் கூறும்போது சாம்பாரில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு மசாலாப் பொருளும் தனித்தன்மை உடையதாக உள்ளது. சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.

“பொதுவாக சாம்பார் அதிகளவு காரம் இல்லாத உணவாக இருப்பதால் குடலின் உட்புறம் பாதுகாக்கப்படுவதுடன், குடல் புற்றுநோயை உண்டாக்கும் டைமெத்தில்ஹைட்ராக்சின் எனும் காரணியை, சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகின்றன” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் எஸ்.வி.எஸ்.எஸ்.பிரசாத்.

மலச்சிக்கல் இல்லை

இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்றுநோயின் தாக்கம் வடஇந்தியர்களுக்குத்தான் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப்பதே. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

“இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள். பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட்களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு. அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் டி.பி.எஸ்.பண்டாரி.

காய்களும் ஒரு காரணம்

அதேபோல, ருசிக்காக மட்டுமல்லாமல் சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளுக்காகவும் இரைப்பைக் குழாய் நிபுணர்களால் மக்களுக்கு அது பரிந்துரைக்கப்படுகிறது.

“பொதுவாக இந்திய உணவு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. அதிலும் சாம்பாரில் கேரட், பாகற்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி போன்ற காய்கறிகள் சேர்த்துச் சமைக்கப்படுகின்றன. காய்கறிகளில் உள்ள சத்துகளும் சாம்பார் மூலமாகக் கிடைப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க இவை உதவுகின்றன. அதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். பொதுவாக அதிக அளவு கொழுப்புச் சத்து, குறைந்த அளவு நார்ச்சத்துக் கொண்ட சக்கை உணவை (Junk food) உட்கொண்டால் குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்” என எச்சரிக்கிறார் குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் விமலாகர் ரெட்டி.

சாம்பார் மிகவும் பிரபலமான உணவாக இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் மிளகு, பெருங்காயம் போன்ற மசாலாப் பொருட்கள்தான். சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்ற ஆராய்ச்சி தற்போது முதல்கட்டத்தில்தான் உள்ளது. என்றாலும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஆயிஷா பாத்திமா.

இனி, சாம்பாரே மருந்து!
92 வயதிலும் வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்: வாசிப்புக்கு முதுமை தடையல்ல என்கிறார்

Published : 05 Sep 2017 11:31 IST

கி. மகாராஜன்மதுரை




டி.வி. சிவசுப்பிரமணியன்


நாளிதழ் வாசிப்பதை நாள் விடாமல் தொடர்ந்து இளைய தலைமுறையினருக்கு வாசிப்பின் மீது நேசிப்பு ஏற்படுவதற்கு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் டி.வி. சிவசுப்பிரமணியன் (92).

இவர், திருச்சி மாவட்டம், திம்மாச்சிபுரத்தில் 1925-ல் பிறந்தார். அங்கு பள்ளி படிப்பை முடித்தபின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. படித்தார். பின்னர், கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அங்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் ஆசிரியர் படிப்பை முடித்தார். மதுரை பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் ஒரு ஆண்டும், பின்னர் மதுரை தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணிபுரிந்து 1983-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


தற்போது, மதுரை சர்வேயர் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். டி.வி. சிவசுப்பிரமணியன், 92 வயதிலும் நல்ல பார்வைத் திறனுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த வயதிலும் புத்தகம், நாளிதழ் வாசிப்பின் மீதான காதல் குறையாமல் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் இன்றும் தொடர்கிறது. காலை நேரம் முழுவதும் நாளிதழ் வாசிக்கிறார். தான் படித்த தகவல்களை பேரன், பேத்திகளிடம் பகிர்ந்து கொள்கிறார்.

இதுகுறித்து டி.வி.சிவசுப்பிரமணியன், ‘தி இந்து’விடம் கூறியதாவது: புத்தகம், நாளிதழ் வாசிப்பு பழக்கம் அறிவாற்றல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். இன்றைய இளைய தலைமுறையினர் கணினி, செல்போனில் பயனற்ற விஷயங்களை தவிர்த்துவிட்டு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்ல விளைவுகள் ஏற்படும்.

நாளிதழ் வாசிப்பதை ஒருநாள் கூட தவற விட்டதில்லை. என்றார்.

‘பரந்த அறிவுக்கு வயது ஒரு தடையல்ல’ என்பதையும், ‘வயதுக்கு தான் முதுமை, வாசிப்புக்கு முதுமையே கிடையாது’ என்பதையும் 92 வயதிலும் நிரூபித்து வருகிறார் சிவசுப்பிரமணியன்.
அறம் பழகு எதிரொலி: ஏழை மாணவரின் பொறியியல் கல்விச் செலவை ஏற்ற சிங்கப்பூர் வாழ் 'தி இந்து' வாசகர்!

Published : 05 Sep 2017 18:44 IST

க.சே.ரமணி பிரபா தேவி




ராஜ்குமார் (இடது) | ரகுபிரகாஷ் (வலது) - படம்: எல்.சீனிவாசன்

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.

உதவி தேவைப்படும் மாணவர்கள் குறித்த செய்தி 'அறம் பழகு' தொடர் மூலம் 'தி இந்து' இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.


அவற்றைப் படித்த சிங்கப்பூர் வாழ் தமிழரான 'தி இந்து' வாசகர் ரகுபிரகாஷ், ஏழ்மை நிலையில் இருந்தாலும் கடின உழைப்பால் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்னும் மாணவர் குறித்து தகவல் கிடைத்தது. 12-ம் வகுப்பில் 1,112 மதிப்பெண்களும் 10-ம் வகுப்பில் 486 மதிப்பெண்களும் பெற்றவர் அவர். ஓய்வு நேரங்களில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொறியியல் படிப்புக்கு இடம் கிடைத்தும் பணமில்லாமல் கல்லூரியில் சேரக் காத்திருந்தார் ராஜ்குமார்.

ராஜ்குமார் குறித்த தகவல்களை தக்க சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களோடு, ரகு பிரகாஷிடம் பகிர்ந்தோம். தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டுக் கட்டணமான ரூ.55,635 செலுத்த 3 நாட்களே இருந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட தொகையை உடனே அனுப்பி வைத்தார் ரகுபிரகாஷ். கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதால் ஆனந்தத்துடன் கல்லூரி செல்ல ஆரம்பித்தார் ராஜ்குமார்.

காலத்தினாற் செய்த உதவி குறித்து ரகுபிரகாஷிடம் பேசினோம். ''தாய்நாட்டை விட்டு சிங்கப்பூர் வந்துவிட்டாலும் தமிழகம் மீதான அன்பு குறையவில்லை. தொடர்ந்து தமிழக செய்திகளைப் படிப்பேன். அப்படி ஒரு நாள் இணையத்தில் இருந்தபோதுதான் 'அறம் பழகு' தொடரைப் படித்தேன்.

என்னுள் பொதுவாகவே ஓர் எண்ணம் உண்டு. அதிக மதிப்பெண்கள் பெற்றும், உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசைதான் அது. பொருளாதாரம் என்ற ஒற்றைக் காரணியால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. இதனால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 மாணவர்களுக்கு, நண்பர்களின் உதவியுடன் உதவத் திட்டமிட்டிருக்கிறேன்.

'ஏழை மாணவர்களுக்கு உதவத் தயார்'

அத்தகைய மாணவர்கள் குறித்து உங்களில் யாருக்காவது தெரிந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இவை அனைத்துக்கும் பின்புலமாக இருப்பது என்னுடைய ஆசிரியர் ராஜேந்திரன் சார்தான். அவரின் ஊக்கம் மற்றும் உறுதுணையால்தான் என்னால் இத்தகைய செயல்களில் ஈடுபட முடிகிறது.

ஆசிரியர் தினமான இன்று அவர் குறித்து கூற வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்'' என்கிறார் ரகுபிரகாஷ்.

ரகுபிரகாஷைத் தொடர்பு கொள்ள - raghu.educationtrust@gmail.com



ராஜ்குமாரின் குடும்பம். படம்: எல்.சீனிவாசன்

உதவி கிடைத்த மகிழ்ச்சியில் உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார் மாணவர் ராஜ்குமார். ''இந்த உதவியை நிச்சயம் மறக்க மாட்டேன். தொடர்ந்து நன்கு படித்து, முன்னேறி, உதவி தேவைப்படும் மக்களுக்கு என்னால் ஆனதைச் செய்வேன்'' என்கிறார் ராஜ்குமார்.

இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர் போராட்டம்

Updated : 05 Sep 2017 21:50 IST

சென்னை







நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

பெரும் கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று காலை திடீரென லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதமன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

நந்தனம் ஆடவர் கலைக் கல்லுரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், தியாகராயா கலைக்கல்லூரி மாணவர்கள், மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் ஏஐஎஸ்எப் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று, கைதாகினர்.ரேஸ்கோர்ஸில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கோவில்பாளையம், ஈச்சனாரி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சியில் பாரதியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி மற்றும் என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராஜிவ்காந்தி சதுக்கம் நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் மதிதா இந்துக் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூரிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.


போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் | படம்: எஸ்.குருபிரசாத்

சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓசூர் ரயில் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக அமர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரி வாயில்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில் தலித் மக்கள் முன்னணியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கருடாத்திரி விரைவு ரயிலை மறித்து முழக்கமிட்டனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழகம் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது. இது தொடர்பாக மாவட்ட செயலர் மணிகண்டன் உட்பட 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இ

மதுரை செல்லூர் 60-அடி ரோட்டில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நீட் தேர்வு ரத்து, அனிதா மரணம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸார்,

சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தர்ணாவில் அமர்ந்தனர்.

கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...

2017-09-05@ 15:51:34




நன்றி குங்குமம் டாக்டர்

- இளங்கோ கிருஷ்ணன்

டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. மொத்த சமூகத்தின் பெரும்பகுதி குடிநோயாளிகளாகவும் மனநோயாளிகளாகவும் மாறிக்கொண்டிருக்கும் கொடூரமான காலத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பத்து பேர் போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் புள்ளிவிவரம். போதை என்பது ஆல்கஹால் மட்டும் இல்லை. புகையிலை முதல் கஞ்சா, ஹெராயின் வரை உள்ள அனைத்துமே போதைப் பொருட்கள்தாம்.

தவிர சில இருமல் மருந்துகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தின்னர் போன்றவற்றையும் போதைப் பொருளாக சிலர் பயன்படுத்துகின்றனர்.கிராமங்களைவிட நகரங்களிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, இளைஞர்களிடையே இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது என்பதுதான் வேதனை. இந்தியாவில் உள்ள 75 சதவிகிதக் குடும்பங்களில் யாராவது ஒருவரேனும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கிறார் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

போதைகள் பலவிதம்
போதைப் பழக்கம் என்று பொதுவாக நாம் சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. சிலவகை போதைப் பொருட்களை விற்பனை செய்ய அரசே அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். இதைத் தவிர மருத்துவக் காரணங்களுக்காக மெத்தடோன் (Methadone), ஆக்ஸிகோடோன் (Oxycodone), சோல்பிடெம் (Zolpidem) போன்ற மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை சிலர் போதைப் பொருளாக சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துகின்றனர். கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி உட்பட பலவகையான போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சட்டவிரோத போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு சட்டப் படியான போதைப் பொருட்களின் சந்தை மதிப்பைவிடவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். போதைப் பொருட்களை அவற்றின் பண்பின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். டிப்ரசன்ட் (Depressant): ஆல்கஹால் நிறைந்த பானங்களும் சால்வென்ட்ஸ் எனப்படும் சில திரவங்களுமே டிப்ரசன்ட். மூளை செல்களைக் கட்டுப்படுத்தி அதன் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால் இதற்குஇந்தப் பெயர்.

ஹல்லூசினேஷன்கள்: இல்லாததை இருப்பது போல் காட்டுவது ஹல்லூசினேஷன். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ள போதைப் பொருட்கள் இவை. கானபிஸ் (Cannabis), எல்எஸ்டி (LSD) போன்றவை இந்த வகையில் அடங்கும். வலி நிவாரணிகள்: நரம்பு மண்டலத்தை மட்டுப்படுத்தி வலி உணர்வுகளை உணரச் செய்வதைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இவை. மருத்துவக் காரணங்களுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற மருந்துகளும் ஹெராயின் போன்ற லாகிரி வஸ்துகளும் இந்தப் பிரிவில்தான் வருகின்றன.

செயலூக்கிகள் (Performance enhancer): தசைகளின் ஊக்கத்து க்கு உதவும் மருந்துகள் இந்தவகையைச் சேர்ந்தவை. குறிப்பாக, அனபாலிக் ஸ்டீராய்டு மருந்துகள். இவையும் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிலர் சட்டத்துக்குப் புறம்பாக மருத்துவக் காரணங்களுக்கு வெளியே போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். தூண்டிகள் (Stimulants): மூளையில் உள்ள செல்களை தற்காலிகமாகத் தூண்டி செயல்பட வைக்கும் திறனுடையவை. புகையிலை, காபீன் மற்றும் எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இருக்கும் விவரங்களைப் பார்த்துவிட்டோம்.

மனநல மருத்துவரான அசோகன் இது குறித்து என்ன சொல்கிறார்?‘

‘பழக்கத்துக்கு அடிமையாவது தான் போதை. அதாவது நமது உடலில் உள்ள செல்களுக்கு குறிப்பிட்ட பொருளில் உள்ள ஒரு வேதித்தன்மை மிகவும் பிடித்துப்போய்விட்டது என்றால் அதற்கு நம் உடல் மிக விரைவாக அடிமையாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் செல்கிறது. இப்படி அடிமையாகும் போதைப் பொருள், லாகிரி வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது மருந்தாகக் கூட இருக்கலாம்.

ஆனால், மருத்துவரின் பரிந்துரையோடு நோயாளியின் உடலின் தேவை அறிந்து மருந்துகளாகத் தரப்படுபவை என்பதால் அவற்றால் ஆபத்து இல்லை. போதைதரும் பொருட்களின் இந்த வகை மருத்துவப் பயன்பாட்டை ‘use’ என்கிறோம். உதாரணமாக இடுப்பு வலி இருக்கிறது என்றால் அதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணியைப் பரிந்துரைக்கும் அளவில் பயன்படுத்தினால் அது ‘யூஸ்’. அதே மருந்தை மருத்துவர் பரிந்துரையின்றி ஒருவர் வலி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தினால் அது Misuse.மருத்துவர்கள் பயன்படுத்தும் போதை தரும் மருந்தையோ அல்லது அதில் உள்ள போதை தரும் அம்சத்தை மட்டும் பிரித்தெடுத்து அதை போதைக்காக மட்டுமே பயன்படுத்துவதையோ ‘அப்யூஸ்’ என்கிறோம்.

‘ட்ரக் அப்யூஸ்’ என்பது எல்லாவகை போதைப்பொருளையும் பயன்படுத்துவதுதான். இந்த போதைப் பொருளைத் தொடர்ந்து ஒருவர் பயன்படுத்தும்போது அவர் போதையைச் சார்ந்திருந்தல் (Drug Dependant) என்ற நிலைக்குச் செல்கிறார். இதன் தொடர்ச்சியான அடுத்த நிலைதான் போதைக்கு அடிமையாதல் (Drug addiction). தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கூட்டத்தைப் போலவே பல்வேறு வகையான போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புகையிலையையும் ஆல்கஹாலையும் போதைப் பழக்கத்தின் நுழைவாயில் என்பார்கள்.

ஒருவர் இந்தப் பழக்கங்களுக்குள் நுழைந்துவிட்டால் மெல்ல மெல்ல ஹெராயின், கஞ்சா, எல்எஸ்டி என ஒவ்வொரு போதைப் பொருளாகப் பயன்படுத்தும் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் பெற ஆரம்பிப்பார். ஆனால், ஹெராயின் உள்ளிட்ட டிசைனர் ட்ரக்ஸுகளுக்கு இன்றைய இளைய தலைமுறை நேரடியாகவே அடிமையாகி இருக்கிறது என்பதுதான் கொடுமை. இவற்றின் விலை தங்கத்தைவிட அதிகம் என்பதால் வசதியான வீட்டுப்பிள்ளைகளே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் வார இறுதி பார்ட்டிகளில் இந்த டிஸைனர் ட்ரக்ஸ்களை ஆண் பெண் பேதமின்றி பயன்படுத்துகின்றனர். இதனால் செக்ஸுவல் அப்யூஸ் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

போதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச்செயல்களில்கூட தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும்போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும். பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். ஒருவர் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு சிகரெட் பிடித்தால் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாவார். தொடர்ந்து 20 நாட்கள் குடிப்பவர் குடிக்கு அடிமையாவார்.

ஆனால், ஹெராயின், கஞ்சா போன்ற போதை மற்றும் லாகிரி வஸ்துகளை பத்து நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலே அடிமையாகிவிடுவார்.
போதைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகளை வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் (Withdrawal symptoms) என்பார்கள்.
அந்தப் பொருளை உடனே நுகர வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். உடலெங்கும் நடுக்கம் ஏற்படும். பதற்றமும், கோபமும், எரிச்சலும் ஏற்படும். எதிலும் ஆர்வ மின்மை, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும். கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற டிசைனர் ட்ரக்ஸ்களுக்கு அடிமையானவர்களுக்கு இந்த வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் தீவிரமாக இருக்கும்.

கடுமையான உடல் வலி, குடலே வெளிவந்து விடுவதைப் போன்ற வாந்தி, தலைவலி போன்றவை உக்கிரத்துடன் வெளிப்படும். இன்று மறுவாழ்வு மையங்கள் நாள்தோறும் பெருகிவருகின்றன. போதை அடிமைகள் அதிகரித்து வருவதன் சாட்சி இது. அரசின் அனுமதி பெற்ற போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சை பெற்றால் மறுவாழ்வுக்குத் திரும்பலாம். போதை அடிமைகளின் மறுவாழ்வுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம். அவர்கள் தினசரி போதைப் பொருளைப் பயன்படுத்தும் நேரம் வந்ததும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் இதைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் அவர்களைக் கவனிக்க வேண்டும். ஓரளவு உடலும் மனமும் தேறி வரும்வரை அவர்களைக் கிண்டல் செய்வது, திட்டுவது, மனம் வெறுக்கும்படி நடந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அசோகன்.
தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏலச்சீட்டு நடத்தி ரூ.9 கோடி மோசடி: தம்பதியை கண்டுபிடித்தால் சன்மானம்

2017-09-05@ 02:00:31




தாம்பரம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.9 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள தம்பதியரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என தாம்பரம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘கடந்த ஓராண்டாக காணவில்லை. பலரது பல கோடி சீட்டு பணங்களை மோசடி செய்த தம்பதியர் சேகா (எ) ராஜசேகர் அவரது மனைவி மலர் இவர்களை பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது கண்டுபிடித்து கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும். இப்படிக்கு பாதிக்கப்பட்ட மக்கள்’’ என தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மேற்கு தாம்பரம், இரும்புலியூர், ஏரிக்கரை தெருவை சேர்ந்த சேகா (எ) ராஜசேகர் மற்றும் இவரது மனைவி மலர். இருவரும் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி சுமார் ரூ.9 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து அவர்களது பணத்தை மீட்டு தரவேண்டும். இவர்களை பற்றி பொதுமக்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொச்சி விமான நிலையத்தில் ஓடு பாதையில் இருந்து விலகியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
2017-09-06@ 00:43:40




திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடு பாதையில் இருந்து விலகி, மழைநீர் வடிகால் கால்வாயில் இறங்கியது. இதில் விமான பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் அபுதாபியில் இருந்து கொச்சிக்கு நேற்றுஅதிகாலை 2.45 மணியளவில் வந்தது.

கன மழை காரணமாக ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், நிறுத்தும் இடத்துக்கு திரும்பும்போது சறுக்கியது. அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விமானத்தின் முன்சக்கரம் இறங்கி சேதமடைந்தது. அந்த விமானத்தில் வந்த 102 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

NEWS TODAY 27.07.2026