Wednesday, November 8, 2017


'ஆதார்' இல்லாமல் வருமான கணக்குஅனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி



சென்னை, 'ஆதார்' எண் இல்லாமல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, அனுமதி கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தில், தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'வருமான வரி கணக்கை, நேரிலோ அல்லது மின்னணு முறையிலோ தாக்கல் செய்ய உள்ளேன். 
வருமான வரி கணக்கு தாக்கலின் போது, என் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என, வருமான வரித் துறை கட்டாயப் படுத்தக் கூடாது. 
ஆதார் எண் இல்லாமல், கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில், மத்திய அரசு மூத்த வழக்கறிஞர், 
ரபுமனோகர், வருமான வரித்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜி.ராஜகோபாலன், வழக்கறிஞர், ஹேமா முரளிகிருஷ்ணன் ஆஜராகினர்.
நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தாக்கல் செய்த மனுவோடு, இந்த நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் இணைத்துள்ளார். 
அந்த உத்தரவில், ஆதார் எண்ணை வற்புறுத்தாமல், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வருமான வரித்துறை அனுமதிக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி உள்ளார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை, தவறாக காட்டுகின்றனர். 
வேறு பரிவர்த்தனைகளுக்கு தான், உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், ஆதார் எண் இல்லாமல், வருமான வரி கணக்கை ஏற்கும்படி, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்படவில்லை' என, தெரிவித்துள்ளார்.
எனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு, இதற்கு பொருந்தாது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க, எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர் கோரிய நிவாரணத்தையும் வழங்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தேதி தள்ளி வைப்பு
தாமதமாவதன் பின்னணி என்ன

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி, மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணியில் தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், ராஜாவின் வாதங்களும் அவர் தரப்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. இது கிரிமினல் வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் சிறு சந்தேகம் இருந்தாலும் அதை குற்றவாளிக்கு சாதகமாக அளிக்க வேண்டும்.மாணவி, ஆருஷி கொலை வழக்கில்கூட குற்றத்தை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதாலேயே அந்த சந்தேகத்தின் பலன் ஆருஷியின் பெற்றோருக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா, சந்தேகத்தின் பலனைக் கூட கேட்கவில்லை. 'குற்றப்பத்திரிகையே தவறு' என கூறி, வழக்கின் அடிப்படையையே கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். ஒரு கொலை நடந்து, 'அதை நான் செய்யவில்லை' என்பது ஒருவகை. 'அப்படியொரு கொலையே நடக்கவில்லை; இதோ உயிருடன் அவர் உள்ளார்' என, வாதிடுவது மற்றொரு வகை; இதில், ராஜா விவகாரம் இரண்டாவது வகை.

நிர்வாக ரீதியிலானது என்றாலும் பெருமளவு தொழில்நுட்ப ரீதியில் அமைந்த நுட்பமானது தான் இந்தஸ்பெக்ட்ரம் வழக்கு. மத்திய தணிக்கைக் குழுவான, சி.ஏ.ஜி., அளித்த அறிக்கைதான், இந்த வழக்கிற்கு அடிப்படையே. ஆனால் அந்த சி.ஏ.ஜி., அறிக்கையே தவறு என்பது தான் ராஜாவின் பிரதான வாதம்.
இதற்கு காரணம், 2010ல், தொலைத்தொடர்பு அமைச்சகம், சி.ஏ.ஜி.,க்கு எழுதிய பதில்கள்.

அதில் சி.ஏ.ஜி.,யின் குற்றசாட்டு ஒவ்வொன்றையும் கடுமையாகசாடியதுடன் 'ஸ்பெக்ட்ரம் குறித்த போதுமான சட்டப்புரிதலோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை. போதிய விஷய ஞானமே இல்லாத இந்த அறிக்கை துாக்கியெறியப்படவேண்டியது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதிய உயர் அதிகாரி தான் சி.பி.ஐ., தரப்பின் பிரதான சாட்சிகளில், ஒருவர்; இவர், சாட்சியளிக்க கூண்டில் நின்றபோது, அவரிடம், ராஜாவே குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, 'சி.ஏ.ஜி.,க்கு எழுதியுள்ள பதில்கள் உண்மையே. பிரதமர் அலுவலகம் நிதியமைச்சகம் என அனைத்து தரப்போடும் ஆலோசித்து, கூட்டுமுடிவே எடுக்கப் பட்டது' என, அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார்.

சி.ஏ.ஜி.,க்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் இடையிலான இதுபோன்ற முக்கிய கடித போக்குவரத்துக்கள் இருக்கும் விபரங்களை, சி.பி.ஐ., காவலில் இருந்தபோதுகூட ராஜா, தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.இந்த ஆவணங்களை கைப்பற்றாமலேயே ஊடகங்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவற்றின் அழுத்தங்கள் காரணமாக, சி.பி.ஐ.,

அவசரகதியில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் விசாரணை ஆரம்பித்த பிறகு, நீதிபதிமுன்பாக, ஆவணங்களை ஒவ்வொன்றாக ராஜா வெளியில் விட ஆரம்பித்த போதுதான், இத்தகைய ஆவணங்கள் இருப்பதே, மற்றவர் களுக்கு தெரிந்தது.தேதியை மாற்றியது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை இரட்டை தொழில்நுட்பம் என, சி.பி.ஐ.,யின் குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும், தொலைத் தொடர்புத் துறை, பிரதமர் மற்றும் நிதியமைச்சக ஆவணங்களே எதிராக உள்ளன. ராஜா கூறியோ, கட்டாயப்படுத்தியோ, முடிவுகள் எடுக்பட்டதாக எந்தவொரு இடத்திலும் இல்லை.

வழக்கை கையில் எடுத்த பின்பாவது, 'அமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகவே, இந்த கடிங்களை எழுத நேரிட்டது' என, வாக்கு மூலம் வாங்கியிருக்கலாம்; அதையும், சி.பி.ஐ., செய்யவில்லை.இந்த பின்னணியில்தான், ஆவணங்களை சரிபார்த்து, தரப்போகும் தீர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நியாயப்படுத்தி, 10 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தீர்ப்பு விபரங்கள் தயாராவதே, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவது தாமதமாவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 5க்கு ஒத்திவைப்பு

தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தீர்ப்பு தேதி குறித்த அடுத்த கட்ட விசாரணை டிசம்பர், 5க்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

-ஓ.பி.சைனி,
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி, டில்லி
நாகையில் தொடரும் அடைமழை சம்பா பயிர்கள் அழுகும் அபாயம்

நாகப்பட்டினம், நாகை மாவட்டத்தில், 10 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் ஓய்வெடுத்த மழை, இரவில் மீண்டும் துவங்கி, நேற்றும் தொடர்ந்தது.
சம்பா விளைநிலங்களில் விதை தெளித்த சில நாட்களில், தண்ணீர் தேங்கியதால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, சம்பா பயிர்களை காப்பாற்ற முயன்ற விவசாயிகள், தொடர் மழையால் சோர்வடைந்துள்ளனர். 3 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன.
கடல் சீற்றம் காரணமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், வீடுகளில் முடங்கியுள்ளனர். வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்களும் முடங்கி உள்ளனர். சீர்காழி அருகேயுள்ள கிராமங்களில், ஒன்பது நாட்களாக பெய்து வரும் கனமழையால், 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள பாதிப்பை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்தும், வாய்க்கால்களை துார் வாரக் கோரியும், பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஐந்து கிராம விவசாயிகள், அரசூர் புறவழி சாலையில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர். இதனால், சீர்காழி- - சிதம்பரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
பாதிப்பே இல்லை
தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் 
தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் நெற்பயிர் மூழ்கியது தொடர்பாக அந்த மாவட்ட அமைச்சர் மணியன் ஆய்வு செய்து வருகிறார். அங்கும் மழைநீர் வடிந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் காவிரி டெல்டாவில் சம்பா நெற்பயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குடிமராமத்து பணியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இந்த பணிகள் முறையாக நடைபெற்றதால் தான் 
தற்போது மழைநீர் வாய்க்கால்களில் வடிந்து வருகிறது.
துரைக்கண்ணு, வேளாண் அமைச்சர்

பிறந்த குழந்தையை பார்க்க வசூல் நெல்லையில் 2 நர்ஸ், 'சஸ்பெண்ட்'

திருநெல்வேலி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் குழந்தையை பார்க்க பணம் வசூலித்த இரண்டு நர்சுகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பிரசவ வார்டில் பணிபுரியும், மகப்பேறு மருத்துவ பணியாளர்கள் பேச்சியம்மாள், செல்வி ஆகியோர், பிரசவித்த பெண்ணின் உறவினர்களிடம், பிறந்த குழந்தையை பார்க்க, பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்திருத்தனர். ஆண் குழந்தை என்றால், ஒரு 'ரேட்', பெண் குழந்தை என்றால் ஒரு ரேட் என நிர்ணயித்து, பணம் வசூலித்து வந்தனர்.இது குறித்து, பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்தன. டீன் சித்தி அத்திய முனவரா விசாரணை நடத்தினார். இதில், இருவரும் பணம் வாங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை, சஸ்பெண்ட் செய்து டீன் உத்தரவிட்டார்.


தி.மலையில் தீபத்தன்று மலை ஏற பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை, ''திருவண்ணாமலை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் கோவில் ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருடன், கலெக்டர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீப திருவிழாவிற்கு, 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், ஒன்பது பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, கிரிவலப்பாதை வரை, முதியவர்கள், குழந்தைகள் செல்ல, இலவசமாக பஸ் இயக்கப்படும்.
தீபத்தன்று, அதிகளவு பக்தர்கள் மலை ஏறும்போது நெரிசல் ஏற்படுகிறது. மலையில் தீபம் ஏற்றும் நேரங்களில், மர்ம ஆசாமிகள் மரங்களுக்கு தீ வைக்கின்றனர். இதை 
தவிர்க்க, இந்த ஆண்டு முதல், அன்று ஒரு நாள் மட்டும் மலை ஏற தடை விதிக்கப்படுகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.

மா.நன்னன் மரணம் முதல்வர் இரங்கல்


 மா.நன்னன் மரணம் முதல்வர் இரங்கல்
சென்னை, ஊடகங்களின் வழியே, தமிழ் கற்பித்த பேராசிரியரும், முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருமான, மா.நன்னன், 94, காலமானார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, அவரது இல்லத்தில், அவரது உடலுக்கு, தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் பழனிசாமி, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்ட பலர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.நன்னன், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ள, சாத்துக்குடல் என்ற கிராமத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலையில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார். சென்னை, மாநிலக் கல்லுரி உள்ளிட்ட பல கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றினார். 1980 முதல், 1983 வரை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக இருந்தார்.பின், வயது வந்தோர் கல்வி வாரிய துணை தலைவராக பதவியேற்று, கற்பித்தலில் புதிய உத்திகளை புகுத்தினார். சென்னை தொலைக்காட்சியில், 'எண்ணும் எழுத்தும்' என்ற நிகழ்ச்சி; தனியார் தொலைக்காட்சியில், 'தமிழ் பண்ணை' என்ற நிகழ்ச்சிகளின் வழியாக, தமிழ் கற்பித்தார். ஊடகவியலாளர்களுக்கு, தமிழ் உச்சரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார். 70க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார். இவரின் பல நுால்கள், பள்ளி, கல்லுாரிகளில் பாடங்களாக உள்ளன.
தீவிர தமிழ் பற்றாளரான இவர், தன் இயற்பெயரான, திருஞானசம்பந்தன் என்பதை, நன்னன் என, மாற்றிக்கொண்டார். தன் பிள்ளைகளுக்கும், வேண்மாள், அவ்வை, அண்ணல் என, தமிழ் பெயர்களை வைத்தார். இவருக்கு, பார்வதி என்ற மனைவி உள்ளார்.
மழை,விடுமுறை,முடிவெடுக்க,தலைமை ஆசிரியர்களுக்கு,அதிகாரம்

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை. பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.



தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்., 30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், 'டிவி' செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில்,காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,
பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.'மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, அவர்
தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

NEWS TODAY 03.07.2026