Sunday, April 22, 2018

இணையவழி மின் கட்டண வசதி ரத்து

Added : ஏப் 22, 2018 02:30 |

சென்னை: 'விருதுநகர் உட்பட, ஐந்து நகரங்களில் வசிக்கும் நுகர்வோர்கள், இணையதளத்தில் மின்கட்டணத்தை செலுத்த முடியாது' என, மின் வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், இணையதளம், 'மொபைல் ஆப்' என்ற செயலி வாயிலாகவும், அரசு இ - சேவை மையங்கள், தபால் நிலையங்களிலும் செலுத்தலாம்.இந்நிலையில், 'விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், திருவள்ளூர், திருத்தணி, வேலுார், ஆற்காடு ஆகிய நகரங்களில், 'சர்வரில்' பராமரிப்பு பணி நடப்பதால், அங்குள்ள நுகர்வோர்கள், இணையதளத்தில் மின் கட்டணத்தை செலுத்த முடியாது' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
'பேறு கால விடுமுறையும் பணி நாட்களே'

Added : ஏப் 22, 2018 00:36

சென்னை: 'முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, பேறு கால விடுமுறையையும் பணி நாட்களாக கருதி, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல் : அறந்தாங்கியை சேர்ந்த, டாக்டர் அருணா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, டாக்டர் நித்தியலட்சுமி, பாளையங்கோட்டையை சேர்ந்த, டாக்டர் ஆனந்தநாராயணி உள்ளிட்ட, அரசு டாக்டர்கள் தாக்கல் செய்த மனு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பற்றி, ௨௦௧௮ மார்ச், ௧௫ல், சுகாதாரத் துறை விளக்க குறிப்பேடு வெளியிட்டது.அதில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்கள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் தொடர் பணியில் இருந்திருக்க வேண்டும்; ஈட்டிய விடுப்பு, பேறு கால விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள், அதில் வராது' என, கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், பேறு கால விடுப்பு எடுத்த, பெண் டாக்டர்கள் யாரும், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாது; இது, சட்ட விரோதமானது. பேறு கால விடுப்பு, சட்டப்படியான உரிமை. குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றியதற்காக, ஈட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை.எனவே, முதுநிலை மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை, ரத்து செய்ய வேண்டும். எங்கள்விண்ணப்பங்களை ஏற்று, பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுக்களை, நீதிபதிகள்,எச்.ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில்,மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், வழக்கறிஞர்,வி.சுப்ரமணியன், அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், எஸ்.டி.எஸ்.மூர்த்தி, சிறப்பு பிளீடர், சி.முனுசாமி, மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன் ஆஜராகினர்.

'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள், அரசு டாக்டர்களாக உள்ளனர். தொலைதுார, கடினமான பகுதிகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளனர்.பேறு கால விடுமுறையையும் சேர்த்து, இரண்டு ஆண்டுகள் பணி முடித்த மனுதாரர்கள், கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது.பெண்களின் நலன்களை பாதுகாக்க, பேறு கால விடுமுறை மற்றும் இதர சலுகைகளை அரசு வழங்குகிறது.

கூடுதல் மதிப்பெண் : பெண்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கம் இருக்கும் போது, அந்த நோக்கத்தை, அரசு டாக்டர்களுக்கு பறித்துவிடக்கூடாது. எனவே, கூடுதல் மதிப்பெண்கள் பெற, மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது. கூடுதல் மதிப்பெண்வழங்குவதற்காக, பேறு கால விடுமுறையை, பணி நாட்களாக பரிசீலிக்கும்படி உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
லஞ்சமாக, 'சில்லி சிக்கன்' : பெண் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 22, 2018 01:19 

லக்னோ: வழக்குப் பதிவு செய்ய லஞ்சமாக, பீஸா மற்றும் சில்லி சிக்கன் கேட்ட, பெண் சப் - இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.உ.பி., மாநிலம், ஹன்ஸ்கன்ச் நகரில், ஓட்டல் நடத்துபவர், ரோஷித் பெரி. இவர், தன்னிடம், 7,000 ரூபாயை, ஒருவர் ஏமாற்றி விட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.இந்த புகாரை பதிவு செய்ய லஞ்சமாக, சாப்பாடு அனுப்ப வேண்டும் என, பெண் சப் - இன்ஸ்பெக்டர், சுமித்ரா தேவி நிர்ப்பந்தம் செய்துள்ளார். அவர் கேட்டதை சப்ளை செய்த ரோஷித் பெரி, பின், வழக்குப் பதிவு நகல் வாங்க, ஸ்டேஷனுக்கு வந்தார். ஆனால், பீஸா, சில்லி சிக்கன்' கொடுத்தால்தான், வழக்குப் பதிவு நகல் தர முடியும் என, சுமித்ரா தேவி அடம்பிடித்துள்ளார்.இதை வீடியோவாக பதிவு செய்த ரோஷித் பெரி, சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ, இணையதளத்தில் காட்டுத் தீ போல் பரவியது.இது தொடர்பாக விசாரணை நடத்திய உயரதிகாரிகள், சுமித்ரா தேவியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.

சென்னையில் முதல் முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 69

Added : ஏப் 22, 2018 00:38

சென்னை: சென்னையில், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 69 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டீசல் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில், 2014 மே, 13ல், முதல் முறையாக, ஒரு லிட்டர் டீசல் விலை, 60 ரூபாயை தாண்டி, அதாவது, 60.50 ரூபாய்க்கு விற்பனையானது.பின், அதன் விலை, 59 ரூபாய்க்கு கீழ் குறைந்த நிலையில், 2016 ஜன., 16ல், 62.48 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. மீண்டும், டீசல் விலை, 60 ரூபாய்க்கு கீழ் சரிவடைந்தது.இந்நிலையில், 2017 ஏப்., 12ல், ஒரு லிட்டர் டீசல், 60 ரூபாயை தாண்டி, 60.50 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, உயர்ந்து வந்த டீசல் விலை, தற்போது, முதல் முறையாக, சென்னையில், லிட்டர், 69 ரூபாயை தாண்டி, 69.06 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



ஆர்.டி.ஓ., ஆபீசில் கட்டணம் செலுத்த... காத்திருக்க வேண்டாம்!அடுத்த மாதம், 'ஆன்லைன்' அமலாகிறது

Added : ஏப் 22, 2018 00:11

பொள்ளாச்சி;வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, புதிதாக 'லைசென்ஸ்' பெறுதல், எல்.எல்.ஆர்., லைசென்ஸ் புதுப்பித்தல், வரி செலுத்துதல், வாகனங்களுக்கு பதிவு எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வாகன ஓட்டுனர்கள் வந்து செல்கின்றனர்.தினமும், 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிக்காக கட்டணம் மற்றும் வரி செலுத்த காத்திருக்கின்றனர். இதனால், அதிகாரிகளின் வேலைப்பளு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்தல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், சாலை வரியும், 'ஆன்லைன்' முறையில் செலுத்தலாம்.அடுத்த கட்டமாக, லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட அனைத்தும், 'விண்ணப்ப படிவம் 2' மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக விண்ணப்பங்கள் கொடுக்கும் நடைமுறைக்கு பதிலாக புதிய நடைமுறை கொண்டு வந்ததால், மக்கள் எளிதாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தலாம். இதற்கான ஆயத்தப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'அலுவலகங்களில் கட்டணம் செலுத்தும் நடைமுறைக்கு மாற்றாக, 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது.விண்ணப்ப கட்டணத்தை, 'ஆன்லைனில்' செலுத்திய பின், பணிகளை மேற்கொள்ளலாம். அடுத்த மாதம் முதல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்படும்,' என்றனர்.
நான்கு அலுவலகத்தில் திட்டம் ஆய்வு!

வெளியூர்களில் உள்ள வாகன ஓட்டுனர்கள், தங்களது சொந்த ஊரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதனை தவிர்க்க, தமிழகம் முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும், லைசென்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தலாம்.

முதற்கட்டமாக, திருச்செங்கோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட, நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், சோதனை முறையில் இத்திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு மற்ற பகுதிகளிலும் அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆண் உடலுக்குள் தவிக்கும் பெண் மனம்!'3 ஜி' மூன்றாம் பாலினம் குறித்த முக்கிய பதிவு

Added : ஏப் 21, 2018 22:56

திருநங்கைகள் மீதான இந்த சமூகத்தின் பார்வை, கேலியும், கிண்டலும் நிறைந்தது. பெற்றோர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் புறக்கணிப்பட்ட இவர்களை, இந்த சமூகமும் சேர்ந்து அவமதிக்கிறது. மனிதர்களாக பிறந்தும், இனத்தோடு இனம் சேர்ந்து வாழமுடியாத நிலையில், திருநங்கைகள் தனிமைப்படுத்தப்படுவது தொடர்கிறது. உடலால் ஆணாகவும், மனதால் பெண்ணாகவும் இரண்டு நிலைக்கும் இடையில் இருந்து அவர்களின் மனம் தவிக்கிறது.

எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு, திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் சட்ட ரீதியாக கிடைத்திருக்கிறது. இந்த அங்கீகாரம் அவர்களின் இருண்ட வாழ்க்கைக்குள் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது. திருநங்கைகளுக்கு இருக்கும் சமூக பிரச்னைகளை சித்தரிக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் பல எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது, '3 ஜி' அதாவது தேர்டு ஜெண்டர்.அர்ஜூன் படேல் இயக்கியுள்ள இந்த குறும்படம், திருநங்கைகளின் மீதான நம் சிந்தனைகளை உடைத்து எறிகிறது. ஆண், பெண் என்ற தகுதியுடன் இருப்பவர்களிடம் இல்லாத பல நல்ல குணங்கள், அன்பும், கருணையும் திருநங்கைகளிடம் இருப்பதை இந்த குறும்படம், எளிமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியுள்ளது.

கேரளா, கோவா மற்றும் தமிழகத்தில் நடந்த பல்வேறு குறும்பட போட்டிகளில் திரையிடப்பட்டு, சிறந்த குறும்படத்துக்கான விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த குறும்பட விழாவிலும் சிறந்த படத்துக்கான சூரி அவார்டை பெற்றுள்ளது. தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் பாபி சிம்ஹா, 'யு டியூப்' பில் இந்த படத்தை வெளியிட்டார்.

கோவையை சேர்ந்த நடிகர் சாய் கார்த்திக், தோற்றம், பேச்சு மற்றும் உடல் மொழி அனைத்தையும் அப்படியே உள்வாங்கி, ஒரு திருநங்கையாகவே உருமாறி நடித்திருக்கிறார். நமது பாராட்டுக்களை வாங்கிக் கொண்டு, நம்மோடு பேசினார்...இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக திருநங்கைகளோடு கொஞ்ச நாள் தங்கி இருந்தேன். அவர்களுடன் பேசிப் பழகி, அவர்களின் சுபாவம், பழக்க வழக்கம், அவர்களுக்குள்ள பிரச்னை என்ன என்பதை கற்றுக்கொண்டேன். திருநங்கைகள், அளவு கடந்த இரக்க குணம் உடையவர்கள்; தாய்மை உள்ளம், அவர்களுக்குள் புதைந்து கிடக்கிறது. இத்தனை அன்பும், பாசமும் உள்ள இவர்களை பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஒதுக்குவது, வேதனை தரும் புதிர்.திருநங்கையரின் துாய்மையான அன்பையும், கருணையையும் சுருக்கமாகச் சொல்கிறது, 3 ஜி. இந்த வேடத்தில் நடித்த பிறகு தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.சந்தோஷமாகச் சொல்கிறார் சாய் கார்த்திக்.-நமது நிருபர்-
சான்று பதிவேற்றம் புதிய நடைமுறை

Added : ஏப் 21, 2018 20:59

கோவை:அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கலந்தாய்வுக்கும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டியுள்ளது.
இந்நடைமுறையால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரயம் உள்ளிட்ட அசவுகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றுகளை சரிபார்க்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில், புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தேர்வர்கள், தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றுகளையும், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களில், பக்கத்துக்கு ரூ.5 வீதம் கட்டணம் செலுத்தி, 'ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்து, ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில், இச்சேவையை பெறலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 25.12.2025