Monday, April 8, 2019


மருத்துவர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தியது கோவா அரசு

By DIN | Published on : 08th April 2019 03:21 AM 

அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -லிருந்து 62ஆக உயர்த்தியது கோவா அரசு.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை ஆணையர் ஜயந்த் தாரி கூறியதாவது:
தொழிலாளர் துறை அண்மையில் உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இஎஸ்ஐ மருத்துவமனை, கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்களாக இருப்பவர்கள் இதன்மூலம் பலனடைவார்கள் என்றார் அவர்.

துணை முதல்வர் மனோகர் அஜ்காவன்கரின் சகோதரரும், மருத்துவருமான ஸ்ரீகாந்தும் இதன்மூலம் பலனடைவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து கோவா அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் பிரசாந்த் தேவிதாஸ் கூறுகையில், "ஊடகங்களில் வெளியான செய்தியை கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இதுதொடர்பான விவரங்களை கோரியுள்ளோம். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதை எதிர்க்கிறோம்' என்றார்.

ஸ்ரீகாந்தை செய்தியாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. துணை முதல்வர் அஜ்காவன்கங் கூறுகையில், "சட்டப்படிதான் மருத்துவர்களின் ஓய்வு வயது உயர்த்தப்பட்டது' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024