Sunday, June 1, 2025

பள்ளிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாவை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு


பள்ளிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாவை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு


ADDED : ஜூன் 01, 2025 05:15 AM



சென்னை: பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ள பாராட்டு விழாவை புறக்கணிக்க, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

விபரம் சேகரிப்பு

இதற்காக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அதேவேளை, தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது விசாரணையும் நடத்தப்பட உள்ளது.

மேலும், அந்த பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் சென்று, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால், இந்தாண்டு முழு தேர்ச்சி அடைந்த பள்ளிகள், அடுத்தாண்டு இதே நிலையை தொடருமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், இந்தாண்டு பாராட்டு விழாவில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும், அடுத்தாண்டு விசாரணை வளையத்துக்குள் வரும் வாய்ப்பு உள்ளது.

உளவியல் சார்ந்தது

அதனால், நிரந்தரமில்லாத இந்த பாராட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி என்பது, முழுக்க முழுக்க ஆசிரியர்களை சார்ந்தது அல்ல. அது, பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகச்சூழல் மற்றும் உளவியல் சார்ந்தது. அவற்றை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறன், ஈடுபாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தேர்ச்சி விகிதம் அமையும் என்ற நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ப்பந்திப்பதும், அது நிகழாதபோது, ஆசிரியர்களை குற்றவாளிகளாக்குவதும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...