Sunday, October 18, 2015

பம்பையில் ஆடைகளை வீசினால் ஆறு ஆண்டு சிறை: கேரள ஐகோர்ட் உத்தரவு..dinamalar

சபரிமலை: பம்பையில் பக்தர்கள் ஆடைகளை வீசி எறிந்தால் அவர்களுக்கு ஆறு ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், இல்லாத ஆச்சாரங்களை உருவாக்கும் குருசாமிக்கும் தண்டனை உண்டு என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை பயணத்தில் பக்தர்கள் பம்பையில் குளிக்க வேண்டும். பம்பையில் குளிப்பதன் மூலம் பாவங்கள் களையப்படுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் பக்தர்கள் இந்த நதியையும் அசுத்தப்படுத்துவதுதான் வேதனை. தரிசனம் முடிந்து வரும் போது தங்கள் உள்ளாடைகள் உள்ளிட்ட அனைத்து ஆடைகளையும் வீசி எறிவது, பம்பையில் உணவு சாப்பிட்டு விட்டு அதன் எச்சில் இலைகளை பம்பையில் கொண்டு போடுவது என இல்லாத ஆச்சாரங்கள் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரிகள், தேவசம்போர்டு என அனைத்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மகரவிளக்கு காலத்தில் பம்பை நதி மிக மோசமாக அசுத்தமாகிறது.
இது தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் பேரில் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
பம்பை நதி அசுத்தம் அடையாமல் இருக்க மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அணிந்த ஆடைகளை பம்பையில் போட வேண்டும் என்ற ஆச்சாரம் சபரிமலையில் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு ஆடைகளை வீசுவது தடை செய்யப்படுகிறது. மீறி வீசுபவர்களுக்கு ஒன்றரை முதல் ஆறு ஆண்டு வரை சிறைத்தடைனையும், அபராதமும் விதிக்கலாம்.
பக்தர்களை அழைத்து வரும் குருசாமிகளின் உத்தரவு படிதான் பக்தர்கள் பம்பையில் ஆடைகளை வீசுகிறார்கள். இனி குருசாமிகள் அப்படி செய்தால், குற்றம் செய்ய துண்டியதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆடைகளை போடுவதற்கு இணையான தண்டனை வழங்கலாம். இந்த விஷயத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தேவசம்போர்டும், போலீசும் உறுதுணையாக இருக்க வேண்டும். பம்பை நதிக்கரையில் அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளும், பம்பையில் ஸ்பெஷல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பையில் ஆடைகளை வீசினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற விபரத்தை பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்த தேவசம்போர்டும், மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை முடிக்க யு.ஜி.சி., புது கெடு

'படிப்பு காலம் தவிர கூடுதலாக, மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, 'ரேங்கிங்' வழங்கப்படும்' என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி, அறிவித்துள்ளது.இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிப்போர், பல காரணங்களால், இடையில் படிப்பை விட்டாலோ, சில பாடங்களில் தேர்ச்சி அடையா விட்டாலோ, ௧௦ ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். இந்த காலநீட்டிப்பு பல்கலைக்கு பல்கலை, கல்லுாரிக்கு கல்லுாரி மாறுபடும்.இந்த நிலையில், யு.ஜி.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'இளங்கலை அல்லது முதுகலை படிப்பில், அதற்கான கால அளவுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். முடிக்காதவர்கள், இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம். அதையும் தாண்டினால், ஓர் ஆண்டு கூடுதலாக வழங்க முடியும். அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பட்டத்துக்கு,'ரேங்கிங்' வழங்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்புக்கு கல்லுாரி ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:எப்படியாவது படிக்க வேண்டும் என முயற்சி எடுப்போர் மட்டுமே, தேர்வை இடைவெளி விட்டு எழுதியாவது பட்டம் பெறுவர். அந்த வாய்ப்பு மறுக்கப்படுவோருக்கு இந்த உத்தரவு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

பெண் எனும் பகடைக்காய்: மதிப்பிழந்துபோன பெண் உழைப்பு ...............பா.ஜீவசுந்தரி



வீட்டுப் பணிப்பெண்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாத பத்திரிகைகள் ஏதும் உண்டா? உண்மையில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வராவிட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு.

வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.

இளக்காரமான பணி

இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சக மாணவியைப் பார்த்து ‘நீயெல்லாம் கரிச்சட்டி கழுவத்தான் லாயக்கு’ என்று ஆசிரியப் பெருந்தகை இட்ட சாபத்தைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்! கரிச்சட்டி கழுவுதல் அவ்வளவு கேவலமா?

வீட்டுப் பணிப் பெண்கள் யார்?

பெரும்பாலும் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள். கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள். ஆண்களின் வருமானம் முழுமையாகக் குடும்பத் தேவைகளுக்குச் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத குடும்பங்களிலிருந்து வருபவர் கள். ஏனென்றால், வந்தால் வீட்டுக்கு லாபம், இல்லையேல் நாட்டுக்கு என்று ‘டாஸ்மாக்’ கடைக்குச் சென்று சேரும்.

எளிதானதா வீட்டுப் பணி?

விடியும் முன்பே தொடங்கும் இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை. கணவன், குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆறு, ஆறரை மணிக்குக் கிளம்பினால் நாலு அல்லது ஐந்து வீடுகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குப் பிற்பகல் 2 அல்லது 3 மணிகூட ஆகலாம். பணி செய்யும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு திக்கில் இருக்கும். அதற்கான போக்குவரத்து அல்லது நடை நேரம் பணி நேரமாகக் கணக்கில் வராது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவும் முடியாது. கொசுறாக அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். மாலையிலும் சில வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக வெளியில் 14 மணிநேரம், தனது வீட்டில் ஐந்து, ஆறு மணிநேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

பணிச் சுமையை மிஞ்சும் மன வலி

தனது நேர்மையை எப்போதுமே நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலைதான் அதற்கும் காரணம்! நம்பிக்கையின்மை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டு அணுகுவது, வேலைக்குதான் வந்துவிட்டார்களே என்பதற்காக மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களுக்காகவே ‘ஸ்பெஷலாக’ தயாரித்து அளிக்கப்படும் காபி, டீ, சில வீணாய்ப்போன, எஞ்சிப்போன உணவு வகைகள், ஓயாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது இப்படிப் பல.

பிரச்சினைகளிலேயே மிகவும் சிக்கலானது, வீட்டு எஜமானர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். பெரும்பாலும் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், உண்மை என்ன என்பது மனசாட்சிக்குத் தெரிந்தே இருந்தாலும் எந்த வீட்டு எஜமானியும் தங்கள் வீட்டு ஆணை அது கணவனோ, மகனோ, அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் விட்டுத்தரத் தயாராக இருப்பதில்லை. இங்கும் பணிப்பெண்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவாள். அவள் வேலை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

பணிப்பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்றால், ஒரு சிலர் கைக்கு அகப்படும் எளிய பொருட்களை எடுத்துக்கொண்டு போவது, முன்னறி விப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு காலை வாரி விடுதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

எத்தனை காலத்துக்கு இந்த வேலை?

சரி, ஒரு பெண் எத்தனை காலத்துக்கு வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்க முடியும்? மேலும் அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளால் ஏற்படும் உடல் பாதிப்புக்கு யார் பாதுகாப்பு? அனைத்து விதமான துணிகளையும் சலவை இயந்திரத்தில் துவைத்துவிட முடியாது. கால் மிதி, குழந்தைகளின் துணிகள், பள்ளிச் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகள், சாக்ஸ் போன்றவை இவர்களின் ‘கைவண்ண’த்துக்காகவே காத்திருக்கும்.

சோப்புத் தூள், சோப்புக் கட்டிகள், பாத்திரம் துலக்கும் பவுடர், சோப்பு, சோப்பு நீர்க் கரைசல்கள் போன்ற வேதியியல் பொருட்களை நாள் முழுவதும் கையாள்வதால் அவை கைகளைப் பதம் பார்க்கின்றன. கைகள் எப்போதும் ஈரத்தில் ஊறியபடி இருப்பதால் எந்த நேரமும் வலி இருக்கிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இவ்வளவு கடினமான பணிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கேற்ப நல்ல சத்துள்ள உணவும் வேண்டுமல்லவா? அது இல்லாததனால் உடல்ரீதியாகவும் தளர்ந்து போகிறார்கள்.

எல்லா வீட்டிலும் எல்லா வேலைகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஏதாவது ஒரு வேலையை மட்டும் ஒவ்வொரு வீட்டில் ஏற்பது என்ற நிலையும் இருக்கிறது. அப்படியானால் எந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம்? வீட்டுப் பணிப்பெண்களுக்கான அமைப்புகள் இருந்தபோதும் அனைவரும் அதில் பங்கேற்பதில்லை. எத்தனையோ முறைசாராத் தொழில்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கிறது. அவர்களுக்கு வாரியம் அமைக்கிறது. ஈ.எஸ்.ஐ., காப்பீடு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பணிப்பெண்களுக்கு இது எதுவும் இல்லை. ஊதியத்தைப் பொறுத்தவரை குத்துமதிப்பாக ஏதோ கொடுக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள இந்த நிலையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பணிப்பெண் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவர்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை இருக்கிறது.

கொசுறு



கடந்த 2009-ம் ஆண்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அரசு நியமித்தது. வேலை செய்யக்கூடிய நகரங்களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ. 25/- முதல் ரூ. 30/- வரை ஊதியமாக நிர்ணயிக்கலாம் என்று அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50/- ஊதியமாக அளிக்கப்பட வேண்டுமென்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வருமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

மனசு போல வாழ்க்கை 29: கோபத்தைக் கரைக்கலாமே? .............. டாக்டர். ஆர். கார்த்திகேயன்



கோபம் ஒரு பலவீனமான உணர்ச்சி. இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். எரிச்சல், ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமையில்லாதவர்களின் ஆயுதம். ஆனால், நாம் கோபத்தை வீரமாகப் பார்க்க பழகியிருக்கிறோம்.

நமது ஆக்ஷன் ஹூரோக்கள் அனைவரும் கோபப்படுவார்கள். அதனால் கோபத்தை நாயக அடையாள மாக பார்க்க ஆரம்பித்தோம். வீட்டிலும் கோபப்படும் பெற்றோரைக் கண்டு அதிகம் பயந்தோம். கோபப்பட்டால்தான் காரியம் ஆகும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டோம். மீட்டிங்கில் பாஸ் கோபப்பட்டு கடிந்து கொண்டால் அதுதான் அதிகார தோரணை என்று வியந்தோம். போட்டியும் பொறாமையும் இயல்பு என்று ஆகிவிட்ட புது உலக நியதியில் கோபத்தை சகஜமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

பெண் கோபம்

கோபத்தில் கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் செய்திகளாக வரும் போது மரத்துப்போய் வேறு சிந்தனையில்லாமல் அடுத்த பக்கம் திருப்புகிறோம். “இந்த வயசிலேயே என்ன கோபம் தெரியுமா என் பாப்பாவுக்கு?” என்று பெருமை பேசும் தாய் விரைவிலேயே அந்த குழந்தைக்குத்தான் அடிமை ஆவதை உணர ஆரம்பிக்கிறாள். “அவன் கேட்டது கிடைக்கலேன்னா வீட்டை இரண்டு பண்ணிடுவான். அவ்வளவு கோபம். அவ்வளவு பிடிவாதம்!” என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்பது சாதாரணமாகிவிட்டது.

என்னிடம் மன சிகிச்சைக்கு வரும் பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் நம்மிடம் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான்.

கோபத்தின் வெளிப்பாடுகள் மாறுகின்றன. கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு அழகாய் சண்டையை ஆரம்பிப்பதில் பெண்கள் கில்லாடிகள். ஆண்கள் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் குறைந்தவர்கள். பேச்சில் ஜெயிக்க முடியாததால் இயலாமையை மறைக்க கையை ஓங்குவான். உள்ளத்தின் வன்முறையை உடல் வன் முறையாக மாற்றி விடுகிறார்கள்.

கோபத்தின் நோய்

உடலின் உள்ளே காலகாலமாய் அழுத்தி வைக்கப்படும் கோபம்தான் புற்று நோயாக மாறுகிறது என்பது லூயிஸ் ஹேயின் கூற்று. குறிப்பாக பெண்களின் மார்பக, கர்ப்பப்பை புற்று நோய்கள் எல்லாம் ஆண்கள் மேலுள்ள தீராத கோபத்தில் ஏற்படுபவை என்கிறார். தன் பெண்மைச் சின்னங்களை அழிப்பதை தன் வாழ்வில் தன்னைக் காயப்படுத்திய ஆண் அல்லது ஆண்களுக்கு தரும் தண்டனையாக உள் மனதில் அவள் பாவிக்கிறாள் என்று லூயிஸ் ஹே சொல்வது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

கோபம் என்பது பலவீனம் என்பதை உணரும் போதே பாதி வேகம் குறைகிறது. இடம் பார்த்து வரும் கோபம் வெற்றுக் கோபம் தானே? ஒரு பக்கத்து கோபத்தை இன்னொரு பக்கத்தில் காண்பிப்பது என்ன வீரம்?

பின் “ரௌத்திரம் பழகு” என்றானே மகாகவி பாரதி? அவன் சொல்ல விரும்பியது இதுதான்: “சமூக அநீதிகளைக் கண்டால் தைரியமாகத் தட்டிக்கேள்!” கண்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது ரௌத்திரம் அல்ல. சமூகக் கொடுமைகளை எதிர்க்கையில்கூட கண்ணியத்தையும் நயத்தையும் கையாள்பவர்கள் ஞானிகள். நம்மிடையே வாழும் நல்லகண்ணு போல.

கருத்தில் எதிர்நிலையில் இருந்தாலும், நடப்பவைக்கு சம்மதம் இல்லாவிட்டாலும், அதற்கு எதிராக போராடினாலும் அதை பக்குவமாகக் கையாளத் தெரிந்தவர்கள்தான் நிஜமான வெற்றியாளர்கள். காந்தி மகானுக்கு கடைசிவரை ஆங்கிலேயர்களிடம் பகையில்லை. அவர்களிடம் பேசுகையிலும் நகைச் சுவை உணர்வுக்கு குறைவில்லை.

உறவுகளில் வரும் கோபம், எதிர்பார்ப்புகள் பொய்ப்பதினால் வருபவை. சுய நலமான கோபம். “இதை உன்னை செய்ய வைக்க என்னால் முடியவில்லையே?” என்பதுதான் கரு. எல்லாவற்றையும், எல்லாரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். வாழ்க்கையை அதன் இயல்பில் ஏற்று வாழ்பவர்கள் கோபத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மேலைநாடுகளில் பிரபலமாகி வருகின்றன. ஒரு உள சிகிச்சையாளன் என்பதை விட கோபத்தால் வெல்ல நினைப்பவனின் அனுபவரீதியான ஆலோசனைகள் இதோ:

கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யலாம். முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும்.

கோபம் எனும் வெடிகுண்டு

கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர ( யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல் நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது.

கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக் கொண்டிருப்பவரை சொந்த குழந்தைகளே அண்ட பயப்படுவார்கள். சொல்வதைக் கோபப்படாமல் சொல்லத் தெரிந்துகொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.

எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.

“கோபத்தால் என் உடலில் ஏற்பட் டுள்ள அனைத்து பாதிப்புகளையும் வெளியேற்றுகிறேன்” என்று அஃபர்மேஷன் கூறுங்கள். உங்களை முதலில் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான கோபங்களும் காலத்தால் அடித்துச் செல்லப்படுபவை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மிகப் பயணத்தில் கோபத்தை முழுமையாகக் கரைத்தல் ஒரு முக்கியமான மைல் கல். அதனால்தான் பேருண்மையை கண்ட ஞானிகள் தவக்கோலத்திலும் ஒரு புன்னகை சிந்திக்கொண்டிருப்பார்கள்.

புத்தரின் புன்னகையை விட ஒரு செறிவான புன்னகை எங்காவது உண்டோ?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

மனசு போல வாழ்க்கை 30: அன்பும் ஆக்கிரமிப்பு உணர்வும் .... டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நாம் அன்பு செலுத்தும் மனிதர்கள் மீதே தொடர்ந்து வன்முறை நிகழ்த்திக் கொண்டிருப்பது வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று.

“தெரிந்தே கெடுப்பது பகையாகும்; தெரியாமல் கெடுப்பது உறவாகும்!” என்ற கண்ணதாசன் வரிகள் இதை மிகவும் எளிமையாகச் சொல்லிவிடுகின்றன

நல்ல உள்நோக்கம்

நாம் நல்லது செய்வதாக நினைத்துச் செய்யும் பல விஷயங்களால் பாதகம் நிகழ்ந்திருக்கின்றன. “உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்” என்று ஆரம்பித்து பெற்றோர் செய்த பல காரியங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது இயற்கை.

“பொண்ணு கம்ப்யூட்டர்தான் படிக்க ஆசைப்பட்டா. ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போனால் என்ன செய்யறாங்கன்னுதான் சினிமாலயும் பத்திரிகையிலயும் காட்டறாங்களே. அதான் ஒரே மனசா வேண்டாம்னு சொல்லிட்டேன். வேற எந்த வேலைக்கு வேணா போம்மான்னுட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தேன்.

தன் மகள் மீது வைத்துள்ள மிதமிஞ்சிய அன்பினாலும் பாதுகாப்பு உணர்வாலும், தனக்குக் கிடைத்த தகவல் அறிவை வைத்துக்கொண்டு, மகள் வாழ்க்கைக்கு உதவும் என்று தான் இந்த முடிவை எடுக்கிறார். அவரின் உள் நோக்கம் உன்னதமானது. ஆனால் பாதிப்பு மகளுக்கு நிகழ்கிறது.

அறியாமையாலும் தவறான தகவலாலும் எடுக்கப்படும் பல முடிவுகளுக்குப் பின்னும் ஒரு நல்ல உள் நோக்கம் கண்டிப்பாக இருக்கும்.

ஆக்கிரமிப்பு உணர்வு

தீவிரவாதியின் செயல் தீமை செய்கிறது. ஆனால் மீட்சிக்கு அதுதான் வழி என்று நம்புகிறான் அவன். அதுதான் அவனுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. தன் உயிரையே தியாகம் செய்கிறான். உள் நோக்கம் சிறந்தது. ஆனால் செயல் தீங்கானது.

குழந்தையை அடித்து விளாசும் ஒரு தாய் ஒழுக்கத்துடன் வளர அடி அவசியம் என நம்புகிறாள். உள்நோக்கம் சிறந்தது. ஆனால் உடலாலும் மனதாலும் காயப்படும் அந்தக் குழந்தையின் வலி அந்த உள் நோக்கத்தால் மாறிவிடாது. வளர்கையில் அந்த குழந்தை அதை எப்படி எடுத்துக் கொள்ளும் எனவும் தீர்மானிக்க முடியாது.

நாம் யாரை அதிகம் துன்பப்படுத்தி யிருக்கிறோம்? தாயை. காதல் வசப்பட்டவரை. வாழ்க்கைத்துணையை. குழந்தையை. உற்ற தோழரை. இவர்களைத் தான். அளவற்ற அன்பு ஆக்கிரமிப்பு உணர்வைத் தருகிறது. என் காதலி எனக்கு மட்டும் தான் என்ற ஆக்கிரமிப்பு வந்தவுடன், “அவனுடன் அதிகம் பேசாதே” என்று தடை போட வைக்கிறது. பொறாமை கொள்ள வைக்கிறது.

விலங்கின் நியாயம்

நாம் நினைப்பது கிடைக்காதபோது சந்தேகப்பட வைக்கிறது. கோபம் வருகையில் தகாத வார்த்தைகள் பேச வைக்கிறது. என்னுடன் பேசாதே என்று தள்ளிப்போக வைக்கிறது. அன்பை வைத்துக் கொண்டு வெறுப்பைக் காட்ட வைக்கிறது. பொய் பேசத் தூண்டுகிறது. உறவுகளில் நாடகம் துவங்குகிறது.

“இவனுக்கு எவ்வளவு செய்தேன் நன்றி இருக்கா?” என்ற கணக்கு பார்ப்பது இதன் தொடர்ச்சியில்தான். “உங்களுக்கு மனசாட்சியே கிடையாது” என்று நீதிபதியாகத் தீர்ப்பு கூற வைக்கும். “ என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது” என்று போலி தத்துவம் பேச வைக்கும்.

தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பயத்தால் நம்மைத் தாக்கும் விலங்கின் நியாயம் புரிந்தாலும் அது விளைவை எள்ளளவும் மாற்ற முடியாது. வாழ்க்கையின் எல்லாச் சம்பவங்களுக்கும் இது பொருந்தும்.

இதன் நீதி: “உங்கள் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் இழைக்கும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் உங்கள் உள் நோக்கத்தைக் காரணமாகக் காட்டி நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது!”

பல வருஷ பழங்கதை

எவ்வளவுதான் அன்பு இருந்தாலும் அவரிடம் ஆக்கிரமிப்பு உணர்வு இருந்தால் அது கூண்டுக்குள் சிக்கியிருக்கும் உணர்வைத் தரும். எவ்வளவு நன்மைகள் செய்தாலும் நன்மை செய்தவர் சுடு சொற்கள் பேசினால் அது காயங்களைத்தான் தரும். மிகவும் சரியான நோக்கத்துக்காகத்தான் பிடிவாதம் பிடிக்கிறார் என்றபோதும் அந்த பிடிவாதம் ஒரு இறுக்கத்தைத்தான் தரும்.

“ நான் சென்னை வந்த போது காசில்லை. எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு என் கஷ்டம் ஏதாவது உண்டா? படிக்கறத தவிர என்ன வேலை..?” என்று கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருந்த அப்பாவின் பேச்சை இடைமறித்துச் சீரியஸாகக் கேட்டான் மகன்: “பீட்சாவை ஆர்டர் பண்றோமா? இல்லப் போய்ச் சாபிடறோமா?”

நொந்து போய் என்னிடம் மீண்டும் அந்தச் சம்பவத்தை வாழ்ந்து பார்த்து மனம் உடைந்து சொன்னார் அவர். “என் அக்கறையே அவனுக்குப் புரியலை. நீங்க தான் பேசிப் புரிய வைக்கணும்!”

மகன் பளிச்சென்று பதில் சொன்னான்: “இந்தக் கதையைப் பத்து வருஷமா கேக்கறேன். புதுசா கேக்கற மாதிரி எப்படிக் கேக்க முடியும்? வெளிய போலாம்னு சொல்லிப் பேச ஆரம்பிச்சு ஒன்பது மணி ஆச்சு. ஒரே பசி. அதான் குறுக்கே பேசிக் கேட்டேன்!”

நம் நோக்கங்கள் நம் செயல்களை நியாயப்படுத்தலாம். ஆனால் செயல்களின் விளைவுகளை அவை மாற்றுவதில்லை.

எவ்வளவு நியாயமான காரணத்துக்குப் போட்டு உடைத்தாலும் கண்ணாடிக் கிண்ணம் உடையாமல் இருக்குமா என்ன?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

அரசாங்க வேலையில் நிம்மதி இல்லையா? ....பி.செந்தில்நாயகம்



திருச்செங்கோடு காவல் அதிகாரி விஷ்ணுபிரியாவின் மரணம் பணிச்சூழல் பாதுகாப்பும் பணிச்சூழலும் தொடர்பான விவாதத்தையும் கிளப்புகிறது. அரசாங்க வேலையில் நிம்மதி இல்லை, பணிச்சூழல் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அரசாங்க வேலையில் இருப்பவர் களுக்கு இந்த மரணம் ஏற்படுத்தலாம். இனிமேல் அரசாங்க வேலைக்குப் போகலாமா? என்று பயமும் படித்த பட்டதாரிகளுக்கு வரலாம்.

உண்மையில் அரசாங்க வேலை, பணிச்சூழல் பாதுகாப்பு நிறைந்தது மட்டுமல்ல, ஒரு சிறந்த வேலை வாய்ப்பு என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அந்த அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு, தங்களது பணியாளர்களுக்கு, பணிச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களும், சலுகைகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கின்றன என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

பாதுகாக்கும் சட்டம்

அரசாங்க ஊழியர் தன் பணியை செய்யும்போது அந்தப் பணியை செய்யவிடாமல் பலரோ தனி ஒருவரோ இடையூறு செய்தாலோ, பயமுறுத்தினாலோ, அப்படி தடை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் வகையில் நம் இந்திய தண்டனைச் சட்டத்தில் பல பாதுகாப்புகள் உள்ளன. பணிசெய்யும் அரசாங்க ஊழியருக்கு, சக அரசாங்க ஊழியரோ, உயர் அதிகாரிகளே கூட தொந்தரவு அல்லது கொடுமை செய்தால், அதே தண்டனைச் சட்டம் மூலம் உயர்அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பாதுகாப்பு கொடுக்கிறது.

நீதிமன்றம் செல்லலாம்

நல்லபடியாக, நேர்மையாக பணிசெய்யும் அரசாங்க ஊழியர் ஒருவரை, உயர் அதிகாரி, வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தோடு மிரட்டினாலோ செயல்பட்டாலோ, அதற்கு மேல் உள்ள உயர்அதிகாரியிடம் புகார் செய்யலாம். உதாரணமாக, அரசாங்க வருவாய்த் துறையில், கிராம நிர்வாக அதிகாரியை மேல் அதிகாரியான தாசில்தார் வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என்று பொய்யான காரணங்களைக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தினால், உடனே தக்க ஆதாரங்களுடன் தாசில்தாருக்கு அடுத்த மேல்அதிகாரியான மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் செய்யலாம். அவரும் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர், அதற்குமேல், அரசாங்கத்தின் துறைவாரியான செயலர்கள், அதற்குமேல் அமைச்சர்கள், அவர்களும் உங்கள் புகாருக்குத் தேவையான நீதியை வழங்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம்.

விதிமுறைகள்

அரசு வரையறை செய்துள்ள விதிகளின்படி தன்னுடைய பணியை அரசாங்க ஊழியர் ஒருவர் செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது, சட்டவிதிகளின் படி பணி செய்யக்கூடிய ஊழியரை பழிவாங்குவது, கொடுமைப்படுத்துவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது அச்சுறுத்துவது போன்ற செயல்களை உயர் அதிகாரிகள் செய்தால் அந்த அதிகாரிகளின் செயல்களில் இருந்து நிவாரணம் மற்றும் பரிகாரங்களைத் தேடிக்கொள்ளலாம். இது தொடர்பாக, தொடர்ந்து அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

மேலும் TamilNadu Government Servants Conduct Rules 1973 (Corrected up to 2010 - 2011) எனும் தமிழக அரசின் விதிமுறைகளில் மிகவும் தெளிவாக அரசாங்கப் பணியாளர் கடைப்பிடிக்கவேண்டியவை விளக்கப்பட்டுள்ளன. இதில் எல்லா விவரங்களும் உள்ளன. இதன்படி நடந்துகொண்டாலே எந்த பிரச்சினைகளும் வராது.

நிவாரணம் உண்டு

நேர்மையாகச் செயல்படும் அரசாங்க ஊழியரை, மேல் அதிகாரி பழிவாங்க வேண்டும் என்று தவறான, பொய்யான புகார்களின் மீது நடவடிக்கை எடுத்தாலும், அதாவது முதலில் மெமோ கொடுத்தால், பாதிக்கப்பட்ட ஊழியர் தான் தவறு செய்யவில்லை என்று முழு விவரத்துடன் தக்க ஆதாரத்துடன் சுய விளக்கம் கொடுக்க வேண்டும், அப்படி சரியானபடி பாதிக்கப்பட்ட ஊழியர் சுயவிளக்கம் கொடுத்தும், திருப்தி இல்லை என்று மீண்டும் தற்காலிகப் பணிநீக்கம் கொடுத்தாலும், அப்போது கொடுப்பட்ட தற்காலிகப் பணிநீக்கம், உங்களது பதவி உயர்வை பாதிக்கும் என்றோ, சம்பளம் நிறுத்தப்படும் என்றோ, பணிஇடமாற்றம் செய்யப்படும் என்றோ பயம் நிச்சயம் ஏற்படும். ஆனால் அது அவசியமில்லை.

தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு விசாரணை முடியும் வரை 6 மாத காலத்துக்குப் பாதி சம்பளம் கிடைக்கும், விசாரணை, 1 வருடம் வரை தொடர்ந்து அதற்கு மேல் (75%) முக்கால் சம்பளம் கிடைக்கும். புகார் மீதான குற்ற விசாரணை தொடர்ந்து 1 வருடத்துக்கு மேல் முடிக்கப்படாவிட்டால் மீண்டும், 100 சதவீதம் முழுச்சம்பளம் கிடைக்கும். விசாரணை முடிந்து வரும் தீர்ப்பில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல் முறையீடு சென்று நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

புத்திசாலித்தனம்

தற்காலிகப் பணிநீக்கமோ, நீக்கமோ செய்யப்படும் உங்கள் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், உங்களிடம் பிடிக்கப்பட்ட சம்பளம் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும். பணியில் உள்ள அரசு ஊழியரை மேலதிகாரி வேண்டுமென்றே தகாத முறையில் நடத்தினாலோ, அல்லது மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, அவர் மீது மேல் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். பயப்படவேண்டியது இல்லை.

பெண் ஊழியர்களிடம் தகாத வகையில் இரட்டை அர்த்தங்களுடன் ஆபாசமாகப் பேசினாலும் நடந்து கொண்டாலும் அவர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு அரசாணைகள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் கொடுமை சட்டங்கள் மூலமும் நிவாரணம் கிடைக்கும்.

மேலும் அந்த குறிப்பிட்ட அதிகாரியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ள விடுப்பில் செல்லாம் அல்லது பணி இடமாற்றம் கேட்டுப் பெறலாம்.

அரசாங்க அதிகாரிகள் சிலர்தான் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்களிடமிருந்து சமயோசிதமாகத் தப்பிக்க முயல வேண்டும். முடியாவிட்டால், அவர்மீது புகார், விடுப்பு எடுத்துக்கொள்ளுதல், அல்லது பணி இடமாற்றம், என்றவகையில் செயல்படுவது புத்திசாலித்தனமான செயல் என்கிறார்கள் அனுபவசாலியான ஊழியர்கள்.

அரசாங்கமே பாதுகாப்பு

பொதுவாகவே, அரசு ஊழியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி முடிந்ததும், அரசு அலுவலக வேலை நேரம் முடிந்ததும், வீட்டுக்குச் செல்லலாம். இரவு 9 மணி வரை கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அதுவும் பெண் ஊழியர்களை, இரவு நேரத்தில் பணி செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அரசு ஆணைகள் இருக்கின்றன.

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணி இடமாற்றங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பணியில் இருக்கும்போது, இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகள் தரப்படுகிறது.

ஆகவே, படித்த பட்டதாரிகள் அரசுப் பணியில் பாதுகாப்பு இல்லை என்று பயப்பட வேண்டியது இல்லை. தனியார் வேலைகளைவிட அதிகமான பணிச்சூழல் பாதுகாப்பு அரசாங்கப் பணியில் உண்டு.

பணிச்சூழல்: பெண் பணியாளர்களை எளிதில் தாக்குகிறதா மன அழுத்தம்? ...கே.சாருமதி


இன்று பெரும்பாலான துறைகளில் ஆண்களோடு பெண்களும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் திறமையை நிரூபித்துவருகிறார்கள். வீடு, அலுவலகம் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்வதில் பெண்களே பெரும்பாலும் திறமைசாலிகள். ஆனால் இப்படி இரண்டு இடங்களிலும் அளவுக்கதிகமாக வேலை செய்வது ஆண் - பெண் இருபாலருக்குமே நல்லதல்ல என்றாலும் ஆண்களைவிட பெண்களே அதிக அளவு ஆபத்தைச் சந்திக்கிறார்கள்.
அதுவும் வேலைக்குப் போகும் பெண்களில் 25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் அதிகபட்ச மன அழுத்தத்துக்கு ஆளாவதாகச் சொல்கிறது ஒன்டூஒன்ஹெல்ப் நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் முப்பது நகரங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் இந்த நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
திருமணம் மற்றும் உறவுகளைக் கையாள்வதில் ஏற்படுகிற சிக்கல், வேலை சார்ந்த மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட காரணிகளை முன்வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
“எங்கள் ஆய்வின்படி உறவுச் சிக்கல்களால் கிட்டத்தட்ட 37 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தூண்டப்படுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். திருமண உறவால் ஏற்படுகிற சிக்கலால் 33 சதவீதம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 13 சதவீத பணியாளர்கள் தனிப்பட்ட காரணிகளாலும் 12 சதவீத பணியாளார்கள் வேலை சார்ந்த சிக்கல்களாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்கிறார் ஒன்டூஒன்ஹெல்ப் நிறுவனத்தின் இயக்குநர் கருணா பாஸ்கர்.
பல்வேறு காரணிகளால் இப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகும் பணியாளர்களின் எண்ணிக்கை கவலை தருவதாகச் சொல்லும் கருணா, “இவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவதில்லை. நன்கு படித்து, நல்ல பதவியில் இருக்கிறவர்கள்கூட இதற்காக யாருடைய உதவியையும் நாடுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதுவும் இள வயது பணியாளர்களே எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்” என்கிறார்.
ஒருவரை ஆட்டிப்படைக்கிற இந்த மன அழுத்தம் அவர்களது தனிப்பட்ட ஆளுமையை மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பணியிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகப் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தால் உற்பத்தியும் அதிக அளவில் பாதிப்படைகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நிறுவனத்தில் ஒரு பணியாளர் இறந்துவிட்டால் அந்த இறப்பு அவருடன் பணிபுரிந்தவர்களையும் அவருடைய மேலதிகாரிகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. அந்தப் பணியாளரின் மரணத்துக்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருப்போமோ என்ற குற்றவுணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறதாம்.
தேசிய அளவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் தென் மாநிலங்களான கர்நாடகமும் தமிழகமும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.
“காரணம் இந்த மாநிலங்களில் இது போன்ற இறப்புகள் முறைப்படி பதிவுசெய்யப்படுகின்றன. தவிர மன அழுத்தச் சிக்கல்கள் குறித்து இங்கு ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தலைதூக்கியதாகவும் சில வழிகளில் முயன்றதாகவும் சென்னையில் மட்டும் 209 பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் அவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் 25 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்” என்கிறார் கருணா.
சமூகத்தின் ஆதரவு இருந்தால் இதுபோன்ற பணியாளர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தருகிறார் கருணா.
“பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற நலப் பணிகளைச் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இந்தப் பிரச்சினையைக் கருத்தில்கொள்ள வேண்டும். தங்கள் பணியாளர்களின் வேதனையைப் புரிந்துகொண்டு அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவ வேண்டும்” என்கிறார் மெரிட்டிராக் திறன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மேனன். ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் உளவியல் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே பணி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
“ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் வெற்றியிலும் பணியாளர்களின் மனநலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான மனநலப் பராமரிப்பு இல்லாத இடத்தில் பணியாளர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றி பிரச்சினை உருவாகலாம். சமயத்தில் இதுபோன்ற மனநலப் பாதிப்புகள், நிறுவனத்தில் உற்பத்தியைப் பாதிப்பதுடன் அவர்களின் பணித்திறனையும் பாதிக்கும். ஒரு பணியாளரின் மனநலம் மற்றும் ஆளுமை குறித்த முழுமையான மதிப்பீடு அவசியம். அப்போதுதான் பணிச் சூழலுக்கு அவர் பொருந்திப் போவாரா என்பதை அனுமானிக்க முடியும்.
முழுமையான உளவியல் மதிப்பீட்டுச் சோதனை மூலம் ஒருவர் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாவாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல குறிப்பிட்ட இடைவேளையில் தொடர்ந்து பணியாளர்களின் உளவியலை மதிப்பிடுவதன் மூலம் அவர்களின் மனநலம் சார்ந்து அறிந்துகொள்ள முடியும். பணியாளர்களின் மனநலத்தில் ஏதேனும் தொய்வு ஏற்படுவதாகத் தோன்றினால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க இதுபோன்ற ஆய்வுகள் வழிவகுக்கும்” என்கிறார் ராஜீவ் மேனன்.
© தி இந்து, சுருக்கமாகத் தமிழில்: ப்ரதிமா

Saturday, October 17, 2015

சீர்திருத்தப்படுமா சட்டக் கல்வி?


Dinamani

By இராம. பரணீதரன்

First Published : 17 October 2015 03:20 AM IST


கல்வியின் நோக்கமே ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக் கொள்வதாகும். அதிலும் சட்டக் கல்வி என்பது கேள்விகள் கேட்பதோடு மட்டுமன்றி, சட்டத்தின் துணையோடு நீதியை நிலைநாட்டுவதாகும்.
இத்தகைய சட்டக் கல்வி சீர்திருத்தப்பட வேண்டுமென சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தனது ஆலோசனையைத் தெரிவித்திருப்பதை பாராட்ட வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்று சட்டமும் ஒரு தொழில்கல்வியாகும்.
ஆனால், மருத்துவம், பொறியியல் பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதேபோல் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மற்ற தொழில்கல்வி மாணவர்களைப் போல வேலைவாய்ப்போ, வருமானமோ வழக்குரைஞர்களுக்கு கிடைப்பதில்லை.
ஏதேனும் ஒரு மூத்த வழக்குரைஞரிடம் சென்று 5 முதல் 10 ஆண்டுகள் அவரிடம் உதவி வழக்குரைஞராகப் பணிபுரிந்து மெதுமெதுவாக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் முறைகள், வாதாடும் நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இச்சூழ்நிலையில், குறைந்த காலகட்டத்தில் வருமானம் மற்றும் நற்பெயர் பெறவேண்டி, ஒருசில வழக்குரைஞர்கள் செய்யும் விரும்பத்தகாத காரியங்களால் வழக்குரைஞர் சமுதாயமே அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும்படியாகிறது.
இத்தகைய சம்பவங்கள்தான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று நீதிபதிகள் மற்றும் மக்களின் வெறுப்புக்கு வழக்குரைஞர்கள் ஆளாகும்படி செய்துவிட்டது.
உதாரணமாக, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மதுரை வழக்குரைஞர்கள் கட்டாய தலைக்கவசம் உத்தரவை எதிர்த்துப் போராடியது, தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி போராடியது போன்றவற்றைக் கூறலாம்.
தற்போது 90% சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்து பயணிப்பதே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்நிலையில், 10% வழக்குரைஞர்கள் தலைக்கவசம் அணியாமலோ, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோ போராடுவதை நீதிமன்றம் கண்டுகொள்ளாமலோ அல்லது அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டித்தோ, மன்னித்தோ அனுப்பியிருக்கலாம்.
எத்தனையோ அரசு, காவல் துறை அதிகாரிகள், தலைமைச் செயலர்கள் போன்றோர், நீதிமன்ற உத்தரவை அவமதித்தோ, கடைப்பிடிக்கத் தவறியோ, மீறியோ நடக்கும்போது அவர்களுக்கு அபராதம், பிடியாணை போன்றவற்றை விதிக்கும் நீதிமன்றம், பின் அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோருவதைத் தொடர்ந்து தண்டனையை குறைத்தோ, விலக்கியோ விடுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல, இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் மன்னித்திருக்கலாம்.
வழக்குரைஞர்களின் இந்தப் போராட்ட குணத்துக்கு அவர்களின் கல்வியும் ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, அனைத்து தொழில்படிப்பு முடித்தவர்களும் தங்களின் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் இறங்கிவிடலாம்.
ஆனால், சட்டக் கல்வி பயில்பவர் மட்டும் 3 அல்லது 5 ஆண்டு படிப்புக்குப் பிறகு அனைத்து இந்திய பார் கவுன்சில் நடத்தும் புத்தகத்தைப் பார்த்து எழுதும் வகையிலான தகுதித் தேர்வை எழுதி, சான்றிதழ் பெற்றால் மட்டுமே வழக்குரைஞராகப் பணிபுரியத் தகுதி பெறுவர் என்ற விதியைக் கூறலாம்.
சட்டக் கல்லூரியில் படித்து, சட்டங்களை உருப்போட்டு தேர்வெழுதி, வழக்குரைஞராகப் பதிவு செய்தால், சில மணி நேரம் மட்டும் நடைபெறும் கொள்குறி வகைத் தேர்வை, அதுவும் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை, எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வழக்குரைஞராகப் பணியாற்ற முடியும் என்ற விதி எந்தளவுக்கு நியாயமானது எனத் தெரியவில்லை.
அப்படியெனில், ஆண்டுக்கணக்கில் அவர்கள் படித்தது வழக்குரைஞர் எனும் தகுதியைத் தராதா என்ன? இதே போன்ற ஒரு தகுதித் தேர்வை மருத்துவர்களுக்கோ, பொறியாளர்களுக்கோ நடத்த முடியுமா?
வங்கி ஊழியர்களும், ஆசிரியர்களும் கூடத்தான் ஊதியம் போதவில்லை எனப் போராடுகின்றனர். ஆனால், வழக்குரைஞர்கள் போராடுவது மட்டும் தவறா? அனைவரும் அவரவர் பணிபுரியும் இடத்தில் தானே போராட முடியும். வழக்குரைஞர் நீதிமன்றத்தில்தானே போராட முடியும்?
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, சட்டக் கல்வி மற்றும் வழக்குரைஞர் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும். வடமாநில பொம்மை சட்டக் கல்லூரிகளைத் தடை செய்து, தரமான சட்டக் கல்வியை அரசு மட்டுமே வழங்க வேண்டும்.
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டுமே போதும், அவர் வழக்குரைஞர்தான். மேலும் ஒரு கண்துடைப்பு தகுதித் தேர்வு எதற்கு?
படிப்பு முடித்தவுடன் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்காவது பயிற்சி உதவித்தொகை வழங்கி, அவர்களை முழுமையாக நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுத்தி, சட்ட வல்லுநர்களாக்கவேண்டும்.
ஏதேனும் மூன்றாண்டு பட்டம் பெற்றவர்களை மட்டுமே சட்டக் கல்வியில் சேர அனுமதிக்க வேண்டும். அதாவது, 3 ஆண்டு சட்டக் கல்விக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் மனப்பக்குவத்தை எதிர்பார்க்க முடியும்.
மேலும், நாட்டின் வேதம் என்று சொல்லப்படும் அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியாவில் தொடக்கக் கல்வியில் இருந்தே பாடமாக வைத்து மாணவர்களுக்கும் சட்ட அறிவை அளிக்க முன்வரவேண்டும்.
சட்டக் கல்வி சீர்திருத்தப்பட்டால்தான் சட்டமும் சரி, நீதியும் சரி சரியான முறையில், சரியானவர்களுக்கு கிடைக்கும். இல்லையெனில், போராட்டங்கள் மட்டுமே தொடர்கதையாகிவிடும்.

வேண்டாம், இணைய மருந்து விற்பனை!


Dinamani

By ஆசிரியர்

First Published : 17 October 2015 03:14 AM IST


சில போராட்டங்கள் எந்தவிதப் பாதிப்பையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தாமல் தாங்கள் வலியுறுத்த விரும்பிய கோரிக்கையை மக்களுக்கு சரியாகப் புரியவும் வைக்காமல் அமைந்துவிடும். அத்தகைய போராட்டங்களில் ஒன்றாக அமைந்தது, அக்டோபர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அமைதியாக நடத்திய கடையடைப்புப் போராட்டம். கடையடைப்பு முழுமையான வெற்றி என்றாலும், அதன் நோக்கம் மக்களிடையே கொண்டு செல்லப்படவில்லை என்பதே இதன் தோல்வி.
இந்தியா முழுவதிலும் எட்டு லட்சம் மருந்துக் கடைகளும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 40 ஆயிரம் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு முழுவதிலும் அம்மா மருந்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த மருந்துக் கடைகள் செயல்பட்டதாலும், பெரும்பாலும் எல்லா மருத்துவமனைகளிலும் மருந்தகம் இருப்பதாலும், இப்போராட்டம் பொதுமக்களிடையே எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பல கோடி ரூபாய்க்கான மருந்து விற்பனை நடைபெறவில்லை என்று சொல்லலாமே தவிர, தொழிற்சாலையின் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றை நஷ்டமாகக் கணக்கிட முடியாது. இன்று வாங்க இயலாத மாத்திரை, மருந்துகளை வாடிக்கையாளர்கள் முந்தைய நாளோ அல்லது அடுத்த நாளோ வாங்கிக் கொள்வார்கள்.
இந்தியா முழுவதும் தனியார் மருந்துக் கடைகள் எதற்காக அடைக்கப்பட்டன என்கிற காரணம் பொதுமக்களுக்கு தகுந்த முறையில் தெளிவுபடுத்தப்பட்டதா என்றால், இல்லை. இந்தியாவில் இணையத்தின் மூலம் மருந்துகள் விற்பனை நடத்தப்படக் கூடாது என்பதுதான் இந்தப் போரட்டத்தின் நோக்கம்.
இணையதளத்தின் மூலமாக மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் தங்களது விற்பனை பாதிக்கப்படும் என்கிற அச்சத்தால் அல்ல. போலி மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள் இணையத்தின் மூலம் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடைப்பது பொதுநலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்ற விழிப்புணர்வுக்கான போராட்டம் இது.
இப்போதும்கூட இணையதளத்தின் மூலம் மருந்து விற்பனை இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டு முகவரி கொண்ட இணையதளங்களில் நமக்குத் தேவைப்படும் மருந்துகளின் பெயரைப் பதிவு செய்து, பணத்தை செலுத்தினால், அவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் முகவர்கள் மூலம் கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். இந்தியாவுக்குள் அனுப்பப்படும் கூரியர் கடிதம் அல்லது சிறு பார்சல்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்பதால், இத்தகைய இணைய வர்த்தகம் இப்போதும் நடைபெறவே செய்கிறது.
இவ்வாறு முறைகேடாக இணையதளம் மூலம் மருந்துகள் வாங்கிய நபர்கள், வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்தவர் என பலர் பல ஊர்களில் கைதாகியுள்ளனர். இவர்கள் வாங்கும் மருந்துகள் அனைத்தும் மூன்று வகைகளில் அடங்கிவிடக் கூடியவை: 1. போதை அல்லது மனவெழுச்சி தரும் மாத்திரைகள், 2. மனச்சிதைவு நோயாளிகளுக்குத் தரப்படும் செயல்பாட்டை மந்தப்படுத்தும் மாத்திரைகள், 3. ஆண்மைக் குறைவுக்காக பயன்படுத்தப்படும் வயகரா போன்ற பல்வேறு மாத்திரைகள்.
இவை அனைத்தும் மருத்துவர்களால், குறிப்பிட்ட நோயாளிகளுக்கு அவர்களது உடல்திறன் மற்றும் அப்போதைய உடல்நிலைக்கேற்ப பரிந்துரைக்கப்பட வேண்டிய மாத்திரைகள். ஆனால், சட்ட விரோதமாக இவற்றை வாங்கத்தான் இந்தியாவில் இணையதள மருந்து வணிகம் பயன்படுகிறது. இந்த மாத்திரை, மருந்துகளின் அளவும் மிகச் சிறியதாக இருக்கும்வரை இதுபற்றி போதை மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் கவலைப்படுவதில்லை.
"மருத்துவர் பரிந்துரைக் கடிதம் கட்டாயமல்ல' என்று வெளிப்படையாகச் சொல்லும் இணைய மருந்து விற்பனை முகவர்களிடம் இத்தகைய தடை செய்யப்பட்ட மருந்துகளே வாங்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் நுகர்வோருக்கு வந்து சேரும்போது, போலியானதாக, தரமற்றதாக இருக்கின்றன. பலர் இவற்றை உள்கொண்டு பக்கவிளைவுக்கு பலியாகிறார்கள். அல்லது சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர் இதை வெளியில் சொல்லக் கூச்சப்பட்டு, நஷ்டத்தை மெüனமாக சகித்துக் கொள்கிறார்கள்.
போதை மற்றும் மனவெழுச்சி தரும் மாத்திரைகளை இவ்வாறு இணையத்தின் மூலம் வாங்கிப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோர் இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள். ஆகவே, இணையத்தின் மூலம் மருந்து வணிகத்தை அனுமதிப்பதால் தற்போதைய மருந்துக் கடைகளுக்கு நஷ்டம் ஏற்படாது. வழக்கம்போல விற்பனை நடக்கும்.
இன்றைய உலகளாவிய இணைய வணிக நடைமுறைக்கு மாறாக, இணையத்தின் மூலம் மருந்துகள் வாங்குவதைத் தடை செய்ய முடியாது என்பது நிதர்சனம் என்றாலும்கூட, அதைக் கட்டுப்படுத்துவதும், போலி மருந்துகளின் ஆபத்துகளை இளைஞர்கள் மற்றும் பெற்றோரிடம் எடுத்துச் சொல்வதும் இயலக்கூடியதே.
"நாடு முழுவதும் எட்டு லட்சம் மருந்துக் கடைகள் இருக்கும்போது, மருத்துவமனைகளிலேயே இணைந்துள்ள மருந்தகம் இருக்கும்போது, இணையத்தின் மூலம் மருந்துகளை வாங்கி ஏமாறாதீர்கள். உடல்நலப் பாதிப்பை நீங்களே வரவழைத்துக் கொள்ளாதீர்கள்' என்ற விழிப்புணர்வுதான் இன்றைய தேவை. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக மருந்துக் கடைகள் இருந்தாலே போதும், நாட்டுக்கு நன்மை செய்தவர்களாவார்கள்.

சிரிப்பு தேவதை By பா. தீனதயாளன் First Published : 15 October 2015 01:07 PM IST

கலைஞர்களின் கலைஞரான இந்த நடிப்புக் கருவூலம் பற்றி எந்த வார்த்தைகளில் எழுதினாலும் சொற்கள் கர்வப்பட்டுக் கொள்ளும். மனோரமா என்று உச்சரிக்கும்போதே ரணப்பட்டுப் போன பாமர மனசு பூரித்து நிற்கும். நோயாளியின் முகமும் பரவசமாகும். மவுனமாக உடலில் புது ரத்தம் ஓடும்.
மனோரமா வெறும் நடிகை மாத்திரம் அல்ல. மன நலம் காக்கும் மருத்துவரும் கூட.
அன்றாடம் பணம் கொட்டும் ஏடிஎம் மெஷினாக எண்ணித் துரத்தும் உறவுகளுக்கு மத்தியில், வாழப் பிடிக்காமல் உயிரை விடத் துடிக்கும் நடிகைகள் வாழும் நாடு இது. மனோரமாவின் மடியில் விழுந்து ஆறுதல் தேடியவர்கள் அதிகம். 
காண்போரையெல்லாம் கவர்ந்த அந்த கலைத்தாய்க்கு ஈடாக(அதிக பட்ச வார்த்தை என்று எண்ணி விடாதீர்! காலம் காட்டும் உண்மை!) வேறு யாரைச் சொல்ல முடியும்!
உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அறியாத நடிப்பின் ஜீவநதி மனோரமா! நூற்றுக்கணக்கான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனித்து நகைச்சுவைக்கென்றே உதித்து நாளடைவில் காவியத்தலைவி ஆனவர்.
மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!
நடிப்பவர்களுக்கான முதல் அருகதை அவர்களது வசீகர வதனமும், கடல் போன்ற கண்களும். இரண்டுமே மனோரமாவுக்கு மைனஸ்.
சராசரிக்கும் குறைவான முகம். சின்னக் கண்கள். அவை மனோரமாவுக்கு உதவியது போல் வேறு யாருக்காவது உபயோகம் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.அவருக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய வரம் குரல்! அந்தக் குரலில் மனோரமா வெளிப்படுத்திய நவரச பாவங்கள், வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏராளம்... ஏராளம்.
எடுத்துக்காட்டுக்கு ‘கம்னு கட’ ஒன்று போதாதா!
காமெடி நடிகை என்பதால் மனோரமாவுக்கு நடிப்பில் எந்தத் தடைகளும் இல்லை. எப்படி வேண்டுமானால் நடிக்கலாம். எவ்வித இலக்கணங்களும் கிடையாது. சினிமாவில் காபரேவும் ஆடியிருக்கிறார். வில்லியாகவும் வலம் வந்திருக்கிறார்.
நினைத்த மாத்திரத்தில் கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் முழுமையாக கை வரப் பெற்றவர் மனோரமா.
ஆயிரத்து முன்னூறு படங்களில் எத்தனை எத்தனை வேடங்கள்...! அன்றாட வாழ்க்கையில் தினம்தோறும் நாம் காணும் சக மனுஷிகளை செல்லுலாயிடில் செதுக்கியவர் மனோரமா.
விளைவு, கின்னஸில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமையைப் பெற்றார். ‘உன்னால் முடியும் தம்பி’படத்துக்குப் பிறகு அடுத்த ஆண்டே அபூர்வ சகோதரர்களும் புதிய பாதையும் சேர்ந்து மனோரமாவை முகம் மலர வைத்தன. தேசிய விருது முதல் முறையாக மனோரமாவைத் தேடி வந்தது.
மனோரமாவுக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் ஸ்டார் ஷெர்லிமேக்ளின்.
மனோரமாவின் கால் தடம் பதிந்த முதல் படப்பிடிப்பு நிலையம் எது தெரியுமா?
‘நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங் பார்க்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் எங்க குரூப்புடன் நியூடோன் ஸ்டூடியோவில் நுழைந்தேன். அன்று என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் நடித்த ராஜா ராணி படப்பிடிப்பு. அதுதான் நான் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங்.’- மனோரமா.
‘காக்கா’ ராதாகிருஷ்ணனில் ஆரம்பித்து ‘மயில்’ சாமியையும் கடந்து அவருடன் காமெடியில் கலக்கியவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள். அநிருத் போன்ற சமீபத்திய பிரபலங்கள் நீங்கலாக எம்.எஸ். விஸ்வநாதன், வி.குமார், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், ஏ.ஆர். ரஹ்மான்... என இவர்கள் எல்லோரும் மனோரமாவை சொந்தக்குரலில் பாட வைத்த முன்னணி இசை அமைப்பாளர்கள்.
பொம்மலாட்டம் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ மனோரமாவின் சிறப்பைப் பாட்டிலும் எதிரொலித்து இன்றும் பரவசப்படுத்துகிறது.
பேசும் படம் இதழ், ஒவ்வொரு இதழிலும் ‘இம்மாத நட்சத்திரம்’ என்று அம்மாதத்தில் வெளியான படங்களில் சிறப்பாக நடித்த நாயகன்-நாயகிகளைப் பாராட்டி மிக நீண்ட காலமாக எழுதி வந்தது.
கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், பொம்மலாட்டம் இரண்டும் ஒரே நாளில் 1968 மே 31ல் வெளிவந்தன. சரோஜாதேவி, கே. பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம் அது. மிக அற்புதமாக கமலா எனும் கேரக்டரில் நடித்திருப்பார்.
சரோஜாதேவியை விட்டு விட்டு, அவ்வரிசையில் பொம்மலாட்டத்தில் சிறப்பாக நடித்ததற்காக மனோரமாவைத் தேர்வு செய்தது பேசும் படம். அனைவருக்கும் ஆச்சர்யம்!
பேசும் படத்துக்கு சோ உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘மனோரமா இம்மாத நட்சத்திரம் மாத்திரம் அல்ல. அவர் இந்தத் தலைமுறையின் நட்சத்திரம்!’ என்று.
அந்நாளில் சினிமா விமரிசனங்களில் மனோரமா குறித்துப் பெரிதாக எதுவும் எழுத மாட்டார்கள். சோ எழுதிய பதில் மீடியாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.
மனோரமாவின் திறமையை முழுதாக உணர்ந்தவர் சோ. பார் மகளே பார் படத்தில் சோ அறிமுகமானார். சோவின் முதல் ஜோடியாக மனோரமா நடித்தார்.
சோ இயக்கிய முதல் படம் முகமது பின் துக்ளக். அதில் மனோரமாவுக்கு இந்திரா காந்தி போல் ஒரு வேடத்தைக் கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கலக்கினார். மத்திய மாநில அரசுகளின் கெடுபிடிகளைக் கடந்து துக்ளக் திரைக்கு வந்தது தனி வரலாறு. அடுத்து சோ - மனோரமா பங்கேற்ற அரசியல் நையாண்டி, தங்கப்பதக்கம் படத்தின் வசூலுக்கு உரமாக இருந்தது.
எம்.ஆர். ஆர். வாசு விவித் பாரதி சிறப்புத் தேன்கிண்ணத்தில் மனோரமாவை ‘திரையுலகில் என் ரவுடி தங்கச்சி!’ என்று பாராட்டி ‘வா வாத்யாரே வூட்டாண்டே’ பாடலை ஒலிபரப்பினார். எம்.ஆர்.ஆர். வாசு – மனோரமா கூட்டணியில் வெளிவந்த ‘பாரத விலாஸ்’ சிகரம்.
ரவிச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு ‘மஞ்சள் குங்குமம். அதில் தேங்காய் -மனோரமா ஜோடி பாடி நடித்த தெலுங்குப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
‘ரா ரா பாவா ரா... ராங்கான பாதையில போத்தாவா அக்கட இக்கட சூஸ்தாவா அசடு போல பேஸ்தாவா’ என்று தொடங்கும் அந்தப் பாடலை எழுதியவர் கதாசிரியர் ‘தேவர் பிலிம்ஸ்’ மாரா. மனோரமாவுடன் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பேசிப் பேசி சிரிக்க வைக்கும் மனோரமா ஊமையாக ‘வாழ நினைத்தால் வாழலாம்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு கதை சொல்லும் கட்டம் அட்டகாசம்! அதில் மவுன மொழியிலேயே ‘கானாங்குருவிக்கு கல்யாணமாம்’ என்று பாடல் வேறு. ஊமை பாடுவதா? அது மனோரமாவால் மட்டுமே முடியும்.
முதல்முதலாக ‘அபலை அஞ்சுகம்’ படத்தில் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துக் கட்டத் தொடங்கிய மனோரமா தொடர்ந்து அனாயசமாகப் பேசிய வட்டார மொழிகள் ஆய்வுக்குரிய வரலாறு. சின்னக் கவுண்டரில் எடுப்பான பல் அழகியாக கொங்குத்தமிழில் பேசி நெஞ்சம் கலந்தவர்.
 ‘சூரிய காந்தி’ யில் ‘தெரியாதா நோக்கு...’ என்று பாடி ஆடும் மடிசார் மாமிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ ‘நூன் ஷோ’ மாமிக்கும் நடிப்பில் எத்தனை வித்தியாசம்! முக்தா சீனிவாசனின் படங்களில் மனோரமாவின் பங்களிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் யாரால் மறக்க முடியும். மனோரமா மறைவுக்கு முக்தா சீனிவாசன் கதறி அழுத காட்சி இயல்பான தோழமை உணர்வின் வெளிப்பாடு.
தீபாவை கமல் ஜோடியாகத் தனது ’அந்தரங்கம்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் முக்தா. அதில் தேங்காய், சோ, மனோரமா மூவரும் தஞ்சாவூர் பாஷை பெரிதா, கோவை, மதுரை ஸ்லேங் பெரிதா என்று மோதுவார்கள்.
‘பாஷையெல்லாம் மாத்தி மாத்திப் பேசறதுக்கு மனோரமாவை விட்டா வேற யாரு இருக்காங்க இப்ப’ ன்னு சிவாஜி என்னைப் பாராட்டிப் பேசினார். எனக்கு வானத்துல இறக்கை இல்லாமப் பறக்கற மாதிரி இருந்தது. அதுதான் முதலும் கடைசியுமா சிவாஜி என்னை நேருக்கு நேர் பாராட்டின ஒரே சந்தர்ப்பம். அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் அவர் இல்ல.’ - மனோரமா.
அதே மனோரமாதான் முகச்சவரம் செய்யும் குமரிமுத்துவின் மனைவியாக கே.பாக்யராஜின் பாமரத் தாயாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜொலி ஜொலித்தது!
மைக்கேல் மதன காமராஜனில் ரூபிணியுடன் சேர்ந்து ‘சிவராத்திரி... தூக்கம் ஏது ஹோ...! என்று இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆடிப் பாடியபடி வெளிப்படுத்திய சிருங்கார பாவங்கள் மனோரமாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?
பாரதிராஜா, மணி ரத்னம் என மிகச் சிலரைத் தவிர மனோரமாவுடன் சேர்ந்து பணியாற்றி, ரெடி டேக் ஆக்ஷன் சொல்லாத இயக்குநர்கள் யார்?
அவருடன் பணியாற்றிய இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தாலே தமிழ் சினிமாவின் வரலாறும் அதன் அத்தனைப் பரிமாணங்களும் புரியுமே!
இயக்குநர்களில் விசு விசேஷமானவர். ஒரு வாரம் மட்டும் மனோரமாவை நடிக்க வைத்து, முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் 25 வார விழாவைக் கொண்டாடியவர். முதல்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு தங்கத்தாமரை என்கிற இமாலயப் பரிசை ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெள்ளிவிழாப் படம் மூலம் அளித்தவர்.

மனோரமா நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த முதல் படம் ’வடிவுக்கு வளைகாப்பு’. சிவாஜி பட டைட்டில் கார்டுகளில் மனோரமாவின் பெயர் முப்பது ஆண்டுகளைக் கடந்து கடைசி வரை தொடர்ந்தது. சிவாஜி-மனோரமாவுக்கு இடையேயான பந்தம் மிக அபூர்வமானது.
சிவாஜி ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் மனோரமாவுக்கு இருந்தது. அதுவும் ஞானப்பறவை படத்தில் தீர்ந்தது. மனோரமாவின் ஆசையை நிறைவேற்றியவர் வியட்நாம் வீடு சுந்தரம்.
1958-ல் கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை மூலம் அறிமுகமான மனோரமா அடுத்துப் புகழ் பெற்றது அபலை அஞ்சுகம் படத்தில். 1962-ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் கம்பவுண்டராகவும் மனோரமா நோயாளி நவநீதமாகவும் நடித்தார்கள்.
‘நவநீதம்... நவநீதம்...’ என்று காட்சிக்குக் காட்சி வித்தியாசமாக பேசி நாகேஷ் பிரபலமானார். அதற்குப் பிறகு மனோரமாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நாகேஷ் ஹீரோவாக அறிமுகமான சர்வர் சுந்தரம் படத்தில் அவருடன் சினிமா நடிகையாக சில நிமிடங்களுக்கு கவுரவத் தோற்றத்தில் வருவார் மனோரமா. எஸ். வி. ரங்காராவ் இயக்குநர்.அந்தக் காட்சியில் மனோரமா சரோஜாதேவியை ஞாபகப்படுத்துவது மாதிரி கொஞ்சும் தமிழில் பேசி நாகேஷை மிரள வைப்பது அபாரம்.
பொதுவாக எம்.ஜி.ஆரின் சினிமாவில் நாயகன், நாயகியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் டூயட் இருக்காது. மனோரமா மட்டும் விதிவிலக்கு!
‘வேட்டைக்காரன்’ படத்தில் முதல்முதலாக நாகேஷ் - மனோரமா இருவரும் ஆடிப்பாடிய ‘சீட்டுக்கட்டு ராஜா’ என்கிற டூயட் அதில் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுடன் நாகேஷ்-மனோரமா ஜோடியும் சேர்ந்து கொண்டது.
தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்ததில் மனோரமா புகழின் உச்சிக்குச் சென்றார். கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மனோரமாவை சிறந்த துணை நடிகையாக கவுரவித்து விருது வழங்கியது.
 மனோரமா ‘ரமாமணியாக’ மாறிய விதம் குறித்து என்னிடம் கூறியவை :
‘பாலையா அண்ணனைப் பார்த்து சிவாஜி சாரே பயப்படுவாங்க. அப்படிப்பட்ட மகா நடிகர் அவர். பாலையா அண்ணன், சிவாஜி, சாரங்கபாணி இவங்க கூடத்தான் எனக்கு முதல் ஷாட்.
‘என்ன சிக்கலாரே சவுக்கியமான்னு...’ விசாரிக்கிற சீன். அப்ப பாலையா அண்ணன் சொல்லுவாங்க. ‘இவங்க ஆட்டத்துல பேர் போனவங்கன்னு…’
அவங்களுக்கு முன்னால எனக்கு நடிக்கவே முடியல. பயமா இருக்கு. அழுகையா வருது. நான் தான் தொடர்ந்து வசனம் பேசணும். சிவாஜிக்கு என்னைக் கவனிக்கிற ஷாட் மட்டுமே. நான் ஏபிஎன். சாரைப் பார்க்கறேன். நடிப்பு வரல. அவர் என்னைக் கூப்பிட்டார்.
‘இந்த சீன்ல நீதான் பெரிய ஆள். அவங்கள மறந்துடுன்னு’ தைரியம் சொன்னாரு. அப்புறம் படபடன்னு பேசி நடிச்சேன்.
இப்பவும் நீங்க படத்தைப் பாத்தீங்கன்னா அந்த சீன்ல சிவாஜி வசனம் எதுவும் இல்லாம, ‘பரவாயில்ல போலிருக்கு. சின்னப் பெண்ணா இருந்தாலும் நல்லா ஆக்ட் பண்றே’னு என் நடிப்பையே ரசிக்கிறது தெரியும்.’ என்றார் மனோரமா.
ஏ.பி. நாகராஜனின் சின்ன பட்ஜெட் படங்களான திருமலை தென் குமரி, கண் காட்சி ஆகிய படங்கள் மனோரமாவுக்கு கை கொடுத்தது. இரண்டிலும் அவருக்கு அமைந்த புதிய ஜோடி சுருளிராஜன். ‘திருமலை தென்குமரி’ நூறு நாள்கள் ஓடியது. ’இந்தப் படம் ஓட வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வமே இல்லை’ என்று மனோரமா அதன் வெற்றி விழாவில் பேசினார்.
தமிழில் 150 படங்கள் பூர்த்தியான நிலையில் மனோரமாவுக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன. அவர் நடித்த முதல் தெலுங்கு படம் ‘எதிர் நீச்சல்’ ரீமேக்.
1969 முதல் 1971 வரையில் சினிமாவில் மிகப் பெரிய வெற்றிடம். கடுமையாகப் போராடினார் மனோரமா. கோடம்பாக்கம் கை விட்டவுடன் சித்ராலயா கோபுவின் நாடகக் குழுவில் முழு மூச்சாக நடித்தார்.அங்கு உருவான ‘காசேதான் கடவுளடா’ நாடகம் சினிமாவானது. ஏவிஎம் தயாரிப்பில் நூறு நாள்கள் ஓடியது.
ஹீரோ முத்துராமனை விட மனோரமாவுக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் மிகப் பெரிய திருப்புமுனை அந்தப் படம். மனோரமா செகண்ட் இன்னிங்ஸ்ஸில் கொடி கட்டிப் பறந்தார்.
ஜெய் சங்கர்-ஜெய்சித்ரா நடித்த ‘உங்கள் விருப்பம்’ படத்தில் தேங்காய் சீனிவாசன் - மனோரமா பாடி நடித்து, பிரபலமான ஒரு டூயட் - ‘மஞ்சள் பூசி மஞ்சம் வந்த ராதா ராதா.’ அன்றைய வானொலி நேயர்களுக்கு மிகவும் பிடித்தமானது. தேங்காய் சீனிவாசனுடன் மனோரமா நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
மனோரமா சுயம்பு. விழுந்த சுவடே தெரியாமல் விரைவாக விஸ்வரூபம் எடுத்து நின்றவர். எம்.ஜி.ஆர். அரசியலில் முமு மூச்சாக ஈடுபட, மனோரமாவை மேலும் கை தூக்கி விட்டவர் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர். (‘ராமன் தேடிய சீதை’ எம்.ஜி.ஆருடன் மனோரமா பங்கேற்ற கடைசி படம்.)
தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்று கே.பாலாஜியின் தயாரிப்புகளில் மனோரமாவுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு.
நீதி படத்தில் மனோரமாவுக்காகவே டிராக்டர் ஓட்டும் கிராமத்து பொன்னம்மா கேரக்டரை கே.பாலாஜி உருவாக்கினார். சிவாஜியை ஒரு தலையாகக் காதலிக்கும் வேடம். விசிலுக்குக் கேட்க வேண்டுமா..? மீண்டும் வசந்தம்!
 1981-ல் பாலாஜியின் படமான ‘சவால்’ மனோரமாவுக்கு பெரிய பிரேக். அதில் கமலுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ‘பர்மா பாப்பா’ வாக மனோரமா தூள் கலக்கி இருப்பார். ‘பந்தம்’ படத்தில் பேபி ஷாலினியுடன் செவிட்டுப் பெண்ணாக நடித்து குழந்தைகளைச் சிரிக்க வைப்பார்.
சினிமாவில் சிரிக்க சிரிக்கப் பேசி ஹாஸ்யங்கள் புரிந்த மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகளே அதிகம்.
அம்மாவை தெய்வமாக மதித்தவர். தாய் சொல்லைத் தட்டாதவர். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன கணவரை, அன்னையின் ஆணைக்கேற்ப விட்டுப் பிரிந்தார். அம்மாவின் கனவை நிறைவேற்ற கலையுலகில் மாபெரும் சாதனையாளராக உயர்ந்தவர்.
‘கண் திறந்தது’ படம் மூலம் பிரபலம் ஆன ராமநாதன், மனோரமாவின் கணவர். மனோரமாவுடனான திருமண வாழ்க்கை முறிந்ததும் அவர் மறு விவாகம் செய்து கொண்டார். ஆனால் வாரிசுகள் இல்லை. 1992-ல் அவர் மறைந்தபோது தன் கணவருக்குக்குக் கொள்ளி வைக்க மகன் பூபதியுடன் சென்ற பெருந்தன்மைக்குரியவர் மனோரமா.
வெவ்வேறு திசைகளில் தமிழ் சினிமா பயணித்தாலும் மனோரமா தன் இடத்தை சாமர்த்தியமாகத் தக்க வைத்துக்கொண்டார்.
முப்பது ஆண்டுகளாக நகைச்சுவைக்கு ஒரே சிறந்த நடிகையாக ஆண்டு தோறும் விருதுகளைக் குவித்தவர் மனோரமா. சிவாஜியை மட்டும் அல்ல. எம்.ஜி.ஆருக்கு நிகரான பானுமதியையும் வியக்க வைத்தவர் அவர்.
 ‘பத்து மாத பந்தம்’ படத்தில் ‘தெய்வமகன்’ சிவாஜியைப் போல் அம்மாவாகவும் இரண்டு மகள்களாகவும் தினுசு தினுசாகப் புதுப்புது வடிவங்களில் மக்களை மகிழச் செய்தார்.
‘மொத்தம் மூன்று மனோரமாக்களைச் சந்திக்கிறோம். ஹைஸ்கூலில் காதலித்துக் கல்லூரியில் கல்யாணம் செய்துகொண்டு வாயும் வயிறுமாக ஹாஸ்யம் படைக்க வருகிறார் முதலில். அவர் தன் வயிற்றை மறந்து உற்சாகமாகக் குதி போடத் தொடங்குவதும் பிறகு ‘ஆ’வென்று வயிற்றைப் பிடித்தவாறு சோர்ந்து போவதும் வேதனையான வேடிக்கை. அவருடைய இரட்டைப் பெண்களாக மழலைக் கொஞ்சல் மனோரமாக்கள் வேறு. அமர்க்களம் போங்கள்!’ என்றது எவரையும் எளிதாகப் பாராட்டி விடாத குமுதம்.
பத்து மாத பந்தம் லேசான படமல்ல. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கியது. 1974 தைத் திருநாள் வெளியீடு.
பி. பானுமதி, சரோஜாதேவி, எம்.என். ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, ஏவிஎம். ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன், அசோகன்... என நட்சத்திரப் பட்டியல் நிறைந்தது. அத்தனை பேருக்கும் நடுவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதியோடு ஒரு வண்ணப் படத்தில் அவரையும் மீறி ஒருவர் பெயர் பெறுவது சாத்தியமே அல்ல.
சகலகலாவல்லியான பானுமதியுடன் சேர்ந்து அவரது இயக்கத்தில் ‘இப்படியும் ஒரு பெண்’ (1975 மே 1 ரிலீஸ்) படத்தில் ஜெயில் காட்சியில் பாடி நடித்திருக்கிறார் மனோரமா. ‘அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல’ என்று அதன் பல்லவி ஆரம்பமாகும்.
1989-ல் ஏவிஎம்.மின் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ அவரது ஹாஸ்ய நடிப்பின் நிறைவான கட்டமாக இருந்தது. அதில் கம்புச் சண்டையும் போட்டு சிறுவர் சிறுமியரைத் தன் வசப்படுத்தினார். சந்திரபோஸ் இசையில் அவர் பாடிய டைட்டில் சாங் ஒலிக்காத ஊரே இல்லை. அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் வெள்ளி விழா நடந்தது. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தைத் தெலுங்கிலும் ஏவிஎம் தயாரித்தது. அதில் மனோரமாவின் வேடம் பானுமதிக்கு.
‘மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான். ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா’ என்றார் பானுமதி.வசிஷ்டை வாயால் பிரம்ம ரிஷி பட்டம் யாருக்குக் கிடைக்கும்? ஆந்திரத்து ஆஸ்கார் அல்லவா அது!
மூப்பு வந்ததும் வயதுக்கேற்ப மெல்ல குணச்சித்திர நடிப்பில் ஆர்வம் காட்டினார். கமல்- ஷங்கர் இணைந்த ஒரே படமான ‘இந்தியனில்’ மனோரமா ஏழைக் கிழவியாக உருக வைத்ததை யாரால் மறக்க முடியும்! அதற்குக் கிடைத்த பலன் - 1996ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக மனோரமாவை கவுரவித்தது பேசும் படம் இதழ்.

அவர் வயதான தாயாராக நடித்த சின்ன கவுண்டர், சின்ன தம்பி, நாட்டாமை போன்ற படங்கள் தாறுமாறாக ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. ஏராளமான வசூலைக் குவித்தன. தெலுங்கிலும் ஏராளமான கேரக்டர் ரோல்கள் மனோரமாவைத் தேடி வந்தன. தமிழைப் போலவே அற்புதமாக சுந்தரத் தெலுங்கிலும் மாட்லாடுவார் மனோரமா.
சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சினிமாவாக வந்தது. நாட்டுப்புறப்பாடல் பாடும் கிழவியாக மனோரமா அநாயாசமாக நடித்திருப்பார். படம் ஓடவில்லை. அவ்வாறு மனோரமாவின் உழைப்பு தெரியாமல் போன படங்கள் எக்கச்சக்கம்.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்தாலும் ஜனங்களுக்கு மிகவும் பிடித்த ஜதை நாகேஷ் - மனோரமா. ஆறு ஆண்டுகளில் அலுப்பு சலிப்பில்லாமல் நூறு சினிமாக்களுக்கு மேல் நடித்த ஒரே காமெடி ஜோடி. அவை அத்தனையும் சிரஞ்சீவியான காட்சிப் பெட்டகம்!
கே.பாலசந்தரின் அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் ‘முத்துக் குளிக்க வாரீயளா...!’ பாடல் மனோரமாவின் இறுதி ஊர்வலத்திலும் இடம் பிடித்தது.
நவராத்திரி நேரத்தில் முப்பெரும் தேவியரோடு சேர்ந்து மனோரமாவும் சாமியாகி விட்டார்! என்றும் வாழும் அவர் புகழுக்கு அஞ்சலி எழுத வேண்டாம் என்று இருந்தேன். மனோரமாவை சிரிப்பு தேவதையாகப் பார்த்து பார்த்து ரசித்த பாழும் மனசு கேட்கவில்லை.
சிவாஜி, ஜெமினிக்கு செய்தது போல ஆச்சியின் தகனத்தையும் அரசு மரியாதைகளுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடத்தியிருக்கலாம்.

Friday, October 16, 2015

DONT DELAY AWARD OF CERTIFICATES NO LONGER..AU TELLS ALL COLLEGES

CHENNAI: Days after a successful MCA student committed suicide by setting himself ablaze in front of his college campus because of the delay in getting his certificates, Anna University directed all institutions not to delay issuing certificates to successful students.
The university has also issued a notice to the particular engineering college on OMR for an explanation. It also advised students to approach the university directly if their colleges refused to hand over their certificates.
Madhu Kumar (24), of Arupukottai, Virudhunagar district, set himself on fire in front of the college campus, minutes after he stepped out after a tiff with college officials over undue delay in giving him his certificates.
In his dying declaration to a judicial magistrate, Madhu Kumar had said that a particular faculty member had sexually harassed and targetted him.
The dead student’s brother Veera Kumar said Madhu Kumar, who completed the MCA course in 2013, cleared all the arrears a few months ago and had been trying to get his certificates.
He was unable to take up a job because of the delay by the college in handing over his degree certificates.
On October 7, Madhu Kumar had reportedly met the head of his department and had a heated argument with the faculty. Police said he set himself on fire soon after he stepped out of the campus.
Express learnt that Anna University sent a notice to the college asking for an explanation why the college management hesitated to issue the certificates to the student.
Also a circular was sent to all affiliated technical institutes not to delay issuing certificates just because of delays in paying the fees.
A top university official said Madhu Kumar could have approached the university before taking such an extreme step.

WAITLISTED SOUTHERN RAILWAY PASSENGERS WILL NOT GET TO SWITCH TRAINS

Waitlisted Southern Railway Passengers Will Not Get to Switch Trains
Published: 16th October 2015 05:09 AM

Last Updated: 16th October 2015 05:14 AM
CHENNAI: The new Alternate Train Accommodation System (ATAS) called Vikalp, through which waitlisted passengers of one train would get reserved tickets on another train, will be run as a pilot project for six months from November 1 only on the Delhi-Lucknow and Delhi-Jammu sectors.
No trains on Southern Railway or in any other part of the country would be eligible for this facility now, railway officials said.
Indian Railways recently announced this scheme which seeks to optimise the use of seats and berths on trains. Passengers with waitlisted tickets on one train, if they opt for ATAS, will be offered seats on another train leaving from a nearby station within 12 hours from the scheduled departure of the original train.
No additional charges will be collected for this switch, but it would be subject to seat availability in the substitute train, a policy document detailing this scheme indicated.
Railway officials said the scheme would be useful for passengers travelling by trains on busy routes where some trains were full always, but special trains ran empty.

மீத்தேன் வாயு திட்டத்துக்கு தடை!

logo

காவிரி டெல்டா பிரதேசத்தில் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்துக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள உத்தரவால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. இந்தப்பகுதியில், மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு அசைக்கமுடியாத ஒரு முட்டுக்கட்டையை தமிழக அரசு போட்டுவிட்டது. இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்த மகாத்மா காந்தி, பூமியை ஒரு தாய் என்றுதான் வர்ணித்தார். பூமித்தாயால் நமது தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். ஆனால், பேராசைகளை பூர்த்தி செய்யமுடியாது என்றார். பூமித்தாய் நமக்கு பால் ஊட்டத்தான் முடியும். அவளது உதிரத்தை எடுத்து குடிக்க நினைத்தால், அவள் உயிர் போய்விடும் நிலை ஏற்படும். அந்தவகையில் வேளாண் நிலங்களில் விவசாயம் செய்யதான் நினைக்க வேண்டும். வேறு பணிகளை செய்ய நினைக்கக்கூடாது.

இந்த நிலையில், கடந்த 2010–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் காவிரி டெல்டா பகுதியில் பழுப்பு நிலக்கரியும், அதோடு சேர்ந்து மீத்தேன் எரிவாயும் இருப்பதை கண்டறிந்தது. மீத்தேன் எரிவாயுவை எடுக்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 691 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் இந்த மீத்தேன் வாயு எடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த மீத்தேன் வாயுவுக்காக வெகு ஆழத்திற்கு துளையிடுவதன் மூலம் நெல்சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்ற கருத்தில் தொடக்ககாலத்தில் இருந்தே விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மீத்தேன் எரிவாயு தொழில்கள் வளர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாலும், விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். வளம் கொழிக்கும் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாகிவிடும். விவசாயத்தை இழந்து, அப்படியொரு தொழில் வளர்ச்சி தேவையா? என்பதுதான் வேளாண் பெருங்குடி மக்களின் பெரிய கவலையாகும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 2011–ல் விவசாயிகளின் இந்த பிரச்சினையை கையில் எடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். உத்தேசிக்கப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்நீர் உட்புகுதல், வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் விளைவு மற்றும் மாசற்ற எரிசக்தி வளங்களை மேம்படுத்தலின் தேவை ஆகியவை குறித்து ஆராய ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்து அறிக்கைதர உத்தரவிட்டார்.

தற்போது, இந்த வல்லுநர் குழு இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, 15 அம்சங்களில் விளக்கங்களை தெளிவாக அளித்துள்ளது. இந்த அறிக்கையை பரிசீலித்து இந்த திட்டத்துக்கு தமிழக அரசால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கோ, மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கோ செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் கைவிடவேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுதொடர்பான எந்த முயற்சிகளையும் தொடங்குவதற்கு முன்னால் தமிழக அரசை கலந்தாலோசிக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வை காத்த அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது. அதேநேரத்தில், தொழில் வளர்ச்சிக்காக மீத்தேன் எரிவாயுவை எடுத்திட விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் மாற்றுவழிகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய்வதற்கும் மத்திய அரசாங்கம் முயற்சி எடுக்கலாம்.

அரசியல் அவசியம்தான்...

Dinamani


By ப. சங்கரலிங்கம்

First Published : 16 October 2015 01:42 AM IST


அரசியலா! அது நமக்கு சரிப்பட்டு வராது. ஆகவே ஆகாது. அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்ற மனநிலை பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது இன்று, நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே உள்ளது.
அரசியலில் நேர்மை இல்லை. ஊழலும், அராஜகமும்தான் அரசியலை வழிநடத்தும் இருபெரும் தீயசக்திகள் என்று கூறுவதில் உண்மை இருந்தாலும், அதை ஏன் மாற்ற முடியாது? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இதற்கு முதலில் அச்சத்தை ஒழிக்க வேண்டும்.
எந்த ஒரு காரியத்துக்கும் தைரியமே முதல் தகுதி. இது இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். தலைமுறை தலைமுறையாக நம் நாட்டு மக்கள் மனதில் கறையாகப் படிந்திருக்கும் அச்சமே அரசியலைப் பற்றிய அச்சத்துக்கு காரணம்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, "அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவணியிலே' என மகாகவி பாரதியார் மன வேதனையில் பாடியதே, அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை எண்ணித்தான்.
அரசியல் என்றால் கட்சிகளின் செயல்பாடு சம்பந்தப்பட்டது. அதாவது கூட்டம் நடத்துவது, கொடி கட்டுவது, தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது, எதிர்க்கட்சியாக இருந்தால் அரசுக்கு, அதாவது ஆளும் கட்சிக்கு எதிராகப் போராட வேண்டும், வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு கொண்டுவந்தாலும், அதைத் திரித்து மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சாலை மறியல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது, மக்கள் பிரச்னையை எடுத்துக் கூறி தீர்வு காண வேண்டிய அவையில், கட்சிகள் அராஜகத்துடன் நடந்துகொள்வது என்பதும், ஆளும் கட்சி என்றால் ஊழல் செய்வது, எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவது என்ற தற்போதைய அரசியல் துரதிர்ஷ்ட நிலையில் உள்ளது.
இதனால், அரசியல் அல்லது அரசியல்வாதி என்றாலே நாணயமற்றவர்கள் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது.
ஊழல், பழிவாங்கும் எண்ணம், நம்பிக்கைத் துரோகம் போன்றவை தற்கால அரசியலில் தலைதூக்கியிருந்தாலும், நேர்மையான-திறமையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து நிர்வாகத் திறன், வெற்றி - தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம், சகிப்புத்தன்மை,பேச்சாற்றல், தியாகம், ஒழுக்கம், பெருந்தன்மை, தன்னம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
அரசியல் வேறு, அரசு வேறு என்று கூறப்பட்டாலும் அரசின் அஸ்திவாரம் அரசியல்தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் இறப்பு வரை அரசியலின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையல்ல. குழந்தை பிறந்ததும், பிறப்புச் சான்றிதழ் பெறுவதுகூட அரசியல் சார்புடைய நடவடிக்கைதான். பிறப்பு சான்றிதழ் பெறுவதன் மூலம் நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் அந்தக் குழந்தை சேர்க்கப்படுகிறது.
அதன்மூலம், அரசின் நலத் திட்டங்கள், வரவு - செலவு அறிக்கைத் தயாரித்தல் போன்றவற்றிற்கு மக்கள்தொகை புள்ளி விவரங்கள் உதவுகின்றன. அரசின் இந்த நடவடிக்கைகூட அரசியல் சார்புடையதுதான்.
தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான காலத்திலும் அரசியல் கலந்திருக்கிறது. எப்படி என்றால் பாடத் திட்டம், இலவச கட்டாயக் கல்வி சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இன்னும் பிற சலுகைகள் என அரசு நடைமுறைப்படுத்தும் எல்லாத் திட்டங்களும் அரசியல் தொடர்புடையதுதான்.
படித்து முடித்ததும் பணியில் சேர்வது, பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவது என அனைத்தும் அரசியல் தொடர்புடையதுதான். நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிக்கானத் திட்டங்கள், அண்டை நாடுகளுடனான உறவு, வெளிநாடுகளுக்கு மத்தியில் நம் நாட்டின் மதிப்பு என அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியல் உள்ளது.
இதனால், அரசியலைப் பற்றி குடிமக்கள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், நம்நாட்டில் பாமர மக்களிடம் இருக்கும் அரசியல் ஆர்வம்கூட படித்தவர்களில் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இது குற்றப் பின்னணி உள்ளவர்கள் எளிதாக அரசியலுக்கு வந்து கோலோச்ச வசதியாக அமைந்துவிடுகிறது.
இதனால், நமது நாடு இயற்கையாகவே பல்வேறு வளங்களை பெற்றிருந்தும், வளர்ச்சியடைவதில் பின்தங்கியே உள்ளது. இந்த நிலை மாற, படித்தவர்கள் ஆர்வமுடன் அரசியலுக்கு வரவேண்டும். நன்றாகப் படித்து முதலிடம் பிடிக்கும் மாணவரிடம்கூட அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது.
இதற்கு நமது கல்வி முறை மட்டுமன்றி அந்த மாணவரின் பெற்றோரும் ஒரு காரணம். அரசியல் அறிவு தங்களது மகனை நல்வழிப்படுத்தாது, தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும் என்ற அச்சம் பெற்றோரிடம் உள்ளதால், அவர்கள் தங்கள் மகனோ, மகளோ அரசியல் பற்றி அறிந்துகொள்ள விரும்புவது இல்லை. இதன் காரணமாக, சிறு வயது முதலே அரசியல் பற்றிய தவறான எண்ணம் மனதில் பதிந்துவிடுகிறது.
இதனால், உயர் கல்லி கற்றவர்களில் பெரும்பாலானவர்களிடம் அரசியல் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசியல் அறிவும் அவசியம்.
எனவே, கல்வித் திட்டத்தில் அரசியல் பாடத்தை கட்டாயமாக்கி, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் அரசியல் பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும். மேலைநாடுகளில் படித்தவர்களே பெரும்பாலும் அரசியலில் உள்ளதுபோல் நம் நாட்டிலும் படித்தவர்கள் அதிக அளவில் அரசியலில் பங்கெடுத்தால்தான் மேலைநாடுகளைப்போல நம் நாடும் வேகமான வளர்ச்சி பெறும் என்பது திண்ணம்.

ஆதாரம் இருக்கிறது!..dinamani



By ஆசிரியர்

First Published : 14 October 2015 01:44 AM IST


சமையல் எரிவாயு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தத் தொடங்கிய பின்னர், கடந்த ஓராண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிவாயு மானியத்தில் ரூ.14,672 கோடி மிச்சமாகியிருக்கிறது என மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்த 30 லட்சம் பேரால் ஏற்பட்ட மிச்சத் தொகை அல்ல. முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சேமிப்பு.
வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் 18 கோடிக்கும் அதிகம். நேரடி மானியம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, 3.34 கோடி இணைப்புகள் போலியானவை அல்லது ஒரே நபர் இரண்டு இணைப்பு பெற்ற சம்பவங்கள் தெரிய வந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட விநியோக நடைமுறைப்படி, ஓர் இணைப்புக்கு ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள்; ஓர் உருளைக்கு ரூ.336 மானியம். இந்த அடிப்படையில் கணக்கிட்டபோது, இதற்கு முந்தைய ஆண்டில் மானியமாக அளிக்கப்பட்ட தொகையில் ரூ.14,672 கோடி மிச்சமாகி இருக்கிறது.
இது மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போடும் திட்டத்தால் மட்டுமே ஏற்பட்டதல்ல. போலி இணைப்புகள் களையப்படக் காரணம் ஆதார் அட்டை என்பதுதான் உண்மை நேரடி மானியம் பெறுவதற்கு, எரிவாயு இணைப்பு உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக் கணக்கு எண் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தால், இந்நேரம், இந்த போலியான 3.34 கோடி இணைப்பு பெற்றவர்களும் வங்கிக் கணக்கு எண் கொடுத்திருப்பார்கள். ஆனால், ஆதார் அடையாள அட்டை இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரே காரணத்தால், போலிகள் வேறு வழியில்லாமல் கழிந்துபோயின. ஆதார் அட்டைக்கு கைரேகை, கண்பாவை போன்ற உயிரி அடையாளங்கள் அவசியம் என்பதால், போலிகள் இதில் புக முடியவில்லை.
தற்போது கண்டறியப்பட்ட 3.34 கோடி எரிவாயு இணைப்புகளில் மிகச் சில நூறு இணைப்புகள் மட்டுமே ஒரு வீட்டில், ஒரே குடும்பத் தலைவர் இரு முறை பெற்ற இணைப்பாக இருக்கும். மற்ற அனைத்தும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களால் போலியாக சேர்க்கப்பட்டு, எண்ணெய் நிறுவனத்தின் அந்தந்தப் பகுதி மேலாளர் ஆசியுடன் நடத்தப்பட்ட முறைகேடாகவே இருக்கும் என்பது உறுதி. மானியத்துடன் வழங்கப்பட்ட வீட்டு விநியோக எரிவாயு உருளைகளை பொய்க்கணக்கில் ஏற்றி, வணிகப் பயன்பாட்டுக்கு அளித்து, ஆண்டுதோறும் ரூ.14,672 கோடி மக்கள் பணம் கொள்ளை போயிருக்கிறது என்றே இதற்குப் பொருள்.
இப்போது, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு உருளைகளை வீட்டுக்கு கொண்டு தரும் ஊழியர்களுக்கு சம்பளமே தருவதில்லை என்றும், அவர்களுக்கு எண்ணெய் நிறுவனம் தரும் கமிஷன் நீங்கலாக, விநியோகக் கட்டணம் என்று ரூ.15 வரை நிர்ணயித்திருந்தாலும், அதை ஊழியர்களுக்கு கொடுப்பதே இல்லை என்றும் எரிவாயு உருளைகளை விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஆகவேதான், நாங்கள் ரூ.50 வரை நுகர்வோரிடம் வசூலிக்கிறோம் என்றும் அப்பட்டமாக சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கை, இத்தகைய புகார் குறித்து நேரடியாக எண்ணெய் நிறுவனத்துக்குப் புகார் தெரிவிக்கலாம் என்பது மட்டுமே. ஆனால், இந்தப் புகாரைத் தந்த நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்கத் தயாராக இல்லை. ஆகவே, புகார்களும் வருவதே இல்லை. "அரசாங்கம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.336 போடுகிறதல்லவா? எங்களுக்கு ரூ.40, 50 கொடுத்தால் என்ன?"" என்று எரிவாயு உருளையைக் கொண்டு தரும் ஊழியர்கள் உரிமையுடன் நுகர்வோரைக் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். மானியத்தை விட்டுக் கொடுத்தவர் என்பதை அவரிடம் நிரூபிக்க வேண்டுமா என்ன?
இந்த முறைகேட்டை தவிர்க்க வீட்டு சமையல் எரிவாயு விநியோகத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் எளிமைப் படுத்தலாம். தற்போது ஐந்து கிலோ எரிவாயு உருளைகள் பெருநகர்களில் பரவலாக விற்பனைக்கு வந்துள்ளன. புதிய உருளை கேட்டு செல்லிடப்பேசியில் பதிவு செய்தவுடன், பதிவு எண் குறுந்தகவலில் வருகிறது. இந்தப் பதிவு எண்ணைக் காட்டி, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள முகவர்களிடம் இருந்து உருளையைத் தாங்களே எடுத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தினால், விருப்பமுள்ள நுகர்வோர் இத்தகைய எளிய நடைமுறைக்கு மாறுவர். இதனால், சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விநியோகத்துக்காக வழங்கும் கட்டணம் அரசுக்கு மிச்சப்படும்.
ஆதார் அட்டையின் அடிப்படைத் தகவல்கள், கிடைக்கக் கூடாதவர்களுக்கு கிடைத்துவிடும் என்பதும், இது தனிநபர் அந்தரங்கத் தகவல்களை மற்றவர்கள் அறிய வழியேற்படுத்தும் என்பதும்தான் தற்போது ஆதார் அட்டைக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்.
இருப்பினும், ஆதார் அட்டையின் ஒரேயொரு பயன்பாட்டில் மட்டுமே ரூ.14,672 கோடி மானியம் மிச்சப்படும் என்றால், உர மானியம், பொது விநியோகப் பொருள் மானியம் ஆகியவற்றுக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டால் நிச்சயமாக பெருமளவில் போலிகள் தவிர்க்கப்படுவர். ஆகவே, மானியம் பெறும் திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால், மக்கள் பணம் முறைகேடுகளால் யாருக்கோ போய்ச் சேருவது தடுக்கப்படும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட "ஆதார்' திட்டத்தை அப்போது எதிர்த்த பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தவுடன் அதைக் கைவிடவில்லை. மாறாக, அந்தத் திட்டத்தின் நன்மையை உணர்ந்து நரேந்திர மோடி அரசு அதை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டிருக்கிறது. இதற்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போடாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்.


NEWS TODAY 20.09.2024