Friday, December 4, 2015

நாம் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம்!

Dinamani


By க. பழனித்துரை

First Published : 04 December 2015 01:38 AM IST


இன்றைய தமிழகத்தில் கடுமையான மழைக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை பற்றிய விவாதம் எங்கும் எதிரொலிக்கிறது. இந்த விவாதம் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே நடத்தப்படுகின்றது. ஓர் அறிவார்ந்த விவாதத்தை நம்முடைய ஊடகங்களில் நம்மால் பார்க்க முடியவில்லை. அனைத்தையும் அரசியலாகப் பார்ப்பது என்பது நம்மைத் தரம் தாழ்த்துகின்றது.
யார் செய்தது தவறு என்பதுதான் இன்று விவாதமாக உள்ளது. இவை எல்லாவற்றையும்விட இந்தப் பேரிடரை வைத்து அரசியல் லாபம் பார்க்க முயல்வது நாம் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்துள்ளோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
வெள்ளப் பெருக்கு, விவசாய அழிவு, தொற்று நோய் அபாயம், வாழ்வாதாரம் பாதிப்பு, பொதுச் சொத்துகள் சேதம் என பிரச்னைகள் அடுக்கப்பட்டு விவாதம் நடைபெறும் போது, நமக்கு எழும் ஒரே கேள்வி, நாம் இதுவரையில் இப்படிப்பட்ட இயற்கைப் பேரிடரைச் சந்தித்ததே இல்லையா? நிறைய சந்தித்து இருக்கின்றோம் என்பதை நம் வரலாறு காட்டுகின்றது. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? அப்படி கற்றுக்கொண்டோம் என்றால் கற்றுக்கொண்ட பாடங்கள் இன்று நமக்கு ஏன் இந்தத் தருணத்தில் உதவிடவில்லை என்பதுதான் நமது அடுத்த கேள்வி.
2004-ஆம் ஆண்டு உலகை குலுக்கிய சுனாமியைவிடவா இந்தப் பேரிடர் சக்தி வாய்ந்தது. அதை நாம் சமாளிக்கவில்லையா? நாம் சமாளித்தோம். திறமையாகச் சமாளித்தோம்.
அப்படியெனில், அதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஏன் நாம் இன்று பயன்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய கேள்வி. சுனாமி தாக்கிய பிறகு, நம்மிடம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட்டுவிட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மை பேராயம் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு பெரு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
இந்தச் சட்டப்படி, மாநிலப் பேரிடர் மேலாண்மை பேராய மையம் மற்றும் மாவட்டப் பேரிடர் மேலாண்மை பேராய மையம் என அதிகாரப்படுத்தப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டன. சட்டத்தின்படி, அப்படி உருவாக்கப்பட்ட அந்த அமைப்புகள் செயல்படவில்லை என்றால் அதற்கு மத்திய அரசு காரணம் அல்ல. அதற்கு முழுப்பொறுப்பு மாநில அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் அனைவருமே.
எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், அறிவுஜீவிகளும் குறைசொல்வதற்கு மட்டும் அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. வானிலை மையம் தரும் செய்திகளை வைத்து பேரிடர் தயார் நிலைக்கு பொதுமக்களைக் கொண்டுவர உள்ளாட்சிக்கு அதிகாரம் அளிக்கும் ஆணையும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு அமைப்புகள், அதிகாரங்கள் இருந்தும் இன்னும் நம் கிராமங்களிலும், நகரங்களிலும் ஏன் பேரிடர் தயாரிப்பு நிலைக்கு மக்களைக் கொண்டுவரவில்லை?
உலகம் முழுவதும் பேரிடர் தடுப்பு தயாரிப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதுதான் நம் உயிர், உடைமைகளை பாதுகாத்திட வழிவகை செய்யும். அதுதான் அழிவுகளைக் குறைத்திடும். எனவேதான், ஐ.நா. நிறுவனங்கள் பேரிடர் தடுப்பு தயாரிப்பிற்கு மக்களைத் தயார் செய்வதை முன்னிலைப்படுத்துகின்றன.
ஆனால், நம் மக்களை இன்னும் நிவாரணம் பெறும் மனோபாவத்தில்தான் வைத்துள்ளோம். எனவேதான், எங்குபார்த்தாலும் நம் மக்கள் எங்களை வந்து யாரும் பார்க்கவில்லை, எதுவும் தந்திடவில்லை என்று ஓலமிடுகின்றனர். நம் மக்களாட்சியில் கூக்குரல் போட்டால்தான் நம் அரசை தம் பக்கம் திருப்பமுடியும் என்பதை அறிந்துதான் மக்கள் இப்படி கூக்குரல் எழுப்புகின்றனர். ஏன் என்றால், நிவாரணம் பெறத் தான் இவ்வளவு கூக்குரல்.
பேரிடர் என்பது தொடர்ந்து நிகழ்ந்து பொதுமக்களின் சொத்துக்களுக்கும், உடைமைகளுக்கும் அழிவுகளை ஏற்படுத்துவதால், ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பேரிடர் தடுப்பு தயாரிப்புக்கான பார்வையும், செயல்பாடுகளும் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசின் கொள்கையாக வகுக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக இயற்கைப் பேரிடர் நிகழ்கின்ற சூழலில், உள்ளாட்சிகள்தான் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ÷பேரிடர் தடுப்பு தயாரிப்பு நிலை செயல்பாடுகளை எடுக்க வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் நம் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருந்தும், உள்ளாட்சிகள் அந்த அளவுக்கு கவனத்துடன் இயங்கவில்லை என்பதும், அதற்கான சூழலை உள்ளாட்சிக்கு உருவாக்கித் தரவில்லை என்பதும், தங்களுக்குப் பேரிடர் மேலாண்மையில் உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றியும், நம் உள்ளாட்சியில் உள்ள தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் தெரியவில்லை என்பதுதான் இன்று நாம் பார்க்கும் யதார்த்தமான உண்மை.
சுனாமிக்குப் பிறகு தமிழகத்தில் ஐ.நா. நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தும், பேரிடர் மேலாண்மைக்கான ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கத் தான் மிகப் பெரிய அளவில் செயல்பட்டன. இதன் விளைவுகளை இன்று எந்த இடத்திலும் நம்மால் பார்க்க இயலவில்லை.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் சுனாமிக்குப் பிறகு பேரிடர் தடுப்பு தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, நிவாரணம், போன்ற தலைப்புகளில் பயிற்சிக் கையேடுகளைத் தயாரித்து, அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டு செய்தித்தாள்களில் செய்திகள் வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழகத்தில் சுனாமி தாக்குவதற்கு முன்பே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பேரிடர் தயார்நிலைக்கு என்று ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அது பெயரளவுக்கு இயங்கினாலும், அந்தக் குழுக்களுக்கு ஐ.நா. நிறுவனம் மூலம் அப்பொழுதே பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது.
அப்படிப் பயிற்சி பெற்ற பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் செயல்பட்ட பஞ்சாயத்துகளில், சுனாமியின் பாதிப்பு மிகவும் குறைவு என்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்து தெரிவித்திருந்தனர். சுனாமிக்குப் பிறகு இவையெல்லாம் பழங்கதையாயின என்பது போலத்தான் நமக்குத் தெரிகிறது.
உலகம் முழுவதும் சமூக பங்கேற்புடன் கூடிய வறுமைக் குறைப்பு, வாழ்வில் தாழ்வுற்றோரை அதிகாரப்படுத்துதல், மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்தும் வெற்றித் தடங்களைப் பதிக்கின்றபோது, நம்மிடம் பேரிடர் தடுப்பு தயாரிப்பில் மட்டும் ஏன் இந்த பொறுப்பற்ற தன்மை?
நாமே அரசாகத் திகழும்போது, அரசிடமிருந்து யாரும் வரவில்லை என்று கூக்குரலிடுவது, மீண்டும் பயனாளியாக இருக்க, மனுதாரராக இருக்க ஆசைப்படுவதுதான். மக்களாகிய நாம் உள்ளாட்சியுடன் இணைந்து பேரிடரைச் சமாளிக்கும் போது நம் உள்ளாட்சிக்கு மாநில, மைய அரசுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அதற்காக நாம் போராடலாம்.
ஆனால், நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், எங்களை யாரும் பார்க்க வரவில்லை, எதுவும் தரவில்லை என்று ஓலமிடுவது, அல்லது அந்த நிலைக்கு மக்களை வைத்திருப்பது ஒரு வளர்ந்த மாநிலத்திற்கு ஏற்புடையதல்ல.
உலகத்தில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இப்படிப்பட்ட பேரிடர் நடந்தபோது யார் செயல்பட்டது என்று பாருங்கள். அது உள்ளாட்சிதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உள்ளாட்சிகள் செயல்படாமல் இருந்தபோது அந்த ஆட்சியில் இருந்தவர்களை சட்டப்பூர்வமாக தண்டித்திருக்கின்றார்கள். இன்று நாம் உள்ளாட்சி அமைப்புகளை எடுபிடிகளாக வைத்துள்ளோம்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது, அந்த நகர மேயர்தான் எல்லாப் பணிகளையும் செய்தார். அதற்கான தலைமை, அதிகாரம், அதிகாரிகள், நிதி அனைத்தும் அவர்களுக்கு அரசாங்கம் தந்துள்ளன. உள்ளாட்சிகளை வலுப்படுத்துவது என்பது மக்களுக்குப் பக்கத்தில் அரசுக் கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருப்பது.
அது மட்டுமல்ல, பொதுமக்களை அந்தக் கட்டுமானங்களுடன் இணைத்து வைத்திருப்பது. இந்தச் சூழல் உருவானால் பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு வந்தாலும் அவர்கள் முழுப்பொறுப்புடன் முழுவேலையில் இருப்பார்கள். ஆனால், நம் அரசுக் கட்டமைப்புகள் பொதுமக்களைத் தூரத்தில் வைத்துக்கொள்ள நினைக்கின்றன. ஓர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.
இந்த இடைவெளிதான் அரசின் நல்ல செயல்பாடுகளைக்கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கின்றது. இடைவெளி இல்லை என்றால் அரசுச் செயல்பாடுகளை யாரும் குறை கூற முடியாது. ஏனென்றால், அதில் பொதுமக்கள் இருக்கின்றார்கள். உள்ளாட்சியை வலுப்படுத்தாமலும், மக்களை உள்ளாட்சியில் இணைக்காமலும் இருந்தால் மக்கள் தூரத்தில் நின்று ஓலம் இடுவதிலும், என்ன செய்தாலும் நிறைவில்லாமலும், தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதில் அரசியல்வாதிகள் அரசியல் லாபம் பார்க்கத்தான் செய்வார்கள். இதைத் தவிர்க்க இயலாது.
எனவே, நமக்குத் தேவை பேரிடர் தடுப்பு, சமாளிப்பு. அதற்கு உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் அந்த உள்ளாட்சி மக்கள் கையில் இருக்க வேண்டும். இதுதான் நம் இன்றைய மிக முக்கியத் தேவை.
2004-ஆம் ஆண்டு உலகை குலுக்கிய சுனாமியைவிடவா இந்தப் பேரிடர் சக்தி வாய்ந்தது. அதை நாம் சமாளிக்கவில்லையா? நாம் சமாளித்தோம். அப்படியெனில், அதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஏன் நாம் இன்று பயன்படுத்தவில்லை?

பெருமழையல்ல, பேரிடர்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 04 December 2015 01:36 AM IST


மழைச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.940 கோடியைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக அரசு முன்பு கோரியிருந்த ரூ.8,481 கோடி என்பதே கூடப் போதுமானதாக இருக்காது என்பதால், இதை உடனடி நிவாரண உதவியாகத்தான் கருத முடியும்.
சென்ற வாரம் சென்னையில் அடைமழை கொட்டித் தீர்த்தபோது, அந்த மாமழை ஏற்படுத்திய சேத மதிப்பு ரூ.8,481 கோடி என்று கணக்கிடப்பட்டது. உடனடியாக ரூ,2,000 கோடி மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தவுடன் ரூ.940 கோடியைப் பிரதமர் வழங்கினார். தற்போது கடந்த மூன்று நாள்களில், சென்னை மாநகர் மீதான பெருமழையின் பழிதீர்ப்புப் படலத்தின் இரண்டாம் தாக்குதலில், சேதத்தின் மதிப்பு இரண்டு மடங்குக்கும் மேலாகிவிட்டது.
மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழு வந்து, தனது ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு நேர்ந்த இரண்டாவது தாக்குதலில் நேர்ந்த சேதங்களும் பாதிப்புகளும் அந்த ஆய்வுக் குழுவின் கணக்கில் இருக்காது என்பது உறுதி. பேய்மழையின் இரண்டாவது தாக்குதலையும் மதிப்பீடு செய்து, தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை மீண்டும் திருத்தப்பட வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுப் பெருமழையின் முதல் தாக்குதலின்போது சில ரயில்கள் மட்டுமே ரத்தாகின. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இயங்கின. ஆனால், பெருமழையின் இரண்டாம் தாக்குதலில் ஐந்து நாள்களுக்கு விமான நிலையத்தை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு பகுதியிலான புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும்கூட ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மழை பலி எண்ணிக்கை 269-ஆக உயர்ந்தது. 40% செல்லிடப்பேசி சேவைகள் செயலிழந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மீட்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். இவ்வளவு ஆன பின்னரும், சென்னை பெருமழையைப் பேரிடர் துயரமாக அறிவிக்காமல் இருக்கிறார்களே, ஏன்? இதிலும் கூடவா ஓரவஞ்சனை?
2013-ஆம் ஆண்டு உத்தரகண்டில் பெருமழை வெள்ளத்தால் கேதார்நாத் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கியது. பிறகு, ரூ.7,346 கோடியை வழங்கியது. அந்தச் சேதம் கங்கைக் கரையோரம் மட்டுமே. உயிரிழப்பும் கட்டுமானங்களும் மட்டுமே சேதமடைந்தன. ஆனால், சென்னை மாநகரம் மட்டுமல்ல, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
உத்தரகண்ட் பாதிக்கப்பட்டபோது, பொதுத் துறையின் நவரத்ன நிறுவனங்கள் ஓடிவந்து உதவின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனமும் பல கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே ரூ.125 கோடியை வழங்கியது. இது நீங்கலாக, பல்வேறு அமைப்புகளும் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உள்பட) தனியாக நிதி வசூலித்து வழங்கின.
உத்தரகண்ட் வெள்ளத்தின்போது அனைத்து மாநிலங்களும் உடனடியாக நிதி வழங்கின. தமிழகத்தின் தலைநகர் சிதைந்து கிடக்கும் நிலையில், கர்நாடகமும், பிகாரும் தலா ரூபாய் ஐந்து கோடி வழங்க முன்வந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் ஏன் இன்னும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை என்று தெரியவில்லை. உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழக அரசு ரூபாய் ஐந்து கோடி அறிவித்தது. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்கு உதவிட இன்னமும் ஏன் வட மாநிலங்கள் தாமதிக்கின்றன? இது தாமதமா, தயக்கமா?
சென்னையின் துயரத்தை ஆங்கிலக் காட்சி ஊடகங்களும், வட இந்திய ஊடகங்களும் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் சென்னை பேரிடருக்குத் தரப்படவில்லை.
தமிழகத்தின் ஊடகங்கள், சென்னைப் பேரிடரின் தீவிரத்தையும், அது ஏற்படுத்தியுள்ள சேதங்கள் ஒவ்வொரு பிரிவிலும் எத்தகையவை, இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை காலம் ஆகும், சேத மதிப்பு என்னவாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள், துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, மத்திய அரசுக்குப் போட்டியாக தனி மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தொலைக்காட்சி ஊடகங்களின் பெரும்பாலான நேரமும், சாதாரண மக்களின் கோபக் குரல்களை மட்டுமே ஒளிபரப்பி அரசியலுக்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்காமல், தமிழக அவலம் குறித்து மாநிலங்கள் அவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேசியிருப்பது வரவேற்புக்குரியது. ஆளும் கட்சியின் கோரிக்கைகளைவிட எதிர்க்கட்சிகள் பிரச்னையின் கடுமையை எடுத்துரைக்கும்போதுதான், மற்றவர்களுக்கு நிலைமையின் தீவிரம் உறைக்கும். மழை நின்ற பிறகு, வெள்ளம் வடிந்த பிறகு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுப் பரவும் அபாயத்தைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற அவரது எச்சரிக்கையில் அர்த்தமுள்ளது. கனிமொழி குறிப்பிட்டிருப்பதுபோல, போதுமான அளவு படகுகளையும், மருத்துவ உதவியையும், தமிழகத்துக்கு உடனடியாக அனுப்பித் தருவது மத்திய அரசின் கடமை.
மத்திய அரசு இந்தப் பேய்மழையை தேசியப் பேரிடராக அறிவிப்பதும், இழப்பை மறு மதிப்பீடு செய்வதும் இன்றியமையாதது!


வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
2
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:20 AM IST
பூந்தமல்லி,
மழை வெள்ளம் காரணமாக வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
முடக்கம்தொடர் கனமழை காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவில் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் செல்லும் சாலை வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் நிறைந்த தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
படகுகள் மூலமாக...திருமுடிவாக்கம் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெளிவட்ட சாலை மெரினா கடற்கரை போல் காட்சி அளிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு சென்ற ஊழியர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெறுகிறது. படகுகள் செல்ல முடியாத நிறுவனங்களில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்திற்குள் மழைநீர் அதிகளவில் புகுந்ததால், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 30–க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று 3–வது நாளாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. அந்த பகுதி மக்கள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாலைகள் துண்டிப்புஅடிப்படை தேவைகளான தண்ணீர், பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லிக்கு வெளிவட்ட சாலை வழியாக சில அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
குன்றத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், போரூர், பூந்தமல்லி, தாம்பரம் செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
7
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
பூந்தமல்லி,
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மக்கள் அவதிதொடர் கனமழையால் சென்னை புறநகர் பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதில் குறிப்பாக போரூர், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம் உள்ளிட்ட முக்கிய ஊர்களும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
மின்சாரம், குடிநீர், பால், உணவுகள் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் கடந்த 3 நாட்களாக கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ளமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக விலைபெரும்பாலான பகுதிகளில் வீடுகளின் முதல்மாடி வரை தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வசிக்க முடியாத சூழலால் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அகதிகள் போல் வெளியேறி வருகின்றனர்.
பால்கடை, பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம் சென்டர் போன்ற எல்லாஇடங்களிலும் பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக பால் அரை லிட்டர் ரூ.50, 20 லிட்டர் குடி தண்ணீர் ரூ.150–க்கும் விற்கப்படுகிறது. இதனை வாங்க முடியாமல் மழைநீரை குடித்தும், ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் உணவுகளை வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
முற்றுகைஇந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் கொந்தளிப்புடன் இருந்ததால் அவர்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அவர் மோட்டார்சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார்.
மேலும் சில இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளாத பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர் பகுதியில் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆலந்தூர் பகுதியில் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
ஆலந்தூர்,
ஆலந்தூர் பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கவேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஆலந்தூர் பகுதியில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், குடிநீர் எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஆலந்தூரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த 3 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
2 மணி நேரமாவது....ஆனால் வேளச்சேரி, கிண்டி, தரமணி ஆகிய பகுதியில் மழைநீர் வடிந்தால் தான் மின்சாரம் வழங்கப்படும். உங்கள் கோரிக்கை எதுவும் ஏற்கமுடியாது என அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பரங்கிமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள், தனியார் நிறுவனத்திற்கு 4 மணி நேரம் மின்சாரம் வழங்கிய அதிகாரிகள், பொதுமக்களுக்காக குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும். 3 தினங்களாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறினர்.
சாலை மறியல்ஆனால் உதவி பொறியாளர் செந்தில், உயர் அதிகாரிகள் மின்சாரம் வழங்க தடை விதித்து உள்ளதால், நான் எதுவும் செய்யமுடியாது என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், பாலாஜிநகர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக அவற்றை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சென்னை புறநகர்வாசிகள் கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள் இயக்கம்

வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சென்னை புறநகர்வாசிகள் கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள் இயக்கம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
ஆலந்தூர்,
சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
வீடுகளை மழைநீர் சூழ்ந்ததுசென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியில் உள்ள 500–க்கும் மேற்பட்ட குடிசைவீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
நங்கநல்லூர், பழவந்தாங்கலில் மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆலந்தூர் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். நங்கநல்லூர் நேரு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதிகளை மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் என்.மகேசன், கவுன்சிலர் ஹேமா பரணிபிரசாத் ஆகியோர் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
தண்ணீரை வெளியேற்றினர்ஆதம்பாக்கம் நிலமங்கை நகர், சக்தி நகர், பாலாஜி நகர், வேல் நகர், பாரத் நகர், சுரேந்தர் நகர், தில்லைகங்கா நகர், டி.என்.ஜி.ஒ.காலனி, ஆலந்தூர் ராஜா தெரு, கண்ணன் காலனி, புளியந்தோப்பு வேளச்சேரி, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி, பெரியார் நகர், நேரு நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
ஆதம்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநகராட்சி கவுன்சிலர்கள் எம்.ஆர்.நரேஷ்குமார், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.
வேளச்சேரி அம்பேத்கர் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, நேதாஜி காலனி, தண்டீஸ்வரன் நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. வேளச்சேரி நேதாஜி காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ளவர்களை மீட்க மாநகராட்சி சார்பில் படகுகள் விடப்பட்டன.
சித்தாலபாக்கம்சித்தாலபாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பனையூர் குப்பம், துரைப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம் வீரமணி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த பகுதிகளை கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
உள்ளகரம்–புழுதிவாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.ஜெயசந்திரன், ஜெ.கே.மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர்.
நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றினார்கள்.
பெரும்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இந்த பகுதியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் சுகாசினி ரங்கராஜன் ஆகியோர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேடவாக்கம்மேடவாக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரவி தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் ராஜேஷ் நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருந்தது. நன்மங்கலம் பகுதியில் ஏரியில் இருந்து வெளியேறும் நீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்க்கட்டளை, முவரசம்பட்டு உள்பட புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் வீடுகளை சூழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வராததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சாலை மூடப்பட்டதுசின்னமலையில் இருந்து கிண்டி கத்திப்பாரா வரை சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அடையாறு ஆற்றில் அதிகமான தண்ணீர் சென்றதால் மணப்பாக்கம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடியிருப்பு, முகலிவாக்கம், நந்தம்பாக்கம் பர்மா காலனி, எம்.ஜி.ஆர்.நகர், உட்கீர்ட்கவுண்ட், கணபதிபுரம், பரங்கிமலை துளசிங்கபுரம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டோண்மெண்ட் திருமண மண்டபம், பள்ளி கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. நந்தம்பாக்கம் காவல் நிலையம் நீரில் மூழ்கியது. இதனால் பரங்கிமலையில் இருந்து போரூர் செல்லும் பூந்தமல்லி–மவுண்ட் சாலை மூடப்பட்டது.
கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள்கிண்டியில் இருந்து ஈக்காட்டுதாங்கல், போரூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். தேனீர் விடுதி, சிறிய ஓட்டல்களில் கூட்டம் அலை மோதியது. ஆதம்பாக்கத்தில் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், மனோகரன் ஆகியோர் உணவு வழங்கினார்கள். மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் பகுதி மக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.சீனிவாசன் உணவு வழங்கினார். அத்தியாவசிய பொருட்களான பால் உள்பட எதுவும் கிடைக்காமல் பொதுமக்கள் அலைந்தனர்.
சின்னமலையில் இருந்து நடந்து கத்திப்பாரா வரை வந்த பொதுமக்களுக்காக மாநகர பஸ்கள் தாம்பரம் வரை இயக்கப்பட்டன. செல்போன் இணைப்புகள் சரிவர கிடைக்காததால் மக்கள் அவதிப்பட்டனர். தொலைபேசி நிலையங்களில் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பேசிச் சென்றனர்.

சென்னையில் டிசம்பர்-5 வரையில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது

சென்னையில் டிசம்பர்-5 வரையில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
131
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 03,2015, 3:50 PM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 03,2015, 3:50 PM IST
சென்னை, 

சென்னையில் டிசம்பர்-5 வரையில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சென்னை மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம்- திருத்தணிக்கு ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. 

எண்ணூர்-கும்மிடிபூண்டி மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரெயில் இயக்கப்படுகிறது. 

ரெயில்கள் ரத்து

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் சேவை வரும் 5-ம் தேதிவரையில் ரத்து செய்யப்பட்டது.
 
தொடர்ந்து கனமழை மற்றும் சென்னை, அதன் சுற்றவட்டாரப் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கிஉள்ளது. இதன் காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து அனைத்து ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்துசெய்யப்பட்டது என்று தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள், இவ்வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் மருத்து உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மதுரை, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்கள் வரையிலும் மருத்துவ உதவிகள் விரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ரெயில் நிலையங்களில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வரையில் பாதுகாப்பு கூறுதிசெய்யும் மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பிறஉதவிகளை செய்யும் வண்ணம் ரெயில்வே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

சென்னை வெள்ளம் அபாயகரமான சூழ்நிலை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்

சென்னை வெள்ளம் அபாயகரமான சூழ்நிலை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
29
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 5:15 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 1:38 AM IST
புதுடெல்லி,

சென்னை வெள்ள சேதம் மிக அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

பாராளுமன்றத்தில் விவாதம்

தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்து வந்தது. மேலும் புதுச்சேரி, ஆந்திரா வெள்ளச்சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

330 மி.மீ. மழை

சென்னையில் வழக்கமாக டிசம்பர் மாதம் முழுவதும் 250 மி.மீ. மழையே பெய்யும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டுமே 330 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்துள்ளது. அந்தவகையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மழை பெய்துள்ளது. மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு கடும் மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது.

மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு சென்னை நகரம் ஒரு தீவாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல. நிலைமை மிக அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது.

269 பேர் சாவு

சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளதால், நிவாரண பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு வசதிகளை பொறுத்தவரை தரைவழி தொலைப்பேசி இணைப்புகள் 60 சதவீதம் வரையும், 40 சதவீதம் அளவுக்கு செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் தற்போது பெய்துள்ள மழையில் சுமார் 269 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 2 பேரும், ஆந்திராவில் 54 பேரும் இறந்துள்ளனர்.

மேலும் நிதியுதவி

மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளுக்காக கடற்படைக்கு சொந்தமான 12 படகுகள் மற்றும் 155 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவை சேர்ந்த 14 பிரிவு வீரர்களை விமானப்படையும் அனுப்பியுள்ளது.

தமிழக மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி நிதி வேண்டும் என மாநில அரசு கேட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.940.92 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அங்கு பார்வையிட்டு திரும்பியுள்ள மத்தியக்குழுவின் அறிக்கைப்படி மேலும் நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். 

வெள்ள சேதம் காரணமாக மத்திய அரசு அறிவிப்பு; தமிழகம் முழுவதும் 11-ந்தேதி வரை சுங்கவரி வசூலிப்பு ரத்து

புதுடெல்லி,

வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் 11-ந் தேதி வரை சுங்கவரி வசூலிப்பதை மத்திய அரசு ரத்து செய்தது.

சுங்கவரி ரத்து

தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கவரி வசூல் மையங்களில் வருகிற 11-ந் தேதி வரை வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நேற்று தேசிய சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

நிவாரணப் பணிகளுக்காக...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முகமைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இந்த பணிகளை எளிமையாக்கும் விதமாக சுங்கவரி வசூல் மையங்களில் வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு; தலைமைச்செயலக ஊழியர்கள் விடுப்பில் சென்றனர்

logo
சென்னை,

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து சென்னையை புரட்டிப் போட்டுவிட்டது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்போ அல்லது வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான மாற்று ஏற்பாட்டையோ அந்த நிறுவனங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு பொது விடுமுறைக்கான அறிவுரையை நேற்று முன் தினம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘90 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்று தெரிகிறது. அந்தத் துறையின் உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்டு சென்றுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு பொது விடுப்பு அளிக்கப்படவில்லை என்றாலும், தேவைப்பட்டவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவித்தார்.

ஊழியர்கள் பலர் வரவில்லை என்பதால் தலைமைச்செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tuesday, December 1, 2015

கவனத்தின் உயிர்ச்சூழல்!

Published: December 1, 2015 08:58 ISTUpdated: December 1, 2015 08:58 IST

கவனத்தின் உயிர்ச்சூழல்!

வெ. ஸ்ரீராம்

மனதின் ஒரு பகுதி நமக்குள்ளிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுவதே கவனம்

சமூகவியல் பாடத்தில் கவனம் போதாது என்றது ஆறாவது வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியரின் குறிப்பு. கடைக்குப் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மேல் கவனம், தெருவில் விளையாடும் போதும் சைக்கிள் ஓட்டும்போதும் கவனம் - இப்படி நம் வாழ்க்கைப் பாதையில் எத்தனை அன்றாட விஷயங்களில், எவ்வளவு விதங்களில் கவனம் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், இந்தக் ‘கவனம்’ என்பதை ஒரு ‘பொருளாக’, விலை கொடுத்து வாங்கப்படும் ‘பொருளாக’, நுகர்பொருளாகப் பார்க்க முடியுமா?

சற்றே நூதனமான அணுகுமுறையுடன் இந்தக் கருத்தை ஆராய்ந்து யீவ் சிதோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ‘கவனத்தின் பொருளியல்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இவர் பிரான்ஸின் க்ரெநோபல் நகரத்தின் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியரும்கூட. அதே ஆண்டு ‘கவனத்தின் உயிர்ச் சூழலுக்காக’ என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார் சிதோன். ‘பொருளியல்’ என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் நிதிநிலை, அங்குள்ள நுகர்பொருட்கள், அவற்றின் வணிகம் அல்லது சந்தை இவற்றிடையேயான தொடர்பு பற்றிய துறை. ஆனால், மக்களின் ஒட்டுமொத்த கவனம் என்ற பொருளை ஒரு சிலருடைய சுயநலத்துக்காகச் சுரண்டல் செய்வதை ஆராய்கிறது இந்தப் புத்தகம். அதுவும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியின் உதவியால் சமூகத்தில் ‘கவனம்’ நுகர்பொருளாக்கப்படுகிறது என்ற கருத்தாக்கத்தை இவர் முன்வைக்கிறார்.

கவனத்தின் நெருக்கடி

ஆனாலும், இந்தப் பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குப் பிறகுதான் தோன்றியதென்று சொல்ல முடியாதென்கிறார் இந்த ஆசிரியர்.

1880-களிலேயே, மேலைநாடுகளில் தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிலவிய முதலாளித்துவச் சூழலிலேயே ‘கவன’த்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பற்றி ஜோனாதன் க்ரேரி என்ற அமெரிக்க ஆய்வாளர் முன்வைத்த கருத்தை இவர் சுட்டிக்காட்டுகிறார். அன்றைய நவீன மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளில், சீராக நகர்ந்துகொண்டிருக்கும் மேஜைகளின் முன்னால் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் தொழிலாளிகள் ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பொருத்தும்போது, அவர்களுடைய கவனமும் அவர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளரின் கவனமும் உற்பத்திப் பெருக்கத்திலேயே இருந்த நாட்களிலேயே ‘கவனம்’நெருக்கடியை எதிர்கொண்டது என்கிறார். உற்பத்தி பெருகப்பெருக, அவற்றைச் சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததை விற்றுத் தீர்ப்பது, விற்றுத் தீர்ந்த இடத்தில் மீண்டும் நிரப்புவது, இந்தச் சங்கிலி செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் விளம்பரங்கள் என எல்லாத் தளங்களிலும் கவனம் திரும்பியபோது ஏற்பட்ட நெருக்கடி.

மக்களின் கவனக் கண்காணிப்பின் நிர்ப்பந்தங்கள் ஊடகக் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. ஊடகங்களுடைய வளர்ச்சிக்கு விளம்பரதாரர்களுடைய உதவி தேவைப்பட ஆரம்பித்தவுடன், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கும் நேரமும் இடமும் விரிவடையத் தொடங்கின. நுகர்வோரின் கவனத்தைக் கவர்ந்து, கட்டுக்குள் வைத்து நிர்வகிப்பதில் போட்டி வளர்ந்தது. ‘‘மக்கள் கவனத்தை எப்போதும் தன் கட்டுக்குள் இருத்தும் நெருக்கடியின் வரலாறுதான் முதலாளித்துவத்தின் வரலாறு’’ என்று குறிப்பிடுகிறார் இவர்.

உள்ளுணர்வின் அங்கம்

தீவிரமான, ஒருமுகப்படுத்தப்பட்டது ‘நல்ல கவனம்’, பல திசைகளை நோக்கிச் சிதறும் ‘மோசமான கவனம்’ என்று மனிதர்களின் கவனத்தை மேம்போக்காகத் தரம் பிரிக்க முடியாது. மனித குலத்துக்கு இந்த இருவிதமான கவனங்களுமே அவசியமானவை என்று ‘கவனத்தின் உயிர்ச்சூழலுக்காக’ என்ற தன்னுடைய அடுத்த புத்தகத்தில் விளக்குகிறார் யீவ் சிதோன். ஒருமுகக் கவனத்தைவிட, பல திசைகளிலும் கவனம் கொள்வதென்பது மனித குலத்துக்கே அடிப்படையான ஒன்று. ஏனென்றால், அது உள்ளுணர்வைச் சார்ந்தது. பன்முகக் கவனச் சிதறலைக் குறித்து நரம்பியலாளர்களும் உளவியலாளர்களும் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றின் மேல் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதுகூட, வேறு பல திசைகளிலும் நம் கவனம் செயல்படுகிறது. உதாரணமாக, ஒரு சிறு கூட்டத்தில் ஒருவருடன் நாம் மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நமக்குப் பின்னாலிருந்து யாராவது நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால், அதுவும் நமக்குக் கேட்கிறது; திரும்பியும் பார்க்கிறோம். உளவியலாளர்கள் இதை ‘காக்டெய்ல் பார்ட்டி விளைவு’ என்று சொல்கிறார்கள். நம்முடைய மனத்தின் ஒரு பகுதியில், தானியங்கிக் கவனம் ஒன்று எப்போதும் அனிச்சையாக 360 டிகிரி கோணத்தில் விழிப்புடன் செயல்படுகிறது, ஆதிமனிதனுக்கு இருந்ததைப் போல. ஆதி மனிதனுக்கு அது வாழ்வா, சாவா என்ற பிரச்சினை. ஒரு சிறிய சத்தம், வானிலையில் லேசான மாற்றம், கொடிய மிருகம் ஒன்றின் அன்மை, விநோதமான வாடை இவற்றையெல்லாம் இனம் கண்டுகொள்ள அவனுடைய ஐம்புலன்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதாயிற்று. இன்றைய ஊடக ஆக்கிரமிப்புச் சூழலில் ஸ்மார்ட் போன் போன்ற ‘செயற்கைப் புலன்’அந்த வேலையைச் செய்கிறது. இது ஒரு வசதி; ஆபத்தானதும்கூட. (செல்போனில் பேசிக்கொண்டே விபத்துக்குள்ளான சம்பவங்கள் நவீன உலகின் மறுபக்கம்.)

கடந்த 50 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் மற்ற தேவைகளிலும் ஓரளவாவது கவனத்தைச் ‘சிதற’ விட்டிருந்தோமானால், உயிர்ச்சூழல் சேதங்களைக் குறித்தும், இதே பொருளாதார வளர்ச்சி உருவாக்கிய சமூகப் பிரச்சினைகளைக் குறித்தும் ஒருவேளை நம்முடைய கவனம் பயனுள்ள வகையில் செயல் பட்டிருந்திருக்கும் என்கிறார் அவர்.

எப்படி வகைப்படுத்துவது?

‘தனக்குப் புறத்தேயிருக்கும் ஒன்றை நோக்கி மனத்தைச் செலுத்துவது’ என்பதுதான் ‘கவனம்’ என்கிறார் ஆசிரியர். (லத்தீன் மொழியிலிருந்து பிரெஞ்சு, ஆங்கிலத்துக்கு வந்திருக்கும் இந்தச் சொல்லுக்கு சொற்பிறப்பியல் வரையறையும் இதுதான்.) அதாவது, நம்முடைய மனதின் ஒரு பகுதி நமக்குள்ளேயிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுகிறது. ஒருவிதத்தில் இது ஒரு ‘அந்நியமாதல்’. ஆனாலும், அழகியல் ரீதியினாலான அனுபவங்களின் அற்புதமே அதுதான். ஒரு புத்தகம், இசை அல்லது திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு, தானாகவே ஒருவர் தன் அகவயத் தன்மையை விட்டுக்கொடுப்பது. இருந்தாலும், நமக்குள் சில மாறுதல்களை அது தோற்றுவித்து நம்மை வளப்படுத்துகிறது. வெளியுலகத்துடனான நம்முடைய உறவுகளுக்கு இந்தக் கவன ஈர்ப்பு தேவையாக இருப்பதால், இந்த அந்நியமாதலை மறுக்கும் வாழ்க்கை மனிதாபிமானமற்றதாக ஆகிவிடுகிறது என்ற கருத்தாக்கத்தை சிதோன் தன் புத்தகத்தில் முன்வைக்கிறார்.

க்ரெநோபல் நகர மேயர், நகரத்தின் பல பகுதிகளில், குறிப்பாக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் பொதுஇடங்களில், வித்தியாசமான தானியங்கி இயந்திரங்களை வைத்துள்ளார். ஒரு நாணயத்தை அதில் போட்டு, பித்தானை அமுக்கினால், பிஸ்கெட் பாக்கெட் அல்லது குளிர்பான டின்னைப் போல, அவற்றுக்குப் பதிலான இரண்டு அல்லது மூன்று தாள்கள் வரும். அவற்றில் ஒரு சிறுகதை இருக்கும். காத்திருக்கும்போது ‘ஸ்மார்ட் போனை’யே கவனித்துக்கொண்டு இருக்காமல் சிறுகதை ஒன்றைப் படிக்கலாம். தேர்வு மக்களுடையதே!

- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியே விருது பெற்றவர்.

தொடர்புக்கு: ramcamus@hotmail.com

எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு

Published: November 24, 2015 09:09 ISTUpdated: November 24, 2015 09:09 IST


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளியாகிவிட்டன. இப்போது பதவியில் இருப்போருக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் பல நன்மைகளை இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. ஊதியம், படிகள், ஓய்வூதியம் ஆகியவற்றில் 23.55% உயர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆறாவது ஊதியக்குழு 40% உயர்வைப் பரிந்துரைத்திருந்ததை ஒப்பிடும்போது இது குறைவு என்பதுடன் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் இப்போதைய பொருளாதார நிலைமை வலுவற்று இருப்பதுடன் நிதி நிலையும் நெருக்கடியில் இருப்பதை அனைத்துத் தரப்பினருமே அறிவர். அடிப்படை ஊதியத்தில் 16%, படிகளில் 63%, ஓய்வூதியத்தில் 24% என்று உயர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருப்போர் 47 லட்சம், ஓய்வு பெற்றோர் 52 லட்சம் என்பதால் இதற்காகும் செலவு மத்திய அரசுக்கு நிச்சயம் ஒரு சுமையாகத்தான் இருக்கும். இந்தப் பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டால் மொத்த உற்பத்தி மதிப்பில் 0.65% அளவுக்குச் செலவு அதிகரிக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டால் அதை அப்படியே மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்குவது சில மாநிலங்களில் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநிலங்களுக்கும் இதனால் செலவு அதிகரிக்கும். பொதுவாக, இப்போது சரக்குகளின் விலை குறைவாக இருப்பதால் இந்த ஊதிய உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயரக்கூடிய ஆபத்து இல்லை. மத்திய அரசுக்கு இந்தப் பரிந்துரைகளால் சுமார் ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். ஆனால், இந்தச் செலவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் உற்பத்தி, விற்பனை, நுகர்வு என்ற மூன்றும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பையும் பெருக்கும். அதே சமயம், விலைவாசி சற்றே உயர்ந்தால் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டாகக் கடைப்பிடித்த பணவீக்கக் கட்டுப்பாடு என்ற பத்தியம் அனைத்தும் பலனில்லாமல் போய்விடும். ஒவ்வொருமுறையும் ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோதும், சில்லறை விற்பனை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு பணவீக்கம் உயர்ந்ததே நம்முடைய அனுபவம். எனவே, அது மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்துக்கும் அதிகபட்ச ஊதியத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறைக்க வேண்டும். ஏகப்பட்ட ஊதிய நிலைகள் இருக்கக் கூடாது என்று ஊழியர்கள் கோரியிருந்தனர். கிரேடு பே, பே பேண்ட் ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்று ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது. பழைய ஊதிய விகிதங்களிலிருந்து புதிய ஊதிய விகிதங்களுக்கு மாறுவதற்கு ஊதியத்தை எப்படி உயர்த்திக் கணக்கிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சரியாகக் கணக்கிடாவிட்டால் இப்போதுள்ள ஊதிய விகித வேறுபாடுகள் அப்படியே தொடரும். பழைய ஓய்வூதியதாரர்களுக்கும் நடப்பு ஓய்வூதியதாரர்களுக்குமான ஓய்வூதியத்தைச் சீரமைக்க எத்தனை ஆண்டுகள் பணியில் இருந்தார், எத்தனை ஊதிய உயர்வுகளைப் பெற்றார் என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கக் கூறியிருக்கிறது. இதெல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுப் பரிந்துரைகள் வரும்போதும் மக்கள் எழுப்பும் கேள்விகள் இப்போதும் தொடர்கின்றன. சமூகத்தின் ஏனைய தரப்பினருக்குமான ஊதிய உயர்விலும் அரசு எப்போது இப்படி அக்கறை காட்டத் தொடங்கும்?

சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமான சேவை நாளை தொடக்கம்


By சென்னை,


First Published : 01 December 2015 02:41 AM IST


புதுதில்லியில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 2) தொடங்கவுள்ளது.
புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். ஏஐ173 எனும் விமானம் புது தில்லி விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கலிஃபோர்னியா நேரப்படி காலை 6 மணிக்குச் சென்றடையும். 16 மணி நேரம் 45 நிமிஷங்கள் பயண நேரமாகும்.
சென்னையில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏஐ 043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு புதுதில்லி விமான நிலையத்தைச் சென்றடையும்.
புதிய சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு, இந்த விமானத்தில் பயணம் செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்றல் தவழட்டுமே....

logo

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். திருமணங்கள் பகையைமுறித்து, நல்லுறவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் அது. அதுபோல, ஒரு நிலைமைக்கான அடையாளம் இப்போது தெரிகிறது. பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் நல்லுறவு இல்லாத நிலையில் இதுவரை பாராளுமன்ற கூட்டத்தொடர்களெல்லாம் அமளியிலேயே நடந்தது. அதுவும் ராஜ்யசபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், பல மசோதாக்கள் லோக்சபையில் பா.ஜ.க.வின் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் நிறைவேற்றமுடியாமல் திரிசங்கு சொர்க்கம் நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், இப்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இது ஆக்கபூர்வமான கூட்டத்தொடராக நடக்கும் என்பதற்கான விதை ஒரு திருமண வீட்டில் விதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வியின் மகன் திருமணம் டெல்லியில் நடந்தது. அந்த திருமணத்துக்கு நரேந்திர மோடியும் வந்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் வந்திருந்தார். திருமண வீட்டில் இருவரும் யதேச்சையாக சந்தித்தபோது, பிரதமர் சரக்கு சேவைவரி உள்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற துணையாக இருக்க கேட்டுக்கொண்டார். மன்மோகன்சிங்கும் இதுபற்றி சோனியாகாந்தியிடமும் பேசலாமே என்று கருத்து தெரிவித்தார். இதேபோல, மற்றொரு தொடர்பும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தன் மகள் திருமணத்துக்காக ராகுல்காந்திக்கு அழைப்பு கொடுக்க சென்றபோது ஏற்பட்டது. இந்த இரு திருமணங்களும் தற்போது ஒரு புதியபாதைக்கான வாசலைத் திறந்துவிட்டன.

கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்குக்கும், பிரதமர் வீட்டுக்கு ஒரு தேநீர் விருந்துக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் பல அரசியல் மாற்றங்களுக்கு தேநீர் விருந்துகள்தான் காரணமாக இருந்தன. இந்த தேநீர் விருந்து அழைப்பை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் ஏற்றுக்கொண்டு, பிரதமர் வீட்டுக்கு சென்றனர். அங்கு மனம்திறந்து இருதரப்பும் பேசினர். சரக்கு சேவைவரி மசோதா, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த மசோதா, அதில் சில மாற்றங்களை பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. சரக்கு சேவைவரி 22 சதவீதம் விதிக்கப்படவேண்டும் என்று பா.ஜ.க. சொல்கிறது. இது 18 சதவீதம்தான் இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் ஒரு சதவீதம் கூடுதல்வரி விதிக்கலாம் என்று பா.ஜ.க. சொல்கிறது. அது கூடாது என்று காங்கிரஸ் சொல்கிறது. சரக்கு சேவைவரி கவுன்சிலில் மூன்றில் ஒருபங்கு இடம் மத்திய அரசாங்கத்துக்கு வேண்டும் என்று பா.ஜ.க. சொல்கிறது. நான்கில் ஒருபங்கு போதும் என்று காங்கிரஸ் சொல்கிறது.

மது, புகையிலை பொருட்கள் விற்பனையை குறைந்தது 5 ஆண்டுகளுக்கு சரக்கு சேவைவரிக்குள் கொண்டுவரக்கூடாது என்று பா.ஜ.க.வும், 5 ஆண்டுகளுக்குள் கொண்டுவரவேண்டும் என்று காங்கிரசும் கூறுகிறது. இந்த தேநீர் விருந்தின்போது இருதரப்பும் பேசிய கருத்துகள் தொடர்பாக அவரவர் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சிமாநாடு முடிந்து பாரீசில் இருந்து பிரதமர் வந்தவுடன், நாளை அல்லது நாளை மறுநாள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடந்து இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமுடிவு காணப்படவேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். இரு கட்சிகளுமே பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் சீர்திருத்த கட்சிகள் என்ற முறையில், இனி பாராளுமன்றத்தில் நல்லுறவு, நல்லிணக்கம் தழைக்கட்டும். மக்களுக்கு சேவை என்ற குறிக்கோளை நோக்கி இந்த குளிர்கால கூட்டத்தொடரில் வெப்பம் வேண்டாம், குளுமை நிலவட்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.

NEWS TODAY 20.09.2024