Friday, December 18, 2015

விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது, அமெரிக்கா இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு

விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது, அமெரிக்கா இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு

, 4:00 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 18,2015, 2:23 AM IST

வாஷிங்டன்,


எச்1பி விசா, எல்–1 விசா கட்டணங்களை அமெரிக்கா இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எச்1பி விசா, எல்–1 விசா

அமெரிக்க குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு 85 ஆயிரம் ‘எச்1பி விசா’ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கக் கோரி அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் 2 எம்.பி.க்கள் மசோதா தாக்கல் செய்துள்ளனர். இது சட்டமானால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பும் தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த துறையினருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எச்1பி விசா மற்றும் எல்–1 விசா கட்டணங்களை அமெரிக்கா இரு மடங்காக உயர்த்தி உள்ளது.

4 ஆயிரம் டாலர்

இதன்படி எச்1பி விசாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 4 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம்) சிறப்பு கட்டணம் விதிக்கப்படும். எல்–1 விசாவுக்கு சிறப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.3 லட்சம்) வசூலிக்கப்படும்.

ஒபாமா அரசு கொண்டு வந்துள்ள சுகாதார சட்ட அமலாக்கம் மற்றும் பயோ மெட்ரிக் டிராக்கிங் அமைப்பினை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு பொருந்தும்?

எச்1பி விசா மற்றும் எல்–1 விசா ஆகிய இரு விசாக்களுமே இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

எச்1பி விசாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 4 ஆயிரம் டாலர் சிறப்புக்கட்டணம் யாருக்கு பொருந்தும் என்றால், குறைந்த பட்சம் 50 பணியாளர்களை கொண்டுள்ள நிறுவனம், அவர்களில் 50 சதவீதத்தினர் எச்1பி விசா அல்லது எல்–1 விசா பெற்றிருந்தால், அவர்களுக்கு பொருந்தும்.

இதே விதிமுறைதான் எல்–1 விசாவுக்கும் பொருந்தும்.

10 ஆண்டுகளுக்கு அமல்

முன்பு விசா கட்டணம் 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த முறை 10 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த விசா கட்டணம், செப்டம்பர் 30–ந் தேதியுடன் காலாவதியாகி விட்டது.

இப்போது இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் விசா கட்டணமாக ஆண்டுக்கு 7 கோடி டாலர் முதல் 8 கோடி டாலர் வரை (சுமார் ரூ.469 கோடி முதல் 536 கோடி வரை) செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எச்1பி விசா கட்டணமாக 2 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

பிரச்சினை எழுப்பினார் மோடி

விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது இந்திய–அமெரிக்க உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அமெரிக்க பாராளுமன்ற தலைவர்களிடம் ஜனாதிபதி மாளிகை கவலை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த கவலையை பொருட்படுத்தாமல் விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்படுவதில் முக்கிய பங்காற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், அப்போது விசா கட்டண உயர்வு பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விமான இன்ஜினில் சிக்கி இன்ஜினியர் பலி

மும்பை,:மும்பையில், ஏர் இந்தியா நிறுவன இன்ஜினியர், விமான இன்ஜினில் சிக்கி உயிரிழந்தார். மும்பை, சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஏர் இந்தியா - 619' என்ற விமானம், ஐதராபாத்திற்கு புறப்பட இருந்தது.
இதையொட்டி, 'புஷ்பேக்' என்ற நடைமுறைப்படி, ஒரு வாகனம் விமானத்தை தள்ளி வந்து, ஓடுபாதையின் துவக்கத்தில் நிறுத்தியது. இப்பணிகளை, ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்ஜினியரான ரவி சுப்ரமணியன் மேற்பார்வையிட்டார். அப்போது, துணை விமானி, விமானம் புறப்படுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதாகக் கருதி, இன்ஜினை திடீரென இயக்கினார். இதையடுத்து, விமான இன்ஜினின் இறக்கைகள் அதிவேகமாக சுழலத் துவங்கின.
அப்போது ஏற்பட்ட பயங்கர ஈர்ப்புசக்தியில், ரவி சுப்ரமணியன் வேகமாக பின்னோக்கி இழுக்கப்பட்டு, இன்ஜின் இறக்கைகளில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி அறிந்ததும், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அஸ்வனி லோஹானி தலைமையில், விசாரணைக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'உயிரிழந்த ரவி சுப்ரமணியனின் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

எப்படி நடந்தது?


இந்த விபத்து குறித்து, 'இண்டிகோ ஏர்' நிறுவன பராமரிப்பு மேலாளர் பிரதீப் சிங் ராவத் வெளியிட்டுள்ள மின்னஞ்சல் செய்தி:விமானிகளுக்கும், தரை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தியதும், இரு சக்கரங்களிலும், தடை கட்டைகள் வைக்கப்படவில்லை. அப்படி வைத்திருந்தால், விமானம் சிறிது கூட முன்னேறியிருக்காது.
விமானம் புறப்பட, 'சிக்னல்' வழங்காத நிலையில், விமான இன்ஜின் இயக்கப்பட்டது தவறு. விமானத்தை தள்ள உதவிய இரு உருளைகளை அகற்றும்படி, உதவியாளரிடம் ரவி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, அவை அகற்றப்பட்டன.
அதே நேரத்தில், விமானிக்கு, விமானத்தை இயக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். உடனே, விமானியின் கட்டளைப்படி, துணை விமானி, இன்ஜினை இயக்கியுள்ளார். இறக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரவி சுப்ரமணியனை அவர்கள் கவனிக்க வாய்ப்பில்லை.
அப்போது, ரவி சுப்ரமணியன் காதில், 'ஹெட்செட்' அணிந்திருந்ததால், இன்ஜின் சத்தமும் அவருக்கு கேட்டிருக்காது. அதனால் தான், பின்புறத்தில் விமானம் நகர்ந்து வருவது அவருக்கு தெரியவில்லை. அதே சமயம், அவருக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த உதவியாளர், கீழே படுத்து, உயிர் பிழைத்துள்ளார். இவையெல்லாம் நொடிப் பொழுதில் நடந்து விட்டன; இது, முழுக்க முழுக்க மனிதத் தவறால் ஏற்பட்ட உயிரிழப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழருக்கு பெருமை; கனடா நாட்டில், ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்; நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர்


சென்னை,

கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

ஐகோர்ட்டு நீதிபதி

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றார்.

வர்த்தக உறவு

தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார். மேலும் இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார்.

வக்கீல் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை வள்ளியம்மை பயிற்றுவித்தார். வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்களை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி இருக்கின்றன.

தமிழர்களுக்கு பெருமை

பிரிட்டிஷ் கொலம்பியா மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

மும்பை விமான நிலையத்தில் விமான என்ஜினுக்குள் சிக்கி பலியானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விமானி, துணை விமானி மீது நடவடிக்கை



மும்பை,


மும்பை விமான நிலையத்தில் விமான விபத்தில் சிக்கி பலியானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக அந்த விமானத்தை இயக்கிய விமானி, துணை விமானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுனர்

மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் ஐதராபாத் செல்வதற்காக ஏ.ஐ. 619 என்ற விமானம் தயார் நிலையில் இருந்தது. இதையொட்டி, விமானத்தின் என்ஜின் அருகே ரவி சுப்பிரமணியன் என்ற தொழில்நுட்ப வல்லுனர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விமானத்தின் சக்கரத்துடன் பொருத்தப்பட்டிருந்த ‘டோபார்’ கருவியை அகற்றுமாறு தன்னுடைய உதவியாளர் ஷிண்டேயை அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, டோபார் கருவி அகற்றப்பட்டது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘சிக்னல்’ கிடைத்து விட்டதாக துணை விமானி தெரிவித்தார். அதன் பேரில் விமானி, விமானத்தை இயக்கினார். விமானம் நகர தொடங்கியதும், என்ஜினின் சுழற்சி வேகத்தால் ஏற்பட்ட காற்றின் மூலம், தரையில் நின்றுகொண்டு இருந்த ரவிசுப்பிரமணியன் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டார்.

உடல் சிதைந்து பலி

இதில், அவர் என்ஜினுக்குள் சிக்கி திக்குமுக்காடினார். மேலும், அங்கிருந்த கூர்மையான பிளேடுகள் அவரை துண்டு, துண்டாக சிதைத்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பலியானார். பின்னர் சிதறிய அவரது உடல் பாகங்கள் என்ஜினின் பின்பகுதி வழியாக வெளியேறியது. பிரேத பரிசோதனை கூட செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல் சிதைந்து விட்டது.

அதிர்ஷ்டவசமாக கீழே நின்று கொண்டிருந்த அவரது உதவியாளர் ஷிண்டே உயிர் தப்பினார். சம்பவத்தை பார்த்து சுதாரித்து கொண்டு தரையில் அமர்ந்ததால், அவர் எந்தவொரு காயமும் இன்றி மயிரிழையில் தப்பினார். சிக்னல் கிடைத்ததாக தவறுதலாக கருதி என்ஜினை இயக்குமாறு துணை விமானி கூறிய தவறான தகவலால் ஏற்பட்ட விளைவே இந்த விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, விமானி, துணை விமானி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

விமான என்ஜினில் சிக்கி பலியான தொழில்நுட்ப வல்லுனர் ரவி சுப்பிரமணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 54 வயதான அவர், மும்பை சுன்னாப்பட்டியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு விமான போக்குவரத்து இணை மந்திரி மகேஷ் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் அஷ்வானி லோகானி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, அஷ்வானி லோகானி உடனடியாக மும்பை விரைந்தார். நேற்று மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இழப்பீடு

எங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். ரவி சுப்பிரமணியனின் மறைவையொட்டி, இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கினோம். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்கிறோம். ரவி சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடக்கிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா விமான அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகையால், இந்த தருணத்தில் அதற்கான காரணம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையல்ல.

இவ்வாறு அஷ்வானி லோகானி தெரிவித்தார்.

Tuesday, December 15, 2015

தயக்கமும் சுணக்கமும் ஏன்?

Dinamani


By ஆசிரியர்

First Published : 15 December 2015 01:05 AM IST


உச்சநீதிமன்றத்தின் 43-ஆவது தலைமை நீதிபதியாக தீரத் சிங் தாக்கூர் பதவி ஏற்றிருக்கிறார். கடந்த 2009 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி தாக்கூர் 2017 ஜனவரி 4-ஆம் தேதி இந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் தீரத் சிங் தாக்கூருக்கு அரசியல் பின்னணியொன்று உண்டு. இவரது தந்தை தேவிதாஸ் தாக்கூர், காஷ்மீரத்தில் பிரபலமான வழக்குரைஞராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மாநில அரசியலிலும் மிகவும் செல்வாக்குப் படைத்தவராகத் திகழ்ந்தவர். ஷேக் அப்துல்லா அமைச்சரவையில் தேவிதாஸ் தாக்கூர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிதியமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் சில காலம் பதவி வகித்தவர்.
தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டவுடன் நீதிபதி தீரத் சிங் தாக்கூர் வெளிப்படுத்தி இருக்கும் கருத்துகள் வரவேற்புக்குரியவை. "சகிப்புத் தன்மை இல்லாத நிலைமை' என்கிற பிரச்னை எதிர்க்கட்சிகளாலும், சில அறிவுஜீவிகளாலும் எழுப்பப்பட்டு, இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் வாழ்வது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.' சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் காலம், நீதித் துறையில் சுதந்திரம் பாதுகாக்கப்படும் காலம், அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் உறுதி செய்யப்படும் நிலைமை தொடரும் காலம் அப்படியொரு அச்சம் யாருக்கும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை, என்பதுதான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் வெளியிட்டிருக்கும் கருத்தின் சாராம்சம்.
"பலதரப்பட்ட நம்பிக்கைகளும் கலாசாரங்களும் உள்ள சமுதாயத்தின் அடிநாதமாக சகிப்புத்தன்மையும், ஒருவரை மற்றவர் மதிக்கும் பண்பும் காணப்படுவது உறுதி' என்று எடுத்துரைத்திருக்கும் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் கூறியிருக்கும் இன்னொரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசியல் சட்டப் பாதுகாப்பு என்பது நமது குடிமக்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் பிற நாட்டினருக்கும் பொருந்தும் என்பதுதான் அது.
பொதுவாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டிப் பேசும் நீதித் துறையின் அடிப்படைப் பிரச்னை பற்றி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எதுவுமே பேசாதது வியப்பை ஏற்படுத்துகிறது. இவருக்கு முன்னால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர்கள் அனைவரும் தங்களது முதல் சவால் என்று அறிவித்துப் பணியைத் தொடங்கி, தொடங்கிய இடத்திலேயே விட்டுவிட்டு ஓய்வுபெற்ற அந்தப் பிரச்னை, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.
நீதிபதி ஏ.எஸ். ஆனந்தில் தொடங்கிக் கடந்த கால் நூற்றாண்டு காலமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த 14 நீதிபதிகளும், பதவி ஏற்றுக் கொண்டவுடன், தங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்தான் என்று தவறாமல் தெரிவித்திருக்கிறார்கள்.
நிரம்பி வழியும் இந்திய சிறைச்சாலைகளில் அடைந்து கிடப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அநேகமாக நிரபராதிகளாக இருக்கக் கூடும். செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் பிணையில் வெளியே வந்து விடுகிறார்கள். சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி விடுதலையும் பெற்று விடுகிறார்கள். ஆனால், ஏழைகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவிக்கும் அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவு மறுக்கப்பட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகளாகத் தொடர்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் காணப்படும் தகவலின் அடிப்படையில் 2009 முதல் 2013 வரையிலான ஐந்தாண்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் உண்மை, நீதித் துறையில் அனுமதிக்கப்பட்ட அளவிலான நீதிபதிகள் இல்லை என்பதுதான். நீதித் துறையின் அனைத்து நீதிபதி நியமனங்களும் முறையாக நிரப்பப்பட்டால், தேங்கிக் கிடக்கும் வழக்குகள் கணிசமாகக் குறைந்துவிடும். அதைச் செய்வதில் ஏன் தயக்கமும் சுணக்கமும் என்று தெரியவில்லை.
2009-இல் தேங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கை 3.03 கோடி. 2013 கடைசியில் இதுவே 3.17 கோடியாக அதிகரித்திருந்தது. அத்தனை நீதிபதி நியமனங்களும் செய்யப்பட்டு, முறையாகவும், விரைவாகவும் வழக்குகள் விசாரிக்கப்பட்டிருந்தால் தேங்கி இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 1.12 கோடியாக மட்டுமே இருந்திருக்கும். நீதிபதிகள் ஓய்வு பெறும் காலம் முன்கூட்டியே தெரியும் என்கிற நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் ஏன் நீதித் துறை ஈடுபடுவதில்லை என்பதுதான் கேள்வி.
உச்சநீதிமன்றத்தில் 66,349 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 45,89,920 வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2,75,66,425 வழக்குகளும் ஆக மொத்தம் 3,22,22,694 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்கிறது உச்சநீதிமன்ற இணையதளப் புள்ளிவிவரம். 2017 ஜனவரி மாதம் தீரத் சிங் தாக்கூர் பதவி ஓய்வு பெறும்போது இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருதால் அதுதான் இவரது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இவருக்கு முன்னால் பதவி வகித்தவர்கள் சொன்னார்கள், செய்யவில்லை. தீரத் சிங் தாக்கூர் சொல்லவில்லை. அதனால், செய்கிறாரா என்று பார்ப்போம்!

தவறான மருத்துவம்!


Dinamani

By ஆசிரியர்

First Published : 14 December 2015 01:21 AM IST


இன்றைய சூழலில் பொதுமக்களை மிகவும் பாதிக்கும் பிரச்னை மருத்துவ வசதி. குறிப்பாக, மருத்துவச் செலவு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல தொடங்கப்பட்ட பிறகு, மருத்துவம் என்பது சேவை என்பது போய், இளைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் அது வெறும் வியாபாரமாக மட்டுமே கருதப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மேலைநாடுகளில் மருத்துவம் வியாபாரமாக மட்டுமே கருதப்படுவது என்பது உண்மை. ஆனால், அங்கே மருத்துவ காப்பீடு பரவலாக்கப்பட்டு காப்பீடு மூலம் அனைத்து மக்களும் வசதி பெறுவதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தவறான மருத்துவமோ, மருத்துவர்களின் கவனக் குறைவோ, மருத்துவ தர்மத்தை மீறுவதோ, மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெரும் தொகையை இழப்பீடாக பெறுகிறார்கள். டேபிள் டென்னீஸ் வீரர் சந்திரசேகரும் நடிகை ஸ்ரீதேவியும் உதாரணங்கள்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த தலைமுறை மருத்துவர்களிடம் காணப்பட்ட சேவை மனப்பான்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் புதிய மருத்துவர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டு, அதேநேரத்தில், இளைய தலைமுறை மருத்துவர்கள் சிலர், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்துவதும், இலவச சிகிச்சை வழங்குவதும், வலிய போய் கிராமங்களில் சேவை புரிவதும் பாராட்டுக்குரிய, மறுக்க முடியாத உண்மை. இதற்கு திருஷ்டி பரிகாரமாக, வியாபார நோக்கில் செயல்படும், கவனக் குறைவுடன் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் பலர், இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.
சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் 130 மருத்துவர்கள் மீது தொழில் தர்மத்தை மீறியதற்காகவும், தவறான சிகிச்சை முறைகளை கையாண்டதற்காகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டது வரவேற்க வேண்டிய செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உண்மையில் நடக்கப் போவது என்னவென்றால், இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெறும் காகிதத்தால் இருக்கப் போகிறது என்பதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இதனால் கிஞ்சித்தும் பாதிக்கப்படப் போவதில்லை என்பதுதான்.
தொழில் தர்மத்தை மீறுகின்ற மருத்துவர்கள், கவனக் குறைவாக சிகிச்சை அளிப்பவர்கள் ஆகியோர் தண்டிக்கப்படுவது என்பது அவசியம். காரணம், அவர்கள் மனித உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, தங்களை நம்பி சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளின் நம்பிக்கையை தகர்க்கிறார்கள் என்பதும்கூட. இதை பொறுப்புணர்வுடன் மருத்துவம் பார்ப்பவர்கள் வலியுறுத்துவார்கள் என்பது நிச்சயம்.
கவனக்குறைவுடன் செயல்படுகின்ற, தொழில் தர்மத்தை மீறுகின்ற மருத்துவர்கள் குறித்து புகார் வந்தால் அதை விசாரிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்திய மருத்துவக் கழகத்துக்கு அதிகாரம் உண்டு. ஒரு மாதத்திலிருந்து 7 ஆண்டுகள் வரை அந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக் கழகம் தடை விதிக்க முடியும். இந்த வழிமுறைகள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டவை. இதற்கான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்தும் பொறுப்பு இந்திய மருத்துவக் கழகத்துக்கும் மாநில மருத்துவக் கழகங்களுக்கும் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலவரம்புக்குள், மருத்துவர்கள் மீது கூறப்படும் புகார்களை விசாரித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மாநில மருத்துவக் கழகங்களுக்கு உண்டு. அப்படி எடுக்கப்பட்ட முடிவின்மீது அதிருப்தி இருக்குமேயானால், மருத்துவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இந்திய மருத்துவக் கழகத்திடம் மேல்முறையீடு செய்யலாம்.
இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறி. மிகக் குறைந்த அளவு மருத்துவர்கள்தான் தண்டிக்கவோ, கண்டிக்கவோப் படுகிறார்கள். புகார் தெரிவித்தவர்கள் விசாரணை என்கிற பெயரில் அலைக்கழிக்கப்படுவதும், நெடுந்தூரம் பயணித்து ஒவ்வொரு விசாரணையை எதிர்கொள்வதும் வேதனையான உண்மை. இவ்வளவு செய்த பிறகும், கடைசியில் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிற நிஜத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.
தவறிழைத்ததற்காக இந்திய மருத்துவக் கழகம் தண்டிக்கப் பரிந்துரைத்தவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் பதிவு தற்காலிக முடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மாநில மருத்துவக் கழகங்கள் அந்த மருத்துவர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெறுவதற்காக காலம் தாழ்த்துவது என்பது வழக்கமாகிவிட்டது.
நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுவிட்டால், தவறிழைத்த மருத்துவர்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அந்த தடை நீங்குவதற்கு பல ஆண்டுகள் கடந்து விடும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் சலித்து ஓய்ந்துவிடுவார்கள். சில புகார்களில் இந்திய மருத்துவக் கழகம் தண்டித்தப் பிறகு, மறு விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டு, தண்டனையிலிருந்து தப்பியவர்களும் உண்டு.
மருத்துவம் என்பது மகத்தான சேவை. பல மருத்துவர்கள் நோயாளிகளால் தெய்வமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். மருத்துவத்தை சேவையாகவும் தொண்டாகவும் மேற்கொள்பவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்து போற்றப்படுகிறார்கள். இந்த நிலையில், இந்திய மருத்துவக் கழகம் தவறிழைக்கும் மருத்துவர்களை இனம் கண்டு தண்டிக்காமல் விட்டால் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களையும் மக்கள் வெறுக்கும் நிலைமை ஏற்பட்டு விடும்.

மீண்டும் அ.தி.மு.க.,வில் நட்ராஜ் ஒரே நாளில் மாறியது முடிவு


அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, நேற்று முன்தினம் நீக்கப்பட்ட, முன்னாள் டி.ஜி.பி., ஆர்.நட்ராஜ், நேற்று இரவு, மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டார்.
தனியார், 'டிவி' சேனல் நிகழ்ச்சியில், சமீபத்திய மழை வெள்ளம் தொடர்பாக, தமிழக அரசின் செயல்பாடுகளை, நட்ராஜ் என்பவர் கடுமையாக விமர்சித்தார். அவர், அ.தி.மு.க., உறுப்பினரும், முன்னாள் டி.ஜி.பி.,யுமான நட்ராஜ் என, தவறாக ஒளிபரப்பாகி விட, அதை வைத்து, அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா.
இந்நிலையில், 'டிவி' ஒளிபரப்பில் நடந்த தவறு என தெரிய வந்ததும், நடராஜ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவதாக, நேற்று இரவு, ஜெயலலிதா அறிவித்தார்.இது குறித்து முதல்வர் ஜெய
லலிதா வெளியிட்ட அறிக்கையில்,' தென் சென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் டி.ஜி.பி., ஆர்.நட்ராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்
படுகிறது. தொடர்ந்து அவர் கட்சியின் உறுப்பினராக செயல்படுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நமது நாளிதழுக்கு ஆர்.நட்ராஜ் அளித்த பேட்டி:'டிவி' நிகழ்ச்சியை பொறுத்தவரையில், எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாரோ, ஒரு நடராஜன், எதையோ சொல்வதற்கும், எனக்கும் என்ன தொடர்பு?
அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு, அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் கருத்துக்களை, எப்படி வெளியிட முடியும்; முதலில், அப்படியொரு சிந்தனையே, எனக்கு எட்டாதே.
முதல்வர் மீது எப்போதும் எனக்கு மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. அவர் தான் எனக்கு எல்லாமே கொடுத்தார். நான் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில், எல்லா விஷயங்களிலும், அவர் மெச்சும் படியாகத்தான் பணியாற்றி உள்ளேன்.
அந்த அடிப்படையில் தான், அவர் வழிநடத்தும் கட்சியில் இணைந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு, இதய சுத்தியோடு, கட்சிப் பணியாற்றி வந்தேன். எந்த இடத்திலும், சிறு நெருடலும் இல்லாமல் தான் நடந்து கொண்டேன்.
சென்னையை சுருட்டி வீசிய மழை, என் வாழ்வையும் யாரோ, ஒரு நடராஜன் மூலம், சுருட்டி வீசி விட்டது. சம்பந்தப்பட்ட பேட்டிக்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையில், வேறு எந்த சர்ச்சைக்கும் நான் போக மாட்டேன்; அமைதி தான் ஒரே வழி.
இவ்வாறு அவர் கூறினார்.இப்படி பேட்டியளித்த சில மணி நேரத்தில் நட்ராஜ் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

- நமது நிருபர் -

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...