Thursday, January 21, 2016

வெள்ளி இழை இல்லாமல் 1000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி

Dinamani

First Published : 21 January 2016 09:10 AM IST
வெள்ளி இழை இல்லாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ரூபாய் நோட்டு அச்சக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அம்சம் இல்லாத ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்தில் உள்ள Security Printing and Minting கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்கில் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்படும்.
இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, January 20, 2016

வாட்ஸ் அப்’ வாழ்க்கை!


logo

உங்கள் கையில் ஆறாவது விரல் இருக்கிறதா? இல்லையென்று சொன்னால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இருந்தால்தானே அதிர்ஷ்டம் என்பார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது...?

ஆமாம், ஆறாவது விரல் இருந்தால், அதுவும் எல்லா நேரமும் இருந்தால் கிரகம் சரியில்லை என்று அர்த்தம். சோதிடம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கு உடலின் ஓர் அங்கமாக மாறி இருக்கும் செல்பேசி தான் அந்த ஆறாவது விரல். விஞ்ஞானத்தின் அற்புத படைப்பான செல்பேசியை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்), பேஸ் புக் (முகநூல்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கு உண்டு.

பண்டிகை காலங்களில் கடைகடையாய் ஏறி இறங்கி வாழ்த்து அட்டைகளை வாங்கி, பிடித்தவர்களுக்கு அனுப்பியதில் கிடைத்த நிறைவு இப்போது இல்லாவிட்டாலும் ‘வாட்ஸ் அப்’ வாழ்த்து புது சுகம் தருகிறது. முந்திக்கொண்டு வாழ்த்து அனுப்பியவர்களுக்குப் பிடித்தமாதிரி ‘நன்றி கார்டு’ அனுப்பியதைவிட முகநூல் பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பில் இன்பம் அதிகமிருக்கிறது.

இதெல்லாம் காலத்தின் கொடை. இன்னும் சொல்லப்போனால் கட்டாயம். இவற்றைப் புறக்கணித்துவிட்டு 21–ம் நூற்றாண்டில் நாம் மட்டும் தனி தீவாக வாழ முடியாது.

அண்மையில் சென்னையை தாக்கிய பேய் மழையின் போது சமூக ஊடகங்களின் சக்தியையும் பார்த்தோம். பிரிந்து போன நட்பை மீட்டெடுத்தல், ஒத்த சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்தல், கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் சென்றடைதல், அரசுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் என நீளும் இவற்றின் அதீத வீச்சு மிரள வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி, எளியோரின் சொற்களையும் அம்பலம் ஏற்றி எல்லாரையும் சமமாக்குவதால் இவற்றைக் கொண்டாடவும் செய்யலாம். தப்பில்லை. அதனால் உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதை நினைத்து மகிழலாம். ‘வாட்ஸ் அப்’ பயன்பாடும் அப்படியே. எவ்வளவு வசதி. என்னே வேகம். இன்றைய அவரச யுகத்திற்கு நிச்சயமாக இது தவமின்றி கிடைத்த வரம். பெரும் மகிழ்வு.

மகிழ்ச்சி எல்லாம் எதுவரையில்..? வரமாக இருக்கும் வரைதான். அதுவே சாபமாகி விட்டால் என்னாகும் என்கிற கவலை இப்போது எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. புகழ், பணம், வாழ்க்கை இப்படி எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினையில்லை. எதற்காவது அடிமையாகிவிட்டால் தொலைந்தோம். எல்லாவற்றிலுமே ஒரு போதை இருக்கிறது. அது இருமல் மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போல மிதமாக இருந்தால் ரொம்பது நல்லது.

குடிகாரர்களில் இரண்டு வகை உண்டு. எப்போதாவது, விரும்பிய போது அல்லது கொண்டாட்டங்களின் போது குடிப்பவர்கள் முதல் ரகம். இவர்களால் பெரிய வம்பில்லை. இரண்டாவது ரகம் குடி நோயாளிகள். இப்படிப்பட்டவர்கள் முழுக்கவும் மதுவுக்கு அடிமையானவர்கள். குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும். பேச்சே வராது. மூளை சொல்படி கேட்காது. முக்காலமும் மதுவையே நினைத்துக் கொண்டிருக்கும். கிட்டதட்ட மதுவைப் போலவே இன்றைக்குப் பலரையும் மயக்கி வைத்திருக்கின்றன சமூக வலைதளங்கள். என்ன, குடித்துவிட்டு தெருவில் கிடப்பவனைப் பளிச்சென தெரிகிறது. இதில் நடக்கும் பாதிப்புகள் மெல்லக் கொல்லும் நஞ்சாக சத்தமின்றி தனி மனித சக்தியை, குடும்பங்களை உறிஞ்சி குடித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் இரண்டிலும் கதியாக கிடப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு எகிறிக் கொண்டே போகிறது.

சாதாரணமாக நம்முடைய வீடுகளிலேயே கவனியுங்களேன். ஆளாளுக்கு கையில் ஒரு செல்பேசி. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள். இதில் வயது, பாலின வித்தியாசமெல்லாம் கிடையாது. குழம்பு தாளிக்கும் நேரத்தில் கூட ‘வாட்ஸ் அப்’ பையும், ‘பேஸ் புக்’கையும் விட்டுப் பிரிய முடியாத குடும்பத்தலைவிகள் அதிகரித்துவிட்டார்கள். குடும்பத்தலைவனைப் பற்றி கேட்கவா வேண்டும்? இரண்டும் பேரும் இப்படி என்றால் குழந்தைகளையும் மற்றவர்களையும் இவர்களால் எப்படி கேட்க முடியும்?

இரவு நெடு நேரம் சமூகத்தளங்களில் தேவையோ, நோக்கமோ இன்றி மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் கைகள் பர, பரவென்று ஆகின்றன. காலைக்கடன்களைக் கழிக்கிறார்களோ இல்லையோ, செல்பேசி முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால் பட,படத்துப் போய்விடுகிறார்கள். இன்னும் சிலருக்கோ நாட்கணக்கெல்லாம் இல்லை. சில மணி நேரம் கூட பொறுக்க முடியாது. செல்பேசியோ, சமூக வலைத்தளங்களோ இல்லையென்றால் பைத்தியமாகிவிடுவார்கள். அதிலும் ஒரு கண் வைத்திருந்தால்தான் எந்த வேலையையும் செய்யமுடியும். சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலும் சரி; துக்கம் விசாரிக்க மரண வீட்டுக்குப் போனாலும் சரி; என்ன பதிவு வந்திருக்குமோ என குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இஷ்டம் போல எல்லாவற்றையும் பதிவேற்றுவது கொடுமையிலும் கொடுமை. துக்க வீட்டில் போய் செல்ஃபி (கைப்படம்) எடுத்து, பதிவேற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமான வேலை இருந்தாலும், ‘வேண்டாம்’ என்று மனசு நினைத்தாலும் கைகள் தானாகவே ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ போன்வற்றுக்குப் போனால் ‘முற்றி’ போய்விட்டது என்று அர்த்தம். என்னவொன்று அடிமையாகிவிட்டோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. இப்படியானவர்கள் முன்பு நாம் பார்த்த குடிநோயாளிகளைப் போன்றவர்கள். உடனடியாக மனநல மருத்துவர்களைப் பார்க்க வேண்டியவர்கள்.

குடியைப் போலவே ‘சமூக வலைத்தள போதை’யில் சிக்கியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களும் ஏராளம். இவர்கள், எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் யாரோடும் மனம்விட்டுப் பேசாமல் எப்போதும் அதிலேயே மிதந்து கொண்டிருப்பதால் குடும்ப உறவுகளிடையே இடைவெளி விழுகிறது. அதிலும் குடும்ப வாழ்க்கைக்கு ‘வாட்ஸ் அப்’ பெரும் வில்லனாக உருவெடுத்திருப்பதைச் சமீபத்திய விவாகரத்து வழக்குகளில் காண முடிகிறது. மண வாழ்க்கை முறிவுக்கு மட்டுமல்ல; உளவியல் நோய், குழந்தைப் பேறின்மை போன்றவை அதிகரிப்பதற்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணியாகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தருகிறது.

இதற்காக அஞ்சி, நடுங்கி இவற்றை ஒரேயடியாக தவிர்க்கவும் முடியாது. இவற்றினால் கிடைக்கும் நன்மையைப் பெறாமல் போனால் அறிவலித்தனமாகிவிடும். அப்படியென்றால் என்ன வழி? நம்முடைய கட்டுப்பாட்டில் அவற்றை வைத்திருக்க வேண்டும். ‘ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே சமூக வலைத்தளத்தில் செலவிடுவேன்; அதுவும் எனக்குத் தேவையற்ற குப்பைகளைப் பார்க்க மாட்டேன்’ என்பதில் உறுதியாக இருக்கலாம். நிறைய நேரமிருப்பவர்கள் இதனை ஒரு மணி நேரமாக்கலாம். இந்த நேரத்தை வசதிப்படி பிரித்துக்கொள்ளலாம். ஆனால் அதைத் தாண்டி போகக்கூடாது; போகவே கூடாது. நம்முடைய நேரத்தைக் கொல்வதற்கு இடம் கொடுத்தோமானால், நாளை அது நம்மைக் கொல்வதற்கும் முயலும் என்பதை மறந்திடக் கூடாது.

குழந்தைகளோடு கொஞ்சுவதற்கு, குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு, வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காகத்தான் அத்தனை வசதிகளையும் தேடுகிறோம். வசதியில் இவற்றைத் தொலைத்து விட்டு என்ன செய்யப்போகிறோம்? உலக நியதிப்படி எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். வசதிகள், வரமாவதும் சாபமாவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. எவ்வளவு அதி அற்புதமான அமிர்தமானாலும் அளவைத்தாண்டிவிட்டால் நஞ்சு தானே!

ஸ்டெத்தாஸ்கோப் காலம் முடிவுக்கு வருகிறதா? ... கு. கணேசன்

Return to frontpage

ஸ்மார்ட் ஸ்டெத்தாஸ்கோப்பின் வருகை

மருத்துவ உலகில் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளும், மருத்துவக் கருவிகளின் தொழில்நுட்ப மேம்பாடுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பொதுவாக, ஒருவர் மருத்துவர் என்பதற்கு அடையாளமாகப் பொதுமக்களால் பார்க்கப்படும் ஸ்டெத்தாஸ்கோப்பையும் நவீன மாற்றம் விட்டுவைக்கவில்லை. குழாய் வடிவத்தில் இருக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்குப் பதிலாக ‘ஸ்மார்ட்போன்’ மாடலில் ஒரு நவீன ஸ்டெத்தாஸ்கோப்பை பிரிட்டனில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெத்தாஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்துவிடலாம்.

ஸ்டெத்தாஸ்கோப்பின் பூர்வீகம்

1816-ல் ஃபிரான்ஸைச் சேர்ந்த ரெனே லென்னக் என்கிற மருத்துவர் ஸ்டெத்தாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை உண்டு. அக்காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்துகொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது சரிப்படும்; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள்.

ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத்துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின்மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார்.

1816 செப்டம்பர் மாதத்தின் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் ‘லீ லோவர்’ அரண்மனையைச் சுற்றி நடை பயின்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத் துண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப்பினான். இன்னொரு சிறுவன் மரத் துண்டின் மறு முனையைத் தன் காதில் வைத்துக்கொண்டு, அந்த ஒலியைக் கேட்டுக் குதூகலித்தான்.

இதைப் பார்த்த லென்னக் ‘இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே!’ என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார். இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும், மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். நோயாளியின் நெஞ்சில் நேரடியாகக் காதை வைத்துக் கேட்பதைவிடப் பல மடங்கு துல்லியமாகக் கேட்டது, இதயத்தின் ஒலி. இதை அடிப்படையாக வைத்து 1819-ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட - ஒரு காதை மட்டுமே வைத்துக் கேட்கக் கூடிய - மரத்தால் ஆன ஸ்டெத்தாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெத்தாஸ்கோப்!

அதன் பிறகு, அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843-ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெத்தாஸ்கோப் உருவானது. 1894-ல் பித்தளை, எஃகு போன்ற உலோகங்களால் இது வடிவமைக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டெத்தாஸ்கோப் எவர்சில்வர், ரப்பர், பிவிசி பிளாஸ்டிக் எனப் பல பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

வெளவால் தொழில்நுட்பம்

கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் ராஜமரியாதையுடன் வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்கு மாற்றாக, பிரிட்டனின் ‘ஜெனரல் எலெக்ட்ரிக் ஹெல்த் கேர் சிஸ்டம்’ எனும் நிறுவனம் 'விஸ்கேன்' (VScan) என்கிற நவீன ஸ்மார்ட்போன் ஸ்டெத்தாஸ்கோப்பைத் தயாரித்துள்ளது.

இது வேலை செய்யும் விதம் சற்று வித்தியாசமானது. ‘வௌவால்கள் பறப்பதற்குப் பயன்படுத்தும் தத்துவம்தான் இதிலும் பயன்படுகிறது’ என்கிறார் GE நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் இம்மெல்ட். “வௌவால்கள் இருட்டில் பறக்கும்போது எதிரில் ஏதேனும் தடை உள்ளதா என்று தெரிந்துகொள்ள, கேளாஒலி அலைகளை உண்டாக்கிக் காற்றில் அனுப்பும். வழியில் தடை இருந்தால் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்பும். அதை உணர்ந்து, வௌவால்கள் திசை மாறிப் பறக்கும். ஒலிக்கு உண்டான இந்தத் தனித்தன்மையை அடிப்படையாக வைத்து விஸ்கேனை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘விஸ்கேன்’ சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறியது. இது பேட்டரியில் இயங்குகிறது. இந்தக் கருவியில் ஒரு சிறிய திரை மற்றும் கீ பேடு உள்ளது. ஹேண்ட் மைக் அளவில் ‘டிரான்ஸ்டூசர்’ (Transducer) எனும் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையை நோயாளியின் மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது இது கேளாஒலி அலைகளை உற்பத்திசெய்து, இதயத்துக்கு அனுப்புகிறது. அவை இதயத்தில் மோதி, எதிரொலித்து வருவதை உள்வாங்கி, முப்பரிமாணப் படங்களாகத் திரையில் பதிவுசெய்கிறது. இதன் மூலம் இதயம் இயங்குவதைத் திரையில் பார்க்க முடியும். இதயத் துடிப்பு எண்ணிக்கை, லயம், இதய வால்வுக் கோளாறுகள், இதயத்தில் ரத்த ஓட்டம் போன்றவற்றை அடுத்த நிமிடத்தில் அறியலாம்’ என்கிறார் அவர். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம்.

இதுபோல் டிஜிட்டல் மாடலில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஸ்டெத்தாஸ்கோப் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஒருவரின் நெஞ்சில் வைத்து, இதய ஒலிகளைப் பதிவுசெய்து, அதை வேறொரு இடத்தில் இருக்கும் மருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால், அங்கு அவர் அந்த ஒலிகளைக் கேட்டு நோயைக் கணிக்க முடியும். ரூ.15 ஆயிரம் விலையுள்ள இந்தக் கருவிக்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற நவீன ஸ்டெத்தாஸ்கோப்புகள் மருத்துவர்களின் பணியை எளிதாக்கும் என்றும் நோயைக் கண்டறியும் முறையில் மேம்பட்ட வசதிகளைக் கொண்டுவரும் என்றும் இவற்றின் தயாரிப்பாளர்கள் பெருமிதப்படுகிறார்கள்.

எதிர்ப்பு அலை

ஆனால், வாட்ஸ்அப் பாணி ஸ்டெத்தாஸ்கோப்புக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ‘இந்தக் கருவி 100 சதவீதம் நுட்பமானது அல்ல; இதய ஒலியில் சிறிதளவு வித்தியாசம் ஏற்பட்டாலும் நோய்க் கணிப்பு தவறாகிவிடும். இது உயிரோடு விளையாடுவதற்குச் சமம்’என்கிறார்கள் பல இதயநல வல்லுநர்கள்.

‘இதுபோல் 17 வகை ஸ்மார்ட்போன் மாடல் ஸ்டெத்தாஸ் கோப்கள் உலக நாடுகளில் வலம்வருகின்றன. இவை எல்லாமே இன்றைய இளைஞர்களின் ஸ்மார்ட்போன் மோகத்தைக் குறிவைத்து, வணிக நோக்கில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தயாரிக்கப் பட்டவை’ என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மருத்துவர் களும் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வில்லை. நோயாளியைப் பரிசோதிக்கும் முறைகளில் எத்தனைக் கருவிகள் விதவிதமாகச் சந்தைக்கு வந்தாலும், நோயாளியின் கரங்களைப் பிடித்து, நாடி பார்த்து, அவரது நெஞ்சில் ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துக் கேட்டு, சில வார்த்தைகள் கனிவாகப் பேசி, ஆறுதல் சொல்லி, ‘நோய் குணமாகும்’ என்ற நம்பிக்கையை விதைக்கிற பரிசோதனை முறைக்கு ஈடுஇணை எதுவுமில்லை என்று கருத்து தெரிவித்திருக்கி றார்கள். மக்களின்மீது உண்மையிலேயே அக்கறை உள்ள மருத்துவர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்ற கருத்தே மருத்துவ உலகில் நிலவுகிறது!

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

பெண் சமத்துவமல்ல, அடிப்படை உரிமை!

Dinamani


By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 19 January 2016 01:36 AM IST


சில நாள்களுக்கு முன் இந்தியன் வங்கியின் பெண் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அப்பொழுது வங்கியில் பெண் ஊழியர்களின் நிலைமை என்ன என்பது பற்றி சொன்னார்கள். பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்றும் இதில் இருந்தே அவர்களின் உரிமை எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது தெரியும் என்றும் சொன்னார்கள்.
அப்பொழுது நான், இந்தியாவில் எந்த மூலையில் இந்தியன் வங்கியின் கிளை துவங்கினாலும் முதலில் பெண்களுக்குத் தனியாக கழிவறைகள் அமைக்கப்படும்பொழுதுதான் பெண் ஊழியர்கள் சமமாகக் கருதப்படுகிறார்கள் என்று ஒப்புக் கொள்ளமுடியும் என்று கூறினேன். என் எதிரே தெரிந்த பல முகங்களில் ஆமோதிப்பு மின்னியது.
என்னை வழியனுப்ப வந்த அகில இந்திய இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தினர்கள் இந்த விஷயம் குறித்துப் பொதுவாக எல்லோரும் பேசக் கூச்சப்படுவார்கள் என்றும், ஆனால் மிகவும் முக்கியமான விஷயம் என்றும், நான் அதை குறிப்பிட்டதற்கு நன்றி என்றும் கூறினார்கள்.
இந்த வசதி இல்லாமல் பெண்கள் எப்படிப் பணியிடங்களில் வேலை செய்யமுடியும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். 10-இல் இருந்து 5 என்று வைத்துக் கொண்டாலும் 7 மணி நேரம். பெண் ஊழியர்களின் நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் வேதனை மேலிடும்.
நான் நீதிபதியாக நியமனம் ஆகி சில மாதங்கள் ஆகி இருக்கும். அப்பொழுது திருச்சி மாவட்ட பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப் பட்டேன். அதற்கு சில மாதங்கள் முன்பு தான் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கு என்று இதற்காக அறைகள் கட்டப்பட்டன என்று சங்கத்தின் செயலாளர் சொன்னார்.
அப்போது, இதற்கு முன் என்ன செய்தீர்கள் என்றேன். மேடம், அதோ பாருங்கள் காம்பவுண்டு சுவருக்குப் பின்னால் ஒரு கட்டடம் தெரிகிறது இல்லையா? நாங்கள் சுவர் ஏறி குதித்து என்று தயக்கத்துடன் இழுத்தனர். ஓ! சரி! என்றேன். இதற்கு மேல் இந்த சோகத்தைக் கேட்க விரும்பவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண், முதுகும் முழங்காலும் ஒத்துழையாமை போராட்டம் நடத்தும் பெண் என்ன செய்வார்? இனிமேல் வேலைக்கு வரவில்லை என்று சொல்லியிருப்பாரா?
ஒரு முகம் வரையுங்கள் என்றால் சிறு வயதில் ஒரு வட்டம் போட்டு இரு புள்ளிகள் (கண்கள்) முதலில் போடுவோம் இல்லையா? அந்த புள்ளிகளை - அதாவது கண்களை... பெண்களை விலக்கிவிட்டு எவ்வளவு ஆண்டுகள் அந்த நீதிமன்றம் இயங்கியிருக்கிறது. இதுபோலத்தான், எந்த ஒரு பொது அலுவலகத்தின் கதையும். அலுவலகம் என்ன? வீடுகளும் தான்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜஸ்டிஸ் சசிதரன் ஒரு முறை என்னிடம் பெண் சமத்துவம் எங்கேயோ வெகு தொலைவில் இருக்கிறது. எங்கள் ஊர் அருகில் ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அதன் நிர்வாகிகள் இங்கு ஞாயிற்றுக்கிழமை கூட மாணவிகள் வருகிறார்கள் என்றார்கள். ஏன் என்று கேட்டால் அவர்கள் வீடுகளில் டாய்லெட் இல்லை. பள்ளியில் இருக்கிறது அதனால் வருகிறார்கள் என்றார்கள். வருத்தமாக இருக்கிறது என்று சொன்னார்.
அந்த பள்ளியிலாவது இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடையலாமா? பல பள்ளிகளில் தலைகீழ் நிலைமை.
மதுரையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போழுது வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம். இந்த விஷயம் மும்மாரியைவிடக் கணக்குத் தவறாமல் நடைபெறும். அதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களே நேரில் வந்து பேசுவார்கள்.
பல வழக்குகளில் அவர்களின் வாது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது வேறு விஷயம். இந்தப் பொதுநல வழக்கில் பத்து பதினைந்து பெண்கள் தங்கள் கிராமத்தில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்பது பற்றி பேசினார்கள். என்ன அழகாக ஒவ்வொரு "பாயிண்ட்' எடுத்துச் சொன்னர்கள்.
வழக்குரைஞர்கள் வந்திருந்தால்கூட இவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருப்பார்களா என்பது ஐயம் தான். அவர்களின் பெரிய குறை அவர்கள் காலையில் எழுந்து ஊருக்கு வெளியே சென்று தங்கள் காலைக்கடன்களை முடிக்க வயலுக்குச் செல்லும் இடத்தில் நாம் மேலே குறிப்பிடப்பட்ட கடை. ஆண்கள் தாறுமாறாகக் கிடப்பார்கள்; தாறுமாறாகவும் பேசுவார்களாம்.
"அம்மா, கண்ணைத் தொறந்து பாக்க முடியாது, காது கொடுத்து கேட்கமுடியாது. நாங்க என்ன செய்வோம்?' என்கிற அவர்களது கேள்விகள் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு வன்முறை நடந்தால், ஏன் அங்கு போனாய், அந்த வேளையில் ஏன் போனாய்? ஏன் இந்த உடை உடுத்திக் கொண்டு போனாய்? என்று வாய் கிழியக் கேட்கிறார்கள் பாரம்பரியப் பாதுகாவலர்கள். இதற்கு மேலே குறிப்பிட்ட வினாக்களில் எதைத் தேர்வு செய்வார்கள்? அரசுத் தரப்பு வழக்குரைஞரைப் பார்த்தேன். அவர் தாளை எடுத்து ஏதோ விதிமுறையைச் சுட்டிக் காட்டினார்.
அந்தப் பெண்கள், "சார், ரூல் பேசாதீங்க சார். எங்களுக்கு வழி சொல்லுங்க' என்று கேட்டபோது அவர் வாயடைத்துப் போனார்.
உண்மை தானே. பட்டினிகூடக் கிடந்து விடலாம். இதற்கு என்ன செய்வது?
சமீபத்தில் நிகழ்ந்ததே, சென்னையில் சமுத்திரம்.. அப்பொழுது ஓர் இடத்தில் பெண்கள் எங்களுக்கு இங்கே போக வசதி இல்லை. ஆகையால், குடிக்கவும், உண்ணவும் ஒன்றும் வேண்டாம் என்று சொன்னார்களாம்.
ஆண்களுக்குப் பெண்களைப்போல அவ்வளவு சிரமம் இல்லை. சிருஷ்டியிலேயே அவர்கள் புண்ணியம் செய்தவர்கள். இறைவன் ஒருவேளை ஆண் தானோ?
அபர்ணா கார்த்திகேயன் ஓர் இளம் எழுத்தாளர். அவர் மறைந்துவரும் கிராமியக் கலைகளைப் பற்றி எழுதுபவர். வீணை செய்பவர்கள், கடம் செய்பவர்கள், காங்கேயம் காளை வளர்ப்பவர்கள் இப்படி - தன் அனுபவங்களை அடிக்கடி என்னுடன் பகிர்ந்து கொள்பவர்.
அவர் தென் மாவட்டத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். இளம் விதவை. கணவன் குடிப் பழக்கத்தால் மன நலம் சிதைந்து போய் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். எச்.ஐ.வி. விதவை (H.I.V. widow) என்று எச்.ஐ.வி.யால் இறந்த ஒருவரின் மனைவியைக் குறிப்பிடுவார்கள். நாம் இனிமேல் டாஸ்மாக் விதவை என்று கூட சொல்லலாம் போல இருக்கு. அவருக்கு ஒரு பெண், ஒரு பையன். இருவரும் படிக்கிறார்கள். இவர் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தால் தன் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளும் நேரம் குறைந்து போகும் என்று அங்கே போகாமல் விவசாய வேலை செய்கிறார்.
Flexi-hours என்று மேல் நாட்டிலும், நகர்வாழ் மக்களும் சொல்கிறார்களே அதை இந்த பெண்மணி எவ்வளவு தெளிவுடன் அறிந்து வைத்திருக்கிறார்? இவ்வளவு புரிந்து கொண்டுள்ளவர் வீட்டில் கழிவறை இல்லை. அவர் அபர்ணாவிடம், "அம்மா, நான் பணம் சேர்த்து என் பெண் பெரிய வயது வருவதற்குள் கழிவறை கட்டிவிடுவேன்' என்றாராம். இவருக்கு திறமை இல்லையா,அறிவு இல்லையா? என்ன இல்லை?
ஆனால், சமீபத்தில் வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்வை அளவுகோலாக வைத்து பார்த்தோமானால் இவர் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. ஏனென்றால், ஹரியாணா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளார்கள். அது அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது என்று ராஜ்பாலா என்பவர் மனு கொடுத்தார்.
உச்சநீதிமன்றம், சட்டம் சரியாகத் தான் உள்ளது என்று தீர்ப்பளித்தது. அதில் ஒரு தகுதி என்னவென்றால், வேட்பாளர் வசிக்கும் இடத்தில் இயங்கும் கழிவறை இருக்க வேண்டும். இல்லை என்றால், தேர்தலில் நிற்க முடியாது. ஹரியாணா மாநிலத்தில் 12,000 ரூபாய் கழிவறை கட்டுவதற்கு உதவி தருகிறார்கள். அப்படியும் கட்டிக்கொள்ளவில்லை, என்றால் அவர்களுக்கு வேட்பாளராக நிற்கும் உரிமை இல்லை என்பதுபோல் செல்கிறது தீர்ப்பு.
ஏழ்மையின் அவஸ்தை என்ன என்று புரியவில்லையோ? வாடகை வீட்டில் இருந்தால், அங்கு கழிவறை இல்லை என்றால், ஒருவர் என்ன செய்வார்? குடிசை நல வாரியம் போன்ற இடத்தில் மிகவும் குறைவான தரத்தில் கட்டப்பட்ட வீட்டில் இருந்தால்... அந்தக் கழிவறை இயங்கவில்லை என்றால்.. அபர்ணா சந்தித்த பெண், பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராம நலனுக்கு நிச்சயம் உழைப்பார். அவருக்கு இயங்கும் கழிவறை இல்லை என்றாலும் கூட. அது என்ன இயங்கும் கழிவறை? Functional toilet என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.
ஒடிஸா மாநிலத்தில் தன்னார்வு இயக்கங்கள் 160 கிராம பள்ளிகளை பார்த்துவிட்டு ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டன. அதில் 57 பள்ளிகளில் ஓர் இயங்கும் கழிவறை கூட இல்லையாம். 84 பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கென்று தனி கழிவறை இருந்ததாம். அதில் 5 பள்ளிகளில் மட்டுமே தண்ணீர் வசதி இருந்ததாம். நினைவிருக்கட்டும்.
நமக்குத் தேவை இயங்கும் கழிவறை. பொது கட்டடங்களிலேயே இந்தக் கேவலம் என்றால்.. ஓர் ஏழையின் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக எவ்வளவு வலுவான ஓர் உரிமை பறிபோகிறது? அவர் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் வாய்ப்பை இழக்கிறார்.
சென்ற ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம், பொது இடங்களில் பெண்களுக்குக் கழிவறை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டது. அப்பொழுது அவர்கள் பயன்படுத்திய சொற்கள் "Women's right to pee..' (பெண்களின் சிறுநீர் கழிக்கும் உரிமை).
ஒன்று நினைவில் இருக்கட்டும்.
நீதித் துறையின் செயல் முனைவு (judicial activism) அத்து மீறுகிறது என்கிறோமே, இதுபோன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றம் முனையவில்லை என்றால் பெண்கள் பாடு என்னவாக இருக்கும்? ஆட்சியாளர்களும், நிர்வாகமும் செயல்படாமல் இருப்பதால்தானே மக்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அப்படி அவர்கள் நாடும்போது, இது எனக்குத் தொடர்பில்லாதது என்று நீதித் துறை கண்ணை மூடிக்கொள்ளவா முடியும்?
கழிவறைகள் என்பது மனித உரிமையின், மனித சமத்துவத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று உரக்கக் கூவுகிறோம். என்ன செய்வாள் ஒரு பெண்? மதுரையில் பார்த்தோமே, குவளையைத் தூக்கிக் கொண்டு வயலுக்குச் சென்றவர்கள், டாஸ்மாக் குடிமக்கள் இருக்கின்றார்களே என்று கூச்சம் மேலிட வயலுக்குப் போகாமல் இருக்க முடியுமா?
பெண்களுக்கு மாதாந்திர தேவை வேறு. என்னடா, நான் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேனே என்று எண்ண வேண்டாம். இது மனித உரிமை தொடர்பானது. பெண்களுக்கு சமூகமும், அரசும் தர வேண்டிய மரியாதை தொடர்பானது.
பெண்களுக்குக் கழிவறைகூட உறுதிப்படுத்தாத நிலையில் பெண் சமத்துவம் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை. இது பெண் சமத்துவம் தொடர்பானது அல்ல, மனிதனின் ஜீவாதார உரிமை என்று சொன்னாலும் தவறில்லை!

தீர்வு காணுமா தேர்தல் ஆணையம்?

Dinamani



By எஸ். ஸ்ரீதுரை

First Published : 19 January 2016 01:37 AM IST


தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் கூப்பிடு தூரத்தில் காத்திருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுவிடும்.
அதற்கு முன்னர், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குச் சில விஷயங்களை நினைவூட்ட வேண்டியிருக்கின்றது. தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப் படவுள்ள அரசு ஊழியர்களின் நலன் குறித்ததான நினைவூட்டல்களே அவை.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் போதே அத்தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் எத்தனை அலைக்கழிப்புகளுக்கு உள்ளானார்கள் என்பதைப் பற்றிய செய்திகளும், விவாதங்களும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிவந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
தேர்தல் பணிக்கெனத் தேர்வு செய்யப்படும் ஊழியர்களின் பரிதவிப்புகள் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்போதே உயிர்பெற்று விடுகின்றன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் எடுப்பது ஒரு புறம் என்றால் அவர்களுக்கான தேர்தல் பணியிட ஆணை வழங்கப்படுவது இன்னொரு சங்கடம்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் அவர்களுக்குப் பரிச்சயமான இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணி புரிந்தால் அது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பது நியாயமானதுதான்.
அதற்காக ஒவ்வொருவரையும் நூறு, நூற்றைம்பது கிலோ மீட்டர் தள்ளியுள்ள வாக்குச்சாவடிகளுக்குத் தூக்கியடிப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.
இது போதாதென்று, சில தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் ரகசியம் காப்பதற்கென்று வேறொரு காரியமும் செய்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்கான கடைசி பயிற்சி வகுப்பின்போது இன்னின்ன ஊழியருக்கு இன்னின்ன வாக்குச்சாவடி என்று அறிவித்துவிட்டுப் பின்பு வழங்கப்பட்ட ஆணையில் வேறொரு ஊரிலுள்ள வாக்குச்சவடியின் பெயர் இருந்ததாம்.
வாக்குச்சாவடி ஊழியர்கள் தங்குவதற்கான தனிப்பட்ட ஏற்பாடு எதனையும் தேர்தல் ஆணையமோ அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளோ செய்யாத நிலையில், முதலில் கூறப்பட்ட இடங்களில் தாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்ட ஊழியர்கள், வாக்குச்சாவடி ஒதுக்கீடு ஆணை பெற்ற பின்பு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள மிகவும் சிரமப்பட்டுப் போயினர். இனியாவது இதையெல்லாம் சரி செய்யவேண்டும்.
தேர்தல் ஊழியர்கள் முழுவதுமாக இரண்டு நாள்களாவது தங்கள் குடும்பத்தை விட்டு வெளியே வந்து இந்தப் பணிகளைச் செய்யவேண்டியிருக்கிறது.
அவர்களுக்கான உணவு, தங்குமிடம், குளிக்க மற்றும் இயற்கை உபாதைகளுக்கான ஏற்பாடுகளை, அவர்களை வேலை வாங்கும் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும்.
பெண் ஊழியர்கள் இயற்கை உபாதைகள் குறித்த மன அழுத்தங்களும், சங்கடங்களும் இன்றித் தேர்தல் பணி ஆற்றிடத் தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவை எல்லாம் போதாதென்று, தேர்தல் பணிகளுக்கென பட்டியல் செய்யப்படும் அரசு ஊழியர்கள் தத்தமது உடல் நிலை அல்லது குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக அப்பணியில் ஈடுபட முடியாத நிலையைத் தெரிவித்தால், அதனை ஏற்றுக் கொண்டு அவர்களை விடுவிக்கவும் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், தேர்தல் பணியை மறுத்தால் உடனடியாகப் பணி இடை நீக்கம் செய்யப்படும் என்பதும் உண்மைதானா என்பதை ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் பணிகளில் முறைகேடுகளுக்காக தண்டனை வழங்கினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தேர்தல் பணிக்கு வரமுடியாததற்கே தண்டனை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நிற்க. தமிழகத்தில் இப்போதுதான் பெருமழை பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. வெள்ள நிவாரணம் மற்றும் வெள்ள பாதிப்புக் கணக்கீடுகளில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரிய வகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பணிகள் முழுவதுமாக முடிவதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம்.
மூடியிருந்த பள்ளிகள் இப்போது செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், ஆசிரியர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது. மேலும், தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. தனி நபர் மசோதா சமர்ப்பித்திருக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களையும் நமது இந்தியத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளுக்கு இப்போதிலிருந்தே முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களைக் குறைந்த அளவிலும், மாநில - மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்களைப் பெருமளவிலும் கொண்டு, சட்டப் பேரவைத் தேர்தலைச் செம்மையுற நடத்திக்கொள்ள வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து முதலியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அரசியல் கட்சியினரின் உள்ளம் கவர்ந்த தேர்தல், அதற்கென்று பணியாற்றும் அரசு ஊழியர்களையும் மனமுவந்து ஈடுபடச் செய்யும் நிகழ்வாக மலரவேண்டும்.

கல்வியிலுமா போலி?

Dinamani

First Published : 19 January 2016 01:28 AM IST
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணா மாநிலத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் ரூ.150 கோடி ஊழல் புகார் தொடர்பான வழக்கில் அன்றைய முதல்வர் சவுதாலா சிறை தண்டனை பெற்றார். அண்மையில், உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு என்பதால் சுமார் 3,000 நியமனங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தற்போது, தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் நியமனம் பெற்ற சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன. 
 கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் போலி ஆவணங்கள் மூலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போலி ஆவணங்களைத் தயாரித்துப் பணியாணை பெற்றுத் தந்த ஒருவரை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 ஏதாவதொரு கிராமப்புறத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டால், அதிலும் குறிப்பாகத் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி என்பதாகவும் அது அமைந்துவிட்டால், மாணவர் தேர்ச்சி இலக்குக் குறித்த கவலையே இல்லாமல் பணியில் தொடரலாம். அரசு இயந்திரத்தின் ஒருபகுதியாக மாறி, பாடம் நடத்தும் திறமை இல்லாதது வெளிப்பட வாய்ப்பே இல்லாமல் வசதியுடன் வாழவும் முடியும். ஆகவே, இத்தகைய போலி ஆவணங்களின் மூலம் சில லட்சம் ரூபாய் கையூட்டுக் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்துவிடுகின்றனர்.
 போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கடந்த 11 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இவர்களைப் போல, தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கானோர் போலி ஆவணங்களை அளித்துப் பணியில் சேர்ந்திருக்கக்கூடும். 
 கடந்த இரு ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் புகைப்படம், ஹாலோகிராம் முத்திரை ஆகியன இடம்பெறுகின்றன. இதன்மூலம் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்படும் வாய்ப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஆசிரியர் பணியில் சேரும் வயது வரம்பு 35 வரை இருப்பதால், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பழைய சான்றிதழ்களையே ஆவணங்களாகத் தருவதைத் தவிர்க்க முடியாது. 
 சான்றுகளை முறையாக அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியான நடைமுறை. ஆனால், அதைப் பணி பளுவைக் காரணம் காட்டி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தவிர்த்து விடுகின்றனர். கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய கல்வித் துறையாலேயே முடியவில்லை என்றால், மற்ற அரசுத் துறை பணி நியமனங்களில் எத்தகைய முறைகேடு இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
 விசாரணையைத் தீவிரமாக நடத்தினால், ஆவணங்கள் தயாரித்தவர், அதைப் பயன்படுத்தி பணியில் சேர்ந்தவர் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள், சில கல்வித் துறை அதிகாரிகள், சில அரசியல்வாதிகள் என கைது நடவடிக்கை விரிந்து பரந்துகொண்டே போகும். அவர்களது ஆதரவு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை. 
 இவ்வாறு போலி ஆவணங்களின் மூலம் அல்லது ஆள்மாறாட்டத்தின் மூலம் நியமனம் பெறுதல் என்பது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுகின்றது. மற்ற துறைகளில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தால், அந்தத் துறை மட்டுமே ஒரு தகுதியில்லா நபரை ஊழியராகப் பெற்றிருக்கும். ஆனால், ஒரு கல்விக்கூடத்தில் ஒரு தகுதியில்லாத நபர் போலி ஆவணங்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்தால், ஒவ்வோர் ஆண்டும் தரமான, முறையான கல்வி தரப்படாமல் மாணவர்கள் பாதிப்படைவது தொடர்ந்துகொண்டே இருக்கும். 
 உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரியில் ஓர் ஆசிரியர் திறமை இல்லாதவர் என்பதையும் இவர் கல்வித் தகுதி இல்லாதவர் என்பதையும் மாணவர்களே கண்டுபிடித்து விட முடியும். ஆனால் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகளில் இதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.
 ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டால் அதன்பிறகு படிக்க வேண்டியதே இல்லை என்ற பணிச்சூழலும் இத்தகைய முறைகேடுகளை ஊக்கப்படுத்துகிறது. திறனறித் தேர்வுகள் பள்ளி ஆசிரியர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவதும், மதிப்பீடு செய்வதும் அவசியம். ஆனால், இத்தகைய கருத்து பேசப்பட்டாலே கடும் எதிர்ப்பு எழுகிறது. கற்பித்தலில் புத்தாக்கப் பயிற்சி நடத்தினாலும் அதைப் பள்ளி விடுமுறைக் காலத்தில் நடத்தாமல், பள்ளி வேலைநாள்களில்தான் நடத்த வேண்டும் என்போரிடம் இத்தகைய திறனறித் தேர்வுகள் குறித்து பேசவா முடியும்?
 கல்வித் துறையிலும், தொடர்புடைய பள்ளி, கல்லூரியிலும் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் ஒன்றும் அல்ல. காவல் துறை நடவடிக்கை என்றவுடன் சில தினங்களில் சான்றிதழ்களின் உண்மையை அறிய முடிகிறது என்றால், எல்லா சான்றுகளையும், குறிப்பாக ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றுகளை மட்டுமாகிலும், ஒரு மாதத்துக்குள் சரிபார்த்தல் என்பது சாத்தியமே.
 எழுத்துத் தேர்வு வைக்காமல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற கோரிக்கை அரசுப் பள்ளிகளின் தகுதியை அச்சுறுத்திக் கொண்டிருக்க, இவ்வாறான போலி ஆசிரியர் நியமனங்களும் சேர்ந்தால், அதன் விளைவு வருங்காலத் தமிழகத்தை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில் அரசு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது!

Monday, January 18, 2016

ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல்

Dinamani



By மாலன்

First Published : 18 January 2016 03:04 AM IST


கடவுள் முன் வந்து குழுமின காளைகள். கண்ணைத் திறந்த சிவன் என்ன என்றார். பால் போல் வெண்மேனியும், பாய்ந்தோடும் கால்களில் கருமையும் கொண்ட காளை, "தாங்க முடியவில்லை, தலைவா!' என்று தழுதழுத்தது. அந்தி வானின் செந்நிறம் கொண்ட இன்னொரு காளை காப்பாற்றுங்க எனக் கதறியது.
விண்மீன்களைப் போல வெண் புள்ளிகள் கொண்ட மற்றுமொன்று உழைக்கச் சலிக்கவில்லை, ஆனால், உதையைச் சகிக்க முடியவில்லை என்றது. சிவன் சிகையில் சூடிய பிறையைப் போல கொம்புகள் கொண்ட வேறோரு காளை, நீங்கள் செய்த ஏற்பாடுகள் நிலைக்க வேண்டுமானால் உடனே தலையிட வேண்டும். உதவாது இனித் தாமதம் என்று செருமியது.
"விளக்கமாகச் சொல்லுங்கள். என்ன பிரச்னை உங்களுக்கு?' என்று வினவினார் வெள்ளிப் பனிமலையில் வீற்றிருந்த விமலன். நீங்கள் ஏன் எங்களை பூமிக்கு அனுப்பினீர்கள் என்று கேட்டது வெண்மேனிக் காளை.
காரணத்தைத் தேடிக் கண்டெடுக்க வேண்டிய அவசியமில்லை. நெடுநாளாகிவிட்ட போதிலும் சிவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. இன்று காளைகள் கூட்டமாக வந்து நிற்பது போல் அன்று மனிதர்கள் மந்தையாக வந்திருந்து மன்றாடினார்கள்.
உமையோடு அமர்ந்திருக்கும் இமயத்தரசே, ஈசனே, உலகைப் படைத்தாய், உலகில் எம்மையும் படைத்தாய், எமக்கு உணவையும் படைத்தாய். ஓடி ஓடி அந்த உணவைத் தேடிக் களைத்த போது, நாங்களே எங்களுக்கான உணவை உருவாக்கிக் கொள்ளும் வேளாண் தொழில்நுட்பம் கற்பித்தாய். எல்லாவற்றுக்கும் நன்றி.
ஆனால், தனித்து நின்று உழுது பயிரிட, நிமிர்ந்து குனிந்து நீரிறைக்க, கதிர் மிதித்து மணி பிரிக்க, விளைந்ததை வீட்டுக்கு எடுத்துச் செல்ல எங்களால் முடியவில்லை. உதவி வேண்டும். எங்கள் பணிகளில் உதவ உடலில் வலுவும், உழைக்கும் திறமும் கொண்டவர் ஒருசிலரை உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று மனிதக் கூட்டம் மன்றாடியாது.
இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார் சிவன். இங்குமங்கும் உலாவினார். என்ன செய்யலாம்? என்றார் பார்வதியைப் பார்த்து. இவனை அனுப்பி வையுங்கள் என்றாள் உமை, அவர் அமர்ந்திருந்த காளையைக் காட்டி. அம்பலவாணர் அந்த யோசனையை ஏற்றார்.
மனிதர்களைப் பார்த்து சிவன் சொன்னார். இதோ எனக்குப் பிரியமான இவனை உங்களுக்கு உதவ அனுப்பி வைக்கிறேன். பணியாளாக அல்ல, தோழனாக. எத்தனை கடினமான வேலை கொடுத்தாலும் சலிக்காமல் செய்து முடிப்பான். ஆனால் அவன் வேலையாள் அல்ல. நண்பன். மனித குலத்திற்கு இறைவன் கொடுத்த நண்பன்.
கண்போல் கவனித்துக் கொள்ளுங்கள். காரியம் ஆக வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமில்லாமல் ஆசையோடும் நேசத்தோடும் அன்பு செய்யுங்கள். உங்கள் உற்பத்தியில் கொஞ்சம் உண்ண அவனுக்கும் கொடுங்கள். இலவசமாக அல்ல. உணவாக நீங்கள் கொடுப்பதை உரமாக அவன் திருப்பித் தந்து விடுவான் என்று சொல்லி மனிதனுக்கு உதவக் காளையை அனுப்பி வைத்து நெடுநாளாகிவிட்ட போதும் அதை நெஞ்சம் மறக்கவில்லை.
உதவி செய் என்று அனுப்பிய அந்தக் காளையின் சந்ததிகள் இன்று கண்ணீரோடு வந்து கதறுகின்றன.
"எங்களுக்குச் சரியான வசிப்பிடம் கிடையாது. ஒதுக்கிய இடத்தையும் ஒழுங்காகச் சுத்தம் செய்வது கிடையாது. சேறும் சகதியும், சாணமும் கூளமும் நிறைந்த இடத்தில்தான் நிற்க வேண்டும். படுக்கையும் உணவும் அங்கேயே. எளிதில் நகர்ந்து விட முடியாதபடி எங்களைக் கயிற்றால் பிணைத்திருப்பார்கள்.
அன்றாடம் ஆனந்தக் குளியல் அவர்களுக்கு. எங்களுக்கோ என்றோ ஒரு நாள் அந்த சுகம். அதுவும் அவர்களுக்கு நேரமிருந்தால். நாங்கள் உழைப்பதற்குச் சுணங்குவதில்லை. ஆனாலும் உதைபடாமல் இருப்பதில்லை. சாட்டைகள் எங்களைச் சாடுகின்றன. காயம் பட்டால் உடனே கவனிப்பதில்லை.
மூச்சு விடத்தானே மூக்கைக் கொடுத்தீர்கள். அதில் அவர்கள் கயிற்றை நுழைத்து மூர்க்கமாக இழுக்கிறார்கள். வயதேறி வலிமை குறைந்தால் கொலை செய்யவும் அவர்கள் கூசுவதில்லை. தோலை உரித்துக் காலில் போட்டுக் கொண்டு நடக்கிறார்கள், நாங்கள் செய்த உதவியெல்லாம் ஞாபகம் வருவதில்லை.'
பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தார் கடவுள். சரி, நான் வந்து பார்க்கிறேன் என்றார். மனிதர்களிடம் பசப்பல் வார்த்தைகளைக் கேட்டுப் பழகியிருந்த காளைகள் கடவுளின் சமாதானத்தை எளிதில் ஏற்க மறுத்தன.
நண்பன் என்று சொல்லி அனுப்பினீர்கள். தோழனாக நடத்தாவிட்டாலும் தொண்டூழியம் செய்யத் தயார். ஆனால், அடிமைகளாக இருக்க மாட்டோம் என்று உறுதியான குரலில் ஒலித்தன காளைகள்.
"சரி. நான் வந்து பார்க்கிறேன்' என்றார் மகாதேவன் மறுபடியும்.
எப்போது? என்று காலத்தை அறிவிக்கச் சொல்லிக் காளைகள் கேட்டன. கார்த்திகை மாதம், அமாவாசையன்று என்றார் பிறை சூடிய பெருமான். பெருமூச்செறிந்தபடி பிரியாவிடை பெற்றன காளைகள்.
இது கற்பனையல்ல. கதையல்ல. ஒடிஸாவில் உள்ள ஒரு பழங்குடி இனத்தவரான குர்மி மக்களின் நம்பிக்கை. கார்த்திகை அமாவசையன்று மனிதர்கள் காளைகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கக் கடவுள் வருகிறார் என்ற நம்பிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளில் பந்தன என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அந்தப் பண்டிகை நம் பொங்கலைப் போலிருக்கிறது; அதுவும் மூன்றுநாள் திருவிழா.
கடவுள் வருகிறார் என்பதால், பண்டிகை நெருங்கும் நேரத்தில் வீடுகளைச் சுத்தம் செய்து வெள்ளையடிக்கிறார்கள். முக்கியமாக மாடுகளின் தொழுவங்களை. தளம் எங்காவது பெயர்ந்திருந்தால் செப்பம் செய்கிறார்கள். சிலர் மண்ணைக் குழைத்து மெழுகி முழுத் தளத்தையும் புதுப்பிப்பதும் உண்டு. அந்தக் களிமண்ணை மட்டி என்றழைக்கிறார்கள்.
சிவப்பு, வெள்ளை எனப் பலவண்ணங்களில் மட்டியை எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள். லால் மட்டி எனப்படும் செம்மண்ணை தரைக்கும், தூத்தி மட்டி என்ற பால் வண்ணக் களிமண்ணை,பெரும்பாலும் சுவருக்கும் பயன்படுத்துகின்றனர்.
வாசலில் மட்டுமல்ல, சுவர்களிலும் மாக்கோலமிடுகிறார்கள். காவியோ, செம்மண்ணோ கொண்டு அதைச் செம்மைப்படுத்துவதில்லை. அதற்கு பதில் குங்குமத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
பண்டிகையின் முதல் நாள் ஜாக்ரண் (விழிப்பு, கண்காணிப்பு). மாடுகளைப் பராமரிப்பவர் அல்லது வீட்டின் மூத்த உறுப்பினர் மாட்டை அருகில் இருக்கும் ஆற்றுக்கு அல்லது குளம் குட்டைக்கு அழைத்துச் சென்று நன்கு குளிப்பாட்டுவார். குழந்தைகளும் கூடமாட உதவுவார்கள். ஆனால் குழந்தைகளின் நோக்கம் உதவுவது அல்ல. தண்ணீரில் இறங்கிக் கும்மாளம் போடுவது. அன்று அதைப் பெரியவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பெண்கள் டோங்கி என்ற மூங்கில் கூடையில் புத்தரிசி எடுத்துச் சென்று ஆற்றில் அதைக் கூடையிலேயே வைத்து அலசுவார்கள். இதற்காக பண்டிகைக்கு முன், மூங்கில் கூடை, புதுப் பானை, அதற்கு மண்ணால் ஆன மூடி, வெல்லம், எண்ணெய், புடவை, வேட்டி ஆகியவற்றைக் கிராமச் சந்தையில் (பேரம் பேசி) வாங்கி வந்திருப்பார்கள். அப்படி அலசிய அரிசியை, ஈர உடைகளோடு வீடு திரும்பி, வெட்ட வெளியில், நிழலில் உலர்த்துவார்கள். பின் அவற்றைத் திரித்து, அந்த மாவில் விளக்குகள் செய்வார்கள். அந்த விளக்குகளால் வீடு முழுக்க அலங்கரிப்பார்கள்.
பின் அந்த விளக்குகளைச் சேகரித்து, பொடி செய்து, புதுப்பானையில் இட்டு, பிட்டா என்று ஒரு "கேக்' செய்வார்கள். பிட்டாவில் இரண்டு வகை. இனிப்பான பிட்டா, இனிப்பற்ற பிட்டா. (இனிப்புப் பிட்டா இன்னும் நெஞ்சில் இனிக்கிறது). குளித்து விட்டு வந்த காளைகளுக்கு ஆண்கள், நெற்றியில் திலகமிட்டு, மாலை சூட்டி அலங்கரிப்பார்கள்.
அன்று இரவு கிராமம் முழுக்கப் பொதுத் திடலில் கூடி பாடல்கள் பாடி, நடனமும் ஆடுவார்கள். அரிசியில் தயாரான மதுவும் பரிமாறப்படும்.
இரண்டாம் நாள் கோஹல் பூஜா. அதாவது உழவுக் கருவிகளுக்கான பூஜை. குடும்பத் தலைவர் காலையில் ஆற்றில் குளித்துத் தனது நிலத்திலிருந்து சில கதிர்களை அறுத்து வருவார். அப்படி வரும் போது அவர் யாருடனும் பேசக் கூடாது. வீடு திரும்பியதும், அந்தக் கதிரின் வைக்கோலைத் திரித்து ஒரு மாலை போலச் செய்வார். அது காளைகளுக்கு அணிவிக்கப்படும். வேளாண் கருவிகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு துளசி நீர் தெளிக்கப்படும்.
மூன்றாம் நாள், காளைகளுக்குத் திருஷ்டி கழிக்கும் நாள். ஊர் நடுவே, அலங்கரிக்கப்பட்ட ஒரு கம்பத்தின் நடுவே காளைகளைக் கொண்டு வந்து கட்டி, பெண்கள் அந்தக் காளைகளை அலங்கரித்து, அவற்றின் மீது அரிசி அல்லது சோற்றை வீசிப் பின் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள். ஆண்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு காளைகளைப் புகழ்ந்து பாடுவார்கள். அதன் பின் எல்லோரும் சேர்ந்து, நம்மூரில் குலவையிடுவது போல, ஒலி எழுப்புவார்கள்.
ஆட்டம், பாட்டம், அலங்காரம், விருந்து என மூன்று நாள்கள் அமர்க்களமாகக் காளைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் அங்கு சமர்க்களம் கிடையாது. அதாவது- அங்கு ஜல்லிக்கட்டு கிடையாது.
"மனிதர்களைப் பார்த்து சிவன் சொன்னார்: எனக்கு பிரியமான காளையை உங்களுக்கு உதவ அனுப்பி வைக்கிறேன். பணியாளாக அல்ல, தோழனாக.'

NEWS TODAY 21.12.2025