Saturday, December 10, 2016

மனமே நலமா?- இழப்புத் துயரத்திலிருந்து மீள வழியில்லையா?



டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா

நான் இறந்த பிறகு

எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு

நம் இனிமையான தருணங்களை

அவ்வப்போது நினைத்துக்கொள்

ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.

பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்

நீ உயிரோடு இருக்கும்வரை

உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” - யாரோ

மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” - மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.

நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.

உணர்ச்சிக் கோலங்கள்

மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.

அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.

அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.

சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.

குரலும் இருப்பும்

இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.

இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.

எப்படிக் குறைப்பது?

பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.

சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.

தீராத இழப்புத் துயரம்

சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Friday, December 9, 2016

ஜெ. இறுதிச்சடங்கு.. சம்பிரதாயத்தை மீறினாரா சசிகலா?



vikatan.com

ஜெயலலிதாவின் மறைவால் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக மக்களை, அவர் மறைவு குறித்து எழும் பல்வேறு சர்ச்சைகளும், பதில்கள் இல்லாத கேள்விகளும் மேலும் அதிக வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த இறுதிச் சடங்கு குறித்தும் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ‘சமயச் சம்பிரதாயப் படி பரிபூரணமாக அவரது இறுதிச்சடங்கு நிகழவில்லை’ என்று குறிப்பிட்டு, பெரும் மனக்குமுறல்களுடன் ஆன்மீக பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, புகழ்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தபோதும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னை ஆன்மிக பிடிப்புள்ளவராகவே வெளிப்படுத்திக்கொண்டார். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். வைஷ்ணவ தர்ம சாஸ்திரங்களையும் ஆசாரஅனுஷ்டானங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடியவர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சில நிமிடங்களில் பாராயணம் செய்து விடக் கூடியவர். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை பார்த்தசாரதி பெருமாள், திருவரங்கம் ரங்கநாதர் மீது அதீத பக்தி கொண்டவர் என்பது நாடறிந்த விஷயம். அவ்வளவு ஏன், ஒருநாள்கூட தமது நெற்றியில் சூர்ணம் தரிக்காமல் (கோபிநாமமாக திலகம் அணிந்திருப்பார்) இருந்ததில்லை. அந்தளவுக்கு அவர் பெருமாள் பக்தை. ஆனால், அவரது இறுதிச் சடங்கு வைணவ சம்பிராதயப்படி நடைபெறவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

‘முதல்வர் என்பவர் சமயச் சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அடிப்படையில் பார்த்தாலும், தனிமனிதருக்கு உரிய உரிமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் மறைந்தபோது, அவர்களின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் அவரவர் சம்பிரதாய முறைப்படி முழுமையாக நடந்தேறின. தகனக்கிரியை நிகழ்ந்தபிறகு, அஸ்தியை வைத்தே நினைவிடம் எழுப்பினார்கள். ஆனால், அம்மா அவர்களின் விஷயத்தில் அந்தமாதிரியான சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. நடந்தவை அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே நடந்தன.
முறைப்படி ரத்தசொந்தமான ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் மூலமாகவே அனைத்தையும் செய்திருக்கவேண்டும். ஆனால், அவரை அருகில் வைத்துக்கொண்டு சசிகலாவே அனைத்தையும் செய்தார். இதையெல்லாம் விட, தீபக் பேண்ட்-சர்ட் போட்டுக்கொண்டும், காலணிகளைகூட கழற்றாமலும் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் காரியங்கள் செய்ததும், சசிகலா பால் தெளித்த தனது கைகளை தேவாதிபட்டரின் வஸ்திரத்தில் துடைத்துக்கொண்டதும் மறைந்த ஆத்மாவை அவமதிக்கும் செயல். மரியாதை செலுத்த வந்த ராகுல்காந்திகூட காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டே அருகில் வந்தார். அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும்கூட இவர்களுக்கு இல்லையே...’ என்று நீள்கிறது அவர்களது மனக்குமுறல்கள்.

இதுகுறித்தும் இறுதிச்சடங்கு-சம்பிரதாயங்கள் குறித்த நியமங்களை விவரிக்கச் சொல்லியும் வைணவ வேதபண்டிதர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள், தங்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோடு தங்களின் விளக்கத்தை முன்வைத்தார்கள்.

‘‘முதல் விஷயமாக, திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஒருவர் இறுதிச்சடங்கில் ஈடுபடுவது வழக்கம் இல்லை. ஆனால், அம்மா அவர்களுக்கு இறுதிச்சடங்கு காரியங்களை நடத்திவைத்த தேவாதிபட்டர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிவதாக அறிகிறோம். அது உண்மையெனும்பட்சத்தில், அவர் எப்படி இறுதிச் சடங்கு நிகழ்த்த ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது அவர் எந்தக் கோயிலிலும் கைங்கர்யம் செய்யவில்லை என்றாலும்கூட, அவரும் வைணவ சம்பிராதயங்களை அறிந்தவராகவே இருப்பார். அப்படிப்பட்டவர் இப்படி அரைகுறையாகச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? எந்தக் குறையும் இல்லாமல், முழுமையாக நடத்தியிருக்கலாமே என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்’’ என்று குறைபட்டுக்கொண்டவர்களிடம் சம்பிரதாய விதிகள் குறித்துக் கேட்டோம்.

‘‘ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்ட ஜெயலலிதா ஆசாரமான ஐயங்கார் குலத்தில் பிறந்தவர். அவருடைய இறுதிச் சடங்கு அவர்களுடைய குல மரபுப்படி நடைபெறவில்லை. பிராமணர் குலத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதுதான் வழக்கம்.
அதாவது ஒற்றை மூங்கில் கழியில் பாடை செய்து அதில் தென்னை கீற்று மட்டை பரப்பி, அதில் இறந்தவரின் உடலை வைத்து காடு வரைக்கும் சுமந்துசென்று தகனம் செய்வதுதான் காலம் காலமாய் கடைப்பிடிக்கும் வழக்கம். இந்தக் காரியத்தை, எவர் வந்தாலும் வராவிட்டாலும் இறந்த 24 மணி நேரத்துக்குள் நடத்தவேண்டும்.

தகனம் செய்வதற்கு முன் சுடுகாட்டிலும் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள், பாசுரங்கள் சொல்வார்கள். மறுநாள்தான் சஞ்சயனம் எனப்படும் பால் தெளியல் நடைபெறும். தொடர்ந்து 3-ம் நாள் முதல், 10-ம் நாள் வரையிலும் நித்ய கர்மாக்கள் உண்டு. 11-ம் நாள் ஒத்தன், 12-ம் நாளன்று சபிண்டிகரணம், 13-ம் நாளன்று கிரேக்கியம் ஆகியன நடக்கவேண்டும். இந்த நாளில் மணவாளமுனி பாராயணம், ராமானுஜர் பாசுரம், பல்லாண்டு பாசுரம் ஆகியவற்றை நிகழ்த்தி, பல்வகை தானம் செய்வார்கள். இவற்றையெல்லாம் செய்து இறந்தவரை அவருடைய மூதாதையருடன் சேர்த்துவைக்கும் சடங்கு இது.

பிறகு ஓராண்டு வரையிலும் மாதாந்திர திதியன்று கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளும் உண்டு. அதேபோல், ஐயங்கார் குடும்பத்தில் இறந்தவர்களை அவர்களின் வாரிசுகளோ அல்லது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளோ தர்ப்பையை எரித்து அதைக் கொண்டு தகனம் செய்வார்கள்.

நேரடி ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசுதான் உண்டு எனில், அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பேரன் காரியங்கள் செய்ய வேண்டும். திருமண பந்தத்தில் இணையாதவர்களுக்கு ரத்தவழிச் சொந்தங்கள்... சகோதரர் வழிப் பிள்ளைகள் செய்யலாம். எந்த உறவுகளும் இல்லாதவர் எனில், அவருக்கு ‘கோவிந்த கொள்ளி’ என்று வேற்று நபர்கள் காரியம் செய்யலாம். கோவிந்தகொள்ளி வைப்பதற்கும் உரிய சடங்குகள் உண்டு’’ என்று விளக்கியவர்கள், தங்கள் பங்குக்கு தங்களது மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்தார்கள்.
‘‘இறந்து போனவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லாவிட்டால், ரத்த சம்பந்த உறவு உள்ள ஒருவர் இறுதிச் சடங்குகளைச் செய்யலாம். அப்படிப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சம்பந்த உறவாக அவருடைய அண்ணன் மகன் தீபக் இருக்கிறார். அவரைக் கொண்டு முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவரை கடைசியில் பேருக்குத்தான் இறுதிச் சடங்குகளைச் செய்யவைத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுவிட்டால் உடனே தகனம் செய்துவிடவேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாலையில் போயஸ் கார்டனிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லும் நிலையில், அவருடைய உடலை உடனே தகனம் செய்யாமல் மாலைவரை காத்திருக்கவைத்தது சாஸ்திர விரோதம் என்றுதான் சொல்லவேண்டும். இது ஒருபுறமிருக்க...

காலையில் நேராக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு, மாலையில் உரிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அடுத்ததாக, இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் சாஸ்திரிகளைக் கொண்டு வேதம், பிரபந்த பாராயணம் செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை.

பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு பெருமாள் மாலையும், வஸ்திரமும் அணிவித்து மரியாதை செய்திருக்கலாம். அதுகூட செய்யவில்லை. பிராமண குடும்பங்களில் இறந்தவர்களை தகனம் செய்துவிட்டு, மறுநாள் அஸ்திக்குத்தான் பால் தெளித்தல் நடைபெறும். ஆனால், இங்கே தகனம் செய்யாததுடன், சவப்பெட்டியை குழியில் இறக்கியதுமே பாக்கெட் பாலை பீய்ச்சித் தெளித்தது பெரும் தவறு. சந்தனக் கட்டைகளையும் குழிக்குள் வீசி எறிந்திருக்கக்கூடாது.

மொத்தத்தில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் கடைப்பிடிக்கவில்லை என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு நிறையவே வருத்தம் இருக்கிறது’’ என்றவர்களிடம், ‘ஒருவர் கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இறந்துவிட்டால், அவருக்கு மாதம்தோறும் செய்யும் சடங்குகளையும் வருடாந்திர திதி கொடுக்கவும் ஏதேனும் சட்டதிட்டங்கள் இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘வைத்தியநாத தீக்ஷிதியம் போன்ற பழம்பெரும் நூல்கள் சம்ஸ்கார விஷயங்கள் குறித்து விளக்குகின்றன. ஒரு பிராமணப் பெண் திருமணம் ஆகாமல் இறந்துவிட்டால், அவருக்கு மாதாந்திர சடங்குகளோ வருடாந்திர திதியோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருடாந்திர திதி நாளில் கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்தாலே போதும்’’ என்று பதில் தந்தவர்கள், ‘‘அதிலும் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்த நேரம் மிகச்சரியாக தெரிந்தால்தான் இறப்பு திதியை (திதி நாளை) தெளிவாகக் கணிக்க முடியும். 5-ம் தேதியன்று இரவு 11:30 மணிக்குதான் அம்மா அவர்களின் உயிர் பிரிந்ததாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சர்ச்சைகள் எழாமல் இல்லையே. அப்படியிருக்க திதியை எப்படிக் கணிப்பது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களின் மனதில், அவர் குறித்து தொக்கி நிற்கும், பதில் அறிய முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி


'எனக்கு சின்ன வயசுல இருந்து அவங்களைப் பிடிக்கும். சின்ன வயசா இருக்கும்போது, அவங்களும் நானும் அடிக்கடி பேசிக்கிற மாதிரி சொப்பணம் கண்டிருக்கேன். காலைல எழுந்து யோசிச்சா, இது எல்லாம் புதுசா இருக்கு என விட்டுட்டேன். அதுக்கப்புறம் தான், நான் வீணை வாசிப்பதை வைத்து என்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாங்க. அதற்கு பிறகு, சென்னை இசைக் கல்லூரிக்கு என்னை துணை வேந்தராக ஆக்கினாங்க. அம்மா வேந்தரா இருந்தாங்க. இதுக்கெல்லாம் முன்னாடி, 'நான் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் உறுப்பினராக இருந்தேன். இந்தத் துறையில் தொடர்ந்து இருக்கப் பிடிக்காமல் என் கணவர் வேலை பார்க்கும் இடமான மும்பைக்கே திரும்பிவிட முடிவு செய்தேன். வீட்டுப் பொருட்களை எல்லாம் காலி செய்துவிட்டு வெறும் விட்டை பூட்ட கிளம்பும்போது ஒரு போன் வந்தது. அந்த போன் அம்மாவிடமிருந்து. 'தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணை வேந்தராக விருப்பமா?'னு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. கண்கள் கலங்கிடுச்சு. சரின்னு சொன்னேன். இயல்பாகவே நான் ரொம்ப தைரியமானப் பெண்மணி. எதற்கும் கலங்கவே மாட்டேன். ஆனா, அன்றைக்கு அம்மாவிடமிருந்து போன் வரவில்லைனா என்றால் தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க மாட்டேன். நான் இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது அவங்கக் கொடுத்த வாழ்க்கை' என நெகிழ்ந்து பேச ஆரம்பிக்கிறார், சென்னையில் அமைந்துள்ள இசைப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வீணை காயத்ரி''.

''உங்களுக்கு வந்த கொலை மிரட்டல் அப்போ 'அம்மா'வை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?''

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும் இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார். 'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''



''ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் இடையேயான பழக்கம் எப்படி?''

''முதல் முறையாக அவரை நேர்ல பார்த்து தனியாப் பேசினது 2006-ம் ஆண்டு போயஸ் கார்டன்ல தான். இயல், இசை, நாடக மன்ற உறுப்பினராக இருந்தப்போ, என் பெரிய பொண்ணோட திருமணத்துக்கு பத்திரிகை வைக்க நானும், என் கணவரும் போயிருந்தோம். பொதுவாகவே, அவங்களைப் பார்க்கப் போறவங்க, பொக்கே கொடுப்பது தான் வழக்கம். நான் வித்தியாசமா ஜாதி மல்லி 100 முழம், மல்லி 100 முழம் என 200 முழம் பூவையும் ஒரு லைட் கிரீன் பட்டுப் புடவையும், பத்திரிகையையும் அதனுடன் சேர்த்துக் கொடுத்தேன். மல்லிகையை வாசம் செய்து விட்டு பேச ஆரம்பித்தார்கள் அம்மா. என்கிட்ட கேட்ட முதல் வார்த்தையே, 'ஆட்சியில இருக்கும் போதுதானே பார்க்க வருவாங்க. நீங்க, நான் ஆட்சியில இல்லாதபோது பார்க்க வந்திருக்கீங்கனு கேட்டாங்க'. உடனே நான், 'உங்களை எனக்குப் பிடிக்கும். ஆட்சிக்காக யோசித்து எல்லாம் வரவில்லை. உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு' என மெதுவாகச் சொன்னேன். என் மகள் திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு நான் அவரை தலைமைச் செயலகத்தில் அடிக்கடி சந்திச்சிருக்கேன். எனக்கு தெலுங்கு தெரியும் என ஒரு முறை தெரிஞ்சுக்கிட்டாங்க. அதற்குப் பிறகு என்கிட்ட தெலுங்கில் தான் பேசுவாங்க. நானும் அவங்களைத் தனியாக அழைக்கும்போது, 'அம்மாகாரு'னு தான் கூப்பிடுவேன். அவங்களும் என்னை மிஸ்ஸர்ஸ் காயத்ரி எனதான் கூப்பிடுவங்க. இதுவே மத்தவங்க இருந்தாங்கனா நான் மேடம்னுதான் கூப்பிடுவேன்.''

''உங்கள் இசையை அவர் கேட்டது உண்டா?''

''திருமண ரிஷப்ஷனுக்காக அடிக்கடி நிகழ்ச்சிகளில் வாசிப்பது உண்டு. அப்படி வாசிக்கும் போது மூன்று விழாக்களில் அவங்களைப் பார்த்திருக்கேன். அவங்களும் என்னைக் கவனிச்சிருக்காங்க. நான் கர்நாடகம் வாசிச்சுட்டு இருப்பேன். அவங்க நிகழ்ச்சிக்கு வந்தா உடனே, அவங்க நடிச்ச படத்தில் உள்ள, ' ஒரு நாள் யாரோ', 'ஆயிரம் நிலவே வா',' ஆயிரம் ஆசை' பாடல்களை வாசிக்க ஆரம்பிச்சுடுவேன். 20 வருஷத்துக்கு முன்பு, ஒரு பேட்டியின் போது அம்மாகிட்ட, யார் வீணை வாசிப்புப் பிடிக்கும் என கேட்டப்போ, என் பேரை சொல்லியிருக்காங்க. இதைவிட என்ன பெரிய பாக்கியம் என்னங்க இருக்கப் போவுது?.''

''உங்களால் அவருடனான மறக்க முடியாத நினைவுகள்?''

''ஜெயலலிதா அம்மாவுக்காக, பிப்ரவரி அன்னிக்கு திருப்பதியில வாசிச்சேன். கச்சேரி முடிந்து கிளம்பும் போது, அங்கே லட்டும், வடையும் கொடுத்தாங்க. அதை எடுத்துட்டு வந்து அம்மாவுக்கு கொடுக்கலாம் என அவர் அலுவலகத்தில் இருந்தவங்ககிட்ட கேட்டேன். அம்மா பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரத்தில் இருக்காங்க என பதில் வந்தது. நானும் அதை அப்படியே வீட்டில் வச்சுட்டேன். அடுத்த நாள், கோவைக்காய் பொறியல் செய்து கொண்டு இருந்தேன். அப்போ, அம்மா ஆபீஸ்ல இருந்து போன், அம்மாவேப் பேசினாங்க. என்னைத் தெரியுதானு கேட்டாங்க. அம்மா நீங்க என்னோட சொப்பணத்துலக்கூட வந்துட்டு இருக்கீங்க.. உங்களை எப்படி மறக்க முடியும்னு சொன்னேன். அதுக்கு அவங்க எனக்கு பிரசாதம் கொடுத்து அனுப்புங்கனு சொன்னாங்க. அதற்குப் பிறகு 'WE WILL MEET VERY VERY SOON' அப்படினு சொன்னாங்க. அதாவது, இந்த தேர்தல்ல ஜெயிச்சு வந்திடுவேன். நாம கட்டாயம் சந்திப்போம் என அர்த்தப்படுத்திய வார்த்தையை சொன்னாங்க''.

''அம்மாவுடைய இழப்புச் செய்தி உங்களை எந்த அளவு பாதிச்சது?''

''வார்த்தைகளே இல்லைங்க. நான் அவங்களை சந்திக்கும்போது ஒரு அன்பு இருக்கும் பாருங்க. அதை எப்படி சொல்றதுனு தெரியல. அவங்களுக்கு மனசுல ஒளிவு மறைவே இல்லை. நியாயமா இருப்பாங்க. நீ, வானு அவங்க யாரையும் கூப்பிட்டதே இல்லை. அவங்க கொண்டு வந்த திட்டத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது, 'அம்மா உணவகம்'. அம்மா ஸ்தானத்துல இருந்திருக்காங்க. அதுதான் பலருக்கும் 'டச்'சிங்கா இருந்திருக்கு. அம்மா என்றாலே ஆசையா, அன்பா அழைத்து பரிவோடு சாப்பாடு போடுறதுதானே. ஐந்தாம் தேதி மாலை டி.வில திடீர்னு அம்மா மரணம்னு போட்டாங்க. அப்போலோ மருத்துவமனைக்கு போன் பண்ணி விசாரிச்சேன். இல்லைனு சொன்னாங்க. ஆறுதலா இருந்தது. இரவு 12 மணிக்கு தூக்கம் திடீரென கலைந்தது. டி.வி போட்டா இறந்ததா ஒளிபரப்பினாங்க. ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. அதை வார்த்தைகளால சொல்ல முடியாது ஜூலை 27-ம் தேதி நல்லா இருந்தாங்க. அதுக்குள்ள இப்படியானு கஷ்டமா இருந்தது.''

''அவங்க கொடுத்து பொக்கிஷமா வைத்திருக்கும் பொருள்?''

''என் பொண்ணு கல்யாணத்துக்கு, என்னோட உயரத்துக்கு இருக்கிற இரண்டு வெள்ளி குத்துவிளக்கு கொடுத்து அனுப்பினாங்க. மூன்று, நான்கு பேர் அதை தூக்கிட்டு வந்தாங்க. அதே போல ஒவ்வொரு தீபாவளிக்கும் ஸ்வீட் அனுப்புவாங்க. ஒவ்வொரு வருடமும் அவங்க பிறந்த நாளை என்னோட பல்கலைக்கழத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுவேன். கிட்டத்தட்ட சினிமா பங்ஷன் மாதிரி. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 24-ம் தேதி நிகழ்ச்சியை நடத்துவோம். 2013-ம் ஆண்டு 66 மணி நேரம் தொடர்ந்து எல்லா மியூசிக்கும் வாசிச்சோம். நாட்டுப் புறக் கலைகள், பாட்டு, கிராமிய இசை என வாசிச்சோம். அவங்க 67-வது பிறந்த நாள் அப்போ 67 பேரின் நடனம். 68-வது பிறந்தநாளுக்கு 68 பேர் நாகஸ்வரம், 68 பெயின்டிங் என வெகு விமர்சையாகக் கொண்டாடினோம். அவங்களைப் பற்றிய அரிய புகைப்படங்கள், பெயின்டிங்ஸ் எல்லாவற்றையும் ஒரு மாதம் கண்காட்சிக்காக வச்சிருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவங்க கைப்பட வாழ்த்துக் கடிதம் அனுப்புவாங்க. அதையும் பாதுகாத்து வச்சிருக்கேன். நான் எப்பவுமே வெளிப்படையாகத்தான் பேசுவேன். இதைப்பற்றி என்கிட்ட ஒருமுறை 'யு ஆர் போல்ட். ஐ லைக் இட்' என பாராட்டினார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக சத்தமாக வரும். போலீஸ் துறை பக்கம் போகணும் எனதான் விரும்பினேன். புலனாய்வு மீது மிகவும் விருப்பம் எனக்கு. இந்த வீணை இசைதான் என்னை இன்னும் கட்டிப் போட்டிருக்கு''.

முதல் வெற்றி!

முதல் வெற்றி!

By ஆசிரியர்  |   Published on : 07th December 2016 02:03 AM  |   அ+அ அ-   |  
அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமான "கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்பதற்கு இலக்கணமாக அவரது பெயரில் 44 ஆண்டுகளுக்கு முன்னால் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித முணுமுணுப்போ, சலசலப்போ இல்லாமல் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடமை உணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் கண்ணியம் காத்து, ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும்கூட கட்சி கட்டுப்பாடாகத் தொடரும் என்பதற்கான அறிகுறி இது.
ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மறைவு ஒட்டுமொத்த சமு
தாயத்தையே புரட்டிப்போட்டுவிடுவது இயல்பு. அதிலும் குறிப்பாக, அமைச்சர்களிலிருந்து அடிமட்டத் தொண்டர் வரை "அம்மா'வின் விழியசைவிற்கும் விரலசைவுக்கும் ஏற்ப செயல்பட்டு வந்த கட்சி, அவரது மறைவை எதிர்கொண்ட விதமும், அவரது பெயருக்கும் புகழுக்கும் துளியும் களங்கம் ஏற்பட்டுவிடாமல் நடந்துகொண்ட முறையும் ஒட்டுமொத்த இந்தியாவையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
ஜெயலலிதாவின் மரண அறிவிப்பைத் தொடர்ந்து உடனடியாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி முதல்வரைத் தேர்ந்தெடுத்து பதவிப் பிரமாணமும் எடுத்துக்கொண்ட விதத்திற்குப் பின்னால் இருந்த அப்பழுக்கில்லாத திட்டமிடுதலும், அரசியல் சாதுர்யமும் யாரும் எதிர்பார்க்காதது. அதிலும் குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருமே சாட்சிகளாகப் பங்கு கொண்டது என்பது, தலைவியின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வலிமையையும், அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஒரு மிகப்பெரிய ஆலமரம் சாய்ந்து விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அறிஞர் அண்ணா காலமானபோதும் சரி, எம்.ஜி.ஆர். மறைந்தபோதும் சரி, தமிழகம் முழுவதும் நடந்த கலவரங்கள் எத்தனை, பொருள் இழப்பும் பாதிப்புகளும் எத்தகையவை என்பது அனைவருக்கும் தெரியும். இயல்பு வாழ்க்கை திரும்பப் பல நாட்கள் ஆயின.
நீண்ட கால உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனு
மதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு
களைச் செய்து சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டிருக்காவிட்டால், தமிழகமே கலவர பூமியாக மாறிவிட்டிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு அடித்தட்டு மக்கள் மத்தி
யிலும், தொண்டர்களிடையிலும் ஏற்பட்டிருக்கும் அபரிமித செல்வாக்கு அத்தகையது. இதற்கு முன்னால் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது கொதித்தெழுந்த உணர்ச்சி எரிமலை இப்போதும் வெடித்திருக்கக்கூடும்.
அப்படிப்பட்ட சூழலை சாதுரியமாகக் கையாண்டு, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையிலும் அனை
வரும் பாராட்டும் வகையிலும் தனது தலைவியின் இறுதி யாத்திரையை நடத்தியது என்பது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிர்
வாகத் திறமைக்குக் கிடைத்த முதல் வெற்றி. மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார் என்றாலும், சுதந்திரமாக அவர் தலைமையில் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய பிரச்னை, மிகத் திறமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. தொடக்கமே தெம்பூட்டும் விதமான ஆரம்பமாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சசிகலாவின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாதது. குறைத்து மதிப்பிட முடியாதது. எம்.ஜி.ஆரின் மறைவில் தொடங்கி, கடந்த 29 ஆண்டுகளாக
ஜெயலலிதாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் அவரது வெற்றியிலும் தோல்வியிலும் பக்கபலமாகவும், பின் துணையாகவும் இருந்து வந்திருப்பவர் சசிகலா மட்டுமே. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்கூட, நீண்ட நாள் ஜெயலலிதாவால் சசி
கலாவை ஒதுக்கி வைக்க முடியவில்லை எனும்போது, எந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு.
"மற்றவர்களால் மிகவும் தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். எனக்காக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். என்னுடைய நட்பு மட்டும் இல்லையென்றால் அவரை யாரும் இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். எனது உடன்பிறவாச் சகோதரி. என் அம்மாவின் இடத்தை நிரம்பிய பெண் அவர்' என்று
ஜெயலலிதாவே, சிமி கரேவாலுடனான தனது பேட்டியில் சசிகலா குறித்து கூறியிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு சசிகலா ஜெய
லலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்று தெரிந்து
கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா இருக்கும்போதே, அவரது எண்ணப்படியும், வழிகாட்டுதல்படியும் கட்சியினரை வழிநடத்தி வந்திருப்பவர் சசிகலாதான். அதனால், அ.தி.மு.க.வின் கட்சித் தலைமை என்பது இயற்கையாக சசிகலாவைச் சேரும் என்பதுதான் எதிர்பார்ப்பு. எதிர்கால கட்சித் தலைமைக்கு சசிகலாவும், நிர்வாகத் தலைமைக்கு ஓ. பன்னீர்செல்வமும் என்பது ஜெயலலிதா சொல்லாமல் சொல்லியிருக்கும் செய்தி என்றுதான் கூற வேண்டும். இந்த ஏற்பாடு சுமுகமாகத் தொடர்வதுதான் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஜெயலலிதாவின் அடிச்சுவட்டில் அடுத்து நான்கரை ஆண்டுகள் திறமையாகவும், சுமூகமாகவும் ஆட்சியை நடத்திச் செல்வதுதான் 2016-இல் மக்கள் அ.தி.மு.கவுக்கு அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவதாக அமையும்!

அம்மா...

By ஆசிரியர்  |   Published on : 06th December 2016 05:06 AM  

எது நடந்துவிடக் கூடாது என்று லட்சக்கணக்கான அ.தி.மு.க. அனுதாபிகளும், கோடிக்கணக்கான தமிழக மக்களும் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அவரவர் போற்றும் இறைப்பரம்பொருளை வேண்டி வந்தார்களோ அது நடந்துவிட்டது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுத் திரும்ப வேண்டும், ஆட்சிப் பொறுப்பை முன்புபோல ஏற்று நடத்த வேண்டும் என்கிற அனைவரது பிரார்த்தனையும் பொய்த்துவிட்டது. புரட்சித் தலைவி என்றும், பொன்மனச் செல்வி என்றும் தமிழக மக்களால் போற்றிப் பாராட்டப்பட்ட, "அம்மா' என்று அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட அ.தி.மு.க.வின் தனிப்பெரும் தலைவி மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால், நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறுவது வெற்று வார்த்தைகள் அல்ல, நிஜம். தமிழக அரசியல் சரித்திரத்தில் இப்படியொரு அசைக்க முடியாத அதிகாரத்துடனும், ஆதரவுடனும் எந்தவொரு கட்சியின் தலைவரும் இருந்ததில்லை. தமிழகத்தின் கடைக்கோடி அடித்தட்டு மக்கள் வரை, தனது மக்கள் நலத் திட்டத்தால் சென்றடைந்து அவர்களால் பாசத்தோடு "அம்மா' என்று அழைக்கப்படும் நிலைக்கு தன்னை வளர்த்திக் கொள்ள அவரால் முடிந்தது என்பது வரலாற்றுப் பதிவு.

காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு மக்களிடம் தனது ஆட்சி தொடர மீண்டும் தேர்தல் வெற்றியை ஈட்டியவர் ஜெயலலிதா மட்டுமே. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி அடுத்த 15 ஆண்டுகள் அவர் மறையும்வரைத் தலைமை தாங்கி வழி நடத்தினார் என்றால், அவருக்குப் பிறகு கடந்த 29 ஆண்டுகளாக அந்தக் கட்சியைக் கட்டிக் காத்து நடத்தி வந்த பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும்.

1989, 1996, 2006 என்று மூன்று தேர்தல் தோல்விகளையும், 1991, 2001, 2011, 2016 என்று நான்கு வெற்றிகளையும் அவரது தலைமையின் கீழ் அ.தி.மு.க. எதிர்கொண்டது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், அவரது அரசியல் வருங்காலம் முடிந்து விட்டதாக ஆரூடம் கூறியவர்கள், அவர் "பீனிக்ஸ்' பறவையாய் சாம்பலிலிருந்து மீண்டெழுந்து வந்ததைப் பார்த்து மிரண்டு போனதைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் கிராஃப் மிகவும் விசித்திரமானது. அவர் எதிரிகளால் மூலைக்குத் தள்ளப்படும் போதெல்லாம் சீறியெழுந்து தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் இன்னுமொரு ஆச்சரியம் காணப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்தும் ஒரு மிகப் பெரிய பின்னடைவு இருந்தவண்ணம் இருந்து வந்திருக்கிறது.

1982-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டு அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அசுர வளர்ச்சி அ.தி.மு.க.விலேயே பலரையும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வைத்தது. இப்படியே போனால், எம்.ஜி.ஆர். அவரைத் துணை முதல்வராக அறிவிக்கக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.

ஆனால், 1984-இல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா சென்றது, திரும்பி வந்த பிறகும் ஜெயலலிதாவைப் பார்க்காமல் இருந்தது என்று ஏறத்தாழக் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நிலைமை. எம்.ஜி.ஆரைச் சுற்றி இருந்தவர்கள் ஜெயலலிதாவைக் கட்சியிலிருந்து விலக்கிவிட முயற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், 1987-இல் எம்.ஜி.ஆர். காலமானார். அது ஜெயலலிதாவைத் தலைவியாக்கியது. அ.தி.மு.க. பிளவுபட்டு ஜெயலலிதா அணி தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும், ஜானகி அணி அடைந்த படுதோல்வி ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் இயற்கையான வாரிசாகத் தூக்கிப் பிடித்தது. அதே வேகத்தில், ஜெ, ஜா அணிகள் இணைப்பு, 1989 மக்களவைத் தேர்தல், காங்கிரஸýடன் கூட்டணி என்று வளர்ந்து 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

1991 வெற்றி என்றால் 1996-இல் படுதோல்வி. தொடர்ந்து வழக்குகள். இத்துடன் முடிந்தது ஜெயலலிதாவின் சகாப்தம் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக 1998 மக்களவைத் தேர்தலும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலும் அமைந்தன. மீண்டும் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. அந்த வெற்றியின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. அவரது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பதவி விலகினார். சிறிது இடைவெளி. மீண்டும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். ஆனால், தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலிலும் 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி. ஏறுமுகத்தைத் தொடர்ந்து இறங்குமுகம்.

2011 சட்டப் பேரவைத் தேர்தல் ஜெயலலிதாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து மீண்டும் முதல்வராக்கியது. அடுக்கடுக்காக அவர் அறிவித்த இலவசத் திட்டங்கள் அவரை அனைவருக்கும் "அம்மா'வாக்கின. தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களை அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற்றது. இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியெனத் தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும் அதைத் தொடர்ந்து சிறைவாசமும் அவரை நிலைகுலைய வைத்துவிட்டன. அந்த அதிரடித் தாக்குதலில் இருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தைத் தழுவி இருப்பதற்கு நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புதான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை.

பதவி விலகி, உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை , பெங்களூரு உயர்நீதிமன்ற விடுதலை ஆகியவற்றிற்குப் பிறகு அவர் மீண்டும் முதல்வராகப் பதவி ஏறினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியையும் அமைத்து சாதனையும் புரிந்தார். அவரது ராசி மீண்டும் வேலை செய்தது. இந்த முறை உடல்நிலையை பாதித்து முடக்கி அவரது வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டிருக்கிறது.

வெற்றி தோல்வி என்று மாறி மாறிப் பயணித்து, மக்களின் இதய சிம்மாசானத்தில் ஏறி அமர்ந்து விட்டவர் ஜெயலலிதா. அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம், ஒழுங்கு முறையும், வாரி வழங்கப்பட்ட சமூக நலத் திட்டங்களும், இலவசங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ள வரை நினைவுகூரப்படும்.
உலக சரித்திரத்தில் முதன்முதலாக ஒரு நடிகை நாடாள முடியும், தங்கத் தாரகை தலைவியாக அரசியல் இயக்கத்தை வழிநடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா. சரித்திரம் படைத்த உலகப் பெண்மணிகளின் பட்டியலில் இஸ்ரேலின் கோல்டா மேயர், இங்கிலாந்தின் மார்கரெட் தாட்சர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருடன் ஜெயலலிதாவும் இடம் பெறுவார் - அவர் பிரதமராக ஆக முடியவில்லை என்றாலும் கூட!

""மக்களால் நான்; மக்களுக்காக நான்'' என்கிற அவரது கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஈடுசெய்ய முடியாத இழப்பால் தமிழகம் தத்தளித்து நிற்கிறது. "தினமணி' அந்த மீளாச் சோகத்தில் பங்கு கொள்கிறது!

வெகு சிலர் மட்டுமே மறைந்தும் நினைவுகூரப்படுவர். அவர்களில் நிச்சயமாக ஜெயலலிதாவும் ஒருவர்!

துக்ளக் அல்ல சாணக்கியன்!

துக்ளக் அல்ல சாணக்கியன்!

By ஆசிரியர்  |   Published on : 08th December 2016 01:30 AM 
அப்பல்லோ மருத்துவமனையில் "சோ' ராமசாமி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரை நலம் விசாரிக்க வந்தார். "சோ, நான் உயிரோடு இருக்கும்வரை உங்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் போய்விட்டால் எனக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் வேறு யாரும் இல்லாமல் போய்விடும்' என்று அவரிடம் ஜெயலலிதா கூறினாராம். அவர் விழைந்தது போலவே, ஜெயலலிதா மறைந்த அடுத்த நாள் "சோ' ராமசாமியும் காலமாகி இருக்கிறார்.
அவசரநிலைச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது, "துக்ளக்' இதழ் அதை எதிர்கொண்ட விதமும், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்துக்கு அவர் அளித்த ஆதரவும், அகில இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. காமராஜருடன் அவருக்கு இருந்த நெருக்கம் மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சந்திரசேகர், அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே என்று
பல தேசியத் தலைவர்களின் நட்பை அவசரநிலையும் அதைத் தொடர்ந்து அமைந்த ஜனதா ஆட்சியும் ஏற்படுத்திக் கொடுத்தன.
தமிழக அரசியலில் "சோ' ராமசாமியின் பங்கு, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகுதான் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. 1987 முதல் 2016 வரை ஏதாவது வகையில் தமிழக அரசியலை திரைமறைவிலிருந்து வழிநடத்திச் சென்றவர் "சோ' ராமசாமி எனலாம். 1990-இல் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டதற்கு, "சோ' ராமசாமியின் பங்களிப்புதான் முக்கியமான காரணம்.
ஜெயலலிதா 1991-இல் ஆட்சியில் அமர்வதற்கு "சோ' ராமசாமி காரணமல்ல என்றாலும், தி.மு.க.வை எதிர்கொள்ள ஜெயலலிதாதான் சரியான சக்தி என்கிற அளவில் அந்த ஆட்சிக்கு "சோ' ராமசாமி ஆதரவளித்தார். அதேநேரத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பல ஊழல்களில் சிக்கியபோது, அந்த ஆட்சியை அகற்றத் துணிந்து களமிறங்கியவரும் "சோ'தான். காங்கிரஸிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தொடங்கியது, அந்தக் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் கூட்டணி ஏற்படுத்திக் கொடுத்தது, அந்தக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற்றுத் தந்தது, அதன்மூலம் 1996 தேர்தலில் அ.தி.மு.க.வைப் படுதோல்வி அடையச் செய்தது எல்லாமே "சோ' ராமசாமியின் அரசியல் வியூகத்தின் வெற்றிகள்.
1996-இல் அ.தி.மு.க.வை வீழ்த்திய "சோ' ராமசாமிதான், 1998-இல் அ.தி.மு.க. மீண்டும் உயிர்த்தெழுவதற்கும் வழி வகுத்தார். பா.ஜ.க.வுடனானஅ.தி.மு.க.வின் கூட்டணி 1998 மக்களவை தேர்தலில் பெரும் வெற்றிபெற்று, மத்திய அரசிலும் அ.தி.மு.க. பங்குபெற வழிகோலியது. அடுத்த ஆண்டிலேயே, அ.தி.மு.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை இழந்தபோது, தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க.வுக்குப் பெற்றுக் கொடுத்து 1999 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவியதும் அவரேதான்.
2001 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., இடதுசாரிகள் என்று கூட்டணி ஏற்படுத்தி, தி.மு.க.வை வீழ்த்த ஆலோசனை வழங்கியவர் "சோ'. 2011 தேர்தலில், விஜயகாந்தின் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இணைத்தவர் "சோ'தான் என்பதையும் நாடறியும்.
இப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் இருக்க முடிந்திருக்கிறது என்பதுதான் "சோ' ராமசாமியின் தனித்துவம். நடிகராக, நாடக ஆசிரியராக, திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தாவாக, இயக்குநராக அவருக்கு இருக்கும் கலைத்துறை முகங்கள் பல. வழக்குரைஞர், அரசியல், சட்ட பொருளாதார ஆலோசகர் என்பது அவரது இன்னொரு முகம்.
12 மேடை நாடகங்கள், 10 திரைப்படக் கதை வசனங்கள் என்பதுடன் நின்றுவிடவில்லை அவரது எழுத்து. ஏறத்தாழ 100 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவரது மகாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், ஹிந்து மகா சமுத்திரம், இந்து தர்மம், அன்றைய வேதங்கள் முதல் இன்றைய விவகாரங்கள்வரை என்று இந்து மதம் குறித்து, சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள். இவை "சோ' ராமசாமி என்கிற அதிசய மனிதனின் மேதாவிலாசத்தைப் பல தலைமுறைகள் எடுத்துரைக்கும்.
தான் கொண்ட கருத்தை, எந்தவிதத் தயக்கமோ, அச்சமோ இன்றி எடுத்துரைப்பதுதான் பத்திரிகை தர்மம் என்று கருதியவர் "சோ'. அதனால்தான் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும்கூட, "சோ' என்ன சொல்கிறார் என்பதைப் படிக்கத் தவறவில்லை.
"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் "சோ' ராமசாமியின் மறைவால் இந்தியா ஒரு பன்முகத்தன்மையுள்ள ஆளுமையை இழந்திருக்கிறது. சோ ராமசாமியின் கருத்துகளுக்கு முரண்பட்டவர்களும்கூட, அவரை வெறுத்ததில்லை. அவரது விமர்சனத்துக்கு ஆளானவர்கள்கூட அவரைத் தனிப்பட்ட முறையில் குறை கண்டதில்லை. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த உள்ளத் தெளிவும், உண்மைத்தன்மையும்.
அவர் தான் போற்றி வணங்கிய மகாகவி பாரதியின், "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்கிற வார்த்தைக்கு இலக்கணமாக இருந்து மறைந்த "சோ' ராமசாமியின் மரணத்தால், தமிழகம் நல்லதொரு வழிகாட்டியை இழந்து நிற்கிறது!

ரூ.100 கோடி, 120 கிலோ தங்கம் ஒரே தொழிலதிபரிடம் பறிமுதல்: அரசு உயர் அதிகாரி, அரசியல்வாதிகள் சிக்குகின்றனர்

By DIN  |   Published on : 09th December 2016 10:25 AM 

2000

தொழிலதிபரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.100 கோடி பணம், 120 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் உயர் அதிகாரியும், அரசியல்வாதிகளும் சிக்குவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வருமான வரித் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கனிமவள தனியார் நிறுவனம், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பணத்தை ஈட்டுவதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை தியாகராய நகரில் வசிக்கும் அந்தத் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரெட்டியின் வீடு, அவரது கூட்டாளிகள் தியாகராய நகர் விஜயராகவ சாலையில் உள்ள சீனிவாச ரெட்டியின் வீடு, மேற்கு முகப்பேரில் உள்ள பிரேமின் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆந்திரா கிளப், சேகர் ரெட்டியின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி சோதனை நடத்தச் சென்றனர்.
இந்தச் சோதனை காலை 9 மணிக்கு தொடங்கியது. சோதனையில் வருமான வரித் துறையினர் 8 குழுக்களாக 160 பேர் ஈடுபட்டனர். அப்போது, வருமான வரித்துறையினரே மலைக்க வைக்கும் வகையில் பண நோட்டுகளும்,தங்கமும் கிடைத்தன.
முக்கியமாக, கணக்கில் வராத ரூ.100 கோடி பணம், 120 கிலோ தங்க நகைகள், தங்கக் கட்டிகள் வியாழக்கிழமை இரவு வரை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். ரூ.100 கோடி பணத்தில் ரூ.10 கோடி மட்டுமே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
மணல் மோசடி என புகார்: வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-
தமிழக அரசியலில் அதிகார மையங்களான 2 பேருக்கு சேகர் ரெட்டி பினாமியாகச் செயல்பட்டிருக்கிறார். சேகர் ரெட்டியின் அனைத்து விதிமீறல்களுக்கும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர். சேகர் ரெட்டி தமிழக அரசு நடத்தும் குவாரிகளில் அள்ளப்படும் மணலை அரசு நிர்ணயித்த குறைந்த விலைக்கு வாங்குவதுபோல முடக்கி வைத்துக் கொண்டு, அந்த மணலை அதிக விலைக்கு கட்டுமான நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்றுள்ளார்.
இதற்கு அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட எந்த வரியையும் செலுத்தாமலேயே சேகர் ரெட்டி விற்றுள்ளார். அதேபோல சில இடங்களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் குறைவான அளவு மணலை, அதிக விலைக்கும் விற்றுள்ளார்.
இவ்வாறு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.100 கோடி வரை பணம் ஈட்டியிருப்பதை வருமான வரித்துறை புலனாய்வு விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில் பெரும்பகுதி சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி வீடுகள், அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததும், சேகர் ரெட்டி தான் சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக தன்னிடம் மணல் வாங்கும் அனைவரிடமும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டே தர வேண்டும் என கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை வழங்கியோருக்கு, மணலை அவர் விற்கவில்லை என கூறப்படுகிறது.
வியாழக்கிழமை காலை தொடங்கிய சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. அதிகமான பணம்,தங்கநகை,ஆவணங்கள் பிடிபடுவதால் சோதனை முடிவடைவதற்கு இரு நாள்கள் ஆகும் என வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அரசு அதிகாரி சிக்குகிறார்: அதேவேளையில் இந்த வழக்கில் சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை, அரசியல்வாதிகளிடமும், ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி வீட்டுக்கு "சீல்'




காட்பாடி காந்தி நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக அருகருகே உள்ள 2 வீடுகளில் வியாழக்கிழமை சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாததால் வீட்டை பூட்டி "சீல்' வைத்தனர்.
வேலூர் வருமான வரித் துறை துணை ஆணையர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சோதனைக்காக வியாழக்கிழமை பிற்பகலில் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அந்த வீட்டின் காவலாளியிடம் சாவியைப் பெற்று, மாலையில் வீடு திறக்கப்பட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்து வீட்டைப் பூட்டி "சீல்' வைத்தனர். இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வருமான வரித் துறை சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளர்கள் இருந்தால் தான் சோதனை நடத்த முடியும். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பூட்டி "சீல்' வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

வருமான வரித்துறையின் மிகப் பெரிய வேட்டை
தமிழகத்தில் அண்மையில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், இந்தச் சோதனையிலேயே மிக பெரியளவில் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், ஹவாலா பணம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வரி செலுத்தாமலும்,கணக்கு காட்டாமலும் இருக்கும் பணத்தையும், தங்கம் உள்ளிட்ட நகைகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். சொத்து ஆவணங்களையும் அந்தத் துறையினர் கைப்பற்றுகின்றனர்.
இவ்வாறு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில், இந்தச் சோதனையிலேயே அதிகப்படியான பணமும்,தங்கநகையும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிக்கின்றனர்.
இன்னும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சோதனையின் முடிவில்தான், கணக்கு காட்டப்படாமல் இருக்கும் பணம், தங்க நகைகள், தங்கக் கட்டி ஆகியவற்றின் முழு விவரம் தெரியவரும் அந்தத் துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

செல்லிடப்பேசியில் சிக்கினார்...!
செல்லிடப்பேசி பேச்சு மூலமே மணல் முறைகேடு குறித்த தகவல்களை வருமான வரித்துறையினர் சேகரித்து இருக்கின்றனர்.
சேகர் ரெட்டி குறித்து 6 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி குறித்தான தகவல்களை ரகசியமாக சேகரித்தனர்.
மேலும் அவரது செல்லிடப்பேசி பேச்சுகளை வருமான வரித்துறையினர் ரகசியமாக ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பிரபல அரசியல்வாதியின் மகனும் சேகர் ரெட்டியிடம் தினமும் செல்லிடப்பேசி மூலம் பேசியிருக்கின்றனர்.
மேலும், மணல் முறைகேட்டில் கிடைக்கும் பணம், அதை பதுக்குவது, பங்கு போடுவது என பலவாறு அவர்கள் பேசிய உரையாடல்களை கேட்டு வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே மிகவும் செல்வாக்கான நபராக திகழ்ந்த சேகர் வீட்டிலும், அவரது கூட்டாளி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தச் சென்றிருக்கின்றனர்.

NEWS TODAY 14.06.2026