Tuesday, January 24, 2017

'இப்படியொரு அவமானத்தைப் பார்த்ததில்லை!' - மெரினா வன்முறைக்கு விதைபோட்டாரா அமைச்சர்?


சென்னை, மெரினா கடற்கரையில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் போலீஸ் நடத்திய அராஜகத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர் மாணவர்கள். ‘அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சருக்கு சொந்த ஊரில் நேர்ந்த அவமானத்தின் காரணமாகவே, போலீஸாரால் உச்சகட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 'இதுவே நிரந்தரத் தீர்வுதான்' என ஆளும்கட்சி தரப்பில் பேசி வருகின்றனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்டோர் நேற்று மாணவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை முதலே மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.



"மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். தடியடி, வன்முறை என ஆயுதங்களைப் பிரயோகித்தும் பலன் இல்லாததால், 'யார் வந்து பேசினால், மாணவர்கள் கேட்பார்கள்' என ஆலோசித்து, அதற்கேற்ப தமிழ் உணர்வாளர்களை கடற்கரைக்கு வரவழைத்தனர். அதேநேரம், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் போலீஸார் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். பெண்கள், இளைஞர்கள் என ஒருவரும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இப்படியொரு தாக்குதலின் பின்னணியில் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர்" என அதிர்ச்சியோடு விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

"ஜல்லிக்கட்டு தடையைப் போலவே, ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வண்டியில் மாடுகளைப் பூட்டிக் கொண்டு நடத்தப்படும் ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் வெகுபிரசித்தம். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்காகத்தான் மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. வரலாறு காணாத மெரினா போராட்டத்தால், அதிர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லி சென்று ஒருநாள் தங்கியிருந்து அனுமதியைப் பெற்று வந்தார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டைத் திறந்து வைக்க மகிழ்ச்சியோடு பயணமானார் ஓ.பி.எஸ். மாவட்ட அமைச்சர்களும் தங்கள் ஊரில் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஆர்வத்துடன் கிளம்பினர். 'வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துல்லிக் குதித்து பாய்ந்தோடும்' என பேட்டியளித்த முதல்வரை, கிராமத்திற்குள்ளேயே பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர் அமைச்சர்கள் சிலர். சேலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டார். இந்நிலையில், ரேக்ளா பந்தயத்தைத் தொடங்கி வைக்க சில அமைச்சர்கள் கிளம்பினர். 'காலையில் ஒன்பது மணிக்கு ரேக்ளா பந்தயங்கள் தொடங்கும்' என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.



ஆனால், 11 மணி கடந்தும் போட்டிகளை நடத்த முடியவில்லை. காரணம். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதுதான். சொந்த ஊருக்குள்ளேயே தனக்கு எதிராகப் போராட்டம் நடந்ததை அமைச்சரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை முதலமைச்சரிடம் பேசிய அந்த அமைச்சர், 'இத்தனை வருஷமா எம்.எல்.ஏவாக இருக்கிறேன். என்னை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசியதில்லை. என்னையே இரண்டு மணி நேரம் சிறைவைத்துவிட்டார்கள். தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்தார்கள்.

அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? மாவட்டத்திற்குள் வலுவாக இருப்பதால்தான், இவ்வளவு வெற்றிகளை வாங்கித் தர முடிந்தது. இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கொந்தளிப்புடன் கேட்டார். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர் அலுவலக அதிகாரி, 'மினிமம் ஃபோர்ஸ் யூஸ் பண்ணுங்க. தேவையற்ற கலவரத்திற்குக் காரணமாக இருந்துவிட வேண்டாம்' என அறிவுறுத்தினாராம். இதையடுத்து, மெரினாவில் நெருக்கடியைக் கொடுத்த காவல்துறை, மாவட்டங்களின் பல பகுதிகளில் தடியடி பிரயோகத்தை அரங்கேற்றியது. ரேக்ளா பந்தயத்தால் அவமானமடைந்த அமைச்சர் ஊரிலும், பெரும் தாக்குதல் நடந்தது. போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது" என்றார் விரிவாக.

"தொடக்கத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை மென்மையான போக்கிலேயே கையாண்டார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். மெரினாவில் கூட்டத்தைக் கூட அனுமதித்து, கடைசியாக மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் போராடி பெற்றது போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசு இறங்கியது. 'ஆந்திர முதல்வரிடம் 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது; ஜல்லிக்கட்டுக்காக போராடி அவசரச் சட்டம் கொண்டு வந்தது' என ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முயற்சித்தார் முதலமைச்சர். ஆனால், போராட்டத்தை முடித்து வைக்க கையாண்ட விதமே விமர்சனங்களை உருவாக்கிவிட்டது. இது மாநில அரசின் உளவுத்துறைக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகைக்காக மெரினா கூட்டத்தைக் கலைத்தாலும், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவசரச் சட்டத்தால் நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால், மாணவர்கள் மீண்டும் வீதிகளில் அமர்வார்கள். நேற்று திருவல்லிக்கேணி வீதிகளில் போலீஸார் நடத்திய கோரத் தாண்டவத்தை மாணவர்கள் மறந்துவிடவில்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

'அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே, மாணவர்கள் போராட்டத்தின் நகர்வு தெரியவரும்' என்கின்றனர் போராட்டக் குழுவினர்.

போலீஸார் விரட்டியடித்த பின்னரும் மெரினாவில் உறுதியுடன் இருக்கும் இளைஞர்கள் சொல்வது என்ன?



மெரினா கடற்கரை விவேகானந்தர் நினைவு இல்லம் அருகில் 7 நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்த இளைஞர்களை 23 -ம் தேதியான நேற்று, காலை 7.30 மணிக்கு போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் வெளியேற்றும்போது, போலீஸாரின் சமரசத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் தங்கியிருந்து போராடி வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சந்தித்தோம்.

கடற்கரையில் போராடிக்கொண்டிருக்கும் வேலூர் கணேஷ் பேசும்போது, ‘அமைதியாக சென்று கொண்டிருந்த மெரினா போராட்டத்தைப் போலீஸார் திசைதிருப்பி விட்டு விட்டனர். கலைந்துபோக...சிறிது நேரம் கேட்டோம். அதற்குள் இளைஞர்களை விரட்டி அடித்தனர். ஆண்களுக்கு அடிபட்டதைப் பற்றிகூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், பெண்களிடம் சிறிதும் இரக்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக போலீஸார் நடந்து கொண்டார்கள். ஆண் போலீசார் நடந்து கொண்ட அத்துமீறல்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இப்போதுதான் பெண்கள் போராட்டக்களத்துக்கு வருகிறார்கள்.

அவர்களிடம் இப்படியா? நடந்து கொள்வது. ஆண்கள் என்றால் எங்கே அடிபட்டிருக்கிறது என்று காட்டி நியாயம் கேட்க முடியும். ஆனால் பெண்களால் அப்படி முடியுமா? திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை நேரில் சென்று பாருங்கள். அப்போது தெரியும் அவர்கள் படும் வேதனைகள். ஜல்லிக்கட்டுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்களுக்குத் தேவையான உணவுகளை, இங்குள்ள மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். மீனவ மக்களின் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தப்போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று உறுதியாக சொன்னார்.



அக்கூட்டத்தில் ஒருவராக இருந்த டாக்டர் நந்தகுமார் நம்மிடம் பேசும்போது, ‘காலையில் இருந்து எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இங்கு இருந்தவாறே எங்களது போராட்டத்தை தொடர்கிறோம். எங்களது முக்கிய கோரிக்கையான, காளைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து வெளியேற மாட்டோம்’’ என்கிறார் முனைப்புடன். போராட்டகளத்தில் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘‘ஜல்லிகட்டுக்காக இங்கே இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கை அது ஒன்றுமட்டும்தான். அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக எங்களுக்கான அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் இவ்விடமே இருந்து போராடி வருகிறோம். வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்’’ என்றார் உணர்வுபூர்வமாக.



ஜான் என்பவர் பேசுகையில் ‘‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இங்கு இருந்து வெளியேவும் போகமாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 9 -வது அட்டவணையில் ஜல்லிக்கட்க்ச் சட்டத்தைச் சேர்க்க வேண்டும். ஏனெனில், நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பதுதான் ஒன்பதாவது அட்டவணையாகும். தமிழ்நாட்டில் 69 சதவிகிதம், இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் 9-வது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளதால்தான், நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதையே, ஜல்லிகட்டுக்கும் மத்திய அரசு செய்துதரவேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இனி, எந்த காலத்திலும் யாராலும் ஜல்லிக்கட்டுக்கு, தடைவிதிக்க முடியாத நிலை உருவாகும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழங்குகள் அனைத்தையும் அரசு, ரத்து செய்ய வேண்டும். இந்த ஜல்லிக்கட்டுக்காக போராடி, இறந்துபோனவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும். அதேபோல்,போராட்டக்காரர்களின் சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்கப்படவேண்டும். இதை உடனே முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிக்க வேண்டும். அடுத்த நிமிடமே இந்த போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்து, இவ்விடத்தில் இருந்து கொண்டாடிவிட்டு கிளம்பிவிடுவோம்’’ என்று சொன்னார்.

போலீஸ் பிளான் என்ன?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெளியேற 24-ம் தேதி மாலை வரை, காலஅவகாசம் புதிதாக கொடுத்துள்ளனர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால், அவர்களை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்றுவது என்று திட்டம் வகுத்துள்ளனர் போலீஸார். இதற்கிடையில், தமிழக காவல் துறையின் கடலோர காவல்படையினர், கடலோரத்தில் இரவும் பகலும் ரோந்து சுற்றி வருகிறார்கள். போலீஸார் தங்களை கண்காணித்து வருகிறார்கள் என்பதையும், அங்கிருக்கும் இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும், ‘தமிழன்டா’ என்ற கோஷம் மேலோங்கி இருக்கிறது.

அந்த தமிழ் உணர்வுதான், அனைவரையும் அங்கு, அவர்களை உட்காரச் செய்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

எங்க காலத்துல நீங்க இல்லாமப் போயிட்டீங்களே கண்ணுங்களா..' - மெரினா களத்தில் பாட்டியின் பெருமிதம்!

பாட்டி

ஜல்லிக்கட்டு போராட்டக் களமான சென்னையில் தனது வயதையும் பொருட்படுத்தாமல் போராட்டக்களத்தில் வந்து அமர்ந்திருந்த எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியிடம் பேசினோம்.

''என்னோட இளம் வயசுல பல பெரிய பெரிய அரசியல் ஜாம்பவான்கள் நடத்தின போராட்டத்தை எல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, இப்படி ஒரு புரட்சிகரமான போராட்டத்தை என்னோட வாழ்நாளில் பார்த்தது இல்ல. எவ்வளவு ஒத்துமையா, அசம்பாவிதம் இல்லாம போராட்டம் நடத்தினாங்க இந்த பசங்க. அங்கங்க மைக்கப் புடிச்சு எவ்வளவு அருமையாப் பேசுதுங்க. நமக்கெல்லாம் கை,கால் நடுங்கும். ஆனா இந்த புள்ளைங்க பேசப் பேச கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு ராசாத்தி. அத்தனைப் புள்ளைங்களும் நல்லா இருக்கணும்.



மனுஷனோட வாழ்க்கையில செய்யிற நல்ல விஷயம் என்ன தெரியுமா, வயிரை நிறைய வைக்கிறதுதான். வயித்துக்கு வஞ்சனை இல்லாம எல்லாருக்கும் சாப்பாடு போட்டு, தண்ணிக் கொடுத்து, உதவிக்கு ஓடி வந்து எப்படி பாத்துக்கிறாங்க தெரியுமா. எனக்கு வீடு பக்கத்துலதான். இருந்தாலும் அப்பப்போ பீச்சுப் பக்கம் வருவேன். ஆனா, இந்த போராட்டம் நடக்க ஆரம்பிச்சதுல இருந்து தெனமும் வந்துட்டுப் போறேன்.' என்றவரின் பைகளில் நிறைய சாப்பாட்டுப் பொட்டலங்கள் இருந்தன. அது குறித்து கேட்டதற்கு,

'இது எனக்கு இல்லம்மா.. எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற நடக்கமுடியாத, உடம்பு சரியில்லாம இருக்கிற பல பேருக்கு கொடுக்கப் போறேன். இந்த பசங்களால நாலு நாளா நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்க. என்னைய கையெடுத்து கும்பிடுறாங்க. ஆனா, நான் சொன்னேன், நன்றி சொல்லணும்னு நம்ம பேரன்,பேத்திகளுக்கு சொல்லுங்கனு. நீங்க எல்லாருமா சேர்ந்து இந்த பீச் ஓரமாபடுத்திருந்த பல ஏழைகளோட, இல்லாதவங்களோட வயித்த நிரப்பியிருக்கீங்க கண்ணுங்களா..நீங்க நல்லா இருக்கணும். ஆனா, ஒன்னு நீங்க பேசும் போது யாரையும் கெட்ட வார்த்தகள்ள திட்டாதீங்க. நீங்க எல்லாம் நல்லாப் படிச்சவங்க. பல விஷயம் தெரிஞ்சவங்க. உங்க வாயில சரஸ்வதி குடியிருக்கா.. அந்த வாயால கெட்ட வார்த்தைகளப் பேசாதீங்க. என்ன தான் இருந்தாலும் நீங்க திட்டறவங்க உங்களைவிட வயசுல பெரியவங்க இல்லியா. ஆனாலும், உங்க அத்தனை பேரோட பேச்சையும் நான் கவனமா கேட்டுட்டேன். எங்க காலத்துல நீங்க இல்ல. உங்க காலத்துல நாங்க இருக்கோம்ங்கிற பெருமை போதும்டா கண்ணுங்களா.' என கண்கள் கலங்கினார். கடைசி வரை தன் பெயரை சொல்லவே இல்லை பாட்டிம்மா.

லத்தியைச் சுழற்றாமல்... கடுமை காட்டாமல்... இறுதிவரை மாணவர்களோடு இருந்த திருச்சி போலீஸ்!


ஒரு வாரகாலம் உறுதியாகவும், கட்டுப்பாடுடனும் நடந்த மாணவர்கள் போராட்டம், இறுதிநாளன்று பெரும் வன்முறை நடந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை என தமிழகம் முழுவதும் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கல்வீசியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீஸ் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீஸ் கடுமை காட்டியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்க... தமிழகத்தில் பெரியளவில் போராட்டம் நடந்த திருச்சியில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது போராட்டம்.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை, திருவெறும்பூர், துறையூர், மணப்பாறை எனப் பல இடங்களில் போராட்டம் நடந்தது. குறிப்பாக திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே நடந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். கடந்த 21-ம் தேதி திருச்சியில் நாள் முழுவதும் கொட்டி தீர்த்த மழையிலும்,கலைந்து செல்லாமல் இரவு பகலாக போராடினார்கள். அந்தளவுக்குப் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர்.



கடந்த 22-ம் தேதி இரவு முதலே தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டதை போலவே திருச்சியில் குவிக்கப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்வரை ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்துவிடக்கூடாது என்பதில் திருச்சி போலீஸார் உஷாராக இருந்தனர். அதனால் பொழுது விடியவிடிய போராடிய மாணவர்களிடம் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும், சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து அறிவிப்பு வெளியிடும்வரை அமர்ந்திருக்கிறோம் என அவகாசம் கேட்டதோடு, 5அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். ஆனால் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் வாயை மூடி சாலையோரம் நின்று எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இன்னொரு குழு, திருச்சி நீதிமன்றத்திற்குள் சென்று போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு கொடுப்பதாக தகவல் பரவுகிறது. எனவே, காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும்வரை போராட்டம் தொடரும் என நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நின்றார்கள். போலீஸ் குவிக்கப்பட்டாலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திவிடகூடாது என்பதில் உறுதியாக இருந்தார் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனன். யார் மீது வழக்குப்பதியப்படாது என்பதை உறுதியாகச் சொல்லி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்ல ஏற்பாடு செய்தார் துணை ஆணையர் மயில்வாகனன்.



இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “தமிழகம் முழுக்க போலீஸார், மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்ததோடு, தடியடி நடத்தினார்கள். ஆனால் திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன், ஆரம்பம் முதலே எங்களுடனே இருந்தார். நாள் முழுவதும் கொட்டி தீர்த்த மழையிலும் அவரும் நனைந்தபடி எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தார். சுமார் 10லட்சம் பேர் வரை எங்கள் போராட்டத்தில் வந்து கலந்துகொண்டு சென்றனர்.

ஆனால் ஒரு இடத்திலும் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக மிக நேர்த்தியாகப் பணியாற்ற திருச்சி போலீஸாரை பணியாற்ற வைத்தார்கள். போராடிய மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி செய்தார். காவல்துறை மெரினாவில் தாக்கியதாக வீடியோ வைரலானபோது, அதுபோலியான வீடியோ என எங்களுக்கு விளக்கியதோடு, காவல்துறை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் பயப்படவேண்டாம். போராட்டம் திசை மாறிவிடாமல் ஜாக்கிரதையாக இருங்கள் என அன்பாக எச்சரித்தார்.

இறுதி நாளில் நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யமாட்டோம் என முதன்முதலில் மாணவர்கள் மத்தியில் உறுதியளித்தார். இவரின் இந்த அணுகுமுறை எங்களுக்கு மிக பிடித்திருந்தது. சென்னை மெரினாவிலும் மதுரை அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மாணவர்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும்போது கூட எங்களிடம் சரியாக நடந்து கொண்டார். அதன்விளைவாகதான் நாங்கள் போராட்டத்தை எந்தவித பிரச்னையும் இல்லாமல் போராட்டத்தை முடித்தோம் இதுபோன்ற அதிகாரிகள் சென்னையிலும் மதுரையிலும் இருந்திருந்தால் கலவரமே வந்திருக்காது” என்றார்கள்.

மாணவர்களிடம் லத்தியை சுழற்றியவர்கள், இப்படி அன்பாக பேசி புரிய வைத்திருக்கலாம். திருச்சியில் போலீஸார் இதைத்தான் செய்தார்கள். சென்னை, கோவை, மதுரை பகுதியில் இதை செய்யாதது தான் இத்தனை பிரச்னைகளுக்கு காரணம்.

- சி.ய.ஆனந்தகுமார்,

வெற்றிதான், ஆனால்...!

By ஆசிரியர்  |   Published on : 24th January 2017 01:32 AM  | 
தமிழக சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை விலக்கப்பட்டுவிட்டது. காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளை அகற்றப்பட்டு, தமிழகத்தில் இனிமேல் தடையில்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் என்று எடுக்கப்பட்ட இந்த முடிவை எப்போதோ எடுத்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கே தேவை இருந்திருக்காது.
எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் கொதித்தெழுந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்து உலகமே வியந்தது. தமிழுணர்வுடன் இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்களது ஆறு நாள் அறப்போராட்டத்தை எப்படியும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுவிட வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளும், தேசவிரோத சக்திகளும் மறைமுகமாக முயற்சி செய்யாமலில்லை.
தங்களுடைய போராட்டத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுவிடலாகாது என்பதில் இளைஞர் கூட்டம் கவனமாகவே இருந்தது. அப்படியும்கூட, கடைசி இரண்டு நாட்களில் நடந்திருக்கும் நிகழ்வுகள் மாணவர்களின், இளைய தலைமுறையின் தூய்மையான எண்ணத்துக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் நடந்ததற்கு, இந்தப் போராட்டத்தில் திட்டமிட்டு ஊடுருவிவிட்ட அரசியல் கட்சிகளும், தேசவிரோத சக்திகளும்தான் காரணம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு, தேசியக்கொடி எரிக்கப்பட்டபோதே, புல்லுருவிகள் நுழைந்துவிட்டிருப்பதும், மாணவர் எழுச்சியை மோடி அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற முற்பட்டிருப்பதும் தெரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஆளும் கட்சியில் பிளவு ஏற்படும், அதை பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என்று நினைத்து ஏமாந்தவர்கள், இந்தப் போராட்டத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதன் மூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சட்டப்பேரவையில் மசோதாவும் நிறைவேற்றப்படும் சூழலில், போராட்டம் கைவிடப்பட்டிருப்பதுதான் நியாயம். கோரிக்கை வெற்றியடைந்த பிறகும், ஏதாவது காரணம் கூறி அதை முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பதற்கு முயற்சித்ததன் விளைவுதான் சென்னையில் நடந்தேறி இருக்கும் வன்முறை, கலவரங்கள். இதில் ஈடுபட்டவர்கள் எவருமே மாணவர்களோ, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களோ அல்ல என்பதை ஊடகக் காட்சிகள் தெளிவுபடுத்தின.
அப்படியானால் அவர்கள் யார்? அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள் என்றால், வன்முறை திட்டமிடப்பட்டிருந்தது என்றுதானே அர்த்தம்? காஷ்மீரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசும் அதே போராட்டமுறையை இங்கே நிகழ்த்த முற்பட்டிருப்பவர்களின் பின்னணி என்ன? சென்னையில் ஒவ்வொரு தெரு முனையிலும், போராட்டத்துடன் தொடர்பே இல்லாதவர்கள் அணிதிரட்டப்பட்டு கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டார்களே, அவர்களைத் தூண்டிவிட்டது யார்? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
மாணவர்களின் எழுச்சியால்தான் ஜல்லிக்கட்டு பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது என்பது உண்மை. யாரும் மறுக்க முடியாது. ஆனால், அது அறப்போராட்டமாகவே இருந்தாலும்கூட இப்படிப்பட்ட போராட்டங்கள் சரிதானா என்றால் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களாட்சியில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், வழிமுறைகளும் இருக்கும்போது, பிரச்னைகளுக்குத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதுதான் தீர்வாக இருக்கும் என்றால், சட்டத்தின் ஆட்சி என்பதே கேலிக்கூத்தாகி விடும்.
ஒவ்வொரு பிரச்னைக்கும் சமூக வலைதளங்களின் மூலம் ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிப் போராடத் தொடங்கிவிட்டால், பிறகு அரசு எதற்கு, ஆட்சி எதற்கு, நிர்வாகம்தான் எப்படி நடக்கும் என்பதை அரசியல்கட்சித் தலைவர்களும், ஊடகத்தினரும், உணர்ச்சியால் மட்டுமே வழிநடத்தப்படும் இளைஞர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது பாரம்பரிய மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதை ஜல்லிக்கட்டால் மட்டும் உறுதிப்படுத்திவிட முடியாது. நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லாமல் இருந்தால்தானே அவற்றைப் பாதுகாக்க முடியும். குறைந்தபட்சம், நாட்டு மாடுகளுக்கு மட்டுமாகவாவது பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் ஜல்லிக்கட்டுக்குக் காளைகள் இருக்காது என்பதை மறந்துவிடக் கூடாது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து "நான் தமிழன்டா!', "நான் தமிழச்சிடா!' போன்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இதே உணர்வுடன் அவர்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வி கற்க அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் "மம்மி', "டாடி' என்று அழைக்கும் கலாசாரத்தைக் கைவிட வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மட்டுமே. அந்த அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு தமிழைக் கைவிட்டுக் கொண்டிருக்கிறோமே, அதுதான் மிகப்பெரிய சோகம். அதை உணர வேண்டும்.
போராட்டத்தை முதல் ஐந்து நாட்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் வழிநடத்தியவர்களுக்கு தமிழகம் தலைவணங்கி நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், இந்தப் போராட்டம் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி, எதற்கெடுத்தாலும் தெருவில் இறங்கிப் போராடுவது என்கிற நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது. அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகம் வன்முறைக் களமாகிவிடக் கூடாது!

நேரம் என்னும் முதலீடு

By இரா. கதிரவன்  |   Published on : 24th January 2017 01:30 AM  |
ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட ரயில் பத்து நிமிடம் தாமதமானதற்கு ஒரு உயர் அதிகாரி அரசின் சார்பாக மன்னிப்பு கோரியிருந்தார் என்ற செய்தி அண்மையில் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. எந்த காரியத்தையும் தாமதமின்றி - குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஜப்பானியர்களைப் பற்றிய மதிப்பினை உயர்த்தும் நிகழ்வு இது.
நம் நாட்டை எடுத்துக்கொள்வோம். ஒரு அரசுத்துறை நிகழ்ச்சிக்கு - மந்திரியின் வருகைக்காக மணிக்கணக்கில் பள்ளி மாணவர்கள் காக்க வைக்கப்படுவதும், பொதுக்கூட்டங்களுக்கு பேச்சாளர்களுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பதும் வழக்கமான ஒன்று. நம்மில் பெரும்பாலானோர் நேரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை.
தொழிற்கூடங்களில், உற்பத்தியைப் பெருக்க உற்பத்தி சுழற்சி நேரத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவர். நேரம் சிறிது வீணடிக்கப்படாது இருக்க எல்லா முனைப்பும் காட்டப்படும். இது தொழிற் கூடங்களுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனிதர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமான ஒரு விஷயமாகும்.
உதாரணத்துக்கு ஒரு நிகழ்வினை பார்ப்போம்:
ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் உட்கார்ந்து உபயோகமற்ற தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் அவர்கள் ஒன்றாக, ஒரே அறையில் இருந்தும், அரிய நேரத்தை வீணடித்திருக்கிறார்கள் என்பது கண்கூடு.
ஆனால், இன்னொரு குடும்பத்தில் உறுப்பினர்கள், ஒரு சிறு வட்டமாக உட்கார்ந்து ஒரு சில மணித்துளிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் குடும்பத்தின் பழைய விஷயங்கள் - தாண்டி வந்த சிக்கல்கள் இடர்ப்பாடுகள் - அப்போது உதவியவர்கள் - எதிர்காலத் திட்டங்கள் - குடும்ப உறுப்பினர்களின் திறமை - பலம் பலவீனங்கள் - பிள்ளைகளின் சாதுர்யங்கள் - போன்ற விஷயங்கள் பேசப்படுகின்றன.
அவர்களுக்கிடையில் புரிதல் அதிகமாவதும் - நெருக்கம் கூடுவதும் புரியவரும். நேரமும் வெகு உபயோகமாக செலவிடப்படுவதைக் காணலாம்.
கவனியுங்கள் - இரண்டு குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம், அவரவர் குடும்பத்தினரோடு ஒன்றாகவே இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் அந்த நேரத்தை செலவு செய்வது, எந்த விதமான பலனை தருகிறது? இதில் எவர் தமது நேரத்தை செம்மையாகப் பயன்படுத்துகின்றனர்?
ஒரு குடும்பத்தில், கணவன் - மனைவி இருவரும் தினசரி சுமார் பனிரெண்டு மணி நேரம் சேர்ந்திருந்தாலும், அவர்களுக்குள் பரஸ்பர அக்கறையும் புரிதலும் இருக்காது. அக்கறையோடு செலவு செய்யப்படாத பனிரெண்டு மணி நேரத்தை விட, அன்போடும் - புரிதலோடும் செலவு செய்யப்படும் நான்கு மணி நேரம் விலை மதிப்பற்றது.
சிலர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வர், ஆனால் பலன் இருக்காது. வேறு சிலர், குறைந்த நேரம், அக்கறையோடு - கவனப் பிசகின்றி, அதே வேலையைக் குறுகிய நேரத்தில் செய்து முடிப்பர்.
இத்தகைய பலனளிக்கக்கூடிய - செம்மையாக செலவிடப்படும் நேரம் ஆங்கிலத்தில் ணன்ஹப்ண்ற்ஹ் பண்ம்ங் - என்று சொல்லப்படும் மனிதன், தனக்குப் பணத்தை - பொருளை ஈட்டுகின்றான். சேமிக்கின்றான், முதலீடாக மாற்றுகிறான் நேரம் என்பதுகூட அந்த வகையில் சேமிக்கப்பட்ட வேண்டிய - சிக்கனம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஏனெனில் காலத்தை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், அதனை மலினப்படுத்துவதோ அல்லது அதற்கு மதிப்புக்கு கூட்டுவதோ ஒவ்வொரு தனிமனிதன் கையிலும் இருக்கிறது. சற்று சிந்தித்தால், நேரம் என்பது முதலீடாக மாற்றப்பட வேண்டிய ஒன்று என்பது தெளிவாகும்.
நேரம் எப்படி முதலீடு செய்யும் பொருளாக இருக்க முடியும்.
ஒரு பேராசிரியர், தனது கல்லூரி நேரம் தவிர்த்து, மீதமுள்ள நேரத்தில், சுமார் இரண்டு மணி நேரம், நூல் நிலையத்தில் புத்தகங்களை படிப்பது - அல்லது ஆரய்ச்சிக் கட்டுரைகளை படிப்பது என்ற பழக்கத்தில் இருக்கிறார்.
ஒரு பொறியாளர், தனது வேலை நேரம் போக ஒரு குறிப்பிட்ட நேரம், அவரதுதுறையில் நிகழும் சமீபத்திய வளர்ச்சிகளைப் பற்றியும் - கண்டுபிடிப்புகள் - மாற்றங்கள் பற்றியும் கவனம் செலுத்தி - விற்பன்னர் ஆகிறார்.
இவர்களது உழைப்பின் பலன் - தங்களது நேரத்தை நல்வழியில் முதலீடு செய்ததின் பலன் உடனடியாக தெரியாமல்கூட இருக்கக் கூடும். ஆனால், இப்பழக்கம் தொடரும் பொழுது, சுமார், பத்து அல்லது இருபது வருடங்கள் கழித்து, அவர்கள், பிறரை விடவும் நல்ல மதிப்பான நிலையையும் - அவர்களது துறையில் மிகவும் நாடப் பட்டவர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது.
அதே சமயம், ஒவ்வொருவரும், தனது நேரத்தை, பணம் சேர்ப்பதனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. குறிப்பாக, குடும்பத்தினரின் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் விலையாகக் கொடுத்து பொருள் சேர்க்க வேண்டும் என்பது நிச்சயமாக தேவை இல்லை.
ஒரு சிலர், பணத்தைக்கூட எண்ணாது செலவு செய்வர், ஆனால் நேரத்தினை, ஒரு முறைக்கு பலமுறை எண்ணி எண்ணி, செலவு செய்வர். வேறு சிலர், ஏதோ பொழுதை ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்று அவலம் நிறைந்தக் குரலில் புலம்பி, கிடைத்தற்கரிய நேரத்தை வீணடிப்பர்.
இவர்களில் வயதில் மூத்தவர்கள் இலக்கியம் படிக்கத் தொடங்கலாம் - இசை கேட்கலாம். இளைஞர்கள் ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, இசைக் கருவிகள் - வாய்ப்பட்டு - வேற்று மொழி பயிற்சி - சிறு சிறு கருவிகளை செப்பனிடுவது - தோட்டவேலை - எனவும் ஈடுபடலாம். இளைஞர் - முதியோர் என எல்லாத்தரப்பினரும்,
சமூகநல அமைப்புகளில் பங்கு கொள்ளலாம். இவை, அனைவருக்கும் நன்மையையும் நிம்மதியையும் சேர்க்கும்.

நினைத்தது நடக்கவில்லை!

By என். முருகன்  |   Published on : 24th January 2017 01:31 AM  
murugan
நம் நாட்டில் அவ்வப்போது பல்வேறு பிரச்னைகள் உருவாகி மக்களை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. அதனால் பலவிதமான விவாதங்களும் எழுகின்றன. அவற்றுள் தலையானதாக நமது ரூபாய் நோட்டுகளின் பிரச்னை உருவாகியுள்ளது. நமது அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரூபாய் நோட்டுகள் பற்றிய முழுவிவரங்களும் தெரிந்திருக்கவில்லை என பல பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளை உபயோகிக்கும் நாடு இந்தியா. சீனா நம்மைவிட அதிகளவில் ரூபாய் நோட்டுகளை உபயோகிக்கின்றது. மற்ற எல்லா நாடுகளும் நம்மைவிட குறைவான அளவில்தான் அவற்றை உபயோகிக்கின்றன.
நம் நாட்டில் முதன்முதலாக 1926-ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில்தான் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அரசு அச்சகம் நிறுவப்பட்டது. அங்கே முதன்முதலாக தயாரிக்கப்பட்டது 5 ரூபாய் நோட்டுகளே.
2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் 2000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மைசூரு நகரில் அமைந்துள்ள அரசின் அச்சகம் மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டது. அங்கே 12,000 டன் எடையுள்ள காகித நோட்டுகள் அச்சடிக்க முடியும். அதாவது, ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க முடியும். அதன் மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாய்.
நமது நாடு ரூபாய் நோட்டுகளை தயாரிக்க ஒரு ஆண்டிற்கு 22,000 டன் காகிதங்களை உபயோகிக்கும். பணம் உருவாக்க ஆகும் செலவில் 40 சதவீதம் இந்த செலவே. சமீபகாலம் வரையில் நமது ரூபாய் நோட்டுகளின் தரத்தை காப்பாற்ற நாம் ஜெர்மனியிலும் பிரிட்டனிலும் காகிதங்களை இறக்குமதி செய்து வந்தோம்.
நம் நாட்டில் பணம் அச்சிடும் அச்சகங்கள் கர்நாடக மாநிலம் மைசூரு, மேற்கு வங்க மாநிலம் சல்போனி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் தீவாஸ் ஆகிய நான்கு இடங்களில் உள்ளன.
நம் நாட்டின் ரூபாய் நோட்டுகளின் சரித்திரத்தை திரும்பிப் பார்ப்போம். ஆங்கிலேயரின் அரசு, 1862-ஆம் ஆண்டு அவர்கள் நாட்டின் தாமஸ் டிலாரூ என்ற அச்சகத்திலிருந்து முதன்முதலாக பணத்தை அச்சிட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்து புழக்கத்தில் விட்டது.
200 ஆண்டுகளாக இயங்கும் இந்த புகழ்பெற்ற நிறுவனம், இன்றைய நிலையிலும் பல நாட்டின் ரூபாய் நோட்டுகளை தயாரிக்கிறது. டென்மார்க், குவைத் போன்ற நாடுகளுக்கு இந்த நிறுவனம் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க தேவையான சிறப்பான காகிதங்களை விற்பனை செய்கிறது.
நம் நாட்டின் நான்கு பணம் தயாரிக்கும் அச்சகங்கள் 2015-16ஆம் நிதி ஆண்டில் 2,119 கோடியே 50 லட்சம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளன. இந்த ரூபாய் நோட்டுகள் நம் நாட்டின் 19 மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் பாதுகாப்பான பெட்டகங்களில் வைக்கப்படும்.
அவற்றிலிருந்து நாட்டின் எல்லா பகுதிகளிலும் அமைந்துள்ள 4,400 ரிசர்வ் வங்கி பெட்டகங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும். நாணயங்களை வைக்க 3,700 சிறிய பெட்டகங்கள் பல வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ளன.
ஒரு ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் முடிவு. அது மிக ரகசியமான தகவலாக பராமரிக்கப்படும்.
2016 நிதி ஆண்டின் கணக்குப்படி ரிசர்வ் வங்கி நம் நாட்டில் புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2,120 கோடி. இவற்றை அச்சிடுவதற்கான செலவு ரூ.3,421 கோடி. இந்த நடவடிக்கைகள் எல்லாம் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தினால் கண்காணிக்கப்படும்.
இதுபோன்ற அடிப்படை அம்சங்களை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின், நமது பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி, அதிரடியாக ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை கையிலெடுக்கலாம். இதற்கான காரணமாக, கருப்புப் பணம், ஊழல் மற்றும் கள்ள நோட்டுகளின் நீக்கம் ஆகிய மூன்றும் கூறப்பட்டன.
இந்த அறிவிப்பின் காரணமாக பாகிஸ்தானிலுள்ள சில அச்சகங்கள் உடனடியாக மூடப்படும் என மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜு அறிவித்தார். காரணம் அந்த அச்சகங்களின் முழுநேர வேலையே இந்தியாவின் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடித்து தீவிரவாதிகளுக்கும், இந்தியாவிற்குள்ளும் அனுப்புவதுதான்.
இதேவேளையில், இந்த அறிவிப்பினால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். காரணம், மக்களின் கையில் வாங்கும் சக்தியாக இருந்த பணம் செல்லாததாகிப் போனதால் அவர்கள் எந்த செலவையும் செய்ய முடியாது. பணம் அதிகம் வைத்திருந்தவர்கள் முதல் கிராமப்புற ஏழைகள் வரையிலும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி தங்கள் கணக்கில் வைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. அதிக பணம் வைத்திருப்பவர்கள், தாங்கள் இதுபோல் செய்தால், வருமான வரித்துறையின் பிடியில் சிக்கிக்கொள்வோம் எனப் பயந்து இதுபோல் செய்யாமல் இருப்பார்கள். அதனால் இந்தப் பணம் வழக்கிலிருந்து விலகிப்போகும் என அரசு நினைக்கிறது என சிலர் கூறினார்கள்.
வருமான வரித்துறைக்கு தெரிந்தாலும் பரவாயில்லை என இந்த மாதிரி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் பணத்தில் 60 சதவீத வருமான வரியும், அந்த வரியின் மீது 50 சதவீத அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 5,000 கோடி ரூபாயை வங்கியில் செலுத்தி வரியாக 3,000 கோடி ரூபாயையும், அபராதமாக 1,500 கோடி ரூபாயையும் இழந்தபின், தனது கணக்கில் 500 கோடி ரூபாயையும் வரவு வைத்துக்கொண்டாராம். இதுபோல் வேறு எங்கேயும் நடைபெறவில்லை. அரசின் இந்த எதிர்பார்ப்பு தோல்வி அடைந்தது.
கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தோல்வியில் முடியும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம், 500 மற்றும் 1000 ரூபாய் பதுக்கி வைக்க எளிதானவை என்ற கருத்து உண்மையென்றால், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மேலும் எளிதாக பதுக்கப்படும்.
அந்த கருத்து சரிதான் என்பதுபோல தமிழ்நாட்டின் ஊழல்வாதிகளின் கைக்கூலியான ஒருவரிடமிருந்து பல நூறு கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தபோது, பல வங்கிக் கிளைகளில் பினாமிகளின் மூலம் பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பல நூறு கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளன என்ற செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
கருப்புப் பணம் உருவாக காரணமாக இருக்கும் அரசு அதிகாரிகளை கண்காணித்து கருப்புப் பணம் உருவாவதை தடுப்பதுதான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். அதைவிடுத்து, பணத்தையே செல்லாததாக்கி, கருப்புப் பணம் வைத்திருக்கும் சிலரை கட்டுப்படுத்த சாதாரண மக்களை அல்லல்படுத்துவது சரியல்ல என்ற வாதம் மிகவும் பெரிய அளவில் வலம் வருகிறது.
நவீன முறையில், மேலைநாடுகளில் உள்ளதுபோல் ரொக்கப் பணம் இல்லாமல், பற்று அட்டைகள் (டெபிட் கார்ட்) மற்றும் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம் பணப்பரிவர்த்தனையை எல்லா மக்களும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன் வைக்கப்படுகிறது.
இதற்கு உதாரணமாக மேலை நாடான ஸ்காண்டிநேவியா கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓர் ஆய்வாளர், அந்நாட்டின் ஏழை மனிதனின் சராசரி ஆண்டு வருவானம் 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. ஆனால் நமது இந்தியாவில் ஏழையின் சராசரி ஆண்டு வருமானம் 30 ஆயிரம் ரூபாய் எனவும் கூறுகிறார்.
கடைசியாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது எதிர்பார்க்கப்பட்டது நடந்ததா என்பதுதான்.
திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளிடம் உள்ள கள்ளப் பணமும் புழக்கத்தில் இருந்தது எனவும், அதில் பெரிய அளவு பணம் வங்கிகளுக்கு வராமல், முடங்கிப்போகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கணக்கின்படி, வங்கிகளில் 14 லட்சத்து 97 ஆயிரம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டுவிட்டன. மொத்தமாக கடைசி நிலையில் சுமார் 40 ஆயிரம் கோடி அல்லது 50 ஆயிரம் கோடி பழைய ரூபாய்தான் செயலிழந்து போகும் என தற்போது தெரிய வந்திருக்கிறது.
செயலிழந்து போகும் பணம் அரசின் கஜானாவில் அதிக வரவாக இருக்க வேண்டும். அதைவைத்து நிறைய அரசு வங்கிகளின் நஷ்டங்களை சரி செய்யலாம் என அரசு எதிர்பார்த்தது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் இத்திட்டம் வெற்றியடையவில்லை என பல பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். (ஓய்வு).

NEWS TODAY 24.08.2026