Wednesday, November 8, 2017

தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின்
கட்சி பெயர் அறிவிப்பு: கமல்


சென்னை, ''கட்சி ஆரம்பிப்பதற்கு முன், மக்கள் மனநிலையை அறிவதற்காக, தமிழகம் முழுவதும், ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அதன்பின், கட்சியின் பெயர், கொடி குறித்து முடிவெடுப்பேன்,'' என, நடிகர் கமல் தெரிவித்தார்.




நடிகர் கமல், தன், 63வது பிறந்த நாளை,நேற்று கொண்டாடினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோரை, நாட்டை சுற்றிப் பார்த்து, மக்களை புரிந்து கொள்ள, அவர்களது முன்னோடிகள் அறிவுறுத்தினர்.ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெறுவோர், மக்களையும்,மண்ணையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 'பாரத் தர்ஷன்' என்ற பெயரில், நாட்டை சுற்றிப் பார்க்க செல்கின்றனர்.
அதேபோல், அனைத்து தரப்பு மக்கள் குறித்து அறிவதற்காக, நானும் ஜனவரி முதல், மாநிலத்தை சுற்றி வர திட்டமிட்டிருக்கிறேன். பின், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், கட்சி பெயர் குறித்தும் அறிவிப்பேன். அதற்கான ஆயத்தங்களை, இப்போதே துவங்கி விட்டேன். கட்சி குறித்து அறிவிப்பதற்கு முன், சில முன்னேற் பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். மக்களுக்காக இதை செய்வதால், எனக்குப் பின்னும், அது தொடர வேண்டும்.அதனால், அறிஞர்களுடன் கூடி, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளோம். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்து விட்டது; அதை செய்ய துவங்கியிருக்கிறேன். நிதி திரட்டி கட்சி செலவுகளுக்காக, ரசிகர்களிடம் பணம் பெற மாட்டேன்.

ஏழை மக்களிடம் நிதி திரட்டி, கட்சி நடத்துவேன். அது,வெளிப்படையாக இருக்கும்.எவ்வளவு பணம் வந்தது; எப்படி செலவு செய்யப்பட்டது என்பது போன்ற விஷயங்கள் வெளிப்படையாக இருக்கும். என் கட்சியில், யாராவது ஊழல் புகாரில் சிக்கினால், கடுமையாக தண்டிப்பேன்.

இந்து மதம் குறித்து, நான் கூறிய தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவரை, தீவிர ரசிகன் என்கிறேன். அந்த பொருளில் தான், 'தீவிரம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். பயங்கரவாதம் என்பதற்கும், அதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. என் குடும்பத்திலும், இந்துக்கள் உள்ளனர். நான், இந்துக்களின் விரோதி அல்ல. இவ்வாறு கமல் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், 200 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றதால், அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக, காலையில், சென்னை, ஆவடியில் நடந்த நிகழச்சியில், மக்களுக்கு தொண்டு செய்யவே, அரசியலுக்கு வருவதாக, கமல் பேசினார்.இதற்கிடையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கமலஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத் துடன், பல்லாண்டு வாழ விழைகிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.

நில ஆரமிப்பை மீட்க முடிவு!

கமல் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அரசியல் பாடம் கற்க போனதாக அப்போது கூறினார். பின், கம்யூனிச ஆர்வலர்களுடன், சென்னையின் சில பகுதி களை பார்வையிட்டார். அதனால், அவர் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களுடன் கூட்டு சேரக்கூடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று பேசும்போது, 'நான் இடது அல்லது வலது என, எப்பக்கமும் சாராமல், மக்கள் பிரச்னைக்காக பாடுபடுவேன்' என்றார்.

அவரிடம், நம் நிருபர் கேட்டபோது, ''நான் நாத்திகன் அல்ல. கோவில் நில ஆக்கிரமிப்பு களுக்கு எதிராகவும், நான் களம் இறங்க உள்ளேன். அது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளிவரும்,'' என்றார்.

செயலி அறிமுகம்!

''நியாயத்திற்காக குரல் எழுப்புவோரை, ஆங்கிலத்தில் 'விசில் ப்ளோயர்' என்பர். அதேபோல் தங்கள் குறைகள் குறித்து, மக்கள், ஒலி எழுப்புவதற்காக ஜனவரி முதல் maiamwhistle என்ற செயலியை அறிமுகம் செய்யவிருக்கிறேன். அதை உருவாக்கும் பணியில், 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். அதில், அனைவரும் புகார் தெரிவிக்கலாம்,'' என, கமல் தெரிவித்தார்.

'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு


   'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு

மானாமதுரை,சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கடம் தயாரிப்பாளர் மீனாட்சி அம்மாள், 75, நேற்று மாரடைப்பால் காலமானார்.மானாமதுரையில் நான்கு தலைமுறைகளாக கடம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள். கடம் வித்வான்கள் விக்கு விநாயக்ராம், உமாசங்கர், கிரிதர் உடுப்பா, சிவன்யா ராஜகோபால் மற்றும் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இவரிடம் கடம் வாங்கி கச்சேரிகளில் பயன்படுத்தியுள்ளனர். இவருக்கு 'நிர்மல் புரஷ்கார்' விருதை 2014ல் ஜனாதிபதி பிரணாப் வழங்கினார்.
நேற்று அதிகாலை மீனாட்சி அம்மாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடலுக்கு மண்பாண்ட கலைஞர்கள், கடம் வித்வான்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அந்தமான் அருகே புயல் சின்னம்; தமிழக கடலோரத்தில் அச்சம்


அந்தமான்,புயல் சின்னம்,தமிழக,கடலோரத்தில்,அச்சம்,Storm,Weather,புயல்,மழை,வானிலை
வங்க கடலில் அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கூடுதல் மழையை தரும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன்?


கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

நவம்பர் 08, 2017, 03:30 AM
சென்னை

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ந் தேதி செய்தி வெளியீட்டின் மூலம் பல்வேறு காரணிகளை முன்னிட்டு குரூப்-4ல் அடங்கிய பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கான தெரிவுகளை ஒரே தேர்வின் மூலம் தேர்வு செய்வது என்ற முடிவினை வெளியிட்டது.

இது குறித்து கிராம நிர்வாக சங்க மாநில தலைவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து தேர்வாணையம் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

கிராம நிர்வாக அலுவலர், பதவிக்கான வயது வரம்பில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இப்பதவிக்கான குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்கின்ற விதியே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மேலும் குரூப்-4ல் அடங்கியுள்ள பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான வயது மற்றும் இதர தகுதிகளில் மாற்றம் ஏதுமில்லை. போட்டித்தேர்வு மட்டுமே ஒரே தேர்வாக நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒருபங்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளனர். மூன்றில் இருபங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றவர்களாவர். மேலும் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரையில் ஒருமுறை நிரந்தரப்பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் 5 வருடங்கள் அப்பதிவினை பயன்படுத்தி அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இத்தகைய சூழலில் இத்தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதற்கு பெருந்தொகை அரசால் செலவிடப்படுகிறது. ஆகையால் இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்துவதன் மூலம் அரசிற்கு சுமார் 15 கோடி வரை செலவு தவிர்க்கப்படுவதுடன், காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட ஏதுவாகிறது.

பல்வேறு நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பலதரப்பட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வாணையம் ஒரே தேர்வு முறையினை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை மாவட்டத்தில் மழை 10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து


சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 08, 2017, 03:45 AM
சென்னை,

சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, மாதிரி அரையாண்டு தேர்வுகளை வருகிற 11-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 10, 11 மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த மாதிரி அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அரையாண்டு தேர்வுதான் நடக்கும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.எம்.மனோகரன் தெரிவித்தார்.
சென்னை-புறநகர் பகுதிகளை மீண்டும் மிரட்டும் மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை மழை மீண்டும் மிரட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

நவம்பர் 08, 2017, 05:15 AM

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடந்த 2015-ம் ஆண்டை நினைவில் கொண்டு பீதியில் உறைந்து இருக்கின்றனர். அதற்கேற்றாற்போலவே, சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் ஒரு நாள் பெய்த மழையிலேயே குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால் அந்த பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரியன் தலை காட்டியது. பல இடங்களில் குளம்போல் தேங்கி இருந்த மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியது. தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மீண்டும் மிரட்டிய மழை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ராயபுரம், தரமணி, திருவான்மியூர் உள்பட பல இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியதாலும் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் காலையில் இருந்து மழை பெய்ததால் பல இடங்களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை மழையில் நனைந்துவிடாமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு அழைத்து சென்றதை பார்க்க முடிந்தது. அதேபோல், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமத்துடன் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இன்று இடியுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை இந்த தொடர் மழை மிரட்டுகிறது. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கினால் அதை அகற்றுவதற்காக தயார் நிலையில் உள்ளது.
தலையங்கம்
நரேந்திரமோடியின் அரசியல் நாகரிகம்




‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் எப்போதும், பத்திரிகை நடத்துவது என்பது ‘நெருப்பு ஆற்றை நீந்திக்கடப்பது’ என்பார்.

நவம்பர் 08 2017, 03:00 AM

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் எப்போதும், பத்திரிகை நடத்துவது என்பது ‘நெருப்பு ஆற்றை நீந்திக்கடப்பது’ என்பார். அந்த வகையில், பத்திரிகைகள் நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. தினத்தந்தி அத்தகைய நிலைமைகள் அனைத்தையும் தாண்டி 75 ஆண்டுகளை கடந்து பவளவிழா கொண்டாடியது. 17 பதிப்புகளையும், ஒரு கோடிக்கும்மேல் வாசகர்களையும் கொண்ட தினத்தந்தியின் பவளவிழாவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி அழைக்கப்பட்ட நேரத்தில் மிகவும் மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டார். சென்னையில் பெரும் மழைபெய்த நேரத்திலும், பிரதமர் நரேந்திரமோடி, இந்தவிழாவில் கலந்துகொண்டது நிச்சயமாக மிகவும் பெருமைக்குரியதாகும். பிரதமர் நரேந்திரமோடி விழாவில் மிகவும் உற்சாகத்தோடு கலந்துகொண்டார். விழாவில், தன்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்பு பிரதமர், தினத்தந்தி ஆண்டுதோறும் வழங்கும் இலக்கியப்பரிசை ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கும், மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனுக்கும், சைக்கிளில் தினத்தந்தியை வினியோகம் செய்து, இன்று தொழில் அதிபராக உயர்ந்து இருக்கும் வி.ஜி.சந்தோசத்துக்கு சாதனையாளர் விருதும் வழங்கினார். தன் உரையை தொடங்கும்போதே, ‘சென்னை மற்றும் தமிழகத்தின் இதரபகுதிகளில் பெய்த பலத்தமழை மற்றும் வெள்ளத்தினால் தங்களின் அன்பான உறவினர்களை இழந்து கடும் இன்னல்களுக்கு ஆளாகிய குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

‘காலையில் காபி, கையிலே தினத்தந்தி’ என்று எப்போதும் நடைமுறையில் இருக்கும் கூற்றைப்போல, தினத்தந்தியை படிக்க மக்கள் டீக்கடைகளில் மொய்த்ததைக்கூறி, இன்றும் அந்தப்பயணம் தொடர்கிறது. அரசியல் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. தினத்தந்தியின் நடுநிலையான செய்திகளால், சாதாரண கூலி தொழிலாளி முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பிரபலமாகி இன்றும் அந்தபயணம் தொடர்கிறது என்று புகழாரம் சூட்டினார். விழா நிறைவுபெற்றவுடன் பிரதமர் அப்படியே திரும்பிவிடவில்லை. விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் பார்க்கவேண்டும் என்ற உணர்வுடன், மேடையைவிட்டு இறங்கி பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார். அங்கே அனைத்துகட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடன் மகிழ்வுடன் வணக்கங்களை பரிமாறிக்கொண்டார். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல், உடல்நலக்குறைவால் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க அவருடைய வீட்டிற்கே சென்றார். கருணாநிதி வீட்டிற்கு செல்வது அவருடைய அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தில் இல்லை. தி.மு.க., பா.ஜ.க.வின் தோழமை கட்சியும் அல்ல. பா.ஜ.க. அரசை எதிர்த்து, தி.மு.க. இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியோடு தோழமை கொண்டுள்ள கட்சி தலைவர் என்று நினைக்காமல், உடல்நலம் குன்றியிருக்கும் ஒரு மூத்த தலைவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கருணாநிதி வீட்டிற்கு சென்று அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கருணாநிதியும் மிகவும் நெகிழ்ந்து, தான் எழுதிய ‘குறளோவியம்’ நூலின் ஆங்கிலப்பதிப்பும், ‘முரசொலி’ பவளவிழா மலரையும் மோடிக்கு பரிசாக வழங்கினார். ‘மோடியை, அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார். கருணாநிதியிடம், ‘உங்களுக்கு இப்போது ஓய்வுதேவை, என்வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள்’ என்று மோடி அழைத்திருக்கிறார். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவையும் பார்த்தார். பிரதமர் மோடியின் இந்த அரசியல் நாகரிகம் எல்லோரையும் மிகவும் பாராட்டவைத்தது. அரசியலில் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி உள்ளார்ந்த நட்பு, பாசம் என்பது நிச்சயமாக அரசியல் உலகில் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாகும். டெல்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் இத்தகைய உணர்வுடன் பழகுவதைப்பார்த்து, தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் இருந்த இந்த அரசியல் நட்புணர்வு மீண்டும் தழைக்காதா? என்று எல்லோரும் விரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி நல்லதொரு அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டில் விதைத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த விதை தமிழ்நாட்டில் முளைத்து ஆலமரமாக வளரவேண்டும்.

NEWS TODAY 03.07.2026