Saturday, June 2, 2018

நடிகருக்கு முன்ஜாமின் உச்ச நீதிமன்றம் மறுப்பு

Added : ஜூன் 02, 2018 03:10

புதுடில்லி:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, சமூக வலைதளத்தில், இழிவான கருத்துக்களை பகிர்ந்த, நடிகர், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகரும், பா.ஜ., பிரமுகருமான, எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, இழிவான கருத்துக்களை, தன், 'பேஸ்புக்' பக்கத்தில், சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், அவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.போலீஸ், தன்னை கைது செய்யலாம் என்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவை, எஸ்.வி.சேகர் தாக்கல் செய்தார். அவருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர்.

இதையடுத்து அவர், உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், நேற்று வரை, அவரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.இந்நிலையில் நேற்று, அவரது மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'எழும்பூர் நீதிமன்றத்தில், 30ம் தேதியே, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டது.

இதையடுத்து, 'எழும்பூர் நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'பிச்சை புகினும் கற்கை நன்றே' மகள் கல்விக்கு கையேந்திய தந்தை

Added : ஜூன் 02, 2018 03:47


விருத்தாசலம்:மகளின் பொறியியல் படிப்புக்கு உதவி கேட்டு, விருத்தாசலத்தில் தந்தை பிச்சை எடுத்த சம்பவம், காண்போரை நெகிழச் செய்தது.

கடலுார் மாவட்டம்,விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் பாரதிரங்கன், 55.இவருக்கு, 25- ---23வயதில் இரு மகன்கள்,ஜெயபாரதி, 20, என்ற மகள் உள்ளனர்.மகன்கள் இருவரும்,வறுமை காரணமாக,கல்லுாரி படிப்பை பாதியில்நிறுத்திவிட்டனர்.
ஜெயபாரதி, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில்,'இன்பர்மேஷன் டெக்னாலஜி'இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது படிப்பும், பணமின்றி நின்று விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை, 10:30 மணியளவில் விருத்தாசலம், எம்.ஜி.ஆர்., சிலை எதிரில், பாரதிரங்கன் மகளின் படிப்புக்கு உதவி கேட்டு, பதாகைகளை ஏந்தி, நோட்டீஸ் வினியோகம் செய்து, பிச்சை எடுத்தார். இது, காண்போரை நெகிழச் செய்தது.

கல்விக்காக உதவும் உள்ளங்கள், பாரதி ரங்கனின், 75983 97240 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
5ம் தேதி, 'நீட்' தேர்வு, 'ரிசல்ட்'

Added : ஜூன் 02, 2018 02:03

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள், வரும், 5ம் தேதி வெளியாகின்றன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவற்றில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், நீட் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு, புதிய மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது.நாடு முழுவதும், 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வில், ஆங்கிலம், ஹிந்தியுடன் சேர்த்து, 11 மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 1.07 லட்சம் பேர், நீட் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 24 ஆயிரம் பேர், தமிழில் தேர்வை எழுதினர்.இந்த தேர்வில், விடைத்தாள் நகல் மற்றும் விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்கு முன் வெளியிட்டது. மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில், விடைத்தாள் திருத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

வரும், 5ம் தேதி, தேர்வு முடிவுகளை வெளியிட, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரண்டு நாட்களில் வெளியாகும் என, தெரிகிறது.தேர்வு முடிவு வெளியாவதை தொடர்ந்து, வரும், 8ம் தேதிக்குள், நீட் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியலும் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -

பல்கலைக்கு ஜெ., பெயர்

Added : ஜூன் 02, 2018 03:07 

சென்னை:தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கு, ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது.மீன்வளத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாகப்பட்iடினத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு மீன்வள பல்கலையின் பெயர், 'தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை' என, மாற்றப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கு, தேசிய வேளாண் கல்வி அங்கீகாரக் குழு, 2021 மார்ச், 31 வரை அங்கீகாரம் வழங்கி உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள், 'டோர் டெலிவரி'; டில்லி அரசு அதிரடி திட்டம் 

Added : ஜூன் 02, 2018 00:27 |


புதுடில்லி : அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தே ஓட்டுனர் உரிமம், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட, 40 சேவைகளை, பெறும் வசதியை, ஜூலை முதல், டில்லி அரசு அமல்படுத்த உள்ளது.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு சேவைகளை, வீட்டில் இருந்தபடியே பெறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, ஆளும் கட்சி அறிவித்தது. அதற்கான பணிகள் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டு, ஜூலையில், அமலுக்கு வரவுள்ளதாக, மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஜாதி, பிறப்பு, இறப்பு, வருமான சான்றுகள், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிமம், திருமண பதிவு சான்றிதழ், முதியோர் ஓய்வூதிய திட்டம், தண்ணீர் மற்றும் கழிவு நீர் குழாய்களுக்கான புதிய இணைப்பு உட்பட, 40 அரசு சேவைகளை, வீட்டிற்கே வந்து வழங்க, டில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சேவைகளை பெற விரும்புவோர், அரசு வழங்கும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கு வசதியான நேரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நபர்கள், வீட்டுக்கே வந்து, தேவையான விபரங்களை பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எடுத்து செல்வர்.

பின், அரசு வழங்கும் அடையாள அட்டையோ, சான்றிதழோ, குறிப்பிட்ட தேதியில், வீட்டுக்கே வந்து தரப்படும். 'இதற்கு, 50 ரூபாய் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சேவைகளை தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை மாத இறுதியில், இந்த சேவை துவங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில், 40 அரசு சேவைகளில் துவங்கி, படிப்படியாக, 60 சேவைகள் வரை விஸ்தரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் 5-ந்தேதி இமயமலை பயணம் 30 நாட்கள் தங்குகிறார்




படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 5-ந்தேதி இமயமலைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு 30 நாட்கள் தங்குகிறார்.

ஜூன் 02, 2018, 04:14 AM

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெளியானது. அந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. அதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டது. படத்தை ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்து வெளியிடுகிறார்.

கடந்த சில மாதங்களாக ‘காலா’ படப்பிடிப்பு மும்பையிலும், சென்னையிலும் நடந்து முடிந்து இருக்கிறது. வருகிற 7-ந்தேதி ‘காலா’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுப்படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

ரஜினிகாந்த் அந்த புதுப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பேசினார்.

அதன்பின்னர், படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக கார்த்திக் சுப்புராஜூம், ஒளிப்பதிவாளர் திருவும் இமயமலைக்கு சென்றனர். சென்னை திரும்பிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நேற்று மீண்டும் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது ‘படப்பிடிப்பு இடமான இமயமலையில் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும்? அங்கு எடுக்கப்படும் காட்சிகள் என்ன?’ என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்திடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அவரைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினிகாந்தின் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறார். அதுபற்றி அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக 5-ந்தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். 6-ந்தேதி இமயமலை பகுதியில் புது படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 முதல் 30 நாட்கள் வரை ரஜினிகாந்த் அங்கு தங்கி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு




சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஜூன் 02, 2018, 04:56 AM
சேலம்,

தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக கொண்டாடினர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் நாளில் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் தங்களது பள்ளிகளுக்கு சென்றனர். அதாவது, ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வதால் மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் சென்றதை பார்க்க முடிந்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோ மற்றும் வாகனங்களில் அனுப்பாமல் தாங்களே பள்ளிவரை அழைத்து சென்று விட்டனர். புதிதாக 1-ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் சற்று அடம் பிடித்து அழுததை காணமுடிந்தது. அதிலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம் என்பதால் அவர்கள் முரண்டு பிடித்து கதறி அழுதாலும் விடப்படியாக தூக்கி சென்றும், வரவேமாட்டேன் என்று கதறி அழுத குழந்தைகளை கண்டும் காணாமலும் அழைத்து சென்றனர். பின்னர் குழந்தைகளை ஆசிரியர்கள் சமாதானம் செய்து பாடம் சொல்லி கொடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று முதல் நாளில் அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன. சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினார்கள். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக பிரார்த்தனை, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...