Wednesday, May 26, 2021

'மீட்டர் ரீடிங்' நீடிக்கும் குழப்பம்; தெளிவுபடுத்துமா மின் வாரியம்?

'மீட்டர் ரீடிங்' நீடிக்கும் குழப்பம்; தெளிவுபடுத்துமா மின் வாரியம்?

Updated : மே 26, 2021 07:15 | Added : மே 26, 2021 07:14

சென்னை : ஊரடங்கு காலத்தில் வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பது தொடர்பாக நிலவும் குழப்பத்தை மின் வாரியம் எளிய முறையில் தெளிவுபடுத்துமா என்ற எதிர்பார்ப்பு நுகர்வோரிடம் எழுந்துள்ளது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள் இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். குறித்த காலத்தில் கணக்கெடுக்காமல் தாமதமாக எடுத்தால் மின் பயன்பாடு அதிகரித்து அதற்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வரும். தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஊழியர்கள் மின் பயன்பாடு கணக்கெடுக்க செல்லவில்லை.

இதனால் 'மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான காலத்தில் தாழ்வழுத்த நுகர்வோர் 2019 மே மாத கட்டணத்தை செலுத்தலாம். புதிய நுகர்வோர் மே மாதத்திற்கு முந்தைய கணக்கீட்டின்படி மார்ச்சில் செலுத்திய கட்டணத்தை செலுத்தலாம்' என மின் வாரியம் மே 11ம் தேதி தெரிவித்தது. இந்த இரண்டு முறையிலும் கணக்கெடுத்தால் அதிக கட்டணம் வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து ஊரடங்கு காலத்தில் நுகர்வோரே தங்களே மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து எஸ்.எம்.எஸ். -'வாட்ஸ் ஆப்' மற்றும் மின்னஞ்சலில் பிரிவு அலுவலக உதவி பொறியாளருக்கு அனுப்ப அனுமதிக்கலாம். அதன் வழியே செலுத்த வேண்டிய கட்டண விபரம் அனுப்பப்படும்.பொறியாளர்களின் அலைபேசி எண்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதாக மின் வாரியம் 20ம் தேதி மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த விபரம் பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சுற்றறிக்கை விபரம் ஊடகங்கள் வாயிலாக வெளியாயின. தற்போது பல நுகர்வோருக்கு 2019 மே கட்டணத்தை செலுத்தக்கோரி எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. அந்த கட்டணம் அதிகம் இருப்பதாக நுகர்வோர்கள் கருதுகின்றனர். மீட்டர் 'டிஸ்பிளேயில்' பார்க்கும் போது வரிசையாக எண்கள் மாறுபடும். அதில் தேதி நேரத்திற்கு பின் சில எண்களுடன் கே.டபிள்யூ.எச். என்று வரும். அந்த எண் தான் மின் பயன்பாடு அளவு. அதை கணக்கெடுக்க பலருக்கு தெரியவில்லை.

அனைவராலும் இணையதளத்தை பார்த்து தங்கள் பகுதி பொறியாளர்களின் அலைபேசி எண்ணை தெரிந்து கொள்ள முடியவில்லை. அலைபேசி கண்டுபிடித்து எஸ்.எம்.எஸ். வாட்ஸ் ஆப் அனுப்பினால் பதில் கிடைப்பதில்லை. இதனால் எந்த மின் கட்டணத்தை செலுத்துவது மின் பயன்பாட்டை கணக்கெடுத்து யாருக்கு அனுப்புவது என 'மீட்டர் ரீடிங்' தொடர்பாக நுகர்வோரிடம் பல குழப்பங்கள் நிலவுகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024