Sunday, December 4, 2016

இதெல்லாம் தேவையா?

By வாதூலன்  |   Published on : 03rd December 2016 02:35 AM 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை சாஸ்தா கோயில் "அய்யப்பன் கோயில்' என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் சில இடங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய அனுமதியைப் பெறாமல் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது ஏன் என்று கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலை உள்ளபடிக்கே இந்து மதத்துக்கு ஒரு பொதுவான அடையாளம் என்று கூறலாம். தமிழ்நாட்டிலிருந்து பல பக்தர்கள் விரதம் இருந்து, உள்ளூர் கோயிலுக்குச் சென்று மாலை போட்டு அங்கு செல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அனைவருமே "மலைக்கு போகிறேன்' என்று மட்டுமே கூறுவது வழக்கம். "மலை' என்றாலே சபரிமலை என்று குறிப்பிடுமளவுக்கு, அந்த இடம் புகழ் பெற்றது.
ஐயப்பனைப் பற்றி காஞ்சி முனிவர் இவ்விதம் சொல்கிறார்: "மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும், பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு பெரும் ஜோதி பிறந்தது. இந்தத் தேஜúஸ ஐயப்பனாக உருக் கொண்டது. ஹரிஹர புத்திரா என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்...'
கேரள மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெயர் மாற்றத்தால் எந்தச் சின்னக் கலவரமும் அங்கு வெடிக்காததே இதற்குச் சான்று.
மாறாக, தமிழ்நாட்டில் எந்தப் பெயர் மாற்றமும் சர்ச்சையையும், போராட்டத்தையும் கிளப்பாமல் இருந்ததில்லை. அரசியல் தலைவர்களாகட்டும், சாதித் தலைவர்களாகட்டும்
எந்தப் பெயர் சூட்டினாலும், குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஊர்வலமாகவது நடைபெறும்.
தமிழ்நாடு என்ற பெயரையே எடுத்துக் கொள்வோமே. இந்தப் பெயர் மாற்றத்துக்காக, சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். விசித்திரம் என்னவென்றால், மாறி மாறி வருகிற ஆட்சிகளில், தமிழ்நாடு என்ற பெயர் தற்போது சென்னை என்று உருமாறி விட்டது.
சாலைகளும் அவ்வப்போது பெயர் மாற்றத்துக்கு உட்படுகின்றன. ஆனாலும் பொதுமக்கள் மனத்தில், பழைய புழக்கத்தில் இருந்த பெயர்களே, பதிந்து இருக்கின்றன.
ஒரு வருடம் முன்பு கிரிக்கெட், ஹாக்கி போன்ற பல ஆட்டங்களுக்கு ஊக்கம் தந்து புரவலராகவும் விளங்கிய ராமச்சந்திர ஆதித்தன் பெயரை அடையாறில் ஒரு தெருவுக்குச் சூட்டினார் முதல்வர். என்றாலும், காந்தி நகர் மெயின் ரோடு என்ற பெயரே பரவலாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்தப் பெயர் மாற்ற தன்மை சில ஆண்டுகளாகப் பிற மாநிலங்களுக்கும் தொற்றிக் கொண்டு விட்டது. ஒடிஸô, பெங்களூரு, மைசூரு, கொல்கத்தா போன்ற பல பெயர்கள்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கேட்பு வரைவோலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்கையில், "பெங்களூரு' என ஆங்கிலத்தில் குறிப்பிட மிகவும் சிரமப்பட்டார். ஓர் ஊழியர் புன்னகையுடன், "பெங்களூர் என்றே எழுதுங்கள்' என்றார். அதே சமயம், இந்தப் புதிதான பெயர்கள் அரசாங்க கெஸட்டில் பதிவாகியுள்ளன என்பது வெளிப்படை.
சிலைகள் விஷயமும், பெயர்கள் போலத்தான், அதுவும் தமிழ்நாட்டில் சிலை இல்லாத இடமே இல்லை எனலாம். சிலையின் உருவ அமைப்பு சிலையின் கீழே பொறிக்கப்பட்ட வாசகங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
சென்னை கடற்கரைப் பகுதியில் உள்ள கண்ணகி சிலை போன்றவை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டபோது, பெரிய போராட்டம் நிகழ்ந்தது; உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு சொன்ன பின்னர்தான் ஆர்ப்பாட்டம் அடங்கியது.
அண்மையில் குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை நிறுவ பா.ஜ.க. முனைந்தபோது, எதிர்ப்பு எழுந்தது. காந்தி, நேரு போன்று வல்லபபாய் படேலை பெரும்பான்மையான மக்களால் தேசத் தலைவராகக் கருத முடியாத மனப்பான்மை முக்கிய காரணம்.
"பொதுவாக, சிலைகளுக்காகவும் நினைவிடங்களுக்காகவும் அரசு பணம் செலவாவதை விரும்பவில்லை என்று ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற வேறு ஓர் எழுத்தாளரோ ஒரு படி மேலே போய், "நினைவிடங்களுக்குப் பதில் தூய்மையான கழிப்பிடங்கள் கட்டலாம் என்று எள்ளலாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஆனால் அண்மைச் செய்தி ஒன்று, நம்மைத் தூக்கி வாரிப் போடுகிறது. மகராஷ்டிர பாஜக அரசு 3,600 கோடி ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கி வருகிறதாம். சிவசேனாவைத் திருப்திப்படுத்தும் செயல்தான் இது.
இதுகுறித்து யாரும் எதுவும் கேட்க இயலாது. "மராத்தியர்கள்' "சிவாஜி' போன்ற சொற்களே அங்கு உணர்ச்சியைத் தூண்டி விடக் கூடியவை. ஏற்கெனவே காஷ்மீர விவகாரத்திலும், கருப்புப் பண விவகாரத்திலும் மைய அரசுடன் சிவசேனா கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறைக்கு ஞாபகமூட்ட சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள், மற்றும் பிரமுகர்களுக்குச் சிலை வைப்பது அவசியம்தான்! ஆனால் அது மட்டும் போதாது. அவர்களிடம் உள்ள பல நல்லியல்புகளை இன்றைய இளைஞர்கள் கற்றுப் பின்பற்ற வேண்டும்.
பெயர் வைப்பதில் பெரிதாகச் செலவில்லை. அரசாங்கச் செலவில் ஒரு கூட்டம் போதும். ஆனால் சிலை?
இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், உற்பத்தி சாராத ஒரு செயலுக்கு பெருமளவு பணம் விரயமாவது நல்ல அறிகுறிதானா?



ஜன்தன் கருப்புப் பணம் ஏழைகளுக்கே!

By DIN  |   Published on : 04th December 2016 04:49 AM  |

modi

பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, "மாற்றத்திற்கான யாத்திரை' என்ற பெயரில் பாஜகவினர் கடந்த சில மாதங்களாக அந்த மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மொராதாபாத் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியான பிறகு, ஏழைகளுக்காக வங்கிகளில் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்குகளில் சிலர் அதிக அளவிலான பணத்தைச் செலுத்தி உள்ளனர்.
அவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு திருப்பி அளிக்கக் கூடாது. அவ்வாறு நீங்கள் உறுதியுடன் இருந்தால்தான், உங்கள் கணக்குகளில் சட்டவிரோதமாக பணம் செலுத்தியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அத்துடன், அந்தப் பணம் முழுவதும் ஏழைகளுக்குச் செல்வது உறுதிப்படுத்தப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
வறுமையிலிருந்து விடுபட வேண்டும்: தேசத்தில் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமானால், உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் முதலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மிகப் பெரிய மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது வறுமை நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும்.
கிராமங்களில் வசிப்பவர்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், இன்னமும் பல கிராமங்களில் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் மீட்கப்படும் கருப்புப் பணம், ஏழைகளின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக பயிர் விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் பயிர் விதைப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்ட விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

"டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இந்தியா தயார்'

ஊழலுக்கு வழிவகுக்கும் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஏடிஎம் மையங்களில் நீங்கள் (மக்கள்) பணம் எடுக்கத் தேவையில்லை. இன்றைய காலத்தில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் வங்கிக் கணக்கை இயக்கி, நாம் வாங்கும் பொருள்களுக்கும், இதர சேவைகளைப் பெறவும் பணம் செலுத்த முடியும்.
நாட்டில் 40 கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் டிஜிட்டல் வழியில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
கல்வி அறிவு இல்லாதவர்கள் எவ்வாறு செல்லிடப்பேசியில் தங்களது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பணத்தை செலவு செய்ய முடியும் என்று சிலர் வாதம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்தியர்கள் எப்போதும் மாற்றத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்று அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.


பிச்சைக்காரரிடம் ஸ்வைப் மெஷின்

கட்சிசெவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) ஒரு விடியோ பரவி வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அந்த விடியோவில், "பண உதவி செய்ய விரும்புவதாகவும், அதேநேரம் தன்னிடம் சில்லறை இல்லை' என்றும் பிச்சைக்காரரிடம் ஒருவர் கூறுகிறார். அதற்கு "சில்லறை இல்லையென்பதால் கவலைப்படத் தேவையில்லை; நீங்கள் விரும்பினால் என்னிடம் உள்ள பணம் செலுத்தும் இயந்திரம் (ஸ்வைப் மெஷின்) மூலம் எனக்கு விரும்பும் தொகையை பற்று அட்டையைப் பயன்படுத்திக் கொடுக்கலாம்' என்று அந்த பிச்சைக்காரர் கூறுகிறார்.



வரிசையில் நிற்பது இதுவே கடைசி

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதுடன் மக்கள் வரிசையில் நிற்கும் முறை முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதி அளிக்கிறேன்.
ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளாக அத்தியாவசியத் தேவைகளுக்காக நீங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தீர்கள்.
சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை என அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக நீங்கள் (காங்கிரஸ்) மக்களை வரிசையில் நிற்க வைத்தீர்கள்.
அதுபோன்று மக்கள் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை. புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதே கடைசியாக நீங்கள் அத்தியாவசியத் தேவைக்காக வரிசையில் காத்திருந்ததாக இருக்கும்.
நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தவர்கள் மட்டுமே வரிசையில் நிற்கிறார்கள். சட்டவிரோதமாக பணம் வைத்திருந்தவர்கள் ஏழைகளின் வீட்டுக்கு முன்பு வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவித்ததற்காக எதிர்க்கட்சியினர் என்னை குற்றவாளியாக சித்திரிக்கின்றனர்.
எது நடந்தாலும் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.
ஒரு விஷயத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தைத் தெரிந்துகொண்டால், எந்தவொரு புதிய மாற்றத்தையும் ஏற்க இந்தியர்கள் நீண்டகாலம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

Friday, December 2, 2016

குழந்தைகள் உலகம்

By இ. ரகுகுமார்  |   Published on : 02nd December 2016 02:26 AM

குதூகலம் நிறைந்தது குழந்தைப் பருவம். துள்ளலும் மகிழ்ச்சியும் ததும்பி சிறகடித்துப் பறக்கும் வாழ்வு. கவலைகள், ஏற்றத்தாழ்வுகள் அறியாத பரிசுத்த மனம். இதுபோன்ற குழந்தைகளுக்கான உலகத்தில்தான் இன்றைய குழந்தைகள் வளர்கிறார்களா?
பெற்றோர்- கல்விக்கூடம்- சமூகம் ஆகிய தளங்களில் வலம் வரும் குழந்தைகள் இன்றைக்கு எப்படி வடிவமைக்கப்படுகிறார்கள்? குழந்தைகளின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றனவா?
குழந்தைகளின் உணர்வுகள், உரிமைகள் இன்றைக்கு எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகளுக்கான தேடலில் புகுந்தால் அதிர்ச்சியும் கவலையுமே அதிகரிக்கின்றன.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும் சுகாதாரமும் அளிப்பதாக நமது அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், நடைமுறையில் இவை இரண்டும் குழந்தைகள் விலை கொடுத்து வாங்கும் பொருட்களாகவே உள்ளன.
பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 65 நாடுகளில் கல்வி இலவசமாகக் கிடைக்கிறது. கல்வி-சுகாதாரத்துக்கு அங்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்த பின்னரே இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டால், நோய்களின் தாக்குதலால் உயிரிழக்கிற ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவதை விட இந்தியாவில் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
இவற்றைவிட, குழந்தைகள் அடையாளமற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர் என்பதுதான் இன்றைக்குள்ள பெரும் ஆபத்து. தாய்மொழி வழிக்கல்வி அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.
புதிய நுகர்பொருள்களை வாங்கும் பயனாளிகளை உருவாக்குவதுதான் உலகமயத்தின் நோக்கம். இந்தச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கியே நமது குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.
நியாயத்துக்காக, தர்மத்துக்காக உறவுகளைப் பேணிய நிலை மாறிவிட்டது. லாபத்துக்காக உறவுகளைப் பேணுபவர்களாக குழந்தைகள் மாற்றப்படுகின்றனர். இப்படியான வணிக கலாசாரத்தை நோக்கி குழந்தைகள் உருவாக்கப்படுவது மாபெரும் ஆபத்து.
வருங்கால வருமானத்துக்கான முதலீடாக பெற்றோரால் குழந்தைகள் கருதப்படுகிறார்கள். பாசமும் நேசமும் கலந்த குழந்தை வளர்ப்பு இன்றில்லை. அதிக ஊதியம் தரக்கூடிய துறைகளில் வேலைவாய்ப்பையும், வெளிநாட்டுப் பணிகளையும் இலக்காகக் கொண்டதாக குழந்தை வளர்ப்பு மாறிவிட்டது.
இதற்காக, காலையில் டியூஷன், மாலையிலும் டியூஷன் என, குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவர்களை இயந்திரமாக்கி, அவர்கள் மீது மறைமுக வன்முறை அன்றாடம் நிகழ்த்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிக் கொடுப்பது, வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது என இயல்பாக இருந்த விஷயங்கள் தற்போது நாகரிகம் என்ற பெயரில் மறைந்து வருகின்றன.
கல்வியும் விளையாட்டும் கற்றுக் கொள்வதற்கே என்பதைத் தாண்டி, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஊட்டப்படுகிறது. அதிலும், இரண்டாமிடம், மூன்றாமிடத்தைக்கூட ஏற்க முடியாத மனப்பக்குவம் பல பெற்றோரிடம் இருக்கிறது. அதுவே குழந்தைகளிடமும் புகுத்தப்படுகிறது.
கடந்த காலத்தில் நொண்டி, கண்ணாமூச்சி, பன்னாங்கல், தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளில் கூடிக் களித்த குழந்தைகளிடம் தற்போது தனித்து அடையாளப்படுத்தும் விளையாட்டுகள் திணிக்கப்படுகின்றன.
வாழ்வை நெறிப்படுத்தும் கதைகள் குறைந்துவிட்டன. அதைச் சொல்லக் கூடிய முதியோரைக் கொண்ட வீடுகள் அருகிவிட்டன. மொத்தத்தில் யதார்த்தம் இல்லாத உலகை நோக்கி குழந்தைகள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
தற்போதைய ஆசிரியர்களின் பணி, குழந்தைகளை மதிப்பெண் ஈட்டும் இயந்திரமாக மாற்றுவதாக உள்ளது. இந்தக் கல்வி முறையில் கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதற்குப் பதிலாக, பயிற்றுவித்தல் மட்டுமே நடைபெறுகிறது.
ஒருகாலத்தில் கோத்தாரி கல்வி முறை மூலமாகவும், நடுநிலை வகித்த நாளேடுகள் வழியாகவும், சமூகத்தை நேசித்த எழுத்தாளர்கள் வழியாகவும், திறம்படச் சிந்தித்த அறிஞர்கள் வழியாகவும் தலைசிறந்த சமூகப் பிரஜைகளாக குழந்தைகள் வளர்ந்தனர்.
இன்றைக்கோ, சமூகத் தாக்கத்தின் விளைவாக, மனிதநேயம், சமூக அக்கறை போன்ற பண்புகளை இழந்து, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் செல்லவும் தயங்காதவர்களாக குழந்தைகள் மாற்றப்படுவதால், குற்றங்களும் சமூகவிரோதச் செயல்களும் அதிகரித்திருக்கின்றன.
உண்மையிலேயே குழந்தைகளின் நியாயமான அபிலாஷைகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோமா? குழந்தைகளின் உண்மையான அபிலாஷையை நிறைவேற்றுதல் என்பது, விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவதும், நண்பர்களைத் தேர்தெடுக்கும் உரிமை அளிப்பதும், விரும்புவதைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதும்தான்.
ஆனால், இந்த மூன்றையும் நோக்கி குழந்தைகளைப் போக விடாமல் நமது சுயநலம் தடுக்கிறது.
இதற்கான தீர்வுகளில் முதன்மையானது கல்வி முறையில் மாற்றம். மாலை நேரங்களில் தங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளை அனுமதிப்பது அவசியம். அவர்களோடு அமர்ந்து கதைகள் கூறுதல், விளையாட்டு என நமது பாரம்பரிய குடும்பக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதும் முக்கியம்.
சக மனிதர்களை நேசிக்கும் பண்பைக் கற்றுக் கொடுப்பது, எல்லாக் குழந்தைகளுடனும் இணைந்து விளையாட அனுமதிப்பது, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர வாய்ப்பளிப்பது ஆகியவை இன்றியமையாதவை.
இவை அனைத்துக்கும் மேலாக குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த நூலகம் அழைத்துச் செல்வது பழக்கமாக வேண்டும்.

இனி எல்லாம் e-wallet தான்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!


கார்டில் சம்பாதித்தாலும் கைநிறைய சம்பாதிக்கிறான் என சொல்வதுதான் நம்ம ஊரு ஸ்டைலு. இனி, அது கொஞ்சம் கஷ்டம் தான். பணத்தின் வாசனையை நுகர்வது குறைந்துதான் ஆக வேண்டும். கேஷ்லெஸ் இந்தியா தான் இனி இலக்கு என அரசு முடிவு செய்தபின் அதை பற்றி நாமும் தெரிந்து கொள்ளதான் வேண்டும். அதில் முக்கியமானது E- Wallet

21-ம் நூற்றாண்டின் சமீபத்தைய வங்கிப் பரிவர்த்தனைகளில் சாதனை என்றால் அது e-wallet தான். அதிலும் பேடிஎம் (Paytm) அசாதாரணமான சேவைகளை வழங்கி முன்னிலை வகிக்கின்றன. ஒரு இ-வேலட்டுக்கு, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பிக் கொள்ள வேண்டும். அதன் பின் ரீசார்ஜ் செய்ய, பொருட்களை வாங்க, மின்சார கட்டணங்கள் செலுத்த, பயண டிக்கெட்டுகள் புக் செய்ய, நம் நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்ய என்று அனைத்தையும் ஒரு சில க்ளிக்குகளில் செய்து விடலாம்.

e-wallet 3 வகை இருக்கின்றன.

1 .க்ளோஸ்டு வேலட்டுக்கள் :
ஒரு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக தன்னுடைய பொருட்களை மட்டுமே வாங்க ஒரு e-wallet பயன்படுத்தி வந்தால் அதற்கு பெயர் குளோஸ்ட் வாலட். இந்த e-wallet களில் வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தினால் அந்த நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக ஜபாங், ஃப்ளிப்கார்ட் மற்றும் மேக் மை ட்ரிப் போன்றவைகளை சொல்லலாம். இந்த வகை வேலட்டுகளில் ஒரு முறை பணத்தை செலுத்திவிட்டால் அந்த நிறுவனத்தின் சேவைகளாகவோ அல்லது பொருளாகவோ தான், நம் காசை செலவழிக்க வேண்டி இருக்கும். பணத்தை திரும்ப எடுக்க முடியாது.

2. செமி குளோஸ்டு இ வேலட்டுக்கள் :
இந்த இ-வேலட்டுக்களில் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை ஏற்றிய பிறகு, பணம் செலுத்திய e-wallet நிறுவனம் எந்த நிறுவனங்களோடு எல்லாம் ஒப்பந்தம் செய்திருக்கிறதோ அந்த நிறுவனங்களில் எல்லாம் நம் e-wallet பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கலாம் அல்லது சேவைகளை பெறலாம். அப்படி செலவு செய்ய முடியவில்லை என்றால் தாராளமாக நம் வங்கிக் கணக்குகளுக்கே பணத்தை திரும்ப அனுப்பிக் கொள்ளலாம். உதாரணமாக : பேடிஎம், எஸ்.பி.ஐ பட்டி, மொபிக்விக் போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம்.

இந்த வகையான வேலட்டுகளில் கூடுதல் வசதி என்னவென்றால் நாம் வேலட்டில் இருக்கும் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வங்கிக் கணக்கிற்கு வேண்டுமானாலும் சரியான வங்கிக் கணக்கு மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி கோட்களை அளித்தால் பரிமாற்றம் செய்துவிடலாம். இதில் ஒவ்வொரு வேலட்டுகளும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கிறது.

சமீபத்தில் குளோஸ்ட் வேலட்டுகளில் இருந்து செமி குளோஸ்டாக மாறிய நிறுவனம் ஓலா மணி. இந்த நிறுவனத்தின் இ-வேலட்டுக்களில் பணம் செலுத்தினால் அது நேரடியாக அவர்களின் டாக்ஸி அல்லது ஆட்டோ சேவைகளை மட்டுமே பயன்படுத்தி கழிக்க முடியும் என இருந்தது. ஆனால் தற்போது நம் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது தொடங்கி, டோனினோஸ் பீட்சா, புக் மை ஷோ என்று பல சேவைகளை பயன்படுத்த முடிகிறது.

3. ஓப்பன் வேலட்டுக்கள் :
ஒரு e-walletல் செலுத்தப்படும் பணத்தை, செமி குளோஸ்ட் வேலட்டுகளைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவது போலவே இருக்கும். இந்த வகையான வேலட்டுகளை இந்தியாவில் ஆர்பிஐ-ன் அனுமதி பெற்ற வங்கிகள் தான் செய்ய முடியும். உதாரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் கார்டுகள். இந்த வகையில் மட்டும் தான் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை கையில் எடுக்க முடியும்.



டிரெண்ட் :
தற்போதைக்கு செமி குளோஸ்ட் e-wallet தான் டிரெண்டில் இருக்கிறது. வழக்கமாக இது போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ், பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்துவது, உணவகங்களில் செலவு செய்வது, பஸ், ரயில் & விமான டிக்கேட்டுகளை புக் செய்வது, மாதம் தோறும் செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள், குடிநீர் வாரிய வரி, லேண்ட் லைன் போன் கட்டணங்கள், இணையத்திற்கான செலவுகள், டிடிஹெச் ரீசார்ஜ் செய்வது, போன்றவைகள் தான் தற்போதைய டீமானிட்டைசேஷனுக்கு முன் செய்யப்பட்டு வந்தது. இப்போதும் பெரும்பாலான செமி குளோஸ்ட் வேலட்டுகள் மூலம் இவைகளை செய்ய முடிகிறது. டிமானிட்டைசேஷனுக்கு பிறகு பெட்ரோல் பங்குகள் தொடங்கி, பெட்டிக் கடைகள் வரை பேடிஎம் மூலம் பணத்தை பரிமாற்றிக் கொள்வது சகஜமாகி வருகிறது.

கேஷ் பிக்-அப் :
இதில் மொபிக் விக் என்கிற நிறுவனம் ஒரு படி மேலே சென்று கேஷ் பிக் -அப்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை தற்போது டெல்லி, ஜெய்பூர் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருக்கிறது. காலை 10 - மாலை 6 மணி வரை கேஷ் பிக் - அப் செய்யப்படுகிறது. ஒரு நபர் நாம் இருக்கும் இடத்திற்கு வந்து பணத்தை வாங்கி கொண்டு செல்கிறார். அவர் வாங்கிய உடனேயே, நம்மிடம் இருந்து வாங்கிய தொகை நம் வேலட்டில் வரவு வைக்கப்படுகிறது. கேஷ் பிக் -அப் செய்ய எந்த கட்டணமும் இல்லை.

கேஷ் டெபாசிட் :
கிராமப் புறங்களில் இன்று வரை ஒரு பிரபலமான விஷயம் பணத்தை டெபாசிட் செய்வது. அதையும் மொபிக்விக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கேஷ் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அருகில் எந்த இடங்களில் எல்லாம் டெபாசிட் செய்யலாம் என்று ஒரு பட்டியலை காட்டுகிறது. அந்த இடத்திற்குச் சென்று டெபாசிட் செய்து நம் e-wallet பேலன்ஸை அதிகரித்துக் கொள்ளலாம். அதோடு வழக்கம் போல டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாகவும் பணத்தை வேலட்டில் செலுத்தலாம்.

அரசு அலட்சியத்தால் பறிபோன 18 உயிர்கள்... திருச்சி வெடி விபத்தின் பின்னணி..!

vikatan.com

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த டி.முருங்கப்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த 'வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்' எனும் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில்பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்த 18 பேரின் உடல்களும் இந்த விபத்தில் சிதறிபோனது. மூன்று சிதறிய உடல்களை தவிர மற்ற உடல்களை அடையாளம் கூட காண இயலாத கோரத்தை இந்த விபத்து ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு இறுதி சடங்கு கூட நடத்த முடியாமல், இறந்தவர்களின் உறவினர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எப்படி வந்தது இங்கே வெடிமருந்து ஆலை?

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் பச்சமலை அடிவாரத்தை குறிவைத்து மாந்தோப்பு வைப்பதாக கூறி சேலத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 1996-ம் ஆண்டு இந்த இடத்தை வாங்கினார். ஆனால் மாந்தோப்ப்புக்கான எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த இடத்தில் வெடிமருந்து குடோன் அமைக்க அனுமதி கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதை துளியும் கண்டுகொள்ளாமல் அனுமதி கொடுத்தது அரசு. அனுமதிக்காகவே இந்த ஆலை நிர்வாகம் பணத்தை வாரி இறைத்ததாகவும் சொல்லப்படுகிறது.



அலட்சியப்படுத்திய அரசு...

மக்கள் அஞ்சியபடியே, கடுமையான சிக்கல்களை இந்த ஆலை ஏற்படுத்தியது. ஆலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயமும் பொய்த்துப் போனது. தாசில்தார் துவங்கி கலெக்டர் வரை பொதுமக்கள் புகார் கொடுக்காத இடமில்லை. இந்த ஊரின் பிரச்னையை யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் கூட இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால் பதிலில்லை. மக்கள் தன்னெழுச்சியாக திரளும் போதெல்லாம், கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தி, அதன் பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பது தொடர்கதையாகி விட்டது. இந்த சூழலில் தான் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.

விவசாயம் பொய்த்துப்போனதால் வேலையிழந்த தொழிலாளர்கள் பலர், ஆபத்து தான் என தெரிந்திருந்தும் இந்த ஆலைக்கு வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். டி. முருங்கப்பட்டி மட்டுமல்லாது கொப்பம்பட்டி, செங்கட்டு, நாகநல்லூர், பாதர்பேட்டை, சேலம் மாவட்டம் செங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட்’ முறையில் வேலை செய்து வருகிறார்கள்.



விபத்து ஏற்பட்ட நேரத்தில்...

சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த வெடிமருந்து ஆலை. கல்குவாரிகள், சுரங்கங்கள், ராட்சத பாறைகள் உடைப்பதற்கான வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. வேதிப்பொருட்களை கொண்டு தான் இந்த வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மிக கவனமாக கையாள வேண்டும். வெப்பநிலை, உயர் அழுத்தம் என அனைத்திலும் மிக கவனமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும். அப்படி அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபத்து தான் இது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

நேற்று அதிகாலை வெடிமருந்து தயாரிப்பு பணி யூனிட் 2ல் நடந்து கொண்டு இருந்தது. இரவு தயாரிக்கப்பட்ட வெடிமருந்து கலவையை அடுத்த யூனிட்டுக்கு எடுத்துச்செல்வதற்காக காலை 7.20 மணி அளவில் 17 தொழிலாளர்கள் வந்தனர். வெடிமருந்துகளை கொண்டு செல்ல சரக்கு ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தியபோது தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பயங்கரமான சத்தத்துடன் நிகழ்ந்தது அந்த விபத்து. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விபத்தின் அதிர்வு, சத்தமும் உணரப்பட்டது. ஆலையின் ஒரு பகுதி வெடித்துச் சிதற ஆலை தீப்பற்றி புகை மண்டலமாக மாறியது அந்த இடம். ஆலையின் இரண்டுமாடி கட்டடம் முழுவதுமாக இடிந்து, வெடிவிபத்து ஏற்படுத்திய 20 அடி பள்ளத்தில் புதைந்தது. ஆலையின் ஒரு பகுதியில் நடந்த விபத்தினால், மற்ற பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன நடந்தது என தெரியாமல் பதறியபடி வெளியேறினர்.

சிதறிய உடலும் கூட கிடைக்கவில்லை...

கொட்டும் மழை ஒரு பக்கம், வெடி விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் ஒரு பக்கம் என மீட்பு பணியை தாமதமாக்கியது. வெடித்துச் சிதறிய ஆலையில் பணியாற்றிய தொழிலாளார்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கை, கால்கள் கொத்துக்கொத்தாக கிடந்தன. இரவு 9 மணி வரை இறந்தவர்கள் பட்டியலை உறுதி செய்யமுடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறியது.

மறுபுறம் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் செய்வதறியாமல் தவித்தனர். கொட்டும் மழையிலும் இறந்தவர்களின் உடலையாவது தரமாட்டார்களா என சோகத்துடன் காத்திருந்தனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணியை கைவிட்டார்கள். 3 உடல்கள் மட்டுமே சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 18 பேர் இந்த விபத்தில் இறந்ததாகவும், அனைவரது உடலும் சிதறியதால் யாருடைய உடலையும் மீட்க முடியவில்லை என சொல்லப்பட்டது.

குடும்பத்தில் ஒருவரை பலி கொடுத்த சோகத்தில் இருந்தவர்களும், உடலும் கிடைப்பது சிக்கல் தான் என்ற அறிவிப்பு இன்னும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்தில் 11 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அமைச்சர் மீது செருப்பு, கற்கள் வீச்சு...

விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் கொந்தளித்தனர். "எத்தனை முறை மனுக்கொடுத்தோம். ஒரு முறைகூட வந்து பார்க்கல. இப்போ எதுக்கு வந்தீங்க. செத்துபோனவங்க உடல் இருக்கா இல்லையான்னு பார்க்கவா?" என வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மக்களின் கோரிக்கையை அப்போதும் கூட மதிப்பளிக்காமல் இருக்க ஆவேசமடைந்த மக்கள், அமைச்சர் மீதும் அதிகாரிகள் மீதும் செருப்பு, கற்களை வீசினர். "தொழிலாளர்களின் உயிரை பறித்த வெடிமருந்து தொழிற்சாலையை இடித்து தரைமட்டமாக்க வேண்டும். பலமுறை மனு அளித்தும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்தில் இவ்வளவுபேர் பலியாகி உள்ளார்கள். உடனே தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இனி இந்த பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது," என கோரினர்.

இனியாவது ஆலையை மூடுவாங்களா?

இதையடுத்தே இந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்மிடம் பேசிய ஊர் மக்கள், "கடந்த 15 வருஷமா இந்த ஆலையே கூடாதுன்னுதான் போராடுகிறோம். ஆனால் பல அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு ஆலைக்கு சாதகமாக செயல்படுறாங்க. இந்த அலட்சியம் தான் இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தியிருக்கு. இந்த ஆலையில் வேலை செய்பவர்களும், பலியானவர்களும் படிக்காதவர்கள். இவர்களை பணியில் அமர்த்தி, உயர் வேதிப் பொருட்களை கையாள வைத்துள்ளார்கள். இந்த விபத்தையும் எதையாவது சொல்லி மூடி மறைத்துவிட்டு, மீண்டும் இந்த ஆலையை இயக்கினால் இந்த பகுதியே நாசமாகும்," என்றார்கள்.

அரசு அலட்சியத்துக்கு கொடுத்த விலை 18 உயிர்கள். இனியாவது மக்களைப்பற்றியும், மக்கள் நலனைப்பற்றியும் கவலைப்படுமா அரசு?

சி.ய.ஆனந்தகுமார்,

அதீத ஆர்வம்! ஓயாத உழைப்பு! குன்றாத உற்சாகம்! ஏனென்றால், அவர் கருணாநிதி!

vikatan.com

தி.மு.க தலைவர் கருணாநிதியின் அரசியலோடு நேரெதிராக ஒருவர் முரண்பாடலாம். அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். அதிகாரத்தில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட முறைகளில், இன்றுவரை ஆத்திரம் இருக்கலாம். அவருடைய மதிநுட்பம், நகைச்சுவை உணர்வு, தன்முனைப்பு, தனிநபர் துதிபாடல் குறித்து, கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், யாருக்கும்... ஏன் கருணாநிதியை பரமவைரியாக நினைப்பவர்களுக்கும் கூட அவருடைய உழைப்பு, உற்சாகம், ஆர்வம் குறித்து எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. எந்த விமர்சனத்தையும் அவர்களால் வைக்க முடியாது. ஒவ்வொரு நொடியையும் அவர் உழைத்தே கழிப்பார். கருணாநிதிக்கு எதற்கும் நேரம் இல்லாமல் போனதே இல்லை. அந்த உழைப்புத்தான், 93-வயதிலும், அவர் நினைத்ததை செய்வதற்கான நேரத்தை அவர் வசம் வைத்துக் கொண்டே இருந்தது.

2 மாதங்களுக்கு முன் கருணாநிதி...

“தலைவர் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். எனவே, அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்” என்று கடந்த அக்டோபர் 25-ம் தேதி, அறிவாலயத்தில் இருந்து அறிக்கை வந்தது. அதன்பிறகுதான், அவர் தனது அன்றாட வேலைகளில் இருந்து பிசகினார். ஆனால், அந்த அறிக்கைக்கு முன்புவரை, கருணாநிதி உற்சாகமாக உழைத்துக் கொண்டே இருந்தார்.

93 வயதில் கருணாநிதியின் ஒருநாள்!

கருணாநிதிக்கு தற்போது 93 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய செயல்பாடுகளை அவர் கொஞ்சம் குறைத்துக்கொண்டார். ஆனால், எதையும் உதறித் தள்ளிவிடவில்லை. காற்றைப்போல் கருணாநிதி இயங்கிக் கொண்டே இருந்தார். அவருடைய ஒருநாள், காலை 5 மணிக்கு ஆரம்பித்துவிடும். வீட்டில் இருந்து 5.30 மணிக்கு அறிவாலயம் சென்றுவிடுவார். முன்பு நடைப்பயிற்சிக்காக அறிவாலயம் சென்றவர், நடக்கமுடியாமல் போனதற்குப் பிறகு, அறிவாலயம் செல்வதை நிறுத்தவில்லை. நடக்க முடியாவிட்டால் என்ன? சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டே, அறிவாலயத்தை தினமும் காலையில் சுற்றி வந்தார். நடைபயிற்சியால் கிடைக்கும் உற்சாகத்தை அவருக்கு இந்தப் பழக்கம் கொடுத்தது. காலையில் நிரம்பியிருக்கும் புதிய காற்றை சுவாசித்துக் கொண்டு, கைகளை அசைத்து, அவரால் முடிந்த அளவில் சில யோகா பயிற்சிகளை செய்து கொண்டிருந்தார். பயிற்சி முடிந்ததும், அங்கு வைத்தே பத்திரிகைகள் அனைத்தையும் படித்துவிடுவார். தொலைக்காட்சி செய்திகளை அங்கேயே பார்த்துவிடுவார். அந்த நேரத்திலேயே, அன்று கொடுக்க வேண்டிய அறிக்கை அவர் மனதில் பிறந்துவிடும்.



150 நேர்காணல்கள்... 84 பைல்கள்

கருணாநிதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஏறக்குறைய நிறுத்திவிட்டார். மிக முக்கியமான திருமணங்கள், கட்சிப்பொதுக்கூட்டம், மாநாடுகள், ஆர்ப்பாட்டம் தவிர வேறு எதிலும் நேரில் சென்று கலந்து கொள்வதில்லை. ஆனால், வீட்டுக்கு வரும் தொண்டர்களை சந்திக்காமல் அவர் திருப்பி அனுப்பியதில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரையிலும், நாள்தோறும், 100 முதல் 150 அப்பாயின்ட்மென்ட்களை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்கு வாழ்த்து வாங்க வருபவர்கள், வெளியூர்களில் இருந்து வரும் கட்சிக்காரர்களுக்கு இதில் முன்னுரிமை. அதுபோல,

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை தினமும் கண்டிப்பாக அறிவாலயம் வந்துவிடுவார். அங்கு வந்து, அறிக்கை தயார் செய்து கலைஞர் தொலைக்காட்சிக்கும் முரசொலிக்கும் முதலில் அனுப்பிவிடுவார். அதன்பிறகு, அறிவாலயத்தில் இருக்கும் பைல்களைப் பார்ப்பார். கட்சிக்காரர்களின் கோரிக்கைகள், மாவட்டச் செயலாளர்கள் பஞ்சாயத்து தொடர்பான பைல்களைப் பார்த்து, அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை வலியுறுத்துவார். அறிவாலயத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான உத்தரவுகள் கொடுப்பார். தேவைப்பட்டால், அப்போதே சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிவிடுவார். தேவை இருந்தால், நேரில் வரச் சொல்வார். கடைசியாக அவர் அறிவாலயம் வந்து, பைல்களைப் பார்த்தபோது, ஒரே நாளில் 84 பைல்களைப் பார்த்து, அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அதன்பிறகு, தான் கொடுத்த அறிக்கைகள், தொலைக்காட்சியின் மதிய நேரச் செய்திகளில் எப்படி வருகிறது என்று பார்த்துவிடுவார். அவர் நினைத்தது வரவில்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு திருத்தம் சொல்வார்.



அறிவாலயம் டூ சி.ஐ.டி காலனி

அறிவாலயத்தில் இருந்து கிளம்பி, மதியத்துக்கு மேல், சி.ஐ.டி காலனி வீட்டுக்குப்போவார். மதிய உணவு அங்குதான். அரை மணிநேரத் தூக்கம் கண்டிப்பாக இருக்கும். அதன்பிறகு மாலை தேவைப்பட்டால் மற்றொருமுறை அறிவாலயம் வருவார். இல்லையென்றால் நேராக கோபாலபுரம் சென்றுவிடுவார். அங்குபோய், அவர் கதை வசனத்தில் வெளியாகும் ராமானுஜர் தொடரைப் பார்ப்பார். அடுத்தவாரம் ஒளிபரப்பாகும் தொடர், ஒருவாரத்துக்கு முன்பே கருணாநிதிக்கு வந்துவிடும். அதைப் பார்த்துவிட்டு அதில் திருத்தம் இருந்தால் சொல்வார். இதற்கிடையில், தென்பாண்டிச் சிங்கம் தொடருக்கான கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

தயாளு அம்மாளுக்கு தனியாக நேரம்!

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் எனும் ஞாபக மறதிப் பிரச்னையில் இருக்கிறார். அதுபோல, அவருக்கு வாயில் உமிழ் நீர் சுரப்பது குறைந்துவிட்டது. அது செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. கோபாலபுரம் வீட்டில் கீழ் தளத்தில்தான் தயாளு அம்மாளின் அறை இருக்கிறது. மேல்தளத்தில் கருணாநிதியின் அறை இருக்கிறது. தினமும் தயாளு அம்மாளுடன் பேசிக்கொள்ளும் கருணாநிதி, அவரையும் உற்சாகப்படுத்துவார். அவருக்கு நினைவு திரும்பும் நேரங்களில், அவரிடம் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பார்.

அதன்பிறகு, இரவு செய்திகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை சிறிது நேரம் பார்ப்பார். இப்போது புழக்கத்தில் இருக்கும் ரிமோட்களில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள். அதை கையாள்வதில் கருணாநிதிக்கு சிக்கல் இருந்தது. அதற்காக அவருடைய செல்போனில் ஒரு ஆப் டவுன்லோடு செய்து வைத்திருந்தார். அதைப் பயன்படுத்தி செல்போனில் இருந்தே, சேனலை மாற்றிப் பார்ப்பார். அதன்பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு மறுநாள் வெளிவரும் முரசொலியின் ‘பைனல்’ பார்த்துவிட்டு, திருத்தம் சொல்வார். இரவு அவர் தூங்குவதற்கு 11.30 மணிக்குமேல் ஆகிவிடும். இந்த நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் சாதரணமானவையாகத் தோன்றலாம். ஆனால், 93 வயதில் கருணாநிதி இந்த நிகழ்ச்சி நிரலை, கட்டுக்கோப்பாக கடைபிடிப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான், அதில் மறைந்து இருக்கும் ஆச்சரியம் புரியும்.



எதையும் தாங்கும் இதயம்!

கருணாநிதியின் ஆஸ்தான மருத்துவர்களில் ஒருவர். அவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதனுக்கு வயதான காலத்தில் இதயம், கிட்னி, சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால்தான் பிரச்னைகள் உருவாகும். கருணாநிதிக்கு இந்த 4 பிரச்னைகளும் இல்லை என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இருதயத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையில், எதையும் தாங்கும் இதயம்தான் அவருடையது. அதனால்தான், தனது செல்லமகள் கனிமொழி கைது செய்யப்பட்டபோது, “இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்ன கருணாநிதி, “ஒரு மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ... அப்படி இருக்கிறது'' என்று உடையாமல் பதில் சொன்னார். அவருடைய சிறுநீரகங்கள் இப்போதும் நன்றாகச் செயல்படுகின்றன. அவருக்கு சர்க்கரை நோய் கிடையாது. ரத்தக் கொதிப்பும் கிடையாது.

32 வயதில் ஹார்ட் அட்டாக், 35 வயதில் பி.பி., சுகர் என்று கேள்விப்பட்ட இன்றைய தலைமுறைக்கு இது மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கும் விஷயம்தான். இத்தனைக்கும் கருணாநிதி எம்.ஜி.ஆரைப்போல் கடுமையான உடற்பயிற்சிகள் செய்தவரில்லை. ஆனால், அப்படி உடற்பயிற்சி செய்த எம்.ஜி.ஆருக்கே உடல் ஆரோக்கியம் விஷயத்தில் கருணாநிதிக்கு கிடைத்த வரம் வாய்க்கவில்லை. கருணாநிதியின் இந்த உடல் ஆரோக்கியத்துக்கு, அவருக்கு இயற்கை கொடுத்த கொடை என்றே சொல்லலாம். எப்போதுமே அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். 15 வயதில் தொடங்கி 44 வயதுவரை அவர் கூட்டங்களுக்காக போகாத ஊர்கள் இல்லை. நடக்காத தொலைவு இல்லை. அந்த ஊர்களில் கிடைத்த சாதாரண உணவுகள், சாதாரண தண்ணீரை கருணாநிதியின் உடல் ஏற்றுக்கொள்ளும். இது கருணாநிதியின் சமகாலத்தவர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், கண்ணதாசனுக்கு வாய்க்காதது. அவர்கள் திரைத் துறையில் கோலேச்சத் தொடங்கிய பிறகு, ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். கருணாநிதி அதில் கொஞ்சம் தள்ளியே இருந்தார்.



கடுமையான கட்டுப்பாடு! அதீத முன்ஜாக்கிரதை உணர்வு!

இயற்கையாக கருணாநிதிக்கு அமைந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, அவர் கடைபிடித்த கடுமையான சில கட்டுப்பாடுகளும் இயல்பாக அவருக்கு வாய்த்த முன்ஜாக்கிரதை உணர்வும், அவரை 93 வயதில் உற்சாகமாக வைத்ததற்கு முக்கிய காரணங்கள். ஒரு காலத்தில், புகை, மதுப் பழக்கங்கள் கருணாநிதிக்கும் இருந்தன. இதுபோன்ற கேளிக்கைகளில், கவிஞர் கண்ணதாசனின் கூட்டாளியாக இருந்தவர்தான் கருணாநிதி. இதை கருணாநிதியே கண்ணதாசனின் பிறந்தநாள் விழா மேடையில் பேசி உள்ளார். அதுபோல், இரவு முழுவதும் கண்விழித்து சீட்டாடும் பழக்கமும் கருணாநிதிக்கு பால்ய காலத்தில் இருந்துள்ளது. ஆனால், பொறுப்புகள் கூடக்கூட இதுபோன்ற பழக்கங்களில் இருந்து கருணாநிதி தன்னை விடுவித்துக் கொண்டார்.

‘டயட்’ என்ற வார்த்தை கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் பிரபலமானது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே அதைக் கடைபிடித்தவர் கருணாநிதி. அவர் 44 வயதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனாதுமே, தனது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டார். காலை சரியான நேரத்துக்கு உணவு, 11 மணிக்கு பழச்சாறு, மதியம் 1.30 மணிக்குள் மதிய உணவு, 3 மணிக்கு குட்டித் தூக்கம், 5 மணிக்கு சிற்றுண்டி என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 9 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவார்.

அசைவம் சாப்பிடாத அசைவர் கருணாநிதி!

கருணாநிதி அசைவம் விரும்பி. ஆனால், அவர் மாமிசம் சாப்பிடுவதில்லை. அவருக்கு ஆட்டுக்கறி குழம்பு பிடித்தமானது. ஆனால், அதில் உள்ள கறித்துண்டுகளை எடுத்துக்கொள்ளமாட்டார். கோழிக்கறி அறவே கிடையாது. ஆனால், மீன் நிறைய சாப்பிடுவார். இப்போதும் அவருக்கு மீன் சமைத்து முட்களை நீக்கி அடிக்கடி பரிமாறுவார்கள். அதை விரும்பி சாப்பிடுவார். கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார். முட்டை சாப்பிடுவார். ஆனால், அதில் மஞ்சள் கருவை தவிர்த்துவிடுவார். தாளிக்காத குழம்பு, சட்னிதான் பல காலமாக அவர் சாப்பிடுகிறார். எந்த நிலையிலும், இந்த வழக்கங்களில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. ஆனால், இப்படி இருந்தபோதும், அவருக்கு வயிற்றில் குடல் புண் பிரச்னை ஏற்பட்டது. உடனடியாக தேசிகாச்சாரியாரை நியமித்து, பிரத்யோகமாக யோகா கற்றுக் கொண்டார். தான் விரும்பியது இல்லை என்றாலும் கவலைப்படமாட்டார். இருப்பதை, தனக்கு தகுந்ததாக மாற்றிக் கொள்வார் கருணாநிதி.



ஆர்வம்... ஆர்வம்... ஆர்வம்...

93 வயதில் உடல் தளர்ந்த நிலையிலும், கருணாநிதியை உற்சாகமாக வைத்திருந்தது, அவருடைய ஆர்வம்தான். “இப்போதும் தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தான் உழைக்க வேண்டும்” என்ற கருணாநிதியின் பிடிவாதம் கொஞ்சம்கூட தளரவில்லை. 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், ஸ்டாலினின் லகான் இன்னும் கருணாநிதியின் கைகளில்தான் இருக்கிறது. கருணாநிதியை மிஞ்சி ஸ்டாலினால், இப்போதுவரை எதையும் சாதித்துவிட முடியவில்லை. இப்போதும்கூட ஸ்டாலினுக்கு ஒவ்வொருநாளும் கருணாநிதி செக் வைத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக, காலையில் மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியாக எதையாவது ஒரு கருத்தைத் தெரிவிப்பார். அது செய்திகளில் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை மங்க வைக்கும் வகையில், அதற்கு நேர் மாறாக அல்லது அதைவிட முக்கியமான ஒரு விவகாரத்தை கையில் எடுத்து, கருணாநிதி அறிக்கை விடுவார். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஓ.பி.எஸ்-யிடம் முதலமைச்சர் இலாகாக்களை ஒப்படைத்தது பாராட்டத்தக்கது. நான் அதை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். ஆனால், சிறிது நேரத்தில், கருணாநிதியிடம் இருந்து அறிக்கை வந்தது, “இது தாமதமான நடவடிக்கை. இந்த நடவடிக்கை முதலமைச்சரின் ஒப்புதலுடன்தான் நடைபெற்றதா? என்று அறிக்கை கொடுத்தார். அவ்வளவுதான், ஸ்டாலின் பேட்டி பின்னால் போனது. கருணாநிதி அறிக்கை தலைப்புச் செய்தியானது. தனக்குப்பின் கட்சியைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்... அறிவாலயத்தை நிர்வாகிக்க, நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி ஒருபோதும் தன் வேலைகளில் சுணக்கம் காட்டியதே இல்லை.

பேஸ்புக், ட்வீட்டர்...

இவ்வளவு வேலைகளுக்கு இடையில் தன்னுடைய முகநூல் பக்கத்தையும் அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் பக்கங்களை நவீன் என்பவர் நிர்வகிக்கிறார். ஆனால், அதில் கருணாநிதியின் பதிவுகளுக்கு லைக்குகள் குறைந்தால், என்னய்யா... லைக் எல்லாம் குறையுது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். எது டிரெண்டிங் செய்தி என்பது வரை அப்டேட் செய்து கொள்வார்.



ஏனென்றால்... அவர் கருணாநிதி!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான், கருணாநிதி கொஞ்சம் சொகுசு வாழ்க்கைக்குப் பழகினார். அப்போதுதான் அவருக்கும் சிறுசிறு பிரச்னைகள் வர ஆரம்பித்தன. எண்ணெய் பலகாரம் சாப்பிட்டால் மயக்கம் வர ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக கூட்டங்களில் பல மணிநேரம் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பேசியதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் பேனா பிடித்து எழுதுவதை நிறுத்திவிட்டார். காரணம், தோள்பட்டையிலும் கைகளிலும் வலி வரத் தொடங்கியது. அதன்பிறகு, இப்போதுவரை அவர் ‘டிக்டேட்’ செய்யச் செய்ய உதவியாளர்கள் எழுதுகின்றனர். உடலின் எடையை தாங்கும் சக்தியை கால் மூட்டுகள் இழந்தன. உடனே, அதில் கௌரவம் பார்க்காமல், தனக்கு ஏற்றார்போல, சக்கர நாற்காலியை வடிவமைத்துக் கொண்டார். அதில் வலம்வந்து உழைத்துக் கொண்டிருந்தவரை, 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்வி மிகவும் பாதித்தது. அந்த வருத்தம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில் தன்னால் பழையபடி உழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது. இப்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு தன்னைப்போல சாமர்த்தியம் இல்லையே என்ற வேதனையும் இருந்தது. இந்த நிலையில்தான், அவர் மேற்கொள்ளும் பிசியோதெரபி சிகிச்சைக்காக தேய்க்கப்படும் எண்ணெய் அவர் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தியது. அதில் உருவான கொப்புளங்களால், அவர் தான் வாழ்நாளில் இருந்திடாத அளவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக கோபாலபுரத்தில் முடங்க வேண்டியதானது. இந்தப் பிரச்னையில் இருந்து அவர் மீண்டபிறகும், அவர் ஒய்வுக்குப் போய்விடமாட்டார். அப்போதும், உற்சாகமாக உழைக்கவே பிரயத்தனப்பட்டுக்கு கொண்டிருப்பார். ஏனென்றால், அவர் கருணாநிதி.

Thursday, December 1, 2016

5 பேரை பலி வாங்கிய 'விபத்து'... இதற்குத்தானா அரசுப் பேருந்துகள்?


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட புள்ளி விவரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை மாநகரில் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் காலாவதியானவை. ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படுபவை. சென்னையில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இதே நிலை தான்.

இதை கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறது விழுப்புரம் அருகே இன்று நடந்த விபத்து. விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டார் கடுமையான காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து சரியான பராமரிப்பு இல்லாத, இயக்க தகுதியற்ற பேருந்து என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள் மக்கள். இந்த புகாரை எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம். சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் தந்த புள்ளி விவரங்கள் தான்.

சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னர் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதாமல் நிறுத்த முற்பட பேருந்து நிற்கவில்லை. பேருந்தை ஓட்டுநர் வளைக்க, எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மிக மோசமான விபத்து பேருந்து முழுமையாக சேதமடைந்திருந்தது. இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5. படுகாயமடைந்தவர் 32 பேர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணம் செய்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சவுந்தரராஜனிடம் பேசினோம். “முண்டியம்பாக்கம் தாண்டி எங்க பஸ் வந்துட்டு இருந்துச்சு. அப்போ ரோட்டோரம் ஒரு ப்ரைவேட் பஸ் நின்னு டிக்கெட் ஏத்திகிட்டு இருந்தாங்க. எங்க பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முடியலை. அந்த பஸ் மேல மோதாம இருக்க பஸ்சை திருப்பினார். எதிர் பக்கம் ரோட்டை தாண்டி எதிர வந்த இன்னொரு மேல பஸ் மோதீடுச்சு. நான் பின்னாடி உட்கார்ந்து இருந்ததால அதிர்ஷ்டவசமா நான் பொழைச்சேன்” என்றார் உதறலாக.

“சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்த கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட TN-32. N-3398 எண் கொண்ட வண்டி டவுன் பஸ் தரத்தில் கூட இல்லை என்பது கண் கூடாக தெரிகிறது. பல பேருந்துகள் ஆயுள் காலம் முடிந்தும் பல ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன. இதுவும் அது மாதிரி பேருந்தாக இருக்கும்," என பலர் சந்தேகம் தெரிவித்தனர்.



"நொறுங்கி கிடந்த பேருந்தின் பக்கவாட்டு கம்பிகள், சீட்டுகள், மேல் கூரை அனைத்தும் ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது. இந்த விபத்தில் இவை எல்லாம் காணாமல் போய் இருந்தன. பயணிகள் உயிரையும் ஓட்டுநர் உயிரையும் பணையம் வைத்து தான் ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களும் இயங்கி வருகின்றன. அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கினால் உயிருக்கு நிச்சயம் உத்தரவாதமில்லை அந்த லட்சணத்தில் தான் போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன.” என்ற கோபம் விபத்தில் சிக்கிய, அதை வேடிக்கை பார்த்த... இன்னும் சொல்லப்போனால் போக்குவரத்து கழக ஊழியர்களிடமே இருந்ததை கவனிக்க முடிந்தது.

வசூலை வாரி குவிக்க அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சாலைகள் என விபத்துகளுக்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கிய ஒன்றாக இணைந்துள்ளது அரசு பேருந்துகளின் மிக மோசமான நிலை. இதன் காரணமாகவே ஆண்டு தோறும் விழுப்புரம், கடலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளால் ஏற்படும் உயிர் பலி அதிகரித்து வருகிறது. 2016 ஜனவரியிலிருந்து நவம்பர் 21 வரை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 710 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றன புள்ளி விவரங்கள். இதில் அரசு பேருந்துகளின் மோசமான நிலையும் முக்கிய காரணம்.

இதற்கு தானா அரசு பேருந்துகள்... இவ்வளவு தானா மக்களின் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை?


படங்கள் : தே.சிலம்பரசன்

* வெள்ளையாக மாற்ற வழி இருக்கு * வரி, அபராதம் முழு விவரம் * மறைத்தால் எல்லாமே பறிபோகும்

Dinakaran Daily News

* வெள்ளையாக மாற்ற வழி இருக்கு * வரி, அபராதம் முழு விவரம் * மறைத்தால் எல்லாமே பறிபோகும்

புதுடெல்லி: கருப்பு பணத்தை கணக்கில் காட்ட மத்திய அரசு கடைசி வாய்ப்பை வழங்கி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக ஜுன் முதல் செப்டம்பர் 30 வரை தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதில் 45 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வெளியிட்டது. இதில் 2.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என்று அறிவித்தது. கடைசி கட்டமாக தற்போது கருப்பு பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்தால் 50 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மீதம் உள்ள 50 சதவீத தொகையில் 25 சதவீதம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதி 25 சதவீத தொகையை 4 வருடம் கழித்தே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் வழிமுறைகள் வருமாறு:

நடப்பாண்டில் ஈட்டிய வருமானம்
1.கையில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
2.நடப்பாண்டு வருமானத்தை கணக்கில் காட்டி அதற்குரிய வரியை கட்ட வேண்டும்.
3. இதில் வருமானவரி பிரச்னை ஏற்பட்டால் நடப்பாண்டில் வருமான உயர்வை கணக்கில் காட்ட வேண்டும்.கணக்கில் காட்டாத பணம் கணக்கில் இல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் உங்களுக்கு 4 வழிகள் உள்ளன. உதாரணமாக, 10 லட்சம் நோட்டுகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இதோ வழிகள்:

1 பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு கணக்கில் காட்டப்படாத வருமானம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
* கட்ட வேண்டிய வரி 50 சதவீதத்தின்படி 5 லட்சம்
* 25 சதவீத பணமான 2.5 லட்சத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்
* மீதம் உள்ள 25% தொகையான 2.5 லட்சத்தை 4 வருடங்கள் கழித்து பயன்படுத்தலாம்.பயன்கள்:
* உங்கள் பணத்தில் 50 சதவீதம் நீங்கள் பெற முடியும்
* இது வெள்ளையாக மாற்றப்பட்ட பணம். எந்த தேவைக்கும் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.
* உங்கள் பணத்தை வெள்ளையாக்க சட்ட விரோத வழிகளை நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை.
பாதிப்பு:
* எதிர்காலத்தில் வருமானவரித்துறையின் பார்வையில் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டியது வரும்.

2 பணத்தை வங்கியில் நம்பிக்கையுடன் டெபாசிட் செய்ய வேண்டும்
* 10 லட்சம் பணத்தை தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம்.
* ஆனால் திடீரென இந்தப்பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரிக்கப்படும்.
* உங்களிடம் சரியான விளக்கம் இல்லாவிட்டால், இந்த 10 லட்சம் ரூபாய்க்கு கீழ்காணும் வகையில் வரி, அபராதம் இருக்கும்.
* 60 சதவீத வரியாக 6 லட்சம் பிடிக்கப்படும்
* கூடுதல்வரியாக1.50லட்சம் பிடிக்கப்படும்
* வருமான வரி அதிகாரி முடிவின் படி அபராதம் 1 லட்சம் விதிக்கப்படலாம்.
* 10 லட்சத்தில் 1.50லட்சம் கிடைக்கும்.பயன்கள்:
* ெசாற்ப பணமாவது கிடைக்கும்
* எந்தவித நோட்டீஸ் மற்றும் பிரச்னைகள் ஏற்படாது என நம்பலாம்.
பாதிப்பு:
* சிக்கினால் பெரிய பிரச்னை ஏற்படும்
* விசாரணை நடத்தப்படலாம்.

3கணக்கில் காட்ட முடியாத பணத்தை தூக்கி வீசி விடலாம்
* 50 சதவீத அபராத திட்டத்தில் பலன் பெற முடியாதவர்கள்தான் இப்படி முடிவெடுப்பார்கள்.
* இதன்படி. தூக்கி வீசப்படும் 10 லட்சத்தையும் இழக்க வேண்டியது தான்.
* அரசு மீட்க நினைக்கும் கருப்பு பணம் இதுதான்.

4 சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல்.
* இந்த முறையில் பரிமாற்றம் செய்யும் போது பிடிபட வாய்ப்பு அதிகம் உள்ளது.
* குற்றத்தை ஒப்புக் கொண்டால் 60 சதவீத வரி (30 சதவீத வரி + 30 சதவீத அபராதம்) விதிக்கப்படும்.
* 90 சதவீத வரி விதிக்கப்படும். இதில் 30 சதவீத வரி மற்றும் 60 சதவீத அபராதம் விதிக்கப்படும்.
பயன்கள்:
* எதுவுமே மிஞ்சாது.
* சட்டவிரோதம், எதிர்காலத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
* விசாரணை வளையத்தில் சிக்க வேண்டியது வரும்.

வீட்டில் சேமித்த பணமாக இருந்தால்
* பயமில்லாமல் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
* விசாரணை வந்தால் ஏற்கனவே வருமானவரி கட்டிய ஆதாரங்களை காட்ட வேண்டும்.
* 2.50 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து விசாரணை வருமா?:
* அரசு சந்தேகிக்கும் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்.
* அனைத்து டெபாசிட் பணமும் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படும்.

Wednesday, November 30, 2016

நோ..முழு சம்பளம்: இந்தா பிடி...பத்தாயிரம் ரூபாய் - தலைமைச் செயலக காட்சிகள்..

சென்னை தலைமைச் செயலகத்தில் 5500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்காகவே, தலைமைச் செயலக வளாகத்தில் சில வங்கிகள் இயங்கிவருகின்றன. இன்று சம்பள நாள். தற்போதைய சூழ்நிலைலயில், வங்கி ஏ.டி.எம்-களில் ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், ஊழியர்கள் நேராக வங்கிகளுக்குப் போய் பணத்தை எடுக்க முயன்றனர்.
ஆனால், அங்கே சம்பளப் பணம் முழுவதையும் எடுக்க முடியவில்லை. தலைக்கு ரூ. 10 ஆயிரம்தான் தரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி. தலைமைச் செயலக ஊழியர் சங்க செயலாளர் கணேசனிடம் முறையிட்டனர். அவரும் வங்கித்தரப்பினருடன் பேசியிருக்கிறார்.
வங்கி தரப்பில் சொன்ன தகவல் என்னவென்றால்... "எங்களுக்கு ரிசர்வ் வங்கி தந்ததே...முப்பது லட்சம்தான். நாங்கள்தான், கூடுதலாக வேண்டும் என்று சொல்லி அறுபது லட்ச ரூபாயை வரவழைத்திருக்கிறோம். இந்தப் பணத்தை வைத்து இன்றைய தேதியில் பகிர்ந்துதான் தரமுடியும். 
மேலும் பணம் வந்தால், நிச்சியமாக மீதிப் பணத்தை தருவோம். அதுவும் தவணை முறையாக கூட இருக்கலாம்"  என்று சொல்லிவிட்டர்களாம். பிரதமர் மோடி அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள்.

பென்‌ஷன் பணத்தை எடுக்க முடியாமல் வயதானவர்கள் பரிதவிப்பு


சென்னை:
வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பென்‌ஷன்தாரர்களுக்கு இன்று சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்பட்டன.
அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட சம்பளத்தை பெறுவதற்காக வங்கிகளில் அரசு ஊழியர்கள் இன்று காத்து நின்றனர்.
ஏ.டி.எம். மையங்களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே நாள் ஒன்றுக்கு எடுக்க முடியும் என்பதால் பலரும் வங்கிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களும் பணம் இல்லாமல் பெரும் அளவில் செயலிழந்து கிடப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதற்கிடையில் ஓய்வூதியம் பெறக்கூடிய வயதானவர்கள் வங்கி வாசலில் காத்து கிடப்பது பரிதாபமாக இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணக்கில் போடப்பட்ட பென்‌ஷன் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கிகளில் பணம் இல்லாததால் தங்களின் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் மனவேதனையுடன் ஓய்வூதியதாரர்கள் குமுறினார்கள்.
சின்னகோவிந்தன் (வயது 93):- சென்னை மாநகராட்சியில் லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எனக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் பென்‌ஷன் வருகிறது. இன்று பென்‌ஷன் பணம் போடப்பட்டதால் வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக்கு காலை 7 மணிக்கே வந்து விட்டேன்.
பணத்தை எடுப்பதற்காக எனது பேரன் மணிகண்டனும் வங்கி வாசலில் காத்து நின்றேன். என்னால் நிற்க முடியாததால் கீழே அமர்ந்து விட்டேன். மதியம் 12 மணிக்கு பிறகு பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
இந்த பென்‌ஷன் பணத்தை வைத்து என் செலவுகளை செய்வேன். பணம் இல்லாததால் மீண்டும் நாளை வரவேண்டிய நிலை உள்ளது. எங்களை போன்ற வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கூறிய போதிலும் வங்கிக்குள் விடவில்லை.
பர்வதம்மாள்:- அரசு ஊழியரான எனது கணவர் இறந்து விட்டதால் அவரது பென்‌ஷன் பணத்தை நான் மாதந்தோறும் பெற்று வருகிறேன். இந்த பணத்தை நம்பிதான் என் வாழ்க்கை உள்ளது. அக்டோபர் மாத பென்‌ஷன் பணத்தை என்னால் எடுக்க முடியவில்லை.
வங்கிக்கு பலமுறை வந்தும் பணம் இல்லாததால் திரும்பி செல்கிறேன். இன்றாவது பணம் கிடைக்கும் என்று நம்பி வந்தேன். ஆனால் பணம் இல்லை என்று கூறி விட்டார்கள். எங்களை போன்ற வயதானவர்களை அலை கழிக்காமல் முன்னுரிமை கொடுத்து பென்‌ஷன் பணத்தை வழங்க உதவ வேண்டும்.
முசலையா:- கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் நான் மாநகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பென்‌ஷன் பணம் ரூ.9,500 இன்று போடப்பட்டதால் அதனை எடுக்க வந்தேன். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று கூறி எங்களை வெளியில் நிறுத்தி விட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் இங்குள்ள கூட்டத்தை பார்க்கும் போது இதில் நின்று எப்படி பணத்தை எடுப்பேன் என்று நினைத்து திரும்பி சென்று விடுவேன்.
எந்த வருமானமும் இல்லாத என்னை போன்றவர்கள் பென்‌ஷனை நம்பி வாழ்கிறார்கள். இந்த பணமும் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? பென்‌ஷன்தாரர்களுக்கு பணம் இல்லை என்று கூறாமல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா?

#FoodGuide

பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா..,

கல்யாண பவன் - எழும்பூர் :

இஸ்லாமிய திருமணங்களில் சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாணி 160 ரூபாயிலிருந்தும், மட்டன் 180 ரூபாய்க்கும் வயிறு நிறைய சாப்பிடலாம்.

அல் தாஜ் - ராயபேட்டை :
ராயப்பேட்டை, பெசன்ட் சாலையில் இருக்கிறது அல் தாஜ் பிரியாணி கடை. சிக்கன் 80 ரூபாயிலிருந்து, 130 ரூபாய் வரையில் கிடைக்கிறது. மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் முந்திக் கொள்வது நல்லது. வாணியம்பாடி பிரியாணியை டேஸ்ட் செய்ய நினைப்பவர்கள் அல் தாஜுக்கு ஒரு ரவுண்ட் போய் வரலாம். "சென்னையிலேயே நாங்க மட்டும் தான் குறைவான விலைக்கு கொடுக்குறோம்" என்கிறார் கடையின் உரிமையாளர்.





ஆற்காடு பிரியாணி - போரூர் :
இந்தியாவிலேயே ஆற்காடு பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். ஆற்காடு வரைக்கும் போய் சாப்பிட முடியாதே என வருந்துபவர்களுக்காகவே இருக்கிறது போரூர் ஆற்காடு பிரியாணி. சிக்கன் பிரியாணி 110 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. "20 வருடங்களாக நடத்தி வருகிறோம். இந்த பகுதியில யாரை கேட்டாலும் எங்க கடை பேரை தான் சொல்லுவாங்க." என பூரிக்கிறார் கடையின் உரிமையாளர்.

பாரடைஸ் - பெருங்குடி :
ஓ எம் ஆர் ரோட்டில் இருக்கும் ஐ.டி பார்க் இளசுகளின் பேவரைட் பிரியாணி ஸ்பாட் பாரடைஸ். கிட்டத்தட்ட 63 வருட பாரம்பரிய சுவையை கொண்டது பாரடைஸ் ,பெருங்குடியில் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது.இருந்தாலும் கூட்டம் அள்ளுகிறது. சிக்கன் பிரியாணி 170 ரூபாயிலிருந்தும், மட்டன் 180 ரூபாயிலிருந்தும் விலை ஆரம்பிக்கிறது.

உமர் பிரியாணி - கிரீம்ஸ் சாலை :
அண்ணா சாலையிலிருந்து கிரீம்ஸ் சாலைக்குள் நுழைந்தால் அஜீஸ் முல்க் முதல் தெருவில் இருக்கிறது உமர் பிரியாணி. குறைந்த விலையில் சுவையான சிக்கன் பிரியாணிக்கு பெஸ்ட் சாய்ஸ் உமர் பிரியாணி கடை.

அக்பர் பிரியாணி கடை - பெரியமேடு :
பெரியமேடு சாமி தெருவில் அமைந்திருக்கிறது அக்பர் பிரியாணி கடை. 1978 லிருந்து அக்பர் என்பவரால் இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் ஃபுல் கட்டு கட்டலாம். இரண்டு பிளேட்களில் வைத்து தருகிறார்கள். சிக்கன் பிரியாணி 100 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 120 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி வரைதான் பிரியாணி கிடைக்கும் மக்கா..!!

யா - முஹைய்யதின் பிரியாணி - பல்லாவரம் :

பல்லாவரம் சுற்றுவட்டாரத்தில் யாரைக் கேட்டாலும் வழி காட்டுகிறார்கள் யா- முஹைய்யதின் கடைக்கு. டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றால் சுடச் சுட ஒரு பிடி பிடிக்கலாம். மட்டன் பிரியாணி 160 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி 120 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

ஆசிப் அண்ட் பிரதர்ஸ் - ஆலந்தூர் :
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை தாண்டி தாம்பரம் செல்லும் வழியில் திரும்பினாள் சில நூறு அடிகளிலேயே வரவேற்கிறது ஹாசிப் அண்ட் பிரதர்ஸ். சென்னையின் பல பகுதிகளிலும் இதன் கிளைகள் இருக்கிறது. வழக்கமாக சாப்பிடும் பிரியாணியை தாண்டி ஸ்பெஷலாக ஏதாவது சாப்பிட நினைப்பவர்கள் முஹல் பிரியாணியை டேஸ்ட் பண்ணலாம். பிரியாணியின் விலை 160 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

சார்மினார் பிரியாணி - ராயபேட்டை :

ராயப்பேட்டை பெசன்ட் சாலையிலேயே அமைந்திருக்கிறது சார்மினார் . நின்று கொண்டு தான் சாப்பிட முடியும் என்றாலும் டேஸ்ட் அந்த சிரமத்தை மறக்கச் செய்யும். அரை பிளேட் சிக்கன் பிரியாணி 60 ருபாய் தான். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதால் வாகனங்களை நிறுத்துவதில் மட்டும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது.

தலப்பாக்கட்டி - ராமாபுரம் :
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் எனச் சொல்லலாம். திண்டுக்கல்லில் நாகசாமி நாயுடு என்பவரால் 1957ல் ஆரம்பிக்கப்பட்டது தலப்பாக்கட்டி பிரியாணி. அதன் தனித்த சுவையால் இன்றும் பலரை ஈர்த்து கொண்டிருக்கிறது. ராமாபுரத்தை ஒட்டி இருக்கும் பல ஐடி ஊழியர்களுக்கு தலப்பாக்கட்டி தான் வீக்எண்ட் ஸ்பெஷல்.



புகாரி - ராமாபுரம் :
சென்னையில் பிரியாணிக்கு பிரபலம் என்றால் அது புகாரி தான். புகாரி பிரியாணிக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம். சென்னையின் பல பகுதிகளிலும் புகாரியின் கிளைகள் இருக்கின்றன.

ஐலாபுரம் பிரியாணி - போரூர் :
போரூர் கோபால கிருஷ்ணா திரையரங்கத்துக்கு அருகே இருக்கிறது . சிக்கன் பிரியாணி 170 ரூபாய்க்கும், சிக்கன் பாட் பிரியாணி 230 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மட்டன் பிரியாணி 260 ரூபாய்க்கும் கிடைக்கிறது. காரசாரமான ஆந்திரா சுவைக்கு ஐலாபுரம் பிரியாணியை நாடலாம்.

வங்கிகளோடு மோதும் அரசு ஊழியர்கள்!  - 60 ஆயிரம் கோடி சம்பளப் பணம்


மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பணம் இன்று மாலை முதல் வழங்கப்பட இருக்கிறது. 'அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு விநியோகிக்கும் அளவுக்கு வங்கிகளில் போதிய பணம் இல்லை. வங்கி ஊழியர்களோடு மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்" எனக் கொந்தளிக்கின்றன அரசு ஊழியர் சங்கங்கள். 

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், ஒட்டுமொத்த வணிகம் முடங்கியுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அதேநேரம், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடா தொடங்கினால், ஒரேநாளில் நான்கு கோடிப் பேர் வரையில் வங்கி ஏ.டி.எம்களை முற்றுகையிடுவார்கள். இதனால் தேவையற்ற சம்பவங்கள் நிகழலாம்' என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் 'சி' பிரிவுஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாக அளித்தனர். இதனால் அரசின் இதர பிரிவு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கடை நிலை ஊழியர்கள் அனைவரும் மளிகை, பால், அன்றாட செலவுகள் என அனைத்துக்கும் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ளனர். நாளை காலை முதல் வங்கிகளின் பண விநியோகம் சீராக இல்லாவிட்டால், மிகப் பெரும் மோதல் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம். “நாளை காலை முதல் சம்பளப் பணத்தை எடுப்பதற்காக அரசு ஊழியர்கள் வங்கிக்குப் படையெடுப்பார்கள். மத்திய அரசில் பணியாற்றும் 33 லட்சம் ஊழியர்களின் மொத்த சம்பளம் 15,500 கோடி ரூபாய். இதில் 14 லட்சம் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர்.

மத்திய அரசிடம் பென்சன் பெறுபவர்கள் 52 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம், மாநில அரசில் பென்சன் பெறுபவர்கள் கிட்டத்தட்ட 1 கோடிப் பேர் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர். தவிர, மாநில அரசில் பென்சன் பெறுபவர்கள் மட்டும் 70 லட்சம் பேர். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், இரண்டரை கோடிப் பேர் வருகின்றனர். இதுதவிர, தனியார் நிறுவனங்களில் பணிபுரியக் கூடியவர்கள் இரண்டு கோடிப் பேர் உள்ளனர். இன்றிலிருந்து மூன்று நாட்கள் சம்பளப் பட்டுவாடா நடக்கும்.

மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இவர்களுடைய கணக்கில் சம்பளமாகவோ பென்சனாகவோ நாளை காலைக்குள் பணம் போடப்பட்டுவிடும். இந்தப் பணத்தில் முதல் மூன்று நாட்களுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துவிடுவார்கள்.

அதற்கேற்ப ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.  பண விநியோகம் பாதிக்கப்பட்டால், அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். எனவே, தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு கூடுதலான 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ வழங்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், வங்கி ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையில் மோதலாக மாறக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஆதங்கத்தோடு. 

“ஊழியர்களின் சம்பளத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டங்களை நடத்தினோம். குறிப்பாக, நிலைமை சீரடைவதற்கு 50 நாட்கள் ஆகும் என பிரதமர் சொல்கிறார். எனவே, இரண்டு மாத சம்பளத்தை ரொக்கமாகக் கொடுத்துவிடுங்கள் என்றோம். மத்திய அரசின் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ரொக்கமாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். 'டி' பிரிவு ஊழியர்களுக்கு அப்படி எதுவும் கொடுக்கவில்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் செக் கொடுத்தால், வீட்டின் உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாடு முழுவதும் உள்ள 10 கோடி கடைகளில் கார்டு பயன்படுத்தும் வசதி 2 சதவீத கடைகளில்கூட இல்லை.

காய்கறி, பால் என வீட்டிற்குத் தேவையான பொருட்களை ரொக்கம் கொடுத்துத்தான் வாங்க முடியும். நாளை முதல் அரசு அலுவலை விட்டுவிட்டு வங்கிகளுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலை அரசு உருவாக்கிவிட்டது. ரொக்கமாக பணத்தைக் கொடுத்தால், பணச் சுழற்சிக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும். ஏ.டி.எம்களில் இரண்டாயிரம் ரூபாயை எடுத்தாலும், அதை சில்லறையாக மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. நாளை முதல் ஏற்படப் போகும் அசாதாரண சூழலுக்கு ஏற்ப எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் அரசு செய்யவில்லை” என வெடிக்கிறார் மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன். 

தமிழக அரசில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்யவில்லை. வங்கிகளில் போடப்பட்ட சம்பளப் பணத்தைக் கையில் எடுப்பது எப்படி என்ற விவாதமே அரசு அலுவலகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

Singapore students top in maths and science

Amelia Teng
The Straits Times
30 November 2016

Students here have been ranked the world's best in mathematics and science by a key global study.

The Trends in International Mathematics and Science Study (TIMSS) also showed improvements by Singapore students in reasoning and applied learning, and progress made by weaker students.

The results, said the Education Ministry, show that moves to trim syllabuses in 1998 and 2003, and give more time to higher-order thinking skills are paying off. Programmes that cater to students' different learning needs are also bearing fruit, it said.

This is the second time that students here outdid those from all other countries across all four categories in TIMSS, which takes place every four years. The last time this happened was in 2003.

The latest test was conducted here in 2014.

A total of 12,600 Primary 4 and Secondary 2 students across all 179 primary schools and 167 secondary schools, and academic streams, were included in the sample. They were among over 582,000 students from 64 education systems tested.

Primary 4 pupils here had the highest mean score of 618 in maths, with those in Hong Kong coming in second with a score of 615. The same pupils also attained the best score of 590 in science, beating those in South Korea, which had 589.

Sec 2 students who sat the test were also ranked first with top scores of 621 and 597 for mathematics and science respectively, beating students in South Korea and Japan which came in second.

The proportion of students with the lowest score of below 400 was also much smaller than the international average. Just 1 per cent of Singapore students scored below 400 for Primary 4 maths, for instance. The global average was 7 per cent.

The test was administered by the International Association for the Evaluation of Educational Achievement, a non-profit research cooperative based in Amsterdam.

A further analysis of the scores showed that Singapore students are getting better in tackling non-routine questions and those requiring them to apply knowledge. For instance, Sec 2 students scored 616 in reasoning for maths, up from 589 scored by the 2007 batch.

Educators attributed these improvements to schools focusing more on inquiry-based teaching and learning over the last decade.

Dr Ridzuan Abd Rahim, a lead curriculum specialist in maths, said: "Today, you'll see in our maths classroom children talking and reasoning a lot more. They are asked to explain their statements and conclusions.

"When students speak up more, teachers can also see what level of understanding they are at."

Dr Chin Tan Ying, a lead curriculum specialist in science, noted that there has been a gradual shift towards encouraging students to "ask questions, collect evidence, explain things".

"This allows students to play a very active role in the learning process," she said, adding that there is also less need to memorise facts.

"Some of these facts can even be presented in exam questions, just like how you can Google for information these days... So, instead, we encourage students to think deeper based on the information given."

ரகசியத்தால் வந்த வெற்றி!

By எஸ். ராமன்  |   Published on : 30th November 2016 01:15 AM
நவம்பர் 8, 2016-ஆம் நாளுக்கு இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய இடம் உண்டு. 8-ஆம் தேதி, இரவு எட்டு மணிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு, பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. உலக நாணய விலக்கு வரலாற்றில் இது ஒரு பெரும் நிகழ்வு என பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான், அறிவிப்பில் கடைசிவரை ரகசியம் காக்கப்பட்டது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை, குறிப்பிட்ட காலத்திற்குள், 4,000 ரூபாய் வரை, வங்கிகளில் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம் மீதி தொகையை, டிசம்பர் 31-க்குள் வங்கி கணக்குகளில் செலுத்தலாம் என்ற திட்டத்தில் அடங்கிய சலுகையை உற்று நோக்கினால், சாதாரண குடிமகனை பொருளாதார இழப்புகளுக்கு உட்படுத்தக்கூடாது என்ற அரசாங்கத்தின் நுண்ணிய நோக்கம் புரியும்.
எதிரி எதிர்பார்க்காத தருணத்தில், தொடுக்கப்படும் திடீர் தாக்குதல்கள்தான், வெற்றிக்கு வழிகாட்டும் சிறந்த போர் தந்திரமாகும். அந்த போர் தந்திரம்தான் உயர்மதிப்பு நோட்டு விலக்கு அறிவிப்பில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
எனவே, முன் எச்சரிக்கை இன்றி வெளியான திட்ட அறிவிப்பு தவறானது என்ற வாதம் ஏற்க கூடியது அல்ல. முன் அறிவிப்புகள், திட்டத்தின் முக்கிய நோக்கத்தை முற்றிலும் முறியடித்திருக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.
அதிக மதிப்புள்ள நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது ஒன்றும் நம் நாட்டிற்கு புதிதல்ல. இந்திய சுதந்திரத்திற்கு முன்னால், 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புழக்கத்திலிருந்த 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதே மதிப்பு நோட்டுகள், 1954-ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.
1978-ஆம் ஆண்டு, கருப்பு பண பதுக்கலை கட்டுப்படுத்த, இந்திய அரசாங்கம், 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து விலக்கியது. அந்த சமயத்தில், மொத்த பணப் புழக்கத்தில் அந்த நோட்டுகள் 1.4 சதவீதம் வரைதான் அங்கம் வகித்தன.
அந்த காலக்கட்டத்தில், ஒரு 1000 ரூபாய் நோட்டு, மும்பையின் முக்கிய பகுதியில் 5 சதுர அடி நிலத்தையோ, சென்னை புறநகர் பகுதியில் 600 சதுரஅடி நிலத்தையோ வாங்கும் அளவுக்கு மதிப்பு உடையதாக திகழ்ந்தது. எனவே, அந்த உயர் மதிப்புள்ள நோட்டுகளின் விலக்கலின் தாக்கம், அந்த தருணத்தில் சாதாரண மக்களால் அதிகம் உணரப்படவில்லை.
1978-ஆம் ஆண்டு நிகழ்வின்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னர், அரசின் கொள்கை முடிவை "இது அரசியல் எதிரிகளை முடக்க இயற்றப்பட்ட திட்டம் போல் தெரிகிறது' என்று வெளிப்படையாக விமர்சித்தார். ஆனால், தற்சமயம், ரிசர்வ் வங்கி, அரசின் கொள்கை முடிவில் முழுவதும் ஒத்துப்போயிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
புழக்கத்தில் இருக்கும் நாணய விலக்கல் முறை (Demonetization of currency) வெவ்வேறு தருணங்களில் பல நாட்டு அரசாங்களால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பின்பற்றப்பட்டு வந்திருப்பதை சர்வதேச நாணய வரலாற்றை புரட்டுவதன் மூலம் அறியலாம்.
1969-இல் 10,000 மற்றும் 1,000 டாலர் நோட்டுகள், கருப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க அரசால் விலக்கப்பட்டது. திட்டத்தின் வெற்றியால், விலக்கப்பட்ட அதிக மதிப்பு நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
1982-இல், ஆப்பிரிக்க நாடான கானா, வரி ஏய்ப்பையும், கள்ளப் பணத்தையும் கட்டுப்படுத்த, உயர்மதிப்பு நாணயத்தை புழக்கத்திலிருந்து விலக்கியது. திட்டத்தின் தொலைநோக்கு நலன்களை மக்கள் புரிந்துகொள்ளாததால், அந்த திட்டத்தின் நோக்கம் தோல்வியை தழுவியது.
1984-இல், நைஜீரிய அரசு புழக்கத்திலிருந்த பழைய நோட்டுகளுக்கு தடை விதித்து, புதிய நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏற்கெனவே அயல் நாட்டு கடன்களிலும், பணவீக்கத்திலும் மிதந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், அந்த அதிர்ச்சியை உள்ளிழுக்க முடியாமல் பலவீனம் அடைந்தது. திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் சரியாக கணிக்கப்படாதது, திட்ட நோக்கு தோல்விக்கு காரணமாக அமைந்தது.
1996-இல் ஆஸ்திரேலிய அரசு, புழக்கத்தில் இருந்த அனைத்து காகித நாணயங்களையும் விலக்கி, கள்ளத்தனமாக அச்சடிக்க முடியாத பிளாஸ்டிக் நோட்டுகளை (counterfeit-resistant polymer plastic bank notes)   அறிமுகப்படுத்தியது, மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
2002-இல், ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தனி நாணயங்கள் புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவான யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999 லிருந்து 2002 வரை இந்த நடவடிக்கைகள் பல கட்டங்களில் நிகழ்ந்து முழுமை பெற்றன.
ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவான பல வருடங்களுக்கு பிறகுதான், பொது நாணயமுறை அமல்படுத்தப்பட்டது.
2010-இல் வடகொரிய அரசு, கள்ளச் சந்தையின் தாக்கத்தை குறைக்க புழக்கத்திலிருந்த நாணயங்களின் மதிப்பிலிருந்து கடைசி இரண்டு பூஜ்யங்களை அதிரடியாக நீக்கி, நாணயங்களின் மதிப்பைக் குறைத்தது.
சாதாரண குடிமகன்களின் நலனை மனதில் கொள்ளாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதால், அந்நாட்டு நடுத்தர வர்க்கத்தை இத் திட்டம் பெருமளவில் பாதித்தது.
திட்டங்களின் நோக்கம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அவற்றை அமல்படுத்தும் நடைமுறைகளும் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை முந்தைய பொருளாதார வரலாறுகளிலிருந்து அறியலாம்.
4,000 ரூபாய் வரை, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்கு பிறகு, ஏராளமான மக்கள் தங்கள் அடையாள ஆவணங்களின் நகல்களை வங்கிகளில் கொடுத்து, நோட்டுகளை மாற்றினர்.
ஒருவரே, பலமுறை மாற்றுவதை தடுக்க, மாற்றியவர்களின் விவரங்களை வங்கி பதிவேடுகளில்(computer system)   பதிய வேண்டியது அவசியம். ஆனால், வங்கிகளால் அம்மாதிரி நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுவே, பல முறைகேடுகளுக்கு வித்திட்டது. இதற்கு பிறகுதான் மை இடும் யோசனை அரசுக்கு வந்தது.
மை தீட்டும் திட்டத்திற்கு பிறகு, வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற காத்திருந்த பெரும் கூட்டம் குறைந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. இம்மாதிரி நுண்ணிய விவரங்கள் அதிகார வர்க்கத்தினால் முன்கூட்டியே கணிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
அறிவிப்புக்கு முன்பு, புழக்கத்தில் இருந்த நாணயங்களில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் 86 சதவீதம் பங்கு வகித்தன. அவை முற்றும் அகற்றப்பட்ட நிலையில், அதிக மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன.
அதற்கு பதிலாக, புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தால், தற்போது நிலவும் குழப்பங்களை ஓரளவு குறைத்திருக்கலாம். 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு நடுவில் பெரும் இடைவெளி நிலவுவதால், அந்த இடைவெளியை நிரப்ப புதிய 200 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஏனோ அறிமுகப்படுத்தவில்லை. பரவாயில்லை, இனியாவது அறிமுகப்படுத்த வேண்டும்.
ஏ.டி.எம். மெஷின்களின் மூலம் பணம் பெறமுடியாததற்கு ஒரு காரணம் அவற்றை புதிய நோட்டுகளின் வடிவமைப்புக்கு ஏற்றபடி, சீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், தற்போதைய முறைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் எடுக்கப்படும் தொகைக்கான அளவு மாற்றி அமைக்கப்படவேண்டும்.
ஏ.டி.எம்.களின் சீரமைப்புக்குத் தேவையான சில உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது. பிரதமரின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மற்ற நாடுகளைச் சாராமல், சிறிய உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முற்பட்டால், இம்மாதிரி முக்கிய தருணங்களில் கால தாமதம் ஏற்படாது அல்லவா?
அதை தவிர, வங்கிகளில் போதிய பண இருப்பு இல்லாதது, வாடிக்கையாளர் பணம் பெற முடியாததற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.
நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த கடினமான தருணத்தில், வங்கி ஊழியர்களின் அயராத சேவை அனைவராலும் போற்றப்பட வேண்டியதாகும். அதேசமயத்தில், பணம் மாற்றுவதில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், பிரதமரின் விருப்பத் திட்டமான "ஜன் தன்' கணக்குகளில், நவம்பர் 9-ஆம் தேதிக்கு பிறகு 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பணம் செலுத்தப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். சாமானிய மக்களின் அறியாமையையும், வறுமையையும் கருவியாக்கி இந்த கணக்குகள், கருப்பு பண மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த கணக்குகளிலிருந்து பணத்தை திரும்ப கொடுப்பதற்கு முன்பு, அந்த பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு ஒத்துழைத்து உதவி செய்ய முன்வரும் "ஜன் தன்' வாடிக்கையாளர்களுக்கு அரசு தகுந்த வெகுமதி திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
"இந்திரா காந்தி இந்திய மேம்பாட்டு ஆய்வக'த்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பணப்புழக்கக் குறைவினால் சந்தைகளில் விவசாயப் பொருள்களின் வரத்து பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால், விவசாய கூலி தொழிலாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தில், நீண்ட காலமாக புரையோடி போயிருக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை ஒடுக்க, உயர்மதிப்பு நாணய விலக்கல் திட்டம் மட்டும் போதாது. அம்மாதிரி நடவடிக்கைகளின் அடித்தள காரணங்களை ஆராய்ந்து, அவை முற்றிலும் அகற்றப்பட்டால்தான், இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறியதாக கருதமுடியும்.
பொருளாதார முன்னேற்றத்தில் ஓட்டமெடுக்க ஆரம்பித்திருக்கும் தருணத்தில், நாட்டின் பல்வேறு துறைகளை தாற்காலிகமாக முடக்க வல்ல நாணய விலக்கு திட்டம், ஓடும் வண்டியின் சக்கரத்தில் சுடுவதுபோல் ஆகும். பஞ்சர் ஆன சக்கரத்தை தாமதமின்றி செப்பனிட்டு, வண்டியை மீண்டும் ஓட வைக்கும் முயற்சியில், அரசு ஈடுபட வேண்டும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

Madras university circular irks section of profs

CHENNAI: The registrar of Madras University has issued a circular instructing all heads of departments and faculties to get prior approval from him for conducting any seminar, conference, workshop or any other programme on the university premises.

The circular, dated November 23, has not gone down well among a section of professors, who say that this is a move to curb their academic freedom, which is unwarranted as a university should be open for public debate and exchange of ideas.

"The circular states that this is an instruction by the authorities. As far as the university is concerned, the authorities are the syndicate, senate and academic council. But no such resolution has been passed in these bodies. This circular is illegal," said G Ravindran, general secretary of Madras University Teachers Association (MUTA) and head of the journalism department. Observers say that the decision was prompted by two specific incidents. Last week, around 30 students of the journalism department had conducted a programme protesting against the new education policy of the Centre using traditional music instruments. Some professors reportedly complained to the registrar that the drumbeats had disturbed their classes.

Secondly, a conference hosted by the university around two weeks ago had invited foreign experts without the necessary clearances from central intelligence agencies. Sources indicated that higher-ups in the education department were questioned by the Central government regarding the event. The circular was issued to avoid a repeat of such an incident, the sources added. Another professor recalled the delay in getting permission for a seminar in the aftermath of the Rohit Vemula suicide last year and said that such a circular would allow the authorities to curb voices of dissent in the university.

The registrar David Jawahar told TOI that there was no specific reason for the circular. "We need to make sure that in case of any political event, we get police protection if there is any agitation. In case of certain functions, there is a protocol involved where the governor has to be invited," he said.

Madras University convocation put off indefinetly

CHENNAI: The 159th convocation of Madras University, which was scheduled to be held on December 1, has been postponed indefinitely, an official communication on Tuesday evening stated. Administrative issues were cited as the reason.

The decision came even as students were lining up at the university offices to collect their tokens for the convocation. Professors said many students from abroad, who spent thousands of rupees to come to Chennai for collecting their certificates, have been left in the lurch.

The decision to postpone the convocation came after a meeting held by the office of the governor, who is also the chancellor of the university, with the registrar and the controller of examinations (CoE) on Monday evening.

The meeting was called after the university took the controversial decision to affix the signature of higher education secretary A Karthik on the degree and diploma certificates in place of that of the vice-chancellor. Karthik is the chairman of the VC convenor committee that is discharging the duties in the absence of the VC. The university has not had a VC since January when R Thandavan exited the position.

Sources said the governor's office asked the officials for an explanation why due procedures were not followed. A letter from the university was submitted to the governor's office on Tuesday intimating him about the postponement. The Professors Forum of Madras University had submitted a memorandum stating that the legal opinion given by the advocate general to affix the signature of the higher education secretary on the certificates was not ratified by the syndicate before announcing the convocation. The dissent note signed by seven syndicate members opposing this decision too wasn't added to the minutes, the letter said.

Professor SS Sundaram, general secretary of the forum, said this embarrassment for the university could have been avoided if due procedures were followed. "The syndicate meeting should take place every month, which is not happening. This has resulted into a major confusion for thousands of students as the postponement has come just two days before the event," he said.

Printing of Rs 500 notes doubles, but shortage sparks rumours

MUMBAI: Currency notes of the new Rs 500 denomination continues to be in short supply. Much of the new cash that banks are getting are in notes of Rs 2,000.

The continued cash shortage has led to rumours that the government has stalled printing because of glitches, but the Reserve Bank of Indiahas assured that the supply of Rs 500 notes is on. In fact, printing has been more than doubled.

"The absence of the Rs 500 note in the system is reducing the acceptability of the higher value Rs 2,000 note. Without the Rs 500 note, not to mention Rs 100, customers are not able to get change for the highest denomination note. But lower value notes are not circulating," said an official with a private bank. More notes of Rs 500 would also ease the pressure on ATMs.

Last week, there were several instances where the new Rs 500 notes were found to vary from one another. The difference in printing led to fears that some of them might be fakes. But the RBI clarified that some notes may have been released with printing defects, but they continue to be legal tender.

Prior to demonetisation, over 1,660 crore pieces of Rs 500 notes were in circulation, representing nearly Rs 8.3 lakh crore of total currency in circulation. Bankers say that now, less than Rs 2,000 crore in new Rs 500 notes has come in.

Sources say the currency presses owned by the government at Nashik and Dewas are printing Rs 500 while the RBI's currency presses in Salboni (West Bengal) and Mysuru are printing Rs 2,000 and Rs 100 notes. At the Currency Note Press at Nashik, the capacity has been more than doubled to this week 80 lakh pieces (Rs 400 crore) a day.

Adult son has no legal right to stay in parents' house, rules HC

NEW DELHI: An adult son has no legal right to stay in his parents' self-acquired property, the Delhi high court has ruled while upholding the wishes of an elderly couple who wanted their son and daughter-in-lawevicted from their house.

Justice Pratibha Rani said a person can reside in his parent's house only at their "mercy". The court specified that just because parents had allowed the son to live in their house when their relations were cordial did not mean they had to bear his "burden" throughout his life.

"Where the house is self-acquired by the parents, the son, whether married or unmarried, has no legal right to live there. He can live only at the mercy of his parents up to the time they allow it," said the order. The case had come to the high court after the son challenged the order of a trial court in favour of the parents.

The parents, both senior citizens, had told the lower court that both their sons and daughters-inlaw, who were living with them on the first and second floors respectively, had made their "life hell". The couple had filed police complaints against them and issued public notices in 2007 and 2012 disowning the children.

"Merely because the parents have allowed him to live in the house so long as his relations with them were cordial does not mean that they have to bear his burden throughout his life," the court observed in its ruling earlier this month.

The sons had refuted the allegations and claimed that they were coowners of the property as they had contributed towards its purchase and construction. However, the sons failed to produce proof that they invested in the parents' property.

In the order, Justice Rani noted that the sons were unable to prove that they were co-owners of the property , while the parents produced the relevant papers, such as the general power of attorney , agreement to sell, possession letter, affidavit, etc.

NEWS TODAY 27.09.2024