Sunday, December 6, 2015

மழை சற்று ஓய்ந்ததால் சென்னை மக்கள் நிம்மதி; ஒரு சில பகுதிகளில் இயல்புநிலை மெதுவாக திரும்புகிறது; இன்னும் வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு-- நிவாரண பணிகள் தீவிரம்; வெளியூர்களுக்கு பஸ்- ரெயில்கள் ஓட தொடங்கின

logo
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST

மழை சற்று ஓய்ந்ததால் சென்னை நகரில் சில பகுதிகளில் மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது. வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு–நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள் ஓட தொடங்கின.
`
சென்னை,

கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து உலுக்கிவிட்டது.

மீட்புப்பணி

மழை வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். உணவு, பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர், மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இயல்புநிலை திரும்புகிறது

தற்போது மழை சற்று ஓய்ந்து இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் விடுவிப்பது குறைந்துள்ளதால் அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளத்தின் அளவு சற்று குறைந்து உள்ளது. சில பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கி இருப்பதால், அங்கு மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப்பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தினர். ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து இருந்தனர்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்கள் குவிந்தன.

மின்சார ரெயில் சேவை

மழை வெள்ளத்தால் பாதித்திருந்த சென்னை புற நகர் மின்சார ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்திருந்தாலும், தற்போது எழும்பூர்–தாம்பரம் இடையே மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு சேவையை பொறுத்தமட்டில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகள், செல்போன் சேவைகள் ஓரளவு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன.

தென் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளத்தால் மின் விபத்துக்கள் நேராமல் தடுக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இப்போது நிலைமைக்கேற்ப, மின் சப்ளை மீண்டும் தொடங்கி உள்ளது.

வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஏராளமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் மற்றும் சென்னை வழியாக செல்லும் ரெயில்களும் நாளை (7–ந் தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. என்றாலும் நேற்று முதல் ரெயில்கள் ஓடத் தொடங்கின.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கான கட்டணம் (கிளார்க் கட்டணம் மட்டும் கழித்து) முழுமையாக திரும்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.டி.ஆர். என்னும் டிக்கெட் டெபாசிட் ரசீதை அளித்து கட்டணங்களை திரும்பப் பெறலாம்.

டிசம்பர் 1–ந் தேதியில் இருந்து ரத்தான டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 4–ந் தேதியில் இருந்து 10–ந் தேதி வரையில் டிக்கெட் டெபாசிட் ரசீது வழங்கப்படும். ரெயில் புறப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு ‘ரீபண்ட்’ விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிவாரண பணிகள் தீவிரம்

மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. வெள்ளம் வடியாத இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புறநகர் பகுதிகளான மணலி, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், பழைய மாமல்லபுரம் சாலை, வரதராஜபுரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை போட்டன.

ராணுவ தளபதி தகவல்

மழை, வெள்ளத்தின் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி தல்பீர் சிங், சென்னை வந்து உள்ளார். நேற்று அவர் 2–வது நாளாக விமானத்தில் பறந்து வெள்ள சேத நிலைமையை ஆய்வு செய்தார். அவருடன் பொது கட்டளை அதிகாரியும் சென்று இருந்தார்.

இது தொடர்பாக ராணுவம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘சிவில் நிர்வாகத்துக்கு தேவைப்படுகிறவரை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள், மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். தேவைக்கேற்ப கூடுதலான படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கூடுதலான பொறியியல் சாதனங்களுடன், மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என ராணுவ தளபதி தல்பீர் சிங் தெரிவித்து இருக்கிறார் என கூறப்பட்டு உள்ளது.

தாம்பரம்

வெள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்து 500 பேரை ராணுவத்தினர் பத்திரமான இடங்களுக்கு மீட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

‘தாம்பரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், டிபன்ஸ் காலனி, தி.நகர், கோட்டூர்புரம், காசி தியேட்டர், பெருங்குடி மற்றும் பிற பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியில் உள்ளன. வெள்ளத்தால் ஏற்படுகிற உடல் நல பாதிப்புகளை சந்திக்கிற வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருந்தகங்களுடன் அமைப்பதற்கு ராணுவம் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது’ எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை

ராணுவ வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தாம்பரம், முடிச்சூர், கோட்டூர்புரம், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளையும், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் பணிகளையும், அந்த படையின் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

16 ஆயிரம் பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு–நிவாரண பணியில் 20 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குழு, இப்போது புதிதாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ஏறத்தாழ 1,600 வீரர்கள், ஐம்பது குழுக்களாக பிரிந்து மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 21 அதிகாரிகளும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர். எங்கள் படையினர், இதுவரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த அளவுக்கு வீரர்களை ஈடுபடுத்தியது இல்லை.

200 படகுகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் தவித்த 16 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இரவு–பகலாக...

தொடர்ந்து மீட்புப் பணி இரவு–பகலாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பொருட்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், மீண்டும் மழை தொடங்குவதற்கு முன் நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில் எங்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் கூட்டம்

இதற்கிடையே டெல்லியில் சி.எம்.ஜி. என்னும் நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டம், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ராணுவம், உணவு, ரெயில்வே, விவசாயம், சுகாதாரம், தொலை தொடர்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத்துறை, தேசிய பேரிடர் படை உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை வெள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இயன்றவரையில் குடிநீர், பால், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சென்றடைவதற்கு தேவையான பணிகளை முழுவீச்சில் நடத்துமாறு அதிகாரிகளுக்கு ராஜீவ் மகரிஷி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, December 4, 2015

100 ஆண்டில் இல்லாத மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதி




சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடையாற்றின் மேம்பாலத்தைக் கடந்து திரண்டு செல்லும் வெள்ள நீர். | படம்: பி.ஜோதிராமலிங்கம்
போட்டோ கேலரி
வெள்ளம் சூழ்ந்த சென்னையின் பேரவலத்தைப் பேசும் படங்கள்


சென்னையில் கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை அளவால் தலைநகரம் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதியுற்றுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், "தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும் பாலான பகுதிகளில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும். நீலகிரி, கோவை போன்ற மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். விட்டுவிட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்" என்றார்.

100 ஆண்டில் இல்லாத அளவு

சென்னையில் கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி 24 மணி நேரத்தில் 26.1 செ.மீ. மழை பெய்தது. இதுவே இதுவரை அதிக பட்ச மழை அளவாக இருந்தது. ஆனால், நேற்று காலை நிலவரப் படி சென்னையில் அதிக பட்சமாக 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக அளவாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

2 நாட்களாக இடைவிடாது கொட்டும் மழையால் மிதக்கும் சென்னை

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டும் கன மழையால் மாநகரமே வரலாறு காணாத அளவுக்கு வெள்ளத்தில் மிதக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கன மழையால் நிரம்பி வழியும் சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாற்றின் குறுக்கே உள்ள பாலங்களும் மூழ்கியுள்ளன. இதனால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.

அடையாற்றின் கரையோரங்களில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களின் மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. சாலைகள் ஆறுகள் போல காட்சிய ளிக்கின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் இணைக் கும் 100 அடி சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோயம் பேடு பேருந்து நிலையத்திலிருந்து மிகக்குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமான நிலையம் மூடல்

மீனம்பாக்கம் விமான நிலை யத்தின் ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. டிசம்பர் 6 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையின் புறநகர் பகுதிக ளான பொத்தேரி, ஊரப்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், முடிச்சூர், மன்னிவாக்கம், மேற்கு தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்மாடி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் 2-வது, 3-வது மாடிகளிலும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உள்ளகரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பட்ர வாக்கம், விநாயகபுரம், கொளத் தூர், பெரம்பூர், வியாசர்பாடி, சூளை, பட்டாளம், புரசைவாக்கம், காசி திரையரங்க பகுதி, அசோக் நகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலை களில் 5 அடி முதல் 8 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. பெரம் பூர் பேருந்து நிலையம் அருகே தெருவில் 5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி புதிய மேம்பாலத்தின் அருகிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு களுக்குள் 5 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

அண்ணாசாலையில் உள்ள மூசா காதிரி தர்காவுக்குள் மழை நீர் புகுந்தது. அந்த தர்கா வளாகத்தில் 2 அடி அளவுக்கு தண்ணீர் சூழ்ந் துள்ளது. அண்ணா சாலை அருகே கூவம் கால்வாய் கரையில் வசித்து வரும் பூதப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீனவர்களின் படகுகளை இரவல் வாங்கி போலீஸார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர். புறநகர் பகுதிகளில் பைபர் படகு, ரப்பர் படகு மூலம் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கு வதற்கு ஏற்பாடு செய்தனர். சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிகள், சமூக நலக் கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தும் இல்லாததால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, மாநிலத்தின் பிற பகுதிகளுடன் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை மாநகருக்கு வெளியூர்களில் இருந்து பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட வர முடியாமல் போனது. மேலும், தொடரும் மழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக நகரின் பல சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

இதனால் கடைகளுக்கு தேவையான பால், குடிநீர் கேன் போன்ற பொருட்களை பிற இடங்களிலிருந்து கொண்டு செல்ல முடியவில்லை. பெரும் பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்படவேயில்லை. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீர், பால் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி: வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் பிரதமர் மோடி அறிவிப்பு


Dinamani

By சென்னை,

First Published : 04 December 2015 03:32 AM IST




சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரிலிருந்து வியாழக்கிழமை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தில்லி புறப்பட்டுச் செல்லும் முன்பாக, பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு, கடற்கரை சாலையில் உள்ள சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமான தள அலுவலகத்தில் நடந்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூடுதல் மீட்புக் குழுக்கள்-பிரதமர் உறுதி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான சேதங்களைக் கருத்தில் கொண்டு, மீட்பு-நிவாரணப் பணிகளில் மேலும் 10 ராணுவக் குழுக்களையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கூடுதலாக 10 ராணுவக் குழுக்களையும், தேசிய மீட்புப் படையைச் சேர்ந்த 20 குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதுகுறித்து உரிய துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உடனடியாக குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம்: கடந்த 23-ஆம் தேதியன்று பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனு குறித்து சந்திப்பின் போது நினைவூட்டிய முதல்வர் ஜெயலலிதா, மீட்பு-நிவாரணப் பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவை எனவும், ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.
மேலும், வெள்ளச் சேதங்களைப் பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைத்தமைக்கும், ரூ.940 கோடியை நிவாரண நிதியாக வழங்கியதற்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். இந்த ரூ.940 கோடி தொகையில், ரூ.133.79 கோடியானது, கடந்த 2014-15 ஆம் நிதியாண்டின் மாநில பேரிடர் மீட்பு நிதியின் பாக்கித் தொகையாகும் என்று தெரிவித்த முதல்வர், மேலும் ரூ.254.62 கோடியானது நிகழ் நிதியாண்டில் மாநில பேரிடர் மீட்பு நிதிக்கான இரண்டாவது தவணைத் தொகையாகும் எனத் தெரிவித்தார்.
இந்தத் தொகைகள் மாநில அரசால் ஏற்கெனவே செலவிடப்பட்டன என்பதைச் சுட்டிக் காட்டிய முதல்வர், மத்திய அரசு ஒதுக்கிய ரூ.940 கோடியில் ரூ.552 கோடியானது 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்ட தமிழகத்துக்கான செலவினத் தொகையாகும். அது, தனித்த திட்டங்களுக்காக வழங்கப்பட்டதே தவிர வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அல்ல என்பதை பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும் சேதங்கள்: கடந்த 23-ஆம் தேதியன்று தங்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்ட சேதங்களைக் காட்டிலும் இப்போது மேலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, மேலும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக கூடுதல் அறிக்கையைத் தயார் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, அந்த அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் தெரிவித்தார்.
கவலை தெரிவித்த பிரதமர்: தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். மேலும், மாநிலத்தில் ஏற்பட்ட கவலைத்தரத்தக்க நிலை குறித்து அவர் தனது கவலைகளைத் தெரிவித்தார். சென்னை நகரம் என்பது வளர்ச்சியின் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் அப்போது தெரிவித்தார்.
ரூ.5,000 கோடி அளிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர்
ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ரூ.1000 கோடியை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக விடுவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: சென்னை வெள்ளப் பாதிப்பு உள்பட தமிழக வெள்ளச் சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

அந்த டிசம்பர் 2-ஆம் நாள்...!


Dinamani


By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 02 December 2015 01:24 AM IST


போபால் விஷ வாயு பேரிடர் நினைவிருக்கிறதா? ஏதோ புகை மூட்டம்போல நினைவு வருகிறது, இல்லையா? பலருக்கு அந்த சம்பவத்தினால் வாழ்க்கையே புகை மூட்டம் ஆகிவிட்டது. அவர்கள் மட்டுமில்லை அந்த சம்பவத்திற்குப பின் பிறந்த குழந்தைகள்கூடப் பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்து புகை மூட்டமாகவே வாழ்கிறார்கள்.
1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நள்ளிரவு நேரம். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. துரும்பு பிடித்த குழாய்கள், கசிந்து கொண்டிருந்த அடைப்புத் தடுக்குகள் (வால்வ்) ஆகியவை காரணமா என்று தெரியவில்லை.
குழாய் உடைந்து தண்ணீர் அங்கிருந்த இ - 610 (உ-610) எண்ணுள்ள அந்தத் தொட்டியில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி.) என்கிற உயிர்க்கொல்லி ரசாயனம் தேக்கி வைத்திருந்த தொட்டி ஒன்றில் பாயத் தொடங்கியது.
மீதைல் ஐசோ சயனேட்டில் தண்ணீர் கலந்ததும், ஏறத்தாழ 40 டன் விஷவாயு உற்பத்தியாகி அடுத்த சில வினாடிகளில் சுற்றிலும் புகைமண்டலமாகப் பரவத் தொடங்கியது. எந்தவொரு ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமல்லவா?
ஆபத்து நிறைந்த யூனியன் கார்பைடின் போபால் பூச்சிமருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் இந்த அளவிலான வெப்பத்தையும், அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்கவில்லை அல்லது சரியாக வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பில் இருந்தன.
பிறகென்ன? புகைமண்டலம் மேலெழுந்து அந்தத் தொழிற்சாலையை அப்படியே சூழ்ந்து கொண்டுவிட்டது. இரவு நேரக் காற்றின் துணையுடன் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த போபால் நகரப் பகுதிகளையும் தனது மரணப் பிடியில் சிக்க வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விஷவாயு.
சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் நுரையீரல்களில் நுழைந்து மரண தாண்டவமாடத் தொடங்கிவிட்டிருந்தது அந்த உயிர்க்கொல்லி ரசாயன வாயு.
அதிகாலை ஒரு மணி அளவில், மூச்சுத் திணறலுடனும், இருமலுடனும் போபால் நகர மக்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் எங்கும் புகைமண்டலம். அருகில் இருப்பவர்களைக்கூடச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. கண்களில், எரியும் கொள்ளியைச் சொருகியதுபோல எரிச்சல். அங்குமிங்கும் மக்கள் ஓடத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு அங்கே ஏற்பட்ட கலவரச் சூழலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பலர். அங்குமிங்கும் பரபரப்பில் ஓடுபவர்களால் மிதிபட்டு இறந்த குழந்தைகளும், முதியவர்களும் கணக்கிலடங்கார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) என்கிற அரசு ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த முதல் நாள் இரவில் மட்டும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையைச் சுற்றிலும் வசிக்கும் ஏறத்தாழ 5.20 லட்சம் பேர்களின் ரத்தக்குழாய்களில் விஷவாயு நச்சு கலந்து அவர்களது அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2-ஆம் தேதி இரவின் விஷவாயுக் கசிவுக்குப் பிறகு, டிசம்பர் 3-ஆம் தேதி காலையிலிருந்து பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்று அனைத்தும் கலந்து ஒரு மிகக் கொடுமையான நாடகம் அரங்கேறத் தொடங்கியது. எல்லோரும் பொய் சொன்னார்கள். அனைவரும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையும், ஏமாளியான இந்திய தேசத்தையும் ஏமாற்றினார்கள். இதில் அரசும் முக்கியப் பங்கு வகித்தது என்பதுதான் உலக ஜனநாயக வரலாற்றில் மன்னிக்கவே முடியாத துரோகம்!
இதுபோன்ற ஒரு விபத்திற்கு தீர்வு காண்பதுபோல ஒரு திருப்திகரமான சட்டத்தை நம் அரசு இயற்றி இருக்கவேண்டும். அதற்கு பின் அந்த விபத்தை அடிப்படையாக கொண்டு பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் குறைபாடுடன்தான் காணப்படுகின்றன.
முதலில் போபால் விஷ வாயு கசிவு (மனுக்களை பரிசீலித்தல்) சட்டம் 1985 (Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act 1985) இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி அரசாங்கமே பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக விண்ணப்பிக்கலாம் என்றிருந்தது. அதாவது உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அரசு தான் விபத்துக்கே காரணம்.
அவ்வாறிருக்கையில் அந்த அரசே பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுவேன் என்றால் அது தர்க்க ரீதியான முரண்பாடு. அரசு எப்படிக் காரணம் என்றால், அரசுதான் யூனியன் கார்பைட் கம்பெனிக்குப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்காமல், விஷவாயு தயார் செய்ய அனுமதித்தது!
இதற்கு முன்பே பல சிறு விபத்துகள் ஏற்பட்டிருந்தன. இருந்தும் அரசு அசட்டையாக இருந்துவிட்டது. பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனத்திற்கு பூச்சிமருந்துத் தயாரிப்பு ஆலை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கித் தன்னுடைய மக்களின் நலனை புறக்கணித்தது. ஆகையால் சட்டத்தின் பார்வையில் அரசே ஒரு கூட்டுக் குற்றவாளி.
அப்படியிருந்தும் பயிரை மேய்ந்தவர்களே வேலியாக நாங்கள் இருக்கிறோம் என்று மகுடம் சூட்டிகொண்டார்கள். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
"பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்கள். அவர்களால் இந்தக் கடினமான வழக்கை நடத்த முடியாது. வழக்கில் அரசு பங்கேற்காவிடில் அவர்கள் தோற்றுவிடுவார்கள்' என்பது தான் அரசுத் தரப்பு வழங்கிய விசித்திரமான வாதம்.
ஆனால், நடந்தது என்ன? மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று அளவிடும் முன்பாகவே யூனியன் கார்பைட் (UCC) உடன் ஒரு சமரசத்திற்கு அரசு வந்துவிட்டது. அந்த 1985}ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு முடிவு பெறுவதற்கு முன்பாக சமரசம் செய்து கொண்டு விட்டது.
மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்ட இழப்புத் தொகையில் 17% தொகைக்கு சமரசம் செய்து விட்டது. இதற்கிடையில், டவ் கெமிகல்ஸ் நிறுவனம் யூனியன் கார்பைட் நிறுவனத்தை அமெரிக்காவில் வாங்கியது. அவ்விரு ஸ்தாபனங்களின் ஒப்பந்தப்படி டவ் கெமிகல்ஸ் யூனியன் கார்பைடின் சொத்தை மட்டும் எடுத்துக்கொண்டது. யூனியன் கார்பைட் வழங்க வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட அதன் உடன்பாடுகள் அந்தரத்தில் விடப்பட்டன.
இவ்வளவு ஆண்டுகள் சென்றபின் பாதிப்பை குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகவும், இழப்பீடு கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு திருத்தல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது அரசு.
யூனியன் கார்பைட், டவ் செமிகல்ஸ் பின்னால் ஒளிந்துகொண்டது, டவ் கெமிகல்úஸா யூனியன் கார்பைட் கடன்பாடுகளுக்கு தான் பொறுப்பல்ல என்று சொல்லிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் தானே, அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன?
1991-இல் பொதுப் பொறுப்பு காப்பீட்டு சட்டம் இயற்றப்பட்டது (Public Liability Insurance Act). இந்த சட்டத்தின் அடிப்படையில் 56.56 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. அதில் 46.45 லட்சம் மட்டுமே ஒரு விபத்திற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், இது போன்ற பெரும் விபத்து நம் நாட்டில் நடக்கவேயில்லையா?
1997-இல் விசாகப்பட்டினத்தில் ஹெச்.பி.சி.எல். தொழிற்சாலை வெடித்தது. 2002-இல் ஐ.பி.எல். வடோதராவில் விஷ வாயு கசிந்து 250 பேர் பாதிக்கப்பட்டனர். 2008-இல் ஜாம்ஷெட்பூரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிந்து, அந்த விபத்தில் 150 பேர் பாதிக்கப்பட்டனர்.
2012-இல் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 19 பேர் உயிர் இழந்தனர். இன்னும் இது போலத் தொடர்கிறது பட்டியல். அவையெல்லாம் விபத்தே இல்லையா? இல்லை, அதில் பாதிக்கப்பட்டவர்கள் நம் கண்களில் படவில்லையா?
தேசிய சுற்றுப்புறச் சூழல் தீர்ப்பாயச் சட்டம் என்று ஒரு சட்டம் இயற்றினார்கள். அதில் அபாயகரமான பொருள்களைக் கையாளுவதால் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று ஒரு ஷரத்து இருந்தது. அந்த சட்டம் அமலுக்கே வரவில்லை.
பிறகு கிரீன் ட்ரிப்யூனல் சட்டம் வந்தது. அதில் இந்த ஷரத்து நீர்த்துப் போனது. எந்த விபத்து நேர்ந்தாலும் இழப்பீடு தருவதாக மாற்றப்பட்டது. இதனால் விஷ வாயு போன்ற அபாயகரமான பொருள்கள் சம்பந்தப்பட்ட பெரிய பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்ற பொறுப்பு வலியுறுத்தப் படாமல் போயிற்று.
இதே யூனியன் கார்பைட் அமெரிக்காவில் நிறுவியிருக்கும் தொழிற்சாலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அசிரத்தையாக இருக்கிறது. அவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லாத அக்கறை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?
வரும் காலத்தில் இது போன்று ஏதாவது நடந்தால், (நடக்கக் கூடாது, நடக்கக் கூடாது) அதற்கு ஒரு முழுமையான சட்டமே இன்னும் வரவில்லையே...
போபாலைப் பற்றி ஓர் ஆவணப் படம் பார்த்தேன். அதில் ஒரு பணியாளர் வருவார். தினமும் தன் இளம் மனைவியிடம் தொழிற்சாலையில் ஏதோ சரியாக இல்லை, பயமாக இருக்கிறது என்பார். யாரும் செவி சாய்க்கவில்லை. அவர் இறந்தார். அது மட்டுமல்ல, அவர்கள் பையன் நிரந்தர பாதிப்புடன் வாழ்கிறான். அந்த இளம் பெண் அழிக்கப்பட்ட வாழ்க்கையுடன் போராடுகிறாள்.
இப்பொழுது அவர் இளம் பெண் இல்லை 31 ஆண்டுகள் ஓடிவிட்டன. இது அந்த நிறுவனம் செய்த படுகொலை அல்லாமல் என்ன? அதுபோன்ற நிகழ்வுகளுக்கும் ஒரு சட்டம் வரவேண்டும்.
2014-இல் வரிசையாக ஆங்கில தினசரி ஒன்றில் போபால் பேரிடர் பன்முகங்களை விளக்கும் வகையில் தொடர்ந்து கட்டுரைகள் வெளிவந்தன. "தினமணி' நாளிதழிலும் "போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!' என்கிற தொடர் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைகளின் அம்சங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
புகை மூட்டத்துக்குள்ளே போபால் பேரிடர் குறித்த நினைவுகள் காணாமல் போய்விடக் கூடாது. இன்றும் அங்கே மக்கள் அதன் விளைவுடன் போராடுகிறார்கள். நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இனிமேலாவது வலுவான சட்டங்கள் வரவேண்டும். அப்படிச் சட்டங்கள் வருவதற்கு நாம் போராட வேண்டும்!
இதே யூனியன் கார்பைட் அமெரிக்காவில் நிறுவியிருக்கும் தொழிற்சாலையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அசிரத்தையாக இருக்கிறது. அவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?
நம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லாத அக்கறை அவர்களுக்கு ஏன் இருக்க வேண்டும்?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை!

Dinamani


By தி. இராசகோபாலன்

First Published : 03 December 2015 01:58 AM IST


அடாது பெய்த மழைநீராலும், விடாது பெய்த மழைநீராலும் நிரம்பிய ஏரி, குளங்களின் விளிம்புகளில் தளும்பிய தண்ணீர், இரண்டொரு நாள்களில் வடிந்துவிடும். ஆனால், அல்லற்பட்டு ஆற்றாது அழுத ஏழை எளியவர்களின் கண்ணீர், எத்தனை நாள் ஆனாலும் வடியாது. இன்றைக்கு மனிதர்களுக்கு மீன் விருந்து நடக்கின்றது, ஒருநாள் மீன்களுக்கு மனித விருந்து நடக்கும் எனச் சொன்ன வி.எஸ். காண்டேகரின் வாக்குப் பலிதமாயிற்றே!
தண்ணீரில் மூழ்கிய ஒருவனை, அத்தண்ணீர் ஒரே முழுக்கில் சாகடித்துவிடாதாம்! அவன் தப்பிப்பதற்கு அவனை மூன்று முறை மேலே கொண்டு வருமாம். அவன் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், கடைசியாகத்தான் சாகடிக்குமாம்!
மழை நம்மை மூன்று முறையன்று, முந்நூறு முறை, மூவாயிரம் முறை எச்சரித்து விட்டதே... நாம்தாம் பாடம் கற்கவில்லை.
பல்லவர்கள் காலத்தில் உத்திரமேரூரில் வயிரமோகன் என்ற குறுநில மன்னன் ஒரு மிகப்பெரிய ஏரியை வெட்டினான். அது வயிரமேகத் தடாகம் என வழங்கப்படுகிறது. அவ்வேரியின் அகலம் போதாதென்று, கி.பி. 802-இல் நந்திவர்மன் மகன் தந்திவர்மன் மேலும் அகலப்படுத்தினான். அவன் பின்னர் வந்த கம்பவர்மன், (கி.பி.868 - 900) கடல்போல் நீர் கொள்ளுமாறும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்காகவும், வயிரமேக தடாகத்தின் கரைகளை மேலும் உயர்த்தினான். பிற்காலப் பல்லவர் காலத்து உத்திரமேரூர்க் கல்வெட்டுக்கள் இருபத்தைந்தில், ஆறு கல்வெட்டுக்கள் அந்த ஏரியை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று சொல்கின்றன.
அவ்வேரியிலிருந்து பாசனத்திற்காக ஏழு வாய்க்கால்கள் வெட்டப்பட்டனவாம்.
1) கணபதி வாய்க்கால், 2) சுப்பிரமண்யர் வாய்க்கால், 3) ஸ்ரீதேவி வாய்க்கால், 4) சரசுவதி வாய்க்கால், 5) பார்வதி வாய்க்கால், 6) பகவதி வாய்க்கால், 7) பரமேசுவரன் வாய்க்கால் என்பன ஆகும். ஏரிகுளங்களைப் பராமரிப்பதற்கு ஏரி ஆயம் என ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆயத்துப் பெருமக்கள் தாம், எந்த நேரத்தில், எந்த வாய்க்காலைத் திறந்துவிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். சங்கக் காலத்தில் ஏரிகுளங்களைப் பராமரிப்பது, மன்னன் பணியாக இருந்தது.
பல்லவர் காலத்தில் மக்கள் பணியாகவும் மாறிற்று. அந்த ஏரியைப் பாதுகாப்பதற்கு அவ்வூர் மக்கள் பூமி தானம், சொர்ண தானம் (தங்கம்) போன்ற ஏழு தானங்களைச் செய்தார்களாம் (தகவல் டாக்டர் இரா. நாகசாமி, உத்திரமேரூர், பக்.35-38). கண்மாய்களைப் பாதுகாத்தலும், கலிங்குகளைக் கண்காணித்தலும் ஏரி ஆயத்தின் பணிகளாம். வாய்க்கால் வழி தண்ணீரைப் பெறுகின்ற விவசாயிகள் வரிகட்ட வேண்டும். தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தினால் தண்டனை உண்டு. இப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்தபோது, மறுபடியும் வெள்ளம் எப்படிப் பெருக்கெடுக்கும்?
ஒவ்வோர் ஆண்டும் ஏரியை ஆழப்படுத்துவார்கள். தோண்டிய மண்ணை எடுத்து, ஏரியின் கரைகளை மேலும் பலப்படுத்துவார்கள்.
ஏரிக்கரையை எப்போதும் வலிமையுடையதாக வைத்திருப்பதற்கு அக்கால மக்கள் செலுத்திய அக்கறை, அர்ப்பணிப்பைப் படித்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. ஏரிக்கரையைச் சுற்றி ஒரு கோல் அளவுக்கு நிலம் வாங்கி, அதனைத் தானமாகக் கொடுப்பார்கள். அதற்குப் பஹிர் பூமி (வெளிநிலம்) எனப் பெயர். இந்நிலத்தில் பயிர் செய்வதோ, வண்டிகளை ஓட்டுவதோ கூடாது.
கரையைச் சுற்றி வலுவான நிலம் இருந்தால்தான், கரை உடைந்து, உடைப்பு எடுக்காமல் இருக்குமாம். கரைகளைக் கெட்டிப்படுத்துவதற்காக அமைந்திருக்கும் குறுங்காடுகளை, புதர்களை யாரும் வெட்டினால் ஐந்து பவுன் தண்டனையாம். (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி ஆறு, எண்கள் 370-375).
வெள்ளம் வராமல் பாதுகாப்பதற்கும், வருகின்ற வெள்ளத்தை மடைமாற்றம் செய்வதற்கும் அமைக்கப்பட்ட மக்கள் தாம் அக்காலத்தில் வெள்ளாளர் என அழைக்கப்பட்டார்களாம் (தகவல்: தமிழ்நாட்டு வரலாறு, வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை, ப.83).
கூர்த்த அறிவுடைய அக்காலத்து மக்கள் குளங்கள், ஆறுகள் இல்லாத இடங்களில் தாம் ஏரிகளை வெட்டியிருக்கிறார்கள். கங்கைக்கரைவரை வென்ற இராசேந்திரசோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் எனும் ஏரியை வெட்டியது அதன் பொருட்டாக இருக்கலாம்.
தென் ஆற்காடு மாவட்டத்தில் திருக்காஞ்சி எனும் ஓர் ஏரி புயலால் உடைபட்டபோது, அதனை உள்ளூர் அரையன் என்ற தனிமனிதர், அந்த ஏரியின் கரையை அடைத்தாராம். ஏரிக்கரையின் இரண்டு பக்கங்களில் கல் அடுக்கி, கற்படைபோட்டுச் சேதம் விளையாதபடி கரை வலுப்படுத்தப்பட்டதாம். திருக்கச்சூருக்கு அருகே ஓர் ஏரி விரிவுபடுத்தப்பட்டது (தகவல்: கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சோழர்கள், பக்.760 - 761).
குலோத்துங்கச் சோழன் மகன் விக்கிரம சோழன் (கி.பி.125) காலத்திலும் இப்படியோர் ஏரியுடைப்பும் பெரு வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் கோவிலுக்குள் அடைக்கலம் அடைந்ததைக் கோவிலடிக் கல்வெட்டு ஒன்று, இவ்வூர்... மாதேவர் கோயிலில் திருமண்டபத்தில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து, பண்ணின பரிசாவது, காலம் பொல்லாததாய் நம்மூர் அழிந்து குடியோடிப் போய்க்கிடந்தமை என்பதாகத் தெரிவிக்கின்றது (தொகுதி: ஏழு, எண்.496).
அந்நேரத்தில் அரசனும், செல்வம் மிக்கவர்களும், தம்பெருங்கொடையால் மக்களை இயன்றவரையில் காப்பாற்றியதோடு, கோயிலதிகாரிகள் அன்னார்க்குக் கடன் கொடுத்து உதவி புரிந்ததாகவும் டி.வி. சதாசிவப்பண்டாரத்தார் தெரிவிக்கிறார் (சோழர் சரித்திரம், பக்.75-76).
இன்றைக்கு மக்கள் படுகின்றபாடு அன்றைக்கும் இருந்திருக்கிறது. ஆனால், அன்றைக்கு இருந்த மக்களுக்கு, அத்துயரச் சம்பவங்கள் மீண்டும் வரக்கூடாது என்பதிலே கவனமும் இருந்திருக்கின்றது.
ஏரிகளைக் காப்பதில் மன்னர்களுக்கு - மக்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி மகேசனுக்கும் இருந்திருக்கிறது. மதுராந்தகம் ஏரியைப் பெருமாள் காக்கின்றார் என்ற தொன்மத்திலே வரலாறும் இருப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது. 1798-ஆம் ஆண்டு மதுராந்தகம் ஏரி வெள்ளப்பெருக்கால் உடைப்பெடுத்து, அதுவொரு தீவாகவே ஆகிவிட்ட சூழ்நிலை.
மதுராந்தகம் ஏரி 13 சதுர மைல் பரப்பளவும் (34 சதுர கி.மீ. பரப்பளவு), 21 அடி ஆழமும் கொண்டது. அத்தகைய ஏரி இடிபாடுகளுக்கு உள்ளாகியதைக் கேட்ட அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் கர்னல் லயனல் பிளேஷ் (1795 - 1799) பேரதிர்ச்சிக்கு உள்ளாகி, ஏரிக்கரையிலேயே முகாமடித்துவிட்டார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்ற லயனல் பிளேஷ், பக்கத்தில் இராமர் கோயிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சலவைக் கற்களைக் கவனித்துவிட்டு, குருக்களாரை அழைத்து, அவற்றைப் பயன்படுத்தி, உடைப்புகளை அடைத்துவிடலாம் எனும் யோசனையைத் தெரிவித்தார்.
ஆங்கிலேயன், அவர்களைக் கேட்கவேண்டுமென்ற அவசியம் இல்லை அதனை எடுத்துக் கொள்வது, அவருடைய அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான்.
என்றாலும், நாணயமுடைய அந்த அதிகாரி பூசகர்களின் விருப்பத்தைக் கேட்டார். குருக்கள், அக்கற்கள் ஜானகிவல்லி தாயார் சன்னிதி கட்டுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். அதிகாரி மாற்று யோசனை கேட்டபொழுது, நாம் எல்லாம் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தினால் ஏரியைக் காப்பாற்றிவிடலாம் எனப் பூசகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
உடன் அந்த அதிகாரியும் சேர்ந்து பிரார்த்தனை நடத்தி முடித்தவுடன், அந்த அதிகாரியின் கண்களுக்கு மட்டும், தொலைவில் இராம - இலக்குவனர் மட்டும் வில் அம்புகளோடு ஏரிக்கரையில் நிற்பதாகத் தென்பட்டதாம். ஏரியின் உடைப்புகளும் அடைப்பட்டனவாம்.
இச்செய்தியை அந்த அதிகாரியே கல்வெட்டில் செதுக்கி, ஆலய வளாகத்திற்குள் பதித்து வைத்திருக்கிறாராம் (இவரது சிறிய சிலை ஆலய வளாகத்திற்குள் இருக்கிறது). ஆங்கிலேயர்கள் மனிதர்களாக இருக்கும்போதுதான் சராசரியே தவிர, ஆளும் வர்க்கத்தாராக வருகின்றபொழுது நாணயமானவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
1985-ஆம் ஆண்டிலும் அதே மதுராந்தகம் ஏரியில் ஒரு பேரிடர் நேர்ந்தது. கன மான மழையால், மதுராந்தகம் ஏரியில் நாலாபக்கமும் உடைப்புக்கள் ஏற்பட்டு, மதுராந்தகம் ஒரு தீபகற்பத்திற்குள்ளேயே ஒரு தீவாகிவிட்டது. நடுத்தர மக்களும், குடிசைவாசிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். என்றாலும், அப்போதைய முதல்வர் எம்ஜி.ஆர்., நிர்வாக இயந்திரங்களைக் கடுமையாக முடுக்கி, போர்க்கால அடிப்படையில், துயரத்தில் துடித்தோரின் கண்ணீரைத் துடைத்தார்.
வாழ்க்கையில் படிப்பதற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. ஆனால், படித்தவண்ணம் நடக்கச் செய்வதற்குத்தான் பாடங்கள் இல்லை. ஓங்கி வளர்ந்த தென்னையில் ஓரடிக்கு ஓரடி தென்னையைச் சுற்றி வடுக்கள் இருக்கும். வளருகின்றபோது பழுத்த மட்டைகள், விழுவதற்கு முன்பு ஏற்படுத்திய வடுக்கள் அவை.
புதியதாக மரமேறுபவன், அந்த வடுக்களிலே கால் வைத்துத்தான் உச்சிக்குச் சென்று தேங்காயைப் பறிப்பான். சங்கப் புலவரிலிருந்து - பல்லவரைத் தொடர்ந்து - சோழர்களைக் கடந்து - ஆங்கிலேயர்கள் வரை, வடுக்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். நாம்தாம் வடுக்களிலே கால் வைக்காமல் சறுக்கிச் சறுக்கி விழுகின்றோம்.
பேரிடர்கள், காலங்கள் தோறும் நிகழுகின்றன. ஆனால், நிர்வாகம் செய்வதற்குத்தான் தகுந்த ஆள்கள் வருவதில்லை.
மழை நம்மை மூன்று முறையன்று, முந்நூறு முறை, மூவாயிரம் முறை எச்சரித்து விட்டதே... நாம்தாம் பாடம் கற்கவில்லை.

நாம் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம்!

Dinamani


By க. பழனித்துரை

First Published : 04 December 2015 01:38 AM IST


இன்றைய தமிழகத்தில் கடுமையான மழைக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை பற்றிய விவாதம் எங்கும் எதிரொலிக்கிறது. இந்த விவாதம் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே நடத்தப்படுகின்றது. ஓர் அறிவார்ந்த விவாதத்தை நம்முடைய ஊடகங்களில் நம்மால் பார்க்க முடியவில்லை. அனைத்தையும் அரசியலாகப் பார்ப்பது என்பது நம்மைத் தரம் தாழ்த்துகின்றது.
யார் செய்தது தவறு என்பதுதான் இன்று விவாதமாக உள்ளது. இவை எல்லாவற்றையும்விட இந்தப் பேரிடரை வைத்து அரசியல் லாபம் பார்க்க முயல்வது நாம் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்துள்ளோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
வெள்ளப் பெருக்கு, விவசாய அழிவு, தொற்று நோய் அபாயம், வாழ்வாதாரம் பாதிப்பு, பொதுச் சொத்துகள் சேதம் என பிரச்னைகள் அடுக்கப்பட்டு விவாதம் நடைபெறும் போது, நமக்கு எழும் ஒரே கேள்வி, நாம் இதுவரையில் இப்படிப்பட்ட இயற்கைப் பேரிடரைச் சந்தித்ததே இல்லையா? நிறைய சந்தித்து இருக்கின்றோம் என்பதை நம் வரலாறு காட்டுகின்றது. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? அப்படி கற்றுக்கொண்டோம் என்றால் கற்றுக்கொண்ட பாடங்கள் இன்று நமக்கு ஏன் இந்தத் தருணத்தில் உதவிடவில்லை என்பதுதான் நமது அடுத்த கேள்வி.
2004-ஆம் ஆண்டு உலகை குலுக்கிய சுனாமியைவிடவா இந்தப் பேரிடர் சக்தி வாய்ந்தது. அதை நாம் சமாளிக்கவில்லையா? நாம் சமாளித்தோம். திறமையாகச் சமாளித்தோம்.
அப்படியெனில், அதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஏன் நாம் இன்று பயன்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய கேள்வி. சுனாமி தாக்கிய பிறகு, நம்மிடம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட்டுவிட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மை பேராயம் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு பெரு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
இந்தச் சட்டப்படி, மாநிலப் பேரிடர் மேலாண்மை பேராய மையம் மற்றும் மாவட்டப் பேரிடர் மேலாண்மை பேராய மையம் என அதிகாரப்படுத்தப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டன. சட்டத்தின்படி, அப்படி உருவாக்கப்பட்ட அந்த அமைப்புகள் செயல்படவில்லை என்றால் அதற்கு மத்திய அரசு காரணம் அல்ல. அதற்கு முழுப்பொறுப்பு மாநில அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் அனைவருமே.
எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், அறிவுஜீவிகளும் குறைசொல்வதற்கு மட்டும் அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. வானிலை மையம் தரும் செய்திகளை வைத்து பேரிடர் தயார் நிலைக்கு பொதுமக்களைக் கொண்டுவர உள்ளாட்சிக்கு அதிகாரம் அளிக்கும் ஆணையும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு அமைப்புகள், அதிகாரங்கள் இருந்தும் இன்னும் நம் கிராமங்களிலும், நகரங்களிலும் ஏன் பேரிடர் தயாரிப்பு நிலைக்கு மக்களைக் கொண்டுவரவில்லை?
உலகம் முழுவதும் பேரிடர் தடுப்பு தயாரிப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதுதான் நம் உயிர், உடைமைகளை பாதுகாத்திட வழிவகை செய்யும். அதுதான் அழிவுகளைக் குறைத்திடும். எனவேதான், ஐ.நா. நிறுவனங்கள் பேரிடர் தடுப்பு தயாரிப்பிற்கு மக்களைத் தயார் செய்வதை முன்னிலைப்படுத்துகின்றன.
ஆனால், நம் மக்களை இன்னும் நிவாரணம் பெறும் மனோபாவத்தில்தான் வைத்துள்ளோம். எனவேதான், எங்குபார்த்தாலும் நம் மக்கள் எங்களை வந்து யாரும் பார்க்கவில்லை, எதுவும் தந்திடவில்லை என்று ஓலமிடுகின்றனர். நம் மக்களாட்சியில் கூக்குரல் போட்டால்தான் நம் அரசை தம் பக்கம் திருப்பமுடியும் என்பதை அறிந்துதான் மக்கள் இப்படி கூக்குரல் எழுப்புகின்றனர். ஏன் என்றால், நிவாரணம் பெறத் தான் இவ்வளவு கூக்குரல்.
பேரிடர் என்பது தொடர்ந்து நிகழ்ந்து பொதுமக்களின் சொத்துக்களுக்கும், உடைமைகளுக்கும் அழிவுகளை ஏற்படுத்துவதால், ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பேரிடர் தடுப்பு தயாரிப்புக்கான பார்வையும், செயல்பாடுகளும் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசின் கொள்கையாக வகுக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக இயற்கைப் பேரிடர் நிகழ்கின்ற சூழலில், உள்ளாட்சிகள்தான் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ÷பேரிடர் தடுப்பு தயாரிப்பு நிலை செயல்பாடுகளை எடுக்க வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் நம் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருந்தும், உள்ளாட்சிகள் அந்த அளவுக்கு கவனத்துடன் இயங்கவில்லை என்பதும், அதற்கான சூழலை உள்ளாட்சிக்கு உருவாக்கித் தரவில்லை என்பதும், தங்களுக்குப் பேரிடர் மேலாண்மையில் உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றியும், நம் உள்ளாட்சியில் உள்ள தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் தெரியவில்லை என்பதுதான் இன்று நாம் பார்க்கும் யதார்த்தமான உண்மை.
சுனாமிக்குப் பிறகு தமிழகத்தில் ஐ.நா. நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தும், பேரிடர் மேலாண்மைக்கான ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கத் தான் மிகப் பெரிய அளவில் செயல்பட்டன. இதன் விளைவுகளை இன்று எந்த இடத்திலும் நம்மால் பார்க்க இயலவில்லை.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் சுனாமிக்குப் பிறகு பேரிடர் தடுப்பு தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, நிவாரணம், போன்ற தலைப்புகளில் பயிற்சிக் கையேடுகளைத் தயாரித்து, அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டு செய்தித்தாள்களில் செய்திகள் வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழகத்தில் சுனாமி தாக்குவதற்கு முன்பே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பேரிடர் தயார்நிலைக்கு என்று ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அது பெயரளவுக்கு இயங்கினாலும், அந்தக் குழுக்களுக்கு ஐ.நா. நிறுவனம் மூலம் அப்பொழுதே பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது.
அப்படிப் பயிற்சி பெற்ற பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் செயல்பட்ட பஞ்சாயத்துகளில், சுனாமியின் பாதிப்பு மிகவும் குறைவு என்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்து தெரிவித்திருந்தனர். சுனாமிக்குப் பிறகு இவையெல்லாம் பழங்கதையாயின என்பது போலத்தான் நமக்குத் தெரிகிறது.
உலகம் முழுவதும் சமூக பங்கேற்புடன் கூடிய வறுமைக் குறைப்பு, வாழ்வில் தாழ்வுற்றோரை அதிகாரப்படுத்துதல், மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்தும் வெற்றித் தடங்களைப் பதிக்கின்றபோது, நம்மிடம் பேரிடர் தடுப்பு தயாரிப்பில் மட்டும் ஏன் இந்த பொறுப்பற்ற தன்மை?
நாமே அரசாகத் திகழும்போது, அரசிடமிருந்து யாரும் வரவில்லை என்று கூக்குரலிடுவது, மீண்டும் பயனாளியாக இருக்க, மனுதாரராக இருக்க ஆசைப்படுவதுதான். மக்களாகிய நாம் உள்ளாட்சியுடன் இணைந்து பேரிடரைச் சமாளிக்கும் போது நம் உள்ளாட்சிக்கு மாநில, மைய அரசுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அதற்காக நாம் போராடலாம்.
ஆனால், நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், எங்களை யாரும் பார்க்க வரவில்லை, எதுவும் தரவில்லை என்று ஓலமிடுவது, அல்லது அந்த நிலைக்கு மக்களை வைத்திருப்பது ஒரு வளர்ந்த மாநிலத்திற்கு ஏற்புடையதல்ல.
உலகத்தில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இப்படிப்பட்ட பேரிடர் நடந்தபோது யார் செயல்பட்டது என்று பாருங்கள். அது உள்ளாட்சிதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உள்ளாட்சிகள் செயல்படாமல் இருந்தபோது அந்த ஆட்சியில் இருந்தவர்களை சட்டப்பூர்வமாக தண்டித்திருக்கின்றார்கள். இன்று நாம் உள்ளாட்சி அமைப்புகளை எடுபிடிகளாக வைத்துள்ளோம்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது, அந்த நகர மேயர்தான் எல்லாப் பணிகளையும் செய்தார். அதற்கான தலைமை, அதிகாரம், அதிகாரிகள், நிதி அனைத்தும் அவர்களுக்கு அரசாங்கம் தந்துள்ளன. உள்ளாட்சிகளை வலுப்படுத்துவது என்பது மக்களுக்குப் பக்கத்தில் அரசுக் கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருப்பது.
அது மட்டுமல்ல, பொதுமக்களை அந்தக் கட்டுமானங்களுடன் இணைத்து வைத்திருப்பது. இந்தச் சூழல் உருவானால் பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு வந்தாலும் அவர்கள் முழுப்பொறுப்புடன் முழுவேலையில் இருப்பார்கள். ஆனால், நம் அரசுக் கட்டமைப்புகள் பொதுமக்களைத் தூரத்தில் வைத்துக்கொள்ள நினைக்கின்றன. ஓர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.
இந்த இடைவெளிதான் அரசின் நல்ல செயல்பாடுகளைக்கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கின்றது. இடைவெளி இல்லை என்றால் அரசுச் செயல்பாடுகளை யாரும் குறை கூற முடியாது. ஏனென்றால், அதில் பொதுமக்கள் இருக்கின்றார்கள். உள்ளாட்சியை வலுப்படுத்தாமலும், மக்களை உள்ளாட்சியில் இணைக்காமலும் இருந்தால் மக்கள் தூரத்தில் நின்று ஓலம் இடுவதிலும், என்ன செய்தாலும் நிறைவில்லாமலும், தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதில் அரசியல்வாதிகள் அரசியல் லாபம் பார்க்கத்தான் செய்வார்கள். இதைத் தவிர்க்க இயலாது.
எனவே, நமக்குத் தேவை பேரிடர் தடுப்பு, சமாளிப்பு. அதற்கு உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் அந்த உள்ளாட்சி மக்கள் கையில் இருக்க வேண்டும். இதுதான் நம் இன்றைய மிக முக்கியத் தேவை.
2004-ஆம் ஆண்டு உலகை குலுக்கிய சுனாமியைவிடவா இந்தப் பேரிடர் சக்தி வாய்ந்தது. அதை நாம் சமாளிக்கவில்லையா? நாம் சமாளித்தோம். அப்படியெனில், அதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஏன் நாம் இன்று பயன்படுத்தவில்லை?

பெருமழையல்ல, பேரிடர்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 04 December 2015 01:36 AM IST


மழைச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.940 கோடியைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக அரசு முன்பு கோரியிருந்த ரூ.8,481 கோடி என்பதே கூடப் போதுமானதாக இருக்காது என்பதால், இதை உடனடி நிவாரண உதவியாகத்தான் கருத முடியும்.
சென்ற வாரம் சென்னையில் அடைமழை கொட்டித் தீர்த்தபோது, அந்த மாமழை ஏற்படுத்திய சேத மதிப்பு ரூ.8,481 கோடி என்று கணக்கிடப்பட்டது. உடனடியாக ரூ,2,000 கோடி மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தவுடன் ரூ.940 கோடியைப் பிரதமர் வழங்கினார். தற்போது கடந்த மூன்று நாள்களில், சென்னை மாநகர் மீதான பெருமழையின் பழிதீர்ப்புப் படலத்தின் இரண்டாம் தாக்குதலில், சேதத்தின் மதிப்பு இரண்டு மடங்குக்கும் மேலாகிவிட்டது.
மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழு வந்து, தனது ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு நேர்ந்த இரண்டாவது தாக்குதலில் நேர்ந்த சேதங்களும் பாதிப்புகளும் அந்த ஆய்வுக் குழுவின் கணக்கில் இருக்காது என்பது உறுதி. பேய்மழையின் இரண்டாவது தாக்குதலையும் மதிப்பீடு செய்து, தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை மீண்டும் திருத்தப்பட வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுப் பெருமழையின் முதல் தாக்குதலின்போது சில ரயில்கள் மட்டுமே ரத்தாகின. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இயங்கின. ஆனால், பெருமழையின் இரண்டாம் தாக்குதலில் ஐந்து நாள்களுக்கு விமான நிலையத்தை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு பகுதியிலான புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும்கூட ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மழை பலி எண்ணிக்கை 269-ஆக உயர்ந்தது. 40% செல்லிடப்பேசி சேவைகள் செயலிழந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மீட்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். இவ்வளவு ஆன பின்னரும், சென்னை பெருமழையைப் பேரிடர் துயரமாக அறிவிக்காமல் இருக்கிறார்களே, ஏன்? இதிலும் கூடவா ஓரவஞ்சனை?
2013-ஆம் ஆண்டு உத்தரகண்டில் பெருமழை வெள்ளத்தால் கேதார்நாத் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கியது. பிறகு, ரூ.7,346 கோடியை வழங்கியது. அந்தச் சேதம் கங்கைக் கரையோரம் மட்டுமே. உயிரிழப்பும் கட்டுமானங்களும் மட்டுமே சேதமடைந்தன. ஆனால், சென்னை மாநகரம் மட்டுமல்ல, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
உத்தரகண்ட் பாதிக்கப்பட்டபோது, பொதுத் துறையின் நவரத்ன நிறுவனங்கள் ஓடிவந்து உதவின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனமும் பல கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே ரூ.125 கோடியை வழங்கியது. இது நீங்கலாக, பல்வேறு அமைப்புகளும் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உள்பட) தனியாக நிதி வசூலித்து வழங்கின.
உத்தரகண்ட் வெள்ளத்தின்போது அனைத்து மாநிலங்களும் உடனடியாக நிதி வழங்கின. தமிழகத்தின் தலைநகர் சிதைந்து கிடக்கும் நிலையில், கர்நாடகமும், பிகாரும் தலா ரூபாய் ஐந்து கோடி வழங்க முன்வந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் ஏன் இன்னும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை என்று தெரியவில்லை. உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழக அரசு ரூபாய் ஐந்து கோடி அறிவித்தது. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்கு உதவிட இன்னமும் ஏன் வட மாநிலங்கள் தாமதிக்கின்றன? இது தாமதமா, தயக்கமா?
சென்னையின் துயரத்தை ஆங்கிலக் காட்சி ஊடகங்களும், வட இந்திய ஊடகங்களும் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் சென்னை பேரிடருக்குத் தரப்படவில்லை.
தமிழகத்தின் ஊடகங்கள், சென்னைப் பேரிடரின் தீவிரத்தையும், அது ஏற்படுத்தியுள்ள சேதங்கள் ஒவ்வொரு பிரிவிலும் எத்தகையவை, இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை காலம் ஆகும், சேத மதிப்பு என்னவாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள், துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, மத்திய அரசுக்குப் போட்டியாக தனி மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தொலைக்காட்சி ஊடகங்களின் பெரும்பாலான நேரமும், சாதாரண மக்களின் கோபக் குரல்களை மட்டுமே ஒளிபரப்பி அரசியலுக்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்காமல், தமிழக அவலம் குறித்து மாநிலங்கள் அவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேசியிருப்பது வரவேற்புக்குரியது. ஆளும் கட்சியின் கோரிக்கைகளைவிட எதிர்க்கட்சிகள் பிரச்னையின் கடுமையை எடுத்துரைக்கும்போதுதான், மற்றவர்களுக்கு நிலைமையின் தீவிரம் உறைக்கும். மழை நின்ற பிறகு, வெள்ளம் வடிந்த பிறகு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுப் பரவும் அபாயத்தைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற அவரது எச்சரிக்கையில் அர்த்தமுள்ளது. கனிமொழி குறிப்பிட்டிருப்பதுபோல, போதுமான அளவு படகுகளையும், மருத்துவ உதவியையும், தமிழகத்துக்கு உடனடியாக அனுப்பித் தருவது மத்திய அரசின் கடமை.
மத்திய அரசு இந்தப் பேய்மழையை தேசியப் பேரிடராக அறிவிப்பதும், இழப்பை மறு மதிப்பீடு செய்வதும் இன்றியமையாதது!


NEWS TODAY 18.12.2025