Tuesday, December 29, 2015

உங்களைத் தேர்ந்தெடுத்த தவறுக்கான தண்டனையா?

Return to frontpage

சர்ச்சைக்குரிய பேச்சுகள், நடத்தைகளை தன்னுடைய அரசியல் கலாச்சாரமாகவே மாற்றிக்கொண்டிருக்கும் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இம்முறை ஒருபடி மேலே போய் ஊடகச் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்துத் துப்பியிருக்கிறார். மேலும், தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, “இதே கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? பத்திரிகையாளர்களா நீங்கள்” என்றும் கேட்டிருக்கிறார். அதிர்ச்சியையும் அவமானத்தையும் தரும் நிகழ்வு இது.

பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொள்வது விஜயகாந்துக்குப் புதிதல்ல. பொது நிகழ்ச்சிகளில் தன்னுடைய கட்சி நிர்வாகியைப் பொதுமக்கள் முன்னிலையில் அவர் அறைந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன் கட்சி வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அவர் அடித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் ஒருமுறை செய்தியாளரை, “நாய்” என்று திட்டியிருக்கிறார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில் “தூக்கி அடித்துவிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் பல முறை கடுமையாகப் பாய்ந்திருக்கிறார். குறிப்பிட வேண்டிய விஷயம், ஊடகவியலாளர்களை அவர் அணுகும்விதமே பேச்சில் மட்டும் அல்ல; உடல்மொழியிலும் கீழ்த்தரமானது என்பதுதான்.

ஊடகத் துறையும் ஊடகவியலாளர்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எல்லாத் துறைகளிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருப்பதுபோலவே நிச்சயம் ஊடகத் துறையிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், அடிப்படையில் ஊடகத் துறையையும் ஊடகவியலாளர்களையும் எது இயக்குகிறது என்பது முக்கியம். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் அடிப்படையில் வெறுமனே ஒரு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்ல; மக்களின் பிரதிநிதிகள். மக்களுடைய குரல், மக்களுடைய கேள்விகளே ஊடகவியலாளர்கள் குரலாகவும் கேள்விகளாகவும் வெளியே வருகின்றன; அப்படித்தான் அவை வெளிவர வேண்டும். ஆகையால், ஊடகவியலாளர்களின் குரலை மக்களின் குரலாகவே பாவிக்க வேண்டும். குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது அவர்களுடைய அடிப்படை ஜனநாயகக் கடமைகளில் ஒன்று.

முதல்வர் ஜெயலலிதா இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, அடிக்கடிச் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்பது. ஆனால், செய்தியாளர்களை அவர் சந்திப்பதே இல்லை. அமைச்சர்களும் மிக மிக அரிதாகவே ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்கள். இத்தகைய சூழலில், ஊடகவியலாளர்கள் செய்யக்கூடிய காரியம் ஒன்றுதான், அரசுக்கு மக்கள் தரப்பிலிருந்து செல்ல வேண்டிய கருத்துகளையும் விமர்சனங்களையும் தம் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிப்பது. தம்மாலான அளவில் ஊடகங்கள் அதைச் செய்துகொண்டே இருக்கின்றன. இடையில் பல காலம் இதே விஜயகாந்தும்கூட செய்தியாளர்கள் சந்திப்பை முற்றிலும் தவிர்த்தார். அப்போது ஊடகவியலாளர்கள் செய்ய முடிந்ததென்ன? அரசியல் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான உறவு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் ஊடகங்களிலிருந்து விலகியிருப்பது/தமக்கேற்ற ஊதுகுழலாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது ஜனநாயக இழுக்கு.

சட்டசபையில் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் தொடர்பான ஆளுங்கட்சியினருடனான வாக்குவாதத்தின் உச்சத்தில், நாக்கைத் துருத்தியபடியும், கையை நீட்டியும், கோபமாகப் பேசினார் விஜயகாந்த். அதோடு, எதிர்க்கட்சிகளுக்குச் சட்டசபையில் உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று சொல்லி சட்டசபை செல்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆளுங்கட்சி மட்டும் அல்ல; ஆக்கபூர்வமான, உயிர்த்துடிப்பான எதிர்க்கட்சிகளும் சேர்ந்துதான் ஒரு அரசை உந்தித்தள்ளுகின்றன. செயல்படாமை தொடர்பாக ஒரு விவாதம் நடந்தால், அதில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தன்னையும் விடுவித்துக்கொள்ள முடியாது. தமிழகம் கொந்தளிப்பான பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொண்டபோது எதிர்க்கட்சித் தலைவர் என்னவானார் என்பதே தெரியாமல் இருந்ததை மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மக்கள் சிக்கியிருக்கும் சூழலில்கூட ஊடகங்கள் வழியே மக்களைச் சந்திக்காமல், ‘வாட்ஸ்அப் உரை’ நிகழ்த்தும் ஒரு முதல்வர், கேள்வி கேட்கும் ஊடகங்களை நோக்கி ‘தூ’ என்று வெறுப்பை உமிழும் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் சமகாலத் தலைவர்களை நினைத்துப்பார்க்கையில் வேதனையே எஞ்சுகிறது. இருவரும் ஒன்றுசேர்ந்துதானே கடந்த தேர்தலில் மக்களைச் சந்தித்தீர்கள், வாக்குக் கேட்டீர்கள், நல்லாட்சி கொடுப்போம் என்றீர்கள். மக்கள் செய்த தவறென்ன; வாக்களித்ததா? ஊடகங்களிடமிருந்து விலகுபவர்கள், மக்களிடமிருந்தும் விலகுகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை!

ராஜேஷ் கன்னா 10 ......t ராஜலட்சுமி சிவலிங்கம்



பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (Rajesh Khanna) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் (1942) பிறந்தார். இயற்பெயர் ஜதின் கன்னா. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மாமாவுக்கு தத்து கொடுக்கப்பட்டு பம்பாயில் வளர்ந்தார். 10 வயது முதல், நாடகங்களில் நடித்தார். புனே வாடியா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

l அகில இந்திய அளவில் 1965-ல் நடத்தப்பட்ட யுனைடெட் புரொட்யூசர்ஸ் நடிப்புத் திறன் போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்ற இவருக்கு 1966-ல் ‘ஆக்ரி கத்’ என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்தார்.

l ‘ஆராதனா’ (1969) திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 தொடர் வெற்றிப் படங்களை தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து பெற்றார்.

l இந்தியத் திரையுலகிலேயே மிகச் சிறந்த பாடல்களை வழங்கியது ராஜேஷ் கன்னா கிஷோர் குமார் ஜோடி என்பார்கள். ‘கிஷோர் குமார் எனது ஆன்மா. நான் அவரது உடல்’ என்பார் ராஜேஷ் கன்னா. இவரது படங்களில் இடம் பெற்ற ‘மேரே சப்னோங் கே ரானி’, ‘கோரா காகஸ் கா யே மன் மேரா’, ‘ரூப் தேரா மஸ்தானா’, ‘குன் குனா ரஹே ஹை பௌரே’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டன.

l தென் இந்திய ரசிகர்களை 1969-1991 காலகட்டத்தில் ராஜேஷ் கன்னா அளவுக்கு கவர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றார் சரோஜாதேவி. தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் திரையுலகின் சிவாஜி’ என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்னர் நண்பரானார்.

l அடுத்தவர்களின் தேவை அறிந்து, தானே ஓடிச்சென்று உதவும் மனம் படைத்தவர். 1973-ல் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை மணந்தார். இவர்களது மகள்களான ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னாவும் நடிகைகள்.

l மொத்தம் 180 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். ‘ஆராதனா’, ‘அமர்பிரேம்’, ‘ஆனந்த்’, ‘கடீ பதங்’, ‘ராஸ்’, ‘சச்சா ஜூட்டா’, ‘ராஜா ராணி’ குறிப்பிடத்தக்கவை. 1980-களில் ‘ஸ்வர்க்’, ‘அவதார்’ போன்ற திரைப்படங்களில் தன் வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்தார்.

l தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல பிறமொழி இயக்குநர்கள் இவரை வைத்து தங்கள் மொழி ஹிட் படங்களை இந்தியில் ரீமேக் செய்தனர். இதில் கே.பாலசந்தர், தர், கே.ராகவேந்திரா, ஐ.வி.சசி குறிப்பிடத்தக்கவர்கள்.

l தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். 3 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005-ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

l சினிமாவைவிட்டு 1990-களில் விலகியவர், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார். ஷீர்டி பாபாவின் பக்தர். இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 70-வது வயதில் (2012) மறைந்தார். மறைவுக்குப் பிறகு, பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Monday, December 28, 2015

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

Dinamani

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த, கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணி செய்தவர்களும், 2016 மே 31-ஆம் தேதியோடு 3 ஆண்டுகளை நிறைவு செய்வோரையும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இந்த அதிகாரிகளை அறிவதற்காக ஆணையம் வழங்கும் கட்-ஆஃப் தேதிகளைப் பின்பற்ற வேண்டும்.
இதுதொடர்பாக உடனடியாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும். அதே மாவட்டங்களில் பதவி உயர்வு பெற்று பணியாற்றிக் கொண்டிருந்தாலும், 3 ஆண்டு காலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாநிலத் தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த அறிவுரைகள் பொருந்தாது.
விதிவிலக்கு யாருக்கு? குறிப்பிட்ட பகுதியை நன்கு அறிந்த பகுதி அலுவலர்கள், அங்கு பணியாற்றினால்தான் தேர்தல் பணிகளைச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் அவர்கள் பணியாற்றலாம்.
யார், யாருக்கு பொருந்தும்?: மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணைத் தேர்தல் அதிகாரிகள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், உதவிக் கோட்ட அதிகாரிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்ற அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
போலீஸ் அதிகாரிகள்: காவல் துறையில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், ஆயுதப் படை அணித் தலைவர்கள், சிறப்பு எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், உதவிக் கோட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் அல்லது அதற்கு இணையான அதிகாரிகளுக்கும் பொருந்தும். கணினிமயமாக்கல், சிறப்புப் பிரிவு, பயிற்சிப் பிரிவு போன்றவற்றில் பணியாற்றுவோருக்கு இந்த உத்தரவு பொருந்தும். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய உதவி ஆய்வாளர்களை சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்தே பணியிட மாற்றம் செய்ய வேண்டும். சொந்த தொகுதியிலும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
பணியில் யாரை ஈடுபடுத்தக் கூடாது? கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள், கவனக்குறைவாக இருந்தவர்களுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது. குற்ற வழக்கு நிலுவையில் இருப்போரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
இடமாற்ற நகல் அனுப்ப வேண்டும்: இடமாறுதல் செய்யப்படுவோர் விடுப்பில் சென்றாலோ அல்லது மாவட்டங்களை விட்டு வெளியேற மறுத்தாலோ புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணிகளில் மறைமுகமாகத் தொடர்புள்ள அதிகாரிகளும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவதாக அடிப்படை முகாந்திரத்துடன் புகார்கள் வந்தால் அந்தப் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
இடமாற்றம் செய்யப்பட்டோருக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படும்போது, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசிக்க வேண்டும். இடமாற்றல் உத்தரவின் நகல்கள் தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோரை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகே இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பின்மையும், பசிக் கொடுமையும்

Dinamani


By மாலன்

First Published : 28 December 2015 01:20 AM IST


இரவு விடியத் தொடங்கிய நேரத்தில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. வானத்தில் சூரியன் வரவில்லை என்றாலும் மழை ஓய்ந்திருந்தது. இழந்தது என்ன, இருப்பது என்ன, இழந்ததை எப்படி மீட்பது, இருப்பதை எப்படிக் காப்பது என்று கவலைகள் மனதை மொய்க்க, அடைக்கலம் புகுந்திருந்த அண்டை வீட்டு மாடியிலிருந்து, சொந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் அவர்.
அப்போது வந்த ஒரு தகவல் அவர் இதயத்தைப் பதறச் செய்தது. செம்பரம்பாக்கம் உடையப்போகிறது என்றது செய்தி. செய்தி அல்ல தகவல்.
யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் வதந்தியை அந்த யாரோ ஒருவர் மற்றொருவருக்கு அனுப்ப, அவர் பிறிதொருவருக்கு அனுப்ப, அவர் வேறொருவருக்கு அனுப்ப, அவர் இன்னொருவருக்கு அனுப்ப, அவர் எதிர்வீட்டுக்காரரின் நண்பரிடம் சொல்ல, நண்பர் சகலைக்குச் சொல்ல, சகலை சகாவிற்குச் சொல்ல, சகா மனைவிக்குச் சொல்ல, மனைவி தோழிக்குச் சொல்ல, தோழி தன் கணவனுக்குச் சொல்ல, கணவன் பாஸுக்குச் சொல்ல, பாஸ் பக்கத்து வீட்டுக்காரரிடம் பகிர்ந்து கொள்ள, இனி ஒரு நிமிடம் கூடத் தாமதியாதீர்கள். உடனே புறப்படுங்கள் என்று அவர் எச்சரிக்க, உள்ளம் கொந்தளித்தது. உயிராசை உந்தித் தள்ளியது.
இனி ஒரு வெள்ளமா? என மனம் மருண்டது. இருக்காது! இருக்காது! என்று இன்னொரு மனம் சொன்னது, உயிரென்று நம்பி உடன் வந்த மனைவியைக் காப்பாற்றுவதா, மழலைகளைக் காப்பாற்றுவதா, ஓடி ஓடி உழைத்து ஒரு குருவியைப் போலச் சேகரித்த செல்வத்தில் மிஞ்சி நிற்பதைக் காப்பாற்றுவதா? மூளை குழம்பியது. தப்பித்துப் போகும் தருணத்தில் வெள்ளம் எதிர்வந்து அடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று அச்சம் மேலிட்டது.
இறப்போ, மீட்சியோ இருக்கிற இடத்திலேயே இருந்து விடலாமா என்று ஓர் எண்ணம் ஓடியது. இதுதான் விதி என்றால் இனி நாம் என்ன செய்ய? என்று ஒரு விரக்தி பிறந்தது. இருப்பதுதான் பிரச்னை, இறப்பதில் என்ன பிரச்னை என்றொரு வெள்ள வேதாந்தம் உள்ளத்தை ஒரு கணம் கடந்தது.
உண்மையா என உறுதி செய்து கொள்ள உள்ளம் தவித்தது. அக்கம் பக்கம் தொலைபேசி வேலை செய்யவில்லை. மின்சாரம் போன காரணத்தால் சக்தி இழந்து செல்லிடப்பேசி காலமாகி விட்டிருந்தது. இரு சக்கர வாகனம் இயங்க மறுத்தது. முழங்காலளவு நீரில் முக்கால் கிலோ மீட்டர் நடந்து, திறந்திருந்த கடைகள் நான்கைந்தில் விசாரித்து, உயிரோடு இருந்த ஒரு தொலைபேசியைக் கண்டுபிடித்து என்னை அழைத்தார் அவர்.
அர்ஜெண்ட் சார் என்று ஆரம்பித்தார். பதற்றத்தில் குரல் நடுங்கியது. ஆறுதல் சொல்ல ஆசைதான். ஆனால், அதற்கெல்லாம் அவகாசமில்லை. காரணம், அவரது அவசரம். சொல்லுங்க என்றேன் சுருக்கமாக. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டது என்று சொல்கிறார்களே உண்மையா என்றார்.
யார் சொன்னது?
வாட்ஸ் அப்பில் வந்ததாம்.
அது புரளி. அது உண்மையாக இருந்தால் நண்பரே நீங்களும் நானும் இப்போது உரையாடிக் கொண்டிருக்க முடியாது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்போம். உண்மையில்லைதானே சார்? நிஜத்தை சொல்லுங்க. உண்மை இல்லைதானே? மனைவியையும் குழந்தைகளையும் தனியா விட்டு வந்திருக்கேன்.
"உண்மை இல்லை'.
நன்றி என்று கூடச் சொல்லாமல் நண்பர் தொலைபேசியை வைத்து விட்டார். அந்தக் கணத்தில் அவரை நிமிர வைத்த நிம்மதியை என்னால் நினைத்துப் பார்க்க முடிந்தது.
அதேபோல, அந்த மிரட்சியும் என் நெஞ்சில் நெடுநேரம் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பேரை குலைநடுங்கச் செய்யும் ஆதாரமற்ற செய்திகளை ஆரம்பித்து வைப்பது யார்? ஏற்கெனவே, பேரிடரில் பீதி வசப்பட்டு இருப்பவர்களை மிரளச் செய்வதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்? அவர்கள் மனிதர்கள்தானா? அடுத்தவரை அழ வைத்து அதில் ஆனந்தம் காண்கிற கல்நெஞ்சர்களா? அவர்களுக்குள் மனம் என்ற ஒன்று இயங்குகிறதா? வக்கிரமே வாழ்க்கை லட்சியமா?
கண்டுபிடிக்க முடியாது. காரணம்? வாட்ஸ் அப்பிற்கு வாய் உண்டு, முகம் இல்லை. தகவல் அனுப்புபவரின் எண் அதில் இருக்கும் என்பதென்னவோ உண்மைதான். அந்த எண்ணுக்குரியவரின் எண்ணமாகத்தான் அந்தத் தகவல் இருக்க வேண்டும் என்பதில்லை. வந்ததைப் பந்தியில் வைப்பவர்கள்தான் வாட்ஸ் அப்பில் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் செய்திகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தோம். இப்போது எதிர்வினைகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம், வாட்ஸ் அப் வழியாக.
வாட்ஸ் அப் என்பது ஓர் ஊடகம். ஊடகத்தில் இயங்குகிறவர்கள், ஊடகத்தை இயக்குகிறவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஓடியிருக்கும். பீப் பிரச்னையை ஊடகங்கள் ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. கடந்த மாதம் முழுவதும் அவர்கள் கடைவாயில் பீஃப் (பசு இறைச்சி) மாட்டிக் கொண்டிருந்தது. இப்போது பீப். இது பெண்களின் தசைகள் பற்றிய கவிச்சி.
இணையத்தில் பரப்பியது நானல்ல என்று இப்போது பிரச்னை பெரிதான பின் சம்பந்தப்பட்டவர்கள் கையை உயர்த்திச் சரணம் பாடுகிறார்கள். கரணம் போடுகிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், எழுதியதும் இசைத்ததும் யார்? அந்த எழுத்திற்குப் பின்னால் இருக்கும் மனம் எத்தகையது? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையில் திளைக்குமோ ஒரு கவி மனம்?
அந்தரங்க உபயோகத்திற்கு என்றாலும்கூட அதற்குள் புரையோடிக் கிடக்கும் வக்கிரம் அவர்களை மனநோயாளிகள் என்று அடையாளம் காட்டவில்லையா?
இந்த வக்கிரம் பற்றிக் கருத்துக் கேட்டு இளையராஜாவிடம் ஒலிவாங்கியை நீட்டுகிறார் ஒரு செய்தியாளர். இளையராஜாவிடம் கேள்வி கேட்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால், இடம், பொருள், ஏவல், இங்கிதம், இடக்கர் அடக்கல் எனச் சில இலக்கணங்கள் இதழியலிலும் உண்டு.
தண்ணீரில் தத்தளித்தவர்களுக்குத் தங்களின் சிரமம் பாராது, உதவிய தன்னார்வலர்களைப் பாராட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் இளையராஜா. மனிதர்களின் மாண்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் சமூகத்தைச் செப்பம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அந்த இடத்திலா விடலைகளின் ஆபாசத்திற்கு விளக்கம் கேட்க வேண்டும்
அந்தச் செய்தியாளரின் நோக்கம் பீப் பாடலுக்குக் கண்டனம் பெறுவதல்ல. ஒரு இசைஞானிக்கும் இளம்தலைமுறை இரைச்சல் ஞானிக்குமிடையே சிண்டு முடிந்துவிட ஏதேனும் கயிறு கிடைக்குமா என்று நூல்விட்டுப் பார்ப்பது. எரிகிற கொள்ளியில் இரண்டைப் பிடுங்கி இன்னும் எதையேனும் பற்ற வைக்க முடியுமா எனப் பார்ப்பது.
அந்தத் தவிப்பிற்கு என்ன காரணம்? ஊடகங்கள் இன்று பகாசுரப் பசியோடு அலைகின்றன. இருபத்திநான்கு மணி நேரமும் எதையாவது மென்று துப்ப அவர்களுக்கு ஏதாவது செய்தி வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்லிவிட்டுப் போவதில் ஒன்றும் சுவாரஸ்யமில்லை என்று அவர்கள் நம்புவதால், நாட்டு நடப்புகளுக்குள் நாடகத்தைப் புகுத்த வேண்டிய கடமை அவர்களைக் கண்சிமிட்டி அழைக்கிறது.
அதன் இன்னொரு வெளிப்பாடுதான் இப்போது நாம் காணும் இரவு நேர விவாதக் காட்சிகள். அவற்றில் விவரம் அறிந்து பேசுவோர், அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களை அதிகம் காண முடிவதில்லை. விஷயங்களை விளம்பச் சொல்லும் வித்தகர்களையோ, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சூட்சமம் அறிந்த வல்லுநர்களையோ அடிக்கடி பார்க்க முடிவதில்லை.
எதிராளியைப் பேச விடாமல் இரைவது, எல்லோரும் ஏக காலத்தில் கூச்சல் போட்டு எவர் பேசுவதையும் புரிந்து கொள்ள முடியாமல் செய்வது, அரை உண்மைகளை அவிழ்த்து விடுவது, முழுப் பூசணியை மூடி மறைப்பது, கண்மூடித்தனமான கட்சி விசுவாசத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற எல்லாவிதமான அமர்க்களத்தோடும் அறுபது நிமிடங்கள் கடந்து மறைகின்றன. மார்கழியில் மட்டும்தான் சென்னையில் இசைவிழா. ஆனால் திங்கள் முதல் வெள்ளிவரை தினம் தினம் டிவியில் இரவு நேர இரைச்சல் விழா.
சமூகப் பொறுப்பென்பது சிறிதும் இல்லாதவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஒரு புறம்; ஊடகங்களுக்கு உருவாகியிருக்கும் பயங்கரப் பசி இன்னொரு புறம். சாறு பிழியும் சக்கரங்களுக்கு இடையில் அகப்பட்ட கரும்பைப் போல இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டவன் தமிழன். பாரதி எழுதியது போல், ஒட்டகத்திற்கு ஓர் இடத்திலா கோணல்? தமிழனுக்கு ஒரு விதத்திலா துன்பம்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னை வந்த நாள்களில் என்னைத் திகைக்க வைத்த காட்சிகளில் ஒன்று காகிதம் தின்னும் காளைகள். திருவல்லிக்கேணி ஜாம்பஜார் அருகே, சுவரொட்டிகளைச் சுவைத்துத் தின்கிற காளைமாடுகளை அநேகமாகத் தினமும் கண்டிருக்கிறேன். புல் தின்னாத புலிகளையும், காகிதம் தின்னும் கழுதைகளையும் பற்றிப் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
ஆனால், காகிதம் தின்னும் காளைகளை சென்னையில்தான் கண்டேன். யோசித்துப் பார்த்த போது ஒன்று புரிந்தது, காளைகள் கண்டதையும் தின்னக் காரணம் பசி. அடிவயிற்றில் எரியும் அகோரப்பசி. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா?
சமகாலச் சமூகத்தில் மாடுகள் மனிதர்களைப் போல மாறுவதும், மனிதர்கள் மாடுகளைப் போல ஆவதும் ஆச்சரியத்திற்கு மட்டுமல்ல, அனுதாபத்திற்கும் உரியதுதான்.

இது ஓர் "அரசியல் ஜல்லிக்கட்டு'!

Dinamani

By ப. இசக்கி

First Published : 28 December 2015 01:21 AM IST


தைமாதப் பொங்கலுக்கு தமிழர்கள் தயாராகிறார்களோ இல்லையோ, அதனையொட்டி நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தென் மாவட்ட இளைஞர்கள் தயாராகி விடுவார்கள். பொங்கலுக்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, 1,500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் வீர விளையாட்டு. இந்த வீர விளையாட்டை நடத்த சமீபகாலமாக கடும் அக்கப்போர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்தப்படும் காளை மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாக பிராணிகள் நல சங்கத்தினர் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த 2014, மே 7-ஆம் தேதி இதற்குத் தடை விதித்தது. இதனால் கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதனால், ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை களையிழந்தது. மக்கள் மனதில் பெரும் சோகம்.
ஜல்லிக்கட்டை ஒரு தெய்வ வழிபாடாக கருதும் கிராம மக்கள், ""இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களில் மட்டும் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படாததுதான் இதற்குக் காரணம். இது தெய்வக் குற்றம்'' என்கின்றனர்.
வீரமும், பக்தியும் கொண்ட இந்த ஜல்லிக்கட்டை இந்த ஆண்டாவது நடத்திவிட வேண்டும் என கிராம மக்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.
தடை விதிக்கப்பட்டு 18 மாதங்கள் வரை அதை நீக்குவதற்கு எந்த அரசியல் கட்சியும் தீவிரம் காட்டவில்லை. இப்போது ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என அடம் பிடிப்பது ஓர் "அரசியல் ஜல்லிக்கட்டு' என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.
தமிழ்நாட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்திருந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ""ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சட்டம் கொண்டு வரப்படும்'' என்றார்.
தடைக்குப் பிறகு, இந்த ஆண்டு இதுவரையில், மூன்று முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவில்லை. ஆளுங்கட்சிக்காரர் சொன்னால் காரியம் விரைவாக நடக்கும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த ஆர்வலர்களுக்கு இதுவரையில் ஏமாற்றமே.
அடுத்து, மதுரை வரும் அரசியல் தலைவர்கள் எல்லாம், போகிற போக்கில் "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்' சொல்லிச் சென்றார்களே தவிர, அதற்கான ஆக்கப்பூர்வமான காரியங்கள் எதையாவது செய்தார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இப்போது, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. வாக்கு வங்கி அரசியல் ஜல்லிக்கட்டை நோக்கி இழுக்கிறது. அதனால், எல்லோரும் இப்போது ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஒருபடி மேலே போய், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். இப்போது அது கைவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என மத்திய அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஒரு காரியம் திட்டமாக நடைபெறப் போகிறது என்பது தெரிந்து விட்டால் அதற்காக முன்கூட்டியே ஒரு போராட்டம் நடத்தி அதில் பெயரை தட்டிச் செல்வதில் எப்போதும் திமுக முந்திக் கொள்ளும். இப்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக திமுக அறிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எதிர்க்கட்சிக்காரர் உண்ணாவிரதம் இருந்தால் ஆளுங்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா. அவர்கள் முந்திக் கொண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கடந்த திங்கள்கிழமை (டிச.21) அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு சாமிக்கு பொங்கல் வைத்து, ஜல்லிக்கட்டு காளைகளையும் கொண்டு வந்து வழிபாடு நடத்தி கடவுளிடம் வேண்டுதல் செய்துள்ளனர்.
""நாங்கள் ஆளுங்கட்சி. போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்த முடியுமா? அதுதான், தடைநீங்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிட்டு பொங்கல் வைத்துள்ளோம்'' என்கிறார் அதிமுக தொண்டர் ஒருவர்.
மத்தியில் ஆளும் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசியச் செயலர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தென் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படும் என சொல்லிச்...சொல்லி...வாய் வலித்திருக்கும். இதுவரையில் ஒன்றும் ஆகவில்லை.
பாமக, மதிமுக, வி.சி., இடதுசாரிகள் என ஒருவர் கூட பாக்கி இல்லாமல் எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும் என சொல்லியாகிவிட்டது. போராட்டங்களும் தொடர்கின்றன.
ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒன்று சேர்ந்து சொன்ன பிறகும், எதிர்ப்பே இல்லாத நிலையிலும் தடை நீங்கியபாடில்லை. தடை ஒன்றும் அரசு விதித்தது அல்ல. அரசியல் நெருக்கடியால் நீக்கிவிட. உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்டப் போராட்டம்தான் தீர்வு என்பதை அனைவரும் அறிவர். அதை ஆளும் அதிமுக செய்துள்ளது. அதிலும் இதுவரையில் முடிவு தெரியவில்லை.
இப்போது, ""மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்'' என மற்றொரு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். இப்போது எல்லோரும், அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். தமிழக முதல்வரும், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கலுக்கு இன்னும் 18 நாள்களே உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், அவற்றை அடக்க காளையர்களும் தயாராக உள்ளனர். ஆனால், இந்த குறுகிய கால இடைவெளியில் அவசரச் சட்டம் சாத்தியமாகுமா?
தமிழ்நாட்டின், அதுவும் தென் மாவட்டத்தில் மட்டுமே பிரபலமாக திகழும் ஒரு நிகழ்வுக்காக, தினம் ஒரு பிரச்னையில் சிக்கித் திணறும் மத்திய அரசும், அதன் அமைச்சரும், அதிகாரிகளும் மெனக்கெடுவார்களா? மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Reliance Jio 4G service for employees to start on Dec 28

PTI

Mumbai, Dec 27 (PTI) Telecom arm of RIL, Reliance Jio, today announced the launch of 4G service for its employees under Jio brand name which will be available from tomorrow.

"Today, on the eve of the 83rd birthday of Dhirubhai, my father, it is my proud privilege to invite all our Reliance families and friends to be the first to experience Jio's services starting tomorrow and in coming weeks.

"While you enjoy Jio Digital Life, I am also counting on you, as part of my family, to be part of co-creating the best experience for all our customers," Reliance Industries Limited Chairman and Managing Director Mukesh Ambani said at the event.

The company is offering Jio mobile service for free to its over 1 lakh employees as of now which will start tomorrow.

"I want all of you to take 5 things back: digital life, connected intelligence, Jio life, Jio together and Why Jio? Because life is going digital. Let me now welcome Jio," he said at the event.

The company, in a presentation at the event, claimed that Jio 4G will deliver 10 times higher download speed and 4 times better upload speed compared to others.

Airtel, Idea Cellular, Vodafone and Aircel have already launched commercial 4G services in the market.

Brand Ambassador of Jio, Shah Rukh Khan, said, "Our service providers for everything say its 4G, but it is neither 4G nor 3G. If God is kind, you can get 2G on it. On Jio you will always find 4G."

He said there are 150 handsets available in the country which support 4G of Jio and mobile phones with 3G and 2G network support only can access Jio Wi-Fi.

The company is also offering 25 per cent discount on its 'LYF' brand 4G smartphones to its employees.

Jio is expected to roll out 4G service commercially around March-April next year.

The launch marks the re-entry of Mukesh Ambani in the mobile service business.

In 2003, he had launched Reliance's CDMA mobile business as Reliance Infocomm on the same day as the birth anniversary of RIL group founder and his father Dhirubhai with the tag line 'Kar Lo Duniya Mutthi Mein'.

The business is now Reliance Communications and is being handled by brother Anil, who was also present at the event.

The two brothers have already come together for the sharing of mobile airwaves or spectrum as well as infrastructure like mobile towers and masts. .

நல்லுறவுக்கு வாசலைத் திறக்கும் நட்பு பயணம்!

logo
தெற்காசிய நாடுகளில் முக்கியமான நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் சுதந்திரத்திற்குப்பிறகு முக்கோணங்களாகவே இருந்தன. இந்த 3 நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருந்தால், இந்த பிராந்தியமே பெரும் முன்னேற்றத்தை காணமுடியும் என்று எல்லோர் உள்ளத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அத்தகைய சூழ்நிலை இதுவரையில் நிலவாமல் இருந்தது. பாகிஸ்தானுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் ஜவஹர்லால் நேரு, ராஜீவ்காந்தி ஆகியோர் சென்றிருக்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் 1999–ம் ஆண்டு முதலில், டெல்லி–லாகூர் இடையே பஸ் போக்குவரத்தை தொடங்கிவைத்து, முதல் பஸ்சில் அவரே பயணம் செய்தார். அதன்பிறகு, 2004–ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த சார்க் மாநாட்டில் வாஜ்பாய் கலந்துகொண்டார்.

இடையில் மன்மோகன்சிங் இரண்டு முறை பிரதமராக இருந்தபோதும், அவர் பாகிஸ்தானுக்கு சென்றதில்லை. ஆனால், அவர் ஒரு கனவை தெரிவித்தார். இந்தியாவில் அமிர்தசரஸ் நகரில் காலை உணவை உண்டுவிட்டு, மதிய சாப்பாட்டை பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் சாப்பிடவேண்டும் என்பதுதான் அந்த கனவு. அந்த கனவு அவர் காலத்தில் நிறைவேறாவிட்டாலும், அதை நரேந்திரமோடி இப்போது நிறைவேற்றிக்காட்டிவிட்டார். ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து புறப்பட்டு முதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் இறங்கி, அங்கு இந்திய நாட்டின் 974 கோடி ரூபாய் உதவியுடன் வாஜ்பாய் பெயரில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்துவைத்தார். டிசம்பர் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த பயணம் நடந்தது. அன்றுதான் வாஜ்பாய் பிறந்தநாள். முகமதுஅலி ஜின்னா பிறந்தநாள். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் பிறந்தநாள். காபூலில் இருந்து நரேந்திரமோடி, நவாஸ்ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு டெலிபோனில் வாழ்த்து சொன்னார். உடனே நவாஸ்ஷெரீப் ‘‘நான் இப்போது லாகூரில் இல்லை. ராவல்பிண்டியில் என் பேத்தி கல்யாணத்துக்காக வந்திருக்கிறேன். நீங்கள் காபூலில் இருந்து எங்கள் நாட்டுக்கு மேலே பறந்துதானே டெல்லிக்கு செல்ல வேண்டும். நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்துவிட்டு செல்லலாமே’’ என்று அழைப்பு விடுத்தவுடன், சற்றும் தாமதிக்காமல் அந்த அழைப்பை ஏற்ற நரேந்திரமோடி உடனடியாக பாகிஸ்தான் சென்றார்.

ஒரு இந்திய பிரதமர் பாகிஸ்தான் செல்வதென்றால் எவ்வளவோ முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும். ஆனால், அந்த மரபுகளை எல்லாம் மீறி உடனடியாக பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற நவாஸ்ஷெரீப், ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் அவரை அழைத்துக்கொண்டு ராவல்பிண்டி சென்றார். அங்கே நவாஸ்ஷெரீப்பின் தாயாரையும், மணப்பெண் உள்பட அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து ஒரு நெருங்கிய நண்பர் குடும்பத்தில் உரையாடுவதுபோல உரையாடி, இந்திய ஆடைகளை பரிசாக வழங்கிவிட்டு, இரவு 7.30 மணிக்கு டெல்லி திரும்பியிருக்கிறார்.

மோடியின் இந்த பயணத்தை நல்லெண்ண பயணம் என்று பாகிஸ்தான் வர்ணித்து இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா கூட இந்த பயணத்தை பெரிதும் வரவேற்று இருக்கிறது. இருநாடுகளுக்கும் நல்லுறவு நிலவினால் இந்த பிராந்தியத்துக்கே பெரிதும் பயன் அளிக்கும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மோடியின் இந்த சுற்றுப்பயணம் நிச்சயமாக இருநாட்டின் நல்லுறவுக்கு வாசலைத்திறக்கும் நட்பு பயணம்தான். இந்த நட்பு பயணத்தின் உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அடுத்தகட்டமாக இருநாட்டு வெளிவிவகாரத்துறை செயலாளர்கள் கூட்டம் மனக்கசப்புகளை மாற்றும் மாமருந்தாக அமையவேண்டும். விரைவில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு வரவேண்டும் என்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

NEWS TODAY 21.12.2025