Saturday, January 16, 2016

ஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி வரை விலையா?- ராமதாஸ் சந்தேகம்

Return to frontpage

கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ள பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிகளில் உடனடியாக புதிய வேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், புதுமைகள் படைப்பதற்கும் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான, கல்வி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக்கழகங்கள் தலைமை இல்லாமல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இவற்றில் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் மட்டுமே இந்த வாரத்தில் பணி ஓய்வு பெற்றனர். மீதமுள்ள 6 பல்கலைக்கழகங்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பதவி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 4 மாதங்களாகவும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிகள் கடந்த ஆண்டு ஜூலை முதல் 6 மாதங்களாகவும் காலியாக உள்ளன.

இவற்றுக்கெல்லாம் முன்பிலிருந்தே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 09.04.2015 முதல் 10 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

பல்கலைக்கழகங்களின் இயக்கத்தில் மூளையை போன்றது துணைவேந்தர் பதவி ஆகும். இந்த பதவி காலியாக இருப்பதால் 8 பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் முடங்கிவிட்டன. துணைவேந்தர் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கொள்கை அடிப்படையிலான முடிவுகளை எடுக்க முடிய வில்லை; பட்டமளிப்பு விழாக்களை நடத்த இயலவில்லை.

புதிய ஆய்வுகளைத் தொடங்க முடியவில்லை. பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்பமுடியவில்லை. மொத்தத்தில் 8 பல்கலைக்கழகங்களும் முடங்கிக்கிடக்கின்றன.

கடந்த 17.08.2013 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 155&ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "பல்கலைக்கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டுவருகிறேன்" என்று ஜெயலலிதா கூறினார்.

எட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியை பல மாதங்களாக நிரப்பாமல் வைத்திருப்பது தான் தமிழகத்தை உயர்கல்வி உலக மையமாக மாற்றும் வழியா? என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்.

துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் தேவையில்லை. துணைவேந்தர் பதவிக்கான விலை பேரம் இன்னும் முடியாதது தான் இதற்கான காரணம் ஆகும். துணைவேந்தர் பதவி என்பது உயர்கல்வியை வளர்ப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆனால், இப்பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை சிறிதும் கடைபிடிக்கப்படுவதில்லை. தேர்வுக்குழு அமைப்பதிலேயே முறைகேடுகள் தொடங்குகின்றன.

துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவினர் துணைவேந்தரை விட உயர்பதவியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரை விட குறைந்த நிலையில் உள்ள கல்லூரி முதல்வர்கள் தான் பல தேர்வுக்குழுக்களுக்கு அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் கடைநிலை ஆசிரியர் பணியான உதவிப் பேராசிரியர் பணிக்கு கூட கல்வித் தகுதியைத் தவிர பல்வேறு கூடுதல் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால், துணைவேந்தர் பணிக்கு கூடுதல் தகுதிகள் எதுவுமே தேவையில்லை. நேர்காணலில் கூட பங்கேற்கத் தேவையில்லை. ஆட்சியாளர்களை சந்தித்து பேசி, உரிய விலையை கொடுத்துவிட்டால் துணைவேந்தர் பதவி உறுதியாகிவிடும் என்பது தான் உண்மை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்ய 06.04.2015 அன்று தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

ஆனால், 10 மாதங்களாகியும் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு காரணம் அப்பதவிக்கு நிலவும் போட்டியல்ல. மாறாக அப்பதவிக்கு முதல்வரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் யாருடைய பெயரையும் இன்னும் பரிந்துரைக்கவில்லை என்பது தான் காரணம். தேர்வுக்குழு என்பதே பொம்மைக்குழு தான். ஆட்சியாளர்கள் தான் துணைவேந்தர் பதவிக்கு விலை நிர்ணயம் செய்து, அதைக் கொடுக்கும் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

அமைச்சரிடமிருந்து இதுபற்றிய தகவல் வந்த அடுத்த நிமிடமே அவர் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். ஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.6 கோடி முதல் ரூ.40 கோடி வரை விலை பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வணிகத்தில் உயர்கல்வி அமைச்சர் சிறந்தவர் என்பதால் தான் அவரால் ஆட்சி மேலிடத்திடம் செல்வாக்குடன் திகழ முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த வணிக விளையாட்டால் உருக்குலைவது உயர்கல்வியும், துணைவேந்தராக தகுதி, திறமை கொண்ட பேராசிரியர்களின் எதிர்காலமும் தான்.

தமிழகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, துணைவேந்தர் பணி நிறைவு அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி வெளிப்படையான முறையில் நியமனம் மேற்கொள்ளப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த சோ.ராமசாமி சிறப்புச் செய்தியாளர்

Return to frontpage

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 46-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், "தமிழக வாக்காளர்கள், தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், ஊழல் பெருகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிமுக ஆட்சியின்போது ரவுடிகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவர் என்ற மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், ஜெயலலிதா அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை போன்ற விவகாரங்களுக்கு தீர்வு கண்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது" எனக் கூறினார்.

தேமுதிக சாதனை பாராட்டத்தக்கது:

"வரும் தேர்தலில் தேமுதிகவால் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, தொடர்ந்து தனது கட்சிக்கு 8 முதல் 9 சதவீத வாக்குவங்கியை தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இது குறிப்பிடத்தக்க சாதனை" என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய பாமக எம்.பி. அன்புமணி, "பாமக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் தாக்கல் செய்யும். மதுவிலக்கை அமல் படுத்துவேன்" என்றார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, "குஜராத்தில் அமைந்ததுபோல் தமிழகத்திலும் ஓர் ஆட்சி அமைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Friday, January 15, 2016

யானைகளின் மன அழுத்தம்! By ஆர்.ஜி. ஜெகதீஷ்


First Published : 15 January 2016 01:19 AM IST
மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பச் சூழ்நிலைகள், வேலைப் பளு, கடன் பிரச்னைகள் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் போன்றவை அதில் முக்கிய காரணிகளாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதனின் மன அழுத்தம் தீர்வதற்கு மனநல மருத்துவர்கள் உதவுவார்கள், அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
 ஆனால், பிரமாண்ட வன விலங்கான யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை எப்படி வழங்க முடியும்? யானைகளுக்கு உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், இப்போது யானைகள் கடும் மனை உளைச்சலில் இருப்பதாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
 மேலும், யானைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்துக்கு மனிதனே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். அதன் விளைவே யானை - மனிதனுக்கு இடையே நடைபெறும் மோதல்.
 இதனை, மோதல் என்று சொல்லுவதைவிட யானை - மனிதன் எதிர்கொள்ளல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
 யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
 நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.
 அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை.
 முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன.
 வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.
 ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
 யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.
 அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.
 அந்த நிமிஷத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.
 ஜீப்பின் சத்தமும், மனிதனின் கூச்சலும், கும்மாளமும் அவற்றுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்குத் தனியார் ஜீப்புகளைக் கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.
 இதை முன்பெல்லாம் சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பைக் கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலாச் சென்றார்.
 அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகனம் ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையைப் புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
 மனிதர்களாகிய நாம் நம் சந்தோஷத்திற்காக யானைகளை அவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனின் "யானை டாக்டர்' என்கிற சிறுகதையில் "டாப்ஸ்லிப்' வனப்பகுதியில் பணி புரிந்த கால்நடை மருத்துவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளுடனான அனுபவத்தை விவரித்து இருப்பார்.
 மேலும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றளவும் உள்ளது.
 யானைகள் மிகவும் அதிக நுட்பமான உணர்வுகள் உள்ள விலங்கினம். காட்டு யானைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை தன் கூட்டத்துடன் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியைத் தேடி சிகிச்சைக்காக வரும் என ஜெயமோகன் தன் சிறுகதையில் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார்.
 இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, யானைகளுக்குத் தேவையான, உகந்த சூழலை ஏற்படுத்தி யானைக்கும் - மனிதனுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளலாம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் அதுவே!

 


Thursday, January 14, 2016

ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம் தீர்வாகுமா?

First Published : 14 January 2016 01:10 AM IST
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளதால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் கலாசாரம் தொடர்புடைய ஒரு வீர விளையாட்டுக்கு, மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கும் ஒரு நிகழ்வுக்கு ஜனநாயக நாட்டில் அளிக்கப்படும் மரியாதை இவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த ஓரிரு நாள்களே உள்ள நிலையில் இந்தத் தடை உத்தரவு ஜல்லிக்கட்டு கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஓர் அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது இப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை. தடை விதிக்கப்பட்டது திடீரென நிகழ்ந்து விட்டது அல்ல.
 முதல் தடை விதிக்கப்பட்டது கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம். இதுவரையில், சுமார் 18 மாதங்கள் உருண்டோடி விட்டன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரையில் இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழர் நல அமைப்புகளும் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. இப்போது, தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. வாக்கு வங்கி அரசியல் எல்லோரையும் விழித்துக் கொள்ளச் செய்துள்ளது.
 மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற ஒருமித்த குரலில், இனிமேல் மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே அதை செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு இனிமேல் வாய்ப்பில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிரித்து விட்டார்.
 தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை, ஏன் நிர்வாக ரீதியிலான ஓர் உத்தரவை பிறப்பித்தாலே போதுமானது என்று யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவையெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகுமா? ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக அமையுமா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கு வேறு எங்கும் முன்னுதாரணத்தை தேடி அலைய வேண்டியதில்லை.
 ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை விவகாரமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 2006-இல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை செயலற்றதாக்கும் வகையில் கேரள அரசு உடனடியாக பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
 அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவின்பேரில் அந்த சட்டம் செல்லாது என கடந்த 2014-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ""கேரள அரசின் 2006-ஆம் ஆண்டு சட்டத் திருத்தமானது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் வகையில் அரசியல் சட்டம் அனுமதிக்காத ஒன்றை நேரடியாகக் கோருகிறது'' என கூறியது.
 அதாவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை விரும்பாத மாநில அரசுகள், அவரவர் விருப்பம்போல சட்டங்களையோ அல்லது அவசரச் சட்டத்தையோ நிறைவேற்றிக் கொண்டால் நிலைமை என்னவாகும்? அது நீதித்துறையின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இருக்கும். இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 142 அடிக்கு உயர்த்தி இருக்க முடியாது.
 ஜல்லிக்கட்டுக்காக இன்று தமிழக அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றினால் அடுத்த ஓரிரு நாளில் காளைகளை அடக்கி மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அது உச்சநீதிமன்றத்தின் தடைக்கு எதிரான நிரந்தர தீர்வாக இருக்குமா? கேரளத்துக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயத்தை உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா?
 அவசரச் சட்டம் என்பது, நாடாளுமன்றம் கூடாத காலங்களில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கானது. அதன் ஆயுள்காலம் குறைந்தபட்சம் ஆறு வாரங்கள். தேவைப்பட்டால் ஆறு மாதங்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
 ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு மூன்று முறை நாடாளுமன்றம் கூடியது. அப்போது ஜல்லிக்கட்டுக்குத் தடையை நீக்க சட்டத் திருத்தம் கொண்டு வர ஆளுங்கட்சிக்கும் தோன்றவில்லை, மற்றவர்களும் வசதியாக மறந்து விட்டார்கள். இப்போது அவசரச் சட்டம் என்பது செயலற்ற தன்மையின் வெளிப்பாடே தவிர வேறோன்றுமில்லை.
 நிலம் கையக விஷயத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
 அரசியல் காரணங்களுக்காக ஆளுங்கட்சி அவசரச் சட்டத்தை கொண்டு வந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சிகள் அதற்கான அழுத்தத்தை கொடுத்தாலும் சரி, அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பதாக அமையாது. மோசமான முன்னுதாரணங்களையே ஏற்படுத்தும்.
 நாட்டு நலன், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் அதனதன் காலத்தே செயல்பட வேண்டும்.
 அரசியலுக்காகவும், வாக்குக்காகவும் செயல்படும் கட்சிகளால் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியாது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் 18 மாதங்கள் "சும்மா' இருந்துவிட்டு இப்போது அவசரச் சட்டம் என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.
 

கரும்பு இவர்களுக்கு இனிக்குமா?

 logo
 
நாளை தைத்திருநாள் பிறக்கிறது. உள்ளங்களிலும், இல்லங்களிலும் உவகை பெருக்கெடுத்தோடும் இந்த நாளில், தித்திப்பான பொங்கல் போல இனிக்கும் கரும்பும் முக்கியபங்கு வகிக்கும். ஆனால், எல்லோருக்கும் இனிக்கும் கரும்பு, விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கும் இனிக்கிறதா? என்பதுதான் இப்போது கேட்கவேண்டிய கேள்வியாகப்போய்விட்டது. தமிழ்நாட்டில் கரும்பு பணப்பயிராக கருதப்பட்டாலும், விவசாயிகளின் வாழ்வில் இப்போது பணப்பயிராக இல்லை. காரணம் உற்பத்தி செலவுக்குக்கூட அவர்கள் விளைவிக்கும் கரும்புக்கு விலை கிடைக்கவில்லை. வழக்கமாக தமிழ்நாட்டில் ஏறத்தாழ 28 லட்சம் டன் கரும்பு உற்பத்தி அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவின் 10 சதவீத கரும்பு உற்பத்தி தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்ற நிலைமாறி, இந்த ஆண்டு 18 லட்சம் டன் கரும்பு உற்பத்தியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,850 என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த விலை போதாது என்கிறார்கள், கரும்பு விவசாயிகள். தமிழ்நாட்டில் 24 தனியார் சர்க்கரை ஆலைகளும், 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும் இருக்கின்றன. இந்த ஆலைகளெல்லாம் அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையைக் கொடுத்து, விவசாயிகளிடம் இருந்து கரும்பு வாங்கினால்தான் விவசாயிகளுக்கு இந்த விலை கிடைக்கும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே அரசு பரிந்துரை செய்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் மட்டும் கொடுத்தார்கள், தனியார் ஆலைகள் கொடுக்கவில்லை என்பது விவசாயிகளின் மனக்குமுறலாகும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அதைக்கொடுக்கும் அளவுக்கு சர்க்கரைக்கும் விலை இல்லை. தற்போதைய நிலையில் ஒருகிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.41–க்கு மேல் ஆகிறது. ஆனால், சர்க்கரை விற்பனை விலை ஏறத்தாழ 30 ரூபாய்தான் என்கிறார்கள், ஆலை அதிபர்கள். உற்பத்தி செலவோடு அரசு தமிழ்நாட்டில் விதிக்கும் வரிகள் மற்ற மாநிலங்களைவிட மிக அதிகமாக இருப்பதால், அவர்களோடு போட்டியிட்டு சர்க்கரையை விற்பனை செய்யமுடியாமல், அனைத்து ஆலைகளிலும் சர்க்கரை தேங்கிக்கிடக்கிறது என்பது ஆலை அதிபர்களின் ஆதங்கம்.

ஒரு டன் கரும்பில் இருந்து 90 கிலோ சர்க்கரை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சர்க்கரைக்கு இருந்த கொள்முதல் வரியை எடுத்துவிட்டு, 5 சதவீதம் மதிப்பு கூட்டுவரி விதிக்கப்படுகிறது. இதனால் மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ.1.50 விலை அதிகமாகிறது. மேலும் ஒரு டன் கரும்பில் இருந்து 30 லிட்டர் எரிசாராயம் உற்பத்தி செய்யமுடியும். இதற்கு தமிழ்நாட்டில் 14.5 சதவீதம் வரி. ஆனால் கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் 2.5 சதவீதம்தான் வரி. இதனால் தமிழ்நாட்டு எரிசாராயத்தின் விலை அதிகமாக இருப்பதால் மற்ற மாநிலத்தோடு போட்டிபோட்டு விற்கமுடியாததால், எரிசாராயம் அளவுக்கு அதிகமாக ஆலைகளில் தேங்கிக்கிடக்கிறது. இதோடு கரும்பு சக்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்சார வாரியம் தகுந்த விலை கொடுத்து வாங்கவில்லை என்பதும் அவர்களின் குறையாக இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விற்கமுடியாமல், ஈரோட்டில் வந்து குவியும் கர்நாடக சர்க்கரை விலை குறைவு என்ற காரணத்தால் அதையே வியாபாரிகளும், மக்களும் வாங்குகிறார்கள். ஆக, விவசாயிக்கும் உரிய விலை இல்லை. ஆலை அதிபர்களுக்கும் வருமானம் இல்லை. இந்த பெரிய நெருக்கடியைப் போக்க, உடனடியாக விவசாயிகள், ஆலை அதிபர்களை அழைத்து, அரசாங்கம் முத்தரப்பு கூட்டத்தைக்கூட்டி, இருதரப்புக்கும் கட்டுபடியாகும் நிலையை உருவாக்கவேண்டும். விலை நிர்ணயத்தை மத்திய–மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி, தேவை–சப்ளை அடிப்படையில் விவசாயிகள்–ஆலை அதிபர்களே நிர்ணயித்துக்கொள்ளலாமா? என்பதையும் பரிசீலிக்கலாம்.

Wednesday, January 13, 2016

இலையுதிர் காலம் - ஓர் எச்சரிக்கை!

First Published : 13 January 2016 01:18 AM IST
மான்களின் கூட்டத்திலே கிழடு தட்டிய மான் கிடையாது. மீன்களின் இனத்திலே மூப்படைந்த மீன் கிடையாது. வான் பறவைக் கூட்டத்திலே வயது மூத்த பறவைகளைக் காண முடியவில்லை. ஆனால், மனிதனிடம் மட்டும் மூப்பு ஏன்? முதுமை ஏன்?
 வனாந்தரங்களிலுள்ள மரங்களுக்கு வசந்த காலம் வருகிறது. அடுத்து, இலையுதிர் காலம் வருகிறது. மறுபடியும், வசந்த காலம் அல்லது பூக்காலம் வருகின்றது. ஆனால், மனித வர்க்கத்தில் மட்டும் வசந்த காலத்தை அடுத்து, இலையுதிர் காலம் வருகின்றது. தொடர்ந்து வசந்த காலம் திரும்புவதில்லை.
 இலையுதிர் காலத்தோடு மனித வாழ்வு முடிவடைந்து விடுகிறது. அதனால்தான் முதுமையை சோகமான இலையுதிர் காலம் (Sad Autumn) என்றார் ஓர் அறிஞர். சேட்டியாபிரியான்ட் (Chateabriand) எனும் அரசியலறிஞனும் முதுமையை உடைந்து போன கப்பல் என்கிறார்.
 முதுமை பயனில்லாதது என்பதனைச் சங்கப் புலவராகிய நரிவெரூஉத்தலையார், பல்சான்றீரே பல்சான்றீரே கயல்முள்ளன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின் பல்சான்றீரே (புறநானூறு : 195-வது பாடல்) எனும் பாடல் மூலம் முதுமை பயனில்லாதது என்பார்.
 சங்கப்புலவரைப் போலவே ஷேக்ஸ்பியரும், முதுமையில் பற்கள் செயலற்றுப் போகின்றன, கண்கள் செயலற்றுப் போகின்றன, நாக்கு சுவையற்றுப் போகின்றது, இறுதியில் எல்லாமே செயலற்றுப் போகின்றன (Sans teeth, sans eyes, sans taste and everything) என்று "அஸ் யு லைக் ட்' நாடகத்தில் எழுதியுள்ளார்.
 நம் காலத்து ஆர்.கே. நாராயணன், என்னுடைய இடது காதின் சவ்வு முதலில் கிழிந்தது, அதற்குப் பிறகு அனைத்துப் பொறிபுலன்களும் செயலற்றுப் போயின (The left ear drum is the first to be switched off. Faculties are switched off one by one) என்றெழுதுகிறார். கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாகின்றது.
 ஆனால், மறுபடியும் அது கூட்டுப்புழு ஆவதில்லை. மனிதன் மட்டும் வண்ணத்துப் பூச்சியாகி பின்னர் கூட்டுப்புழு ஆவது கொடுமை அல்லவா? மானிட சாதியில் கிளியோபாட்ரா ஒருத்திதான் முதுமையடையாமலேயே முழு வாழ்க்கை வாழ்ந்ததாக ஷேக்ஸ்பியர் கூறுகின்றார்.
 மரத்திற்கு இலையுதிர் காலம் வந்தால், மரத்துக்காரன் உடனடியாக அதனை வெட்டுவதில்லை. ஏனென்றால், அந்த மரம் அடுத்துப் பூக்கும், காய்க்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், மனித சாதியில் முதுமை வந்துவிட்டால், அது மீண்டும் பூக்காது, காய்க்காது என்பது சந்ததியர்க்குத் தெரிந்த காரணத்தால், அம்மரத்தைப் பாதுகாக்க மறுக்கிறார்கள்.
 பசுக்களில் ஒரு மாடு இனிமேல் பால் சுரக்காது, அது மரப்படி மாடு என்றாகிவிட்டால், அதனை மந்தைக்கு விரட்டிவிடுவார்கள் (பால் சுரப்பற்ற மாடுகளுக்கு, மரப்படி மாடு என்று பெயர்). முதுமையுற்றோர் இனிப்பயன்பட மாட்டார்கள், சுமையாகிவிடுவார்கள் என்பது தெரிந்ததால், இன்றைய இளைஞர்கள் காப்பகத்திற்குக் கைகாட்டிவிடுகிறார்கள்.
 முதுமையின் கொடுமையை நன்கறிந்த கவிஞன் டபிள்யூ.பி. ஏட்ஸ், ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் மகன், அவனது அறுபது வயதில் எப்படியிருப்பான் என்பதை முன்கூட்டியே அறிந்துவிட்டால், அவள் தாய்மையைத் தியாகம் செய்து, புறக்கணித்துவிடுவாள் என்றார். ஒருகாலத்தில் முதியோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் படித்தால், நாக்கு அழும்.
 நியூசிலாந்துக்குப் பக்கத்திலிருந்த ஆதிவாசிகள் மூப்படைந்தோர்களை முதுமக்கள் தாழிக்குள்ளே வைத்து, அவர்கள் விரும்பும் உணவு தானியங்களையும் உள்ளே வைத்து, அத்துடன் ஒரு சிறு அகல் விளக்கையும் உள்ளே வைத்துப் புதைத்துவிடுவார்களாம்.
 அதுபோலவே, மலேசியாவுக்குப் பக்கத்திலுள்ள காமரூன் தீவைச் சேர்ந்த வேட்டையாடிகள் முதியோர்களை அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய், அடர்ந்த புதர்களிடையே வைத்துவிட்டு வந்துவிடுவார்களாம். அவர்கள் பசியெடுத்த விலங்குகளுக்கு இரையாகி முடிந்து போவார்களாம். முதியோர்கள் வதைபடுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது.
 குழந்தைப் பருவம், மாணவப் பருவம், வாலிபப் பருவம் என்று சொல்வதுபோல், முதுமையை ஒரு பருவம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஒரு நோய். அந்த நோய் கொல்வது கிருமிகளைக் கொண்டல்ல, கருமிகளைக் கொண்டாகும். லியோ டால்ஸ்டாய் எழுபதாவது வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்தார். அவரைப் பார்த்த ஆண்டன் செகாவ், இவருடைய நோயின் மூலக்காரணம் முதுமை. அம்முதுமை இவரை முழுமையாகத் தின்று கொண்டிருக்கிறது என்றார்.
 முதுமை காலாவதியாகிப் போன ஒரு பிராமிசரி பத்திரம். அதன் பயன்படாமையைக் கவிக்கோ அப்துல் ரகுமான், "முதுமை, நிமிஷக் கரையான் அரித்த ஏடு, இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத்தட்டு, ஞாபகங்களின் குப்பைக்கூடை, வியாதிகளின் மேய்ச்சல் நிலம், காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட வர்ண ஓவியம்' எனப்பாடி, எதிர்காலத்திற்கு ஓர் எச்சரிக்கை தருகிறார்.
 ‘On growing old‘ எனும் கவிதையில் முதுமையின் இயல்பைப் பாட வந்த மேத்யூ அர்னால்டு எனும் ஆங்கிலக் கவிஞன், "பனித்துளிகளின் மீது என் நடை தளர்கிறது. புதிய ஊர்களுக்கு எனது உள்ளம் துள்ள மறுக்கிறது. மிதிபட்ட என் நம்பிக்கையுணர்வு, மீண்டும் எழ முடியாமல் தவிக்கிறது' எனப் பகர்வார்.
 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் புறநானூற்றுப் புலவர், கழிந்துபோன இளமைப் பருவத்திற்காக ஓர் இரங்கற்பாவே பாடுகிறார். "இப்பொழுது நினைத்தாலும் என் நிலைமை எனக்கே இரக்கமாகின்றது. ஒரு காலத்தில் மணலிலே வண்டல் இழைத்து விளையாடிய வனிதையரோடு கைகோர்த்து ஆடினேனே.. வஞ்சனையறியா இளைஞர்களுடன் கூடி, மருத மரத்தில் மீதேறி மடு நீருள் தொப்பெனப் பாய்ந்து, அடி மணலை அள்ளி வந்து, பருவப் பெண்கள் ஆச்சரியப்படும்படியாகக் காட்டி மகிழ்ந்தேனே.. அந்த இளமைக் காலம் இனி எப்போது, எங்கே கிடைக்கும்?
 இப்பொழுது பூணிட்ட தண்டினை ஊன்றிக்கொண்டு, இருமல் இடையிடையே வந்து தொல்லை தர, சிலச்சில சொற்களைப் பேசிக்கொண்டு திரிகின்ற நான், கழிந்துபோன என் இளமைக்காலத்தை நினைத்தால் இரக்கமாகின்றதே' (புறநானூறு 243-வது பாடல்) என்ற பாடல் முதுமையின் மீது நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும்.
 இத்தகைய இலையுதிர் காலத்துக்குத் தொல்காப்பியர் ஓர் எச்சரிக்கை தருகிறார். ஒரு தலைவனும், தலைவியும் வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தபிறகு, அவர்களே தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்திலிருந்து அவர்கள் விலகிப்போய் ஒரு தவ வாழ்க்கையை மேற் கொள்ளலாம்.
 தசரத சக்கரவர்த்தி ஒரு நரை முடியைக் கண்டவுடன், அரண்மனையை விட்டுப் புறப்படத் தயாரான செய்தியை இராமாயணம் சொல்லும். ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் அந்திமக் காலத்தில் காசிக்குப் புறப்பட்டுப் போனதும், ஒரு விவேகமான செயலாகவே இப்பொழுது தோன்றுகிறது.
 மகாகவி பாரதி பாரத நாட்டின் பெருமையைப் பேசவந்தபொழுது, எங்களுடைய பாட்டன், பூட்டன், முப்பாட்டன்கள் உறவின் முறையோடு கூடிக்களித்த நாடு, இந்நாடு (எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்தது மிந்நாடே - அதன் முந்தையர் ஆயிரமாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே) எனப் பாடினான். இன்றைக்கு நாம் அதனை மறந்துவிட்டாலும், சீனாக்காரர்கள் பாரதி கண்ட கனவை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 சீன வரலாற்றில் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிலேயே முதியோரைப் பேணிக்காத்தல் நல்ல மன்னனுக்குரிய கடமையாக வகுக்கப்பட்டது. சீனத்து அரசர்கள் மூத்த அமைச்சர்களுக்கு எதிரில் அமர்ந்து பேசமாட்டார்களாம். சீன ஞானியாகிய கன்பூசியஸ், முதியோர்களுக்கு அமைதியும், இளைப்பாற வசதியையும் செய்து தருவதையே தம் முழுமுதல் நோக்கமாக வைத்திருந்தாராம்.
 சிலப்பதிகாரக் காலத்தில், முதுமை போற்றப்பட்டிருக்கிறது - பாதுகாக்கப் பெற்றிருக்கிறது என்பதை, கண்ணகி கடவுளுக்கு இட்ட நிபந்தனையால் அறியலாம். மதுரையை எரிக்கச்சொல்லி தீக்கடவுளுக்குக் கட்டளையிடுகின்றபொழுது, யார் யாரை எரிக்கக்கூடாது எனப் பட்டியலிடுகின்ற வேளையில், அதில் முதியோர்களும் இடம் பெறுகின்றனர் (பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எம் இவரைக் கைவிட்டு).
 பழங்காலத்துச் சீனத்தில் முதியோர்கள் 70 வயது வரை அரசுப் பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனராம். ஓய்வுபெற்ற அதிகாரி எண்பது வயதை அடைந்ததும், அவரைப் பேணிக் காக்க ஓர் அரசு அலுவலருக்கு ஊதியத்தோடு விடுப்புக் கொடுத்து, எண்பது வயதுப் பெரியவரைப் பாதுகாக்கப் பணிப்பார்களாம்.
 பழைய ரோம அரசில் ஒரு மகன் தந்தையை அடித்துவிட்டால், அடித்தவனின் குடியுரிமையைப் பறித்துவிடுவார்களாம். ரோம சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு முதியோர்களே காரணமாகத் திகழ்ந்ததால், அவர்கள் அங்குப் போற்றிப் பாதுகாக்கப்பட்டார்கள். சீனத்து, ரோம் நாட்டு முதியோர்களுக்கு இலையுதிர்க் காலத்தின் எச்சரிக்கை தேவையேயில்லை.
 முதுமை எனும் இலையுதிர்காலத்தினால், முதியோர்கள் பெற வேண்டிய எச்சரிக்கை ஒன்று உண்டு. ஒரு தந்தை தம் மகனைப் படிக்க வைப்பதையோ, அவரைப் பணியில் அமர்த்துவதையோ, அவருக்குத் திருமணம் செய்து வைப்பதையோ தம் கடமை என்று எண்ணி ஆற்ற வேண்டும். இவற்றை எல்லாம் இன்றைக்கு நாம் செய்தால், எதிர்காலத்தில் அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பில் செய்யக்கூடாது. இதனைச் சரியாகவே எச்சரித்திருக்கிறார் திருவள்ளுவர்.
 தந்தை மகற்காற்றும் நன்றி என நவின்றார் திருவள்ளுவர். தந்தை மகற்காற்றும் உதவி என்று சொல்லவில்லை. காரணம், ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதைப் பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பித் தருவதாக எண்ண வேண்டும். அதனால்தான் நன்றி எனக் கூறினார். இதனை ஆங்கிலக் கட்டுரையாளர் ஏனெஸ்டு பேக்கர், இம்முறையை ஒரு "ரிலே ரேஸ்' என்றார். ஒருவர் பெற்ற மூங்கில் கழியை இன்னொருவரிடம் ஓடிப்போய் கொடுப்பதைப்போல ஆகும்.
 பிள்ளைகளும் இன்றைக்குத் தாம் எதைத் தந்தை - தாய்க்குச் செய்கிறோமோ, அவை பிற்காலத்தில் தமக்கு வரும் என்று எண்ண வேண்டும். இளைய தலைமுறையினருக்கும் ஓர் எச்சரிக்கை செய்கிறது நாலடியார்.
 கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அம்மரத்தினுடைய விழுதுகள் தாங்கிப் பிடித்து, ஏந்திப் பிடித்துக் காப்பாற்றுவது போல, தந்தையாகிய ஆலமரத்தைப் பிள்ளைகளாகிய விழுதுகள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
 உலகத்திலுள்ள அத்தனை ஆலமரங்களும் காலங் காலமாய் நிற்பதில்லை. ஆனால், கொல்கத்தா பொட்டானிகல் கார்டனிலுள்ள ஆலமரத் தோப்பும், அடையாறு ஆலமரத்தோப்பும் காலங்காலமாய் நிலைத்து நிற்பதற்குரிய காரணத்தை, மூத்த சமுதாயமும் இளைய சமுதாயமும் கற்க வேண்டும்.
 இவ்விரண்டு இடங்களிலுமுள்ள தாய் மரங்கள் பலனை எதிர்பார்த்து விழுதுகளை விடுவதில்லை விழுதுகளும் வந்த இடத்தை மறந்து தாங்கிப்பிடிக்காமல் விடுவதில்லை. அதனால், ஆச்சர்யப்படத்தக்க வாழ்க்கை வாழ்கின்றன. வேர்கள் விழுதுகளைத் துண்டிப்பதில்லை. விழுதுகள் வேர்களை வெட்டுவதில்லை.
 ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதை பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பி தருவதாக எண்ண வேண்டும். பிள்ளைகளும் இன்றைக்கு தாம் எதைத் தந்தை - தாய்க்குச் செய்கிறோமோ, அவை பிற்காலத்தில் தமக்கு வரும் என்று எண்ண வேண்டும்.

 

Tuesday, January 12, 2016

குறள் இனிது: அங்கே இது வேலைக்கு ஆகாதுங்க..!

Return to frontpage


சோம.வீரப்பன்


சுமார் 30 வருடங்களுக்கு முந்தைய நிகழ்ச்சி இது. எனது வங்கிக் கிளை யின் மேலாளர் குமாருக்கு (மாற்றிய பெயர்தான்) முதுநிலை மேலாளராகப் பதவி உயர்வுடன் அடிதடிக்குப் பெயர் பெற்ற ஒரு வடமாநிலத்தில் போய்ச் சேருமாறு உத்தரவும் வந்தது. குமார் மென்மையானவர் எப்பொழுதும் ஸ்டைலாக இன்ஸர்ட் செய்து பெல்ட் போட்டு, ஷுவுடன் டிப் டாப்பாக இருப்பார். அவரை வழியனுப்ப நண்பர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தோம்.

குளிர் சாதன வகுப்பு. அவரது விலையுயர்ந்த விஐபி சூட்கேஸை பெர்த்திற்குக் கீழே வைக்க முயன்றோம். ஆனால், ஏற்கெனவே அங்கே இடம் முழுக்க பல பழைய கனமான பெட்டிகள் இருந்தன. அவற்றை அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்து, அகற்றச் சொல்லி குமாரின் சூட்கேஸை வைத்து விட்டோம். எதிரில் இருந்தவர்கள் எங்களை ஏளனமாய்ப் பார்த்து, ‘இதெல்லாம் எவ்வளவு தூரம் பார்க்கலாம்’ என்றார்கள். ஒரு வழியாய் ரயில் கிளம்பியது.

6 மாதங்கள் கழித்து குமார் சென்னை வந்தது அறிந்தோம். நடுவில் பார்க்க முடியாததால், மீண்டும் ரயில் ஏற்றிவிடச் சென்றோம். அவசரமாக பிளாட்பாரத்தில் ஓடி அவரை கண்டுபிடித்தால், மனிதனை அடையாளமே தெரியவில்லை! ஆள் ஒன்றும் மெலியவில்லை. இன்னும் குண்டாகியிருந்தார்! முன்பு, ஜெமினி கணேசன் மீசையாக இருந்தது, இப்போது வீரப்பன் மீசையாக மாறியிருந்தது. குரலில் அவ்வளவு கரகரப்பு எப்படித்தான் வந்ததோ தெரியவில்லை. கைகுலுக்கினால் தோள் வரை வலித்தது.

மகானுபாவன தோற்றமளிக்கும் வகையில் பெரிய ஜிப்பாவும், பைஜாமாவும் அணிந்திருந்தார்; அவரே, இரண்டு பெரிய துத்தநாகப் பெட்டிகளை உள்ளே அமுக்கிக் கொண்டிருந்தார்; ‘என்ன ஆளே மாறிவிட்டீர்களே’என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே, ‘நண்பர்களே, நான் போகும் இடத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறேன். இந்த ஏசி, முன்பதிவு எல்லாம் இன்னும் 10 மணி நேரம் வரைதான். பின்னாடி யார்; வேண்டுமானாலும் ஏறிக் கொள்வார்கள். முன் பதிவு என்று சொல்லிப் பயனில்லை. அங்கு நமது தோற்றம் கரடு முரடாக இருந்தால்தான் நல்லது. எனவேதான், நடை உடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டேன். முதலில் நான், அங்கு சென்ற பொழுது பலரும் என்னிடம் உரத்த குரலில் அதட்டும் தோரணையிலேயே பேசினர். நான் மெதுவாய்ப் பேசினால் எடுபடாது. ஆனால், இப்போது எனது குரலைக் கேட்டு, மற்றவர்கள்தான் அஞ்சுவார்கள். நான் நல்லவனாகவே இருக்கிறேன். ஆனால், வலிமையானவன் நெஞ்சுறுதி மிக்கவன் என்பதையும் சொல்லாமல் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்றார்.

போரில் நாம் கையில் எடுக்கும் ஆயுதம் நமது பகைவனால் முடிவு செய்யப்படுகிறது என்று சொல்வார்கள். நமது அன்றாட வாழ்க்கையிலும் சரி, வணிகத்திலும் சரி, நமது அணுகுமுறை இடத்துடன் பொருந்தினால்தான், வெற்றி சாத்தியம்!. வலிமையான தேர், கடலில் ஓடாது, அதுபோலக் கப்பலும் நிலத்தில் செல்லாது என்கிறது குறள். சமீபத்திய சென்னை வெள்ளத்தில் மக்கள் சாலையிலேயே படகில் பயணித்தது ஞாபகம் வருகிறதா?

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496)

NEWS TODAY 21.12.2025