Saturday, April 23, 2016

எதற்காக மருத்துவக் கவுன்சில்?


By ஆசிரியர்

DINAMANI

சுகாதார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மருத்துவப் படிப்பு, மருத்துவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கண்காணிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. மருத்துவக் கல்வி முறை ஒட்டுமொத்தமாகத் தரம் தாழ்ந்து தகர்ந்திருப்பதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் முழுக் காரணம் என்று தனது 92-ஆவது அறிக்கையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கிறது.
காலமாற்றத்திற்கு ஒவ்வாத மருத்துவக் கவுன்சிலை வழிநடத்தும் 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்றையச் சூழலுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு. நீண்ட காலமாகவே விவரம் அறிந்தவர்களும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் எழுப்பி வந்த கோரிக்கைகளை, இப்போது சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவும் வழிமொழிந்திருக்கிறது.
மருத்துவமும், மருத்துவக் கல்வியும் தொடர்பான பிரச்னைகளில் அரசு சுகாதாரத்திற்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது என்பதல்ல முக்கியம். குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களும், அவர்கள் எல்லா பகுதிகளிலும் பரவலாக இல்லாமல் ஒருசில இடங்களில் மட்டுமே அதிகமாகக் காணப்படுவதும், அவர்களது தரம் மெச்சும்படியாக இல்லாமல் இருப்பதும், எவ்வளவுதான் சுகாதாரத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுவதும்தான் இப்போது நடக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கும் ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்கிற குறைந்தபட்ச விகிதத்தை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அடுத்ததாக, மருத்துவக் கல்வியின் நிலைமை அதைவிட மோசம். இந்திய மக்கள்தொகையில் 31% மட்டுமே உள்ள ஆறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 58% இடங்களும், 46% மக்கள்தொகையை உள்ளடக்கிய எட்டு மாநிலங்களில் வெறும் 21% இடங்களும் இருப்பது, மருத்துவக் கல்வி சமச்சீராக வழங்கப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
மூன்றாவதாக, மருத்துவக் கல்வியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக நிலைக்குழு வெளிப்படையாகவே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இப்போதைய மருத்துவக் கல்வி தரமான மருத்துவர்களை உருவாக்கவில்லை என்று நிலைமையை அப்பட்டமாக வெளிச்சம் போடுகிறது அந்த அறிக்கை.
கடைசியாக, நிலைக்குழு இன்னொரு உண்மையையும் எடுத்துரைக்கத் தயங்கவில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை வகுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில்தான் மருத்துவக் கவுன்சில் அக்கறை செலுத்துகிறதே தவிர, மருத்துவர்கள் தங்கள் தொழில் தர்மத்தைக் கடைபிடிக்கிறார்களா, மக்களுக்குத் தரமான சிகிச்சை, அடாவடிக் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து எல்லாம் கவனமே செலுத்துவதில்லை என்கிறது அந்த அறிக்கை.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுகிறது என்பதை, "நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை வகுத்து' என்று குறிப்பிடுவதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது அந்த அறிக்கை. மருத்துவக் கவுன்சில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி அனுமதி ஒரு பிரிவாகவும், மருத்துவர்கள் தொழில் தர்மத்தை மீறாமல் இருப்பதைக் கண்காணிப்பது இன்னொரு பிரிவாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் நிலைக்குழுவின் கடைசிப் பரிந்துரை.
மருத்துவக் கல்லூரிகளின் தரம் இந்த அளவுக்குக் குறைந்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஒரு காரணம். தனியார் மருத்துவக் கல்லூரியின் விவகாரங்களில் காவல் துறையோ, மத்தியப் புலனாய்வுத் துறையோ தலையிட முடியாது என்கிற அந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியின் தரத்தைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குத் தரப்பட்டுவிட்டது.
அதுமுதல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் பொது ஏலத்தில் விடப்படாத குறை, அவ்வளவுதான். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகள் வெறும் கண்துடைப்பு என்பதையும், நன்கொடையாகக் கோடிக்கணக்கில் பணம் பெறப்படுகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. உச்சநீதிமன்றம் 2013-இல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குக் கொண்டாட்டமாகப் போனது. இப்போது அந்தத் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 422 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் 224 கல்லூரிகள் தனியாரால் நடத்தப்படுபவை. மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் 53% தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசம் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் விலை பேசி விற்கப்படுபவை என்பதுதான் நடப்பு நிலைமை. அரசு ஒதுக்கீட்டில் தரப்படும் இடங்களுக்கும், கல்விக் கட்டணம் இல்லாமல் இதர கட்டணங்களைத் தனியார் கல்லூரிகள் வசூலித்துவிடுகின்றன.
இது குறித்து கவலையே இல்லாமல் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் மட்டுமே குறியாக இருப்பதற்கு எதற்கு ஓர் இந்திய மருத்துவக் கவுன்சில் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு நமக்குத் தெரிந்த ஒரே தீர்வு, மருத்துவப் படிப்பை அரசே ஏற்று நடத்துவதாகத்தான் இருக்கும். அதில் இந்த அளவுக்குத் தரம் குறையாது; முறைகேடுகள் இருக்காது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி மருத்துவக் கவுன்சில் சீரமைக்கப்பட்டு, மருத்துவப் படிப்பின் தரமும், அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் மருத்துவமும் உறுதிப்படுத்தப்படுவது அவசியம்!

சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...DINAMANI

சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...DINAMANI

By விமலா அண்ணாதுரை

நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையானோர் பல எண்களைக் கூறுவார்கள். ஆனால், நீங்கள் கடந்த ஆண்டு எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் என்று கேட்டால் பலரிடம் பூஜியம் கூட பதிலாக வரும். நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது.
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் அம்பேத்கர். விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.
இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் களைந்துவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால், புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது. புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே என 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
நான்கு மாதக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாம் தொலைக்காட்சி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் தொலைக்காட்சித் திரையைப் பார்க்க ஆரம்பிக்கின்றது. குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.
வாசிப்புத் திறன் இருக்கும் குழந்தைகள் பேச்சில் தெளிவும்,ஞாபக சக்தியும்,கருத்தாழமும்,சொல்வதைக் கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும், பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.
வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமன்றி, சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.
யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பு, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிகப் புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவித்துள்ளது.
அது முதல் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம்.
நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்காக புத்தகம் அச்சிட்டு,குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர்.
உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலைசிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட், ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23-இல் தான்.
காஞ்சி பல்கலைக்கழகம், நாலந்தா பல்கலைக்கழக நூலகங்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன. அன்னிய நாட்டில் இருந்து வந்த மதவெறியர்கள் அந்த நூலகத்தைக் கொளுத்தியபோது தொடர்ந்து ஆறு மாதங்கள் எரிந்து கொண்டே இருந்தனவாம். அதில் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நமக்குத் தந்த அனுபவ அறிவு அனைத்தும் அழிந்து போயின.
தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிதாமகன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை என்று அழைக்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது.
1931-இல், அக்டோபர் 21-ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டன. இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை..
1990}களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர்பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டு வண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர், ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க் கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர்.
இப்போதும்கூட, அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலகப் புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராகச் சைக்கிளில், தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும் செய்கின்றனர்


நூல் வாசிப்பு என்பது சிந்தனையைத் தூண்டும் யோகா போன்றது; ஒரு தியான நிலையைப் போன்றது; ஒரு உளவியல் தெரபியைப் போன்றது. வரலாறு படைக்க விரும்புவோர் முதலில் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் புத்தக வாசிப்புப் பழக்கமே முதல் தகுதி என்று ஐரோப்பாவை தனது போர் வியூகத்தினால் ஆண்ட மாவீரன் நெப்போலியன் சொல்லியிருக்கிறார்.
இவருக்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் மன்னர் தஞ்சையை ஆண்ட இராஜராஜசோழன் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். இவர் தம் இளம் வயதில் சுமாராக ஆயிரம் ஓலைச்சுவடிகளை வாசித்தவர். அதில் ஒன்றுதான் நாம் விரும்பும் சித்தரை நேரில் சந்திக்கும் ஓலைச்சுவடி. இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறையைப் பின்பற்றி ஏழே நாள்களில் தாம் விரும்பும் சித்தரைத் தரிசித்திருக்கிறார்.
மேலும் மாதம் ஒருமுறை அவரைச் சந்தித்து தமது ஆத்ம பலத்தை அதிகரித்திருக்கிறார். அதனால்தான் உலகின் பெரும்பகுதியை அவரால் ஆட்சி செய்ய முடிந்தது. ஓதுவது ஒழியேல், நூல் பல கல் என்ற ஒளவையின் ஆத்திசூடி தொடர்களும் பலவகை நூல்களைக் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
இதே கருத்தை, கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்னும் பழமொழியும் உணர்த்துகிறது. அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அண்ணாவிற்கு நன்கு தெரியும்.


இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவாஹர்லால் நேருவிற்கு நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு.
தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர். ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது.
மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள். குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்களைப் பரிசளியுங்கள். உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.
புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...



ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்.

கட்டுரையாளர்:
முனைவர்.

பதின் பருவம் புதிர் பருவமா?- 28 | இணைய அடிமைத்தனம்: மீண்டு வர என்ன வழி?

டாக்டர் ஆ.காட்சன்
வெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் என்று அறிவிப்பு வந்த இரண்டு நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு செய்ததால், அந்த நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டுவிட்டது. ஒரு பொருள் மீது நம் மக்கள் கொள்ளும் மோகம் தொடர்பான வேகத்துக்கான ஒரே ஒரு சான்று இது. எல்லாம் டிஜிட்டல் மயமாவது பல சௌகரியங்களைத் தந்தாலும், வழக்கம்போல அவற்றில் உள்ள பிரச்சினைகளை நம் அதிகார வர்க்கம் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை.
உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநலப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநலப் பாதிப்பு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகச் சீனாவும் தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியைப் பின்பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
வெளிவர வழி உண்டா?
நம் நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றுக்கு அடிமையாகும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கவலை தரும் விஷயம். இணைய அடிமைத்தனத்தால் படிப்பு, மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதே என்று பல பெற்றோர்கள் புலம்புவதை அடிக்கடி பார்க்கிறோம். ஒருவேளை நம்முடைய ரத்தஉறவுகளும் இப்படி அடிமையாகிவிட்டால் என்ன செய்வது?
இணைய அடிமைத்தனத்துக்கு என்றே மனநலச் சிகிச்சைகள், ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், மீண்டும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதையே முக்கிய நோக்கமாகக்கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இணையதளம், வலைதளம், மொபைல்ஃபோன் பயன்பாட்டை அப்படி முற்றிலும் தடை செய்ய முடியாது. எனவே, இவற்றை மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வழிசெய்வதே சிறந்தது.
இணைய டைரி
இணையப் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கும்போது, கட்டுக்கடங்காமல் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க டைரி முறை பயன்படும். இந்த டைரியில் ஒருவர் இணையத்தை ஒவ்வொருமுறை பயன்படுத்தும்போதும் எத்தனை மணி நேரம் பயன்படுத்துகிறார், எத்தகைய வலைதளங்களைப் பார்க்கிறார், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் உள்ள மனநிலை, ஒவ்வொரு முறை பயன்படுத்துவதால் தடைபடும் அன்றாட மற்றும் முக்கிய வேலைகள், ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றைக் குறித்துக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் அவர் எவ்வளவு நேரம் விரயம் செய்கிறார், எந்த மனநிலை அதிகம் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது, எத்தனை வேலைகளை அது பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும்.
(அடுத்த வாரம்: பயன் தரும் ஆரம்பம்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர். தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

எம்ஜிஆர் 100 | 50 - எம்ஜிஆரின் அபார நினைவாற்றல்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

நிகழ்ச்சி ஒன்றில் சோ பேசுவதை எம்.ஜி.ஆர். ரசிக்கிறார்.

M.G.R. வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல் பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.
சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை சந்தித் தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.
‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.
இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.
‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு அபார மான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.
‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன் மனோ கரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...
‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’
- தொடரும்...

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படம் 1976-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியானது. கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆரும் மும்பையைச் சேர்ந்த பிரபல சண்டைக் கலைஞர் ஷெட்டியும் மோதும் காட்சி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் நாடெங்கும் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. அதனால், சண்டைக் காட்சிகளில் தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

Friday, April 22, 2016

குறள் இனிது: பின் சீட்டிலிருந்து கார் ஓட்டலாமா?


என் உறவினரின் திருமண ஏற்பாடுகளுக்காக குடும்பத்துடன் காரைக்குடி சென்று இருந்தோம். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு, பலரும் சிபாரிசு செய்த கருப்பாயி அக்காவை சமையலுக்கு அமர்த்தியிருந்தார்கள். அவர்களது கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைத்தண்டு கூட்டு , வெள்ளைப் பணியாரம்,ரெங்கோன் புட்டு எல்லாம் மிகப்பிரசித்தம். ஆனால் கல்யாண வேலைக்கு உதவிக்கு வந்த அவர்களது உறவினர் ஆச்சி ஒருவரும் அருமையாக சமைக்கக் கூடியவர் என்பதால் சமையல் மேற்பார்வை அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆச்சியோ இன்னது சமைக்க வேண்டும் என்று சொல்வதுடன் நிற்காமல், கருப்பாயி அக்காள் பின்னாடியே நின்று கொண்டு இப்படி நறுக்கனும் அப்படித் தாளிக்கனும் என்றெல்லாம் நச்சரித்ததால் என்ன நடந்தது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரியும்!

விளம்பர உலகின் தந்தையான டேவிட் ஒகில்வியும் கூட 'உங்களைவிடக் கெட்டிக்காரர்களை வேலைக்கு எடுங்கள்; பின்னர் அவர்களை வேலை செய்ய விட்டுவிடுங்கள் ' என்று சொல்லி இருக்கிறாரே!

எனது மற்றொரு நண்பர் மிகவும் அலசிப் பார்த்து, திறமையும் 20 ஆண்டுகள் விபத்தேயின்றி கார் ஓட்டிய அனுபவமும் கொண்ட ஓட்டுநர் ஒருவரை பணியமர்த்தினார்.ஆனால் நம் நண்பர் காரில் பயணிக்கும் பொழுது, பின் சீட்டில் அமர்ந்து கொள்வார். `மெதுவாய் ஓட்டு,இது அபாயகரமான வளைவு முந்தாதே, சைக்கிள்காரன் எதிரில் வருகிறான்' என்று விடாமல் ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார். பாவம் அந்த ஓட்டுநர்.ஒரு நாள் நண்பர் செய்த ஆர்ப்பாட்டத்தில் குழம்பி,பதறி வண்டியைப் பள்ளத்தில் இறக்கி விட்டார்!

வண்டி வேகமாய்ச் செல்லும் சமயம் மனிதன் சாலையைப் பார்ப்பாரா, வாகனங்களைக் கவனிப்பாரா அல்லது முதலாளி சொல்வதைக் கேட்பாரா?

அமெரிக்க ராணுவ தளபதி ஜார்ஜ் பாட்டன் கூறியது சிந்திக்கத்தக்கது.

' பணியாளர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லுங்கள்; எப்படிச் செய்ய வேண்டுமென்பதை அல்ல.அவர்களின் வெற்றிகள் உங்களை வியப்பிலாழ்த்தும்!'

அலுவலகங்களில் பார்த்திருப்பீர்கள்.சில மேலதிகாரிகள் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்த பின்னரும் அவரை வேலை செய்யவிடாமல் சும்மா நைநை என்று ஏதாவது யோசனைகள், விமர்சனங்கள், சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வேறு சில மகானுபாவன்களோ தினமும் மாலையில் என்னிடம் வந்து என்னென்ன செய்தாய் என்பதைச் சொல்லிவிடு' என்பார்கள். ஐயா, ஒருவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் முதலில் அவரை அந்த வேலையைச் செய்யவிட வேண்டுமில்லையா? பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் பொழுதே தலையிட்டால் எப்படி? இதற்குக் காரணம் அவரது திறமையிலோ நாணயத்திலோ சந்தேகம் வருவது தானே? நம்பிக் கொடுத்தபின் நம்பிக்கை இழக்கலாமா? இதனால் வேலை செய்பவருக்கு மனத்தாங்கல். வேலையைக் கொடுத்தவருக்கும் நிம்மதியில்லை. வேலையும் ஒழுங்காய் முடியாது.

கொடுத்த பணி சரியாய் நடந்ததா என ஆய்வு செய்ய (monitoring) வேண்டியது அவசியமே.ஆனால் எப்பொழுது? வேலைக்கு இடைஞ்சலாகவா?

ஒருவரை ஆராயாமல் பணியமர்த்துவதும், தேர்ந்தெடுத்து பணியமர்த்தியவர் மேல் சந்தேகம் கொள்வதும் தீராத தொல்லையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும் (குறள் 510)

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? - உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா?


சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி “பேஸ்புக் என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட் செய்து, அதிலிருந்து விலகிவிட்டேன்” எனப் பகிரங்கமாகப் பேசியதை மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்திய சம்பவமாகச் சொல்லலாம். அவர் சொல்வதைத்தான், இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி, சமூக வலைதளங்களின் பாதிப்புகளைக் குறித்து விளம்பரத் தூதராக நடித்தால், மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

யார் உங்கள் ஆசிரியர்?

இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் ‘ஆசிரியர் - மாணவர் உற'வில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவருவதாக, சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நான் சந்தித்த பல கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இணையத்தில் தேடிப் பதிலைச் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துகளைக் கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரத்தில் எந்தக் கவலையும் இன்றி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை இதற்குக் கூறலாம்.

சமீபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையிடம் நிர்ப்பந்தித்ததுதான்.

அறிவா? தகவலா?

‘எல்லாம்தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரவலாகி இருக்கிறது. சமூக வலைதளங்களின் மூலமாகத் தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், எல்லா நேரத்திலும் அது அறிவுசார்ந்த (Knowledge) விஷயமாக இருக்க முடியாது. மாறாகத் தகவல் சார்ந்த (Information) விஷயமாக மட்டும் இருந்தால், பல சமூகச் சிக்கல்கள் ஏற்படும்.

உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது நீரிழிவு நோய்க்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்துகொண்டால், அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத் துறையில் உடல் பருமனைக் குறைக்கவும், கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம்.

இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, குழந்தையின்மைக்கு டாக்டர் சுகர் மாத்திரையைத் தவறாகக் கொடுத்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தவறான அணுகுமுறை மருத்துவத் துறையை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தைத் தேடிப் பார்த்து, தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதே மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

புதைக்கப்படும் உணர்ச்சிகள்

விதம்விதமாக ஸ்மைலி பயன்படுத்தும் பலருடைய முகங்களில் உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. சமூகம் உருவாவதே ஒவ்வொரு தனிமனிதரிடமும் இருந்துதான். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்வது, முகபாவங்கள், உடல் பாவனைகள் மூலம் நாம் சொல்லவருவதைப் பிறருக்கு உணர்த்துவது, பதிலுக்குப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்வதுதான் சமூகப் பழக்கவழக்கத்தின் அடிப்படை.

ஆனால் நமது சந்தோஷங்கள், துக்கங்களின் வெளிப்பாட்டை ‘OMG', ‘LOL', ‘RIP' என்று சுருக்கிவிட்ட இந்தக் குறுஞ்செய்தி உலகத்துக்குச் சமூக வலைதளம் என்று பெயர் வைத்தது மிகப் பெரிய நகைமுரண்! அதிலேயே புழங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்கள் மாறிவருவதாகவும், பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை மழுங்கி வருவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

படிப்பிலும் பாதிப்பு

இணையதளத்தில் இருக்கும் நேரத்தைக் கட்டுப்பாட்டோடு வைக்க முடியாததால்தான், வளர்இளம் பருவத்தினரின் படிப்பு பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. படிக்க வேண்டிய நேரத்தை இணையதளம் மற்றும் மொபைல்போன் தின்றுவிடுவதால் சில முறை முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்கூடத் தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். எப்போதும் கடந்தகால வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகளைக் குறித்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கவனச்சிதறலை ஏற்படுத்துவது, படிப்பை மேலும் பாதிக்கும். தொடர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் ஞாபகத்திறன் குறைய வாய்ப்புள்ளதாக (Digital Dementia), சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



இணைய அடிமைத்தனம் என்ன காரணம்?

வளர்இளம் பருவத்தில் “நீ படிப்பதற்கு மட்டும் நேர்ந்துவிடப்பட்டிருக்கிறாய்” என்கிற அளவுக்குப் பெற்றோரின் கனவுகள் குழந்தைகளின்மீது திணிக்கப்படும்போது, அதை ஆரோக்கியமாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்புக் கம்பளம் விரித்த கனவு உலகம் போலக் காட்சியளிப்பதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு:

# வளர்இளம் பருவத்தினருக்குத் தங்களுடைய மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது.

# அதிக எதிர்பார்ப்பைத் திணிக்கும் நிஜ உலகத்திலிருந்தும் தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது.

# முகம் பார்த்துப் பேசத் தேவையில்லாத இணையதள உலகத்தில், அவர்களுடைய கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாகக் குறுந்தகவல்கள் மூலம் எல்லாக் கருத்துகளையும் பரிமாறும் மேடையாகிறது.

# நிஜ உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர், இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் அள்ளலாம்.

(அடுத்த வாரம்: ஆன்லைன் ஆபத்து)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

அரசு மருத்துவமனைகளை காட்டிலும் 50% குறைந்த கட்டணத்தில் ஸ்கேன்: மதுரை தனியார் மருத்துவரின் மருத்துவ சேவை


தனியார் மருத்துவமனை மருத்து வர்கள் என்றாலே லாபநோக்கில் செயல்படுகிறவர்கள் என்ற தவறான அடையாளத்தை உடைத்துள்ளார் மதுரை அரசரடியை சேர்ந்த தேவகி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் நாகேந் திரன். மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு அருகில் செயல்படும் இவரது சேவா ஸ்கேன் சென்டரில், அரசு மருத்துவமனைகளை காட்டி லும் குறைந்த கட்டணத்தில் ஏழை நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து கொடுக்கப்படுகிறது.

அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.750, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 முதல் ரூ.3,500 கட்டணம் பெறப் படுகிறது. ஆனால், இவரது ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.550, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.1,500 மட்டுமே பெறுகிறார். அரசு மருத்துவமனை யில் ஸ்கேன் எடுக்க வரிசை அடிப் படையில் நோயாளிகள் காத்தி ருக்க வேண்டும். அதனால், ஸ்கேன் எடுக்க, ரிப்போர்ட் வர குறைந்த பட்சம் 5 முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதனால், ஏழை நோயாளிகள் தனியார் மருத் துவமனையில் ஸ்கேன் எடுக்க பணமில்லாமலும், அரசு மருத்துவ மனையில் உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க முடியாமலும் தனக்கு என்ன நோய் என்றே தெரியாமலேயே தொடர்ந்து தற்காலிக சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. ஆனால், டாக்டர் நாகேந்திரனின் சேவா ஸ்கேன் சென்டரில் உடனுக் குடன் ஸ்கேன் எடுத்து அதற் கான ரிப்போர்ட்டும் வழங்கப்படு கிறது. இந்த குறைந்த கட்டணத் தில் எந்த இடத்திலும் ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை என்பதால், இவரது சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவர் நாகேந் திரன் கூறியதாவது: எம்பிபிஎஸ் முடித்ததும், கை நிறைய சம்பா திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லண்டன் சென்று படித்து அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்தேன். என் னுடைய தந்தை ஆசிரியர் என்ப தால், அவருக்கு நான் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவது பிடிக்கவில்லை. அவர் என்னை அழைத்து நமது ஊரிலேயே வந்து மருத்துவர் தொழில் பாருப்பா என்றார்.

அவரது விருப்பப்படி மதுரை அரசரடியில் சிறிய அளவில் மருத் துவமனையைத் தொடங்கினேன். நோயாளிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்தேன். இதனால் என்னிடம் ஏழை நோயாளி கள்தான் அதிகளவில் சிகிச்சைக்கு வந்தனர். ஸ்கேன் எடுக்க எழுதிக் கொடுத்தால் அவர்களில் பலர் ஸ்கேன் எடுக்க பணமில்லாமல் என்ன நோய் என்றே தெரியாமல் இறந்ததை பார்த்து மிகவும் வருந் தினேன்.

அதனால், 1998-ம் ஆண்டு பிளாக் அன்ட் ஒயிட் ஸ்கேன் மையம் தொடங் கினேன். ஏழை நோயாளிகளுக்கு சலுகை விலையில் ஸ்கேன் எடுத் துக் கொடுத்தேன். கடந்த 2005-ம் ஆண்டு ஏழை நோயாளிகள் சலுகை விலையில் அல்ட்ரா, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காகவே அரசு மருத்துவமனை அருகே தனி யாக சேவா ஸ்கேன் மையத்தை சேவை அடிப்படையில் தொடங்கி னேன். தற்போது இங்கே வந்தால் எந்த நோயையும் கண்டறியக்கூடிய வசதிகள் உள்ளன.

எனது மருத்துவமனை வரு வாயில் வரும் ரூ. 10 லட்சத்தை, இந்த சேவா ஸ்கேன் சேவைக்கு பயன்படுத்துகிறேன். இந்த ஸ்கேன் மையத்தில் 4 மருத் துவர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட தினமும் 24 மணி நேரமும் இந்த சேவா ஸ்கேன் சென்டர் செயல்படுகிறது என்றார்.

அப்துல் கலாமின் விருப்பம் நிறைவேற்றம்

மருத்துவர் நாகேந்திரன் மேலும் கூறியதாவது: புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை வைத்து திறக்க திட்டமிட்டோம். ஆனால், அவரை அணுகியபோது தனியார் மருத்துவமனை என்பதால் எங்களை பார்க்கவே மறுத்துவிட்டார். எனது சேவையை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்பிறகு அவர் ஒரு குழுவை அனுப்பி மதுரையில் விசாரித்துள்ளார். உண்மைதான் என்பது தெரிந்தபிறகு அப்துல் கலாம் எங்களது புற்றுநோய் மருத்துவமனையைத் திறக்க வந்தார். அப்போது, இது மட்டும் நீங்கள் செய்தால் போதாது என்றவரிடம், இரு கிராமங்களை தத்தெடுக்கிறோம் என்றோம். கலாம் விரும்பியபடி, மதுரை அருகே அச்சம்பத்து, பண்ணைக்குடி கிராமங்களை தத்தெடுத்து இலவச மருத்துவ சிகிச்சை, கழிப்பறை கட்ட, சுகாதார வசதிகளை ஏற்படுத்த உதவிகளை செய்கிறோம். தற்போது அந்த கிராமங்கள் சுகாதாரத்தில் இந்தியாவுக்கே முன் உதாரணமான கிராமங்களாக இருக்கின்றன என்றார்.

NEWS TODAY 04.06.2026