Tuesday, December 20, 2016

5 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர்... இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?



'vikatan.com

கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.



ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)

ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.

மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)

மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை. அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.

வி.என். சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.



டி.டி.வி. தினகரன்

வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.

வி.பாஸ்கரன்

வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார். சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர், ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இராவணன்

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

ராமச்சந்திரன்

நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.

கலியபெருமாள்

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.

பழனிவேலு

நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.

தங்கமணி

மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

- ஏ. ராம்

நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார்.. சவால் கொடுக்குமா அமேசான் ப்ரைம் வீடியோ! 

#PlusMinus


ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான், அமேசான் ப்ரைம் தனது புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த சேவை மூலம் திரைப்படங்களை ஹச்.டி தொழில்நுட்பத்தில் ஆன்லைனிலும், ஆஃப் லைனிலும் பார்க்க முடியும் என்கிறது அமேசான். அமேசான் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தை கடந்த புதன்கிழமை துவங்கியது. இதற்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட் ப்ளிக்ஸ் ஹாட் ஸ்டார் இணையதளங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அளித்து வருகின்றன. ஹாட் ஸ்டார் மற்றும் நெட் ப்ளிக்ஸின் சேவைக்கட்டணம் மாதம் 99 ரூபாயிலிருந்து துவங்குகிறது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 1200 ரூபாயிலிருந்து சேவைக்கடணம் துவங்குகின்றன. ஆனால் அமேசான் ப்ரை அதிரடியாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற ஆஃபரில் வழங்குகிறது. அதுமட்டுமில்லாது முதல் மாதம் இலவச சேவையை வழங்கியுள்ளது. இதற்கு தேவை ஒருவருக்கு அமேசான் தளத்தில் கணக்கு இருந்தாலே போதுமானது,

இந்தியாவில் என்ன சிறப்பு:

அமேசானின் இந்த புதிய சேவையில் இந்தியாவில் பாலிவுட், அமெரிக்க சீரியல்கள், மண்டல மொழி படங்கள் மற்றும் கேம்கள் என சேவையை வழங்கியுள்ளது. 142 நாடுகளில் அமேசான் ப்ரைம் சேவை லைவ்வில் உள்ளது. இதில் இந்தியாவில் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் ஆபாசமான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு மங்களாக காட்டப்படும். இதனை எந்த வித கோரிக்கையும் இன்றி தானாகவே முன்வந்து அமேசான் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம் அதனால் தான் சென்சார் செய்து வெளியிடுகிறோம் என்கிறது அமேசான். மேலும் குழந்தைகளுக்கான டிவி ஷோக்களையும் வழங்குகிறது. இது தவிர அமேசானின் சொந்த வீடியோக்களையும் வழங்குகிறது.



எதில் பார்க்க முடியும்?

இந்த சேவையை ஆண்ட்ராய்டு , ஐ-ஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்களில் பெற முடியும். இந்த தளங்களில் லாக் இன் செய்து இந்த சேவையை பெறலாம். க்ரோம்காஸ்டில் இந்த சேவையை பெற முடியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் கூகுள் க்ரோம்காஸ்ட் செட்டப்பை க்ரோம்காஸ்டில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இந்த‌ சேவையை பெற முடியும்.

விலையில் என்ன மாற்றம்:

அமேசான் ப்ரைம் வீடியோ தற்போது முதற்கட்டமாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற அளவிலும், பின்பு வருடத்திற்கு 999 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் நெட்ப்ளிக்ஸ் பேசிக், ஸ்டாண்டர்டு,ப்ரீமியம் சேவைகளை முறையே ரூ 500, ரூ 650, ரூ 800 ஆகிய விலைகளில் வழங்குகிறது ஆனால் நெட் ப்ளிக்ஸின் கட்டணங்கள் அனைத்தும் மாதத்துக்கான கட்டணங்கள். ப்ரைமின் கட்டணம் வருடத்திற்கான கட்டணமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



தமிழில் என்ன இருக்கிறது?

தமிழின் சமீபத்திய ஹிட்களான கபாலி மற்றும் தெறி தான் அமேசான் ப்ரைமில் தமிழ் ரசிகள்களுக்கான ஸ்பெஷல் வருகைகள். இது தவிர மேலும் பல படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களை கவரும் விதத்தில் இந்த படங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மைனஸ் என்ன?

அதிரடி விலை சலுகையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையில் விலை மட்டுமே கவர்ச்சிகரமானதாக உள்ளது சேவைகளில் வழங்கப்படும் வீடியோக்களின் கலெக்ஷன் சரிவர திருப்திகரமானதாக இல்லை. இணைய வேகம் குறைவாக இருந்தால் போதும் என கூறியுள்ளது ஆனால் இது 4ஜி சேவைகளிலும் கூட நேரம் எடுத்து கொள்வது போன்ற ஆரம்ப சிக்கல்கள் உள்ளன. இவற்றை விரைவில் சரி செய்தால் ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸுக்கு டஃப் கொடுக்கலாம்.

அமேசானில் பொருள் வாங்கி கொண்டிருந்த அனைவரும் இந்த சேவையின் இலவச சோதனைக்கு தயார் ஆகி வருகின்றனர். ஒரு மாதம் கட்டாயம் இலவசம் என்பதால் வேகமாக இந்த சேவை பரவி வருகிறது. இந்தியாவில் ப்ரைம் டெலிவரியில் ஏற்கெனவே 7 லசம் வாடிக்கையாளர்கள் இருப்பது இதன் ப்ளஸ். இந்தியா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட சேவைகளின் வருகை திரையரங்குகளுக்கு சற்று ஆபத்து தான் என்றால் என்டர்டெயிண்மன்ட் துறையின் வளர்ச்சியாக தான் இதனை அணுக வேண்டும். ப்ரைம் கட்டாயம் இந்த துறையில் பெரிய சாவலை அளிக்கும் என்கிறனர் வாடிக்கையாளர்கள். நிச்சயம் மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களும் உத்திகளை மாற்றியமைக்கும் என நம்பலாம்.

ச.ஸ்ரீராம்

பசுவதைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.. எதிர்ப்பாளர்களை சாடும் ஜல்லிக்கட்டு ஆர்வலர் நர்மதா

க.சே. ரமணி பிரபா தேவி

தலைப்பாகை, இடுப்பில் துண்டு, வேட்டி அணிந்து விவசாயி போன்ற தோன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்ட நர்மதா போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகிறது.

ஜல்லிக்கட்டுக்கு பலரும் பலவிதமான போராட்டத்தை நடத்தினாலும் இந்தப் பெண்ணின் போராட்டம் அதிகம் கவனம் ஈர்ப்பதாக இருந்தது.

யார் இந்த நர்மதா என்ற தேடலின்போது நிறைய தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

ராஜபாளையத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் நர்மதா. சென்னையில் வளர்ந்துள்ளார், எம்.ஏ., எம்.பில். முடித்துப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அப்பா மதுப்பழக்கத்தின் பாதிப்பால் இறந்தவர் என்பதால் மதுவுக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் இருக்கிறார்.

காவிரிப் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அம்பத்தூர் தொகுதியில் சுயேட்சையாக நின்று தேர்தலிலும் களம் கண்டிருக்கிறார். கணவர் நந்தகுமார் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இரு குழந்தைகள், குடும்பம் என கூட்டுக்குள் சுருங்கிவிடாமல், போராட்டக் களத்தில் இறங்கி சிறகு விரித்திருக்கிறார்.

இதுகுறித்து நர்மதாவிடம் நம்மிடம் கூறியதாவது:

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும், என் பூர்வீகத்தின் மீது அலாதிப் பிரியம் எனக்கு. அதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சனை ஏற்பட்டபோது, போராட ஆரம்பித்தேன். சொக்கலிங்கபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் தொடங்கிய பணி, இன்று காவிரிப் பிரச்சனைக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் டெல்லிப் பயணம் வரை நீண்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான போராட்டத்தை எப்படித் தொடங்கினீர்கள்?

அடிப்படையிலேயே எனக்கு இலக்கியங்கள் மீது ஈடுபாடு அதிகம். காடும், காடு சார்ந்த பகுதியுமான முல்லை நிலத்தில் ஆயர்கள் வாழ்ந்தார்கள். அவர்களிடம் ஆநிரைகள் (கால்நடைகள்) இருந்தன. அவற்றைப் பாதுகாக்க வீரம்மிக்க காளைகள் வளர்க்கப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் வலிமை கொண்ட ஆண்களை, காளைகளை அடக்கியவர்களை முல்லை நிலப் பெண்கள் மணந்தார்கள். கலித்தொகையில் இதற்கான பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்களில் வெட்சிப்போர் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும், கரந்தைப் போர் அவற்றை மீட்டு வருவதையும் பேசுகிறது. இவை அனைத்தும் ஆதித்தமிழ்க் கலாச்சாரம்.

ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்தில் பிண்ணிப் பிணைந்திருக்கிறது. ஆனால், நீதிபதிகளோ கணினியில் ஜல்லிக்கட்டை விளையாடச் சொல்கிறார்கள்.

இம்முறை ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளதா?

நடைபெறுமா என்ற அச்சத்தை விட, நடைபெற வேண்டும் என்ற உறுதிதான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை இல்லாததால் இந்த நிலையில் இருக்கிறோம். அவர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தற்போது அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், திமுக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

மாநில அரசு, எந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போது உத்தரப் பிரதேச தேர்தலில் மட்டுமே மத்திய அரசு குறியாக இருக்கிறது. அங்கு வெற்றி பெறவேண்டும் என்பதைக் கவுரவப் பிரச்சினையாகப் பார்க்கிறது. உத்தரப் பிரதேச தேர்தல் மேலுள்ள அவர்களின் கவனத்தை நம்மீது திருப்பினால் மட்டுமே இது நடக்கும்.

நான் உச்ச நீதிமன்ற தடை உத்தரவை மீறச்சொல்லவில்லை. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டமியற்றலாமே? அதை அரசு செய்ய முக்கியமான தலைவர்கள் வலியுறுத்த வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்கவேண்டும்.

அதுதவிர விஷால், த்ரிஷா உள்ளிட்டோர், ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். தமிழ்ப்படங்களில் நடித்து சம்பாதித்துக்கொண்டே, தமிழ்க்கலாச்சாரத்தை எதிர்க்கும் நடிகர்களின் படங்களைப் பார்க்கக்கூடாது என்று தமிழ் மக்கள் உறுதியேற்க வேண்டும்.

மாடுகள் வளர்க்கும் ஆசை உண்டா?

(சிரிக்கிறார்... ) நான் சாணி அள்ளி, மாட்டைக் குளிப்பாட்டிவிட்டுத்தான் கல்லூரிக்கே செல்வேன். சென்னை அண்ணா நகரில் நிறைய நாட்கள் மாடு மேய்த்திருக்கிறேன்.

விவசாயிகளிடம் பேசினீர்களா?

ஆம், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக பயப்படுகிறார்கள். ஆனாலும் சிலர் எனக்கு முழுமையாக ஆதரவு அளிக்கின்றனர்.

பீட்டா அமைப்பு குறித்து?

உள்நாட்டு உருவாக்கங்களுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பு அது. அசைவப் பழக்கத்தை தடை செய்யச்சொல்ல பீட்டாவால் முடியுமா? நாயை வீட்டில் கட்டிப்போட்டு, பறவைகள், கிளிகளை கூண்டில் அடைப்பதை வதைப்பதாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏன் விவசாயிகள் மீது மட்டும் இந்த துவேஷம் என்று புரியவில்லை.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து சில ஆண்டுகள் முன்னர் வரை நாம் காளை மாடுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தினோம். எனில் விவசாயிகள் பசுவதை செய்தார்கள் என்று அந்த அமைப்பு சொல்கிறதா? பசுவதைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்தான் பெரிய பெரிய அமைப்புகளில், பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

சில சக்திகள் ஜல்லிக்கட்டை ஒழித்து, தமிழர்களின் வீர உணர்வைக் குலைக்க எண்ணுகின்றன.



அதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க ஆசைப்பட்டேன். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பாலமேடு வாடிவாசலுக்கு மாட்டு வண்டியில் வந்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தேன். அதற்கான ஏற்பாடுகளுடன் தலைப்பாகை, இடுப்பில் துண்டு, வேட்டி அணிந்துகொண்டு விவசாயி போன்ற தோன்றத்தில் கிளம்பினேன். இதற்கு முன்னால் மாட்டு வண்டி ஓட்டிப் பழக்கம் இல்லையென்றாலும் துணிந்து இறங்கினேன்.. ஆனால் அதற்குள் போலீசாருக்குத் தகவல் தெரிந்துவிட்டது. அவர்கள் என்னைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவசங்களை மறுத்துவிட்டீர்களாமே?

ஆம், இலவசங்களின் மீது எனக்கு விருப்பமில்லை. அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதியை கிராமங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தலாம் அல்லவா..

மது விற்ற காசைக் கொண்டு இலவசங்கள் அளிக்கின்றனர். என்னுடைய உறவினர்களில் பலர் இன்று குடிகாரர்களாக இருக்கின்றனர். என்னுடைய அப்பா குடிப்பழக்கத்தால்தான் அவர் உயிரை விட்டார். அந்தப் பணத்தில் இருந்து வழங்கும் இலவசங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்றுவரை ஆட்டுரலில் தான் அரைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்கிறார் வீரத் தமிழச்சி நர்மதா.


சந்தேகம் சரியா 14: மாரடைப்பைத் தடுக்குமா `ஸ்டாடின்’ மாத்திரை?)

டாக்டர் கு. கணேசன்

எனக்கு வயது 50. என் அப்பாவுக்கு மாரடைப்பு வந்து `பை பாஸ்’ ஆபரேஷன் நடைபெற்றது. மாரடைப்பு பரம்பரையாக வரும் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் மாரடைப்பு வந்துவிடுமோ எனப் பயப்படுகிறேன். ‘ஸ்டாடின்’ மாத்திரை சாப்பிட்டால், மாரடைப்பு வராது எனக் கேள்விப்பட்டேன். இது சரியா?

இது சரியல்ல!

மாரடைப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது பரம்பரை வழியிலும் வருகிறது என்பது உண்மை. குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்சினை இருந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து மாரடைப்பு வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இது பொதுவான கருத்து.

பரம்பரை மட்டுமல்ல

உங்கள் அப்பாவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக்கும் மாரடைப்பு வரும் என்று முடிவு செய்யக் கூடாது. பொதுவாக, ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகக் கொலஸ்ட்ரால், புகைப் பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத சோம்பல் வாழ்க்கை, பரம்பரை ஆகிய காரணிகள் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இவற்றில் ஏதாவது இரண்டு காரணி கள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக இதய நிபுணரிடம் சென்று, இதய நோய் தொடர்பான முழு உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு தெரிந்தால், டாக்டர் ஆலோசனைப்படி ஸ்டாடின் மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டாடின் மாத்திரை மாரடைப்பை வர விடாமல் தடுக்கும் நல்லதொரு மருந்துதான். ஆனால், சரியான காரணம் இல்லாமலும் தேவையில்லாமலும், டாக்டர் பரிந்துரைக்காமலும் அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மாத்திரை போதாது

மாரடைப்புக் காரணமாகும் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை ஸ்டாடின் மாத்திரை 35 சதவீதம் மட்டுமே குறைக்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் ரத்தத்தில் அதிகரிக்கிறது.

கல்லீரல் HMG CoA Reductase எனும் என்சைமின் துணையோடு சுயமாகக் கொலஸ்ட்ராலைத் தயாரித்து ரத்தத்துக்கு அனுப்புவது ஒரு வழி. நாம் சாப்பிடும் உணவிலிருந்து ரத்தத்துக்கு நேரடியாகக் கொலஸ்ட்ரால் கிடைப்பது மற்றொரு வழி. ஸ்டாடின் மாத்திரை HMG CoA Reductase எனும் என்சைமைச் செயலிழக்கச் செய்வதால், கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது; ரத்தக் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதே நேரம், உணவிலி ருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். எனவே, ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரை மட்டுமே போதாது. ஸ்டாடின் மாத்திரையோடு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும் தேவை.

கட்டுப்பாடு அவசியம்

எல்.டி.எல். கொலஸ்ட்ராலை நேரடியாக அதிகரிக்கும் செரிவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளான பாமாயில், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பால் பொருட்கள், இறைச்சி, தேங்காய் எண்ணெய், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதயத்துக்கு ஆபத்து தருகிற டிரான்ஸ் கொழுப்பை அதிகரிக்கும் நொறுக்கு தீனிகளை நெருங்கக் கூடாது. துரித உணவையும் மென்பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவைச் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டு சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவை ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்து மாரடைப்பைத் தடுக்கும்.

இவை தவிர, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோயை நெருங்கவிடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மன அழுத்தம் ஆகாது. இப்படிப் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியுமே தவிர, ஸ்டாடின் மாத்திரையை மட்டும் நம்புவது நல்லதல்ல!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது

பிடிஐ

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருமான வரித்துறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன் விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பான் எண், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும். இதன்மூலம், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தானாகவே சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் தாமாக முன்வந்து காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் வெகுசிலரே தாமாக முன்வந்து விட்டுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, December 19, 2016

வெல்வதற்காகத் தான் போராட்டங்கள்; போராடினேன்... வென்றேன்: டாக்டர் ராஜலட்சுமி!

By ரவிவர்மா  |   Published on : 01st December 2016 11:35 AM  |   அ+அ அ-   |  

"ராஜ


dr

லட்சுமி சுந்தரம்' என்ற பெயரில் எழுத்தாளராக விளங்கும் டாக்டர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் சிவாஜி கணேசனின் குடும்ப மருத்துவர். இவரின் கணவர் கே.எம். ராதாகிருஷ்ணனும் பிரபல மருத்துவர். சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாள், சிவாஜி, ராம்குமார், பிரபு, அவர்களின் வாரிசுகள் என நாற்பது ஆண்டுகளாக, நான்கு தலைமுறைகளாக பணிகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர். கடந்த 2012இல், வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், ஏறத்தாழ நான்கு ஆண்டுகாலம் புற்றுநோயுடன் போராடியிருக்கிறார். பழுதான தாடை எலும்புகள், மேலண்ணம், பற்கள் எல்லாவற்றையும் இழந்ததில் அழகிய முகத்தோற்றம் மாறியது; குரலும் மாறியது. ஆனாலும், தளராத தன் மன உறுதியாலும், மன எழுச்சியாலும், நோயை வென்று மீண்டு வந்து, தன் மருத்துவப் பணியையும், எழுத்துப்பணியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 75வயது நிரம்பிய அவரை சென்னை, தியாகராயநகரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்தபோது, பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்:
"என் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம். தந்தை சுந்தரம் கால்நடை மருத்துவராக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு அப்பா ஆந்திராவில் பணியாற்றி வந்ததால் நான் ஆரம்பக்கல்வியை அங்கே பயின்றேன். சுதந்திரத்திற்குப் பிறகு, என் தந்தை, தன் குழந்தைகளுக்கு நுண்கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு விருப்ப மாற்றம் பெற்றார். என் தாயார் பாக்யலட்சுமி ஆங்கில வழி கல்வி கற்றவர். அவர், புகழ்பெற்ற ஆங்கில நாவல்களை எனக்கு அறிமுகம் செய்தார். நான்கு பெண் குழந்தைகளில் நான்தான் மூத்தவள். நாலும் பெண்மக்களாகப் போய்விட்டதே என்று யாராவது அப்பாவிடம் வருத்தமாகப் பேசினால், அப்பா அதை மறுப்பார். "பெண் என்றால் பொன்' என்று மகிழ்ச்சியோடு கூறுவார். யாரிடமும் எங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். எங்கள் இளம் வயதிலேயே "கண்ணன்' என்கிற குழந்தைகள் பத்திரிகையை வாங்கிவருவார். சிறுவயதில் ஒரு காகிதத்தில் "சின்ட்ரெல்லா' கதையை நாடகமாக எழுதிக்கொண்டிருந்தேன். என் எழுத்தார்வத்தைக் கண்ட என் தந்தை ஓடிச்சென்று ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கிவந்து கொடுத்து, "இந்தா... இதில் எழுது..!' என்று ஊக்குவித்தார்.
என் பதிமூன்றாம் வயதில் என் தந்தை இறந்தபோது, குடும்பத்தின் மூத்தபெண் சம்பாத்தியம் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றது மத்திய தர குடும்பத்தின் வாய்ப்பாடு. ஆசிரியை அல்லது மருத்துவர் இரண்டில் ஒரு முடிவை எடுக்கவேண்டும். இறைவனின் ஆசீர்வாதத்தால் இரண்டுமே நிறைவேறியது. மருத்துவத்துறையில் எம்.டி பட்டம் பெற்று மருத்துவராகி, பின்பு மருத்துவத் துறையிலேயே பேராசிரியராகவும் பணியாற்றினேன்.
அம்மாவுக்கு ஆறு மொழிகள் பேச, எழுத, படிக்கத் தெரியும். அவர், இசை, நாட்டியம் அனைத்தையும் கற்றுத்தந்தார். அம்மாவின் உதவியால் ஸ்ரீநாராயண குருவின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.
மருத்துவ நிபுணர் கே.எம்.ராதாகிருஷ்ணனை மணந்தேன். நானும் அவரும் சிவாஜியின் குடும்ப மருத்துவராக இருந்ததால், நாங்கள் இருவரும் இணைந்தே சிவாஜி குடும்பத்தினருக்கு சிகிச்சையளித்து வந்தோம். ஒரு கட்டத்தில் என் கணவரைவிட நானே அதிகம் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாவில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் குடும்பத்துடன் எங்கள் பணி தொடர்கிறது.
டிசம்பர் -1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஒருமுறை சிவாஜியிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும் என்று கூறினேன். அவர் சம்மதித்து "கான்செப்ட்' என்ன என்று கேட்டார். கூறினேன், உடனே அவர் நானே இக்குறும்படத்தை தயாரிக்கிறேன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேபோன்று அவரே தயாரிப்பு செலவை ஏற்று நடித்தும் கொடுத்தார். அநேகமாக சிவாஜி நடித்த ஒரே குறும்படம் இதுவாகத்தான் இருக்கும்.
என்னுடைய எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் அமரர் சாண்டில்யன். அவர் ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் இதழில் பன்னாரி மாரியம்மன் குறித்த என் முதல் சிறுகதை வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் ஆசிரியரான மா.ராசமாணிக்கனாரின் புதல்வர் மா.ரா.இளங்கோவன் என் எழுத்துக்களைச் செப்பனிட்டார். 1977 இல் அமுதசுரபி மாத இதழின் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகளை அமுதசுரபியில் எழுதுமாறு ஆசிரியர் விக்கிரமன் பணித்தார். இதனால், பல மருத்துவ மேதைகளைப் பேட்டி கண்டேன். இந்த அனுபவங்கள், "என் மருத்துவமும் எழுத்தார்வமும் இயைந்து வெற்றி கண்ட அற்புதக் களம்' ஆகும்.
கவிஞர் சுப்பு ஆறுமுகத்துடன் இணைந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை பல ஊர்களில் நடத்தினோம். கவியரங்குகளில் கவிதை பாடவும், பட்டிமன்றங்களில் உரையாற்றவும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. மத்திய அரசின் சார்பில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பயிற்சிக்காக ஆறுமாதம் லண்டனில் இருந்தபோது சந்தித்த அனுபவங்களை வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கதைகளை எழுதினேன். நான் மார்ச்சுவரியில் பணியாற்றிய அனுபவங்களை வைத்து பெரிய நூலே எழுதலாம்.
அமரர் ஏ.நடராஜன் சென்னை வானொலியின் இயக்குநராக இருந்தபோது, "மானுடம் வென்றது', "முத்து முத்து மழைத்துளி' உள்ளிட்ட அறிவியல் தொடர்களை எழுத வாய்ப்பளித்தார்.
தொழுநோயாளிகளின் பிரச்னைகளைப் பேசும், "நெஞ்சகத்தின் அன்பலைகள்' என்ற நாவலை எழுதினேன். இது, மருத்துவர்களாலும், வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அமரர் விக்கிரமன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றிய பெருமையும் எனக்குக் கிடைத்தது.
என் ஒரே மகள் பவானியும், மருமகன் பாலகுமாரும் பல் மருத்துவ பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். பேரன் சாயி பிரகலாத். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூன்று சகோதரிகளும், 80-வயதிலும் ஓய்வெடுக்காமல் காமாட்சி மருத்துவமனையில் பணியாற்றிவரும் என் அன்பான கணவரும் நான் சாய்ந்துகொள்ள தூணாய் நிற்பவர்கள். புற்றுநோய் குறித்த ஆய்வுகளில் கையெழுத்திட்டு வந்த எனக்கு நான்காண்டுகளுக்கு முன்பு... வாய்ப்புற்று நோய் வந்தபோது.... அதிர்ச்சிதான்... சமாளித்தேன். தேறினேன்.
இனி என் செவிகளும் கைகளும்தான் நன்கு இயங்கும்... பேசுவது சற்று சிரமம்தான். எனவே, இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை.
ஆனால், என் உயிர் மூச்சாக விளங்கும் இலக்கிய உலகத்தில் எழுத்துக்கள் மூலம் நான் இயங்கிக்கொண்டிருப்பேன்! தற்போது, சிறுகதைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அனைத்து முயற்சிகளும் என் அன்னைக்கே காணிக்கை. வரவிருக்கும் நூலின் முகப்பிற்காக நான் எழுதிய ஒரு கவிதை:
பத்துத் திங்கள் எனைச் சுமந்து
பனி நீர் கொடியால் உறவு பிணைத்து
சத்தும் நீரும் நாபிக் காலவாய்
வழியே தந்து ஊணுயிர் வளர்த்து
முத்துப் பெட்டக கருவறை திறந்து
முழங்காலருகே வீழ்ந்த போது
முத்தமிழ் பாலைச் சேர்த்து ஊட்டிய
அன்னையே உனக்கென் முதல் வணக்கம்!''

NEWS TODAY 14.06.2026