சென்னை : முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வின் பொதுச்
செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, இவ்வளவு பணிவு காட்ட
வேண்டியதில்லை. என்னதான், அவர் பணிவு காட்டியே வளர்ந்தவர் என்றாலும், அவர்
வகிக்கும் பதவி முதல்வர் பதவி. அவர், சசிகலாவின் காலில் விழுவது,
ஒட்டுமொத்த தமிழகமே, சசிகலாவின் காலில் விழுவதற்கு சமமானது. எனவே, அதை
உணர்ந்து பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும் என, அவருக்கு
நெருக்கமானவர்கள் பலரும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதை
வலியுறுத்தி, பொதுமக்கள் பலரும், பன்னீர்செல்வத்துக்கு கடிதங்கள் எழுதி
உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதையெல்லாம் நன்கு அறிந்து கொண்ட பின்னரும்,
பன்னீர்செல்வம், சசிகலாவிடம் பணிவு காட்டுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
இந்த சூழலில், சமீபத்தில், பன்னீர்செல்வத்தை சந்தித்த
தமிழக மூத்த அமைச்சர்கள் சிலர், நீங்கள் தமிழத்தின் முதல்வராக
இருக்கிறீர்கள்; உங்கள் பணிவு எல்லோரும் அறிந்ததுதான். அதற்காக, நீங்கள்
யார் காலிலும் விழ வேண்டியதில்லை என, சொல்லியிருக்கின்றனர்.அப்போது,
அவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் பன்னீர்செல்வம். அந்த விளக்கம்
வித்தியாசமாக இருக்க, அதனால்தான், அவர் அந்த இடத்தில்
உட்கார்ந்திருக்கிறார் என கூறியபடியே, திரும்பியுள்ளனர் அந்த
அமைச்சர்கள்.இது குறித்து, மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.,
பிரமுகர்கள் கூறியதாவது:நான் விருப்பப்பட்டு, எந்த பதவியிலும் அமர்ந்து
கொள்ளவில்லை. முதல்வர் பதவி என்பது, என்னுடைய விசுவாசத்துக்குப் பரிசாக,
மறைந்த ஜெயலலிதா அளித்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது,
நெருக்கடியான கால கட்டத்தில் மூன்றாவது முறையாக
முதல்வராக்கப்பட்டுள்ளேன்.ஏற்கனவே முதல்வராக பொறுப்பேற்ற இரண்டு முறையும்,
என்னை விட எல்லா திறமையும்; அனுபவமும் பெற்ற மறைந்த ஜெயலலிதா,
அமைச்சரவையில் இல்லாமல் விலகி இருக்க, சட்டரீதியில் நேரிட்டது. அந்த
சமயத்தில், நான் தன்னிச்சையாக செயல்பட்டால், அதை அவரே கூட விரும்பாமல்
போகலாம். அப்படி செயல்படும் போது ஏற்படும் நெருக்கடியைத் தவிர்ப்பது
சிரமம். அவருக்கு இருக்கும் திறமைக்கு, அவர் கொடுத்த பதவியை வைத்து சவால்
விடுவது போல ஆகிவிடும்.
அப்படியொரு சூழலை ஏற்படுத்த நான்
விரும்பவில்லை. அதனால்தான், தமிழக நலன்கள் குறித்து, நான் அப்போது பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தேன். ஆனால், இப்போது நிலைமை
அப்படியில்லை.
நான் யாருக்கும் பாத்தியப்பட்டவன் இல்லை.
அதனால்தான், தன்னிச்சையாக செயல்படுகிறேன்.நான் இப்படி செயல்படுவது கூட,
சிலருக்குப் பிடிப்பதில்லை. என்னை, பல வழிகளிலும் செயல்படவிடக்கூடாது என
முயற்சிக்கின்றனர். அதற்காக, நான் கவலைப்படுவது கிடையாது.
இப்போது
கூட, என்னை தொடர்ச்சியாக முதல்வராக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்
என்பதுதான், கிடைத்திருக்கும் செய்தி.இந்த சூழ்நிலையில், முதல்வராக
இருக்கும் நானே, அவர்களுடைய காலுக்கு கீழே என வெளியுலகிற்கு காட்ட வேண்டும்
என்பதற்காகவே, என்னை குனிந்து வணக்கம் போடச் சொன்னவர்கள்; பின், காலில்
விழச் சொன்னார்கள். விழுந்தால் பிரச்னையில்லை என்பதை உணர்ந்தேன்;
விழுந்தேன்.இதனால், என் கவுரவம் குறைந்து போவதாக நான் உணரவில்லை. காலில்
விழ அனுமதிப்பவர்களுக்கு எதிராகத்தான், இது செல்லும் என்பதை அறிந்துதான்
அதை செய்தேன். தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர், இன்னோருவர் காலில்
விழும்போது, மக்களின் வெறுப்பு முதல்வர் மீது செல்லாது; பரிதாபம்தான்
ஏற்படும்.
கோபம்; வெறுப்பு எல்லாம், காலில் விழச் செய்கிறவர்
மீதுதான் திரும்பும். இதையறிந்துதான், விரும்பியதை செய்து வருகிறேன்.
இதெல்லாம் நடக்க நடக்க, காலில் விழும்போது அதை தடுக்காததோடு, அதை விரும்பி
ஏற்பவருக்கு எதிராக மக்கள் மனநிலை திரும்பும் என்பதுதான் கணக்கு.மக்கள்,
அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதற்கு, இதெல்லாம் கூட ஒரு காரணம்
என சொல்லி, மூத்த அமைச்சர்களிடம், சசிகலா காலில் விழுவதற்கு, காரணம்
சொல்லியிருக்கிறார் பன்னீர்செல்வம். இதை கேட்ட அமைச்சர்கள், அதிர்ச்சியில்
உறைந்து போய், பின் திரும்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Dailyhunt
சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்!
சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால்,
எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில்
பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம்
நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து
உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி
முருகன்.
ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு
வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர்
இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு
அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.
சென்னை,
கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக
பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை
தரிசிக்கலாம்.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை
வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர்,
சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல
பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும்
போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
பசுமை கட்டிநிற்கும்
நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு
மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின் உள்ளே
கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள்,
சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர்,
அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஐந்து
நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு
அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி
பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற
திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால்
ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம்
திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம்
ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நிலம், வீடு,
வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச்
சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.
தை மாதத்தின் முதல் நாள் இன்று பிறந்தது. தை பிறந்தால் வழிபிறக்கும்
என்று நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இந்நாளை உத்தராயண புண்ணியகாலத் தொடக்க
நாள் என்றும் நம் முன்னோர்கள் சொல்வார்கள். இந்நாள், உலகமெங்கும்
பரவியிருக்கும் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு மகத்தான பொங்கல்
திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
உழவுக்கு உயிரூட்டு விதமாகவும், இயற்கை
அன்னைக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் இந்நாள் தமிழர்களால்
கொண்டாடப்படுகிறது.
நாட்டில் தொடர்ந்து நல்ல மழை பெய்யவும், நாடு
செல்வ செழிப்போடு வளரவும், தை மாதம் முதல் நாளில் பொங்கலிட்டு இயற்கையை
வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழாவாக இருந்து வருகிறது.
இதுவே தமிழர்களின் பண்பாட்டுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
காலையில் சிக்கனம் பிடிக்க வேண்டியது நேரத்திலா... வேலையிலா...
வழக்கமாக, காலையில் மொபைலில் அலாரம் அடித்ததும் எடுத்து அணைத்துவிட்டு
தூங்கிவிடுபவர்கள்தான் அதிகம். என்றாவது ஒருநாள் கண் விழித்துப் பார்த்தால்
ஒரு மணிநேரம் முன்பே எழுந்திருப்போம். உடனே, இனிமேல் தினமும்,
முன்கூட்டியே எழுந்துவிட வேண்டும் எனும் சபதம் எல்லாம் எடுப்போம். சரி...
ரொம்பவே சீக்கிரம் எழுந்தாச்சு. எல்லா வேலைகளையும் மெதுவாக, நிதானமாக
செய்யலாம் என மனதுக்குள் ஒரு குரல் கேட்கும்.
அது சாத்தானின் குரல். உடனே அதை 'அப்பாலே போ' எனத்
துரத்தி விட வேண்டும். இல்லையெனில் நீங்கள் சீக்கிரம் எழுந்ததற்கு அர்த்தமே
இல்லாமல் போய்விடும்.
சீக்கிரமே எழுந்து விட்டதால், நியூஸ்
பேப்பர் படிப்பது தொடங்கி, அலுவலகத்திற்கு புறப்படுவது வரை எல்லாவற்றிலும்
சோம்பல் படர்ந்து விடும். எந்தெந்த விஷயங்களை சோம்பல் அமர்ந்து, உங்களின்
நேரத்தை தின்னும், அதை எப்படி சரி செய்யலாம் எனப் பார்ப்போமா?
பல்
துலக்குவதில் எத்தனை விதமான டெக்னிக்ஸ் இருக்கு என ட்ரை பண்ணுவோம்.
அப்படியே வாட்ஸ்அப்பில் என்னதான் வந்திருக்கு எனப் பார்க்க ஆரம்பிப்போம்.
வழக்கமான நாள் என்றால் GM, GD MG என விதவிதமான (!) குட் மார்னிங்
மெசேஜ்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவோம். ஆனால் இன்றுதான் சீக்கிரமே
எழுந்தாச்சே என ஒவ்வொன்றாக பார்த்து, சிலருக்கு பதிலும் அனுப்புவோம்.
அவரும் பதிலுக்கு ஏதேனும் அனுப்பினால், மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்ப...
நிமிடங்கள் கரைந்துவிடும். அதனால், முக்கியமான மெசேஜ்களுக்கு மட்டும் பதில்
அளிப்பதையே தொடருங்கள்.
பிறகு, நியூஸ் பேப்பர். வழக்கமாக தலைப்புச்
செய்திகளிலேயே அவசரம் காட்டும் நாம், 'என்னது... இன்னைக்கு பேப்பர் 16
பக்கங்கள்தானா?' எனக் கேட்கும் அளவுக்கு வரி விளம்பரம் வரை படிப்போம்.
தேவையான, ஆர்வமான செய்திகளை மட்டுமே படித்தாலே நேரம் மிச்சமாகும்.
அடுத்தது,
சமையல். வழக்கமான நாள் என்றால் வெங்காயமும் தக்காளியும் 'இன்றைக்காவது
எங்களை விட்டுவிடேன்' எனக் கெஞ்சும். இன்றோ சீக்கிரம் எழுந்த மமதையில்
ஃப்ரிட்ஜில் இரண்டு முட்டைகள் இருக்கே! அதை வைத்து வித்தியாசமாக ஏதாவது
செய்யலாமா இல்லை, காலி ஃப்ளவர் பக்கோடா போட்டுப் பார்க்கலாமா... என ஆசைகள்
எழும். அதில் ஒன்றை முயற்சி செய்தாலும் அரை மணிக்கும் மேலே நேரம் போயே
போச்சு. அதனால், தினந்தோறும் செய்யும் சமையலில், நேரம் அதிகம்
எடுத்துக்கொள்ளாத சின்னதாக ஏதேனும் ஸ்பெஷல் மட்டுமே போதும்.
நெக்ஸ்ட்.
குளியல். இன்னைக்குத்தான் நேரமிருக்கே என நமக்குள் இருக்கும் பாத்ரூம்
சிங்கரை அழைத்துவிடுவோம். அவரும் சுவாரஸ்யமாக பாடிக்கொண்டே இருக்க, நீரோடு
நேரமும் வழிந்தோடி விடும். அதனால் சிங்கருக்கு ஒரு பாட்டுக்கு மட்டுமே
அனுமதி கொடுங்கள் போதும்.
அதிகாலையில் எழுந்தால் மனம் சந்தோஷமாக
இருப்பதுபோல, குழந்தைகள் மீது அன்பும் அதிகமாகி விடும். அதனால் அவர்களோடு
விளையாட ஆரம்பித்து, ஜாலியாக நேரம் நீண்டுக்கொண்டே போனால், குழந்தைகள்
குளிப்பதற்கு முன்பே, வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் கேட்கும். அன்புக்கு
சின்னதாக அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, துணிகளை அயர்ன்
செய்யும்போது, நேரமிருக்கே என இன்னும் சில துணிகளைச் சேர்த்து அயர்ன்
செய்வது, மேக்கப்-ல் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வது என
ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களை எடுத்துக்கொள்ள, தினமும் பிடிக்கும் 8:50
பேருந்தைப் பிடிக்க முடியாமல் போய்விடும்.
எனவே, இன்றைக்கு ஒரு
மணிநேரம் முன்கூட்டியே எழுந்திருக்கிறோம். அதனால் வழக்கமான வேலைகளை
நிதானமாக செய்யத் திட்டமிட்டாலே பதட்டமில்லாத காலை பொழுது வாய்க்கும்.
- புதியவள்
Dailyhunt
சென்னையில் எப்படியிருக்கிறது சட்டம்-ஒழுங்கு? : போலீஸின் பலமும்-பலவீனமும்!
சென்னையில் சட்டம்- ஒழுங்கு எப்படியிருக்கிறது என்று
யாரையாவது பிடித்து நிறுத்திக் கேட்டால், ''ஏதோ இருக்குதுங்க" என்று
மட்டும் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சென்னை
பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா என்று கேட்டாலும் இதே பதில்தான் கிடைக்கும்.
ஜெயலலிதா முதல் மந்திரியாக இருந்தால் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில்
இருக்கும் என்ற பொதுவான இமேஜ், 2011 - 16 - ம் கால கட்ட அ.தி.மு.க ஆட்சி
காலத்தின்போதே உடைந்து போனது. அதன்பின்னர் ஜெ. மறைவு, கட்சி - ஆட்சியில்
தலைமை மாற்றம் ஏற்பட்டது. இப்போது தங்களின் அன்றாட வாழ்க்கைக்கான
பாதுகாப்பை முழுமையாக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது.
முதல் மந்திரியாக ஓ.பி.எஸ் நீடிப்பாரா அல்லது
அந்த இடத்துக்கு வேறொருவர் வரப் போகிறாரா என்ற கேள்வியும் நடுவில் புகுந்து
பொதுமக்களை திணறலில் வைத்துள்ளது. இந்தக் குழப்பத்துக்கு இடையே போலீஸார்
நிலையோ இன்னும் மோசம்.
டெக்னாலஜி போலீஸ் கமிஷனர்...
2016-ல்
சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் 3-வது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வரலாற்றில் 3 முறை கமிஷனர் பதவி வகித்தவர்
ஜார்ஜ்தான். சென்னை போலீசாரால், 'டெக்னாலஜி கமிஷனர்' என்று அழைக்கப்படும்
ஜார்ஜ், முதல்முறை கமிஷனராகப் பொறுப்பேற்றதுமே, கமிஷனர் அலுவலகத்தில் 32
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கேமராக்கள் அனைத்துமே புயல், மழை என எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக செயல்படும் தன்மை கொண்டவை.
செயற்கைக் கோள் இணைப்புடன் செயல்படும் இந்த கேமராக்களின் பதிவுகளை, போலீஸ்
கமிஷனர் தன்னுடைய செல்போனில் எங்கிருந்தும் பார்க்கும்படி
கட்டமைக்கப்பட்டிருந்தது.போலீசார் ஷிப்டு முறையில் இந்த கேமரா காட்சிகளைப்
பார்த்து நடவடிக்கை எடுக்கும் விதமாக பிரத்யேகமான 24 மணி நேர கட்டுப்பாட்டு
அறையும் உள்ளது.
என்ன சொல்கிறார் ஜார்ஜ் ?
மூன்றாவது முறையாக சென்னையின் போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்ற ஜார்ஜ் அன்று
செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னையில் ஏற்கெனவே அமலில் உள்ள 3 வகையான
சிறப்புத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு போலீஸ்
நிலைய எல்லையும், 3 செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செக்டாரிலும்
3 போலீசார் வீதம் 9 போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள்.
இந்த
ரோந்துப்பணி 3 'ஷிப்ட்'களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 'ஷிப்டிலும்' 8
மணி நேரம் வீதம் ரோந்து போலீசார் பணியாற்றுவார்கள். 380 கார்கள் மற்றும்
503 மோட்டார் சைக்கிள் வாகனங்கள் சென்னை போலீஸ் செயல்பாட்டில் உள்ளன.
முதியோர் உதவி மையத்துக்காக 1253 என்ற இலவச தொலைபேசி இணைப்பு
ஒதுக்கப்பட்டுள்ளது. (ஜனவரி 12, 2017 இரவு 12.17-க்கு நாம் இந்த எண்ணை
தொடர்புகொண்ட போது, "என்ன உதவி வேண்டும்?" என்று தூக்கக் கலக்கம் இல்லாத
பெண் காவலர் குரல் கம்பீரமாகக் கேட்டது) இந்த இலவச தொலைபேசியில்
தொடர்புகொண்டு பேசினால் போலீசார் தேவையான உதவிகளை தேடி வந்து செய்வார்கள்.
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரங்களை புகைப்படத்துடன்
அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தாமாக முன்வந்து பதிவுசெய்ய வேண்டும். இது
வீட்டு உரிமையாளர்களுக்கும் நல்லது.
வெளிமாநிலங்களிலிருந்து
சென்னைக்கு வேலை தேடி தினமும் ஆட்கள் வருகிறார்கள். இவர்களுக்கு வேலை
கொடுப்பவர்கள் இவர்களின் பெயர் விவரம் மற்றும் முகவரி, புகைப்படம்
போன்றவற்றை சேகரித்து வைத்திருக்க வேண்டும். முதியோர் பாதுகாப்பு, ஒவ்வொரு
'ஷிப்டிலும்' 8 மணி நேர ரோந்து, வாடகைதாரர்கள் மற்றும் வெளி மாநில கூலித்
தொழிலாளிகளின் பெயர் விவரங்களை போலீசாருக்கு அளித்தல் ஆகிய நடைமுறையில்
உள்ள மூன்று திட்டங்களும் மேலும் வலுவாகக் கொண்டு செல்லப்படும்." என்றார்.
திணறும் போலீசார், பின்னணி இதுதான்...
கேரள
மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த எஸ்.ஜார்ஜ், எம்.ஈ., எம்.டெக்.,
எம்.பி.ஏ., எம்.பில் பட்டங்களைப் பெற்றவர். 1984-ம் ஆண்டு பேட்ஜ்
(வரிசைப்பிரிவு) ஐ.பி.எஸ். அதிகாரி. 'அட்வான்ஸ்டு கமிஷனர்' என்ற பெயரை
போலீசாரிடம் ஜார்ஜ் பொதுவாகப் பெற்றிருந்தாலும் பொதுமக்களிடமும், கீழ்
பணியாற்றும் போலீசாரிடமும் அது முழுதாக எடுபடவில்லை. காரணம்....
அனைவரிடமும் ஜார்ஜ் கடைப்பிடிக்கும் இடைவெளிதான். ரெவ்யூ மீட்டிங்கே இல்லை...
மாதாந்திர க்ரைம் ரிவ்யூ மீட்டிங் என்பது போலீசில் கட்டாயமான ஒன்று.
ஆனால், தற்போதைய நிலையில், 'அப்படி ஒரு மீட்டிங் காவல் துறையில்
இருக்கிறதா?' என்றுதான் இப்போது புதிதாகப் பணிக்கு வந்த போலீசார்
கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆண்டுக் கணக்கில் க்ரைம் ரிவ்யூ மீட்டிங்
என்பதே நடக்காமல் இருக்கிறது. ராதாகிருஷ்ணனின் 3 மணிநேர மீட்டிங்...
சென்னை
போலீஸ் கமிஷனராக ராதாகிருஷ்ணன் இருந்தபோது, மாதம் தவறாமல் இப்படிப்பட்ட
ரிவ்யூ மீட்டிங் நடந்தே தீரும். அந்த மீட்டிங்கில், கமிஷனருக்கு அடுத்த
கீழ்நிலை அதிகாரிகளான கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள்
மற்றும் உதவி கமிஷனர்கள் கண்டிப்பாக ஆஜராகியே தீரவேண்டும்.
ரிவ்யூ மீட்டிங் பலன் என்ன ?
நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர்., பொதுமக்களின் புகார் மீதான நடவடிக்கை
பட்டியல், க்ரைம் ரேட் விகிதாச்சாரம், ஆர்.டி.ஐ கேள்வி - பதில்கள்,
முடிக்கப் பட்ட வழக்குகள், நிலுவை வழக்குகள், ரவுடிகளின் பட்டியல்
சரிபார்ப்பு, போலீசார் நலன், காவலர் குடியிருப்பு இடமாற்ற மனுக்கள்...
இப்படி பல விஷயங்கள் அங்கே விவாதிக்கப்படும்.
முடிக்காத வழக்குகளின்
பின்னணி என்ன... வழக்கில் என்ன சிக்கல், யார் தலையீடு போன்றவைகளை போலீஸ்
கமிஷனர் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனரிடம் நேரடியாகவே அந்த மீட்டிங்கில்
கேட்பதும், அதற்கு உதவி கமிஷனர் பதில் அளிப்பதும் சாதாரணமான ஒரு நிகழ்வு.
பல நேரங்களில் குறிப்பிட்ட வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டரையே
கமிஷனர் கூப்பிட்டு, 'வழக்கின் தன்மையைச் சொல்லுங்கள்' என்று கேட்பார்.
'அந்த
வழக்கில் இப்படிச் செய்வதில் சிக்கல் என்றால் இந்த மாதிரிச் செய்யுங்கள்'
என்று கமிஷனரே இன்ஸ்பெக்டர் லெவலில் உள்ள கீழ்நிலை அதிகாரிக்கு ஆலோசனை
சொல்லும் காட்சிகளும் அங்கே அரங்கேறும். போலீஸ் கமிஷனரே நம்மிடம் பேசி
ஆலோசனையும் வழங்குகிறாரே என்ற உற்சாகத்தில் காக்கிகள் இன்னும் விறைப்பாய்
பணியில் கவனம் செலுத்துவார்கள்.
கமிஷனரின் அதிரடியான கேள்விக்கு
பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டுமே என்பதற்காகவே ரிவ்யூ மீட்டிங்கில்
கலந்துகொள்ள உதவி கமிஷனர்கள் போகும்போது, தங்கள் லிமிட் இன்ஸ்பெக்டரையும்
அங்கே வரச் சொல்லிவிடுவார்கள். இன்ஸ்பெக்டர்களும் மீட்டிங் ஹால் வெளியே
காத்திருப்பார்கள்.
கமிஷனரின் கேள்வியைப் பொறுத்து இன்ஸ்பெக்டர்கள்
உள்ளே போய் விளக்கம் கொடுக்க வேண்டிய சூழலும் அங்கே இருக்கும்.
அப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரிவ்யூ மீட்டிங் என்பதே
தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. சிட்டி போலீஸ் கமிஷனர் - போலீசார் இடையே
நெருக்கமான உறவை வளர்த்தெடுத்தது இந்த ரிவ்யூ மீட்டிங்குகள்தான்.
அப்படிப்பட்ட மீட்டிங்குகள் இதுவரையில் நடத்தாமலே இருப்பதுதான் தகவல்
பரிமாற்றக் கப்பலில் விழுந்திருக்கும் மிகப் பெரிய ஓட்டை. அந்த ஓட்டையின்
வழியாகத்தான் பொதுமக்களின் நிம்மதியைக் கெடுக்கும் குற்றங்கள் நுழைந்து
விடுகின்றன.
சென்னை போலீசாரின் பலம் தெரியுமா?
சென்னையில்
சட்டம் -ஒழுங்கைக் காப்பாற்ற 134 சட்டம் -ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன.
128 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. மொத்தம் 262 இன்ஸ்பெக்டர்கள்
இந்தக் காவல் நிலையங்களை வழிநடத்துகின்றனர்.
பெண்கள் தொடர்பான
புகார்களைப் பெற 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் சென்னையில்
இயங்குகின்றன. 35 பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் உள்ளனர்.
போக்குவரத்துப்
புலனாய்வுப் பிரிவுக்கு 80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் 10 பிரிவுக்கும் தலா ஒரு
உதவி கமிஷனர் ஒவ்வொரு பிரிவுக்கும் 3 முதல் 6 வரையிலான இன்ஸ்பெக்டர்கள்
பணியாற்றுகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு நான்கு
மண்டலங்களில் நான்கு கூடுதல் துணை கமிஷனர்கள் ஒரு மண்டலத்துக்கு தலா ஐந்து
இன்ஸ்பெக்டர்கள், பத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுகின்றனர்.
சென்னையின்
சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற 5கூடுதல் கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், 40
உதவி கமிஷனர்கள், தலைமையக, ஆயுதப்படை கமிஷனர், உளவுப்பிரிவு, க்ரைம்,
மத்தியக் குற்றப்பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவும் சில
பிரிவுகளில் கூடுதலாகவும் துணை கமிஷனர்கள் பணியில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு
காவல் நிலையத்துக்கும் ஒரு உளவுப் போலீஸ், 'லெவல்-டூ' எனப்படும் கூடுதல்
கமிஷனரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் மண்டல உளவுப் போலீசார் ஆகியோரும்
தனியாக சுற்றிச்சுழல்கின்றனர்.
காவல் துறையில் உள்ள இத்தனை
அதிகாரிகளும் சொல்வதை அப்படியே ஏற்று கடமையாற்ற சென்னையில் (ஆயுதப்படை-
குதிரைப்படை சேர்த்து) 21, 500 போலீசார் எப்போதும் தயார் நிலையில்
இருக்கிறார்கள்
. என்னதான் முடிவு, சொல்லுங்கள் கமிஷனரே?
இத்தனை
வசதிகள் இருந்தும் சட்டம் - ஒழுங்கில் 100 சதவிகித சாதனை இலக்கை எட்ட
முடியாமல் திண்டாடுகிறது காவல்துறை. திட்டமிட்டு நடைபெறும் ஆதாயப்
படுகொலைகளின் எண்ணிக்கை வருடம்தோறும் கூடிக் கொண்டே போகிறது.
தொடர்
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'உலகளாவிய புகழ்பெற்ற
தமிழ்நாட்டுப் போலீசாரின் புலனாய்வுத் திறமைக்கு இப்படியான தொய்வுநிலை
சிலகாலம் இருந்தது' என்றுகூட வரலாற்றில் வந்து விடக்கூடாது.
விரைந்து ஒரு முடிவெடுங்கள் மிஸ்டர் ஜார்ஜ்! - ந.பா.சேதுராமன்
Dailyhunt
தலைநகரை தவிக்கவிடும் தண்ணீர்ப் பஞ்சம்! - அதிரும் அரசின் ஆய்வு முடிவுகள்
பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் மனநிலையில் விவசாயப்
பெருமக்கள் இல்லை. ' அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக, 2017 இருக்க
வேண்டும்' என பரிமாறப்படும் வாழ்த்துகளில் எந்தவித உணர்வுகளும் இல்லை. ஆம்,
' இந்த ஆண்டு வறட்சியான ஆண்டாக இருக்கப் போகிறது' என்பதை சொல்லாமல் சொல்லி
இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
10 சதவீதம்தான் தண்ணீர்!
தென்மேற்குப் பருவமழையும் தமிழகத்துக்குப் பெரிய அளவில் கை கொடுக்காத
நிலையில், ' வட கிழக்குப் பருவமழை காலமும் முடிவுக்கு வந்து விட்டது' என்ற
அறிவிப்பை ஜனவரி 3-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இயல்பாக
பெய்யும் மழை அளவைவிட, 62 சதவீதம் குறைவாக வட கிழக்குப் பருவமழை
பெய்திருக்கிறது என்பது உண்மையிலேயே வேதனைக்குரிய செய்திதான்.
மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள்,
வறண்டு போய் வெடித்துக் கிடக்கின்றன. எஞ்சியிருக்கும் ஒரு சில நீர்
ஆதாரங்களிலும், சொற்ப அளவு நீரே இருப்பதைக் காண முடிகிறது. இந்தக் கோடையை
சமாளிக்க இது நிச்சயம் போதுமானதாக இருக்காது. கடந்த 140 வருடங்களை
ஒப்பிடும் போது, தமிழகத்தில் 2016-ம் ஆண்டு மிகக் குறைந்த அளவு மழை
பெய்திருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம். ஒரு வருடத்துக்கான சராசரி
மழை அளவான 920 மில்லிமீட்டரில், சுமார் பாதி அளவே, அதாவது 543
மில்லிமீட்டரே மழைப் பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு சென்ற
1846-வது வருடம் 534 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது.
அப்படியானால், கடந்த 140 வருடங்களில் பார்க்காத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை
நாம் எதிர்கொள்ளப் போகிறோம். அதற்கான அறிகுறிகளும் தொடங்கி விட்டன.
கடந்த
சில நாட்களாகவே, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் பல பகுதிகளில்
குழாய்களில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் அளவில் மாற்றம்
ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 83 கோடி லிட்டர் தண்ணீர்
விநியோகம் செய்து வந்த, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், இந்த
அளவில் 30 சதவீதத்தைக் குறைத்துவிட்டு, ஜூன் மாதம் வரையில் நிலைமையை
சமாளிக்க திட்டமிட்டுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான
பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், இரட்டை ஏரி ஆகியவற்றில் சுமார் 10
சதவிகிதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த
நான்கு ஏரிகளிலும் 9,795 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதில், வெறும் 1626 மில்லியன் கனஅடி அளவுக்கே தண்ணீர் உள்ளது. இவை
நான்கும்தான் சென்னை நகரின் 50 சதவீத தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்யும்
நீர்நிலைகள். இவற்றிலேயே இந்த நிலை என்றால், வரக்கூடிய அபாயத்தை உணர்ந்து
கொள்ள முடியும். கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நெம்மேலி, மீஞ்சூர்
ஆகிய நிலையங்களிலும், வழக்கமான அளவை விட 30 சதவீதம் குறைவாகவே, தண்ணீர்
சுத்திகரிக்கப்படுகிறது. வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக்
கோளாறுகளும், அடிக்கடி ஏற்படும் மின் தடையுமே இந்த உற்பத்திக் குறைவுக்குக்
காரணமாகச் சொல்கின்றனர். ' இன்னும் சில தினங்களில் இந்தக் கோளாறுகள்
சரிசெய்யப்பட்டு விடும்' என்கின்றனர் அதிகாரிகள்.
வறண்டு போகும் வீராணம்
வீராணம்
கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீரும் இந்த வருடம்
போதிய அளவு கிடைக்கவில்லை. காவிரித் தண்ணீர் மிகச் சொற்பமான அளவே திறந்து
விடப்பட்டதால், வீராணம் ஏரியும் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. தற்போதைய
நிலவரப்படி, 269 மில்லியன் கனஅடி அளவே வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கிறது.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில், 482 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
அதனால், கடலூர் முதல் பண்ருட்டி வரை அமைக்கப்பட்டுள்ள ராட்சத போர்வெல்கள்
மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தலைநகருக்குக் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளும்
தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும்
தண்ணீர், இப்போதே பல இடங்களில் தினமும் வருவதில்லை என்பதால், பணம் கொடுத்து
லாரித் தண்ணீரை வாங்கத் தொடங்கிவிட்டனர்.
கோடைக் காலம் தொடங்க இன்னும்
மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதுள்ள தண்ணீர் இருப்பு அச்சத்தை
அதிகப்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்து
மாதங்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், தண்ணீர்
பஞ்சத்தை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
அபாயத்தை உணர்த்திய ஆய்வு
தலைநகரின்
தண்ணீர்த் தேவைக்காக, அண்டை மாவட்டமான திருவள்ளூரிலிருந்து தண்ணீர்
பெறப்படுகிறது. அதுவும், விவசாய நிலங்களில், ராட்சத போர்வெல்கள்
போடப்பட்டு, அதன்மூலம் கடந்த சில வருடங்களாகவே தண்ணீர் எடுக்கப்பட்டு
வருகிறது. இதுநாள் வரை ஆபத்தை உணராமல் இருந்த திருவள்ளூர் மக்கள், நிலத்தடி
நீர்மட்டம் ஒரேயடியாகக் குறைந்துவருவது கண்டு அதிர்ந்து போய்
இருக்கிறார்கள். இருப்பினும், தண்ணீரை விற்று ருசி கண்ட போர்வெல்
உரிமையாளர்களும், லாப வெறி கொண்ட லாரி உரிமையாளர்களும் போட்டி போட்டுக்
கொண்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் சராசரியாக 12
அடியாக இருக்கும் நிலத்தடி நீர்மட்டம், திருவள்ளூரில் 16 அடியாகக்
குறைந்துவிட்டது என்றால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின்
தலைநகரத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் படு
வேகமாக சரிந்து கொண்டே செல்கிறது. சென்னை நகரின் பரப்பளவான, 426 சதுர கிலோ
மீட்டரில் 145 கண்காணிப்பு கிணறுகளில் குடிநீர் வாரியம் அண்மையில் ஆய்வு
ஒன்றை நடத்தியது. அதன்படி, 2015 டிசம்பரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம்
அளவுடன் ஒப்பிடும்போது, கடந்த டிசம்பர் நிலத்தடி நீர்மட்ட அளவு 0.75
மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை சரிந்துள்ளது. வடசென்னையில் நிலத்தடி
நீர்மட்டம் திகைக்க வைக்கும் வகையில் குறைந்துள்ளது. மொத்தம் உள்ள 15
மண்டலங்களில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம்
ஆகிய பகுதிகளில் 2 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம்
குறைந்துள்ளது. இதனால், வடசென்னையைப் பொறுத்தவரை, லாரிகளின் வருகைக்காக
குடங்களுடன் மக்கள் திரளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா?
பஞ்சத்தின்
அபாயத்தை உணர்ந்து, ' தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யும்படி' குடிநீர்
வாரியம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ' குழாய் மூலம் விநியோகம்
செய்யப்படும் தண்ணீரை குடிநீர் மற்றும் சமையல் தேவைகளுக்கு மட்டுமே
பயன்படுத்த வேண்டும்' என்கிறார்கள். ஆனால், நம் மக்களுக்கோ இந்த
அறிவிப்பின் முக்கியத்துவம் தெரியவில்லை. அடுத்த மழை வரும் வரை, அதாவது
ஜூன் மாதம் வரையில், நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரிக்கப் போகிறது.
நிலத்தடி நீர்மட்டம் ஏற்கெனவே கணிசமாக குறைந்துள்ள நிலையில், மக்கள்
போர்வெல் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பது அதிகமானால், நிலத்தடி
நீர்மட்டம் மேலும் குறையக்கூடும். மழை இயல்பை விடக் குறைவாகப்
பெய்திருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, பெய்த மழையைக் கூட சேமித்து
வைப்பதன் முக்கியத்துவதை உணராதவர்களாக நாம் இருக்கிறோம்.
மழைக்காலங்களில்,
நகர்ப்புற சாலைகளில், கழிவு நீரைப் போல தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர்,
நீர் நிலைகளுக்கு சென்று சேர வேண்டிய உயிர் நீர் என்பதை நாம் ஒருபோதும்
உணர்ந்ததே இல்லை. இந்தத் தண்ணீர் எப்போது வற்றும், எப்போது இந்த சாலை
இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற எரிச்சலோடுதான் கடந்து செல்கிறோம்.
ஆனால்,
அந்த எரிச்சலும் கோபமும் மழைத்தண்ணீரை முறையாக சேமிக்கத் தெரியாத நம்
மீதும், மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை முறையாக ஏற்படுத்தாத
அரசாங்கத்தின் மீதும்தான் வர வேண்டும். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை
வீடுகள்தோறும் செயல்படுத்தி இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து
கொண்டே போவதையும் தடுக்கலாம். இது போல சாலைகளில் நீர் தேங்கி நிற்பதையும்
தவிர்க்கலாம். மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நமது வீட்டு மரத்தின்
கனியை யாராவது பறித்தால், பார்த்துக்கொண்டு பேசாமல் அமைதியாக
இருக்கின்றோமா? அதே அக்கரையை வீட்டின் மழை நீர் சேகரிப்பிலும்
காட்டியிருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். ஒவ்வொரு வருடமும்
குறைவாக மழை பெய்யும் தருணங்களில், கோடைக்கால தண்ணீர்த் தேவையை சமாளிக்க
அரசாங்கம் திணறுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் காலிக் குடங்களுடன் போராட்டம்
நடத்தும் மக்களைப் பார்க்க முடிகிறது. தண்ணீருக்காக ஏன் வீதிகளில் இறங்கி
போராடுகிறோம் என்பதை மக்களும் உணரவில்லை. அரசாங்கமும் உணரவில்லை. தண்ணீரை
நாம் சேமிப்பதும் இல்லை, சிக்கனமாக பயன்படுத்துவதும் இல்லை. டெபிட்
கார்டுகளுடன் பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம் வாசல்களில் நிற்பது போல,
தினந்தோறும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்படத்தான் போகிறது.
மக்கள் மனங்களில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே வறட்சியை வெல்ல முடியும்!
- ஜெனிஃபர் வில்சன்
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அவரின் பிறந்த தினத்தை பொதுவிடுமுறையாக தற்போது அறிவித்துள்ளது தமிழக அரசு.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 17-ம் தேதி பொதுவிடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விட
வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 5
நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.