Thursday, March 2, 2017



தலையங்கம்
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம்


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இப்போது மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியுள்ள போராட்டம் நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம்தான்
.
மார்ச் 02, 02:00 AM

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இப்போது மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியுள்ள போராட்டம் நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிரான போராட்டம்தான். தற்போது தமிழ்நாட்டில் எல்லா வழிகளும் நெடுவாசலை நோக்கி என்ற நிலைமை உருவாகி விட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் என்ற கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, அந்த ஊர்மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள எல்லா இளைஞர்களையும் அங்குப் போய் கலந்து கொள்ள வைத்து விட்டது. கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கிய போராட்டம் இப்போது தீவிரமடைந்து விட்டது. ஏற்கனவே ‘மீத்தேன்’ எடுக்கும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன்பு, இதுபோல காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்கப்பட்ட போது எழுந்த போராட்டத்தின் விளைவாக அந்தத்திட்டம் மூடுவிழா கண்டது. ‘‘இந்தப்பகுதி மக்களுக்கெல்லாம் விவசாயம்தான் தொழில் என்பது மட்டுமல்லாமல் உயிர்மூச்சாகும். இதுபோன்ற திட்டங்களை தொடங்குவதன்மூலம் தங்கள் வாழ்வாதாரமே போய்விடும். தங்கள் நிலங்களெல்லாம் பயிரிடும் தன்மையை இழந்துவிடும். நிலத்தடிநீர் முற்றிலுமாக பாழ்பட்டுப்போய்விடும். மொத்தத்தில், தங்கள்பகுதியே நச்சுத்தன்மைக்கொண்ட பகுதிபோல் மாறிவிடும்’’ என்ற அச்சம் இந்தப்பகுதி மக்களுக்கு இருக்கிறது.

இத்தகைய திட்டங்களை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், கடந்த 2016–ம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க. சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில், இவைப்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘‘விவசாய நிலங்களில் ‘மீத்தேன்வாயு’ மற்றும் ‘ஷேல்வாயு’ எடுக்கும் திட்டங்கள் தி.மு.க. அரசினால் தடுத்துநிறுத்தப்படும். விவசாய உற்பத்தி பாதிக்கப்படும்வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாறுவதைத்தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்’’ என்று உறுதியளித்திருந்தது. அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப்பகுதிகளில் ‘மீத்தேன்’ எரிவாயு திட்டம், ‘ஷேல்’ எரிவாயு திட்டம், விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது போன்ற விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்தத்திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது’’ என்று தெளிவாகவே கூறியுள்ளது. அ.தி.மு.க தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள இந்தநிலையில், இதுபோன்ற திட்டங்களுக்கு ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிக்கு மாறாக, எப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், நெடுவாசல் போராட்டக்குழுவில் இருந்து 11 பேர் நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கோட்டையில் சந்தித்தனர். அவர்களிடம், முதல்–அமைச்சர் இந்தத்திட்டத்துக்கு நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம், சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இந்தத்திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று உறுதி அளித்தார்.

மத்தியஅரசாங்கம் இந்தத்திட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் உள்ள காரைக்கால் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படவுள்ள இந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தில் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கும் கீழேயிருந்துதான் ‘ஹைட்ரோ கார்பன்’ தோண்டி எடுக்கப்படுகின்றன. இதற்காக சிமெண்டால் ஆன வளையம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மேல்பகுதியில் உள்ள நிலத்தடிநீர் எந்த வகையிலும் பாதிக்கப்படாது, இறக்குமதியையே நம்பியிருக்காமல் நம்நாட்டிலேயே ‘கச்சா எண்ணெய்’ எரிவாயு போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில்தான், இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன’ என்று என்னதான் சொன்னாலும், பொதுமக்கள் அடைந்துள்ள அச்சத்தின், எதிர்ப்பின் காரணமாக இப்போது இந்தத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றமுடியாது. பொதுவாக, எந்த திட்டமென்றாலும் சரி மக்கள் ஆதரவில்லாமல், மாநிலஅரசு ஆதரவில்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை இந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் நிரூபித்து விட்டது.

Wednesday, March 1, 2017

ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு: வெங்கையா நாயுடு


புதுடில்லி: ‛பிரதமருக்கு ஓய்வு அவசியம் என ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

உ.பி.,யில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், மோடி களைப்படைந்துள்ளார்; அவருக்கு ஓய்வு அவசியம். அகிலேஷ் மீண்டும் உ.பி., முதல்வராவதன் மூலம் பிரதமருக்கு அவரால் ஓய்வு கொடுக்க முடியும் என பேசியிருந்தார்.

ராகுலின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முக்கிய விவாதங்களின் போது, பார்லி., நடவடிக்கைகளில் பங்கேற்காமல், வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் ராகுல், ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் மோடியை ஓய்வெடுக்க சொல்கிறார். குறுகிய காலத்தில் 40 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள மோடி, சர்வதே அளவில் இந்தியர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். 
உள்நாட்டில் அவர் பயணம் மேற்கொள்ளாத மாநிலம் இல்லை. அவர் கவனம் செலுத்தாத பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கே, மக்கள் நிரந்தர ஓய்வை தரும் நிலை ஏற்பட்டுள்ளது. ராகுலின் கீழ்த்தரமான பேச்சு கண்டத்திற்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
சென்னையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு

சென்னை : கடந்த ஆண்டு பருவமழை பொய்ததால் தமிழக அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளிட்ட 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு 15 சதவீதத்திற்கும் கீழாக உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், தற்போது கோடை காலம் துவங்க உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பதை தடுக்க 520 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு போன்ற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வாங்குகின்றனர்.

Tuesday, February 28, 2017

வாட்ஸ் அப்பில் எப்படி இருக்கிறது புதிய 'ஸ்டேட்டஸ்' வசதி?

க.சே. ரமணி பிரபா தேவி


உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.

இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி இந்த வசதியைப் பெறுவது?
இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால் உங்களின் நண்பர்களின் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அதை அனுப்பலாம்.
உங்கள் ஸ்டேட்டஸை உங்களது வட்டாரத்தில் யார் யார் பார்த்தார்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல், யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு வசதியும் உங்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
உலகம் முழுக்க 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமாகப் பரிமளித்திருக்கிறது வாட்ஸ் அப். 2014-ல் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது. இதனால் ஃபேஸ்புக்கைப் போலவே வாட்ஸ் அப்பிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறை மற்றும் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமையே இல்லையா?



"நாளும் கிழமையும்
நலிந்தோருக்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கு இல்லை"

- கந்தர்வன்.

வெள்ளிக்கிழமை விடிந்ததுமே 'வீக் எண்ட்' கொண்டாட்ட மனநிலையும் பிறந்துவிடும். சனி, ஞாயிறு கிழமைகளின் விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்கிற யோசனைகள் உதிக்க தொடங்கி விடும். அதனால் வெள்ளிக்கிழமை சீக்கிரமாக செல்வதுபோல இருக்கும். ஞாயிறு மட்டும் விடுமுறை இருப்பவர்களுக்கு இவற்றை அப்படியே சனிக்கிழமைக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

வாரம் முழுவதும் உழைப்பவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது இயல்புதான். அது தேவையானதுதான். ஏனெனில், நீண்ட ஓட்டத்தில் சிறிது ரிலாக்ஸ் செய்தால், உற்சாகத்தோடு ஓட்டத்தைத் தொடர முடியும். ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெண்களின் வழக்கமான வேலைகளின் பட்டியல் நீண்டு விடும். விடுமுறை நாள்தானே என்று ஆண்கள் தாமதமாக தூக்கம் கலைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுந்ததுமே பசிக்கும். அதற்கு தயாராக காபி, டிபன் செய்ய வேண்டியது அந்த வீட்டின் பெண்கள்தான். அதனால் அவர்களால் விடுமுறையன்றும் அதிக நேரம் தூங்க முடியாது. ஆண்கள் டிபன் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்ப்பது, வெளியே செல்வது என்று 'பிஸி (!) ஆகிவிடுவார்கள். பெண்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கும்.

ஒரு வாரம் சேர்த்து வைத்த அழுக்குத் துணிகள் குவியலாக சேர்ந்திருக்கும். அதைப் பார்க்கும்போதே மலைப்பு வந்துவிடும். அவற்றை ஊற வைத்து, துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அவற்றை உலர வைக்க மொட்டை மாடியில் தூக்கிச் செல்வது இன்னொரு போராட்டம். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கும்போதே மதிய சமையலுக்காக இறைச்சி வங்கப்பட்டு தயராக இருக்கும்.

மதிய உணவு மீன் என்றால், அதை சுத்தம் செய்து சமைக்க இன்னும் நேரம் பிடிக்கும். இதற்கு இடையில் பிள்ளைகளைக் குளிக்க வைப்பது, படிக்கச் சொல்வதும் நடந்துகொண்டிருக்கும். ஒரு வழியாக மதிய உணவு முடிந்து 'அப்பாடா' என பெருமூச்சு விடும் பெண்களுக்கு சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்கள் வெல்கம் சொல்லும். 'அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம், கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றால், பூனைகள் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விடும். பாத்திரங்களைத் துலக்கி முடித்து, மொட்டை மாடியில் உலரும் துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தால், சூரியன் 'கிளம்பட்டுமா?' என்றுக் கேட்கும். இதற்குள் குழந்தைகள் விளையாடி, சில செல்ல சண்டைகள் போட்டு வர, அதற்கு பஞ்சாயத்துகளையும் பார்க்க வேண்டும். மறுபடியும் மாலை நேர காபி, இரவு டிபன் தயாரித்தல்... என அந்த நாள் முடியும். ஞாயிற்றுக்கிழமையை விட வார நாட்கள் பரவாயில்லையோ எனத் தோன்றிவிடும் பெண்களுக்கு.

அப்படியெனில், பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமை என்பதே கிடையாதா... அல்லது அது வழக்கமான இன்னொரு நாள்தானா?

உண்மையை ஒப்புக்கொள்வதெனில், பெண்கள் ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு வேலைகள் குவிந்துவிடுகின்றன. அதனால் விடுமுறைத் தினத்தை வரவேற்கும் மனநிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழல் மாற வேண்டும் அல்லவா?

நிச்சயம் மாறவேண்டும் என்பவர்கள். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் மன நிலையிலிருந்து வெளியேற வேண்டும். தொடக்கத்தில் தயக்கம் இருக்கத்தான் செய்யும். இந்தத் தயக்கம் ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் மனதில் ஏற்றப்பட்ட ஒன்று. அதை ஓரிரு நாட்களில் இறக்கி வைத்துவிட முடியாது. ஆனாலும் இப்போது தொடங்க விட்டால், அடுத்த தலைமுறைக்கும் இந்த வேலைப் பாகுபாடு பரவிவிடும். வீட்டு வேலைகளில் எல்லோரும் பங்கெடுக்கும்போது, வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு, எல்லோருக்குமான ஓய்வு நேரம் கிடைக்கும். அப்படி அமையும் பட்சத்தில் திங்கள் கிழமையை எதிர்கொள்வதை பெண்களால் திட்டமிட முடியும்.

இனி ஞாயிற்றுக்கிழமை ஓய்வும் கொண்டாட்டமும் பெண்களுக்கும் இருக்கட்டும்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் இயங்கும் தொடக்கப்பள்ளி: ஆசிரியர்களின் சம்பளத்தில் வாடகை

க. ரமேஷ்

ஸ்ரீமுஷ்ணம் அருகே வினாயகபுரத்தில் பள்ளியாக இயங்கி வரும் ஓட்டுவீடு. அடுத்தபடம்: தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் வாடகைக்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை ஊராட்சிக்கு உட்பட்டது வினாயகபுரம் கிராமம். போக்குவரத்து அதிகம் இல்லாத இக்கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும்.
இக்கிராமத்தில் 1978-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டது. ஏழாண்டுகளுக்கு பிறகு 1985-ல் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 11 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளிக் கட்டிடம் வலுவிழந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அரசு உத்தரவின்படி பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி பயின்றனர். ஆனாலும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அப்பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் என்பவரது முயற்சியால் அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு அறையை பள்ளியாக மாற்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறைக்கான வாடகையை பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து கொடுத்து வருகின்றனர்.
இந்த வீட்டின் மேற்கூரை ஓடுகளால் ஆனதால் வெயில் காலங்களில் மாணவர்கள் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கூடம் அதே வீட்டின் பின்புறம் செயல்பட்டு வருகிறது. மேலும், போதிய இடவசதி இல்லாததால் பெஞ்ச், ஆவணங்கள் வைக்கும் பீரோ ஆகியவை வைத்து பயன்படுத்த முடியவில்லை. மாணவர்களும் தரையில் அமர்ந்து தான் படிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், “எங்கள் ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள், தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத நிலையில் உள்ளவர்கள். அரசு கிராமப்புற மாணவர்கள் படித்து முன்னேறும் வகையில் பல்வேறு நடவடிக்கையை எடுத்தாலும், எங்கள் ஊர் போல போக்குவரத்து இல்லாத உட்பகுதியில் உள்ள பள்ளிகளின் நிலை இது தான். எனவே எங்களை போன்ற ஏழைகளின் பிள்ளைகள் படிக்க உடனடியாக பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர வேண்டும்" என்றார்.

மலைக்க வைத்த நகைகள்.. அசரவைத்த சொகுசுப் பேருந்து! அந்த நாள் ஞாபகம்!


2000 பிப்ரவரி முதல் வாரத்தில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திலிருந்து ஐந்து பெரிய சூட்கேஸ்கள், அப்போது சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த முதலாவது சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா, சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குச் சொந்தமான தங்க நகைகள், வைர நகைகள் அந்த ஐந்து சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்தன.

போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதா வீட்டிலும், சுதாகரனின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட அந்த நகைகளை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருமாறு நீதிபதி எஸ்.சம்பந்தம் ஆணையிட்டிருந்தார். நகைகளை மதிப்பிட்டு, வழக்கின் சாட்சியங்களாக அவற்றை வைத்திருக்கலாம் என்று அவை கொண்டுவரப்பட்டிருந்தன. ஒவ்வொரு சூட்கேஸிலிருந்தும் எடுக்கப்பட்ட ஆபரணங்களின் அழகைப் பார்த்து, நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் என்று அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சுதாகரன் திருமணத்தின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே மாதிரியான சேலைகளில், ஒரே மாதிரியான நகைகள் அணிந்திருக்கும் புகைப்படம் மிகப் பிரபலமானது. அப்போது அவர்கள் அணிந்திருந்த ஒட்டியாணங்களில் ஒன்று நீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டபோது அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

இன்னொரு ஒட்டியாணம் சோதனைகளில் கிடைக்கவே இல்லை என்று வழக்கு விசாரணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒட்டியாணத்தின் எடை 1,044 கிராம். 2,389 வைரக் கற்கள், 18 மரகதக் கற்கள், 9 மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணம் அது. 487.4 கிராம் எடை கொண்ட காசுமாலையும் எல்லோர் கண்களையும் விரிய வைத்தது. ஜெயலலிதா வாங்கியிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு.

கேரவன் வேன்களெல்லாம் வராத காலத்திலேயே பல்வேறு சிறப்பு வசதிகள் அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்தன. ஷவருடன் கூடிய ஒரு குளியலறை, தொலைபேசி, மேஜை, நாற்காலிகள் கொண்ட ஒரு ‘மினி கான்ஃபரன்ஸ் ஹால்’, தொலைக்காட்சி என்று புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்த சிறப்பு வசதிகள் அனைவரையும் வாய் பிளக்கச் செய்தன. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அந்தப் பேருந்தை வடிவமைத்ததுடன், ஜெயலலிதாவுக்கு அதை விநியோகமும் செய்திருந்தது. சீக்கியரான அதன் தலைவர், ஜெயலலிதாவுக்கான அந்தப் பேருந்தை போயஸ் கார்டனுக்கு தானே தனிப்பட்ட முறையில் சேர்ப்பித்ததாகவும் சொன்னார்.

“அந்தப் பேருந்தை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தீர்களா?” என்று வழக்கறிஞர் கேட்டபோது, “இல்லை. வேறொரு மேடம்தான் (சசிகலா!) அங்கு இருந்தார்” என்றார். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன், பையனூரில் உள்ள தனது நிலத்தை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி விற்க வைத்தது பற்றி விவரித்தபோது உடைந்து அழுதார்!

நகைகளுக்குக் காவலாக வந்திருந்த போலீஸார், நீதிமன்றத்திலேயே முழுதாக மூன்று நாட்களுக்குத் தங்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், மூன்று நாட்கள் மதிப்பிடும் அளவுக்கு நகைகளைக் குவித்திருந்தார் ஜெயலலிதா. அந்த ஐந்து சூட்கேஸ்களும் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளன.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

NEWS TODAY 18.12.2025