Thursday, November 30, 2017

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

Added : நவ 30, 2017 03:52 



சென்னை: அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தலையங்கம் 

அரசு விழாக்களில் மாணவர்களா?






பெற்றோர்களுக்கும், சாலைவழியே செல்லும் பொதுமக்களுக்கும் பல நேரங்களில் மனதை வருத்தும் சம்பவங்களை காணமுடிகிறது.

நவம்பர் 30 2017, 03:00 AM 


பெற்றோர்களுக்கும், சாலைவழியே செல்லும் பொதுமக்களுக்கும் பல நேரங்களில் மனதை வருத்தும் சம்பவங்களை காணமுடிகிறது. சாலையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு குழந்தைகள்கூட கையில் பதாகைகளை வைத்துக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து மனித சங்கிலியாகவும், பேரணியாகவும் நிற்கிறார்கள். ஹெல்மெட் அணிவோம், டெங்குவை ஒழிப்போம், எய்ட்ஸை ஒழிப்போம் என்பது போன்ற பல வாசகங்கள் அந்த மாணவர்களின் கைககளில் உள்ள பதாகைகளில் எழுதப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் பற்றி தெரியாத, தெரியக்கூடாத வகையில் அதுதொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி நிற்கவைப்பது ஏற்புடையது அல்ல. காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டிய நேரத்தில், சாலையில் சிலமணி நேரம் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வளவு நேரம் சாலையில் நின்றுவிட்டு களைப்படைந்துவிடும் அந்த சிறுமலர்களால் எப்படி, அதற்குப்பிறகு பள்ளிக்கூடத்திற்கு சென்று உற்சாகமாக படிக்க முடியும் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் அரசு விழாக்கள் எது நடந்தாலும் பலமணி நேரங்களுக்கு முன்பே மாணவர்களை அங்குப்போய் உட்கார வைத்து விடுகிறார்கள். எப்படி அரசியல் கூட்டங்களில் கூட்டம் சேர்க்க கட்சிக்காரர்களை பஸ், வேன், லாரிகளில் ஏற்றி அழைத்து வருகிறார்களோ, அதுபோல மாணவர்களையும் அழைத்து வந்து கூட்டம் தொடங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே உட்கார வைத்து விடுகிறார்கள். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லாமல், பல நேரங்களில் பசியோடு அந்த மாணவ–மாணவிகள் வாடிவதங்கி உட்கார்ந்து கொண்டு, எப்போது கூட்டம் முடியும் என்ற அரைத்தூக்கத்தில் இருப்பதையும் காணமுடிகிறது.

தற்போது அரசு விழாவாக நடத்தப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டங்களில் 10, 11, 12–ம் வகுப்பு மாணவர்கள் இவ்வாறு அழைத்துக் கொண்டு வரப்படுகிறார்கள் என்ற புகாரை எதிர்க்கட்சிகள் கூறின. இதற்கு சிலர், மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். பற்றி தெரியவேண்டும். அது அவர்களது பொதுஅறிவை வளர்க்கும். இதுபோல கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்வது நல்லது என்று கூட கருத்து தெரிவித்தனர். அரசு நிர்வாகம் எடுக்கவேண்டிய பல நடவடிக்கைகளை அவர்கள் எடுக்காமல், உயர்நீதிமன்றம் தான் எடுக்கவேண்டும் என்ற கட்டாயநிலை தற்போது நிலவிவருவதால், இந்த பிரச்சினைக்கும் நீதிமன்ற தீர்ப்பு ஒரு வழியைகாட்டிவிட்டது. இதுதொடர்பாக அரசு இப்போது சில விதிமுறைகளை வகுத்து உத்தரவாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பள்ளிக்கூடங்கள் அவர்களாகவே மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் தானாக முன்வந்து அவர்களின் சுயவிருப்பத்தின்படியே கலந்து கொள்ளவேண்டும்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும், முதன்மைக்கல்வி அதிகாரியிடமும் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். வலிப்பு நோய் போன்ற நோய் உள்ளவர்கள் இதுபோன்ற மனிதசங்கிலியிலோ, பேரணியிலோ கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பள்ளிக்கூட நிர்வாகம், குடிநீர், உணவு போன்றவற்றை வழங்கவேண்டும். பள்ளிக்கூட குழந்தைகள் எங்குபோகிறார்கள் என்பதை அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கவேண்டும். பெற்றோர் விருப்பப்பட்டால் அவர்களையும் கூட வர அனுமதிக்க வேண்டும். மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டால் 20 மாணவிக்கு, ஒரு ஆசிரியை வீதம் உடன் செல்ல வேண்டும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுடன் சிறப்பு ஆசிரியரும் செல்ல வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு வெளியே நடக்கும் எந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. எந்த நிகழ்ச்சியென்றாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. விடுமுறை நாட்களிலும் மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்பதுபோன்ற பல விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக இது வரவேற்கத்தக்கது என்றாலும், பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே மாணவர்கள் கலந்து கொள்ள செய்யலாமே தவிர, இப்படி பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்து சாலையில் நிற்க வைப்பதும், வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செய்வதும் தேவையில்லாதது. மொத்தத்தில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டில்தான் அரசும், பள்ளிக்கூடங்களும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர, இப்படி அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது.

Wednesday, November 29, 2017

அச்சுறுத்தும் ஆன்டிபயாடிக்ஸ்!

By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 28th November 2017 01:36 AM  |  

எவ்வளவுதான் நாம் சொல்லாமை பேசினாலும் உயிரைக் கொல்லாமல் நாம் வாழ முடியாது. தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம். பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் கலாசாரம் என்பதுகூடக் கிருமிதான். அந்தக் கிருமிகளைக் கொல்லும் இந்திய ராணுவம் கிருமிநாசினிகள் என்றாலும் கிருமிகளை அழிக்க முடியவில்லை. 

அதுபோலவே மனிதநல வாழ்வில் உயிர்களைக் கொல்லும் பாக்டீரியக் கிருமிகள் வலுத்துவிட்டன. கிருமிநாசினிகளாயுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் வலுவிழந்துவிட்டன.
மனிதனை மனிதன் கொல்வதற்கு மூளையைச் செலவிட்டு அவன் கண்டுபிடித்த ஆயுதங்களைப் பார்த்தால் பிரமிப்பூட்டும். கேட்டால் தற்காப்பு என்பார்கள். யார் மீது எந்த குண்டு, எப்போது பாயுமோ? யாருக்குத் தெரியும்? 


மனிதனே மிருகமாகும்போது மிருகங்கள் என்ன செய்யும்? பாம்புக்குப் பல்லில் விஷம், தேளுக்குக் கொடுக்கில் விஷம், புலிக்கு நகம், யானைக்கு தும்பிக்கை, மாட்டுக்குக் கொம்பு. எல்லாம் பாதுகாப்புக்குத்தான். தாக்குவதற்கு அல்ல.


ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி கொண்டு மனிதனால் டெங்குக் கொசுவைக் கொல்ல முடியுமா? சிக்குன் குனியா, புற்றுநோய், செல் எலும்புருக்கி, மஞ்சள்காமாலை இவ்வாறெல்லாம் நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் பலவற்றை எப்படிக் கொல்வது? அதற்கும் மருந்து கண்டுபிடித்தார்கள். அந்த மருந்துக்கு ஆன்டிபயாடிக் என்று பெயர் கொடுத்தார்கள். நாம் கிருமிநாசினி என்கிறோம்.


திடீரென்று காய்ச்சல் வருகிறது. கை, கால் குடைச்சல்; வாய் கசக்கிறது; ஆகாரம் செல்ல மறுக்கிறது; இன்னும் பற்பல கோளாறுகள். டாக்டரிடம் செல்கிறோம். கிருமிநாசினிகளுடன் பல வண்ணங்களில் மாத்திரைகளை வழங்கி, இடைவெளி தவறாமல் தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள் மருத்துவர்கள். 


வாந்தி வரும், வயிற்றுப்போக்கு ஏற்படும். சரி சரி அதை நிறுத்திவிடுங்கள். வேறு மருந்து தருகிறேன் என்பார். மாற்றி மாற்றி என்னென்னவோ தருவார்கள். கூகுளுக்குள் சென்று மருந்துகள் குறித்து குறிப்புகளைப் படித்தால் ஆடிப்போய்விடுவோம். பக்க விளைவுகள் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டெட்ராசைக்ளின் என்கிற ஆன்டிபயாடிக் 250 மி.கி. அளவு எழுதப்பட்டது. இப்போது அது பயனற்றுப் போய் கோழிகளுக்கும், தேனீக்களுக்கும் வழங்கப்படுகிறது. கூட்டப்பட்ட எடை அளவில், பின்னர் ஆம்பிசிலின். அதுவும் 250 மி.கி. பரிந்துரைக்கப்பட்டது. இப்போது அமாக்ளீன் 500 மி.கி. என்கிற கலவை பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வளவு அதிசக்தியுள்ள மருந்து தேவைதானா என்று கூகுளைப் பார்த்து பயந்துபோன நோயாளி ஒருவர் மருந்துக் கடைக்காரரிடம் கேட்டால், அவர் சிரிப்பார். '250 மி.கி. கிருமிநாசினி கேக்காது சார்' என்று பதில் வரும்.


நமது உடலைத் தாக்கும் கிருமிகள் அதாவது தீய பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள், கிருமி நாசினிகளை வென்று பழகிவிட்டன. ஆகவே, கூடுதல் வீரியமுள்ள கிருமி நாசினிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.


அண்மையில் பிரிட்டனில் நிகழ்ந்த கிருமிநாசினி எதிர்ப்புச் சக்தி குறித்த கருத்தரங்கின் ஒரு பதிவை 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' வெளியிட்டுள்ளது. 'நோயுற்றவர்களுக்குத் தொடக்கத்திலேயே கிருமிநாசினி மருந்துகள் வழங்குவதால் நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும் என்று கருதிவிடலாகாது. 



தேவைக்கு மேல் நீண்ட நாள்கள் தொடருமானால், நோய் எதிர்ப்பு சக்தி மழுங்கிவிடும். கிருமிகள் வென்றுவிடும்...' என்கிறது அந்தப் பதிவு.


கிருமிநாசினிகளின் வீரிய இழப்பு ANTI MICROBIAL RESISTANCE) அச்சம் தருவதாயுள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு அறிக்கையின்படி, ஆன்டிபயாடிக் வீரிய இழப்பால் 2050-ஐ நாம் நெருங்கும்போது ஐரோப்பாவில் 3,90,000 பேரும், அமெரிக்காவில் 3,17,000 பேரும், ஆப்பிரிக்க - ஆசியா கண்டங்களில் 40,00,000 பேரும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரிய இழப்பு காரணமாக நோய்க்கிருமிகளால் இறப்பார்கள் என்கிறது இன்னோர் ஆய்வு.
பலதரப்பட்ட அறுவைச் சிகிச்சைகள், மாற்று இதயம், சிறுநீரகம், கல்லீரல் பொருத்தல், கர்ப்பப்பைக் கட்டிகள், சுவாச கோசம், எலும்புருக்கி நோய்கள் எல்லாம் காலப்போக்கில் பிரச்னைகளாகும் என்று மருத்துவ உலகமே மரண பயத்தில் ஆழ்ந்துள்ளது.
ஏனெனில், கடந்த டிசம்பர் மாதம், 'சூப்பர் பக்' எனப்படும் பன்னோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது என்று கருதப்பட்ட கோலிஸ்டின் (COLISTIN) என்ற ஆன்டிபயாடிக் கிருமிநாசினி வேலை செய்யாமல், அதனால் ஒரு நோயாளி இறக்க நேர்ந்ததுதான் இந்த அச்சத்திற்குக் காரணம்.


அதிக அளவில் கிருமிநாசினிகளை உட்கொள்வதில் இந்தியா உயர்ந்த நாடு மட்டுமல்ல, முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக அளவில் அண்மையில் 'லான்ஸெட்' (LANCET) என்ற மருத்துவ இதழ் வழங்கியுள்ள புள்ளிவிவரப்படி, அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வதில் முதலிடம் பெற்றுள்ள இந்தியா ஆண்டொன்றுக்கு பயன்படுத்துவது 13 பில்லியன் யூனிட். 


இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா 10 பில்லியன் யூனிட்டும், மூன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்கா 7 பில்லியன் யூனிட்டும் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவுக்கு முதலிடம் என்றால் இந்தியாவுக்குள் முதலிடம் தமிழ்நாடு என்பதை சொல்லியா தெரியவேண்டும்?


இந்த விஷயம் மனிதனோடு நின்றபாடில்லை. மாடு, ஆடு, கோழி, பன்றி என்று மனிதன் உண்ணும் ஜீவன்களும் கிருமிகளால் தாக்கப்பட்டால் கிருமிநாசினிகளை ஊசிகளால் ஏற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்காவும் சீனாவுமே முன்வரிசையில் நிற்கின்றன.
அமெரிக்காவில் மட்டும் பன்றி, மாடு போன்ற கால்நடைகளைக் கொழுக்க வைப்பதற்கென்றே உற்பத்தியாகும் ஆன்டிபயாடிக் கிருமிநாசினிகளில் 90 சதவீதம் செலவாகின்றன. அமெரிக்கப் பன்றிகளைக் காட்டிலும் சீனப் பன்றிகள் அதிக மோசம். 


அதாவது சீனாவில் உள்ள பன்றிப் பண்ணைகளில் மிக அதிக அளவில் கோலிஸ்டின் வழங்கப்பட்டும்கூட, பன்றிகளின் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. கிருமிநாசினிகளைக் கிருமிகள் வென்று விடுவதால் கிருமிகளின் தாக்கம் பன்மடங்கு பெருகிவிடுகிறது.
நாம் உண்ணும் உணவுகளில் கிருமிநாசினிகள் உள்ளன. முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, தேன், பால் ஆகியவற்றில் கிருமிநாசினிகள் கலந்திருக்கின்றன. மிருக வைத்தியத்தில் சகல ஆன்டிபயாடிக் ஊசிகளும் போடப்படுகின்றன. கேப்ஸ்யூல் மாத்திரை வடிவிலும் வழங்கப்படுகின்றன. 


உண்ணும் உணவில் இப்படி ரசாயனக் கிருமிநாசினிகள் கலக்கப்படுவதால், அந்த விலங்கினங்களின் தசைகளில் அவை கலந்து விடுகின்றன. அவற்றை உட்கொள்ளும்போது மனித ரத்தத்திலும் அவை கலந்து, அந்த ஆன்டிபயாடிக்குகளுக்கான எதிர்ப்பு சக்தியைக் கிருமிகள் பெற்று விடுகின்றன. மனிதன் நோயால் தாக்கப்படும்போது, ஆன்டிபயாடிக் கிருமிநாசினி மருந்துகள் அந்த நபருக்குப் பயனளிப்பதில்லை.


19, 20-ஆம் நூற்றாண்டுகளை நினைவில் கொண்டு பார்த்தால் முதலாவதாக லூயிபாஸ்டர். கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியக் கிருமிகளை ஆராய்ந்து நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தார். கறந்த பாலை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் உத்தி இவர் பெயரால் பாஸ்ச்சுரேஷன் எனப்படுகிறது. பாலை உச்ச நிலையில் கொதிக்க வைத்து பின் உச்சநிலையில் குளிரூட்டுதல்.


அடுத்து அலெக்சாண்டர் ஃபிளமிங், பெனிசிலின் மருந்து கண்டுபிடித்தார். பின்னர் ஆல்பர்ட் ஷாட்ஸ், ஸ்ட்ரப்டோ மைசின் கண்டுபிடித்தார். அது எலும்புருக்கி (டி.பி.) மருந்து. பென்சிலினும், ஸ்ட்ரப்டோமைசினும் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றின.
அதன்பின்னர் டெர்ரா மைசின், டெட்ராசைக்ளின், ஆம்பிசிலின், அமாக்ளின், சிப்ரோ ஃப்ளாக்ஸசின்... வரிசையில் 'சின்' என்றும் 'க்ளின்' என்றும் முடியும் கிருமிநாசினி மருந்துகள் பல நூற்றுக்கணக்கில் இருக்கலாம். 


ஆனால், நோய்க்கிருமிகளோ இலியத் என்ற கிரேக்கக் கதையில் வரும் ட்ரோஜன் குதிரைபோல் ரகசியமாக மனித உடலில் புகுந்து வெற்றிக்களிப்பில் ஆட்டம் போடுகின்றன.
டார்வின் கணிப்புப்படி கிருமிகளுக்கும் கிருமிநாசினிகளுக்கும் நடக்கும் போரில் வல்லவர் வெல்வர். வல்லவர் யார் கிருமியா? கிருமிநாசினியா? உடலில் கிருமிநாசினிகளைச் செலுத்திக் கிருமிகளை சக்தியுள்ளவைகளாக மாற்றி வருகிறோம். 


சுற்றுச்சூழல் பாதிப்பால் புவி மேன் மேலும் வெப்பமாகி, மாசு மிகுந்து உலகம் அழியுமா? இல்லை, கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் அழியுமா என்பதுதான் இனி வரும் தலைமுறையினருக்கு முன்பு இருக்கும் சவால்.


கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
அணுகுமுறையை மாற்ற வேண்டும்!

By ஆசிரியர் | Published on : 28th November 2017 01:37 AM |

  அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்த 16 வயதே ஆன நான்கு மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மாணவிகளின் தற்கொலைக்கான காரணங்களை அறிய, மாவட்ட ஆட்சியரால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை, இன்னொரு பள்ளி ஆசிரியை ஆகிய மூவரையும் பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட பிறகுதான், மாணவிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு பொதுமக்களால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை வேண்டும் என்றும்; இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமென்றும்; அவர்களது குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலமும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
மாணவிகளின் தற்கொலை வேதனைக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களது தற்கொலையைத் தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கைகள்தான் விசித்திரமாக இருக்கின்றன. இந்தப் பிரச்னையின் அடிப்படை காரணம், தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் சரியாகப் படிக்காததால் வகுப்பு ஆசிரியை அவர்களைக் கடிந்துகொண்டார் என்பதுதான். சரியாகப் படிக்காத மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கடிந்து கொள்ளாமல் பாராட்டவா செய்வார்கள்? இல்லை, அவர்கள் எக்கேடும்கெட்டுப் போகட்டும் என்று பாராமுகமாக இருந்துவிடத்தான் முடியுமா?


கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சாதாரணமான பிரச்னைகளுக்காக மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, போதிய மதிப்பெண் பெறாமல் போனாலோ, தாங்கள் விரும்பியதுபோல மேற்படிப்புக்கான வாய்ப்புக் கிடைக்காமல் போனாலோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்தாலோ அதன் எதிர்வினையாகத் தற்கொலை செய்துகொள்வது என்பது அதிகரித்து வருவது ஆபத்தான அறிகுறி. 


வாழ்க்கையை எதிர்கொள்ளவும், எப்படிப்பட்ட சூழலிலும் போராடி வெற்றி அடையவும், அடுத்து வரும் தலைமுறைக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் இல்லாமல் இருக்கிறது என்பதன் அடையாளம்தான், அதிகரித்து வரும் இதுபோன்ற தற்கொலைகள். ஒருபுறம் தற்கொலைகள் அதிகரித்து வரும் அதேவேளையில், இன்னொருபுறம் மாணவர் சமுதாயத்தில் வன்முறை உணர்வும் அதிகரித்து வருவதை நாம் கவனித்தாக வேண்டும். சக மாணவர்களையும், ஏன் ஆசிரியர், ஆசிரியைகளையேகூடத் தாக்கவும் கொலை செய்யவும் சிலர் தயங்காத சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.


ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், கண்டிப்பதுடன் நின்றுவிடாமல் தண்டிக்கவும் தலைப்படுகிறார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்புக்குக் கீழே படிக்கும் குழந்தைகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யாமல் அன்புடன் வழிநடத்திக் கற்பிக்க வேண்டும் என்பது சரி. அதேநேரத்தில், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறுவர், சிறுமியர்களிடம் கண்டிப்பாக இருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதும் அவர்களது கவனம் திசை திரும்பாமல் கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்துவதும் ஆசிரியர்களின் கடமை என்பதையும் நாம் உணர வேண்டும். 


ஆசிரியர்களின் தரம் குறைந்துவருகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது. அவர்களில் சிலர் ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், மாணவ, மாணவியர் மீதும், அவர்களது வருங்காலத்தின் மீதும், அக்கறையுள்ள ஆசிரிய, ஆசிரியைகள்தான் மாணவ, மாணவியரை கண்டிக்கவும், தண்டிக்கவும் முற்படுகிறார்கள். ஓர் அரசு அதிகாரி தவறான முடிவை எடுத்தாலும்கூட, அவர் நல்லெண்ணம் கருதி அந்த முடிவை எடுத்திருந்தால், அது குற்றமல்ல என்று நிர்வாகச் சட்டம் கூறும்போது, ஓர் ஆசிரியரோ, ஆசிரியையோ மாணவ, மாணவியரின் மீதான அக்கறையின் பேரில் அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ முற்பட்டால் அதை மட்டும் குற்றமாகக் கருதுவது சரியல்ல.


இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டித்ததையும், தண்டித்ததையும் ஒப்பிடும்போது, இன்றைய ஆசிரியர்கள் மிகவும் மென்மையானவர்களாகவே காணப்படுகிறார்கள். அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்னால் வரை, ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து படித்த மாணவர்கள், மிரளவும் இல்லை, வெகுளவும் இல்லை, அந்த ஆசிரியர்களை வெறுக்கவும் இல்லை. தங்கள் இறுதிக்காலம் வரை, தங்களை செப்பனிட்ட செம்மல்கள் என்று அந்த ஆசிரியர்களை இறைவனுக்கு ஒப்பாக வணங்கி வழிபட்டவர்கள்தான் அன்றைய தலைமுறையினர் அத்தனை பேரும். அதற்குக் காரணம், அன்றையத் தலைமுறைக் குழந்தைகளிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், அன்றைய பெற்றோர் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான்.


இன்றைய மாணவ சமுதாயத்திடம் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோ, வாழ்க்கையை எதிர்கொண்டு போராடும் துணிவோ இல்லாத நிலை காணப்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஆசிரியர்களைத் தண்டிப்பதல்ல. பெற்றோர்களும் பள்ளிகளும் பள்ளி மாணவ - மாணவியர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவதுதான். மதிப்பெண்கள் பெறுவது மட்டும்தான் கல்வி என்கிற எண்ணம் மாற்றப்பட்டு, நல்லொழுக்கம்தான் கல்வியின் குறிக்கோள் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
புதுச்சேரி மருத்துவ சீட் முறைகேடு; சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் சரண் 
 
ஜெ.முருகன்

சென்டாக் முதுநிலை மருத்துவ சீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகளும், புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.



புதுச்சேரியில், மொத்தம் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 318 முதுநிலை மருத்துவ இடங்கள் இருக்கின்றன. அதில், 156 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் 162 இடங்கள் அரசுக்கும் ஒதுக்கப்பட்டன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சென்டாக் கலந்தாய்வுமூலம் நிரப்பப்பட்டது. அப்படி நிரப்பும்போது, அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள்-பெற்றோர் சங்கங்கள் குற்றம் சுமத்தின. அதையடுத்து, சென்டாக் அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ-க்கு அனுப்பிவைத்ததோடு, ‘முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படும் முன், சி.பி.ஐ அதிரடி ஆய்வை நடத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.

உடனே சென்டாக் அலுவலகத்தில் ஆய்வுசெய்த சி.பி.ஐ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சென்டாக் சேர்மன் நரேந்திரகுமார், அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பி.ஆர்.பாபு ஆகியோர் மீதும் சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ், இணை கன்வீனர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோநாதன் டேனியல் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையே, தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாபு, சென்டாக் அமைப்பாளர் கோவிந்தராஜ், இணை அமைப்பாளர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனாதன் டேனியல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் அந்த 5 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் 5 பேரும் சரண் அடைந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி 5 பேரும் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டனர்.
திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை

Added : நவ 29, 2017 06:27



திருவாரூர்: திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
67 வயதில் பட்டம் பெற்ற செல்லத்தாய்; வக்கீலாக போகிறார் வரலாறு படைத்த மூதாட்டி

Updated : நவ 29, 2017 00:16 | Added : நவ 28, 2017 22:58



  சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி, எம்.ஏ.,
வரலாறு பட்டம் பெற்றார். கணவனை இழந்த தன்னை, மகள்கள் கைவிட்ட நிலையில்,
சட்டம் படிக்க உள்ளதாக, அவர் சூளுரைத்தார்.

திறந்தநிலை பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, சென்னையில், நேற்று நடந்தது. கவர்னர்,
பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கினார். 16 ஆயிரத்து, 879 பேர், பட்டம் மற்றும்
பட்டயங்கள் பெற்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், துணை இயக்குனர் ஜெனரல், கே.அழகுசுந்தரம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கவர்னர் பாராட்டு

பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், வரவேற்புரை யாற்றினார். உயர் கல்வித் துறை அமைச்சர்,
கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில், சென்னை, மடிப்பாக்கம், ராம் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்த செல்லத்தாய் என்ற, 67 வயது மூதாட்டி, எம்.ஏ., வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றார். அவருக்கு, பட்டம் வழங்கிய கவர்னர், கைகுலுக்கி பாராட்டினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் பிறந்த செல்லத்தாய், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரை, திருமணம் செய்துள்ளார். தங்களின், மூன்று பெண் பிள்ளைகளை, முதுநிலை படிப்பு வரை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளனர்.'சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தில், கோபாலபுரம் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த செல்லத்தாய், 2009ல், ஓய்வு பெற்றார்.

கணவர் எதிர்ப்பு

அப்போது, திறந்தநிலை பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் படிப்பில் சேர்ந்தார். இதற்கு, கணவரும்,
மகள்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிறு வயதில், 10ம் வகுப்புக்கு மேல் படிக்க, தன் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், அவரால் படிக்க முடியவில்லை. அதனால், இந்த முறை, எப்படியும் பட்டம் பெற வேண்டும் என, முடிவு செய்து, எதிர்ப்புகளை மீறி, குடும்பத்தினர் துாங்கும்போது, நள்ளிரவில் படித்து, பட்டம் பெற்றுள்ளார்.

அவரது கணவர், 2014ல், மரணம் அடைந்த நிலையிலும், படிப்பை தொடர்ந்துள்ளார். அதனால், செல்லத்தாய் மீது, அவரது மகள்களுக்கு கடும் கோபம். அதனால், தினமும் அதிகாலையில் எழுந்து, தன் வீட்டு வேலையை முடித்து, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்து, உதவிகள் செய்கிறார்.பின், அங்கிருந்து, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கு வருகிறார்; மாலை வரை, அங்கேயே இருந்து படித்துள்ளார். கடும் மழை வெள்ளத்திலும், இவர் பல்கலைக்கு வந்து விடுவார் என்கின்றனர், பல்கலை ஆசிரியர்கள்.

ஐந்து மொழி அறிந்தவர்!

பட்டப்படிப்பு குறித்து, கருத்து தெரிவித்த செல்லத்தாய், ''எப்படியாவது, என் மகள்களின் அன்பை பெற்று, அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். எல்.எல்.பி., சட்டப் படிப்பில் சேர்ந்து, என்னை போன்று படிப்புக்காகவும், பிள்ளைகளால் கைவிடப்படுவோருக்கும் உதவி செய்ய வேண்டும்,'' என்றார். இவருக்கு, தமிழ், ஆங்கிலம் எழுதவும்,படிக்கவும் தெரியும்; மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பேசுவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...