Sunday, April 22, 2018

வெல்லுவதோ இளமை: கேட்ஸ் திறந்த ‘புதிய ஜன்னல்’

Published : 20 Apr 2018 09:59 IST

என். சொக்கன்



பல நாட்களாகப் பட்டினி கிடந்த ஒருவருக்குத் திடீரென்று அறுசுவை விருந்து கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது வில்லியத்துக்கும் அவனுடைய நண்பர்களுக்கும்.

அதற்குக் காரணம் கணினி என்ற அறிவியல் அதிசயமே!

இன்றைக்கு ஒரு கணினி இருந்தால் போதும். அலுவலக வேலை பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், சினிமா பார்க்கலாம், மின்னஞ்சல் படிக்கலாம், நண்பர்களுடன் அரட்டையடிக்கலாம்... இவை எவையும் அன்றைய கணினியில் சாத்தியமல்ல! அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த கணினிகள் ஒவ்வொன்றும் அறையளவு பெரிதாக இருந்தன. அவற்றில் பாட்டு, திரைப்படம், மின்னஞ்சல், ஃபேஸ்புக்கெல்லாம் வராது. ஒரு ஒளிப்படத்தைக்கூடப் பார்க்க முடியாது. வெறும் எழுத்துகள்தாம்.


ஆனால், அந்தக் கணினிகள் அன்றைய தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய சாதனை. அவற்றைப் பயன்படுத்தி புரோக்ராம்கள் எனப்படும் நிரல்களை எழுதலாம். நாம் என்ன சொன்னாலும் கணினியைக் கேட்கச்செய்யலாம். அதனால்தான், வில்லியம் போன்ற அன்றைய இளைஞர்கள் பலருக்குக் கணினிகளை மிகவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள், விதவிதமான நிரல்களை எழுதிக் குவித்தார்கள்.

இத்தனைக்கும் வில்லியம் முழுக் கணினியைப் பயன்படுத்தவில்லை. அவனுடைய பள்ளியிலிருந்து ஒரு பெரிய கணினிக்கு இணைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதை வைத்து அந்தக் கணினியில் நுழைந்து நிரல்களை எழுதிப் பழகிக்கொண்டான். அவனுக்குச் சொல்லித் தரவும் அங்கே யாரும் இல்லை. அவனே புத்தகங்களை, கையேடுகளைப் புரட்டிப் பார்த்தான், ஏதோ எழுதிப் பார்த்தான், அவை பிரமாதமாக வேலை செய்வதைப் பார்த்து வியந்துபோனான். சரியான நிரல்கள், பிழையான நிரல்கள் என இரண்டுமே அவனுக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத்தந்தன.

திடீரென்று ஒருநாள், அவர்களுடைய கணினி இணைப்பு வேலைசெய்யவில்லை.

வில்லியமும் அவனுடைய நண்பர்களும் கணினியை மொத்தமாகப் பயன்படுத்தியதால் அதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் தீர்ந்துவிட்டது.

‘ஆனா, எங்களுக்கு கம்ப்யூட்டர் வேணுமே; நாங்க என்ன செய்யறது?’வில்லியம் பரிதாபமாகக் கேட்டான்.


‘பள்ளிக்கூடத்துக்காகக் கொடுத்த இலவச நேரம் முடிஞ்சிடுச்சு. இனிமே நீங்களே காசு கொடுத்துப் பயன்படுத்தினாதான் உண்டு.’

அதற்கு அவர்கள் சொன்ன வாடகைத் தொகை மிக அதிகம். ஆனாலும், வில்லியமும் அவனுடைய நண்பர்களும் தங்களுடைய பாக்கெட் மணி, சேமிப்பையெல்லாம் செலவழித்துத் தொடர்ந்து கணினியைப் பயன்படுத்திவந்தார்கள். ஆனால், முன்புபோல் எந்நேரமும் கணினியின் முன்னே கிடக்க முடியாது. கொடுக்கிற காசுக்குச் சிறிது நேரம்தான் பயன்படுத்த அனுமதி.

அதுவரை கணினியை இஷ்டம்போல் பயன்படுத்திப் பழகியிருந்த அவர்களுக்கு, இப்படிச் சிறிது சிறிதாகப் பயன்படுத்துவது பிடிக்கவில்லை. ‘இன்னும் இன்னும்’ என்று ஏங்கினார்கள்.

அப்போது அவர்கள் ஊரில் ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன்’ (CCC ) என்ற நிறுவனத்திடம் சில கணினிகள் இருந்தன. ஆனால், அவையும் வாடகைக்குப் பெறப்பட்டவையே.

அந்தக் கணினிகளில் அவ்வப்போது சிறிய, பெரிய பிழைகள் தென்படும். அதுபோன்ற நேரத்தில் பிழை திருத்தப்படும்வரை CCC நிறுவனம் அந்தக் கணினிக்கு வாடகை தர வேண்டியதில்லை.

இதைத் தெரிந்துகொண்ட வில்லியம் யோசித்தான், ‘பிழைகள் தாமே வரும்வரை காத்திருக்க வேண்டுமா? நாமே உள்ளே நுழைந்து அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் என்ன?’


இப்படித் தினந்தோறும் பிழைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அந்தக் கணினிகளுக்கு வாடகை தர வேண்டியதில்லை. CCCக்குப் பணம் மிச்சம்.

ஆனால், இதனால் வில்லியத்துக்கு என்ன லாபம்?

பிழையைக் கண்டுபிடிக்க நெடுநேரம் கணினி முன்னே உட்கார வேண்டும். இரண்டு, மூன்று பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டு மீதி நேரமெல்லாம் நிரல் எழுதிப் பழகலாமே.

வில்லியம் சொன்ன யோசனை CCC நிறுவனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.அதன் பிறகு, வில்லியம் தொடர்ந்து மணிக்கணக்காகக் கணினிகளைப் பயன்படுத்தி மகிழ்ந்தான். பல தனித்துவமான நிரல்களை எழுதினான்.

பிழைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கணினியின்முன் அமர்ந்தாலும், அதன்மூலம் வில்லியம் கற்றுக்கொண்டவை ஏராளம். ஆரம்பத்தில் விளையாட்டாகக் கணினியைப் பயன்படுத்தியவன், சிறிது சிறிதாகப் பயனுள்ள நிரல்களை எழுதத் தொடங்கினான். கணினியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டான். அது பற்றி நிறையப் படிக்கத் தொடங்கினான்; நண்பர்களுடன் விவாதித்தான்.

இந்த ஆர்வம், வில்லியத்தின் தொழில் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. கணினியில் நிரல்களை எழுதுவது வெறும் பொழுதுபோக்கல்ல, அதைப் பயன்படுத்திப் பல பயனுள்ள விஷயங்களைச் செய்யலாம், அந்த நிரல்களைத் தேவையுள்ள நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அவன் நிரூபித்தான்.

அதே காலகட்டத்தில், கணினி களுக்கான வன்பொருள் (ஹார்டுவேர்) வசதிகளும் பெரிய அளவில் வளர்ந்தன. இதைப் பயன்படுத்திக்கொண்டு வில்லியம் தன்னுடைய தொழில் முயற்சிகளைச் செம்மையாக்கினான். அதன் மூலம், ‘ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி’ என்ற ஒரு புரட்சிக்கு அவன் முக்கியக் காரணமானான்.

அந்த வில்லியம், நாமெல்லாம் ‘பில் கேட்ஸ்’ என்ற பெயரில் நன்கறிந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பில் கேட்ஸ் நிறையப் பணம் சம்பாதித்தார் என்பது உண்மைதான். ஆனால், காசு சம்பாதிப்பதற்காக அவர் இந்தத் தொழிலுக்கு வரவில்லை. கணினிகளின்மீது அவருக்கிருந்த பேரார்வம்தான் அவரை இங்கே வரவைத்தது. இந்தத் துறையை இன்னும் பெரிய அளவில் வளர்ப்பது எப்படி என்ற கேள்விதான் அவரை முன்னேற்றியது.

‘உனக்குப் பிடித்த ஒரு வேலையைத் தேர்ந்தெடு; அதன்பிறகு நீ வாழ்நாள் முழுக்க வேலைசெய்ய வேண்டியதில்லை’ என்று சொல்வார்கள்; அப்படி இளம் வயதிலேயே மனத்துக்குப் பிடித்த ஒரு வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்துச் செய்து, அதன்மூலம் புகழும் பணமும் சம்பாதித்து, சமூகத்தின்மீது தாக்கத்தையும் உண்டாக்கிய அபூர்வமான மனிதர் பில் கேட்ஸ்.

(இளமை பாயும்)

தொடர்புக்கு: nchokkan@gmail.com

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், இலக்கணம், சிறுவர் இலக்கியத் துறைகள் சார்ந்து எழுதிவருகிறார் என். சொக்கன். வாழ்க்கை வரலாறு, பழந்தமிழ் இலக்கியம் பற்றி குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கும் சொக்கன், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியாளர்.
உலகப் புத்தக நாள் ஏப்.23: துள்ளித் துளிர்த்த காதல்!

Published : 20 Apr 2018 09:59 IST

நிஷா




காதலை உருகி மருகிச் சொல்லும் கதைப் புத்தகங்களுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்துக்கும் இளைஞர்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். ஏனென்றால், இந்தக் கதையின் கரு, காதலும் காதல் நிமித்தமுமே.

பொதுவாக, காதல் படங்களும் காதல் புத்தகங்களும் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவைதான். குறிப்பாக, சோகத்தில் முடியும் லைலா மஜ்னு வகைக் காதல். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இன்று காதலை எப்படிச் சொல்வது என்று தயங்கி எந்த இளைஞனும் ‘இதயம்’ முரளியைப் போல் கையில் புத்தகத்துடன் தலையைக் குனிந்தபடி மருகித் திரிவதில்லை. ஒருவேளை அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும், அதற்காக அவர்கள் தாடி வளர்த்து சோகத்தில் மூழ்குவதில்லை. இன்றைய இளைஞர்கள் ‘அட்டகத்தி’ தினேஷைப் போல் காதலை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்வை வீணடிக்காமல் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்

நிகிதா சிங் எழுதியிருக்கும் ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்தில் இருக்கும் காதல் இன்றைய தலைமுறையினரின் காதல்தான். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எவையுமின்றி, ‘எது நடந்தால்தான் என்ன?’ என்ற ரீதியில் வெகு சாதாரணமாகக் கடந்துசெல்லும் காதல் அது. சொல்லப்போனால் இந்தப் புத்தகத்தின் மையக் கருவை மணிரத்னம் சுட்டுவிட்டாரோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இதன் கரு ‘ஓகே கண்மணி’ படத்தின் கதையுடன் ஒத்துப்போகிறது.



நிகிதா சிங்

அந்தப் படம் பார்த்தவர் களுக்கு இந்தப் புத்தகத்தின் கதையைத் தனியாகச் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும், மற்றவர்களுக்காக இந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து, இன்று அதே துறையில் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஷவ்வி முகர்ஜி எனும் இளம் பெண்ணுக்கும் துஷார் மெகர் எனும் ஒளிப்படக் கலைஞனுக்கும் இடையேயான நிர்பந்தமற்ற காதல் வாழ்க்கைதான் இந்தக் கதை.

ஒரு போட்டோ சூட்டில் துஷாரைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொள்கிறது. முதல் சந்திப்பின்போது இருவரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்தனர். அதனால், அவர்கள் அன்று பேசியதும் கூடிக் கலந்ததும் எந்த அளவுக்கு உண்மை என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஒருவித நெருக்கத்தை உணர முடிந்த அவர்களால் காதலை மங்கலாகவே உணர முடிகிறது. எனவே, காதல் கல்யாணம் என்ற சமூகக் கட்டுகளிலும் நிர்ப்பந்தங்களிலும் சிக்கிக் கொள்ளாமல் நெருக்கத்துடன் மட்டும் தங்கள் உறவைத் தொடர்வது என்று முடிவுசெய்து வாழ்கின்றனர். இறுதியில் சுவாரசியமும் இழுவையும் கலந்த சில பக்கங்களுக்குப் பிறகு காதலை உணர்ந்து இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்துக் கதையை முடித்துவைக்கிறார்கள்.

ரொம்பப் பிரமாதமான கதை இல்லை என்றாலும்கூட, சிக்கலற்ற வார்த்தைகளைக்கொண்டு வாசிப்பதற்கு எளிதான மொழியில் சுவாரசியமான சம்பவங்களைத் தொகுத்து வாசிக்கும் பொழுதுகளை நிகிதா சிங் எளிதாகக் கவர்ந்துகொள்கிறார். வாசிப்பு ஒரு சுவாரசியமான அனுபவம். ஆனால், வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அது சிரமமான ஒன்றுதான். இந்தப் புத்தகம் அந்தச் சிரமத்தைக் களைந்து அவர்களையும் வாசிப்பைக் காதலிக்க வைக்கக்கூடும்.
புத்தக வாசிப்புக்குப் புது முறையைக் கையாளலாமே!

Published : 21 Apr 2018 09:34 IST

புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும். இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம். என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது. முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.

புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம். முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும். ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம். ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.

பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும். வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆடிப்போயிருக்கும் உயர்கல்வி வட்டாரம்; பல்கலை வரை பாயும் பணமும் பாலியல் தொந்தரவும்: பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆதங்கம்; புகார் பெட்டிகள் அமைக்க வலியுறுத்தல்

Published : 21 Apr 2018 08:57 IST
 
எஸ்.ஸ்ரீனிவாசகன் / என்.சன்னாசி மதுரை

THE HINDU TAMIL


மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - The Hindu

அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேநேரம், நிர்மலாதேவி கூறுவது உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செல்லத்துரைக்கு ஆதரவாக ஒரு குழுவும், எதிராக ஒரு குழுவும் நிர்வாக ரீதியாக செயல்படுகிறது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கங்களும் நிறைய உள்ளன. நிர்மலாதேவியின் விவகாரத்தை பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினையுடன் இணைத்தே பேசுகின்றனர். எதிலும் சம்பந்தப்படாத அலுவலர்கள், நிர்மலாதேவி பிரச்சினையால் பல்கலைக்கழகத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். நிர்மலாதேவிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா எனவும் சிலர் ஆச்சரியப்படுகின்றனர்.

நிர்மலாதேவி தனது ஆடியோ பதிவில் குறிப்பிடும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மோசமாகியுள்ளதா என்பது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரி யும் பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள், அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

பொதுவாக, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் சிறு தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இல்லை என ஒரேயடியாக கூறமுடியாது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் இது பொருந்தும். ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பிஎச்டி டிகிரியை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவது என்பது அந்தந்த மாணவர் சார்ந்த பேராசிரியர்களின் கையில் (வழிகாட்டி) இருக்கிறது.

பிஎச்டி முடிக்க இழுத்தடிப்பு நடக்கிறது. இதை தவிர்க்க சிலர் பணம் வாங்குகின்றனர். மிகச் சிலர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். சாதி ரீதியாக மாணவர்களைக் கையாளும் போக்கும் உள்ளது.


பல லட்சம் கைமாறுகிறது

ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட முறையில் வேலை வாங்கும் பேராசிரியர்களும் உண்டு. தற்போது அது குறைவு. சிலர் ரூ.2 லட்சம் முதல் 7 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பிஎச்டி படிப்பை முடித்துக் கொடுக்கும் நிலையும் உள்ளது. காரணம், பல லட்சங்களைக் கொடுத்து பேராசிரியர் பணிக்கு வருபவர்கள், ஆராய்ச்சிப் படிப்புக்கு வரும் மாணவர்களிடம் அதை வசூலித்து ஈடுகட்டிவிடலாம் என கருதுகின்றனர்.

தவிர, உதவித் தொகைக்கான ஆராய்ச்சிப் படிப்புக்கு யுஜிசி தேர்வு எழுதி வருவோருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகைக்கும் சில வழிகாட்டி பேராசிரியர்கள் ஆசைப்படுகின்றனர். இதுபோன்ற தவறுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனாலும், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

படிப்பை முடித்தால் போதும் என்ற எண்ணத்தில், குடும்ப சூழல் கருதி, பாதிக்கப்படுவோர் வெளியில் புகார் தர முன்வருவது இல்லை.

மேலும், இங்கு சிறப்பு விசாரணைக் குழுக்கள் இல்லை. பணம் வசூலிப்பது, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை, பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அளிக்க ஒவ்வொரு துறையிலும் விசாரணை அதிகாரிகளின் பெயர் விவரம், தொடர்பு எண்களை எழுதி வைக்க வேண்டும். ‘உமன் ஃபோரம்’, விஜிலென்ஸ் கமிட்டி உள்ளிட்ட குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

துணைவேந்தராக பிபி.செல்லத்துரை பொறுப்பேற்ற பிறகு சில பணி நியமனம் (ஆசிரியர் அல்லாத) நடந்துள்ளது. இதற்கும், நிர்மலாதேவி விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை.


உண்மை வெளிவர வேண்டும்

அலுவலர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் புவனேஸ்வரன், முத்தையா கூறியபோது, ‘‘நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். பின்னணியில் யார் இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’’ என்றனர்.

ஆராய்ச்சி மாணவி ஒருவர் கூறியபோது, ‘‘ஆராய்ச்சி மாணவர்களைப் பொறுத்தவரை அவரவருக்கு பொறுப்பு அவசியம். நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பிஎச்டி முடிக்க வேண்டும். ஆராய்ச்சிப் பிரிவில் நடக்கும் தவறுகளுக்கு, வழிகாட்டி பேராசிரியர்களை மட்டும் குறைகூற முடியாது. இரு பக்கத்திலும் தவறு இருக்கிறது. பல்கலைக்கழக உயர் பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் தவறு செய்தால், அது மாணவர்களையும் தவறு செய்யத் தூண்டும். பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையைப் பொறுத்தவரை, மாணவர் - ஆசிரியை, மாணவி - ஆசிரியர் என்பதால் மட்டும் தவறு நடக்கிறது என சொல்ல முடியாது. ஒரே பாலினத்தவராக இருந்தாலும் பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் - மாணவர் என்ற எல்லையை மீறும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது’’ என்றார்.

பல்கலைக்கழகங்களின் எஸ்எப்ஐ மாணவர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாரதி கூறியதாவது:

நிர்மலாதேவி ஆடியோ குறித்து மாணவ, மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தினோம். இங்கு உள்ள யாருக்கும் அவரைத் தெரியவில்லை. தவிர, இந்த சூழலால் பல்கலைக்கழகத்தின் நிலைமை மோசமாகி, எந்த நிதியும் கிடைக்காத நிலை ஏற்பட்டால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதால் இவ்விஷயத்தை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்தோம். தவிர, யார் மீதும் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கிடைக்காததால், போராட்டத்தில்கூட பல்கலைக்கழக பாரம்பரியத்தை பாதுகாக்கவே கோஷம் எழுப்பினோம். இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க வேண்டும் எனத் தெரிவித்தோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் பொதுவாக சில முரண்பாடுகள் உள்ளன. இதை, நிர்மலாதேவி பிரச்சினையில் இணைக்க சிலர் முயற்சிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அதே சமயம், பல்கலைக்கழகத்தில் எந்த சம்பவம் ஆனாலும் சாதி ரீதியாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை இயக்குநரின் நேரடி உத்தரவின்பேரில் ஒரு பேராசிரியர், மேலும் ஒரு உதவி பேராசிரியர் என 2 பேர் மீது இதுவரை பாலியல் ரீதியிலான புகார்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பாலியல் ரீதியிலான புகார்கள் ஏதும் வெளிவரவில்லை.

நிர்மலாதேவி பிரச்சினையில் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வருகிறது. இது உண்மையா என விசாரணை முடிவில்தான் தெரியும். இதையும் கடந்து நிர்மலாதேவியின் செல்வாக்கு பாய்ந்திருக்க வாய்ப்பு இல்லை.

உயர்கல்வித் துறையில் பிஎச்டி துறையில்தான் அதிக தவறுகள் நடக்கிறது. மாணவர்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வழிகாட்டி பேராசிரியர் திறமையானவரா, நேர்மையானவரா என்று பார்த்தே தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் பணம் கேட்டாலோ, சொந்த வேலையை ஏவினாலோ, பாலியல் சீண்டல் வந்தாலோ தைரியமாக மறுக்க வேண்டும். வரம்பு மீறினால் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். இத்தகைய புகார்களைப் பெறவும், விசாரிப்பதற்கும் ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகப் பிரிவினர் என அனைத்து துறையினரும் இணைந்த குழு அமைக்க வேண்டும். வெளிப்படையாக புகார் பெட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாலியல் அத்துமீறலும் பேசப்படாத உண்மைகளும்: பின்னணியிலுள்ள ‘பெரிய கைகள்’ தண்டிக்கப்பட வேண்டும்!

Published : 20 Apr 2018 09:07 IST

தி இந்து

கலைச்செழியன்



அறிவுக்கோயில்களாக கருதப்படும் கல்வி நிறுவனங்களில் அறிவுக்குப் புறம்பான, ஒழுக்கக்கேடான காரியங்கள் நடந்தேறுவது பெரும் சோகம். அருப்புக்கோட்டை சம்பவம்போல வெளியே தெரிபவை பனிமலையின் சிறுநுனி மட்டுமே. உண்மை பனிமலைபோல கடலுக்கு உள்ளே ஒளிந்துகொண்டிருக்கிறது. தங்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் விழுங்கித் தீர்க்கும் ஆய்வு மாணவிகள் பலரைப் பற்றி நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. பல்கலைக்கழகமொன்றில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன் என்ற முறையில், இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

சம்பவம் 1:

தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு இளம் ஆய்வு மாணவி வந்திருந்தார். இவரது ஆய்வு வழிகாட்டி பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர். ஒரு விடுமுறை நாளில் என் அறைக்குள் பதற்றத்துடன் நுழைந்த அந்த மாணவி “தலைவலி தாங்கமுடியவில்லை உடனே ஒரு காபி வரவழைக்க முடியுமா?” என்றார். அதேசமயம் வெளியே வழக்கமாக சைக்கிளில் காபி கொண்டுவரும் பையனின் மணிச்சத்தம் கேட்டது. அவன் காபியைக் கொண்டுவந்து அந்தப் பெண்ணின் முன்னால் வைத்து “வணக்கம்மா’” என்றான் பணிவுடன் எட்ட நின்றபடி.

அந்தப் பையன் போனதும் “ஏன் இந்தப் பதற்றம்?” என்று கேட்டேன்.

அந்தப் பெண் தயக்கத்துடன் சொன்னார், “என் துறைத் தலைவர் சற்றுமுன் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் தவறான நோக்கத்துடன் பார்ப்பதும் விரசமாகப் பேசுவதுமாக இருந்தார். நான் அவற்றைப் புறந்தள்ளுவது வழக்கம். இன்று நிலைமை மோசம். என்ன செய்யட்டும் சொல்லுங்கள்” என்றார்.

“துணைவேந்தரிடம் புகார் அளிக்கலாம்” என்று சொன்னேன். பேராசிரியருக்கும், பல்கலைக்கழகத்துக்கும் கெட்ட பெயர் வேண்டாம் என்று அந்தப் பெண் மறுத்துவிட்டார். அதேசமயம், ஆண்கள் என்றாலே வெறுப்பு எனும் நிலைக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.

“இங்கே இருக்கும் எல்லா ஆண்களையுமா வெறுக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“சற்றுமுன் வந்து சென்றானே, அந்த காபி பையன். நான் இங்கு பார்த்தவர்களில் அவன் மட்டும்தான் என்னைத் தவறான நோக்கத்தில் பார்க்கவில்லை. அவன் பார்வையில் மட்டும்தான் ஒரு கண்ணியம் இருக்கிறது” என்றார் அந்த வெளிநாட்டு மாணவி. கடைசியில் அந்தப் பெண்ணின் ஆய்வேடு என்னவாகியிருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை!

சம்பவம் 2:

பொதுவாகவே, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பிரிவு மட்டும் இரவு எட்டு ஒன்பதுவரை பணியில் மூழ்கி இருக்கும். அன்றைக்கு பதிவாளர் அறையில் விளக்கு எரிந்தது. பதிவாளர் பிரிவில் எல்லோரும் போய்விட்டார்கள். ஒரு எழுத்தர் பெண்மணி மட்டும் பதிவாளர் அறைக்குள் கோப்புடன் சென்றார்.

திடீரென்று அந்தப் பெண் என் அறைக்குள் ஓடிவந்து, “சார், எனக்கு பயமா இருக்கு! பதிவாளர் என்கிட்டே தப்பா நடக்க பார்க்கிறார்” என்று சொன்னார்.

பல நாட்கள் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணிடம் தவறான அர்த்தத்தில் பேசியிருக்கிறார் அந்தப் பதிவாளர். சில சமயம் கோப்பில் பணம் வைத்து அனுப்புவாராம். திருப்பிக் கொடுத்தால், ‘உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கோ’ என்று சொல்வாராம். இதையெல்லாம் என்னிடம் சொல்லி அழுதார் அந்தப் பெண். அந்தப் பெண்ணுடன் துணைவேந்தர் அறைக்குச் சென்றேன். பதிவாளர் நடந்துகொண்ட விதம் குறித்து துணைவேந்தரிடம் அந்தப் பெண் சொன்னார். நடந்ததை எல்லாம் பொறுமையாகக் கேட்ட துணைவேந்தர் அந்தப் பெண்மணியை உடனே வீட்டுக்குத் திரும்புமாறு கூறினார்.

பதிவாளரை அழைத்துவருமாறு உதவியாளருக்கு உத்தரவிட்டார். சற்று நேரத்தில், பதிவாளர் கைகளைப் பிசைந்தபடி உள்ளே நுழைந்தார். “ஐயா தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க...”என்றார்.

பத்து நிமிடம்தான் உரையாடல். பதிவாளர் பதவி பறிக்கப்பட்டது. இரவோடு இரவாக வீட்டைக்காலி செய்துவிட்டு வெளியேறினார்.

இந்த அசிங்கங்கள் தமிழகக் கல்வித் துறையில் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தக் கொடுமை இனியும் தொடராமல் இருக்க உறுதியான நடவடிக்கை அவசியம். நிர்மலா தேவியோடு இந்த விஷயம் முடிந்துவிடக் கூடாது. இதன் பின்னணியிலுள்ள ‘பெரிய கைகள்’ அத்தனையும் வெளிக்கொணரப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்!

(கட்டுரை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க

அவரது பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)
மீண்டும் ஆரம்பித்தது செயின் பறிப்புகள்: விரட்டிப்பிடிக்க சிறுவன் நம்முடன் எப்போதும் இருப்பானா? பொதுமக்கள் என்னதான் செய்வது?

Published : 21 Apr 2018 19:22 IST

மு.அப்துல் முத்தலீஃப் சென்னை

 

செயின் பறிப்பு சித்தரிப்பு ப்டம், சிறுவன் சூர்யா- கோப்புப் படம்

சென்னையில் நேற்று ஒரே நாளில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்களால் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் போலீஸோ, துரத்திப்பிடிக்க சூர்யா போன்ற சிறுவர்களோ இருக்க மாட்டார்கள், பொது மக்கள் என்னதான் செய்வது?

சென்னையில் டாக்டர் ஒருவரிடம் செயினைப்பறித்துக் கொண்டு ஓடிய திருடனை சிறுவன் ஒருவன் துரத்திச் சென்று பிடித்த சமபவம் வைரலானது. இதையடுயடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிறுவனை அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இது எப்போதும் நடக்குமா?


எப்போதும் நம் அருகில் சிறுவன் சூர்யாக்கள் இருப்பதில்லை

போலீஸார் அலர்ட்டாக இருப்பதாக தெரிவித்தாலும் செயின் பறிப்பாளர்கள் தங்கள் செயலை செய்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். சென்னை திருமுல்லைவாயில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் செயினைப் பறிக்க மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் முயன்றபோது அந்தப் பெண் செயினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஆனால் செயின் பறிப்பு நபர்கள் வலுவாக இழுத்ததால் அந்த பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதேபோன்று அசோக்நகரில் விஜயலட்சுமி(73) என்ற மூதாட்டியிடம் 9 சவரன் செயினைப் பறித்துக்கொண்டு சென்றனர். அண்ணாநகரில் சதீஷ் என்பவரும் அவரது மனைவியும் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது மற்றொரு வாகனத்தில் வந்த இருவர் சதீஷின் மனைவி அணிந்திருந்த 8 சவரன் காசுமாலையை பறித்துச் சென்றனர்.

மோசமான நிகழ்வுகள்

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பதிலிருந்து அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் துணிச்சலடைந்த செயின் பறிப்பாளர்கள் ஓடும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் பெண்களிடம் செயினை பறிக்கும் அளவுக்கு துணிந்து விட்டனர்.

இவ்வாறு பறிக்கும் போது ஓடும் வாகனத்திலிருந்து விழும் பெண்கள் தலையில் காயம்பட்டு உயிரிழந்த சந்தர்ப்பங்களும், முதுகெலும்பு முறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னையில் எந்த நிலையிலும் பெண்கள் வெளியே வருவது பாதுகாப்பற்ற நிலையோ என்று எண்ணும் அளவுக்கு நிலை மாறி வருகிறது.

வாகனங்களை கண்காணியுங்கள் காவலர்களே

அதிவேக இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் பல முறை பயிற்சி பெற்ற இளைஞர்கள் சாதாரணமாக குடும்பஸ்த்தர் ஒருவர் தன் மனைவியுடன் சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவர்களிடம் செயினை பறிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதில் இளைஞர்களுடன் அவர் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

சென்னையில் அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், டியோ போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களே இந்த செயலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி குறிப்பாக இத்தகைய வாகனங்களை சோதிப்பது போன்றவை செயின் பறிப்பாளர்களை தடுக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

இது ரொம்ப முக்கியம் டிராபிக் காவலரே

குறிப்பாக செயின் பறிப்பவர்கள் திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர், அல்லது பின் பக்கம் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பயன் படுத்துகின்றனர். ஆனால் சென்னையில் சாதாரணமாக செல்லும் பல இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டே இருப்பதில்லை. நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சென்னையில் சாதாரண நிகழ்வாக உள்ளது. செயின் பறிப்பு சில இடங்களில் நடந்தாலும் செல்போன் பறிப்புகள் அதிக அளவில் நடப்பதும் மேற்கூறிய காரணங்களால் என்பது அனைவரும் கூறும் காரணம்.

செயின் பறிப்பு செல்போன் பறிப்பு பொதுமக்களுக்கு போலீஸாரின் யோசனை

செயின் பறிப்போ செல்போன் பறிப்போ தனியான இடங்களில் உள்ளவர்களை தாக்கிப் பறிப்பதை பொதுமக்கள் தவிர்க்க முடியாது. அதிலும் கூட பொதுமக்கள் தனியாக செல்லும் இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி செல்வது நலம் என்கின்றனர் போலீஸார்.

ஆனால் இன்னொரு சம்பவம் சாதாரணமாக சென்னையில் நடக்கிறது. பெரும்பாலான பெண்கள் சாலையில் நடந்துச்செல்லும் போதோ, அல்லது வாகனத்தில் செல்லும் போதோ ஓரளவு சுற்றத்தில் நடப்பதை கவனித்தப்படி செல்ல வேண்டும். கூடியவரை உள்ளுணர்வுடன் சாலையில் செல்லும்போது செயல்பட வேண்டும்.

விழிப்புடன் இருந்தால் தப்பிக்கலாம்

செயின் அல்லது செல்போனை பறிப்பவர்கள் முதலில் நோட்டமிட்ட பின்னர் தான் பறிக்கின்றனர். அவர்கள் நோட்டமிடுவதன் காரணம் எவ்வளவு தூரம் கவனிக்காமல் செல்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்தே செயலில் இறங்குகின்றனர்.

அந்த நேரத்தில் விழிப்புடன் இருப்பவர்களை அவர்கள் நெருங்குவதில்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் அதிக நகை அணிந்திருந்தால் பக்கத்தில் நெருக்கி வரும் வாகன ஓட்டிகளை சற்று முறைத்து பார்த்தாலே அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடமாட்டார்கள் என்கின்றனர். தனியாக வாகனம் ஓட்டிச்செல்லும் பெண்கள் கழுத்தைச்சுற்றி துப்பட்டா போன்று துணையை அணிந்துக் கொண்டால் செயின் பறிப்பாளர்கள் முயற்சி எடுக்க மாட்டார்கள்.

அந்த சில நொடிகளில் அலர்ட்

செயின், செல்போன் பறிப்பவர்கள் ஒரு சில நொடிகளில் தான் தங்களது இலக்கை தீர்மானிக்கிறார்கள், அந்த நேரத்தில் விழிப்புடன் இருக்கும் பெண்களை அவர்கள் புறக்கணித்து வேறு ஆட்களை தேடி செல்கின்றனர். செல்போன்கள் அதிக அளவில் பறிக்கப்படுவது முழுதும் சாலையில் தான் நடக்கிறது.

அதுவும் நின்றுக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் அனிச்சையாக செல்போனை எடுத்து வாட்ஸ் அப் மெசேஜ் போன்றவற்றை பார்ப்பது வழக்கம். அந்த நேரம் சுற்றுபுறத்தை மறந்து செல்போனில் பாரவையை புதைத்திருக்கும் அந்த நபர்களே அவர்களது குறிக்கோள்.

அட்ரஸ் கேட்டால் அதிக கவனமாக இருக்கவும்

பெண்கள் தனியான இடங்களில் செல்லும் போதும், அதிகாலையில் வீட்டு வாசல்முன் கோலம் போடும் போது, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது முகவரி கேட்பது போல் அருகில் வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அட்ரஸ் சொல்லும் நேரத்தில் அருகில் அஜாக்கிரதையாக இருக்கும் நேரம் தான் செயின் செல்போனை பறிக்கும் நேரம் ஆகும்.

தவிர்க்க என்ன செய்ய வேண்டும். வாகனத்தில் இரண்டு பேர் அமர்ந்துக்கொண்டு அட்ரஸ் கேட்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அருகில் செல்லக்கூடாது. அவர்கள் கைக்கெட்டாத தூரம் விலகி நிற்க வேண்டும். அட்ரஸ் சொல்லும் ஆர்வத்தில் கவனத்தை சிதற விடக்கூடாது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை, யாருக்கும் இழப்பில்லை.

செல்போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள்

செல்போன் பறிப்பை தவிர்க்க கூடியவரை தனியாக நடந்துச்செல்லும் போது, பேருந்து நிறுத்தம் சாலையோரம் நிற்கும் போது செல்போனை அவசியமின்றி வெளியே எடுக்காதீர்கள். அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனே பயன்படுத்துங்கள். சாலையோரம் நிற்பவர்களே அதிக அளவில் செல்போனை பறிகொடுத்துள்ளனர்.

மோட்டார் வாகன பில்லியன் ரைடர்களே உஷார்

மோட்டார் வாகனங்களில் பின்பக்கம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் செல்போனை கையில் வைத்து பார்த்துகொண்டே செல்வார்கள். இவர்கள் தான் செல்போன் பறிப்பாளர்களின் இலக்கு. சமீபத்தில் கோட்டூர்புரம் மூப்பனார் பாலம் செல்லும் சாலையில் ஆண் நண்பர் ஒருவருடன் பின்னால் அமர்ந்து சென்ற சென்ற இளம்பெண் கையில் செல்போனை வைத்து மெசேஜை பார்த்தப்படி செல்ல சரியாக மூப்பனார் பாலம் நெருங்கும் இடத்தில் அந்தப் பெண்ணிடம் செல்போனை பறித்த மோட்டார் சைக்கிள் நபர்கள் பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டி வேகமாக சென்றுவிட்டனர்.

இவர்கள் பாலத்தின் கீழ் சாலையில் சென்றதால் உடனடியாக அவர்களை பிடிக்க முடியவில்லை. விலை உயர்ந்த செல்போன் ஒரு நொடி அலட்சியத்தால் பறிபோனது. இதைத் தவிர்ப்பது நம் கடமை. செல்போன் சாலையில் செல்லும் போது அவசியமான நேரத்தில் மட்டுமே தேவை ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு எப்போதும் அவசியம்

போலீஸார் எப்போதும் நமக்காக பாதுகாப்பு கொடுக்க வர முடியாது, சூர்யா போன்ற சிறுவர்களும் திருடர்களை துரத்திப்பிடிக்க எப்போதும் எங்கும் இருக்க மாட்டார்கள். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும். சாலையில் பயணம் செய்வது சில மணி நேரம் தான் ஆனால் அலட்சியம், அஜாக்கிரதை காரணமாக வாழ்நாள் சேமிப்பையே இழக்கிறோம். ஆகவே சாலையில், பேருந்து நிறுத்ததில் நிற்கும் போது கவனமாக இருப்போம்.
சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு, டீக்கடை நடத்தி ‘ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் இளம் தம்பதி’

Published : 21 Apr 2018 19:10 IST
 
ஐஏஎன்எஸ் நாக்பூர்



நிதினின் தேநீர் கடை “சாய் வில்லா” : கோப்புப்படம்

சாப்ட்வேர் வேலையை உதறிய இளம் கணவர், மனைவி டீக்கடை தொடங்கி ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் சம்பாதித்து வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த நிதின் வி. பியானி(வயது36), அவரின் மனைவி பூஜா(34) ஆகியோர் சாப்ட்வேர் பணியை ராஜினாமா செய்து டீக்கடை தொடங்கி நடத்தி வருகின்றனர்.


தங்களின் குடும்பத்தினர் ஆலோசனைகள், அறிவுரைகள்படி தரமான மூலப் பொருட்களை வாங்கி டீக்கடை நடத்தத் தொடங்கி இப்போது அவர்கள் இருவருக்கும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

சாப்ட்வேர் தொழிலில் மாதம் சம்பாதித்தைக் காட்டிலும் இருவரும் அதிகமாக சம்பாதிப்பதாகவும், மனநிறைவுடன் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாக்பூரின் பரபரப்பு மிகுந்த தரோத்கர் ஸ்கொயர் பகுதியில் கடையைத் தொடங்கி அனைத்து வாடிக்கையாளர்களையும் இருவரும் ஈர்த்து வருகின்றனர்.

இது குறித்து நிதின் நிருபர்களிடம் கூறியதாவது:

நானும், என் மனைவி பூஜாவும் மிகப்பெரிய, புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருந்தோம். அதில் பணியாற்றுவதும், கிடைக்கும் வருமானமும் எங்களுக்கு நிம்மதியைத் தரவில்லை.

ஆதலால், எங்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், மற்றவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் டீக்கடை தொடங்க முடிவு செய்தோம். மிகுந்த சுவையான, சத்தான, தரமான டீயை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்தோம்.

பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ததிதல் தரத்தில் மோசமாகவும், சுவையில்லாமலும் டீ கிடைப்பதை கண்டோம். அதைத்தான் வாடிக்கையாளர்கள் வேறுவழியில்லாமல் குடித்து வருகிறார்கள். அதேசமயம், தரமான, சுவையான டீ கிடைத்தால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று எண்ணினோம்.

இதற்கு ஏற்றார்போல், ஏறக்குறை. 4 மாதங்கள் கள ஆய்வு செய்தோம். மக்களுக்கு என்ன விதமான டீ விரும்புகிறார்கள், எப்படி சுவை இருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை தெரிந்து கொண்டோம். நாள் ஒன்றுக்கு ஒருவர் குறைந்தபட்சம் இருமுறையேனும் டீ அருந்துகிறார்கள். ஆதலால், தரமான தேநீருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்பினோம்.

சூடான, சுவையான, தரமான தேயிலை மிகக்குறைந்த செலவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவுசெய்தோம். அதற்கான ஏற்பாடுகளாக தேயிலை,சர்க்கரை, பால், மசாலா உள்ளிட்ட பொருட்களை உரிய இடத்தில் தரமானதாக வாங்கினோம்.

ஆரஞ்சு நகரம் எனச் சொல்லப்படும் நாக்பூரில் கடந்த நவம்பர் மாதத்தில் கடையைத் தொடங்கினோம். நாங்கள் கடை தொடங்கிய இடம் மிகப்பெரிய அதிகாரிகள், பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வந்து செல்லக்கூடிய இடம். அவர்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு சுவைகளில், சூடான டீயும், ஐஸ்டீ என 20வகைகளில் தயாரித்து வழங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 1.75 லட்சம் கோப்பை தேநீர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 30 சதவீத லாபத்துடன் இதுவரை ரூ.15லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம்வரை சம்பாதிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் எங்களிடம் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறைந்தபட்சம் 5 டீக்களுக்கு அதிகமாக, அல்லது ரூ.100க்கு அதிகமாக ஆர்டர் செய்பவர்களுக்கு இருப்பிடத்துக்கே சென்று தேநீர் சப்ளை செய்கிறோம்.

சுவையான, தரமான தேநீர் உரிய நேரத்தில் கிடைக்கிறது என்பதால், எங்கள் கடையில் இருந்து நாள்தோறும் ஒரு சில நிறுவனங்களுக்கு தேநீர்சப்ளை செய்து வருகிறோம். சாதாரண கடைகளின் விலைகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் தேநீர் விலையும் ரூ.8 முதல் ரூ.20 வரைதான் விற்பனை செய்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றார்போல், பேப்பர் கிளாஸ், பீங்கான் கோப்பை, களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பை ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். அமைதியான, சுகாதாராமான சூழலில் கடை நடத்துகிறோம். எங்களின் கடையின் கிளைகளை திறக்க பலர் ஆர்வத்துடன் கேட்டு இருக்கிறார்கள். விரைவில் விரிவுபடுத்துவோம்

இவ்வாறு நிதின் தெரிவித்தார்.

NEWS TODAY 29.06.2026