Monday, May 21, 2018

வைகாசி விசாக திருவிழா பழநியில் நாளை துவக்கம்

Added : மே 21, 2018 01:06


பழநி : பழநியில், வைகாசி விசாகத் திருவிழா, நாளை துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது.

வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும், வைகாசி விசாகத் திருவிழா, பழநி, பெரியநாயகியம்மன் கோவிலில், நாளை காலையில், கொடியேற்றத்துடன் துவங்கி, மே31வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாள், மே, 27 இரவு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏழாம் நாள், மே, 28ல் வைகாசி விசாகத்தன்று, மலைக்கோவில் சன்னதி, அதிகாலை 4:௦௦ மணிக்கு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோவில் நான்குரத வீதிகளில், மாலை, 4.30 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.
ரமலான் சிந்தனைகள்-5

Added : மே 21, 2018 02:04



அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, அவரிடம் சொன்ன போது, “அவன் நல்லவனில்லை, இருந்தாலும் உள்ளே வரச்சொல்லுங்கள்,” என்றார். வந்தவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நாயகம்,“இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,” என்றார்.

ஒருசமயம் நாயகம், தன் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவரது செவிலித்தாய்ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம் தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அவரை அமரச்செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, எழுந்து நின்று, தன் இடத்தைக் கொடுத்தார். இதில் இருந்து அவரது கனிவான உபசரிப்பை உணரலாம். நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் அனைவரிடமும் அன்பு காட்டுவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4.17 மணி
எடியூரப்பா பதவியேற்றது சரியான முடிவல்ல: ரஜினி 
 


dinamalar 21.05.2018




சென்னை:''கர்நாடகாவில், குமாரசாமி பதவியேற்பது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா பதவியேற்றது சரியான முடிவு அல்ல,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

மாவட்டச் செயலர்கள், இளைஞர் அணியை தொடர்ந்து, நடிகர் ரஜினி, நேற்று, தன் போயஸ் கார்டன் இல்லத்தில், மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தினார்.பின், ரஜினி கூறியதாவது: ரஜினி மக்கள் மன்றத்திற்கு, பெண்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. பெண்கள் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்.

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தநாடுகள், முன்னேறி வருகின்றன. நான் துவங்கப் போகும் கட்சியிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.எனக்கு, 150 தொகுதியில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி, உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

கட்சி துவங்கிய பின்னரே, கூட்டணி விஷயங்கள் குறித்து கூற முடியும். லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியைதயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

கர்நாடகாவில், குமாரசாமி பதவியேற்பது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா பதவியேற்றது, சரியான முடிவு அல்ல. இவ் விவகாரத்தை, சிறப்பாக கையாண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்.



கர்நாடகாவில் அமைய உள்ள அரசு, காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி செயல்பட வேண்டும். அணையின் கட்டுப்பாடு, கர்நாடகாவிடம் இருப்பது சரி அல்ல; ஆணையத்திடம் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Added : மே 21, 2018 05:25



சென்னை : பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று(மே 21) பிற்பகலில், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
மாவட்ட செய்திகள்

கோடை விடுமுறை காரணமாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது




ஏற்காட்டில் கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மே 21, 2018, 05:00 AM
ஏற்காடு,

கோடை விடுமுறை காரணமாக ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு இல்லத்தில் ஒரேநாளில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வசூல் ஆனது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமானதால் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். எங்கு பார்த்தாலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒண்டிக்கடை முதல் பஸ்நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது போல் நின்றன. இந்த இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடந்து செல்ல சுமார் 4 மணிநேரம் ஆனது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இரவு 7 மணியளவில் தான் போக்குவரத்து சீரானது. அப்போதும் வாகனங்கள் ஊர்ந்து செல்வது போல் அந்த இடத்தை கடந்து சென்றன.

சேலம், நாமக்கல், கோவை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினார்கள். இதனால் படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் படகில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர். நேற்று ஒரேநாளில் படகு இல்லத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வசூல் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்காட்டில் நேற்று மாலையில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது சுற்றிப்பார்த்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்காடு பஸ்நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கார், வேன்களை வாடகைக்கு அமர்த்தி பயணிகள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.
மாவட்ட செய்திகள்

வார்தா புயலின் போது சேதம்: தாம்பரம் பஸ் நிலைய மேற்கூரைகளை சீரமைப்பதில் தாமதம்




வார்தா புயலின் போது சேதமடைந்த தாம்பரம் பஸ் நிலையத்தின் மேற்கூரைகளை சீரமைக்காமல் நகராட்சி ஊழியர்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வெயிலில் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மே 21, 2018, 05:48 AM
தாம்பரம்,

சென்னையின் நுழைவு வாயிலாக தாம்பரம் உள்ளது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இதனால் தாம்பரம் பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும்.

இந்த நிலையில் வார்தா புயலின் போது தாம்பரம் பஸ் நிலையத்தின் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தன. மேற்கூரையின் மீது இருந்த சிமெண்டு ஓடுகள் பல பெயர்ந்து விழுந்தன. மின் விளக்குகளும் சேதமடைந்தன. இதையடுத்து, தாம்பரம் பஸ் நிலையத்தில் மின் விளக்குகளை சீரமைத்த தாம்பரம் நகராட்சி, மேற்கூரைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

இதற்கிடையில், மேற்கூரையில் எஞ்சியிருந்த சில ஓடுகளும் அவ்வப்போது பலத்த காற்று வீசும்போது பெயர்ந்து கீழே விழுந்தன. இதனால் பயணிகள் கடும் அச்சத்துடனே பஸ் நிலையத்திற்கு வந்து, செல்லும் நிலை உருவானது. எனவே மேற்கூரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பழுதடைந்த சிமெண்டு ஓடுகளை மாற்றிவிட்டு, புதிய ஓடுகளை பதிப்பதாக கூறி, மேற்கூரையின் மீது இருந்து அனைத்து ஓடுகளையும் தாம்பரம் நகராட்சி அகற்றியது.

ஆனால் அதன் பின்னர் எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் பஸ் நிலையத்துக்கு வரும் மக்கள் வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேற்கூரைகளை சீரமைத்தால் மட்டுமே பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை முழு வீச்சில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது.

தாம்பரம் பஸ் நிலையத்தில் மேற்கூரைகளின் மீது இருந்த பல ஓடுகள் கீழே விழும் நிலையில் இருந்ததால் அவை அகற்றப்பட்டன. இங்கு புதிதாக மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளன.

பஸ் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் இரவில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

இனி சகோதரத்துவம் தழைக்கட்டும்





காவிரி நீர் பிரச்சினை என்பது கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இப்போது ஏற்பட்டதல்ல. சென்னை மாகாணம், மைசூரு மாகாணம் என்று இருந்த காலக்கட்டத்தில் அதாவது, 1807–ம் ஆண்டிற்கு முன்பே இருந்து வந்தது.

மே 21 2018, 03:00

காவிரி நீர் பிரச்சினை என்பது கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இப்போது ஏற்பட்டதல்ல. சென்னை மாகாணம், மைசூரு மாகாணம் என்று இருந்த காலக்கட்டத்தில் அதாவது, 1807–ம் ஆண்டிற்கு முன்பே இருந்து வந்தது. காவிரியில் அணைக்கட்ட இரு மாநிலங்களும் திட்டமிட்ட நேரத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இரு மாகாண நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் தொடர்ச்சியாக 18–2–1892 அன்று ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுதான் காவிரி நீர் பிரச்சினைக்கு போடப்பட்ட முதல் ஒப்பந்தம். தொடர்ந்து 1924–ல் இரண்டாம் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்பு 1990–ம் ஆண்டு நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு, 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந் தேதி நடுவர்மன்றம் தீர்ப்பை வழங்கியது. ஆனால் நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக தாமதப்படுத்தியது.

2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29–ந் தேதிதான் நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் கர்நாடக மாநிலம் நடுவர்மன்ற தீர்ப்பை நிறைவேற்றவில்லை. அப்போதிலிருந்தே சகோதர மாநிலங்களான கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருந்துவந்தன. சுப்ரீம் கோர்ட்டின் கதவுகள் தட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் சில திருத்தங்களை செய்து, அதன் தொடர்ச்சியாக ஒரு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இதன்படி, 10 உறுப்பினர்களைக் கொண்ட ‘‘காவிரி மேலாண்மை ஆணையம்’’ அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் தலைமையகம் டெல்லியில் இருக்கும். காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவில் அமைக்கப்படும். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளில் ஏதேனும் ஒன்று ஆணையத்தின் உத்தரவுக்கு உட்படவில்லையெனில் ஆணையம், மத்திய அரசின் உதவியை நாடலாம். இந்த ஆணையம் தொடர்பாக இதுதான் இறுதி தீர்ப்பு. இனிமேல் வேறெந்த வழக்கும் தொடரமுடியாது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, மத்திய அரசாங்கம் இந்த வரைவு செயல்திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு, ஆணையத்தை தொடங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆக, அடுத்த 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் இந்த தீர்ப்பு நிறையோ, குறையோ, 4 மாநிலங்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டிற்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், வழக்கமாக ஜூன் 1–ந் தேதியோ அல்லது தாமதமாகவோ தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு மே 29–ந் தேதியே தொடங்குகிறது என்பதுதான். ஆக, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, இந்த மாதம் 29–ந் தேதிக்குள் மத்திய அரசாங்கம் இந்த வரைவு செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட வேண்டும். இவ்வளவு நாட்களும் இந்த மாநிலங்களிடையே காவிரி பிரச்சினையால் இருந்த கசப்புணர்வு போகட்டும். இனிமேல் ‘காவிரி அன்னையின் மடியிலுள்ள கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மக்களிடையே சகோதரத்துவம் தழைக்கட்டும்.

NEWS TODAY 25.07.2026