Saturday, August 11, 2018

268 மருத்துவ, 'சீட்' இன்று, 'கவுன்சிலிங்'

Added : ஆக 11, 2018 00:44

சென்னை:இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், 268 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இன்று நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 4,699 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7 வரை நடந்தது; அனைத்து இடங்களும் நிரம்பின.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று முதல், 13 வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதில், எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்து, கல்லுாரிகளில் சேராதவர்களின், 241 இடங்கள், பி.டி.எஸ்., படிப்பில் சேராதவர்கள், 27 என, மொத்தம், 268 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இது குறித்து, மருத்துவ தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியவது:அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 98 இடங்கள்; அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் சேராத, 30 இடங்கள்; தனியார் கல்லுாரிகளில் சேராத, 113 இடங்கள்; அரசு பல் மருத்துவ கல்லுாரியின், 27 என, 268 இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மேலும், இடங்களை பெற்று கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், காலியாக இருக்கும் கல்லுாரிகளில் சேர விரும்பினாலும், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பி.ஆர்க்., படிப்பில் 900 இடங்கள் காலி

Added : ஆக 10, 2018 23:32


சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, கட்டடவியல் படிப்புக்கான கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது.

இதற்கு, 1,604 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1,408 பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்; 1,122 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 2,000 இடங்களில், 900 இடங்கள் காலியாக உள்ளன. பி.ஆர்க்., படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களில், 'நாட்டா' என்ற, தேசிய நுழைவு தேர்வு எழுதாதவர்களுக்கு, அரசின் சார்பில், தனி நுழைவு தேர்வு இன்று நடத்தப்படுகிறது.

மீண்டும் தூசி தட்டப்படும் ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதிக்கு சிக்கல்

Added : ஆக 11, 2018 06:44



புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதி, ராஜேஷ், நுபுர் தல்வார். 2008ல், தங்கள், 14 வயது மகள், ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜும், ரகசிய உறவு வைத்திருந்ததாக, ராஜேஷ், நுபுர் தல்வார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 2008, மே மாதம், தன் வீட்டு அறையில், ஆருஷி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்;
அந்த வீட்டு மொட்டை மாடியில், ஹேம்ராஜ் இறந்து கிடந்தார்.இந்த வழக்கை, உ.பி., போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்ததால், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2013ல், ராஜேஷ் மற்றும் நுபுருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருவரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். 2017ல், ராஜேஷ், நுபுர் தல்வாரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, ஹேம்ராஜின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில், ராஜேஷ், நுபுர் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ.,யும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.'ஹேம்ராஜ் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவுடன், சி.பி.ஐ.,யின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, நீதிபதி, ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்
தேசிய செய்திகள்

2 முறைக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு?




பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 04:45 AM

புதுடெல்லி,

‘நீட்’ தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.

பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த இருமுறை வாய்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சகம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நீட் தேர்வை இருமுறை நடத்துவதால், இந்த தேர்வு கால அட்டவணை மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் சுகாதார அமைச்சகம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வை ஆண்டுக்கு இருமுறை என்பதற்கு பதிலாக ஒருமுறையே நடத்துவது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட செய்திகள்

3 கி.மீ. தூரத்துக்கு செல்லலாம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டாக்சி, ஷேர்–ஆட்டோ சேவை




குறிப்பிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. தூரம் உள்ள பகுதிகளுக்கு டாக்சி, ஷேர்–ஆட்டோ சேவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 04:30 AM
சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில் ஷேர்–ஆட்டோ மற்றும் டாக்சி சேவை 11–ந்தேதி (இன்று) முதல் தொடங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்த சேவைகள் 6 மாத காலத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, சின்னமலை, நந்தனம், திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் டவர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் ஷேர்–ஆட்டோ சேவைகள் இயக்குவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேபோல கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏஜி–டி.எம்.எஸ். மற்றும் வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டாக்சி சேவை இயக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து, ஷேர்–ஆட்டோ மற்றும் டாக்சி சேவை 3 கி.மீ. தூரத்திலான சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இயக்கப்படும்.

ஷேர்–ஆட்டோவில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.10–ம், டாக்சி சேவைக்கு ரூ.15–ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வி.ஆர்.மால், பாடி மேம்பாலம், சரவணா ஸ்டோர்ஸ், திருமங்கலம் வரையிலும், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தாமரை ஐ.டி.பார்க், ‘சிபெட்’ தலைமை அலுவலகம், கிண்டி பஸ் நிறுத்தம் வரையிலும், அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிலான பகுதிக்கும் டாக்சி சேவை இயக்கப்படும்.

இதேபோல ஏஜி–டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை, போஸ்ச் அலுவலகம், செம்மொழி பூங்கா வரையிலும், வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சிம்ஸ் ஆஸ்பத்திரி, முருகன் கோவில், மேனகா கார்ட்ஸ் வரையிலும் இயக்கப்படும்.

அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பு, செக்டர்–9, 10, ஆர்.டி.ஓ. மைதானம், செக்டர்–12, அண்ணாநகர் சாலை வரையிலும், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பட் சாலை, சென்னை வர்த்தக மையம், மியாட் ஆஸ்பத்திரி, செயின்ட் பாட்ரிக்ஸ் தேவாலயம் வரையிலும், ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி பஸ் நிலையம், திரு.வி.க.நகர் தொழிற்பேட்டை வரையிலும் ஷேர்–ஆட்டோ சேவை இயக்கப்படும்.

கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, விஜயநகர் சந்திப்பு, வேளச்சேரி வரையிலும், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பாடிகுப்பம், முகப்பேர் தொழிற்பேட்டை, ஜே.ஜே.நகர், முகப்பேர் மேற்கு, எம்.ஜி.ஆர். கல்லூரி, டேனியல் தாமஸ் பள்ளி வரையிலும், பரங்கிமலையில் இருந்து மேடவாக்கம் மெயின்ரோடு, ஐ.ஆர்.ஆர். வரையிலும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிலான தூரத்துக்கும் ஷேர்–ஆட்டோ சேவை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு




ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டதாக, தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 05:30 AM

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014–ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016–ம் ஆண்டு கடிதம் எழுதியது. இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 23–ந் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 பேரையும் விடுவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16–ந் தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட மனுவை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16–ந் தேதி பரிசீலிக்க மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறி, அந்த ஆணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அத்துடன் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார். முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
தேசிய செய்திகள்

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ள சேதம்





கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 05:45 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை பார்வையிடுகிறார்.

இடுக்கி,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3-வது மதகில் மட்டும் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீதமுள்ள 4 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் 5 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன.

மூணாறை அடுத்த பள்ளிவாசல் என்ற மலைப்பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. பலத்த மழையால் இந்த விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த விடுதிக்கு செல்லும் பாதை மண்ணால் மூடியது. அங்கு தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 61 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

இதையடுத்து மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள சுற்றுலா துறை அறிவுறுத்தி உள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் இன்று (சனிக்கிழமை) இடுக்கி வர உள்ளனர். அவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

கொச்சி சர்வதேச விமான நிலைய பகுதியில் தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் இல்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். மேலும் இன்று (சனிக்கிழமை) மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட உள்ளார்.

ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்டு வருவது திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

கேரள கவர்னர் சதாசிவம், சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார். மேலும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

இதேபோல் மக்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், நிவாரண பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கவர்னர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணன்தானம், மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள், வெள்ளத்தால் கேரள மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசு நிவாரண நிதியை உடனடியாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், ‘கேரள மாநில வெள்ள பாதிப்புக்கு உதவ மத்திய அரசு அனைத்துவிதத்திலும் தயாராக உள்ளது’ என்றார். மேலும் வெள்ள பாதிப்பை பார்வையிட தான், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கேரளா செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தார். அப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார்.

NEWS TODAY 27.06.2026