Thursday, October 3, 2019

மழைக்காலத்தில் படையெடுக்கும் பாம்புகள்: குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க என்ன செய்யலாம்?



மதுரை

மதுரையில் மழைக்காலம் தொடங்கியதால் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத்தொடங்கியுள்ளன. மதுரை மட்டுமல்ல பொதுவாக எல்லா இடங்களிலுமே இச்சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்கிவதனால், அருகில் உள்ள முட் புதர்கள், வயல் வெளிகள், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன.

அச்சமடையும் மக்கள், ஆட்களை அழைத்து அந்த பாம்புகளை அடித்துக் கொல்லுகின்றனர். மிக சிலரே, அடிக்காமல் அதை விரட்டிவிடுகின்றனர். தெரியாமல் மிதித்துவிடுவதால் பாம்புகள் கடிப்பதால் உயிரிழப்பும் மதுரையில் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து மதுரை ஊர்வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கியதும் பாம்புகள் போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிக்கு படையெடுப்பது இயல்பே. அதற்கு சில காரணங்கள் உண்டு. மழை நீரால் பாம்பின் வாழ்விடமான வலைகள்(பொந்துகள்), வற்றிய நீர்நிலைகள் நீரால் மூழ்கிவிடுகின்றன.

மனிதர்கள் வாழும் வீட்டின் கத கதப்பான சூழல் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது. மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலம் என்பதாலும் அவை வெளியே நடமாடத்தொடங்குகின்றன.

கதகதப்பான தார் சாலை குளிர் ரத்த விலங்குகளுக்கு உடல் வெப்பத்தை சீராக்க உதவுவதாலும் அவை வாழ்விடத்தை வெளியேறுகின்றன. எல்லா பாம்பும் நஞ்சுள்ள பாம்புகள் அல்ல. நல்லபாம்பு, கட்டுவிரியன், விரியன், சுறுட்டைவிரியன் ஆகிய நான்கு பாம்புகள் மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்குக் காரணமாகிறது.

இவற்றிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால்போதும். பாம்பு கடித்தவுடன் பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக்கு ஒரு நபரையோ அல்லது 108 அவசர ஊர்தி அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமன செல்ல வேண்டும்.

இருக்க கயிறு கட்டுதல் வேண்டாம். கத்தியால் வெட்டி, உறிஞ்ச வேண்டாம். தனியார் மருத்துவமனை அல்லது வேறு வகை வைத்தியம் கால தாமதம் ஏற்படும். பாம்பு க்கடிக்கு நஞ்சு முறிவு மருந்து (ANTI SNAKE VENOM) சரியான நேரத்தில் கொடுக்கப்பட உயிர் பிழைத்து கொள்ளலாம்.

பாம்பைக் கண்டவுடன் அதை கொல்ல முற்படாமல் வனத்துறைக்கு (0452 2536279) அல்லது உங்கள் அருகில் உள்ள பாம்பு மீட்பாளர் உதவியை நாடலாம்" என்றார்.

பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

வீட்டைச் சுற்றி துய்மையாக வைத்துக் கொள்ளவும். பழைய பொருட்கள் அடசலாக வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்கள் சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு, மெத்தை அடியில் சோதனை இட வேண்டும். தூங்கும் அறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயிற் கதவின் கீழ் அல்லது பக்கவாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைக்க வேண்டும். கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

காலணிகளை பொதுவாக ஷு (shoe) தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். நன்கு சோதித்த பின்பு அணிய வேண்டும்.

வாகனத்தை குறிப்பாக கைப்பிடி, முன் பகுதி நன்கு சோதனை செய்து பின் இயக்குவது நல்லது.

குப்பைகள் மற்றும் எலிகளை வீட்டுக்குள்ளும், வீட்டின் சுற்றுப் பகுதியில் இல்லாமல் பார்த்து கொள்வது. இரவில் டார்ச் விளக்கு இல்லாமல் வெளியில் செல்வது கூடாது. தோட்டத்து வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தை நன்கு சோதனை இட வேண்டும், சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு தனது ஊதியத்திலிருந்து மாதம் ரூ. 10 ஆயிரம் தர முன் வந்த உதவிமேலாளர்



செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி

குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் புதுச்சேரியில் பாண்லேயில் பணிபுரிந்து வருவதால் தனது ஊதியத்தில் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரத்தை இவர்களுக்கு வழங்குவதாக உதவி மேலாளர் கிருஷ்ணராஜு தனது உயர் அதிகாரிக்கு கடிதம் தந்துள்ளார்.

புதுச்சேரியில் பாண்லே நிறுவனம் மூலம் அரசு பாக்கெட் பால் விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்டவையும் விற்பனையாகிறது. இந்நிலையில் இன்று காலை பாண்லே உதவி மேலாளர் கிருஷ்ணராஜு பாண்லே மேலாண் இயக்குநருக்கு கடிதம் தந்துள்ளார்

அதில், நமது பாண்லே அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 130 குறைந்த ஊதியம் தந்து அதிக பணி வாங்குகிறோம். இதனால் அதிகாரி என்ற முறையில் அதிக மன வருத்தம் ஏற்படுத்துகிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப ஊதியம் தர வேண்டும். அது வரை எனது ஊதியத்தில் இருந்து ரூ. 10 ஆயிரம் பிடித்தம் செய்து இவ்வூழியர்களுக்கு பகிர்ந்து தர முழு சம்மதம் தருகிறேன். அவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு உதவினாலும் என் மனதுக்கு மகிழ்ச்சியே. எனது கோரிக்கை ஏற்று இதை அமல்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

இவ்விவரம் பாண்லே முழுக்க பரவ தொடங்கியது. பலரும் இவ்விஷயத்தை பகிரத்தொடங்கினர்.

இக்கடிதம் தொடர்பாக கிருஷ்ணராஜுவிடம் கேட்டதற்கு, "இன்று காலை கடிதம் தந்தேன். பல ஆண்டுகளாக எனது பிரிவிலேயே 250க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பால் பாக்கெட் பிரிவு, ஐஸ்கிரீம் பிரிவு, விற்பனை பிரிவு ஆகியவற்றில் பணிபுரிகின்றனர். அதிக பணி இருந்தாலும் ரூ. 130 மட்டுமே ஊதியம் கிடைக்கும். அது எனக்கு வருத்தத்தை தந்தது. அதனால் எனது ஊதியத்திலிருந்து தொகை தர முடிவு எடுத்து கடிதம் தந்தேன்" என்று குறிப்பிட்டார்.
தலைக்கவசம் இல்லையா...? விருதுநகருக்கு போக முடியாது- இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு போலீஸார் அறிவுரை



விருதுநகர்

தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநர்களை விருது நகருக்குள் செல்ல அனுமதிக் காமல் போலீஸார் திருப்பி அனுப் பினர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனங்களை ஓட்டு பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதை வலியுறுத்தி போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகரில் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, போலீஸ் பாலம், அரசு தலைமை மருத்துவமனை, பி.ஆர்.சி. பாலம், கவுசிகா பாலம், அல்லம்பட்டி முக்கு சாலை, சிவகாசி சாலை ஜங்ஷன், ரயில்வே பீடர் சாலை ஆகிய இடங்களில் நேற்று காலை சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டன.இங்கிருந்த போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸார் தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டுநர்களை மட்டுமே விருதுநகருக்குள் செல்ல வும், விருதுநகரில் இருந்து வெளியே செல்லவும் அனுமதித் தனர். தலைக்கவசம் அணியாமல் ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை போலீஸார் எடுத்துக் கூறி அனுமதி மறுத்தனர். இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோவன், போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் மரியஅருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெகிழ வைத்த அருண் ஜேட்லி குடும்பத்தினர்: ஓய்வூதியம் வேண்டாம் என மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம்


மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி : கோப்புப்படம்

புதுடெல்லி

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் ஓய்வூதியத்தைத் தங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக மாநிலங்களவையில் குறைவாக ஊதியம் பெறும் 4-ம் நிலை பணியாளர்களுக்கு வழங்குங்கள் என குடியரசு துணைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை நிலுவையில் இருக்கும் அனைத்து தொகையையும் மாநிலங்களவையில் 4-ம் நிலை பணியாளர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று அருண் ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் எம்ய்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏழைகளுக்கும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதிகமாக உதவும் எண்ணம் கொண்டவர். தனது துறையில் பணியாற்றும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அவரே செலுத்திவிடுவார். மேலும் பண்டிகை, விழாக் காலங்களில் அவர்களுக்குப் புத்தாடை, இனிப்புகள், பரிசுகள் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவார்.



பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்தபோது, தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியை அருண் ஜேட்லி தவிர்த்தார். பிரதமர் மோடி வந்து சமாதானம் செய்தபோதிலும் தனது உடல்நலத்தால் ஏற்க முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் கிருஷ்ணா மேனன் மார்க் என்ற அரசுக் குடியிருப்பில் இருந்து காலி செய்து, தெற்கு டெல்லியில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு ஜேட்லி குடிபெயர்ந்தார்.

மத்திய அமைச்சராக ஜேட்லி இருந்தபோதிலும் கூட மிகப்பெரிய அரசு குடியிருப்பில் வாழ அருண் ஜேட்லி விரும்பாமல், சாதாரண வீட்டிலேயேதான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் மனிதநேயம் மிக்க தலைவராகவும், அதிகமான உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் அருண் ஜேட்லியை பெருமையாக மூத்த தலைவர்கள் கூறுவார்கள்.

மறைந்த அருண் ஜேட்லி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததால், அவர் மறைவுக்குப் பின் அவரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.1500 என வழங்கப்படும். இதுதவிர கடந்த 1999-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்ததால், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.22,500 என மாதம் ரூ.50 ஆயிரமும், ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.

இந்நிலையில், அருண் ஜேட்லிக்கு கிடைக்கும் மாத ஓய்வூதியத் தொகையை மாநிலங்களவையில் 4-ம் நிலையில் பணியாற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்குங்கள் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அருண் ஜேட்லி குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியோர் இல்லங்களை மூட...

By ப. இசக்கி | Published on : 01st October 2019 03:38 AM

உலக முதியோர் விழிப்புணர்வு தினம் இன்று (அக்.1) கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்திலும், தமிழகத்திலும் ஆண்டுக்கு ஆண்டு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் தற்போது சுமார் 600 முதியோர் இல்லங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சரியான கணக்கு இல்லை என்றாலும்கூட, அதைவிட அதிகம் என்கின்றனர்; இவற்றில் பதிவு பெற்றவை 100-க்கும் குறைவு.
மத்திய அரசின் முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு நாடு முழுவதும் முதியோர் இல்லங்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களில் தமிழகத்திலிருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் பெறப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்றைய சூழ்நிலையில் முதியோரை எவரும் வீடுகளில் வைத்துப் பராமரிக்க விரும்புவதில்லை என்பதால், முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. 


முதியோரை வீட்டில் வைத்துப் பராமரிப்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் அதில் சவால்கள் அதிகம். முதியோர்களின் வயது, அனுபவம், வாழ்வில் அவர்கள் பெற்ற வெற்றி, தோல்வி முதலானவை பிள்ளைகளைவிட அதிகம் இருக்கலாம். ஆனாலும், அந்த அனுபவ அறிவைப் பயன்படுத்திக் கொள்ள இன்றைய இளைய தலைமுறையினர் தயாராக இல்லை. எனவே, குடும்பத்தில் ஒரு பாரமாகவே முதியோர் கருதப்படுகின்றனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் பாரமாகக் கருதாமல் இருக்க, இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியல் சூழ்நிலைகளை முதியோரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வயதான பெற்றோரை ஒப்பிடும்போது பிள்ளைகள் வயதிலும், அனுபவத்திலும் குறைவுள்ளவர்களே. எனவே, தங்களைப் போன்றே பிள்ளைகளும் எல்லாவற்றிலும் மிடுக்காக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது. தங்களது இளமைக் காலத்தில் நிறைவேற்றிய அனைத்துப் பணிகளையும் தொடர்ந்து முதியோர் செய்ய முற்படுவதோ அல்லது பிள்ளைகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ சாத்தியம் இல்லை. 

குடும்பத்துக்காக உழைக்கும் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு சில ஆலோசனைகளைக் கூறலாமே தவிர தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ, நிர்ப்பந்திப்பதோ இருவருக்குமிடையே மனக் கசப்பைத்தான் உண்டாக்கும். பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறுவதோடு அவர்களது நல்ல செயல்களை ஆதரிப்பது நல்லுறவுக்கு வழிவகுக்கும்.
அதேபோல், பெற்றோரைக் கடிந்து கொள்வதை பிள்ளைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பணி செய்யும் இடத்திலோ அல்லது வேறு இடங்களிலோ ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் கோபத்தை இயலாமையில் இருக்கும் முதியோர் மீது வாரிசுகள் காட்டுவது தவறு. 

மேலும், முதியோரிடம் பேசும்போது சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அவர்கள் பேசுவதைத் தடை செய்வதோ, வெடுக்கென்று பேசி வாயை அடைக்க முயற்சிப்பதோ தகாத செயல். அப்படியே பேசிவிட்டாலும் அதற்காக உடனடியாக மன்னிப்புக் கேட்டு விடுவது சிறப்பு. பெற்றோரிடத்தில் மன்னிப்புக் கேட்பதில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை. அவர்களது மனம் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை.

முதியோர் மீது எரிச்சல் அடையக் கூடாது. அவர்களது சொல், செயலில் தெளிவின்மை இருக்கலாம். பல் போனால் சொல் போச்சு. உடல் தளர்ந்தால் செயலும் தவறும். எனவே, அவர்கள் பேசும்போதோ அல்லது ஏதேனும் செயலைச் செய்யும்போதோ அதில் தவறு ஏற்படலாம். அதை அமைதியாகவும், மென்மையான வார்த்தைகளாலும் சுட்டிக்காட்டலாம்; மனம் நோக பேசக் கூடாது.

வாழ்க்கையில் நல்ல நிலையை வாரிசுகள் அடைய வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஏராளமான சிரமங்களைச் சந்தித்திருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மனம் கசந்துபோகும்படி பிள்ளைகள் நடந்து கொள்ளக் கூடாது. இளம் வயதில் பெற்றோர், பிள்ளைகளை உற்சாகப்படுத்த என்னவெல்லாம் பேசி இருப்பார்கள். அதைப் போலவே முதிர்வயதில் பெற்றோரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பிள்ளைகள் பேசி அவர்களை மகிழச் செய்யலாம்.

முதியோருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது அவசியம். அவர்களுடன் சற்று நேரத்தைச் செலவிடலாம். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவ்வாறு கேட்கும்போது அதில் சில ஆலோசனைகள் இருக்கலாம். அது இளைய தலைமுறைக்கு அவசியமானதாகவோ அல்லது வரும் அபாயம் குறித்த எச்சரிக்கையாகவோ இருக்கலாம். அது முதுமை தரும் கனி.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது பேச்சைக் கேட்கும்போது அவர்கள் இன்னும் குடும்பத்தில் முக்கியமானவர்கள்தான், அலட்சியப்படுத்தப்படவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். 

அதுவே அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தை அளிக்கும். சில வேளைகளில் அவர்கள் சொல்வது முரண்பாடான கருத்தாகக் கூட இருக்கலாம். அதற்காக அவர்களைக் கடிந்து கொள்ளக் கூடாது. முதியோரைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் பல சவால்கள் இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நாட்டில் உள்ள பல முதியோர் இல்லங்களை மூடி விடலாம்.
திருமணமானவருக்கும் கருணை வேலை உண்டு

Added : அக் 02, 2019 22:44

சென்னை : திருமணமான காரணத்துக்காக, பெண்ணுக்கு கருணை வேலை மறுக்கப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, கூட்டுறவு வங்கி தலைவருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.கடலுார் மாவட்டம், பென்னாடத்தில், மாளிகை கோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு, இரவு காவலராக பணியாற்றி வந்தவர், ௨௦௧௧ நவம்பரில் மரணம்அடைந்தார். கருணை வேலை கேட்டு, அவரது மகள் சித்ரா தேவி விண்ணப்பித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தகுதி அடிப்படையில், விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தந்தையின் மரணத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், மகளுக்கு திருமணம் நடந்து விட்டதால், கருணை அடிப்படையில் வேலை கோரியது நிராகரிக் கப்படுவதாக, வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, மீண்டும் உயர் நீதிமன்றத்தில், சித்ரா தேவி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மகளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, கருணை அடிப்படையில் வேலை தருவதை மறுக்கக் கூடாது என, இந்த நீதிமன்றம் அவ்வப்போது தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, திருமணமான ஒரே காரணத்துக்காக, கருணை வேலை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை, தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.
பெண் டாக்டரிடம் சில்மிஷம் அரசு பஸ் கண்டக்டர் கைது

Added : அக் 03, 2019 01:19

தஞ்சாவூர் : பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அரசு விரைவு பஸ் கண்டக்டரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, கும்பகோணத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, அரசு விரைவு பஸ் புறப்பட்டது. ராஜு, 31, என்பவர் கண்டக்டராக இருந்தார்.சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த, 28 வயது பெண் சித்தா டாக்டர், பஸ்சில் பயணம் செய்துள்ளார். செங்கல்பட்டை கடந்து பஸ் சென்ற போது, துாங்கிக் கொண்டிருந்த பெண் டாக்டருக்கு, பின் இருக்கையில் இருந்த கண்டக்டர் ராஜு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நேற்று காலை, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் வந்ததும், அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில், பெண் டாக்டர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, கண்டக்டர் ராஜுவை கைது செய்தனர்.

NEWS TODAY 06.12.2025