Saturday, February 6, 2021

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தேதி அறிவிப்பு

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தேதி அறிவிப்பு


பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு பிப்ரவரி 9-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதில் அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,590 இடங்களுக்கும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் 13,858 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்தப் படிப்புகளுக்காக 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இப்படிப்புகளுக்கு 38,244 பேர் விண்ணப்பித்ததில் 37,334 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும் 10-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இத்தகவல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலைக் காண:

 https://tnmedicalselection.net/news/04022021043750.pdf

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்


விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பது, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிப்பது உள்ளிட்ட 8 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2020 செப்டம்பர் 16-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். புதிய பல்கலைக்கழகம் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ‘டாக்டர்ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்'என்ற புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகியமாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் இணைக் கப்படும்.

இவ்வாறு மசோதாவில் கூறப் பட்டுள்ளது. இந்த மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தண்டனை அதிகரிப்பு

அதைத் தொடர்ந்து வரதட்சணை மரணங்களுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப் படும் குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகவும், அதிகபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும் அதிகரிக்க வழி செய்யும் சட்ட மசோதாவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர 2021 அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2021 தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) திருத்தச் சட்ட மசோதா ஆகியவையும் நேற்று நிறைவேற்றப்பட்டன.

மேலும், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு, தேர்தல் நடை பெறாத மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு,கூட்டுறவுச் சங்கங்களில் நடக்கும் முறைகேடுகள், கையாடல்களை விரைந்து வெளிக்கொண்டுவருவதற்கான புலன் விசாரணை காலவரம்பை குறைக்க வழி செய்யும் சட்ட மசோதா என மொத்தம் 8 சட்ட மசோதாக்கள்சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற் றப்பட்டன.

ஜெ., பெயரில் புதிய பல்கலை விழுப்புரத்தில் அமைகிறது

ஜெ., பெயரில் புதிய பல்கலை விழுப்புரத்தில் அமைகிறது

Added : பிப் 05, 2021 22:03

சென்னை:வேலுார் திருவள்ளுவர்பல்கலை, இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில், ஜெயலலிதா பெயரில், புதிய பல்கலை துவக்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

உயர் கல்வித்துறை தாக்கல் செய்த மசோதா:வேலுார் திருவள்ளுவர்பல்கலையை, இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக வைத்து, புதிய பல்கலை நிறுவப்படுகிறது.'டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை' என்ற பெயரில், இது செயல்படும்.

திருவள்ளுவர் பல்கலையுடன் இணைந்து செயல்படும் கல்லுாரிகளில், விழுப்புரம், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகள், இனி, இந்த பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும். கடலுார் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை மட்டும், திருவள்ளுவர் பல்கலையுடன் இணையாமல் தனியாக செயல்படும்.

இந்த மூன்று மாவட்டங்களிலும், வேறு ஏதாவது பல்கலையுடன், கல்லுாரிகள் இணைந்து இருந்தால், அவை ஜெயலலிதா பல்கலையுடன் இணைக்கப்படும்.விழுப்புரம் நகராட்சியின் எல்லை அல்லது அதைச் சுற்றி, 25 கி.மீ., சுற்றளவில், பல்கலை வளாகம் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே, சென்னையில் உள்ள மீன்வள பல்கலையும், ஜெயலலிதா பெயரில் செயல்படுகிறது.

குழந்தையின் கன்னத்தை தொடுவது குற்றமா?

குழந்தையின் கன்னத்தை தொடுவது குற்றமா?

Added : பிப் 05, 2021 21:16

புதுடில்லி:'பாலியல் நோக்கங்கள் இன்றி, குழந்தையின் கன்னத்தை தொடுவது, குற்றச் செயலாக கருதப்படாது' என தீர்ப்பளித்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்து, மும்பை, 'போக்சோ' நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஒரு வீட்டில், 2017ல் நடந்த சம்பவம் இது.

அதிர்ச்சி

அந்த வீட்டில் பழுதான குளிர்சாதன பெட்டியை சரிபார்க்கச் சென்ற, 28 வயதான நபர், அங்கிருந்த, 5 வயது பெண் குழந்தையின் கன்னத்தை வருடி உள்ளார்.

இதைப் பார்த்த, அக்குழந்தையின் தாய், அந்த நபரை, வந்த வேலையை மட்டும் பார்க்கும்படி கூறிவிட்டு, குழந்தையுடன் சமையல் அறைக்குச் சென்றார். சமையல் அறைக்குள் நுழைந்த அந்த நபர், குழந்தையின் தாயை, கட்டி அணைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை வேகமாக தள்ளிவிட்டு, கூச்சலிட்டார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறும்படி, அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அவர், வெளியே செல்லாமல், அங்கிருந்த குழந்தையின் கன்னத்தை மீண்டும் வருடினார்.

இதையடுத்து, அந்த பெண் உடனடியாக போலீசிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, கைது செய்தனர். எனினும், அவருக்கு ஜாமின் கிடைத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, 'போக்சோ' நீதிமன்றம், முதலில், தாயிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கில், அந்த நபருக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

சர்ச்சை

இந்நிலையில், குழந்தையிடம் தவறாக நடந்த வழக்கில், நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பாலியல் நோக்கங்கள் இன்றி, குழந்தையின் கன்னத்தை தொடுவது என்பது, குற்றச்செயலாக கருதப்படாது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட நபர், இந்த வழக்கில் இருந்து, விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'அரசு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்': அண்ணாமலை பல்கலை., ஊழியர் சங்கத் தலைவர் பேட்டி

'அரசு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்': அண்ணாமலை பல்கலை., ஊழியர் சங்கத் தலைவர் பேட்டி

Added : பிப் 06, 2021 00:36

சிதம்பரம்:'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தமிழக அரசு 2,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்' என பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம்அவர் கூறியதாவது:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மற்றும் பல் மருத்துவக் கல்லுாரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லுாரி ஆகியவற்றை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது.இதனால், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தமிழக அரசு 2,000 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றதால் பெரும் சொத்து அரசு வசம் சென்றுள்ளது. இங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பண பாதுகாப்பு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஆசிரியர் அல்லாத 1,400 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை முழுமையாகக் களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிக்கு 'ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லுாரி' என பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.

பொதுச் செயலாளர் பழனிவேல், பொருளாளர் தவச்செல்வன், இணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, இணை பொருளாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆன்லைன் வழியே ஆர்.டி.ஐ., மனு இணையதள சேவை துவக்கம் தாமதம்

ஆன்லைன் வழியே ஆர்.டி.ஐ., மனு இணையதள சேவை துவக்கம் தாமதம்

Added : பிப் 06, 2021 00:43 

சென்னை:'தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்வதற்கான, புதிய இணையதள வசதியை, முதல்வர் விரைவில் துவக்கி வைக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு நிர்வாகத்தில், கோப்புகள் தொடர்பான விஷயங்களை மக்கள் அறிந்து கொள்ள, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ல் இயற்றப்பட்டது.இதன்படி, மத்திய அரசு துறைகளுக்கான மனுக்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வசதி, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. அதனால், மாநில அரசு துறைகள் தொடர்பான மனுக்களுக்கும், ஆன்லைன் வசதி கோரப்பட்டது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், இதற்காக புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. சோதனை முறையில், ஆர்வலர்கள் இதில் மனுக்களை பதிவு செய்தனர். தபால் வாயிலாக அனுப்புவதை காட்டிலும், இதில் மனு செய்வதும், கட்டணம் செலுத்துவதும் எளிதாக இருப்பதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வசதி நான்கு மாதங்களுக்கு மேலாக, சோதனை முறையிலேயே உள்ளது. இதை முழுமையான பயன்பாட்டுக்கு அனுமதிக்க, துவக்க விழா நடத்துவது தாமதமாகி வருகிறது. பொதுமக்கள் அலைச்சல் இன்றி, ஆன்லைன் முறையில், ஆர்.டி.ஐ., மனுக்களை பதிவு செய்ய வசதியாக, முதல்வர் இந்த திட்டத்தை விரைவில் துவக்கி வைக்க வேண்டும் என, தகவல் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

அண்ணாமலை மருத்துவ கல்லூரிகள்; அரசு ஏற்பு

அண்ணாமலை மருத்துவ கல்லூரிகள்; அரசு ஏற்பு

Updated : பிப் 06, 2021 05:28 | Added : பிப் 06, 2021 05:26

சென்னை: அண்ணாமலை பல்கலையின், மருத்துவ கல்லுாரிகளை, அரசு ஏற்பதற்கான சட்டத் திருத்தம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அண்ணாமலை பல்கலையின் கீழ் இயங்கிய, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லுாரி ஆகியவை, தமிழக சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கான சட்டத் திருத்தம், நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, மேற்கண்ட மூன்று மருத்துவ கல்லுாரிகளும், அண்ணாமலை பல்கலையின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.இதற்காக, அண்ணாமலை பல்கலை மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லுாரிகள், உயர் கல்வித் துறையிடம் இருந்து, சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

NEWS TODAY 17.07.2026