Friday, September 18, 2015

மீண்டும் டெங்கு!

Dinamani

By ஆசிரியர்

First Published : 18 September 2015 01:01 AM IST


தலைநகரில் எது நடந்தாலும் அது செய்திதான், தேசியப் பிரச்னைதான். தில்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு அதிகமானால், மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. வெங்காய ஏற்றுமதி விலையை உயர்த்தி நிர்ணயிக்கிறது. தில்லியில் ஒரு பெண் வல்லுறவுக் கொலைக்கு ஆளானால், மத்திய அரசு உடனே சட்டத்தையே திருத்தி எழுதுகிறது. அதேபோலவே, தில்லியில் டெங்கு காய்ச்சல் என்றாலும் மத்திய அரசு பதறுகிறது. களம் இறங்குகிறது.
தில்லியில் கடந்த மூன்று வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக டெங்கு தீவிரம் கொண்டு, மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏழு வயதுச் சிறுவன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் இறந்தபோது, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத பெற்றோர் தாங்கள் வசித்த 4-ஆவது மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை, தில்லியில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பேசப்படும் விவகாரமாக மாற்றின ஊடகங்கள்.
இந்தச் சிறுவனின் மரணம், பெற்றோரின் துயரம் ஆகியவற்றோடு நின்றுவிடாமல், குழந்தை அவினாஷ் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, மூன்று மருத்துவமனைகளால் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திருப்பியனுப்பப்பட்ட விவகாரம், தில்லி மருத்துவமனைகளின் மீதான தீவிர எதிர்வினையைக் கிளப்பியது. சிறுவன் அவினாஷ் மட்டுமல்ல, அன்றாடம் பல நூறு பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்கிற உண்மையும் வெளிவந்தது. மக்கள் பெருந்திரள் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் களப் போராட்டம், அறிக்கைப் போராட்டம், பேட்டித் தாக்குதல் என பன்முனை எதிர்ப்புகள் தொடங்கின.
இதன்பிறகுதான் மத்திய அரசு தலையிட்டது. தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலால் வரும் நோயாளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.600 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சோதனைகள் தில்லி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன. தில்லியில் அனைத்துப் படுக்கைகளும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கூடுதலாக 1,000 படுக்கைகளை வாங்குவதற்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும்கூட, தனியார் மருத்துவமனைகளை நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகமாக நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால், அத்தகைய மருத்துவமனைகளை நெருக்கடிநிலை நடவடிக்கையாக அரசே தாற்காலிகமாக ஏற்று நடத்தும் என்று கேஜரிவால் கூறியதால், இந்திய மருத்துவர்கள் கழகம் சார்பில் நோயாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "தற்போதைய டெங்கு காய்ச்சல் வைரஸ் 2013-ஆம் ஆண்டு வைரஸ் போல கொல்லும் கிருமி அல்ல. அச்சப்பட வேண்டாம். அதிகமான காய்ச்சல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கும் அவசியம் நேரும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றமும்கூட பொதுநல வழக்கை ஏற்றுக் கொண்டு, டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், தில்லி முதல்வருக்கும் விளக்கம் கோரியுள்ளது.
இவை யாவும் ஒருபுறம் நடந்தபோதிலும், ஓர் உண்மையை மறுப்பதற்கில்லை. டெங்குக் காய்ச்சல் தில்லிக்குப் புதியதல்ல. காமன்வெல்த் விளையாட்டு நடந்த வேளையில், தில்லியில் டெங்கு காய்ச்சலால் எட்டு பேர் இறந்தனர். சுமார் 6,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் 2,000 பேர் தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, அக்டோபர் மாதம் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நிகழாண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை 15 பேர் இறந்துள்ளனர். சுமார் 1,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில்தான், மத்திய அரசும், தில்லி அரசும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை, அரசுகளைவிட மக்களே பொறுப்பாளிகள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், தூய்மையான நன்னீரில் மட்டுமே வளர்ந்து பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வீணாகக் கிடக்கும் சிறு பாத்திரங்கள், கலயங்கள், பயன்படாத டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொற்றுநோய் அல்ல. ஆகவே, நன்னீர் தேங்குவதைத் தவிர்த்தாலே பாதி பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருஞ்செலவு மிச்சமாகும்.
கொசு விரட்டி, கொசுக் கொல்லி ஆகியவற்றைத்தான் இன்று பயன்படுத்தி வருகிறோம். இவற்றைவிட கொசுக்களை மலடாக்கும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாகவும், கொசு உற்பத்தியை வேகமாகக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அத்தகைய கொசு மலடுக்கான மருந்துகள் சந்தைக்கு வரவில்லை. அது ஏன் என்பது புரியவில்லை.
மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி அரசின் கடமையோ, அதேபோன்று நோய் உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்க உதவுவதும் மக்களின் கடமைதான் என்பதை நாம் உணர வேண்டும்.

Thursday, September 17, 2015

இறைச்சி உற்பத்தியில் இந்திய எழுச்சி


Dinamani


By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 17 September 2015 01:39 AM IST


இந்தியா என்றால் புலால் மறுப்பை வலியுறுத்திய வள்ளுவன், புத்தன், வள்ளலார், காந்தி உள்ளிட்ட எண்ணற்றோர் பிறந்த நாடு என்று பெருமைப்பட்டதெல்லாம் வீண். இறைச்சி உற்பத்தியிலும், நுகர்விலும் வரலாறு காணாத வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது.
÷சீனர்கள் பாம்பைத் தின்கிறார்கள், பூனை, எலி உண்கிறார்கள். புழு, பூச்சிகளையும் தின்கிறார்கள் என்று பழிப்பதுண்டு. ஆனால், தமிழர்களில் சில வகுப்பினர் பூனை, எலி உண்பதுண்டு. வட கிழக்கு இந்தியாவில் வாழ்வோர் சிலர் நாயைக்கூட விட்டு வைப்பதில்லையாம்.
÷மனிதனுக்குப் புரதப் பசியைவிட இறைச்சிப் பசியே அதிகம். ஒரு காலத்தில் கோழி இறைச்சி அதிக விலையிலும் ஆட்டிறைச்சி குறைந்த விலையிலும் விற்றது. ஆனால், நாமக்கல்லில் தோன்றிய கோழிப் புரட்சி நாட்டையே வென்றது. கோழி விலை மலிந்தது; தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி மாவட்டங்களில் கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.
÷இறைச்சிக் கோழி என்றாலும் முட்டைக் கோழி என்றாலும் கோழி கோழிதான். இது தொடர்பான ஒரு விவசாயப் புள்ளிவிவரம் சிறப்பானது. கோழி, மாடு வளர்ப்பால் உயர்ந்தது இறைச்சி மட்டுமல்ல; மக்காச் சோள உற்பத்தியும்தான். இன்று தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக மக்காச் சோள உற்பத்தி இரண்டாம் நிலையில் உள்ளது.
÷இவ்வாறே, இந்தியாவிலும் நெல், கோதுமைக்குப் பின் மூன்றாம் இடத்தில் மக்காச் சோள உற்பத்தி உள்ளது. இறைச்சிக் கோழி, கசாப்பு மாடுகளுக்கான தீவனத் தேவை காரணமாக இந்தியாவில் மக்காச் சோள உற்பத்தி உயர்ந்துள்ளது.
÷நாமக்கல் கோழிப் புரட்சிக்குப் பின் கோழி விலை விழுந்தது. கோழி உணவு உயர்ந்தது. இந்த அன்னிய தேசத்து வெள்ளைக் கோழி வளர்க்கப்படும் தொழில்நுட்பத்தைக் கவனித்தால் அந்தத் தொழில்நுட்பம் ஆரோக்கியமற்றது என்று புரிந்து கொள்ளலாம்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகள், தென்னம்பஞ்சுப் படுக்கை மீது நெருக்கமாக ஒன்றுமீது ஒன்று மோதும் அளவில் ஊட்டம் கொடுத்துக் குஞ்சுகளைக் கொழுக்க வைத்து விற்கிறார்கள். அவ்வாறு வளர்க்கும்போது கோழிகள் இறக்கும். தொற்றுநோய் பரவும். அவ்வாறு தொற்றுநோய் பரவாமல் இருக்க கோழிகள் மீது, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆக்சி டெட்ரா சைக்கிள், குளோர் டெட்ரா சைக்கிள், டாக்சி சைக்ளின், என்ரோ ஃப்ளோக்சாசின், சிப்ரோ ஃப்ளோக்சாசின் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
÷அப்படியும் நூற்றுக்கு 5 முதல் 10 கோழி இறக்கும். அவற்றை உண்ண இப்படிப்பட்ட கோழிப் பண்ணைகளில் நாய்கள் சுற்றித் திரியும். இந்தக் கோழிகள் அங்காடிக்கு வரும்போது அந்த இறைச்சிகளில் 10 முதல் 15 சதவீதம் ஆன்டிபயாட்டிக் எஞ்சியிருக்கும்.
÷தேன் விஷயத்திலும் இப்படித்தான். பெட்டிகளில் தேனீ வளர்ப்போர் தேனீக்கள் இறக்காமல் இருக்கத் தெளிக்கும் ஆன்டிபயாட்டிக் அத் தேனில் எஞ்சியிருக்கும்.
÷நீங்கள் கேட்கலாம். ஆன்டிபயாட்டிக்தானே. அது நல்லதுதானே. ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். அது ஆபத்தானது என்பார்கள். ஏனென்றால், நமது உடலில் உள்ள கிருமிகள் கோழிக்கறி, தேன் ஆகியவற்றில் எஞ்சியுள்ள ஆன்டிபயாட்டிக்கை எதிர்த்து வெல்லும் சக்தி பெற்று விடும். நமக்கு நோய் வரும்போது நம் உடலில் செலுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் வேலை செய்யாது. உண்மையில் இவற்றை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாறி மாறிப் புதிது புதிதான மருந்துகள் உண்டுப் பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி இறைச்சி எப்படியெல்லாம் வறுபடுகிறது என்று பார்த்தால் சில்லி சிக்கன், சிக்கன் ரோல், பீசா, பர்கர் என்று ஏகப்பட்ட அவதாரத்தை எடுத்துவிட்டது. ஒரு காலத்தில் மீன், முட்டை எல்லாம் தாவர உணவு என்று பேசப்பட்டது. இன்று அந்தப் பட்டியலில் சிக்கனும் சேர்ந்துவிட்டது.
÷இந்தியாவில் உள்ள மேல்ஜாதி ஹிந்துக்கள் - குறிப்பாக பிராமணர்கள், ஜெயின் என்ற பட்டப் பெயருள்ள ஹிந்துக்கள், சைவப் பிள்ளைமார் புலால் உண்பதில்லை. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மென்தகடு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொறியாளர் இளைஞர் - இளம்பெண்கள் கூட்டம் ராப் பகலாய் கணினிகள் முன் கடுந்தவம் புரிவோர்களில் வெஜிடேரியன் என்று கூறிக் கொள்ளும் மேலே குறிப்பிட்ட மேல்ஜாதி யுவ - யுவதிகள் அமெரிக்க அறிமுகமான சிக்கன் பர்கருக்கு அடிமையாகிவிட்டனர்.
÷இப்படிப்பட்ட சாஃப்ட்வேர் நிறுவன உணவகங்களில் ஜங்க் ஃபுட்டுடன் "சிக்கன் பர்கருக்கு' ஏக வரவேற்பு உண்டு. சிக்கன் மட்டுமல்ல; பீஃப் மட்டன், போர்க் பர்கர்களும் உண்டு. அதாவது கோழிகளுடன், மாடு, ஆடு, பன்றி இறைச்சிகள் மேல்நாட்டு பாணி உணவாக புதிய பாங்குடன் பர்கர் பாஸ்தா, பீஸ்தா என்று புதிய புதிய பெயர்களில் வழங்கப்படலாம்.
÷ஹைதராபாத் ஓர் அற்புத நகரம். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையின் எடுத்துக்காட்டு. ஒரு பக்கம் ஏழை இஸ்லாமியச் சிறுமிகள் அரபு நாடுகளுக்குக் கடத்தப்படுவதில் முதலிடம் என்பதை மறந்துவிட்டு சாஃப்ட்வேர் தொழில், புலால் உணவு பற்றி அறிவோம். ஹைதராபாதில் "ஹலீம்' என்ற புலால் உணவு விழா பாரம்பரியச் சிறப்பு மிக்கது. ஒரு விதமான கோதுமை மாவு ரொட்டியில் மாட்டுக் கறி, ஆட்டுக் கறியுடன் கடலைப் பருப்பு கலந்த பிண்ட உணவு. பன்னுக்குள் மசாலா சிக்கன், வகை வகையான "நான் வெஜ்' பிரியாணி விழாவில் உண்டு.
÷இந்திய மொழிகளில் கலந்துவிட்ட ஒரு புதிய சொல் "நான் வெஜ்'. விமானத்தில் பயணிக்கும்போது, உணவு வழங்கும் விமானப் பணிப்பெண் பயணிகளிடம் "வெஜிடேரியன்?' என்று வினவும்போது இறைச்சிப் பிரியர்கள் "நான் வெஜ்' என்று சொல்ல வேண்டும். "நான் வெஜிடேரியன்' என்று பொருள் கொள்ளக் கூடாது.
÷இந்த விஷயத்தில் ஆய்வு மேற்கொண்ட ஹைதராபாத் நகராட்சி ஆணையர் சோமேஷ் குமாரின் "நான் வெஜ்' புள்ளிவிவரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஹைதராபாதில் உள்ள 1.1 கோடி மக்களில் 78 லட்சம் மக்கள் "நான் வெஜ்' என்றும், ஹைதராபாதில் மட்டும் தினமும் 3 லட்சம் கோழிகள், 8,000 ஆடுகள், 2,500 மாடுகள், 50 பன்றிகள் கொல்லப்பட்டு உண்ணப்படுவதாகத் தெரிவித்தார். இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் என்றுமே "நான் வெஜ்'. ஆனால், இப்போது சுமார் 90 சதவீத ஹிந்துக்களும் "நான் வெஜ்' - குறிப்பாக சிக்கனுக்கு அடிமை.
÷புத்தனை வணங்கும் இந்தியர்களில் பலர் மாட்டுக் கறிக்கு அடிமை. உலகத்துக்குக் கொல்லாமையை போதித்த புத்த மதம் இலங்கை, சீனா, ஜப்பான் நாடுகளில் பரவியிருந்தாலும், உயிர்களைக் கொல்வதே வாழ்க்கை நெறியானது. இந்தியாவிலும் நமது பாரம்பரியக் கருத்துகள் தவிடுபொடியான நிகழ்வுகள் உண்டு. பசு மாடுகளை தெய்வமாகப் போற்றி வளர்க்கும் இந்தியாவில் பசுவதை கூடிவருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
÷மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறிவிட்டது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் நாம் ஆண்டுதோறும் பெறும் அன்னியச் செலாவணி மதிப்பு 5,000 கோடி டாலர். உள்ளூர் வர்த்தக மதிப்பு அளவிடற்கரியது. பல கோடி டாலர்கள்.
÷பரந்தாமனாகிய பாலகிருஷ்ணன் குழல் ஊதினால் பிருந்தாவனத்தில் ஆயர்பாடி மாடுகள் மதி மயங்குமாம். இன்றுள்ள சூழ்நிலையில் யமுனைக் கரையில் உள்ள தில்லி, மதுரா பகுதிகளில் பசு மாடுகள் குறைந்து எருமை எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. ஏனெனில், பசுவை விட எருமையே லாபம். மாட்டிறைச்சியில் எருமையின் பங்கு அதிகம். பசுவதைத் தடுப்பு இருப்பினும், பசு - காளை இறைச்சிகளும் எருமை இறைச்சி என்ற லேபிள் பெற்று ஏற்றுமதியாகிறது? மாடு வளர்த்துப் பால் மூலம் வருமானம் பெறும் விவசாயிகள் சினை பிடிக்காத வெற்று மாடுகளையும், காளைக் கன்றுக் குட்டிகளையும் கசாப்புக்கு அனுப்புவதால் பெறும் வருமானம் பால் உற்பத்தியில் பால் விலை சரியும்போது சற்று ஈடுகட்டுகிறது.
÷வடகிழக்கு இந்தியாவில் - அதாவது அஸ்ஸôம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நாம் பசுக்களை வளர்ப்பதுபோல் பன்றிகளை வளர்க்கின்றனர். ஆட்டுப் பால், கழுதைப் பால் போல் பன்றிப் பாலை யாரும் அருந்துவதாகத் தெரியவில்லை. பன்றியிடம் பால் கறக்க முடியுமா என்பதும் புலிப்பால் கறந்த கதைதான்! முழுக்க முழுக்க இறைச்சிக்குத்தான். பொதுவாக இந்தியாவில் உள்ள ஆதிவாசிகள், ஷெட்யூல்டு வகுப்பினர் அனைவருமே நூறு சதவீதம் "நான் வெஜ்'.
÷இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் சைவ உணவையே அலகாகப் பயன்படுத்துகின்றனர்! கலோரி உணவு என்பது மனிதனை குண்டாக்கும் தத்துவமே. புரதச் சத்துக்குப் போதுமான பருப்பு விளைச்சல் இந்தியாவில் இல்லை. உலகிலேயே அதிகம் பருப்பு விளைவிக்கும் நாடான இந்தியாவில்தான் பருப்பு இறக்குமதியும் அதிகம். ஆகவே புரதச் சத்து வழங்கும் "நான் வெஜ்' இந்தியர்களின் தவிர்க்க முடியாத தேவை என்பது நடைமுறை.
÷எனினும், கசாப்புக் கடைகளில் ஆடுகளின் அழுகுரல் நெஞ்சைப் பரிதவிக்க வைக்கிறது. பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி அன்றாடம் இறக்கும் வாயில்லா ஜீவன்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்:
"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே...
காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல்போல் உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்த வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க-
ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி
வந்தாங்க'.
÷இதுதான் இந்திய எதார்த்தம்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

Tuesday, September 15, 2015

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: மறதியைத் தோற்கடித்த பெரியசாமி

Return to frontpage


ஆயிஷா இரா.நடராசன்


நமது கல்விமுறை நெகிழ்ச்சியில்லாமல் இறுக்கமான தன்மையோடு இருப்பதால், மாற்றங்களைக் கொண்டுவர அது பெருந்தடையாய் உள்ளது.

- இந்தியாவின் தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பு 2005.

ரயிலில் ஏறியதும் “டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டேனே” என்று பதறுபவர்கள், போலீஸாரிடம் பிடிபட்டபின் “லைசன்ஸ் கொண்டு வரல” என்று கையைப் பிசைபவர்கள். குடையிலிருந்து ஹெல்மட் வரை எதை எதையோ மறப்பவர்கள் இந்த நாட்டில் இல்லையா?

அவர்களைப் போலவே வகுப்பறைகளின் வாசலில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். புத்தகம் எடுத்துவரவில்லை. பேனா கொண்டுவரவில்லை. வீட்டுப்பாடம் எழுதி வீட்டிலேயே வைத்துவிட்டார். அடையாள அட்டை இல்லை, எங்கோ வைத்து மறந்துவிட்டேன். பென்சில் இருக்கு. அழிக்கும் ரப்பர் இல்லை. பேனா இருக்கு. அதில் மை போடவில்லை என்று பலவிதமான மறதிகளைப் பேசிக்கொண்டே அந்தக்கூட்டம் நிற்கும்.

மறதி மனிதனோடு உடன் பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கு மட்டும் ஏன் தண்டனையும் வசவும் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் அவமதிப்பும்? இதற்கு மாற்று இருக்கிறது என்று எனக்குப் புரியவைத்த மாணவர்தான் பெரியசாமி.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் கறார் பேர்வழி. தனது வகுப்பில் பாடப் புத்தகம் கொண்டுவராதவர்களை வெளியே நிற்கவைத்து விடுவார். ஆனால், முதல் வரிசை மாணவர்களில் ஒருவரின் புத்தகத்தை (இரவல்) வாங்கி புத்தகத்தைத் திறந்தபடியே ‘‘போன வகுப்பில் எங்கே… விட்டோம்’’ என மாணவர்களேயே கேட்பார். அவர் ஏன் தன் புத்தகத்தை கொண்டுவரவில்லை என்று மாணவர்கள் கேட்பது கிடையாது. நமது கல்வி முறையில் அவருக்கு ‘இம்சை அரசன்’ காலத்து அதிகாரம் உள்ளது.

இந்த மாதிரியான கல்விமுறையை ‘வங்கி’ முறைக் கல்வி என்று பிரேசில் நாட்டில் பிறந்த மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரையரே வர்ணித்தார். இந்தக் கல்வியில் ஆசிரியர், மாணவர், பாடப்பொருள் எனும் மூன்று பகுதிகள் உள்ளன. ஆசிரியர் அனைத்து அதிகாரமும் பெற்றவர். மாணவர் அடிபணிந்து போகவேண்டியவர். மாணவரின் தலையைத் திறந்து பாடப்பொருளை வங்கியில் பணம்போடுவதுபோல் நிரப்புவதே கல்வியாக இருக்கிறது. இதில் பேனா, புத்தகம், நோட்டு என்பதெல்லாம், வங்கிக்கு ‘உங்கள் பாஸ்புக்கை’ எடுத்துச்செல்லவேண்டும் என்பதுபோல முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கணினி காலத்திலும் அதில் எதுவும் மாறவில்லை.



வன்முறையின் காரணி

பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க இந்த சின்ன சின்ன மறதிகளே காரணங்களாக சொல்லப்படுகிறது. படிப்பதில் உள்ள ஈடுபாடு, தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்ட கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தண்டனை அளிப்பதைவிட பள்ளிக்கு ஏதாவது ஒன்றை எடுத்துவர மறந்ததுக்காக தண்டனைகள் அளிக்கப்படுவதே அதிகம் என்பார் ரஷ்ய கல்வியாளர் ஜேம்ஸ் பாஸ்டர் னாக்.

மிக அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வராமல் மறப்பது பேனாவையோ அல்லது பென்சிலையோதான். சிலர் எளிதில் தொலைத்துவிடுவதும் அதைத்தான். இன்று பள்ளி அமைப்புக்கு வெளியே அதிகம் பயன்படாத ஒன்றாக பேனா மாறிவிட்டது. மின்னஞ்சலும் குறுஞ்செய்தியுமாக எல்லாம் இணைய மயமாய் ஆகியும் பள்ளிக்கல்வி இறுகிப்போய் பிடிவாதமாக இருக்கிறது.

விநோதமான பட்டப் பெயர்

நான் முன்பு பணிசெய்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தார் பெரியசாமி. பேனா பெரியசாமி என்றால்தான் தெரியும். இப்படி ஒரு பட்டப் பெயர் அவருக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டேன். பேனா பெரியசாமி என்பது பட்டப் பெயர் அல்ல. காரணப்பெயர்தான் என்று தெரியவந்ததும் திகைத்துப் போனேன்.

ஒரு நாள் வகுப்பறையில் நுழையும்போது பேனா பெரியசாமி தனது வகுப்பு சகாக்களில் பலருக்கும் பேனா சப்ளை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரியசாமிக்கு பேனா சேர்ப்பது ஒரு ஹாபியாம். விதவிதமாக சேர்த்து வைத்திருந்தார். அதற்காகவே இரண்டு டப்பாக்கள் வகுப்பில் இருந்தன. யார் பேனா கொண்டுவரவில்லை என்றாலும் உடனே இரவல் தருவார்.

ஆனால், பள்ளி முடிந்ததும் அவற்றைத் திரும்பப் பெறுவதிலும் கறார் பேர்வழி. சில சமயம் மற்ற வகுப்புகளிலிருந்து வந்து அவரிடம் பேனா வாங்குபவர்களும் உண்டு. பழைய பேனாக்கள்தான். சிலவற்றில் வேறு வண்ணங்களில் மூடிகளும் இருக்கும். சில ஒழுகுவதும் உண்டு. ஆனால், வகுப்பில் அது இல்லை என்றால் வாங்கும் தண்டனையைவிட, இது உடனடி நிவாரணம் அல்லவா? பெரியசாமி இருக்கும் வகுப்பறை அமைதியாக நடப்பதை உணர்ந்தேன்.

நம் நாட்டின் கல்வி முறைமையை வடிவமைக்கும் ‘கல்வித் திட்ட வடிவமைப்பு 2005’ ‘மாணவர்களின் பள்ளி அனுபவங்களால் உணரப்பட்டு உள்வாங்கி கல்வி கட்டமைக்கப்படுகிறது’ எனக் கூறுகிறது. ‘பள்ளியில் நடக்கும் அனைத்துமே கல்விதான். பாடப் புத்தகத்தைக் கடந்து வெளிப்பட்டு தோன்றும் அறிவின் அனைத்து அம்சங்களுமே போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும்’ என நம்மை அது தூண்டுகிறது.

ஒரு பேனா கொண்டுவரவில்லை என்பதற்காக அந்தப் பாடவேளை முழுவதையும் ஒரு மாணவரை நிற்கவைத்து அவருக்கு பாடம் புகட்ட கூச்சலிட வேண்டுமா? அதைவிட அந்த ஆசிரியரே ஒரு ‘பேனா’ பெரியசாமி ஆகி, ஒன்றிரண்டு பேனாக்களை (இப்போதெல்லாம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது) கூடுதலாய் வைத்திருந்து பேனா எடுத்து வராதவர்களுக்கு கொடுக்கலாமே? பிரச்சினையில்லாமல் கற்றல் தடைபடாமல் தொடரலாமே? எனும் புதிய சிந்தனையை அவர் எனக்கு போதனை செய்துவிட்டார்.

கடைசியாக அவரை நான் பார்த்தபோது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் பெறும் கவுண்டரில் காசாளராக இருந்தார். ‘‘சலான் நிரப்பிட்டீங்களா … பேனா இருக்கா” என்று ஒரு முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக்காக சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தமிழக இளைஞரை மீட்க நடவடிக்கை


    Return to frontpage


    ஆர்.செளந்தர்
    அ.சாதிக் பாட்சா
    ஆர்.சிவா

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக் குச் சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சதாம் உசேனை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சதாம் உசேனின் தந்தை இமாம் ஷா, சதாம் உசேன் மனைவி ஜாஸ் மின்பானு, அவரது இரண்டரை வயது மகன் ஷர்கான் ஆகியோரு டன் தேனிக்கு வந்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், எஸ்.பி. ஜெ.மகேஷ் ஆகியோரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:

எனது மகன் சதாம் உசேனை கும்பகோணம் அருகே உள்ள சோலைபுரத்தை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு அனுப்புவதாக சொல்லி விசா எடுக்க ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று 40 நாட்கள் முடிந்து விட்டது. ஓட்டுநர் வேலைக்கு சென்ற அவரை ஓட்டுநர் பணி தராமல் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். தகுந்த உணவோ, தங்க இடமோ கொடுக்காமல் அனாதையாக உள்ளார். அவர் அங்கு படும் கஷ்டங்களை வாட்ஸ் அப் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித் துள்ளார். அந்த ஆதாரங்களை இந்த கடிதத்துடன் (சிடி) இணைத் துள்ளேன். அவரது பாஸ்போர்ட் டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். அவரை உடலள விலும், மனதளவிலும் கடுமை யாக துன்புறுத்துகின்றனர். இதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சதாம் உசேன் மனைவி ஜாஸ்மின் பானு கூறுகையில், வாட்ஸ்அப்பில் எனது கணவர் உதவி வேண்டி வீடியோ அனுப்பிய பின்னர் மறுநாள் (3நாட்கள் முன்பு) இன்டர்நெட் மூலம் எனது மாமனார் மற்றும் என்னிடம் பேசினார். அப்போது மிக வும் கஷ்டமாக உள்ளது என வேத னையுடன் கூறினார். இரண்டு நாட் கள் அரசு விடுமுறை என்பதால் இன்று(நேற்று) வந்து புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது இன்னும் ஓரிரூ நாட்களில் சதாம் உசேன் தமிழகம் வந்து விடுவார் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டோர் பேட்டி

கம்பத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (இட்லி வியாபாரி) கூறிய தாவது: எனது மகன் காஜா மைதீன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி மற்றும் கம்பத்தைச் சேர்ந்த 2 பேர் ரூ. 80 ஆயிரம் வாங்கினர். ஆனால், கூறியபடி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், இவர்கள் தாதப்பன்குளம் பகுதி யில் உள்ள 7 பேரிடம் ரூ. 12 லட் சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாங் கள் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட் இதுவரை கிடைக்க வில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த அரசமணி (லாரி ஓட்டுநர்) என்பவர் கூறியது: கம்பம் மெட்டு காலனி நந்த கோபால் கோயில் அருகே, ஒரு நபரை ஓட்டுநர் வேலைக்கு அழைத் துச் சென்றனர். ஆனால், அவரை ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். பின்னர், அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். 4 மாதங்களுக்கு முன் வேறு ஒரு ஏஜென்சி மூலம், கத்தாரில் அவர் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.

கம்பத்தை சேர்ந்த மணி (டெய்லர்) என்பவர் கூறியது: எனது மகனுக்கு சிங்கப்பூரில் பிட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், கம்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரூ. 2 லட்சம் கொடுத் தேன். தொழில் கற்றுக் கொடுத்து நல்ல வேலையும், நல்ல சம்பளமும் வாங்கித் தருவதாக அவர் கூறி னார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த வியாபாரி சம்சுதீன் கூறியது: எங்கள் பகுதி யைச் சேர்ந்த கேட்டரிங் முடித்த ஒரு இளைஞரை, குவைத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமை யல் வேலைக்காக அழைத்துச் சென்றனர். சமையல் சரியில்லை எனக் கூறி, அவரை பாத்திரம் கழுவ வைத்துள்ளனர்.

பேசியபடி சம்பளம் கொடுத்ததால், அங்கேயே பணிபுரிந்து வருகிறார். வெளி நாடு செல்லும் முன் நம்பகமான நிறுவனங்கள்தானா என தீவிர விசாரணை செய்ய வேண்டும். நிறு வனங்கள் குறித்து காவல்துறை யினரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின் வேலைக்குச் செல்வதே சிறந்தது. இதேபோல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளியே சொல்லத் தயங்கி வருகின்றனர் என்றார்.

முறையாக வெளிநாடு செல்வது எப்படி?

வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்றும் வேலை தேடும் நபர்களுக்காக ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், எண் - 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020' என்ற முகவரியில் இது இயங்கி வருகிறது. தொலைபேசி எண்கள் 044 - 24464267, 24464268.

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்களது விவரங்களை இங்கு பதிவு செய்து கொண்டால் அவர்களின் பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்நிறுவனம் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களும் இதேபோல பதிவு செய்து கொண்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள்:

தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை ரூ.600 முதல் ரூ.1000 வரை மாறுபடும். விண்ணப்பங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அவசர உதவிகளுக்கான தொடர்பு எண்கள்:

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அவசர உதவிகளுக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினையில் சிக்கினால்..?

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அங்கு சரியான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படாமல் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் அதுகுறித்து அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். மறுவாழ்வுத்துறை அலுவலக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு இந்த புகாரை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.

தூதரக அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்சினையில் சிக்கியுள்ள நபரை மீட்டு அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நேரடியாக மறுவாழ்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தவிர, மத்திய அரசு நிறுவனமான புரொடெக்டர் ஆஃப் எமிக்ரண்ட்ஸ் (குடியேறியவர்களின் பாதுகாப்பு அலுவலர் சென்னையில் அசோக் நகரில் உள்ளது) எனும் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். இந்த அலுவலருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களை கவனிப்பதுடன் தனியார் ஏஜண்டுகளை கண்காணிக்கும் அதிகாரமும் உண்டு.

ஏழை இளைஞர்களை பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஏஜண்டுகள் மீதும் இந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், வெளிநாட்டில் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்திய பிரஜைகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்க உதவி செய்வார்கள்.

ஏஜென்ஸி உண்மையானதா?

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய அந்த ஏஜென்ஸியின் பெயர் www.moia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பெயர் இருந்தால் அந்த ஏஜென்ஸி மூலம் வேலைக்கு செல்லலாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

இளைய தலைமுறை ஹீரோ 'ஆப்பிள்'



ஸ்டீவ் ஜாப்ஸ் என்றொரு மனிதர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் கேட்ஜெட்ஸ் விரும்பிகளை பித்து பிடிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு விதம். இளந் தலைமுறையினரின் நாடி பிடித்து, அவர்களின் ரசனை அறிந்து வடிவமைப்பதில் இந்நிறுவனத்துக்கு நிகர் யாரும் இல்லை. ஆம் ஆப்பிள் என்ற சொல் உருவாக்கியுள்ள பிம்பம் அழகானது, தனித்துவமானது, நம்பிக்கையானது எல்லாவற்றையும் தாண்டி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தைத் தொடுவது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.

நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.

இத்தனைக்கும் ஆப்பிள் புதிதாக எதையும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளவற்றை தனது தொழில்நுட்பத்தால் மிக சிறப் புடையதாக்குகிறது.

இந்த நிறுவனத்திடம் அசைக்க முடியாத, எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த கணிப்பு உள்ளது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்கின்றனர் தொழில்நுட்ப உலகினர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தங்களது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஐந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

ஐ போன் 6 எஸ், ஐ போன் 6 எஸ் பிளஸ், ஐ-பாட் புரோ, ஆப்பிள் டிவி உள்ளிட்ட தயாரிப்புகளை வெளியிடுகிறது. இதற்கிடையே ஐ-பாட் புரோ-வுக்கு துணைக் கருவியாக ஆப்பிள் பென்சிலையும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வரிசைகள் மற்றும் ஐ பாட் வரிசைகளைத் தாண்டி, அந்த நிறுவனம் பிற துறைகளில் மேற்கொண்டு வரும் தயாரிப்புகளும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன.

ஆப்பிள் வாட்ச் போன்றவை அந்த வகையில் வெற்றி பெற்றதுதான். அதுபோல தற்போது வெளியிட உள்ள ஆப்பிள் பென்சிலும் ஐ- பாட் மற்றும் ஐ-ஓஎஸ் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறது தொழில்நுட்ப உலகம்.

புதிதாக வெளியிட உள்ள ஐ-பாட் புரோவின் சைஸ் சற்றே பெரியது. இதன் துணைக் கருவியாகத்தான் ஆப்பிள் பென்சில் வருகிறது. இந்த வெளியீடு மூலம் மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி வரிசை விற்பனையில் ஆப்பிள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

தொழில் முறையிலான கலைஞர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு ஆப்பிள் பென்சில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். கிட்டத்தட்ட புதிய வாசலை இது திறந்துள்ளது. தவிர வேலை திட்டங்களை எளிமையாக ஐ-பாடில் எழுதி சேமித்துக் கொள்ளவும் செய்யலாம். அதாவது காகிதத்தில் பென்சிலைக் கொண்டு எழுதுவது, வரைவது போல ஆப்பிள் பென்சில் கொண்டு ஐ பாடிலேயே வடிவமைப்பு வேலைகளைச் செய்து கொள்ளலாம்.

பெருவாரியான கலைஞர்கள் இப்போதே இந்த பென்சிலை வரவேற்கத் தொடங்கி விட்டனர். ஆப்பிள் தயாரிப்புகள் நம்பகமானவை மற்றும் தரமானவை என்கிற பார்வை மக்களுக்கு எப்போதும் இருக்கச் செய்கிறது. அதன் இதர தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை போல ஆப்பிள் பென்சிலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

ஆப்பிள் பென்சில்

பாய்ண்டட் நிப் பென்சிலைப் போலவே வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியாக இருக்கிறது ஆப்பிள் பென்சில். இதன் முனையிலுள்ள சென்சார்கள் மிகக் கூர்மையான வடிவில் உள்ளன. மெலிதான கோடுகள் அல்லது பட்டையான கோடுகளையும் இதன் மூலம் வரையலாம். ஆப்பிள் பென்சிலைப் பயன்படுத்துவது ஓவியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதுவரை விரல்களுக்குள் உலகத்தை அடக்கிய தொழில்நுட்பம், இனி அதற்கு எந்த வேலையுமில்லை என்பதை ஆப்பிள் பென்சில் மூலம் நிரூபிக்க தயாராகிறது.

ஒரு முறை சார்ஜர் ஏற்றினால் 12 மணி நேரம் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆப்பிள் பென்சில் 30 நிமிடங்கள் செயல்படுவதற்கான மின்சக்தியை 15 விநாடிகளில் எடுத்துக் கொள்கிறது. பென்சிலின் மேற்புறத்தில் சார்ஜர் கனெக்டர் உள்ளது. இது காந்த சக்தி மூடி மூலம் மூடப்பட்டுள்ளது. ஐபாட், மற்றும் ஐபாட் பிளஸ் மூலமாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

ஐபாட் பென்சிலை தற்போது ஐபாட் புரோவில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு விநாடிக்கு 240 முறை சிக்னல் பெறுகிறது. இது இரண்டும் ப்ளூடூத் மூலம் இணைகிறது.

ஐபாட் புரோ

தற்போது கொண்டுவர உள்ள ஐ-பாட் புரோ குறித்து தொழில்நுட்ப வாடிக்கையாளர்கள் குறிப்பிடும்போது; ஆப்பிள் மேக் புக் வடிவில் ஒரு ஐ-பாட் என்கின்றனர்.

32.8 செமீ திரை, 2732*2048 ரெசலூஷன் கொண்டுள்ளது. ஆப்பிள் 13 அங்குல மேக் புக்கைவிட 1 செமீ அளவே சிறியதாக உள்ளது. தவிர ஐ-பாட் புரோவை பார்த்த மாத்திரத்திலேயே இதர ஐபாட் மாடல்களிலிருந்து பிரித்து பார்த்துவிட முடியும்.

ஏற்கெனவே உள்ள மாடல்களில் உள்ளது போலவே டச் ஐடி ஹோம், பவர் மற்றும் இதர பட்டன்கள் இருந்தாலும், புரோ வை தனித்துக் காட்டுகிறது அதன் ஸ்பீக்கர்கள். இதர டேப்ெலட் கணினி தயாரிப்பாளர்கள் இதுவரை தவற விட்ட இடம் இது. இரண்டு பக்கமும் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஸ்பீக்கர்களை ஸ்வைப் செய்து கொள்ளலாம். ஹெட்போன் இல்லாமல் பாடல்களை கேட்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் மாடலை வெளியிட்டபோது அதன் உப கருவியாக சர்பேஸ் பேனாவையும் கொண்டு வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறவில்லை. விளம்பரம் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையில் மைக்ரோசாப்ட் கோட்டை விட்டது. மைக்ரோசாப்ட் செய்த தவறு சர்பேஸ் பேனா ஸ்கீரினில் பயன்படுத்த மட்டுமே என வெளிப்படுத்தியதுதான்.

இப்போது மீண்டும் நாம் அறிய வருவது இதுதான்: ஆப்பிள் புதிதாக எதையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்வது. ஆப்பிள் பென்சில் மற்றும் ஐபாட் புரோ இணையர்கள் ஸ்டோர்களில் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஆப்பிளின் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெற்றே வந்திருக்கிறது. ஏனென்றால் அது இளைஞர்களை பிடித்தாட்டுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.

நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.

மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி


Return to frontpage


டாக்டர். ஆர். கார்த்திகேயன்


நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

கூடுதலாக செலுத்திய வரி 10 நாளில் திருப்பி வழங்கப்படும்: வருமான வரித்துறை நடவடிக்கை



கூடுதலாக செலுத்திய வரியை 7 முதல் 10 நாட்களுக்கு திருப்பி கொடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆதார் அட்டை அல்லது இதர வங்கி தகவல்கள் மூலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டிருப்பதால் எளிதாக திருப்பி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் அதிகம் செலுத்திய வரியை திரும்ப வாங்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு நீண்ட காலம் ஆனது. சிலருக்கு சில மாதங்களில் திரும்ப கிடைத்தது. பலருக்கு சில வருடங்களுக்கு பிறகே கிடைத்தது.

எலெக்ட்ரானிக் முறையில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்பட்டிருப்பதால் திருப்பி கொடுப்பது எளிதாகி இருக்கிறது. கூடுதலாக பெறப்பட்ட வரி, குறைந்தபட்சம் ஒரு வாரமும், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளும் திருப்பிக்கொடுக்கப்படும். இந்திய வரி நிர்வாகத்தில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சமீபத்திய தகவல்களின் படி 2.06 கோடி வருமான வரித்தாக்கல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வந்திருக்கின்றன கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஆன்லைன் மூலம் வரிதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 1.63 கோடி வருமான வரி தாக்கல் மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

செப்டம்பர் 7 வரை 45.18 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 22.14 லட்சம் விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டது.

பெரும் பாலான வரி செலுத்தியவர்களிடம் விசாரித்த போது 11 முதல் 13 நாட்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி திரும்ப கிடைத்தது என்று தெரிவித்தனர்.

புதிய தொழில்நுட்பம் மூலம் வரிசெலுத்துபவர்களுக்கான சேவையில் மனித தலையீடு இல்லாமல் நேரடியாக நடக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதன் மூலம் விண்ணப் பங்களை வேகமாக பரிசீலனை செய்யலாம்.

பணத்தையும் வேகமாக திருப்பி கொடுக்க முடியும் என்று வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்தார்.

எம்.எஸ்: தன்னைக் கரைக்கும் இசை by டாக்டர் ராமானுஜம்

Return to frontpage




இசையின் மூலம் தனது இருப்பின் அர்த்தத்தை உணர்ந்தவர்; உணர்த்தியவர்.

அது 1998-ம் ஆண்டு. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற நகரம். பிரபல கட்டுரையாளர் ராமச்சந்திர குஹா ‘தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி நாளிதழின் பிலாஸ்பூர் பதிப்பைப் பார்க்கிறார். அதன் தலையங்கத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது வாங்கியதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. கர்னாடக சங்கீதத்தையோ கச்சேரிகளையோ கேட்கும் வாய்ப்பே இல்லாத ஒரு பத்திரிகையாளர், சத்தீஸ்கரின் ஒரு இந்தி நாளிதழ் பதிப்பில் எம். எஸ்ஸைப் பற்றி எழுதிய புகழாரங்களைப் படிக்கும்போது, இந்தியாவை இணைப்பது பாலிவுட் சினிமா மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல என்று தாம் உணர்ந்ததாக குஹா குறிப்பிடுகிறார்.

அதற்கு முந்தைய வருடம் பாரத ரத்னா விருது பெற்று, சமீபத்தில் காலமான அப்துல் கலாமைப் போன்றே எம்எஸ்ஸையும் இந்தியாவே கொண்டாடியது. அது அவரது திறமைக்காக மட்டுமல்ல; அவரைவிட இசைஞானம் கொண்ட கலைஞர்கள் இருந்தனர்; இருக்கின்றனர். ஆனால், கலாமைப் போன்றே எளிமையான பின்னணியில் பிறந்து தன்னுடைய நற்பண்புகள், எளிமை மற்றும் ஆத்மபலம் ஆகியவற்றாலேயே புகழ்வானில் மங்காத நட்சத்திரமாய் மின்னுகிறார் எம்.எஸ்.

சிகரம் தொட்ட குரல்

உயர் மட்டத்தில் இருப்பவர்களின் பிடியில் இருந்த கர்னாடக இசை, உலகில் சமூக உயர் அங்கீகாரம் இல்லாத இசை வேளாளர் குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்து, அதுவும் ஒரு பெண்ணாகச் சிகரத்தில் இடம்பிடித்தது அவரது மனப்பான்மையால்தான். (கர்னாடக சங்கீதத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான சங்கீத கலாநிதியைப் பெற்ற முதல் பெண் அவர்தான்.)

எம்.எஸ்ஸின் இசையில் அப்படி என்ன சிறப்பு? இசை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட ஓசைதான். ஆயினும் அதை உன்னதமாக்குவது அதன்பின்னே இருக்கும் உணர்வு. ஒரு வார்த்தைகூடப் புரியாவிட்டாலும் வார்த்தையே இல்லாவிட்டாலும் உள்ளத்தில் உணர்ச்சியைப் பொங்க வைப்பது இசை. எம் எஸ்ஸின் இசையின் தனித்தன்மை அதில் கலந்த உணர்வுதான். ராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றும் இசைக்கு மூன்று தூண்கள் என்றாலும் பாவமே சாதாரண இசையை உன்னதமாக்குகிறது.

கர்னாடக இசையில் ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. ஜி.என். பாலசுப்பிரமணியன், மதுரை மணி போன்றவர்கள் யுவராஜ் சிங் சிக்சர்களாக அடிப்பதுபோல் வாண வேடிக்கை காட்டித் தமது திறமையைக் காட்டுவார்கள். செம்மங்குடி சீனிவாச அய்யருடையதோ ராணுவ ஒழுங்குபோல் கட்டுக்கோப்பாகப் பாடும் கறாரான பள்ளித் தலைமையாசிரியரின் அணுகுமுறை. எம்.டி. ராமநாதனோ குழந்தை ஐஸ்க்ரீமை ரசிப்பதுபோல் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாடுபவர். சில சமயம் மூக்கால்கூட குழந்தை ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டுச் சேட்டை செய்யும்.

இசை அர்ப்பணம்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாணி அர்ப்பணிப்பு உணர்வுக்கே முதலிடம் கொடுப்பது. அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒரு வேள்வி. அதில் தன்னுடைய ஆத்மாவைக் கரைத்துக்கொண்டு பாடுவதே அதன் லட்சியம். ஆங்கிலத்தில் ‘ஓஷியானிக் ஃபீலிங்’ (Oceanic feeling) என்றழைக்கப்படும் கடலில் கரைவது போன்ற உணர்வை அவரது இசை தரும். பாடும்போது அருமையான சங்கதிகள் வந்தால்கூட ஒரு பெருமிதமோ அளவுகடந்த மகிழ்ச்சியோ அவரிடம் வெளிப்படாது. கண்களை மூடி ஒரு கும்பிடு! அதில் ஒரு ஆன்மிகப் பரவச உணர்வே வெளிப்படும். எம்.எஸ். பழுத்த இறை நம்பிக்கையாளர். ஆயினும் இந்த உணர்வு கடவுள் நம்பிக்கை, மதங்களுக்கு அப்பாற் பட்டது. இதை நாத்திகர்களால்கூட உணர முடியும்.

உணர்ச்சிக்கே முதல் உரிமை கொடுத்ததால் இசை அறிவைப் பிரதானமாகக் காட்டும் சிக்கலான தாளக் கணக்குகள் போன்றவற்றின் பக்கம் அவர் போவதே இல்லை. மூளையால் பாடுவதைவிட இதயத்தால் பாடவே அவர் விரும்பினார். அதற்காக அவரது சங்கீத ஞானம் குறைவானது அல்ல. கம்பரின் ராமாயணத்தின் புகழ் வெளிச்சம் அவர் எழுதிய பிற நூல்களை மறைத்ததுபோல் சுப்ரபாதம், பஜகோவிந்தம் போன்ற சுலோகங்கள், பஜனைப் பாடல்கள் எம். எஸ்-ஸின் கர்னாடக இசைத் திறமைகளைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளின என்றுகூடக் கூறலாம்

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவரது குரல் வளம். சுருதிப் பெட்டியை விழுங்கிவிட்டாரோ என்று வியப்பு கலந்து நகைச்சுவையாகச் சொல்லும் அளவுக்கு மிகவும் சுருதி சுத்தமான குரல் அவருடையது. அக்கால நாடக நடிகர்களைப் போல் மிக அநாயாசமாக உச்ச ஸ்தாயியை எட்டும் குரல். அவரது முதல் ஒலிப்பதிவான ‘மரகத வடிவம்’ என்ற பாடல் இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. பிற்காலத்தில் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டாலும் துளியும் பிசிறின்றி உச்ச ஸ்தாயியை அடைவது கேட்பவர்களுக்குப் பரவசமளிக்கக்கூடியது அவரது குரல். குறியீட்டுரீதியாக அவருக்கு உச்ச ஸ்தாயியில் கரைவது ஒரு ஆன்மிகச் சாதனையாக இருந்திருக்கக்கூடும். கடினமான ராகம் தானம் பல்லவி பாடுவது, எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களால் ஆன ராகமாலிகையைப் பாடுவது போன்ற இசைத் திறமைகளை நிரூபிக்கும் முயற்சிகளையும் அவர் செய்யத்தான் செய்தார். ஆனால், அது தனக்கான தளமல்ல என்பதை உணர்ந்தவர்.

இணையொன்றும் இல்லை!

மிகவும் அற்புதமான உச்சரிப்பு அவருடையது. பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உள்வாங்கிப் பலமுறை பயிற்சி செய்த பின்னே அரங்கேற்றுவார். அவர் எடுக்கும் பாடல்கள் சோடைபோவதே இல்லை. அதனால்தான் ‘குறையொன்றுமில்லை’ போன்ற பாடல்கள் அவரைத் தவிர வேறு யார் பாடினாலும் சாதாரணமாக ஒலிக்கிறது.

எளிய சூழலில் பிறந்து இசையை மேட்டிமைப்படுத்தும் கலாச்சாரத்தின் ஒரு கருவியாகத் தன்னை மாற்றிக்கொண்டார் என்று அவர் மீது குறைகள் சொல்பவர்களும் உண்டு. ஆயினும், அவரது இசை பண்டிதத் தன்மையற்றது; எளிமையானது. கற்பனா சக்தி குறைவானவர் என்று சங்கீத விமர்சகர்கள் சிலர் விமர்சித்துக்கூட உள்ளனர்.

அவரளவில் ‘செய்க தவம். தவமாவது இசை’ என்பதுபோல் இசையின் மூலம் தன் இருப்பின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டார். பணம், புகழ் போன்றவை எல்லாம் அவருக்குப் பொருட்டே இல்லை. அளவுக்கு அதிகமாக நிதியுதவிகளும் நன்கொடைகளும் அளித்தவர் அவர்.

தான் பிறந்த சூழலின் பின்னணியிலிருந்து தனி மனித உன்னத உயரத்தை அடைய அவர் தன்னைக் கரைத்துக்கொண்டு செய்த தவமே அவரது இசை. உடல் காற்றில் கரைந்தாலும் கரையாமல் காற்றினிலே வரும் கீதம் அவருடையது.

- டாக்டர் ராமானுஜம்,

'நோயர் விருப்பம்' நூலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: ramsych2@gmail.com

செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள்

தடுத்திருக்கலாம்! By ஆசிரியர்

Dinamani


மத்தியப் பிரதேசம், ஜாபுவா மாவட்டம், பெட்லவாட் நகரில் வெடிமருந்துக் குவியல் வெடித்ததில் 89 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் கொந்தளிக்கும் மனநிலையை ஆற்றுப்படுத்தும் அறிவிப்புகள் மட்டுமே.
பெட்லவாட் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வணிகக் கட்டடத்தில், ஓர் உணவகம், பல்வேறு கடைகள் இடம்பெற்றிருந்த பகுதியில் ஜெலட்டின் வெடிமருந்துகளை ஒருவர் விற்க முடிகிறது என்பதே அப்பகுதியின் அரசு நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் பெருத்த அவமானம். அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வாறு அக்கடையின் உரிமையாளர் ராஜேந்திர கசவா சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வந்திருக்கிறார் என்று அரசு அதிகாரிகள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர கசவா சகோதரர் சிறு வெடி விபத்தில் இறந்தது மூடி மறைக்கப்பட்டதாக இப்போது வாய் திறக்கிறார்கள். அப்போதே அதிகாரிகள் இதைப் பற்றி பேசியிருந்தாலும், ஊடகத்துக்குத் தகவலைக் கசியச் செய்திருந்தாலும், இந்தச் சட்டவிரோத வியாபாரத்தை தடை செய்ய முடியாது போனாலும்கூட, குறைந்தபட்சம் வேறு இடத்துக்கு, பொதுமக்கள் கூடுகிற இடமல்லாத ஓர் இடத்துக்கு மாற்றவாகிலும் வழி பிறந்திருக்கும்.
பத்து ஆண்டுகளாக ராஜேந்திர கசவா இவ்வாறு சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வருகிறார் என்பது தெரிந்திருந்தும் அல்லது ஜெலட்டின் குச்சிகளை விவசாயக் கிணறு வெட்டும் பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய அவர் அனுமதி பெற்றிருந்தாலும்கூட, அளவுக்கு அதிகமான வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்ததற்காக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்தான் உண்மையில் கொலைக் குற்றவாளிகள்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய, இடவசதியை சரிபார்க்கத் தவறிய அனைத்து அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டதைப்போலவே இந்த விபத்திலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த வெடிமருந்து விற்பனையைத் தடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தலைமறைவான ராஜேந்திர கசவாவைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, இதற்குக் காரணமான அனைத்து அரசு அதிகாரிகளையும் இப்போது கைது செய்வதில் என்ன தடை இருக்க முடியும்?
இந்த வளாகத்தில் இருந்த உணவகத்தில்தான் முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் அதன் பிறகே வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கின என்றும் பார்வையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அருகருகே ஓர் உணவகத்தையும் ஒரு சட்டவிரோத வெடிமருந்து விற்பனைக் கடையையும் எவ்வாறு ஒரு நகர மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து யாருமே ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லையா? எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் எல்லாமும் மௌனமாக இருந்தனவா? மிக ஆச்சரியமாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் நமக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. தவறுகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லை, முடியவில்லை என்றாலும், வெளிச்சம் போட்டுக்காட்டப் பல வழிமுறைகளை தகவல் தொழில்நுட்பம் தந்துவிட்டிருக்கிறது. முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்றவற்றின் மூலம் தவறுகள் வெளிச்சம் போடப்படுவது அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, இன்னும் சமுதாயத்தின் பொறுப்புணர்வு அதிகரிக்காததுதான் மிகப்பெரிய குறை.
தன்னார்வ அமைப்புகளும், விழிப்புணர்வுடன் கூடிய இளைய தலைமுறையினரும் முனைப்புடன் தவறுகளைத் தட்டிக்கேட்க முற்படுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அவர்களுக்கு இருக்கும் அதே முனைப்பும், துடிப்பும் கூடுதல் பொறுப்புள்ள உயர் பதவியில் இருப்போருக்கும், நடுத்தர வயதினருக்கும்கூட உண்டு. அவர்களும் சற்று பொதுநலச் சிந்தனையுடன் செயல்பட்டால், இதுபோன்ற தவறுகளைக் கணிசமாகக் குறைத்துவிட முடியும்.
பள்ளி, கோயிலுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுப்பதைப் போல, இத்தகைய அனுமதி பெற்ற அல்லது அனுமதி பெறாத ஜெலட்டின் விற்பனைக் கடையை உணவகத்துக்கு அருகிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட அந்நகர மக்கள் முன்வைக்கவில்லை என்றால், இந்தக் கோர விபத்தை அவர்களாகவே தேடிக் கொண்டனர் என்றுதான் பொருள்.
தீபாவளி நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்காக பட்டாசுகள் வாங்கும் பெற்றோர் அவற்றைப் பேருந்தில், ரயிலில் எடுத்துச் சென்றால் வெடிமருந்துத் தடைச் சட்டம் பாயும். பெற்றோர் தம் வீட்டுக்கு நடந்தா செல்ல முடியும்? அதிகாரிகளுக்கு கவலையில்லை. சாதாரண மக்களிடம் கறாராகச் சீறும் அதிகாரிகள், நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத பட்டாசு வியாபாரிகளிடம் "பெட்டி'ப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள்.
கிணறு வெட்ட ஜெலட்டின் கொண்டு செல்லும் விவசாயிகள் மீது சட்டம் பாயும். அனுமதி வாங்கினாயா என்று கேட்கும். ஆனால், ஜெலட்டின் பதுக்கி வைத்திருப்போரிடம் எதையும் கேட்காது. ஏனென்றால், அவர்கள் "கொடுத்து' வைத்தவர்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி, தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்ட நாம் தயாராக வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். சட்டத்தையும், சட்டம் நமக்குத் தரும் உரிமைகளையும் பயன்படுத்த வேண்டும். பெட்லவாட் வெடி விபத்து தவிர்த்திருக்க முடியாதது அல்ல, தடுக்கப்படாதது!

திரையில் ஒளிர்ந்த தெய்வீகம்!

Return to frontpage





By வினுபவித்ரா

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு தொடக்கம் செப்டம்பர் 16

வாய்க்குள் வீணையை வைத்திருப்பவள் என்று போற்றப்பட்ட அந்தச் சிறுமியின் தொண்டையைத் தடவி ஹெலன் கெல்லர் சொல்லிய வார்த்தைகள் இவை. “நீ தேவதையைப் போல பாடுகிறாய்”. அந்தச் சிறுமியின் குரல்தான் எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளைக் கடந்து இன்றும் நம்மை மயக்கத்தில் வைத்திருக்கிறது. அதுதான் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் நிகழ்த்திய மாயம். காதலும் பக்தியும் குழைந்து உறைந்திருக்கும் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது.

மக்கள் நினைவில் நீங்காத பாடகர், தேசபக்தர், தேசிய அடையாளம் என எல்லாவற்றையும் தாண்டி அவர் விரும்பி அணியும் பட்டுப் புடவையின் ஊதா நிறத்துக்கே ‘எம்.எஸ் ப்ளூ’ என்று பெயர் வரும் அளவுக்கு மக்கள் நினைவுகளில் ஓவியமாய்ப் பதிந்த வர். பாரம்பரிய இசையுலகுக்கு எம்.எஸ். வழங்கிச் சென்றிருக்கும் பங்களிப்பு காலத்தால் கரைக்க முடியாத பொக்கிஷம்.

திரையுலகுக்கு மிகக் குறைந்த பங்களிப்பே செய்திருந்தாலும் சில படங்களின் மூலமே தனிப்பெரும் நட்சத்திரமாக ஆகி தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையும் வசீகரித்தார். திரைப்படங்களில் நடித்து அவற்றில் அவர் பாடிய பாடல்கள், இசையில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் பிரியமான பிம்பமாக எம்.எஸ்-ஸை உயர்த்திப் பிடித்தன.

வசீகரமான பெரிய கண்கள், குங்குமத் திலகம், மினுங்கும் வைரத்தோடு, மூக்கின் இருபுறமும் துலங்கும் மூக்குத்திகள், தலையில் எப்போதும் தவழும் ஜாதி மல்லிப்பூ என வாழ்நாள் முழுவதும் ஒரு இலச்சினையைப் போல வலம் வந்தவர்.

11 வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கி, புகழைத் தன்னை நோக்கி ஈர்த்த சுப்புலட்சுமி தனது 21 வயதில் தமிழ் சினிமாவின் தந்தை கே. சுப்ரமணியத்தால் ‘சேவாசதனம்’ தேசபக்தி திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், சுப்புலட்சுமியின் திரைப் புகழை உலகறியச் செய்தவர்கள் இருவர். ஒருவர் அவரது கணவர் டி.சதாசிவம். இன்னொருவர் அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர். டங்கன். அவர் ஹாலிவுட்டிலிருந்து ஒளிப்பதிவில் பயிற்சி பெற்று, 1935-ல் தனது நண்பர் மணிலால் டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். மணிலால் டாண்டனுக்கு உதவியாகப் பணிபுரிந்த படம் நின்றுபோனது. அடுத்து, தமிழிலும் இந்தியிலும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்த டங்கன் தமிழிலும் இந்தியிலும் 17 திரைப்படங்களை இயக்கினார்.

‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்குவதற்கான நிதி உதவிக்காக எம்.எஸ் ஏற்கெனவே ‘சாவித்ரி’ திரைப்படத்தில் கணவர் சதாசிவத்தின் வலியுறுத்தலால் நாயகியாக நடித்திருந்தார். டங்கனும் ஆனந்த விகடனில் தொடராக வந்திருந்த சதி லீலாவதியைத் தமிழில் எடுத்துத் தனது திரைப் பயணத்தைத் தமிழில் தொடங்கியிருந்தார். விகடன் பத்திரிகை வழியாக சதாசிவத்தை சந்தித்த எல்லீஸ் ஆர்.டங்கன், ‘சகுந்தலை’ மற்றும் மீரா’ ஆகிய திரைப்படங்களில் எம்.எஸ்-ஐ ஒப்பந்தம் செய்தார். சகுந்தலையும் மீராவும்தான் அவருக்கு பக்திப் பாடகர் என்ற தெய்வீக பிம்பத்தை நிலைப்படுத்திய படங்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக அழகை அடையாளம் கண்டு திரையில் சரியாக வெளிப் படுத்திய பெருமை டங்கனையே சேரும். எம்.எஸ்-ன் முகத்துக்கு பிளாஸ்டர் வார்ப்பெடுத்து, நுட்பமாக அவதானித்து அவர் முகத்துக்கு வெவ்வேறு கோணங்களில் பொருத்தமான ஒளி யமைப்பை உருவாக்கியவர் அவர்.

1940-ல் எடுக்கப்பட்ட சகுந்தலை படத்தின் 70% காட்சிகள் வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை. தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் பவன் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியாக இருக்கும் இடத்தில்தான் அக்காலகட்டத்தில் நியூடோன் ஸ்டுடியோ இருந்தது. அதன் பின்புறம்தான் மீராவும் சகுந்தலையும் படம்பிடிக்கப்பட்டன என்கிறார் மோகன் வி.ராமன்.

மீராவில் எம்.எஸ் ஏற்ற கதாபாத்திரம் தனித்தன்மையும் உறுதியும் கொண்ட ஆளுமையாக வெளிப்பட்டிருப்பதைப் படம்பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்கிறார் திரைப்படத் திறனாய்வாளரான கே.ஹரிஹரன்.

தமிழ் சினிமாவில் அர்த்த பூர்வமான ‘க்ளோஸ் அப்’ காட்சிகளை அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர். டங்கனின் சிறந்த படம் மீரா என்கிறார்கள் விமர்சகர்கள். மீராவின் படப்பிடிப்பில் நடந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றைத் தனது சுயசரிதையில் பதிவுசெய்துள்ளார் எல்லிஸ் ஆர்.டங்கன்.

“மீரா படத்தின் ஒரு காட்சி குறித்து எனக்கு இப்போதும் பெருமிதம் உண்டு. எம்.எஸ்-ஸுக்கு அழகிய பெரிய கண்கள். அவர் பங்கேற்கும் பாடல் ஒன்றில் அந்த அழகிய கண்களை மட்டும் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த சிறப்பு ஒளிச்சாதனத்தைப் பயன்படுத்தி அவரது கண்களைப் படம் பிடித்தேன். கண்களுக்கு மேலும் கீழும் டிப்ஃயூசன் திரையை அமைத்துப் படம்பிடித்தேன். ஃபைனல் கட்டில் அவரது கண்களின் க்ளோசப் மட்டுமே தெரியும். அது திரையை நிறைப்பதாக இருக்கும். அற்புதமான ஓவியம் போன்ற விளைவு அது” என்கிறார்.

மீரா படப்பிடிப்பின் ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசத் திணறிய எம்.எஸ், மீரா படப்பிடிப்பின் முடிவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார் என்பதைக் குறிப்பிடும் எல்லிஸ் ஆர்.டங்கன், ஒரு முழுமையான திரைநட்சத்திரமாக தன் திறன்களை பரிபூரணமாக்கிக்கொண்டவர் எம்.எஸ் என்கிறார்.

மீரா திரைப்படத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களையும் எம்.எஸ்தான் பாடினார். அவற்றில் ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இன்றைக்குக் கேட்பவர்களையும் உறைய வைத்துவிடும் அனுபவமாக இருக்கிறது. மீராவில் அவர் பாடிய பாடல்கள்தான் ‘இந்தியாவின் குயில்’ என்ற பட்டத்தை சரோஜினி நாயுடுவிடம் அவருக்குப் பெற்றுத்தந்தது.

அற்புதமான இசைத்திறன், பேரழகு, புகழ் ஏறாத தெய்வீக ஆளுமை என எல்லாப் பொக்கிஷங்களும் இணைந்த எம்.எஸ்ஸை அவர் வாழ்ந்த காலத்தில் புகழாதவர்கள் குறைவு எனலாம். பாரத் ரத்னாவாக அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்-ஸுக்கு ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதியின் மையப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் சிலையும் மும்பை சண்முகாநந்தா சபாவில் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிலையும் எல்லைகளைக் கடந்த இசைச் சொரூபம் எம். எஸ். சுப்புலட்சுமி என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

vikatan.com
தனி திராவிடநாடு கேட்டு போராடியது அந்தகட்சி. "அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு!" என்ற எதுகைமோனையாக மேடைகளில்  முழங்கிய அக்கட்சியின் முக்கிய தலைவரான அண்ணாவின் பேச்சினால் “நான்சென்ஸ்” என்று எரிச்சலானார் பிரதமர் நேரு.
நாடு சந்தித்த பெரும் பிரச்னையின் எதிரொலியாக அந்த கோரிக்கையை கண்ணியமாக சற்று தள்ளிவைத்தார் அந்த தலைவர். அவர் அண்ணா என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட அண்ணாதுரை.

பெரியாரின் அணுக்க தொண்டரான அண்ணாவுக்கு, பெரியாரின் திடீர் திருமணம் மற்றும் இந்திய விடுதலையின் மீதான பார்வை இவை பெரியாரின் மீது முரண்பாடு கொள்ளவைத்தது. விளைவு, 
கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் 1949 ல் திமுக என்ற கட்சி உதயமானது. அண்ணா அண்ணா என்று கொண்டாடப்பட்டார் அண்ணா.

கட்சியின் பெயர் வேறானாலும் அடிப்படையில் சிற் சில மாற்றங்களுடன் திராவிடர் கழகத்தை ஒட்டியே செயல்பட்டது.  தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட திமுக, பங்கெடுத்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 13 இடங்களை கைப்பற்றியது. அண்ணாவின் அனல்தெறிக்கும் பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர் பட்டாளத்தின் தளபதியானார் அண்ணா. பெரியார் என்ற  போர்க்குணம் கொண்ட தலைவரை பகைத்துக்கொண்டாலும், கட்சியின் தலைவர் பதவி பெரியாருக்கானது என  அதை நிரப்பாமல் விட்டுவைத்தார். 

கண்ணீர்த்துளிகள் என பெரியாரால் காயப்படுத்தப்பட்டாலும், கண்ணியம் குறைவான வார்த்தைகளால் என்றும் பெரியாரை பேசியதில்லை அண்ணா. அந்த கண்ணியம்தான் அண்ணா.
1967 தேர்தலில்  அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. திமுக. பதவி ஏற்பதற்கு முன்தினம், வெற்றி பெற்ற மற்ற தலைவர்கள் பதவியேற்பு விழாவில், தாங்கள் எந்த சூட் அணிவது, அதற்கு  எந்த ரக  சென்ட்  பயன்படுத்துவது என “ஆழ்ந்த” சிந்தனையில் இருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா.

“தவறு செய்துவிட்டோம். இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது.இன்னும் சில காலம் நாம் பொறுத்திருந்திருக்கவேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே நம்மை நம்பி துார எறிந்துவிட்டு நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள்.  நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பதை எப்படி நிறைவேற்றுவது ” என தன்னை வாழ்த்த வந்த கட்சியின் 2 ம் கட்ட தலைவர்களிடம் புலம்பினார். ஆனாலும் அடுத்தடுத்து அண்ணா, ஆட்சி நிர்வாகத்திலும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்து வதிலும் தேர்ந்தவரானார்.

67 ல் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ், ஆட்சிக்கட்டிலுக்கு இன்றுவரை அந்நியமாகிப்போனதற்கு அண்ணாவே காரணம். இன்றும் அவர் வழி வந்த தலைவர்களின்  அலங்காரமாகவே தமிழகம் இருப்பதே இதன் சாட்சி. அண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப்பேசிவிடமுடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர்.  ஒருமுறை பெரியாரை காண சுதேச கிருபளானி வந்தார். அந்த வார  “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார்.
இதை குறிப்பிட்ட கிருபாளினி," நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார்.  அதற்கு பதில் கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே,  குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவபக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாக போட, அமைதியானார் கிருபளானி. அதுதான் அண்ணாவின் நாவன்மை.

மாநிலங்களவைக்கு தேர்வாகி சென்ற அண்ணாவின் முதல் கன்னிப் பேச்சை கேட்டு “நான்சென்ஸ்’ என்று அண்ணாவை கண்டித்த அதே நேரு, உணர்ச்சிவயப்பட்டு ‘அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.பேசவிடுங்கள் என சபாநாயரை கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது.
அண்ணா முதல்வராவதற்கு முன்புவரை காஞ்சியில்தான் வசித்தார்.  மேல்தளத்துடன் கூடிய அந்த இல்லத்தில் கால்பதிக்காத திராவிட இயக்க தலைவர்கள் இல்லை. பொது வாழ்க்கையிலும் திரைத்துறையிலும் வேகமெடுத்து அண்ணா இயங்கி வந்த அந்நாளில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். சிவாஜி, எம்.ஜி.ஆர் , கே.ஆர். ராமசாமி, அரங்கண்ணல், கண்ணதாசன், கருணாநிதி என இன்னும் எத்தனையோ தலைவர்கள் அருகே உள்ள வீட்டு திண்ணைகளில் மொய்த்தபடி இருப்பார்களாம். 

அண்ணா இரவு நெடுநேரம் வரை எழுதியும் பேசிக்கொண்டிருக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் காலையில் சீக்கிரம் எழமாட்டார். இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருக்காக காலை 5 மணியிலிருந்தே காத்திருப்பர் எதிரே உள்ள அவரது உறவினர் வீட்டில். அச்சமயங்களில் அவரது தொத்தா ராசாமணி வந்திருப்பவர்களிடம் கிண்டலாக ‘பாருங்க, கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தை வெச்சுட்டு இவன் மட்டும் அதை ஒரு நாளும் பார்க்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறான் ’ என சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியால் அலறுமாம். எத்தனை மணிநேரமானாலும வந்தவர்கள் யாரும் அண்ணாவை பாரக்காமல் நகரமாட்டார்களாம். கலைவாணர் போன்ற மேதைகளும் அண்ணாவின் திறமைக்கு மதிப்பளித்து இப்படி காத்திருந்து பார்த்து சென்றிருக்கிறார்கள்.
அமைதியான சூழலில் எழுதுவதையே விரும்பும் அண்ணா, அதற்காக தேர்வு செய்வது இரவு நேரத்தையே. கத்தை கத்தையாக தாள்களை எடுத்துக்கொண்டு மேலே 2வது தளத்தில் இருக்கும் சிறிய கம்பிகள் வேயப்பட்ட அறைக்குள் புகுந்துகொள்வார். ஒவ்வொரு தாளையும் எழுதி முடித்ததும் அதை பத்திர்பபடுத்தும் வழக்கம் அவரிடம் இல்லை. எழுதி முடித்த தாளை அப்படியே மேஜையிலிருந்து நழுவவிட்டுவிடுவார். அவருக்கு உதவியாக இருக்கும் உறவுப்பையன் அதை எடுத்த எண் வாரியாக அடுக்கித்தருவான். 

இப்படி எழுதுவதில் சுவாரஸ்யமான வழக்கம் கொண்டவர். முதல்வரானபின்கூட அந்த வீட்டின் பழமையை அப்படியே தொடரச்செய்தார். சாமான்யனாக பிறந்து சாதனையாளனான அண்ணா இறப்பிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.அவரது இறுதிப்பயணம் கின்னஸில் இடம்பெற்றிருக்கிறது. எந்த தலைவரின் இறுதி ஊர்வலத்திலும் இதுவரை இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லலையாம்.  ஓர் இரவு நாடகத்தின் பவளவிழாவுக்கு தலைமை வகிக்க வந்த புரட்சிக்கவிஞர் பாரதிததாசன் தன் பாராட்டுரையில் அண்ணாவை ‘அறிஞர்”  அண்ணாத்துரை என்று குறிப்பிட, பின்னாளில் அறிஞர் என்றாலே அண்ணா என்றானது.

முதல்வரானபின் எதிர்கட்சியினரும் பாராட்டும்படி அவரது பேச்சும் செயலும் அமைந்தது. ஒரு சமயம் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அண்ணாவிடம், மிருககாட்சி சாலைக்கு நான் தந்த ஆண்புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் தந்த பெண்புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்ப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிப்பேச, உடனே குறுக்கிட்ட அண்ணா ‘சம்பந்திகள் இருவரும் உட்காரந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்னையை” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது .
1963 ல் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினர். அவையில் சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அண்ணா, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என் லிங்கம் என்ற உறுப்பினர்,"தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிடப்போகிறீர்கள்?" என்று கேட்டார் . “நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கீறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்றதும் பதிலேதுமில்லை எதிர்கட்சியிடமிருந்து. இறுதியில் தமிழக முதல்வரானதும் அதை நிறைவேற்றி தன் பிறந்த நாட்டுக்கு பெயர் சூட்டிய பெருமையை பெற்றார் அண்ணா. 

கட்சியிலும், மக்கள் மத்தியிலும் அண்ணாவின் புகழ் வளர்ந்துகொண்டிருந்த அதே சமயம் அண்ணாவுக்குள் ளும் ஒன்று சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருந்தது. அது புற்றுநோய். 1968 ல் மருத்துவக்கல்லுரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துனர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையானது. இதை கண்டித்து பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தனர். .

அண்ணா தலையிட்டு அதை வாபஸ் பெற செய்தார். ஆனால் மாணவர்கள் தரப்பு சமாதானம் அடையாமல் பிரச்னையை பெரிதாக்கினர். பேச்சுவார்த்தைக்கு சென்ற அண்ணாவை அவர்கள் அவமதிப்பு செய்தனர். அவர்களிடம் அண்ணா நடத்துனர் சார்பாக மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கிவரவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவருக்கு வாயிலிருந்து ரத்தம் வந்தது. அதுதான் அவருக்கு கேன்சர் வந்ததற்கான முதல் அறிகுறி. 

நோயின் தாக்கம் கொஞ்சநாளில் அதிகரிக்க, மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா பயணப்பட்டார் அண்ணா.  தற்காலிகமாக நோயிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பியவர், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி பொதுக்கூட்டங்கள், கட்சிப்பணி, ஆட்சி என தன்னை பரபரப்பாக்கி கொண்டார்.
சென்னை மாகாணத்தக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப் பட்ட அன்று வாந்தியும் மயக்கமுமாக சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன், "என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருபபதை காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார் எரிச்சலாக. நோயின் கடுமையிலும் கலந்துகொண்டு பேசினார் விழாவில். தொடரந்து சிகிச்சையளித்தும் பலனின்றி அவரது அரசியல் பயணத்திற்கு அவரது உடல் இடம் கொடுக்காமல்  1969 பிப்ரவரி 3 ல் இயற்கை எய்தினார் அண்ணா.

அண்ணாவின் மீது அளப்பரிய காதல் கொண்டிருந்த எம். ஜி. ஆர்.,  அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980 ம் ஆண்டு   நினைவு இல்லமாக்கினார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, ”இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையே காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும் சாமான்யனாகிய நானும் குடியரசு தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார்.

அநேகமாக  மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை  குடியரசு தலைவர் திறந்து வைத்தது என்பது இதுவே முதல்முறை. ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில்,  "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவை பார்த்தாலும் அவர் ஒரு காந்தியவாதியாக இருந்தவர் எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு 2 பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை.  அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.
நினைவு இல்லத்தை அலங்கரிக்கும் புகைப்பட அணிவகுப்பு நம்மை அண்ணா காலத்துக்கே அழைத்துச் செல்கிறது. அண்ணாவின் திருமண பத்திரிக்கை, அரும்பு மீசை முளைத்த இளவயது சம்பத்துடன் அளவளாவும் அண்ணா, சட்ட எரிப்பு போராட்டதில் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்படும் அண்ணா, திருச்சி மத்திய சிறையிலிருந்தபோது அவர்  பயன்படுத்திய தட்டு டம்ளர் மற்றும் அவரது அழகிய கையெழுத்திலான டைரிகள், அவரது சில கடிதங்கள் அவரது பெல்ட் ,அண்ணாவின் புகழ்பெற்ற மூக்குபொடி டப்பா ,கண்ணாடி, புகழ்பெற்ற அவரது படைப்புகளை தாளில் வடித்த அவரது மரப் பேனாக்கள் என அதிசயிக்கவைக்கிறது.

வலப்புறம் அவரால் எழுதப்பெற்ற படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதையொட்டிய அறையில் அண்ணா பயன்படுத்திய நுலக அறை உள்ளது. அவர் அமர்ந்து படிக்க பயன்படுத்திய சேர்கள் . செருப்புகள் என நினைவுகளை பின்னோக்கி இழுத்து செல்கிறது அந்த அறை. டைரி ஒன்றில் அண்ணா, மணிமணியான கையெழுத்தில் எழுதிய ஜோக் ஒன்று வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.

ஹோட்டலில் சாப்பிட வந்தவர் "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமாகவும் இருக்கு...சின்னதாவும் இருக்கே?" என்கிறார்.  அதற்கு சர்வர்,"பின்னே என்னங்க...மோசமாகவும் இருந்து பெரியதாகவும் இருந்தா திண்ணமுடியாதுங்களே? அதான்!" என்கிறார்.

பரபரப்பான அரசியலின் நடுவே தன் தனிமையை ஓவியங்கள் வரையவும் நகைச்சுவை எழுதவும் பயன்படுத்த அண்ணா போன்ற அறிவாளிகளால் மட்டுமே முடியும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவர் வரைந்த இந்த அழகிய படைப்புகள். அண்ணாவை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது காட்சிக்கு வைக்கப்பட்ட அவரது மாதிரி உடை.  அந்நாள் முதல்வாரன அண்ணாவுடன் இந்நாள் முதல்வர் ஜெயலலிதா பரிசு பெறும் அரிய புகைப்படம் ஒன்றும் உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து அறைகளிலும் புகைப்படங்கள் மிரட்டுகின்றன.

சந்திரோதயம் சந்திரமோகன் போன்ற அவரது நாடகங்களில் அவரே ஏற்று நடித்த பாத்திரங்களின் காட்சிப்பதிவுகளும் அரியன. கட்சி பேதமின்றி ராஜாஜி, காமராசர், இந்திரா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் அண்ணா காட்சி தரும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்நாளைய வரலாற்று சம்பவங்களுக்கு அரிய சாட்சிகள். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற அண்ணா  ஈரோட்டுக்கு சென்று அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கிய அரிய நிகழ்விற்கும் காட்சிப்பதிவும் இங்கு உண்டு. கண்ணீர்த்துளிகள் என தம்மால் விமர்சிக்கப்பட்ட அண்ணாவின் இந்தச்செயல் தன்னை சங்கடத்திற்குள்ளாக்கிவிட்டதாக பின்னாளில் பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.
புற்றுநோய்க்கு ஆட்பட்டு அமெரிக்க சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மனதை பிழிகிறது நமக்கு. அமெரிக்காவிலிருந்து இங்கு தம் தொண்டர்களுக்கு  தலைவர்களுக்கும் அண்ணா எழுதிய கடிதங்களில் தமிழகத்தின் மீது அந்த தலைவனுக்கு இருந்த அன்பை வெளிப்படுத்துகிறது அந்த கடிதங்கள். நண்பர்களுடன் ஓய்வான ஒரு தருணத்தில் டெல்லி சுற்றுலா சென்றபோது, ஒரு குழந்தையைப்போல குதூகலத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மேதைகள் குழந்தைத்தன்மை உடையவர்கள் என்பதை உறுதி செய்கிறது.

மேல் மாடியில், புகழ்பெற்ற அவரது படைப்புகளை அவர் அமர்ந்து எழுதிய மேடை இன்றும் அதே கர்வத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த இடத்தில் சில சமயங்களில் நேரம்போவதே தெரியாமல் விடியற்காலை வரை கூட எழுதிக்கொண்டிருப்பாராம் அண்ணா. மேடையின் இடப்புறம் தான் வளர்த்த நாய், புறா, மான் இவைகளுக்கான கூண்டு அறை, அண்ணாவின் நினைவுகளை சுமந்து மட்டும் இருக்கிறது இப்போது.
 
அருகிலுள்ள புகைப்படத்தில் ஓர் அரிய காட்சி. அண்ணாவின் படத்தை திறந்து வைத்ததுதான் கலை வாணரின் இறுதி நிகழ்ச்சி. அதே போல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலைவாணரின் சிலை திறந்ததுதான் அண்ணாவின் இறுதி நிகழ்ச்சியானது. இந்த அற்புத ஒற்றுமை இந்த 2 தலைவர்களுக்கு இடையேயான நட்பை காட்டுகிறதெனலாம். அமெரிக்கா சென்று வந்த பின் நடக்க சிரமப்பட்ட அண்ணா, சக்கர நாற்காலியை பயன்படுத்தியிருக்கிறார் அதுவும் இந்த நினைவு இல்லத்தை உயிரோட்டத்தோடு வைக்கும் ஒரு அற்புத அடையாளம்.
-எஸ்.கிருபாகரன்

Sunday, September 13, 2015

சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் சிகிச்சை நேரத்தில் மருத்துவப் பிரதிநிதிகள் தங்களது நிறுவன மருந்துகளை பரிந்துரை செய்ய வருவதால், நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை மற்றும் அதிநவீன மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகள், புறநோயாளிகளை மருத்துவர்கள் தினமும் சந்தித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இங்கு இருதயம், மூளை, நரம்பியல், எலும்பு, பல், இரைப்பை, குடல், குழந்தைகள் நலப்பிரிவு என பல்வேறு துறை சார்ந்த பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் போல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை சந்திக்க தினமும் மருத்துவப் பிரிதிநிதிகள் வருவது அதிகரித்து வருகிறது என்றும் இவர்கள் மருத்துவர்களை சந்தித்து தங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரை செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால், குறிபிட்ட நேரத்தில் நோயாளிகள் மருத்துவர்களை சந்திக்க முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
தனி நேரம் ஒதுக்க நடவடிக்கை: டீன்
சேலம் அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘சேலம் அரசு மருத்துவமனைக்கு டிபிசி (தமிழ்நாடு பர்ச்சஸ் கமிட்டி) சிபிசி (சென்ட்ரல் பர்ச்சஸ் கமிட்டி) மற்றும் டிஎன்எம்சி (தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்) ஆகியவற்றின் அனுமதியுடன் மருத்துவப் பிரதிநிதிகள் மருத்துவர்களை சந்திக்கின்றனர்.
பிரதிநிதிகள் கூறும் மருந்துகள் வாங்கும்தன்மை இருந்தால், என்னிடம் மருத்துவர்கள் எடுத்துக் கூறுவார்கள். அதன்படி, நாங்கள் தேவையான மருந்துகளை டிஎன்எம்சி ஒப்புதல் பெற்று கொள்முதல் செய்வோம். மருத்துவப் பிரதிநிதிகள் பணி நேரத்தில் வருவதால், நோயாளிகளுக்கு பாதிப்பு என்கிற போது, அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தனிநேரம் ஒதுக்கப்பட்டு, அப்போது, மட்டுமே மருத்துவர்களை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், இதுகுறித்து மருத்துவத் துறை பேராசிரியர்கள் கூட்டத்தில் தெரிவித்து, மருத்துவப் பிரதிநிதிகளால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களில் சிலர் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 275 பேரின் சடலங்கள் திருச்சி விமான நிலையம் வழியாக கொண்டுவரப்படுகின்றன.

அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வீடு, நிலங்களை விற்றும், வட்டிக்கு கடன் வாங்கியும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, சவுதி, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடு களுக்கு வேலைக்குச் செல்கின் றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே ஏஜென்ட்டுகள் கூறியபடி நல்ல வேலை அமைகிறது.
பெரும்பாலானோர் குறைந்த ஊதியத்திலும், கொத்தடிமைகளாக வும் அங்கு பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதியில் திரும்பினால் வாங்கிய கடனைக்கூட அடைக்க முடியாதே என்பதால், நிர்பந்தத்தின் காரணமாக அவர்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

குடும்பத்துக்காக இப்படி தன் னையே வருத்தி உழைக்கும் இவர்களில் பலர் வெயில் தாங்கா மலும், விபத்துகளில் சிக்கியும், உடல்நலக்குறைவாலும் அங் கேயே இறப்பை சந்திக்கும் துயர நிகழ்வு அதிகரித்து வருகிறது. பணம் சம்பாதிக்கச் சென்ற மகனோ, கணவரோ சடலமாகத் திரும்பு வதைப் பார்த்து குடும்பத்தினர் கதறித் துடிக்கும் பரிதாபம் திருச்சி விமான நிலையத்தில் ஏறக்குறைய அன்றாட நிகழ்வாகிவிட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை விமானநிலையங் களைவிட பல மடங்கு அதிகமான சடலங்கள் திருச்சி விமான நிலையம் மூலம் கொண்டுவரப்படுகிறது.

இதுபற்றி விமான நிலைய கார்கோ பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “திருச்சி சர்வதேச விமான நிலையம் ஏற்றுமதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை எண்ணி பெருமைப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருவது மிகுந்த வேதனை யாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 275 சடலங்கள் விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. இவர்களில் பெரும் பாலானவர்கள் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 2014-15-ம் நிதியாண் டில் 272 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட் டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 110 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் சடலங்களை வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கான சுமைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படு கிறது. சுங்கத் துறையின் தீர்வைக் கட்டணம், சேவைக் கட்டணம், விமான நிலைய ஆணையக் குழுமத்தின் கையாளும் கட்டணம் என எதுவும் வசூலிப்பதில்லை” என்றனர்.

விமான நிலைய மருத்துவ பிரிவி னர் கூறும்போது, “வெளிநாடு களில் இருந்து கொண்டுவரப்படும் சடலத்துடன், இறந்தவர் வேலை பார்த்த நாட்டின் இறப்புச் சான்றிதழ், தூதரக தடையில்லாச் சான்று, உடற்கூறு சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலானவர்களின் மரணத் துக்கு காரணம் உடல்நலக்குறைவு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலரது மரணத்துக்கு விபத்து என காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். கொலை செய்யப்பட்டு கொண்டு வருவது மிகக் குறைவு.

இறந்தவர்களில் 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண் களே அதிகம். பெண்களின் எண் ணிக்கை மிகக் குறைவு. இப்படி கொண்டுவரப்படும் சடலம், ஆய் வுக்குப்பின், சுங்கம் மற்றும் கார்கோ துறையினர் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு அரசின் இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்றனர்.



Saturday, September 12, 2015

உலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் சாம்பார் வடை!

vikatan.com

வடை என்பது நம் வாழ்வியலில் பல்வேறு பரிணாமங்களில் கலந்து விட்ட ஒரு உணவு. தெருவோரக் கடைகளில் தேநீருடன் எடுத்துக் கொள்கிற நொறுவையிலிருந்து, பெருவிருந்துகளில் பரிமாறப்பட வேண்டிய முக்கிய அடையாள உணவு என்கிற அந்தஸ்து வரை வடையின் வடிவங்கள் நம் உணவுத் தளத்தில் அதிகம். அதன் பொன் நிறமும், முறுகலான மேனியும், உதிர்க்கப்படும்போது அவிழ்கிற வெண்மையும், இளஞ்சூட்டில் வாயில் இடும் போது அது கரையும் சுகமும் மானிட இனத்தின் சிறு சிறு சுவர்க்கங்களில் ஒன்று.

அத்தகைய வடையின் பெருமை ஸ்விட்சர்லாந்து வரை அறியப்பட்டு அனுபவிக்கப்படுகிறதென்று சொன்னால் அது மிகையல்ல. 

2012 ஆம் வெளியிடப்பட்ட ’கின்னஸ்’ புத்தகத்தில், ‘இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பழமையான சைவ உணவகம்’ என்று இடம்பெற்ற உணவகம் தான் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள, ஜீரிச் நகரில் அமைந்துள்ள ‘ஹாஸ் ஹில்ட்ல்’

சைவ உணவுப் பழக்கத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உலகெங்கிலுமுள்ள சிறந்த சைவ உணவுகளைத் தயாரித்து வழங்குவதில் நூறாண்டுகளுக்கும் மேலாக சாதனை நிகழ்த்தி வரும் இவ்வுணவகம் இந்திய உணவுகளுக்குத் தனிச்சிறப்பு மிக்க இடமளித்து வருகிறது.


1898 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகம், உலகச் சைவ உணவின் சின்னமாக இன்று திகழ்வதன் பின்னால் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

இந்த உணவகம் திறக்கப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் சைவம் மட்டுமே உண்ணுபவர்களை ‘புல்தின்னிகள்’ என்று சொல்லிக் கேலி செய்து கொண்டிருந்த வழக்கம் இருந்தது. அந்நிலையில், போதிய வரவேற்பில்லாமல் தவித்து கொண்டிருந்த இந்த உணவகத்தில் 1903 ஆண்டு ஹில்ட்ல் என்பவர் மேலாளராகப் பதவியேற்றார்.

அதற்கு முன் தையல்காரராக இருந்த ஹில்ட்ல், இனம்புரியாத ஒருவித நோயால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களை நாடியும் பயனில்லாது போன நிலையில், ஒரு இயற்கை மருத்துவரைச் சந்தித்திருக்கிறார் ஹில்ட்ல். அன்னார், அசைவ உணவு உட்கொள்வதை நிறுத்தினாலே இந்நிலை குணமாகிவிடும் என்று சொல்ல அங்ஙனமே ஹில்ட்லும் சைவத்துக்கு மாறினார். ஆறே மாதங்களில் குணமடைந்த ஹில்ட்ல் அக்கணம் முதல் தீவிர சைவ உணவாளராகவும், அந்நெறி பரப்புநராகவும் மாறி இருக்கிறார். இவரது வாழ்வில் நடந்த இச்சம்பவத்தின் பின்னால் சைவ உணவு குறித்த பார்வை ஸ்விஸ் மக்களிடையே மெல்ல மாறத் துவங்கியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்குப் பின், அவரது மருமகள் ஒருமுறை இந்தியா வந்தபோது நம் நாட்டில் வழங்கப்படும் சுவைமிக்க சைவ உணவு வகைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறார். அதன் விளைவாகவே, நம் நாட்டு உணவுகளை அங்கும் அறிமுகப்படுத்தலாமே என்ற எண்ணம் ஏற்பட்டு அவர் ஆரம்பித்த அந்த முயற்சி இன்று உலகம் வியக்கும் வண்ணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

நம் முன்னாள் பிரதமர் மொரார்ஜீ தேசாய் உண்ட பெருமை இந்த உணவகத்திற்கு உண்டு. அது மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜூரிச் நகரிலுள்ள இந்தியர்களுக்கு இது சொந்த வீட்டுச் சமையலறையாகத் திகழ்கிறது. சாம்பார் வடை, பாலக் பன்னீர், மெட்ராஸ் தாலி (முழு சாப்பாடு), பொறியல்கள், சட்னி என நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வண்ணமாக அமைந்திருக்கும் இந்த ஸ்விட்சர்லாந்து உணவகம், உலகை இணைக்கும் உந்துசக்தி உணவு என்ற உண்மையை உணர்த்தும் காலக்குறியீடு.

 ச.அருண்

AICTE to rank colleges, seek inputs


AICTE to rank colleges, seek inputs

CHENNAI: The AICTE will soon be ranking technical institutions across the country and involving stakeholders of these institutions in decision-making by seeking their recommendations on various key issues.

AICTE chairman Anil Sahasrabudhe on Friday met regional AICTE directors of Tamil Nadu, Telangana, Andhra Pradesh and Pondicherry along with the heads and representatives of technical institutions in these states in Chennai. At the meeting, Sahasrabudhe announced that the technical body would start the ranking process in three months.


The AICTE rankings of the institutions will be based on several parameters such as quality of infrastructure, quality of faculty and output, research and innovation, placements, entrepreneurial activities and collaborations with other institutions, among others.

Anna University in Tamil Nadu had introduced a similar ranking system of all engineering colleges under it, but this is based only on academic results, semester-wise.

This was the first such meeting by the AICTE chairman who will be travelling to several states over the next 10 days to discuss the future of technical institutions. During these meetings, the AICTE will also seek suggestions on changes to be made in administrative matters, be it setting up of new institutions or closure of existing ones.

"The meetings are being held to discuss a holistic development of institutions in the country. We are hoping that these interactions will help both the AICTE and the institution stakeholders to have a mutual understanding about the issues regarding quality and functionality of colleges," he said.

Some of the issues raised during the meeting in Chennai was the teacher-faculty ratio, cadre ratio, availability of PhD scholars for teacher posts and autonomy. There would be, however, some demands that the AICTE may find difficult to accept. A senior academician who participated in the meeting said that representatives of some colleges felt that the existing teacher faculty ratio of 1:15 should be revised to 1: 20. This, academics feel, may dilute the quality of learning.

Some of the institutions also said that PhD qualification for the post of associate professors in institutions should not be mandated as there is a lack of PhD scholars to be appointed in institutions. "We find it hard to fill these positions as we need qualified doctorates for these posts. We hope that these recommendations will help in bringing about a revision in some of the policies," said an academician who wished to be anonymous.

The next meeting will be in Bangalore, when the AICTE chairman will hear out representatives of Karnataka and Kerala colleges.

தேவதைகளை இழந்த வீடுகள்!

Dinamani



By இடைமருதூர் கி. மஞ்சுளா

First Published : 12 September 2015 01:35 AM IST


இந்த உலகுக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எதையும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆனால், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் உறவுகளின் அன்பு, பாசங்களிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை, பாசத்தில் வழுக்கி விழாமல் இருக்க முடியவில்லை.
÷முன்பு, வானொலியில் "காணாமல் போனவர்கள்' பற்றிய அறிவிப்பு செய்வார்கள். அதில் ஓரிருவர்தான் குறிப்பிடப்படுவர், அதிலும் குறிப்பாக, மனநிலை சரியில்லாதவர், வயதானவர், திருவிழாவில் தொலைந்து போனவர்கள் இப்படியாகத்தான் இருப்பர். ஆனால், தற்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்தான் அதிகம் உள்ளனர்.
÷நாம் அன்றாடம் புழங்கும் சிற்சில பொருள்கள் தொலைந்து விட்டாலே உள்ளம் வெதும்புகிறோம். ஆனால், தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை காணாமல் போனால் அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபடும்?
÷காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது. 2014-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 3 லட்சம் சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களில் பெண் குழந்தைகளே அதிகம்.
÷இப்படி நடக்கும் குழந்தைக் கடத்தல் பற்றிய உண்மைச் சம்பவத்தை வைத்துச் சித்திரிக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அண்மையில் வெளியானது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர்-சிறுமியருக்கு போதை கலந்த இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுத்து, தாய்-தந்தை அழைத்துவரச் சொன்னதாகக் கூறி அவர்களை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு, அவர்களை முதலில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி, அவர்களின் கை, கால்களை ஊனப்படுத்தி தெருக்களில் பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் சம்பாதிக்கின்றனர்.
÷மேலும், குழந்தை இல்லாத வெளிநாட்டவருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை குழந்தைகளை விற்பது, உறுப்புகளுக்காகக் கொலை செய்வது, சிறுமிகளை பாலியலுக்குப் பயன்படுத்துவது என இப்படிப் பல சமூக விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
÷இவ்வாறு வெளிநாடுகளுக்குக் குழந்தைகளை விற்கும்போது போலியான தாய்-தந்தைகளை ஏற்பாடு செய்து, போலி ஆவணங்களைக் கொடுத்து இத்தொழிலைச் செய்து வருகின்றனர். அது மட்டுமல்ல, தொழில்நுட்ப வளர்ச்சியால், வலைதளம், இணையதளம் மூலமாகவும் செயல்படும் அளவுக்கு குழந்தைத் திருட்டு பரந்து விரிந்து வருகிறது.
÷குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், "குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் துப்பு துலக்குவதற்கு காவல் துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென காவல் துறையில் தனிப் படையும், சி.பி.ஐ.யில் தனிப் பிரிவையும் உருவாக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இலவசத் தொலைபேசி எண் "1098' திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது. இதே கருத்தையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்த அரசும் "தீவிர' நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
÷தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக மகாராஷ்டிரத்தில் 141, உத்தரப் பிரதேசத்தில் 96, தமிழகத்தில் 90, கர்நாடகத்தில் 73, கேரளத்தில் 49, பிகாரில் 28, தில்லியில் 23 எனக் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதைத் தொழில்ரீதியாகச் செய்வோர் நாடு முழுவதும் "நெட்வொர்க்' அமைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போது விழித்துக் கொண்ட தமிழகக் காவல் துறை, குழந்தைக் கடத்தலைத் தடுக்கத் தனிப் பிரிவை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
÷தமிழ்நாடு குற்றவியல் ஆவணக் காப்பகம் கொடுத்துள்ள தகவலில், "தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் 136 பேர், மற்ற அனைவரும் குழந்தைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் 2,982 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 1,700 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை' என்கிறது.
÷குழந்தைக் கடத்தல் பற்றி தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 44,475 குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் கூறப்பட்டுள்ளது.
÷தமிழ் நீதிநெறி நூல்கள், தர்ம சாத்திரங்கள் யாவும் பஞ்சமா பாதகங்களில் (ஐந்து பாவங்களில்) ஒன்று களவு என்கின்றன. இதில் கொலையும் அடங்கும். இதுபோன்ற பாதகம் செய்பவர்களிடமிருந்து பெற்றோர் தம் பிள்ளைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு, அறிமுகமில்லாத நபர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதையும், இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், யாரிடமும் எதையும் உடனே வாங்கக் கூடாது என்பதையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அதேபோல, பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கல்வியையும் பிள்ளைகளுக்குச் சிறிது நேரமாவது கற்பிக்க வேண்டும்.
÷இப்படிக் குழந்தைகளை இழந்து தவிக்கும் எண்ணற்ற பெற்றோரின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். "இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து' என்பார் (திருவாசகம்-நீ.வி.பா.9) மணிவாசகர். ஒரு மூங்கில் குழாய்க்குள் சென்ற எறும்பு, இரு பக்கங்களிலும் தீப் பற்றிக் கொண்டால், எப்படி அந்தப் பக்கமும் போக முடியாமல், இந்தப் பக்கமும் போக முடியாமல் தவிக்குமோ, அத்தகைய தவிப்புதான் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோரின் நிலையும்.
காணாமல் போன தங்கள் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியாத நரக வாழ்வே அவர்களுடையது. தவமிருந்து பெற்ற குழந்தை, ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் "தேவதை'தான். இப்படி தேவதைகள் இல்லாத வீடுகள் அதிகரித்து வருவதை உடனடியாகத் தடுத்தி நிறுத்தியாக வேண்டும்.

இது ‘ஜாக்பாட்’ வெற்றி தான்

தமிழ்நாட்டில் பொதுவாக பெரிய வெற்றியை அடைந்தால் ‘ஜாக்பாட்’ வெற்றி என்பார்கள். அதுபோல, ஒரு ‘ஜாக்பாட்’ வெற்றியை 2 நாட்களாக தமிழக அரசால் சென்னையில் நடந்து முடிந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு அடைந்திருக்கிறது. இந்த மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில்
2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய்க்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கூட்டுத்தொகையைவிட இது அதிகம்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. தொழில் அமைதி மிகுந்த மாநிலம் இது. இந்த மாநிலம் அறிவுசார் மையமாகவும் திகழ்கிறது. 1,900 கல்லூரிகளுக்குமேல் இருக்கிறது. எரிசக்தி, ஜவுளி, பயோ டெக், மருந்து உற்பத்தி, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, உணவு மற்றும் வேளாண் வர்த்தகம், வானியல், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், கனரக என்ஜினீயரிங், எலக்ட்ரானிக், ஹார்டுவேர்ஸ் போன்ற பல தொழில்களுக்கு முதலீட்டாளர்களின் சொர்க்கமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்த நிலையில், நடந்து முடிந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்சு, இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகள் பங்கு நாடுகளாக தங்களை பதிவு செய்திருந்தன. 15 நாட்களில் இருந்து தொழில்முனைவோர் வந்திருந்தனர். தொடக்கநாள் உரையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பிக்கையூட்டும், உற்சாகமூட்டும் உறுதிமொழிகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது, இவ்வளவு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒரு உந்துகோலாக அமைந்திருந்தது.

பொதுவாக தொழில்களெல்லாம் சென்னையை சுற்றியே அமைக்கப்படுகின்றன. ஆனால், தூத்துக்குடி துறைமுக வசதி உள்பட விமான நிலையங்கள், ரெயில்வே, சாலை, மின்சார வசதிகள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியே இல்லாத நிலைதான் இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாடும் அதேநிலையை உருவாக்கிவிடக்கூடாது என்ற உணர்வில், மாநாட்டை தொடங்கிவைக்கும்போதே, தென்மாவட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என்று முதல்–அமைச்சர் உறுதி அளித்தார். தென்மாவட்ட மண்ணின் சொந்தக்காரரான எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார், 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடியில் மதுரை, திருநெல்வேலியில் வளர்ச்சி மையங்கள் அமைக்க முதலீடு செய்யப்படும் என உறுதி அளித்து தொடங்கி வைத்தார். கிட்டத்தட்ட 50 சதவீதம் தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்திடப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் சம்மதத்தை வெளிப்படுத்தியது. இனி தமிழக அரசுதான் அவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்களுக்கு முதல்–அமைச்சர் உறுதி அளித்தது போல, 30 நாட்களுக்குள் அனைத்து ஒப்புதல்களும் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இந்த 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயில், 50 சதவீத முதலீடுகளுக்கான
பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டால் கூட, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வேலைவாய்ப்பு அபரிமிதமாக பெருகிவிடும். பொருளாதாரம் மேம்படும், உற்பத்தி பெருகும், தனிநபர் வருமானம் மளமளவென்று உயரும். அகில இந்தியாவை மட்டுமல்லாமல், உலகையே தமிழ்நாட்டை நோக்கி பார்க்க வைக்கும். அந்த நன்னாள் விரைவில் வருவது இனி அரசு துறைகளின், அரசு உயர் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது.

Friday, September 11, 2015

பணமாகப்போகும் தங்கம்!

logo

இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ஏழையோ, பணக்காரரோ எந்த வீடு என்றாலும், தங்கம் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. அதனால்தான் தமிழக அரசே ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இதுமட்டுமல்லாமல், லாபகரமானது என்ற வகையில், சேமிப்பிற்காகவும் தங்கத்தை வாங்குகிறார்கள். எந்தவொரு மங்களகரமான நிகழ்வு, அது குழந்தை பிறப்பில் தொடங்கி, திருமணம் வரையில் தங்கம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற ஒரு நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. இந்தியாவின் தங்க விற்பனையில், கடைகளில் கேட்டால் 75 சதவீதம் திருமண காலங்களிலும், பண்டிகை காலங்களிலும்தான் நடக்கிறது என்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 85 லட்சம் திருமணங்கள் நடக்கிறது.

இந்தியாவில் தங்க சுரங்கங்கள் இல்லாததால், வெளிநாடுகளில் இருந்துதான் நாம் இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கிறது. உலகிலேயே அதிகமாக தங்கம் வாங்குவது இந்தியாவில்தான். ஆண்டுதோறும் 800 முதல் ஆயிரம் டன் வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இப்படி தங்கத்தை இறக்குமதி செய்வதால், அதிகளவு அந்நிய செலாவணி போய்விடுவதால், நடப்பு கணக்கிலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுமட்டுல்லாது, இந்தியாவில் தற்போது, வீடுகளில் மட்டும் முடங்கிக்கிடக்கும் தங்கத்தின் அளவு 22 ஆயிரம் டன்னாகும். இப்படி முடங்கிக்கிடக்கும் தங்கம் யாருக்கும் லாபமில்லாமல் கிடப்பதைவிட, நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனளிக்கும் வகையில், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தையும், தங்க பத்திர திட்டத்தையும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி மந்திரி அறிமுகம் செய்தார். பிப்ரவரி மாதம் 28–ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் செயலாக்கத்திற்கு வருவதற்காக முடிவெடுக்கப்பட்டது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள்வரை வங்கிகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 30 கிராம் முதலீடு செய்ய முடியும்.

நாம் முதலீடு செய்யும் தங்கம் உருக்கப்பட்டு, அதன் தூய்மை தன்மைக்கு ஏற்ப எவ்வளவு தங்கம் முதலீடு செய்கிறோமோ?, அதே அளவு தங்கம் அந்த குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு திரும்பவும் நமக்கு அளிக்கப்படும். இதற்காக அளிக்கப்படும் வட்டியையும் தங்கமாகவே தருவார்கள். இதற்கு அடுத்ததிட்டம் தங்க பத்திர திட்டமாகும். இந்த திட்டத்தின்படி, சேமிப்பிற்காக தங்கமாக வாங்குவதைவிட, தங்க டெபாசிட்களுக்காக பணமாக கொடுத்து பத்திரமாக வாங்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த பத்திரத்திற்கும் வட்டியோடு பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக, இந்த இரு திட்டங்களும் பொதுமக்களால் வரவேற்கப்படும் என்றாலும், இன்னும் இதற்கு எவ்வளவு வட்டி தருவார்கள்?, என்னென்ன வகையான நிபந்தனைகள் இருக்கும்? என்பது அறிவிக்கப்படவில்லை. இதுபோன்ற திட்டங்களுக்கு கூடுதலாக வட்டி தருவதோடு இல்லாமல், வரிவிலக்கும் அளிப்பதில்தான் அதன் வெற்றியே அடங்கும். இதற்கான நடைமுறைகளும் எளிதாக்கப்படவேண்டும். மேலும், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின்கீழ், அந்த தங்கத்தை எங்கே, எப்படி வாங்கினீர்கள்? என்று கேட்கப்போவதாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக சிக்கலை ஏற்படுத்தும். மேலும், இவ்வாறு முதலீடு செய்யப்படும் தங்கம் என்றாலும் சரி, பத்திரம் என்றாலும் சரி, குறிப்பிட்டகாலம் என்று நிர்ணயிக்காமல், அவசரத்துக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்று நிர்ணயித்தால்தான் வசதியாக இருக்கும்.

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...