Sunday, November 8, 2015

உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு..

உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு..
vikatan.com

களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல்.

முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!


'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில்,பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் கமல் நடித்ததே இல்லை!

கமல் நடித்த படங்களைப் பாராட்டி பாலசந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் அழைப்பார்!

கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா. கதறித் துடித்தபடி அவர்களும் கொள்ளிவைத்தனர்!


ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!

எண்பதுகளின் மத்தியில் 'மய்யம்' என்ற இலக்கியப் பத்திரிகையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!

எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!

ஆரம்பத்தில் 'சிவாலயா' என்ற நடனக் குழுவை ஆரம்பித்து நடத்தினார் கமல்.அதற்குப் பிறகுதான் நடன உதவியாளராக தங்கப்பனிடம் சேர்ந்தார்!

ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனிகதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம்'பட்டாம்பூச்சி'!

'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!


கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு, முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று...'மருதநாயகம்'!

கடவுள் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும், ஆத்திகத்தை கமல்விமர்சனம் செய்வதில்லை!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!

தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்!

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!

கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!
 

'ராஜபார்வை' முதல் தம்பியுடன் இருந்து அலுவலகத்தைக் கவனிக்கிறார் அண்ணன் சந்திரஹாசன். கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான் இருக்கிறது!

ஏதோ மன வருத்தம்... சாருஹாசனும் கமலும் இப்போதும் பேசிக்கொள்வதுஇல்லை!

பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!

வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்ட தருணங்களும் உண்டு!

'ஹே ராம்' படம் முதல் டைரக்ஷனாக வெளிவந்தாலும், முன்னமே 'சங்கர்லால்'படத்தை, டி.என்.பாலு இறந்து போக, முக்கால்வாசிக்கு மேல் இயக்கியிருக்கிறார்!


கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து. தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய உண்டு!

அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது!

பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்!

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி,கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்!

ரஜினிக்குப் பிடித்த படமான 'முள்ளும் மலரும்' படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்தவரே கமல்தான்!
'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.

கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்'ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!

'சட்டம் என் கையில்' படம்தான் கமல் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்பது பலரும் சொல்லும் தகவல். ஆனால், அவர் 'பார்த்தால் பசி தீரும்'படத்திலேயே சின்ன வயதில் டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்!

ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவப் பிரியர் கமல். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம். அந்த நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள் பசியாறி விடுவார்களாம்!

ஆஸ்கர் விருது பெற்ற 'டிராஃபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர்ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்'டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!

நடிகர் நாகேசுக்கும் கமலுக்குமான உறவு 'அப்பா-மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம், 'கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேசுக்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!


கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. 'ஹே ராம்' படத்தின் முதல்வசனமே இப்படித்தான் இருக்கும்... 'சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம்'!

நல்ல மூடு இருந்தால், நண்பர்களிடம் தன் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விரல் ஜாலங்களை, குரல் ஜாலங்களுடன் கேட்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.இருந்தும் ஏனோ, இன்னமும் தொகுப்புகளாக வெளியிடாமல் தாமதிக்கிறார் கமல்!

''சந்திக்கும் மனிதர்களின் பேச்சுக்களை, நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும் ஆற்றல் எனக்குத் தெரிந்து சிலருக்கே உண்டு. இந்த ஆற்றல்கைவரப்பெற்றவர்கள் வரிசையில் முக்கியமான இடம் கமலுக்கு உண்டு''என்கிறார் யூகி சேது!

'மர்மயோகி'யில் கமல் ஒரு அகோரி கேரக்டர் செய்வதாக இருந்தார். கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட தாடி வளர்த்தது அதற்காகத்தான். 'சாமா சானம்' என்றுதொடங்கும் பாடல் ஒன்றைக்கூட இதற்காகத் தயார் செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி' டிராப் என்றவுடன் தாடியை எடுத்துவிட்டார்!

நன்றாகத் தமிழ் பேசும் ஹீரோயின்களை கமலுக்கு மிகப் பிடிக்கும். தமிழ்க் கதாநாயகிகள் அதிகம்வருவதில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அதனால்தான் அபிராமியையும் சினேகாவையும்அழைத்துத் தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார்!

'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்'பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில்,கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!

பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்தார் கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதன்முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது!

முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!

4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி-யில் கமலின் பிறந்த நாளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம் நடத்தினார்கள். ஒரு நடிகரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நடத்தப்பட்ட முதல் கவியரங்கம் அதுதான்!

'ஆளவந்தான்' ரிலீஸின்போது, 'இனிமேல் 100 நாட்கள் எல்லாம் படம் ஓடாது. சினிமா பார்ப்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி. சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அருகில் உள்ள பெட்டிக் கடையில் வாழைப்பழம் கிடைக்க வேண்டும்' என்று சொல்லி, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!

'யாரையாவது டின்னருக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம் கேட்கப்பட்டபோது, 'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து, ஆட்டுப் பாலும் நிலக்கடலையும் பரிமாற விருப்பம்' என்று பதில் சொன்னார்!

'நாகேஷ், தன்னுடைய திரையுலக காமெடி வாரிசை உருவாக்காமல் போய்விட்டார். அந்தத் தவறை நானும் செய்ய மாட்டேன்!' அண்மையில் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான காரணமாக நண்பர்களிடம் கமல் பகிர்ந்து கொண்டது இது!

சென்னை புறநகரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டுவதற்காக கமல் இடம்வாங்கிப்போட்டிருக்கிறார். அனைத்துவிதமான தொழில் நுட்பங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும், கேளிக்கை பூங்காக்களும், ரெஸ்டாரென்ட்டுகளும் அங்கு இருக்கும்!


தமிழ் சினிமாவை 'கோலிவுட்' என்று பலரும் சொன்னாலும் கமல் அந்த வார்த்தையை உச்சரிக்க மாட்டார். அப்படிச் சொல்லவேண்டாம் என மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!

வீட்டில் நான்கு கார்களை வைத்திருக்கும் கமல்ஹாசன் புதிதாக ஹம்மர் ஹெச்2 என்னும் காரை 1.8 கோடி ரூபாய் விலையில் வாங்கியிருக்கிறார். இது ஸ்டாலின் வைத்திருக்கும் ஹம்மர் ஹெச்3 காரைவிட காஸ்ட்லி!
'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!

விகடன் டீம்

Saturday, November 7, 2015

ஐயா, பேசியது போதும் காரியத்தில் இறங்குங்கள்!.....சிந்தனைக் களம் » தலையங்கம்



இது தீபாவளிப் பருவம். ஆடைகள், தங்க, வெள்ளி நகைகள், நுகர்வுப் பண்டங்கள் என்று அனைத்தின் விற்பனையும் உச்சத்தில் இருக்க வேண்டிய நேரம். ஆனால், பொருளாதாரச் சுணக்கம் காரணமாகப் பல்வேறு துறைகளிலும் தொழில், வர்த்தக நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை, விற்றுமுதல் போன்றவை சுணங்கிக்கிடக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டுக்கான வரவு - செலவுக் கணக்குகளை வெளியிட்ட நிறுவனங்களில் சரிபாதிக்கும் மேல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருவாய் குறைந்திருக்கிறது. இது நிறுவனங்களின் நிகர லாபத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் லாபம் குறைந்துவிட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 7% வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அயல்நாடுகளில் உள்ள தங்களுடைய விற்பனை அல்லது உற்பத்திப் பிரிவுகளிலிருந்து வருவாய் பெறும் இந்திய நிறுவனங்களுக்கு, உலக அளவிலான பொருளாதார மந்தம் காரணமாக வருவாயில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்த தடுமாறிக்கொண்டிருக்கின்றன. மேல்வரிசை நிறுவனங்கள் தங்களுடைய எல்லாவிதச் செலவுகளையும் குறைத்துவருகின்றன. உலக அளவில் நுகர்வு குறைந்திருப்பதாலும் சீனத்திலிருந்து அளவுக்கு அதிகமாகக் கொண்டுவந்து குவிப்பதாலும் உருக்கு, உலோகம் போன்ற துறைகளில் விற்பனைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக் காரணங்கள் தவிர, உள்நாட்டிலும் பல அம்சங்கள் தொழில், வர்த்தகத்துக்கு அனுகூலமாக இல்லை. வீடு, அடுக்ககம் போன்ற விற்பனைத் துறையில் தேவையைவிட அளிப்பு அதிகமாகிவிட்டது. எனவே, கூவிக்கூவி விற்க வேண்டியிருக்கிறது. வங்கிகளும் லாபம் ஈட்ட முடியாமல் இருக்கின்றன. உள்நாட்டிலும் நுகர்வுப் பண்டங்களுக்கும் இயந்திரங்களுக்கும் கிராக்கி அதிகரிக்காததால் இந்தச் சரிவுத் தொடர் சுழல்வட்டமாகவே நீடிக்கிறது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறங்களிலும் தேவையிருந்தும் பொருட்களை வாங்குவதைத் தள்ளிப்போடுகின்றனர்.

உலக அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்திய அரசால் மாற்ற முடியாது. ஆனால், உள்நாட்டில் தேவைகளை அதிகப்படுத்த அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் அரசுத் துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்குவது, புதிய வேலைகளை மேற்கொள்வது, கையில் உள்ள திட்டங்களை முழு மூச்சுடன் செய்துமுடிப்பது போன்றவை நிச்சயமாக அரசு கையில்தான் இருக்கின்றன. பொருளாதாரத்தை முடக்கிவிட அரசு நடவடிக்கை எடுத்தால்தான், உள்நாட்டில் வேலைவாய்ப்பும் நுகர்வும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதார பலமே உள்நாட்டு நுகர்வும் சேமிப்பும்தான். அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் பல திட்டங்கள் இன்னும் மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகளின் அனுமதிக்காக இன்னமும் காத்திருக்கின்றன. பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. யார் நடவடிக்கை எடுப்பது? நிலையற்ற இச்சூழலில் தனியார் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். அரசுதான் அடித்தளக் கட்டமைப்பில் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு உதாரணம், கட்டுமானத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைத்தது. இது நல்ல விஷயம். ஆனால், நிலம், வீட்டு மனை, அடுக்ககம் போன்றவற்றைக் கட்டி விற்பனை செய்வோர் விலையைச் சிறிது குறைத்தால்தான் விற்பனை சூடுபிடிக்கும். யார் அவர்களிடம் பேசுவது? அரசு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால், பேச்சு சத்தம்தான் எப்போதும் கேட்கிறது. பொருளாதாரம் சத்தத்தால் பெருகாது ஐயா!

Friday, November 6, 2015

காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம் .......... வெ. சந்திரமோகன்

Return to frontpage




கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.

‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.

சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.

முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!...vikatan

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறை அமைச்சரை நீக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Return to frontpage

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்திய முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். அமைச்சரின் தூண்டுதலால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் விஜயபாஸ்கருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்ளூரில் மக்கள் நலப் பணிகளை செய்வதில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள், கருப்பட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, கணேசன் ஆகியோர் தங்கள் பகுதியில் மருத்துவமனை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது இல்லத்தில் அனுமதி வாங்கி சந்தித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அவர்களை வீட்டுக்குள் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘ எனக்கு எதிராக கொடி பிடிக்கிறீர்களா? வலையர் (முத்தரையர்) சாதியை சேர்ந்த உங்களால் என்னை எதுவும் செய்யமுடியாது’’ என்பதில் தொடங்கி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

பெண் என்றும் பார்க்காமல் இப்படி திட்டுவது சரியா எனக் கேட்ட போது, ஊராட்சி ஒன்றியத் தலைவர் கெங்கையம்மாள் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக காவல் நிலையத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். மாறாக அமைச்சர் தூண்டுதலில் அவர்கள் மீண்டும் மிரட்டப்பட்டுள்ளனர்.

முத்தரையர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரைக் கண்டித்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் கூடுதலான முத்தரையர்கள் புதுக்கோட்டை நகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, மீமிசல், திருமயம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 20 மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் அவர்களுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதிமுகவில் தமக்கு பிடிக்காதவர்களை அவர்களின் சமூகத்தின் பெயரைக் கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அமைச்சர் திட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை அதிமுக ஆதரிக்கிறதா என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.

அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் 'வேதாளம்' - அதிரும் 20 தெறிப்புகள்! ......ஸ்கிரீனன்



இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது 'வேதாளம்'. அப்படத்தைப் பற்றிய தகவல்கள்:

* இரண்டு கெட்டப்களில் நடித்திருக்கிறார் அஜித். படத்தின் தற்போதைய காலகட்டத்தில் 'விநாயகா' என்ற பாத்திரத்திலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் 'வேதாளம்' என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் பாத்திரத்தின் பெயரைப் படத்தின் பெயராக வைக்கலாம் என்று சிவாவிடம் சிபாரிசு செய்திருக்கிறார் அஜித்.

* ஆக்‌ஷன் கதை என்றாலும் காமெடி அதகளம் அதிகமாக இருக்கும் என்கிறது படக்குழு. சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ‘ஆதித்யா டி.வி.’ தாப்பா, மகேந்திரன் என ஒரு பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. அஜீத் - சூரி இருவர் மட்டுமே நடித்த மிகப்பெரிய காமெடி சீனை மட்டும் இரண்டு நாட்களுக்குப் படமாக்கியிருக்கிறார்கள்.

* 'வேதாளம்' படத்தின் டீஸரைப் பார்த்து, இது பேய் படம் என்று அனைவருமே நினைத்தார்கள். ஆனால், இது பேய் படமல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது படக்குழு.

* அஜித்தைப் போன்று நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று பெண்கள் ஏங்கும் வகையில் அஜித் - லட்சுமி மேனன் காட்சிகளை இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

* 'வீர விநாயகா' பாடல் தான் படத்தின் முதல் பாடலாக அமையவிருக்கிறது. கொல்கத்தாவில் படுவிமர்சையாக கொண்டாப்படும் விநாயகர் சதுர்த்தியின் போது இப்பாடலை அஜித் பாடி ஆடுவது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஷோபி மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். லட்சுமி மேனன், சூரி இருவரும் அஜித்துடன் இப்பாடலில் ஆடியிருக்கிறார்கள்.

* மொத்தம் 100 நாட்களில் படப்பிடிப்பு முடிப்பது என்று திட்டமிட்டார்கள். இடையே ஒரு சில தடங்கல்கள் ஏற்பட, இறுதிகட்டத்தில் இரவு, பகலாக பணிபுரிந்து மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

* சென்னை, கொல்கத்தா, இத்தாலி ஆகிய மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. சென்னையில், பெரம்பூர் பின்னி மில், மீனம்பாக்கம் பின்னி மில், மோகன் ஸ்டுடியோ, கிண்டி ரேஸ் கோர்ஸ், வடபழனி மலர் ஹாஸ்பிட்டல், ஃபிலிம் சிட்டி, மணி மஹால், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

* கொல்கத்தாவில் விக்டோரியா அரண்மனைக்கு அருகிலும், ஹவுரா பிரிட்ஜிலும் வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. கொல்கத்தாவில் வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

* 'ஆதவன்' படத்தில் வரும் கப்பல் காட்சி படமாக்கப்பட்ட இடத்திலேயே இப்படத்தில் வரும் ஒரு கப்பல் காட்சியும் படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.

* அஜித்தின் தங்கையாக நடித்திருக்கும் லட்சுமி மேனனின் கதாபாத்திரப் பெயர் 'தமிழ'். ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

* கால் டாக்ஸி நிறுவனம் நடத்தி வருவபவராக நடித்திருக்கிறார் சூரி. அவரிடம் டிரைவராக பணிபுரியும் பாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

* 'வேதாளம்' பாத்திரக் காட்சிகளில் ஸ்ருதிஹாசன் மற்றும் சூரி இருவருமே கிடையாது. லட்சுமி மேனனும் ஒரு சில காட்சிகளில் தான் வருவார். 'வேதாளம்' பாத்திரத்தின் நண்பராக அப்புக்குட்டியும், தந்தையாக தம்பி ராமையாவும் நடித்திருக்கிறார்கள்.

* இப்படத்தில் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. கிண்டி ரேஸ் கோர்ஸில் ஒரு சண்டைக்காட்சி, பெரம்பூர் பின்னி மில்லில் இரண்டு சண்டைக்காட்சிகள், ஃபிலிம் சிட்டியில் ஒரு சண்டைக்காட்சி, மோகன் ஸ்டுடியோவில் இரண்டு சண்டைக்காட்சிகள், இத்தாலியில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கி இருக்கிறார்கள். அஜித்தின் நண்பரான சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

* அஜித்தும், லட்சுமி மேனனும் ஹவுரா ரயில் நிலையத்தில் வந்திறங்கும் காட்சி தான், அஜித்தின் முதல்காட்சியாக படத்தில் வரவிருக்கிறது.

* அஜித் - ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் என்பதே கிடையாது. 'நீ நல்லவன், அதனால உன்னைப் பிடிச்சிருக்கு' என்ற வசனத்தை அடிக்கடி அஜித்தைப் பார்த்து கூறுவார் ஸ்ருதி ஹாசன். இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். பால சரவணன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோர் ஸ்ருதிஹாசனோடு வரும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.

* கொல்கத்தா ரோட்டில் அஜித் - வில்லன்கள் துரத்தல் காட்சியிலும் மற்றும் இத்தாலி கப்பலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் மிகவும் துணிச்சலுடன் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் அஜித்.

* உலகம் முழுவதும் இதுவரை 1000-க்கும் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தான் எத்தனை திரையரங்குகள் என்பதன் சரியான கணக்கு தெரியும்.

* டப்பிங்கின் போது காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, "மீண்டும் நாம ஒரு படம் பண்ணலாம் சிவா" என்று கேட்டிருக்கிறார் அஜித். எப்போது என்பது விரைவில் தெரியவரும்.

* நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இப்போதே அஜித் ரசிகர்கள் கட்-அவுட் எல்லாம் வைக்க தயாராகி வருகிறார்கள்.

* இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் போலந்து நாட்டில் வெளியானதில்லை. 'வேதாளம்' தான் முதன் முதலில் போலந்து நாட்டில் வெளியாகிறது.

காணாமல் போகும் குழந்தைப் பருவம்

Dinamani


By ரமாமணி சுந்தர்

First Published : 06 November 2015 01:29 AM IST


நமது நாட்டில், ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது மிகவும் சகஜம். திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே துரதிருஷ்டவசமாக கணவன் இறந்து விட்டால், அந்தப் பெண்ணின் தலை முடியை மழித்து, அவளை விதவைக் கோலம் பூண வைத்து, வாழ்நாள் முழுவதும் நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தியதைப் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆண்களைப் பொருத்தவரையில், மனைவி இறந்து விட்டால் இருக்கவே இருக்கிறது மறு கல்யாணம். இப்படிப்பட்ட பொம்மைக் கல்யாணங்கள் நாட்டில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளின் சராசரி திருமண வயது அதிகரித்துக் கொண்டு வருகின்றது என்றாலும், பதின் பருவ (டீன் ஏஜ்) திருமணங்கள் நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாத ஓர் உண்மை.
உலகிலேயே குழந்தைப் பருவத் திருமணங்கள் அதிகமாக நடப்பது வங்க தேசம், நேபாளம், இந்தியா போன்ற நாடுகளைக் கொண்ட தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தான் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
உலகளவில், 18 வயதிற்குள் உள்ள மணமகள்களில் மூன்றில் ஒருவர் இந்தியப் பெண் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது ஐக்கிய நாட்டு அமைப்பு (UNICEF). நமது நாட்டில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 15-18 வயது உள்ளவர்களில் சுமார் பத்து விழுக்காடு பெண்களும், 10-14 வயது உள்ளவர்களில் மூன்று விழுக்காடுப் பெண்களும் திருமணம் ஆனவர்கள். 10-19 வயது வரையுள்ள பெண்களில், 1.70 கோடி பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
பிகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், குஜராத், ஆந்திரம் - தெலங்கானா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதில் 15 வயது நிறைவடைவதற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் அடக்கம். நகரங்களைவிட கிராமப்புறங்களிலும், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களிலும், அதிகம் கல்வி பெறாத பெண்களுக்கும், பதின் பருவத்தில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இளம் வயதுத் திருமணங்களால் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று ஆய்வுகள் கூறுகின்றன. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், உடலும், மனமும் பக்குவமடையாத பருவத்தில் கருவுற்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தாங்களே குழந்தைப் பருவத்தைத் தாண்டாத நிலையில் கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பான உடலுறவு, குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இவர்கள் திருமணமான உடனேயே தாய்மை அடைவதற்கான வாய்ப்புகளும், அதிக எண்ணிக்கை குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. மிகவும் இளம் வயதில் ஏற்படும் மகப்பேறு, தாய் - சேய் நலனுக்கு ஆபத்து விளைவிக்கலாம்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் மனித உரிமைக்குப் புறம்பானது. இப்பெண்களால் முழுமையாகக் கல்வி கற்க முடிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்களைவிட மிக அதிக வயதான ஆண்களையே மணக்க நேரிடுகிறது.
அதன் காரணமாக குடும்பத்திலும், வெளி உலகத்திலும் இப்பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடிவதில்லை. இவர்கள் குடும்ப வன்முறைக்கும் அதிகமாக ஆளாகுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
1929-ஆம் ஆண்டே, இப்படிப்பட்டத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்பாடு செய்யும் சட்டம் (Child Marriage Restraint Act, 1929) ஒன்றை, ஆங்கிலேய அரசு நிறைவேற்றியது.
சாரதா சட்டம் என்று பரவலாக அறியப்பட்ட அந்தச் சட்டத்தில், பெண்களுக்குத் திருமண வயது 15 என்றும், ஆண்களுக்கு 18 என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டம் (Muslim Personal Law (Shariat) Application Act of 1937) ஒன்று, கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி குறைந்தபட்ச திருமண வயது என்ற நிபந்தனையின்றி, பெற்றோர்களின் அனுமதியுடன் இஸ்லாமியர்கள் எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1929-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், (இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு) பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1978-ஆம் ஆண்டு, குறைந்தபட்ச திருமண வயது பெண்களுக்கு 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் உயர்த்தப்பட்டது.
1929-இல் அமலுக்கு வந்த குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்பாடு செய்யும் சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டம், 2006 (Prohibition of Child Marriage Act, 2006 - PCMA) என்ற புதிய சட்டம் நவம்பர் 2007-லிருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய சட்டம், குழந்தைத் திருமணங்களை கட்டுப்படுத்துவதற்குப் பதில், தடுப்பதற்கான விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் படி, 18 வயதிற்குள் பெண்ணிற்கோ, 21 வயதிற்குள் ஆண்பிள்ளைக்கோ திருமணம் செய்து வைத்தால், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டம் இந்து, சீக்கிய, கிறிஸ்துவ மற்றும் சமண மதங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே. இஸ்லாமியர்களின் திருமண வயது அவர்களுடைய ஷரியத் மற்றும் நிக்காஹ் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விதிகளின் படி (personal law) தீர்மானிக்கப்படுகிறது.
தேசிய குற்றவியல் துறை வெளியிடும் புள்ளிவிவரங்களின்படி குழந்தைத் திருமணங்களைத் தடைச் செய்யும் சட்டம் 2006-இன் கீழ், 2014-ஆம் ஆண்டில் 280 குற்றங்களும், 2013-ஆம் ஆண்டில் 222 குற்றங்களும் மட்டுமே பதிவாகியுள்ளன. இத்தனை குறைவான எண்ணிக்கை குற்றங்களே பதிவாகியுள்ளன என்பது, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளையும், குழந்தைத் திருமணங்களை நடத்தி வைப்பவர்களைக் கைது செய்வதில் உள்ள கஷ்டங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஏன் அவசரப்படுகிறார்கள்? பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் பெண்ணை ஒருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள்.
திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பின்மை என்று எண்ணும் பெற்றோர்களும் உள்ளனர். பல கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததால், பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடிவதில்லை. பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் முடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
சிறு பெண்ணாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து விட்டால், வரதட்சணை குறைவாகக் கொடுத்தால் போதும் என்று கணக்குப் போடுபவர்களும் உண்டு.
பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிக்க வைக்க மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 1994-ஆம் ஆண்டில் ஹரியாணா அரசு, "அப்னி பேட்டி அப்னி தன்' (எனது பெண் எனது சொத்து) என்ற திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் படி, 18 வயது வரையில் திருமணம் ஆகாமல், உயர் நிலைக் கல்வியை முடிக்கும் பெண் குழந்தைக்கு கணிசமான தொகை வழங்குவதாக பெற்றோர்களுக்கு அரசு ஆரம்பத்திலேயே உறுதியளித்து, நிதிப் பத்திரம் ஒன்றை வழங்குகிறது.
ஹரியாணாவின் இத் திட்டத்தைத் தொடர்ந்து, பிகார், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், இமாசலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களும், மத்திய அரசும் (தனலக்ஷ்மி திட்டம்) நிபந்தனையுடன் ரொக்கப் பணம் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
உயர் நிலைப் பள்ளி இல்லாத கிராமங்களில் வாழும் பெண்களுக்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக பள்ளி விடுதிகள், பள்ளிக்குச் சென்று வர சைக்கிள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டப் பெண்களுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்கல்வி என்று, பெண்களின் திருமணத்தை குறைந்தபட்சம் 18 வயது வரையில் தள்ளி வைக்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆயினும் சட்டங்களினாலும், அரசின் திட்டங்களினாலும் மட்டுமே குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியாது. பெண் குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் மனோபாவம் மாற வேண்டும்.
பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க மட்டுமே பிறவி எடுக்கவில்லை. அவர்களாலும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் சாதிக்க முடியும் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பெண்களையும் சரிசமமாகப் படிக்க வைத்து அவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் மனித உரிமைக்குப் புறம்பானது. இப்பெண்களால் முழுமையாகக் கல்வி கற்க முடிவதில்லை.

இது இப்படித்தான்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 05 November 2015 01:40 AM IST


வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள மூன்று விதமான டீசல் கார்களின் புகை மாசு குறித்து சோதித்ததில், "குறிப்பிடத்தக்க விதிமீறல்' இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசு இந்தக் கார் நிறுவனத்துக்கு காரணக்கேட்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய வாகனங்கள் ஆய்வுக் கழகம் நடத்திய சோதனையில், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஜெட்டா, ஆடி ஏ4, வென்ட்டோ ஆகிய மூன்று வகை கார்களிலும் புகை மாசு தொடர்பாக இந்த நிறுவனம் உறுதி கூறிய அளவைவிடக் கூடுதலாக நச்சுப்புகை வெளிப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனை திடீரென நடத்தப்படவில்லை. அமெரிக்கா அரசு இந்த கார் நிறுவனத்தின் மோசடியைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு காருக்கும் 37,500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது. அதன்படி, அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ள 4.82 லட்சம் கார்களுக்கு மொத்தம் 1,800 கோடி அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40% வீழ்ச்சியடைந்து, வணிகமும் படுத்துவிட்ட நிலையில், இனி இவர்கள் மீண்டெழுவார்கள் என்பதே சந்தேகம்தான்.
இந்த கார் நிறுவனம் தனது கார்களில் ஒரு மென்பொருளைப் பொருத்தியுள்ளது. இந்த மென்பொருள் கார்கள் நின்ற நிலையில் இயங்கும்போது வெளிப்படும் புகையின் நச்சுப் பொருளை (கார்பன் மோனாக்ûஸடு, நைட்ரஜன் ஆக்ûஸடு, ஹைட்ரோ கார்பன் அளவை) கட்டுப்படுத்தும். ஆனால், வாகனம் சாலையில் ஓடும்போது இந்த மென்பொருள் இயங்காது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் புகையில் நச்சுப் பொருள் வெளியேறும்.
இந்நிறுவனம் நுகர்வோரிடம் உறுதி கூறும் அளவைக் காட்டிலும் 10% முதல் 40% அதிகமாக நச்சுப்புகை இருப்பதை அமெரிக்க வாகன ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் வோக்ஸ்வேகன் கார் விற்பனை நிறுத்தப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகள் இந்த நச்சுப்புகை குறித்து ஆய்வைத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்நிறுவனம் டீசல் கார்கள் விற்பதற்கு 2003 முதலாகவே தடை உள்ளது. பெட்ரோல் கார்கள் மட்டுமே அங்கே விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில், இந்தப் பிரச்னை எழுந்தவுடன் இந்தியாவும் இந்தக் கார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டு, தற்போது முடிவுகள் இந்நிறுவனத்தின் விதிமீறல்களை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் இத்தகைய நச்சுப்புகைக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்றால், இந்தியாவில் அவ்வாறான முக்கியத்துவம் இல்லை. இந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆடி ஏ4, வென்ட்டோ, ஜெட்டா டீசல் கார்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும், இந்த நிறுவனம் தங்கள் விற்பனையின்போது நுகர்வோருக்கு கூறும் அளவை விட நச்சுப்புகை அதிகம் என்பது அமெரிக்க ஆய்வின் முடிவு. ஆனால், அமெரிக்க நச்சுப்புகை அளவுகோல் மிகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதைவிட இரு மடங்கு அதிகம்.
தில்லி உள்ளிட்ட பல பெருநகர்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2.5 கிராம் கார்பன் மோனாக்ûஸடு நச்சுப்புகை அனுமதிக்கப்பட்ட அளவு. மற்ற நகர்களில் இன்னும் அதிகம். இந்த அளவும்கூட ஏட்டில்தான் உள்ளது, நடைமுறையில் இல்லை. இங்கு இதைக் கண்டறியும் நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு டீசல் கார் உற்பத்தியாளர் கூறிக்கொள்ளும் அளவைக் காட்டிலும் நச்சுப்புகை அதிகம் வெளிப்படும் என்றால், அந்தக் கார் தயாரித்த நிறுவனத்துக்கு என்ன அபராதம் என்பது குறித்து எந்தவிதமான தெளிவும் இந்திய அரசிடம் இதுவரை இல்லை.
ஜெனரல் மோட்டார்ஸ் 1.14 லட்சம் டவேரா கார்களை இந்தியாவில் விற்பனை செய்தது. இந்த டீசல் கார்கள் தரமற்றவை என்பது தனியார் அமைப்புகள் மூலம் வெளிப்பட்ட நேரத்தில், அனைத்து கார்களையும் இந்நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால், இதற்காக எந்தவிதமான அபராதமும் சட்டப்படி விதிக்கப்படவில்லை. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இது நடக்காது. அமெரிக்காவில் ஒரு வாகனத்துக்கு இவ்வளவு என அபராதம் விதிக்கப்படும். இங்கே அதுவே கையூட்டாகப் பெறப்படுமே தவிர, சட்டப்படி வசூலிப்பதற்கான எந்த விதிமுறையும் இதுவரையிலும் இல்லை.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களே நச்சுப்புகையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றன என்றால், ஏனைய நிறுவனங்களின் வாகனங்களுடைய நிலைமை அதைவிட மோசமாகத்தான் இருக்கும். ஆனால், சாலையில் அனைத்து கார்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலும், ஒரு லிட்டர் டீசலில் 0.005% சல்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி தில்லி உள்ளிட்ட 13 பெருநகரங்களில் மட்டுமே தரமான டீசல் விநியோகிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற நகரங்களில் விற்பனையாகும் டீசலில் இதைவிடக் கூடுதல் அளவில் சல்பர் உள்ளது. இதை நம்மால் சீர்மை படுத்தவும் முடியவில்லை. கட்டுப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை.
நச்சுப்புகை அளவு மட்டுமல்ல, கார் மற்றும் இரு சக்கர தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்காக நுகர்வோரிடம் சொல்லும் உத்தரவாதங்கள் பலவும் வெறும் ஏட்டில்தான் இருக்கின்றன. இரு சக்கரம், மூன்று சக்கர வாகன விற்பனையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோ மீட்டர் என்று சொல்லி விற்கிறார்கள். ஆனால், அது சாலையில் ஓடும்போது அவர்கள் சொன்னது உண்மையாக இருப்பதில்லை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாதவரை சட்டங்களும் விதிகளும் கையூட்டுப் பெறுவதற்குத்தான் உதவுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்காது. விழிப்புணர்வை யார் ஏற்படுத்துவது என்பதுதான் கேள்வி.

ஜெயிக்கப் போவது யாரு?


Dinamani


By ஆசிரியர்

First Published : 06 November 2015 01:24 AM IST


பிகார் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்டத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக பிகார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தாலும், பாரதப் பிரதமரே வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டிருந்ததாலும், பரபரப்பில் ஆழ்ந்தது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்துதான் இந்தியாவின் வருங்காலமே இருக்கப் போகிறது என்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் பொருத்தவரை, கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றுவிட முடியாவிட்டாலும், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையாமல் தடுத்தால் அதுவே மாபெரும் வெற்றியாக இருக்கும்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட ஐக்கிய ஐனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இப்போது "மகா கூட்டணி' என்ற பெயரில் இணைந்திருப்பதால், வாக்கு வங்கி அரிச்சுவடிக் கணக்கு அந்த அணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது. இந்தக் கூட்டணி 2014-இல் இருந்திருந்தால் 145 இடங்களிலும், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்.
மகா கூட்டணி இல்லாத நிலையில், பிகாரில் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் 31 இடங்கள் வெற்றி பெற முடிந்ததுபோல, இந்த முறை வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தலா 100 இடங்களில் மட்டுமே போட்டியிடும் நிலையில், அடுத்த சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக பா.ஜ.க. தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது என்பது சாத்தியம்.
பிரதமர் நரேந்திர மோடி பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்டியிருக்க வேண்டுமா என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இதுவரை எந்தவொரு பிரதமரும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்த அளவுக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. தில்லி சட்டப்பேரவைப் படுதோல்வி, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாத நிலைமை ஆகிய பின்னடைவுகளைப் புரட்டிப்போட்டு, தனது ஆட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க அவர் முயற்சிக்கிறார் என்பதைத்தான் அவரது பிரசாரம் காட்டுகிறது.
முதல்வர் நிதீஷ்குமாரைப் பொருத்தவரை, மகா கூட்டணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது, ஐக்கிய ஜனதா தளமும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனாலோ அல்லது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலோ, விரைவிலேயே நிதீஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும். அதேநேரத்தில், கணிசமான இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்வரானால், 2019-இல் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிப் பிரதமர் வேட்பாளராக நிதீஷ்குமார் இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
லாலு பிரசாத் யாதவின் மீதுதான் அத்தனை அரசியல் நோக்கர்களின் பார்வையும் குவிந்து கிடக்கிறது. பிகாரைப் பொருத்தவரை கணிசமான வாக்கு வங்கியுடன் கூடிய அரசியல் கட்சி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான். ஊழல் வழக்குகளில் சிக்கித் தேர்தலில் நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால்தான் முதல்வர் வேட்பாளராக நிதீஷ்குமாரை லாலு பிரசாத் யாதவ் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தனது ஆட்சியை "காட்டாட்சி' என்று வர்ணித்து, பா.ஜ.க.வைக் கூட்டணி அமைத்து வீழ்த்தியவர் நிதீஷ்குமார் என்பதை லாலு பிரசாத் யாதவ் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
சட்டப்பேரவைத் தேர்லில் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, "மகா கூட்டணி' மீண்டும் ஆட்சி அமைத்தால், அதனால் பலியாகப் போவது தனது அரசியல் வருங்காலம் மட்டுமல்ல, தனது குடும்பத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வருங்காலமும்கூட என்பது லாலு பிரசாத் யாதவுக்கு நன்றாகவே தெரியும். பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் செயல்படும் என்பதையும் அவரது தொண்டர்கள் உணராமல் இல்லை.
வாக்கு வங்கி அரிச்சுவடிக் கணக்கு நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்கிற நிலையில், பா.ஜ.க.வினர் நம்புவது லாலு பிரசாத் யாதவின் உள்குத்து வேலையால் ஐக்கிய ஜனதா தளம் பல இடங்களில் தோல்வியைத் தழுவக்கூடும் என்பதைத்தான். பலவீனமான காங்கிரஸ் போட்டியிடும் 41 இடங்களில் பெரும்பாலான தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்பதும் அவர்கள் எதிர்பார்ப்பு.
1980 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலைமை பிகாரில் ஏற்பட்டால் வியப்படையத் தேவையில்லை. பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு அதுதான்.÷
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை தோற்கப் போவது நிதீஷ்குமாரா, லாலு பிரசாத் யாதவா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. முடிவு எப்படி அமைந்தாலும் அது பிகாரில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்!

Thursday, November 5, 2015

அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் பதவி பறிபோகும்: மத்திய அரசு புதிய விதிமுறை

அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் பதவி பறிபோகும்: மத்திய அரசு புதிய விதிமுறை

First Published : 04 November 2015 01:03 AM IST
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான விதிமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது.
 அதேபோல உரிய முன் அனுமதியின்றி அதிக நாட்கள் விடுப்பில் இருந்தாலும் இந்திய ஆட்சிப் பணிகளில் உள்ள அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
 இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை ஓர் அறிவிக்கையை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகங்களுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்ஒஎஸ் அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்தால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிட்டதாக கருதி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இது தவிர உரிய அனுமதியின்றி நீண்ட நாள்கள் விடுப்பில் இருக்கும் அதிகாரிகள் மீதும், விடுமுறைக் காலம் முடிந்த பிறகும் பணிக்குத் திரும்பாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்கும்.
 அதே நேரத்தில் பணி நீக்க நடவடிக்கைக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு காரண விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். எனினும் உரிய அனுமதியின்றி ஓராண்டுக்கு மேல் விடுப்பில் இருந்தால் அவர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகியதாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
 இப்போதுள்ள விதிப்படி அரசு அனுமதித்த நாள்களை காட்டிலும் கூடுதலாக ஓராண்டு வெளிநாட்டில் ஓர் அதிகாரி தங்கியிருந்தால் அவர் தானாகவே பதவி விலகியதாக கருதப்படுவார். அதேபோல அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்காலம் முடிந்த பிறகு ஓராண்டு பணியில் இருந்து விலகியிருந்தால் அவர் பதவி விலகிவிட்டதாக கருதப்படுவார்.
 இப்போதைய நிலையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள், உரிய அனுமதியின்றி விடுப்பில் உள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெறும் 1,777 ரூபாயில் இனி விமானத்தில் பறக்கலாம்: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

வெறும் 1,777 ரூபாயில் இனி விமானத்தில் பறக்கலாம்: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

First Published : 04 November 2015 01:08 PM IST

ஏர் இந்தியா நிறுவனம் உள்ளநாட்டு விமான பயணத்துக்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி 1,777 ரூபாயில் இனி உள்நாட்டுக்குள் விமானத்தில் பறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணச் சலுகை வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்துக்குள்ளான பயணத்துக்கு மட்டுமே இது பொருந்தும்.
இம்மாதம் 7ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், நாட்டின் வட-கிழக்கு, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 50 இடங்களுக்கு, இத்திட்டம் உள்ளடக்கியது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மறுமணம் செய்யும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெறலாம்: ராஜஸ்தான் அரசு

மறுமணம் செய்யும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெறலாம்: ராஜஸ்தான் அரசு

First Published : 04 November 2015 04:33 PM IST
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் 2 குழந்தைதான் பெற வேண்டும் என்று இருந்த சட்டத்தை ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று சற்று தளர்த்தியுள்ளது.
மறுமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது என்று அம்மாநில அமைச்சரவை நேற்று முடிவெடுத்துள்ளது.
2000மாவது ஆண்டு ஜூன் மாதம் வெளியான அறிவிக்கையின்படி, ராஜஸ்தானில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் அரசு ஊழியர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை, அரசு ஊழியர்களாக இருப்போருக்கு 3வது குழந்தை பிறந்தால், அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஏதேனும் ஒரு காரணத்துக்காக மறுமணம் செய்து கொண்டால், அவர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கொள்கையை சற்று தளர்த்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

கற்பழிப்பில் பிறந்த குழந்தைக்கு, குற்றவாளியின் சொத்தில் உரிமை உண்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

logo

அலகாபாத்,

தாய் கற்பழிக்கப்பட்டதால், பிறந்த குழந்தைக்கு குற்றவாளியின் சொத்தில் உரிமை உண்டு என்று அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

உத்தரபிரதேச மாநிலத்தில், தன்னை ஒருவன் கற்பழித்து பிறந்த பெண் குழந்தையின் தலைவிதி, வாரிசு உரிமை தொடர்பாக ஒரு பெண் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பிரிவு விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

பொருத்தமற்றது

அந்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

இந்த வழக்கை பொறுத்தமட்டில், ஒருவர் எந்த விதத்தில் பிறந்தார் என்பது சம்பந்தம் இல்லாதது. ஒருவரின் வாரிசு உரிமைகள் என்பது, தனி நபர் சட்டத்தால் ஆளப்படுகிறது. இதில், வாரிசு உரிமை என்பது, ஒரு நபர் எந்த விதத்தில் பிறந்தார் என்பதைப் பொறுத்தது அல்ல.

புதிதாக பிறந்துள்ள குழந்தை– ஒரு ஆண், ஒரு பெண்ணை கற்பழித்ததின்மூலம் பிறந்ததா அல்லது ஒரு ஆணும், பெண்ணும் கருத்தொருமித்து தாம்பத்தியம் நடத்தி பிறந்ததா அல்லது வேறு விதத்தில் பிறந்ததா என்று ஆராய்வது பொருத்தமற்றது.

முறையற்ற உறவில் பிறந்தது

புதிதாக பிறந்துள்ள ஒரு குழந்தையின் வாரிசு உரிமை என்பது, தனி நபர் சட்டத்தின் மூலம் ஆளப்படும். அந்த வகையில், அந்த குழந்தை, உயிரியல் தந்தையின் முறையற்ற உறவால் பிறந்ததாக கருதப்படவேண்டும்.

உயிரியல் பெற்றோர் வழி வந்த சொத்துகளின் வாரிசு உரிமை என்பது சிக்கலான தனிநபர் சட்ட உரிமை ஆகும். இது சட்டத்தின்படியோ, வழக்கத்தின்படியோ காக்கப்படுகிறது.

சாத்தியம் இல்லை

கற்பழிப்பால் பிறந்த ஒரு மைனர் குழந்தையின் வாரிசு சொத்து உரிமையை பொறுத்தமட்டில், நீதித்துறை விதிமுறைகளை, கொள்கைகளை வகுப்பது என்பது சாத்தியம் இல்லை. கோர்ட்டு அத்தகைய முயற்சியில் இறங்கி, அறிவித்தால் அது சட்டத்திற்கு ஒப்பாகி விடும். அது இனி வரும் காலமெல்லாம் முன் உதாரணமாகி விடும்.

எனவே, இதில் இறங்குவது விரும்பத்தகுந்ததாக இருக்காது. எனவே இந்த சிக்கலான சமூக பிரச்சினையை உரிய சட்டமன்றம், கையாள விட்டு விடுகிறோம்.

உரிமை உண்டு

இந்த வழக்கை பொறுத்தமட்டில் குழந்தையை தத்துகொடுத்து விட்டால், அந்த குழந்தைக்கு தனது உயிரியல் தந்தையின் வாரிசு சொத்தில் உரிமை கிடையாது.

அந்த குழந்தையை யாரும் தத்து எடுக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. அந்த குழந்தைக்கு தனிநபர் சட்டத்தின்படி, தனது உயிரியல் தந்தையின் வாரிசு சொத்துகளில் உரிமை உண்டு.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் உயிரியல் தந்தை, அதன் தாயை கற்பழித்த குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்காக்கும் பணி 108

logo

உயிர்காக்கும் மருத்துவ பணி இறைபணிக்கு இணையாக கருதப்படுகிறது. இவர்கள் தங்களை உருக்கி, மற்றவர்களுக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தி போன்ற தியாக தீபங்கள். ஊரெங்கும் பண்டிகைகள் கொண்டாடுவார்கள். ஆனால், மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், தீபாவளி வருகிற 10–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ‘உன்னைக்கண்டு நான் ஆட, என்னைக்கண்டு நீ ஆட, உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி’ என்று மக்கள் அனைவரும் பட்டாசு போட்டு மகிழ்ந்து கொண்டாடினாலும், சில நேரங்களில் எதிர்பாராத நேரங்களில் சில நிகழ்வுகள் ஏற்பட்டு மக்கள் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்படலாம் என்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில் தீத்தடுப்பு சிகிச்சை வார்டுகள், சர்க்கரை நோய் மருந்துகளின் இருப்பு உயர்வு போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுவரும் பணிகள் 108 ஆம்புலன்சு சேவையில்தான் இருக்கிறது.

2008–ம் ஆண்டு தொடங்கிய இந்த இலவச சேவை ஏழை மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும், 684 ஆம்புலன்சுகள் 108 என்ற பெயரில் மருத்துவ சேவையாற்றுகிறது. தினமும் 6,500 பேர் மருத்துவ உதவிக்காக 108–க்கு போன் செய்கிறார்கள். விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்கள், திடீர் மாரடைப்பு போன்ற உயிர் காப்பாற்றவேண்டிய நிலையில் சீரியசாக இருப்பவர்கள், பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டியவர்கள் என்று அனைவரும் 108–ஐத்தான் நம்பியிருக்கிறார்கள். தினமும் 108–க்கு வரும் 65 ஆயிரம் அழைப்புகளில் 3,500 அழைப்புகள் ‘எமெர்ஜன்சி’ என்று சொல்லப்படும் ‘அவசர சிகிச்சை’ தேடுபவர்கள்தான். இந்த ஆம்புலன்சு பணியில் 3,500 பேர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புனித சேவையில் ஈடுபட்டுள்ள இவர்கள், தீபாவளி நெருங்கும் நேரத்தில் 20 சதவீத போனஸ் கேட்டு வருகிற 8–ந் தேதி இரவு 8 மணி முதல் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்வோம், 20 சதவீத போனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துவிட்டார்கள். இந்த சேவையை இயக்கும் நிறுவனம் நாங்கள் ஏற்கனவே ஊக்கத்தொகையாக ரூ.4,800 கொடுத்துவிட்டோம், இதற்குமேல் முடியாது என்று கூறிவிட்டது.

அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம் அரசை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. இதையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் கடந்த ஆண்டும் தீபாவளியின்போது இதுபோல 108 சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்ததைக்குறிப்பிட்டு, பொதுமக்களுக்கு ஆம்புலன்சு சேவை பாதிக்கப்படாத வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்ததையும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தொழிலாளர் துறையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் ஒரு சுமுக முடிவு ஏற்பட இருதரப்பும் முன்வரவேண்டும். வேலைநிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மக்களுக்கு மருத்துவ சேவைகள் தேவைப்படும் நேரத்தில், அதிலும் குறிப்பாக, தீபாவளி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லும் உயரிய சேவையை செய்யும் 108 ஆம்புலன்சின் சேவைகள் பாதிக்கக்கூடாது என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Wednesday, November 4, 2015

MARD wants MUHS to make mental health screening of residents mandatory Snehlata Shrivastav, TNN | Oct 24, 2015, 07.54PM IST

TIMES OF INDIA

NAGPUR: The central Maharashtra Association of Resident Doctors (MARD) is requesting the Maharashtra University of Health Sciences to make mental health screening of all Resident Doctors mandatory every six months.

Speaking to TOI, central MARD president Dr Sagar Mundhada said that this had become a need of the hour. "Residents work under tremendous pressure and stress. This leads to depression in them. At times they start resorting to alcohol and smoking to relieve the pressure. But once recreational activity lead to abuse of alcohol it can have detrimental effect. Recently the incident of JJ Hospital where three doctors were caught by police in drunken condition and were later punished by the authorities is an example," he said.


Depression due to various issues like working late hours or working for more than 48 hours at a stretch is a common phenomenon in residents. This causes irritation which indirectly leads into miscommunication or irrational behavior with the patient. Actually every medical college can insists a six monthly mental health screening of its residents on its own. But practically unless anything is made mandatory in our system no one be it authorities or the residents will on their own come forward to conduct this screening.

"And hence we have written to the MUHS vice chancellor Arun Jamkar to accept MARD's request and make the screening compulsory," Dr Mundhada said.

The issue is that right communication at right time between the patient's relative and the residents has now become key to minimize the incidents of assaults on doctors. It is in the interest of both doctors and patients, he said.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை

logo


கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், ஒரு முக்கிய முடிவாக ரூ.4 ஆயிரத்து 949 கோடி செலவில், மராட்டிய மாநிலம் நாக்பூரிலும், ஆந்திராவில் உள்ள மங்களகிரியிலும் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணியிலும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவக்கழகம் என்ற சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மிகவும், உயர்தரமான சிகிச்சைகளை அளிக்கும் வகையிலான வசதிகளை கொண்டதாக இருக்கும். இப்போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும், 960 படுக்கைகள் வசதி நோயாளிகளுக்காக இருக்கும். மருத்துவமனையோடு, மருத்துவ கல்வி பிளாக், ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் தனித்தனி பிளாக்குகள் இருக்கும். இது மட்டுமல்லாமல், பொதுவாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர்தர மருத்துவக்கல்வி வசதியும் இருக்கும்.

இந்த மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்து இருக்கிறதே!, தமிழ்நாட்டில் எப்போது தொடங்கப்படும்? என்ற பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இந்த 3 மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கும் முடிவு இப்போது அறிவிக்கப்பட்டது என்றாலும், இதற்கான அறிவிப்பு, 2014–ம் ஆண்டே வெளியிடப்பட்டது. நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம், அனைத்து மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த உடனேயே, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு உடனடியாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குங்கள், அரசின் சார்பில் இடவசதி மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் வழங்குகிறோம் என்று கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்பு முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, பிரதமரும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வாய்ப்புள்ள 5 இடங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்ப முதல்–அமைச்சர் பிறப்பித்த உத்தரவுக்கேற்ப, தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒவ்வொரு இடத்திலும், அரசுக்கு சொந்தமான அனைத்து வசதிகளையும் கொண்ட 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அனுப்பியது.

தமிழக அரசின் கருத்துருவை பெற்றுக்கொண்ட மத்திய அரசாங்க உயர்மட்டக்குழு, கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி தமிழ்நாட்டிற்கு வந்து 5 இடங்களையும் பார்வையிட்டு, தனது விரிவான அறிக்கையை மத்திய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்தது. ஆனால், மத்திய அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழக அரசும் தொடங்கப்போகும் குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்களும், உடனடியாக இந்த 5 இடங்களில் ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசாங்கம் இந்த ஆண்டே வெளியிட்டு, சிறப்பு நிதி ஒதுக்கி உடனடியாக தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிட்டால், இதுபோன்ற எந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே, உடனடியாக இந்த பணிகளை அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்நாட்டு நலனுக்காக மேற்கொள்ளவேண்டும்.

NEWS TODAY 20.09.2024