Thursday, February 18, 2016

சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...


சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...
Dinamani

By தி. இராசகோபாலன்

First Published : 17 February 2016 01:28 AM IST


பொழுது விடிகின்றபோது, ஒரு கையில் செய்தித்தாளும், மறுகையில் ஒரு குவளைக் காப்பியுடனும் விடிகின்றது. தலையங்கத்தைப் படித்துவிட்டுத்தான், பத்திரிகையின் மற்ற அங்கங்களுக்குப் போவது வழக்கம். காரணம் தலையங்கம்தான், நாட்டின் போக்கினையும் ஏட்டின் போக்கினையும் காட்டும். ஆனால், அண்மைக்காலமாகத் தலையங்கத்தை முந்திக்கொண்டு சின்னஞ்சிறார்களின் தலைகள், கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்குகின்றன அல்லது கிணற்றில் மிதக்கின்றன.
ஆனந்தப்பட்டுப் படிக்க வேண்டிய பத்திரிகைகளைக் கலங்கிய உள்ளத்தோடும், கசிகின்ற கண்களோடும் படிக்க வேண்டிய அவலநிலை யாரால் ஏற்பட்டது?
சென்ற தலைமுறையில் பிள்ளைகளுக்கு இரவு உணவு ஊட்டிய பின்பு, அவர்களைப் படுக்க வைத்து, அவர்கள் தலைமாட்டில் உட்கார்ந்து, அர்ச்சுனன் - அபிமன்யு போன்ற வீர புருஷர்களுடைய கதைகளைச் சொல்லி, அவர்களைத் தூங்க வைத்த பாட்டிமார்கள் இன்று எங்கே? வீர சிவாஜியின் தாய் ஜீஜீபாய் தாய்ப்பாலை ஊட்டும்போதே, ரஜபுத்திர வம்சத்தினுடைய வீர வரலாற்றையும் சேர்த்தல்லவா ஊட்டினாள்!
ராஜாளிப் பறவை கூட்டிலே இருக்கின்ற குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கின்றவரைதான், உணவுப்பொருள்களைத் தேடிக்கொண்டு வந்து ஊட்டும். இறக்கைகள் வளர்ந்த பிறகு தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகக் கூட்டிலேயிருக்கும் அக்குஞ்சுகளைத் தனது இறக்கையால் அடித்துக் கீழே தள்ளும். கீழே விழுந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு பறவை, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதல் முறையாக இறக்கையை விரிக்கும். அன்றிலிருந்து அது தன் இறக்கையால் வாழத் தொடங்கும்.
யானைகள் தம்முடைய கன்றுகளுக்குத் தண்ணீரில் நீந்தி வரும் பயிற்சி வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு கன்றுகளைத் தண்ணீரில் தூக்கிப் போட்டு, அவை தத்தளிக்கும்போது, துதிக்கையை நீட்டிக் காப்பாற்றும். இப்படியொரு பறவையும், யானையும் ஊட்டுகின்ற தன்னம்பிக்கையை, நம்முடைய பெற்றோர்கள் ஊட்டினால், ஏன் இத்தனை தற்கொலைகள்?
பகத் சிங்கின் பூதவுடலை இரவோடு இரவாக சட்லெஜ் நதிக்கரையில் வைத்து எரித்துவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பஞ்சாபிய தாய்மார்கள், விரைந்தோடி பகத் சிங்கின் ஈமப்படுக்கையில் இருந்த சாம்பலை எடுத்து வயிற்றில் பூசிக் கொண்டார்களே ஏன்? மாவீரன் பகத் சிங் போன்ற குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டும் என்பதற்காக அல்லவா? அத்தகைய தாய்மார்களின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா? இந்திய நாட்டிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடாத ஓரினம், சீக்கியம் இனம் என்று குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டது எவ்வளவு பொருத்தம்?
ஒரு காலத்தில் பாஞ்சாலங் குறிச்சியில் வாழ்ந்த தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்குப் பாலாடை மூலம் பாலூட்டும்போது, பாஞ்சாலங்குறிச்சி மண்ணையும் கரைத்து ஊட்டியது, வீரக் குழந்தைகளாக வளர வேண்டும் என்பதற்குத்தானே?
முன்காலத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் நீதிபோதனை என்றொரு பாடவேளை இருக்கும். எந்தப் பாடத்தை மாணவர்கள் மறந்தாலும், நீதி போதனைப் பாடத்தை மறக்கமாட்டார்கள். அது வயிற்றுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அன்று; வைர நெஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுத்த பாடமாகும். அந்த வகுப்புகளைக் கல்வியாளர்களே காணாமல் அடித்துவிட்டார்களே!
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்பொழுதாவது - ஏதாவதொரு முனையில், ஒருமுறை தற்கொலை முயற்சி தோன்றத்தான் செய்யும் எனச் சொல்லுகின்றனர் பெரிங் போன்ற உளநூல் வல்லுநர்கள். துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும் என்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.
ராமாயணத்தில் சீதாபிராட்டிக்கே அப்படியோர் அனுபவம் ஏற்பட்டது. தம்முடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அசோகவனத்தில், மாதவிக்கொடியைத் தூக்குக் கயிறு ஆக்கியபோது ஆச்சாரியனான அனுமன், ராமபிரான் பெயரைச் சொல்லிச் சீதையைக் காப்பாற்றினான். இதிலிருந்து ஆசிரியப் பெருமக்கள் நினைத்தால், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இளம்பிள்ளைகளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது தெரிகிறது அல்லவா? ஆனால், இன்று, சில ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் மாணவர்கள் தற்கொலைக்கு உள்ளாவது, இந்நாட்டின் அவலம் அல்லவா?
வயல்களில் நாற்று நடுவதற்குப் பெரும்பாலும் ஆண்களை விட மாட்டார்கள். பெண்கள் தாம் நடவு நடும் வேலையைப் பார்ப்பார்கள். ஏன் தெரியுமா? ஆடவர்களுடைய சூட்டுவிரலைப் பசும் நாற்றுகள் தாங்காது என்ற காரணத்தால், நடவு நடும் வேலை பெண்களிடம் விடப்படுகிறது. பயிர்கள்கூட வாடக்கூடாது, வதங்கக்கூடாது என்று சிந்தித்த பரம்பரையில் வந்தவர்கள், உயிர்களை வாட விடலாமா? மடியவிடலாமா?
மாணாக்கர்களுடைய அறிவைச் சாணை பிடிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அவர்களுடைய நெஞ்சுறுதியைக் கல்நாரால் இழுத்துக் கட்ட வேண்டியவர்கள் கல்வியாளர்கள். வைரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும்முறைமையடி பாப்பா என்று மகாகவி பாரதி பாடியதைப் படிப்பித்திருப்பார்களேயானால், இன்று மாணவிகள் கிணற்றிலே மிதந்திருக்க மாட்டார்களே!
இளம்பிள்ளைகளுக்கு உயிரின் அருமைப்பாட்டை ஹாலந்து நாடு (இன்றைய நெதர்லாந்து) எப்படிக் கற்பித்திருக்கிறது தெரியுமா? ஹாலந்து நாடு கடல்மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு. அதனால் கடல்நீர் உள்ளே வந்துவிடாமல், போல்டர்ஸ் (மதகுகள்) வைத்துத் தடுத்திருக்கிறார்கள். ஒருநாள் இரவில் பீட்டர் என்ற சிறுபையன், அந்த மதகு வழிப்பாதையில் வருகிறான். அப்பொழுது ஒரு போல்டரில் ஒரு துவாரம் ஏற்பட்டு, அதன் வழியே கடல்நீர் நகரத்துக்குள் வரத் தொடங்கியது. இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. ஓசை எழுப்பி யாரையும் சுப்பிட முடியாது.
அந்தச் சின்ன துவாரத்தில் தன் கட்டை விரலைச் செருகி, இரவு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுக்காமல் காத்துவிட்டால், பொழுது விடிந்ததும் மக்களுக்குத் தெரிய வந்துவிடும் என்று தீர்மானித்துக் கட்டைவிரலைச் செருகிவிட்டான்.
குளிர்மிகுந்த நாட்டில், விடியும்வரை பீட்டர், வைரமுடைய நெஞ்சோடு மதகருகே உட்கார்ந்துவிட்டான். பொழுது விடிந்தவுடன் மக்களுக்கு உண்மை தெரிய வரவே, பீட்டரைப் பாராட்ட வேண்டுமென்று, அவனைப் போய் ஆர்வத்தோடு அரவணைத்துத் தூக்க முயன்றனர். ஆனால், பீட்டர் குளிரில் விறைத்துப்போய் பிணமாய் விழுந்தான்.
உயிர் போவதாக இருந்தால் இப்படி அல்லவா போக வேண்டும் என்று உலகத்திற்குக் காட்டிவிட்டு இறந்தான். அவனுடைய தியாகம் என்றென்றைக்கும் நினைக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஹாலந்து அரசு, அவனுக்கு அங்கே ஒரு சிலை எழுப்பிக் கெளரவித்திருக்கிறது. உயிரின் விலை இன்னதென்பதை அந்தச்சிலை, இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்திக் கொண்டே அங்கு நிற்கிறது.
உலகத்தில் 16 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நிகழ்வதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாரதத்தில் மற்ற மாநிலங்களில் பசி, பட்டினி, வறுமையால் தற்கொலைகள் நிகழ்கின்றன. தமிழகத்தில், கல்விச்சாலைகளில் மன அழுத்தங்களாலும், வல்லுறவுகளாலும் நிகழுகின்றன.
அதுவும் ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே இரண்டு, மூன்று பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களேயானால், அக்குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது இயல்பாய் நடக்கிறது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சி, தற்கொலை முயற்சிகளுக்கு உந்து சக்தி ஆகிவிட்டது.
தற்கொலைக்குக் காரணமான பாலியல் பிரச்னைகள் சென்ற தலைமுறையிலும் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் தற்கொலை அளவுக்குக் கொண்டு சென்றதில்லை. பருவக்கோளாறுகளினால் கல்லூரி வளாகங்களில் நிகழ்ந்த சின்னஞ்சிறு குற்றங்கள், பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் போயின் மறைக்கப்பட்டன.
ஆனால், இன்றைக்குக் குற்றங்களைத் தொடர்ந்து செய்வதற்கென்றே இணையதளங்களும், வலைத்தளங்களும், கட்செவி அஞ்சலும் துணை செய்கின்றன. நிகழ்ந்த தவறுகளைப் படமெடுத்து, அதனைப் பாதிக்கப்பட்டவருக்குக் காட்டி, ஊரறிய, உலகறிய அவற்றை உலாவவிட்டுவிடுவேன் எனும் பயமுறுத்தல்களினால் தற்கொலைகள் மிகுதியாக நடக்கின்றன.
பெரிங் என்ற உளவியல் வல்லுநர், அமெரிக்க ராணுவத்தில் அடிக்கடி தற்கொலைகள் நிகழ்வதைக் கள ஆய்வு செய்தார். அதில் ராணுவத்தின் துறைசார்ந்த பொருள்களாலேயே, தற்கொலைகள் புரிந்து கொள்வதாகக் கண்டறிந்தார். தரைப்படை வீரர்கள் தாங்கள் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளாலேயே சுட்டுக்கொல்கின்றனர்.
கடற்படை வீரர்கள் கப்பல்களில் கட்டியிருக்கும் கயிறுகளாலேயே தூக்குப் போட்டுக் கொள்கின்றனர். வான் படைவீரர்கள் உயரத்தில் இருந்து குதித்து மாண்டு போகிறார்கள் எனக் கண்டறிந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால், மாணாக்கர்கள் கல்வி நிலையங்களை நடத்துகின்ற, கல்வி கற்பிக்கும் கல்வியாளர்களாலேயே, தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதாகக் கருத வேண்டியிருக்கிறது.
ஆக, தற்கொலைக்கு மிகுதியான காரணம், இளைஞர்கள் மனத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் எனலாம். இந்த மன அழுத்தங்கள் மாணாக்கர்கள் மனத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஏற்கனவே உருவாகியிருந்தால் அதனைப் போக்குகிறவர்களாகக் கல்வியாளர்கள் திகழ வேண்டும்.
மாணவப் பருவத்தில் வகுப்பறைகளில் செவிமடுத்த சில செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான் எஃப் கென்னடி முதன் முதலில் செனட் தேர்தலுக்கு நின்று தோற்று, சோகமாக - சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தார். அப்பொழுது தன் பிள்ளையின் மன அழுத்தத்தைப் புரிந்துகொண்ட அவருடைய தந்தை ஜோசப் கென்னடி, அவரை எப்படித் தேற்றினார் தெரியுமா?
கோடீஸ்வரராகிய ஜோசப் கென்னடி மகனைத் தழுவிக்கொண்டு, மகனே, இந்தச் சின்ன தேர்தலில் தோற்றதற்கா கவலைப்படுவது? கவலைப்படாதே மகனே! என்னிடத்தில் இருக்கும் டாலர்களை வைத்து ஒரு புதிய அமெரிக்காவையே உருவாக்கி, உன்னை அதற்கு ஜனாதிபதி ஆக்குகிறேன், போ! என்று மகனின் மன அழுத்தங்களுக்கு மருந்து தடவினார் அந்த மாமனிதர்.
"சிறுபிள்ளையிட்ட வேளாண்மை, வீடு வந்து சேராது' என நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சிறு பிள்ளைகள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராமல் போனால் தப்பில்லை. ஆனால், இன்று சிறு பிள்ளைகளே வீடு வந்து சேருவதில்லையென்பதுதான் பிரச்னை.
கல்விப்பயிரை வளர்க்கும் கல்விப் பாத்திகளுக்குச் சென்ற பிள்ளைகள் வீடு வந்து சேராமல், காடு சென்றால், சுடுகாட்டுக்குச் சென்றால் மனக்குயில்கள் அழாதா?!
"துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும்.'

மலர்ந்த நெஞ்சங்களில் மனச் சலிப்புகள்...

Dinamani

By நெல்லை சு. முத்து

First Published : 18 February 2016 01:49 AM IST


ஒரு முறை ஆமூர், ஆரம்பப் பள்ளி ஒன்றில் "நிலாப் பயணம்' குறித்து உரையாற்றியபோது, "நிலா நிலா ஓடிவா' என்ற பாடலை மாணவர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்தேன். அனைவரும் ஒரே குரலில் முழுப்பாடலையும் பாடினார்கள்.
அது சரி. அமர்ந்த இடத்தில் சோம்பலாய் உட்கார்ந்தபடி - நிலாவை நில்லாமல் ஓடி வா, "இண்டு இடுக்கு' எல்லாம் புகுந்து வா, மலை மீது ஏறி வா, மளிகைச் சாமான் வாங்கி வா என்கிறோமே. சிறுவயதில் "நிலவே உன்னிடம் நெருங்குகிறோம்' என்று அல்லவா பாடம் படிக்க வேண்டும்?
ஒரு துணைக்கேள்வியும் கேட்டேன். மல்லிகைப்பூ கொண்டு வரச் சொல்லி மாணவிகள் கேட்பது சரி. தலையில் சூடிக் கொள்ளலாம். மாணவர்களுக்கு எதற்கு பூ என்று வினவினேன். பளிச்சென்று ஒரு பதில். கிராமப்புற மாணவர். ஏழு வயது இருக்கலாம். முழங்காலைக் கட்டி, தரையில் அமர்ந்தபடியே, "சாமிக்குப் போட, சார்' என்றாரே பார்க்கலாம். அந்த சமயோசிதப் புத்தி நகர்ப்புறங்களில் சற்றுக் குறைவுதான்.
நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அறிவுத் தேடலில் சளைத்தவர்கள் அல்லர். பெர்முடா முக்கோணம், வேற்றுக்கிரகவாசிகள், கருந்துளை விண்மீன்கள், பறக்கும் தட்டுகள், மறுபிறவி, இரட்டை பிரபஞ்சம், புழுத்துளை அண்டங்கள் போன்ற அறிவியல் அதிசயங்களை ஆர்வமுடன் சந்தேகங்களாகக் கேட்கின்றனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களோ விண்வெளி விஞ்ஞானி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும் என்று கேட்பதும் முறைதான்.
சமீபத்தில் கோவை, தனியார் கல்லூரி ஒன்றில் அறிவியல் கண்காட்சி விழா மேடையில் அறிவியல் நண்பர் ஒருவர் மாயாஜால வித்தைகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டிக் கொண்டு இருந்தார். மாயாஜாலம் நடத்துவோர் தங்கள் கைகளில் "சித்து வேலைகள்' தயார் ஆகும் வரை, பார்வையாளர்களிடம் வெறுமனே கேள்விகள் கேட்பது வழக்கம். அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் உத்தி இது.
அதற்காக, தமிழில் ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியிலும் அலைபரப்பாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பெயர்களை நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொன்றாக அடுக்கிக் கேட்டார். மாணவர்களோ கொஞ்சமும் அயராமல் "கோரஸாக' சரியான விடை அளித்தனர்.
அசந்து போனேன். மூளைக்குள் "இதையெல்லாம்' எவ்வளவு கருத்தாகப் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்? மாணவப் பருவத்தின் இந்த "தகவல்'களால் வாழ்வில் பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் கிடையாதே. இளைஞர்களின் அறிவுத் திறனுக்கும் இழுக்கு அல்லவா?
உள்ளபடியே கல்லூரி மாணவர்களில் நூற்றுக்கு நாற்பது பேர்தான் நம் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். எஞ்சியவர்கள் தங்கள் சார்புச் சித்தாந்தங்களையே விவாதப் பொருள் ஆக்குகின்றனர். உயர்நிலைப் பள்ளியிலோ 50-60% மாணவர்கள் அறிவியல் உரைகளால் சிந்திக்
கிறார்கள்.
நடுநிலைப் பள்ளிகளில் 60-70% பேர் அறிவியல் செய்தியையும் கிரகித்துக் கொள்கிறார்கள். ஆரம்பப் பள்ளியினரோ நூற்றுக்கு 90 பேர் அப்படியே உள்வாங்குகிறார்கள். அவர்களை விட பிஞ்சு மழலைகள்தாம் நூற்றுக்கு நூறு முழுமையாக மனதில் பதியம் இடுகிறார்கள்.
ஒருமுறை, மதுரையில் குடியரசு முன்னாள் தலைவர் கலாமை அரசு விருந்தினர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. அங்கு ஒரு தனியார் கல்லூரிக்கு அறிவியல் உரை நிகழ்த்த வந்ததைக் கூறினேன். "பள்ளிக்கூடங்களுக்கு எல்லாம் போங்க' என்றார். மூன்றே வார்த்தை. அவர் எனக்கு இட்ட இறுதிக் கட்டளை, இன்றும் நிறைவேற்றி வருகிறேன்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் மாணவர்களை நல்லவர்களாகச் செதுக்க முடியும். அதன் பிறகு சட்டம், சாத்தான், ஆண்டவன் எவராலும் ஒருவரின் இயல்பினைத் திருத்தவோ மாற்றவோ இயலாது என்று அடிக்கடி கூறுவார் கலாம். அதனால்தான் கலாம் குடியரசுத் தலைவரான ஒன்றிரண்டு மாதங்களுக்குள் "இந்தியா 2020' கருத்தாக்கத்தினை ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கும், பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கும் பயன்படும்படி இரண்டு விதமாக மொழிபெயர்க்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்நூல்கள் உரிய காலத்தில் அரங்கேறின.
2012-ஆம் ஆண்டு இலங்கை அரசு "மும்மொழித் திட்ட'த்தினை அறிவித்த தருணத்தில் அங்கு சென்றிருந்த கலாம், நெல்சன் மண்டேலாவின் வாக்கினை நினைவு கூர்ந்தார்; "எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.' உண்மைதானே.
முதல் தேவை ஆரம்பப் பள்ளியில் தாய்மொழிக் கல்வி. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலக் கல்வி. கல்லூரிப் படிப்பில் இந்திய அல்லது அன்னிய மொழிகளில் ஏதேனும் புதிதாக ஒன்றை சேர்த்துப் படிக்கலாம்.
இந்த வகையிலும், கிராமப்புற மாணவர்கள்தாம் நகர்ப்புறங்களில் அமைதியாக சாதனைகள் படைத்து வருகிறார்கள். நகர்ப்புறப் பள்ளி, கல்லூரிகளோ தேர்ந்த மாணவர்களைத் "தயாரிக்க'ப் பாடுபடுகின்றன. அதிலும் தனியார் கல்விக் கூடங்கள், மாணவர் உற்பத்திச் சாலைகளாகவே மாறிவிட்டன. சாதி, மத, இன, மொழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு, தேர்விலும் "பாஸ் மார்க்' ஒதுக்கப்படவில்லை என்றால் தங்கள் "அடையாள'த்தைக் காட்டிப் போராட்டம் நிச்சயம். அதிலும் மாணவர்களிடையே மாநிலம் சார்ந்த குழுப்பிரச்னைகளும் உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.
சமீப காலத்தில் புதியதோர் அடையாளம் உதயம் ஆகி இருக்கிறது. அவர் உள்நாட்டவரா, அயல்நாட்டவரா என்று பார்த்தும் உசுப்பிவிடுவோம். போதாக்குறைக்கு, மாணவர்களும் வயதுக்கு ஒவ்வாத விமர்சனங்கள், தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் தர்க்கம் செய்கிறார்கள். "புரட்சி', "எழுச்சி', "மலர்ச்சி', "கிளர்ச்சி' என்று வெற்று அடைமொழி அட்டைகளைக் கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவானேன்?
மர்மமான முறையில் யார் இறந்தாலும், முதலில் அவர் எந்தக் கட்சிக்காரர் என்றுதான் பிரேதப் பரிசோதனை நடக்கிறது. சடலத்தின் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் ஆர்ப்பாட்டமே தொடங்கும். பிற்படுத்தப்பட்டவரையும் தாழ்த்தப்பட்டவர் என்றுதான் முழங்குவோம்.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எந்தப் பருவத்தினரின் சந்தேகச் சாவு என்றாலும் பிரேதத்தில், "பெண்மை' பறிபோனவரா என்று ஆராய்ச்சி நடத்துவோம். சிறுவர்களுக்கே கூட ஆண்மைப் பரிசோதனையில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இப்போது ஆண்மை-பெண்மை இவற்றுக்கு நடுவே இன்னொரு "இடைமை' ஆரம்பம் ஆகிவிட்டது. இந்திய மக்கள்தொகையில் 0.05% மூன்றாம் பாலினத்தவராம். இங்கிலாந்தின் மெக்காலே உருவாக்கிய மாதிரி, அங்குள்ள 6.5 கோடி மக்களில் 1.5 சதவீதத்தினர்க்கான சட்டம் போலவே தங்களுக்கும் இந்தியச் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் சிலர் அடம்பிடிக்கிறார்கள்.
இனப்பெருக்க அங்கீகாரமோ, இல்லறமோ, நல்லறமோ? தனி அறைக்குள் ஒரே பாலினத்தார் இருவர் நட்பாகச் "சேர்ந்து' இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு அரசுப் பதிவாளர் கையொப்பத்தையும் எதிர்பார்ப்பது ஏனோ?
6500-8500 கிலோ மீட்டருக்கு அப்பால் மேலை உலகில் 1600-2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தேவ குமாரரும், அண்ணலும் சொன்ன உபதேசங்களை இங்கு ஏற்றுக் கொள்கிறோம். ஐரோப்பா, அரேபியா ஆகிய சொற்களின் ஹீப்ரு மூலச்சொற்கள் முறையே "இரெப்' (இரவு), "அரப்' (இருள்) என்பது யாருக்கேனும் தெரியுமா? வட மேற்கில் "சிக்கிய' குருவின் போதனையும் வாளேந்தி வரவேற்போம்.
அதுமட்டுமா, கீழைக் கண்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் வெடித்த சிந்தனைகளையும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். உலகின் மிகப்பெரும் பரப்பு கொண்ட நாட்டில் நகர்ப்புறத் தொழிலாளர்களை மேட்டுக்குடி வர்க்கத்தினர் ஒன்றிணைத்தனர். உலகில் மக்கள்தொகை மிகுந்த நாட்டில் "மூலதனம்' தந்தோரின் பெயரில் விவசாய வர்க்கத்தினர் இன்னொரு பக்கம். இடையில், ஒடுக்கப்பட்டோர் வடகிழக்கின் "புத்த'மதிகளையும் போற்றுகிறோம்.
புறப்பட்ட நாடுகளில் இந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆன பின்னர், பரிணாம வளர்ச்சியில் தீவிரவாதப் பிரிவுகள் ஆகிவிட்டன. அவை இந்தியாவில் தலைப் பாகத்திலும், தலைநகரிலும், தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கி ஆயிற்று.
பொதுநல ஆர்வலர்களும், மாணவரிடையே பரப்பும் எதிர்மறைச் சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவேண்டும். இளைஞர்கள் அரசியல் அமைப்புகளில் பங்கெடுப்பது மனித உரிமை ஆகலாம். அதுவே மாணவர் உரிமை என்றும் வாதாடலாமா?
மக்கள் வரிப்பணத்தில் படிக்கச் செல்வோருக்கு எது முக்கியம்? கல்விக்கூடங்களில் படிப்பதால் மட்டுமே அவர்களுக்கு மாணவர்கள் என்று பெயர்.
அதிலும், விடுதி மாணவர் வகுப்பிற்கே வரவில்லை என்றால் நிர்வாகத்தால் அவரைக் கண்டிக்கவும் இயலாது. பெற்றோரை வரவழைத்து எடுத்துச் சொல்வதிலும் சிக்கல். ""பல "லகரங்கள்' பணம் கட்டி "சீட்' வாங்கி ஆயிற்று. படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் விடுதி அறைக்குள் "அசம்பாவிதம்' செய்து கொள்வேன்'' என்று மிரட்டும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்களாம்.
ஒருவகையில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் உடல் அல்லது வார்த்தை ரீதியிலான "ராக்கிங்'கிற்குத் தடை வந்துவிட்டது. படிப்பில் கவனம் செலுத்த விடாத செல்பேசிக்கும் தடை வந்தாயிற்று. மாணவரை அடிக்கக் கூடாது என்று ஆசிரியர்களுக்கே தடை விதிக்கப்பட்டு விட்டது.
அதுசரி, நோயாளிகள், உடல்நலம் பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். மாணவர்களோ உடலும் உள்ளமும் நலம் பெறுவதற்காகக் கல்விக் கூடங்களுக்கு வருகிறார்கள். பள்ளி வளாகங்களில் பெற்றோர் வருகிறார்கள். இந்த உள்ளூர் அரசியல்வாதிகள் ஏன் பரிவாரங்களுடன் கும்பலாக வருகிறார்கள்?
"நான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் - மாணவர்களது மலர்ந்த நெஞ்சங்களில் உங்கள் மனச் சலிப்புகளைக் கொட்டி அசுத்தப்படுத்தி விடாதீர்கள்' என்பார் கலாம். மாணவப் பருவத்தினரைப் படிக்க விடாமல், தற்கொலையைத் தூண்டும் அளவுக்கு ஒரு "மனச்சூழல்' தைரியம் தரும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இது பொருந்தும்.
"எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.'

ஊழியரல்லர் பணியாளரே!


Dinamani

By சமதர்மன்

First Published : 18 February 2016 01:51 AM IST


ஊதியம், பணி இந்த இரண்டு சொற்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொற்பமான ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு பணியினை செவ்வனே செய்து முடிக்கும் செயலே ஊழியம் ஆகும். ஊழியம் என்னும் சொல் சேவை எனவும் பொருள்படும்.
அதேவேளையில், ஒரு கணிசமான தொகையை மாத ஊதியமாக பெற்றுக் கொண்டு ஒரு வேலையை செய்வது பணி ஆகும். அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் பணி இத்தகையதே.
எனவே, அரசு வேலை செய்யும் கடைநிலைப் பணியாளர் முதல் மேல்நிலை அதிகாரி வரையிலும், துவக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரையிலும் உள்ள அனைவரையுமே அரசுப் பணியாளர் என்றே வகைப் படுத்த முடியும்.
அரசுப் பணியாளர்களுக்கு உரிய அகவிலைப் படி உயர்வு உ ள்பட பல பண பலன்களை அரசு பட்டியலிட்டு வழங்கியே வருகிறது. தனியார் நிறுவனப் பணியாளருக்கோ அல்லது சுயதொழில் புரிவோருக்கோ இத்தகைய பண பலன்கள் சாத்தியமற்றவையே.
அரசுப் பணியாளர்களை அரசு செல்லப் பிள்ளைகள் போல நடத்தி வந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து அரசுக்கெதிராக போராடவே அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களும் முன் வருவது அரசிடமும் பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
சம்பளம், சலுகைகளை மட்டும் உயர்த்திக் கேட்கும் இவர்கள், ஊதிய உயர்வுக்கு ஏற்ப பணியை அரசு அதிகப்படுத்தினால் ஏற்றுக்கொள்வதில்லை. தனியார் நிறுவனங்கள் பணிச் சுமையைக் கூட்டிய பின்பு தானே ஊதிய உயர்வினை அறிவிக்கின்றன.
அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களுக்கென இருக்கும் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், அரசு கீழ்க்கண்ட சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்தி நிர்வாகத்தை துரிதப்படுத்தலாம்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் அலுவலகம் வருவதை உறுதி செய்யவும், அலுவலகம் அல்லது பள்ளி முடியும் முன்பே வீட்டிற்கு செல்வதைத் தடுக்கவும் பயோ - மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறையை நடைமுறைப் படுத்தலாம்.
ஆண்டுதோறும் அரசளிக்கும் 100 நாள்களுக்கும் மேற்பட்ட விடுமுறைகளை அனுபவித்த பிறகும், போலியான மருத்துவக் காரணம் காட்டி கணக்கு வழக்கு இன்றி விடுப்பு எடுக்கும் அரசுப் பணியாளர்களால் நிர்வாகத் தேக்கம் ஏற்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாம்.
அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களின் பணிச் செயல்பாட்டைக் கண்காணிக்க அலுவலகம் மற்றும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தலாம்.
அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட குறைந்த அளவில் பணி செய்வோரைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அரசுப் பணியாளர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது பெரும்பாலான நேரங்களில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட வெறும் ஆணையாகவே இருப்பதால், சம்பளப் பிடித்தம், பதவி இறக்கம், பணி நீக்கம் என குற்றத்திற்கு ஏற்ப உடனடி தண்டனையை அரசு வழங்கலாம்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பொத்தாம்பொதுவாக முதலில் பணியில் சேர்ந்தோருக்கே முன்னுரிமை என 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பாணியில் வழங்காமல் தகுதி, திறமை உள்ள அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கலாம். இது அரசுப் பணியாளர்களிடையே போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்யும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
திறமையுடன் செயல்படும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கலாம். இதன்மூலம் திறமையற்ற அதிகாரிகள் உருவாவதைத் தடுக்கலாம்.
பணி நிரந்தரம் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்டு, தகுதி இருக்கும் வரையில் மட்டுமே ஒருவருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனையை அரசே பணியிடத்தில் நடத்தி மருத்துவ தகுதியற்றவர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (VRS) ஓய்வளிக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கையூட்டு மற்றும் கிம்பளம் பெறுபவர்கள் ஆதாரத்துடன் பிடிபடும் பட்சத்தில் அவர்களைப் பாரபட்சம் பாராமல் உடனடியாக பணி நீக்கம் செய்யலாம்.
அரசின் இது போன்ற நியாயமான நடவடிக்கைக்கு எதிராக கோஷம் போடும் அரசுப் பணியாளர் சங்கவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
லஞ்ச லாவண்யத்தில் திளைத்த அரசு அலுவலர்கள் தகுந்த ஆதாரத்துடன் பிடிபடும் வேளையில், அவர்கள் அதர்ம வழியில் சேர்த்த சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்.
சரி.. இது ஒரு புறம் இருக்க.. விஷயத்துக்கு வருவோம்.
மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில், மக்களுக்குரிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவை இங்கு அதிகமாக உள்ளது; ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தீர்வு காணப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களுடன் பொது மக்கள் கூட்டம் அலைமோதும் வேளையில், நிலைமையின் தீவிரத்தை உணராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஊழியரல்லர், வெறும் பணியாளரே.

நல்லார் ஒருவர் உளரேல்...


Dinamani

By வ.மு. முரளி

First Published : 16 February 2016 01:22 AM IST


முன்பின் தெரியாத பயணிக்காக தனது வாகனத்தை அடகுவைத்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதில் உங்களையே பெருமிதம் கொள்ளச் செய்யும் நிகழ்வு அது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கே.ரவிசந்திரன் (57), ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது ஒன்றுதான் அவருக்கு வருமானம்.
இரு மாதங்களுக்கு முன் ராமாபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்தார். அண்ணா சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஓட்டுநர் ரவிசந்திரன் அந்தப் பயணியை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். தவிர, பயணியின் மகனுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
அங்கு பயணியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலம் இருதயத்தில் "பேஸ் மேக்கர்' சாதனத்தை உடனடியாகப் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதற்கு சுமார் ரூ. 47 ஆயிரம் செலவாகும் என்ற நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பயணியிடம் அந்த அளவு பணமில்லை. சென்னைக்கு விரைந்து வந்த மகனும் குறைந்த அளவு பணமே வைத்திருந்தார்.
அப்போது ரவிசந்திரன் சற்றும் யோசிக்காமல், தனது பிழைப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆட்டோவை அடமானம் வைத்து பணம் திரட்டி மருத்துவமனையில் கட்டிவிட்டார். அதையடுத்து, அந்தப் பயணிக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவரும் உடல்நலத்துடன் ஊர் திரும்பிவிட்டார்.
இதையறிந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரனை பாராட்டி கெளரவித்தது. இந்தச் செய்தி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
அதன்பிறகு அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பல நல்லுள்ளங்கள் நிதியுதவி செய்ததால், தனது ஆட்டோவை அவர் மீட்டுவிட்டார் என்பது தனிக்கதை. ஆனால், முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்காக தனது ஆட்டோவை அடமானம் வைக்கும் பெருந்தன்மையும் காருண்யமும் யாருக்கு வரும்?
இதுபற்றி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1956-இல் இதே சென்னையில் நடந்த மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
சென்னையின் ஜெமினி ஸ்டுடியோ முன்பு அதிகாலை வேளையில் ஒரு சாலைவிபத்து. இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அனைவரும் அலுவலகத்துக்கு விரைந்துகொண்டிந்த நிலையில், யாருக்கும் காயமடைந்த இளைஞரைக் கவனிக்க நேரமில்லை.
அப்போது அந்த வழியே வந்த கூலிவேலை செய்யும் மூதாட்டி ஒருவர் அந்த இளைஞனைக் கண்டு பதைபதைத்தார். அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து, அந்த இளைஞரை அதில் கிடத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அந்த மூதாட்டி.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அந்த இளைஞர் உயிர் பிழைத்தார். அதுமட்டுமல்ல, மயங்கிக் கடந்த அந்த இளைஞரின் சிகிச்சைக்காக, தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார் அந்த ஏழைத் தாய்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த அந்த மூத்த பத்திரிகையாளர், எல்லாக் காலங்களிலும் இத்தகைய உத்தமமான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் அறிவதில்லை என்றார்.
சிந்தித்துப் பாருங்கள். அறிமுகமில்லாத மேற்கு வங்கப் பயணிக்காக தனது வாழ்வாதாரமான ஆட்டோவை அடமானம் வைத்த ஆட்டோ ஓட்டுநரும், சாலையில் கிடந்த இளைஞனைக் காப்பதற்காக தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்த மூதாட்டியும் எதற்காக அவற்றைச் செய்தார்கள்?
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் இலக்கியத்தில் இடம்பெற்றார்கள். அவர்களின் பரம்பரை நீட்சியா இவர்கள்? எதுவாயினும், தங்கள் எதிர்காலத்தைவிட நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இந்த இடத்தில் 20 அம்சக் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும், அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் ஆசிரியர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களது செயலின் அர்த்தமின்மை புரியும்.
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அவர்களின் போராட்டம் மக்கள்நலனைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.
மக்கள் அளிக்கும் வரிப்பணத்தில்தான் தாங்கள் ஊதியம் பெறுகிறோம் என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறந்ததால், அரசுப் பணிகள் பல நாள்களாக முடங்கிக் கிடக்கின்றன. இது கடமை தவறுவது அல்லவா? கடமையை நிறைவேற்றுபவருக்கே உரிமைகள் உண்டு என்பார் மகாத்மா காந்தி. அதை நமது தமிழக அரசுப் பணியாளர்கள் மறந்தது ஏன்?
சாலையில் அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டு வாடிய மூதாட்டி அளித்த மூக்குத்திக்கு, நமது அரசு ஊழியர்கள் பெறப்போகும் லட்சக் கணக்கான ஓய்வூதியம் நிகராகுமா?
நிர்வாக இயந்திரத்தின் உறுப்புகளான அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் ஒரு சதவீதம் பேர் கூட இல்லை. ÷ஆனால், இந்த நாடு உயிர்ப்புடன் திகழ்வது, தன்னலமற்ற சேவைக்கு உதாரணமான ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன், யாரோ ஓர் இளைஞனைக் காப்பாற்ற தனது மூக்குத்தியைக் கழட்டிக் கொடுத்த ஏழை மூதாட்டி போன்றவர்களால் தான்.
இதைத்தான், "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்று ஒளவைப் பாட்டி மூதுரையில் கூறிச் சென்றாரோ?

Wednesday, February 17, 2016

கேஜ்ரிவாலுக்கு எத்தனை மதிப்பெண்?



பாஜகவின் நெருக்கடிகளையும் கடந்து சரியான திசையில் செல்கிறது ஆம் ஆத்மி அரசு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்னால் டெல்லி அரசின் அமைப்பு குறித்து அலசுவது அவசியமாகிறது. டெல்லி முழு அதிகாரம் பெற்ற மாநிலம் அல்ல, மைய அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் வரும் ஒன்றிய ஆட்சிப் பகுதி (யூனியன் டெரிடரி). டெல்லியில் ஐந்து நகராட்சி அமைப்புகள் உண்டு. புதுடெல்லி மாநகராட்சி வாரியம் பகுதி மத்திய அரசின்கீழ் வருவது. இதன் நிர்வாகத்தில் டெல்லி அரசுக்கு மிகச் சிறிய பங்குதான் உண்டு. இவை தவிர, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய இதர மூன்று மாநகராட்சிகளும் மத்திய அரசின்கீழ் வருபவைதான். கன்டோன்மென்ட் நகராட்சி மற்றொரு தனி அமைப்பு.

டெல்லியில் காவல்துறை மைய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது. டெல்லி அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளை நிர்வகிக்கும் டெல்லி மேம்பாட்டு வாரியம் (டிடிஏ) மைய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. இதிலும் டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் இதன் தலைவர்.

காற்றில் விடப்படும் வாக்குறுதி

ஒவ்வொரு தேர்தலின்போதும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரப்படும் என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் கூறும், தேர்தலுக்குப் பிறகு மறந்து விடும். கடந்த தேர்தலின்போதும் பாஜக அளித்த வாக்குறுதி அப்படியே ஆனது. ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களால் நிர்வகிக்கப்படும் இதர மாநில அரசுகளையும் டெல்லி அரசையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் டெல்லி அரசின் அதிகார எல்லை வரம்புக்கு உட்பட்டதே. மைய அரசின் அதிகாரம் எங்கே முடிகிறது, மாநில அரசின் அதிகாரம் எங்கே துவங்குகிறது என்று பிரித்தறிய முடியாத சிக்கலான அமைப்பைக் கொண்டது டெல்லி.

2012 நவம்பரில் உருவாகி, 2013 நவம்பரில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குறுகிய கால ஆட்சி நடத்தியது ஆம் ஆத்மி கட்சி. 2015 பிப்ரவரி தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று - 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி கண்டு ஆட்சி அமைத்தது. ஊழலற்ற நிர்வாகம், இலவச வைஃபை, 500 பள்ளிகள், 20 கல்லூரிகள், டிடிஏ சீரமைப்பு, லோக் பால் சட்டம் எனப் பல வாக்குறுதிகளை வழங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அரசு, இந்த வரம்புகளுக்குள் என்ன செய்திருக்கிறது அல்லது செய்யவில்லை?

மின் கட்டணம், குடிநீர்

ஆட்சிக்கு வந்ததும், ஆம் ஆத்மி அரசு செய்த முதல் நடவடிக்கை - முந்தைய 42 நாள் அரசின்போது செய்ததுபோலவே குறிப்பிட்ட யூனிட்டுகள் வரை மின் கட்டணத்தைக் குறைத்தது, குறிப்பிட்ட அளவுக்குக் குடிநீரை இலவசமாக்கியது. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்குப் பெரும் பயனைத் தரும் இந்த நடவடிக்கை வரவேற்பு பெற்றது. மேல்தட்டு மக்களுக்கும்கூட இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. அதுமட்டுமின்றி, கடந்த ஓராண்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத வகையில் நிர்வகித்துள்ளது. குறிப்பாக, லட்சக்கணக்கான அடுக்கக வீடுகளுடன் உருவாக்கப்பட்ட துவாரகா பகுதியில் பெரும்பாலான பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் இருக்கவில்லை, அல்லது போதுமான அளவுக்கு இல்லை. எல்லாரும் நிலத்தடி நீரையும் தண்ணீர் லாரிகளையும் மட்டுமே நம்பியிருந்தனர். அங்கே இப்போது குடிநீர் விநியோகத்தில் பெருமளவுக்கு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர்க் கட்டணத்தைக் குறைத்தபோதிலும், விநியோகத்தை முறைப்படுத்தியதன் மூலம் டெல்லி குடிநீர் வாரியம் லாபத்தில் இயங்குவதாகவும் தெரியவருகிறது.

ஆம் ஆத்மி கட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், மின் துறையில் தனியார்மயத்தை அறிமுகம் செய்து மின் தடையைப் பெருமளவு போக்கியிருந்தது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. டெல்லியில் மின் தடை அறவே இல்லாத அல்லது அரிதாகவே தடை ஏற்படும் நிலைதான் உள்ளது.

போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொண்டால், போக்குவரத்துக் கழகப் பேருந்துகள்தான். 40 ரூபாய் பாஸ் வாங்கி, ஒரு நாள் முழுவதும் ஏசி இல்லாத எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம். 50 ரூபாய் பாஸில் ஏசி பேருந்து உட்பட எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம் என்பது டெல்லிக்கே உரிய சிறப்பு. ஓராண்டில் கட்டண உயர்வு ஏதும் இல்லை. முந்தைய அரசுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கட்டுவதில் முனைந்திருந்தன என்றால், இந்த அரசு வாக்களித்தபடி கடைக்கோடிப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேட்டரி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மெட்ரோவை இணைக்கும் வேன்கள் ஆகியவற்றைப் பரவலாக்கியுள்ளது. சில பேருந்துகளில் இலவச வைஃபை பெயரளவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி

சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஒற்றை, இரட்டை இலக்கத்தில் முடியும் வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களில் ஓடக் கூடாது என்ற சோதனை முயற்சி. ஜனவரி 1 முதல் 15 வரை மேற்கொண்ட இந்த முயற்சி கார் வைத்திருப்பவர்களுக்கு அதிருப்தி தருவதாக இருக்கலாம். ஆனால், சாலையில் அதிக கார்கள் இல்லாததால் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்து வோருக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்தது. இதே திட்டத்தை, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் மோட்டார் பைக்குகளையும் இதில் சேர்க்க இருப்பதாகவும் தெரிகிறது.

ஊழலை ஒழிப்பதற்காக இணையத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் கணிசமாக நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு துறையிடமும் ஓடுவதற்குப் பதிலாக ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்து, இணைய வழி அனுமதி பெறுவதற்கு வழி செய்தது. சாதிச் சான்றிதழை இணையவழி பெற வழி செய்தது. குடும்ப அட்டை முதல் வாகனப் பதிவு வரை சாமானிய மக்களின் பல்வேறு விண்ணப்பங்கள்மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. பிறப்பு இறப்புச் சான்றிதழ்களையும் இணைய வழியில் பெற முடியும். அரசு அலுவலகங்களில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கவும், லஞ்சத்துக்கு வழிசெய்த பல வேலைகளை இணையத்தின் மூலமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தகுந்த மாற்றமாகும்.

அதேபோல, அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அதிகாரமும் அதே அதிகாரிகளிடம் இருந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தலுக்கான நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டது. ஓராண்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. டெல்லி அரசின்கீழ் வரும் 38 மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஒரு மருத்துவரைக் கொண்ட சிறிய மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறும் திட்டங்கள்.

சோதனையே சாதனை

அமைச்சராக இருந்த தோமர், போலிச் சான்றிதழ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும், ஆசீம் அகமத் கான் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டதும் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள். ஊழல் குற்றச்சாட்டு வீடியோ வெளியானதும் அமைச்சர் நீக்கப்பட்டார், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, இது வேறெந்தக் கட்சியும் அரசும் செய்யாதது என சோதனையை சாதனையாக மாற்றிக்கொண்டார் கேஜ்ரிவால்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்விக்குப் பிறகு, கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று சொன்னது சம்பிரதாயத்துக்காகவே என்பது அடுத்த ஓராண்டில் நிரூபணம் ஆனது.

ஆம் ஆத்மி கட்சி உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த லோக் பால் மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா முந்தைய மசோதாவிலிருந்து மாற்றப்பட்ட வடிவம்தான். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அதேபோல, மாநகராட்சிகள், டெல்லி மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளைச் சீரமைக்கும் வாக்குறுதியையும் டெல்லி அரசு எளிதாகச் செய்துவிட முடியாது. புதிய பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதற்கும் நிலத்துக்காக மத்திய அரசின் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும். டெல்லி அரசு - துணை நிலை ஆளுநர் (மத்திய அரசு) மோதல்கள் தொடரும் நிலையில், இவையெல்லாம் எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைக் கணிப்பது சிரமம்.

அரசியல் ரீதியாகப் பார்த்தால் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கு நெருக்கடியும் கொடுக்கிறார், நெருக்கடிக்கும் ஆளாகிறார். உள்கட்சி விவகாரத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போதே அரசியல் விவகாரக் குழுவை ஓரங்கட்டிய கேஜ்ரிவால், அடுத்த சில நாட்களில் தந்திரமாகக் காய் நகர்த்தினார். பெங்களூருவில் ஆயுர் வேத சிகிச்சைக்காகச் சென்றுவிட்ட நேரத்தில், அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் மீது தனது ஆட்களை விட்டு தாக்குதல் நடத்தச் செய்தார். அடுத்த சில நாட்களில் இருவரும் நீக்கப்பட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது ஒருகோடி ரூபாய் நன்கொடை கொடுத்த பிரசாந்த் பூஷண், கட்சிக்கு வழிகாட்டக்கூடிய சிந்தனையாளராக இருந்த யோகேந்திர யாதவ் இருவரையும் நீக்கிய பிறகு, கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டார். அரசியல் விவகாரக் குழுவின் வழிகாட்டல்படி நடந்திருந்தால் போலிச் சான்றிதழ் கொடுத்தவரோ, சாராய விநியோகம் செய்தவரோ ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆகியிருக்க முடியாது.

சரியான திசை

அதே நேரத்தில், யோகேந்திர யாதவ் போன்றவர்களின் ஆலோசனைப்படி தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள், பகுதிவாழ் மக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து, டெல்லிக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ‘டெல்லி டயலாக் கமிஷன்’ என்ற முறையை ஆம் ஆத்மி கட்சி அறிமுகம் செய்தது. அது இப்போது ‘மொகல்லா சபா’ என்ற வடிவிலும் ‘டெல்லி டயலாக் கமிஷன்’ வடிவிலும் முன்வைக்கப்படுகிறது. மக்களுடன் நேரடித் தொடர்பு, அவர்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படுவதாகக் காட்டுதல் என்னும் திசையில் சரியாகவே போய்க்கொண்டிருக்கிறார்.

ஓராண்டில் உடனடிப் பிரச்சினைகளில் ஆம் ஆத்மி அரசு ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டிருக்கிறது. தொலைநோக்குத் திட்டங்களை மதிப்பிட காலம் ஆகும்! அது மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இருக்க முடியும்.

- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

அரசு ஊழியர் போராட்டம் தீவிரம் ஆகிறது

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தங்கள் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கம் அருகே எழிலகம் வளாகத்தில் நேற்று காலை யில் திரண்ட அரசு ஊழியர்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வளாகத்துக்கு உள்ளேயே பேரணியும் சென்றனர். நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஏதாவது அறிவிப்புகள் வெளி வரும் என்று அவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் எந்த அறிவிப்பும் வராததை தொடர்ந்து அவர்கள் எழிலகம் வளா கத்தை விட்டு வெளியேறி பேரணியாக தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட புறப்பட்டனர். ஆனால் பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீஸார் எழிலகத் தின் அனைத்து வாயில்களையும் அடைத்து, தடுப்பு ஏற்படுத்தி, அரசு ஊழியர்கள் வெளியேறாமல் சூழ்ந்து நின்று கொண்டனர்.

இதனால் போலீஸாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை அகற்றிக் கொண்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். அவர்களை போலீஸார் தடுக்க முயல, இரு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் சிலர் மயங்கினர். சிலர் காயம் அடைந்தனர்.

வெளியேறிய அரசு ஊழியர்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் காமராஜர் சாலை முழுவதும் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீ ஸார் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கூறிய தாவது:

போராட்டத்தை இன்றுமுதல் இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறோம். பட்டதாரி மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் உட்பட பல சங்கத்தினருடன் இணைந்து புதிய போராட்டக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். நீதித்துறை ஊழியர் சங்கத்தினர், டாக்டர்கள் சங்கத்தினர், செவிலியர் சங்கத்தினர் உட்பட அரசு சார்ந்த பல முக்கிய சங்கத்தினர் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

17-ம் தேதி (இன்று) முதல் அவர் களும் எங்களுடன் இணைந்து போராட இருக்கின்றனர். தாலுகா வாரியாக தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம்

2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன், ஈரோடு பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கலாம் என்ற பரிந்துரையையும் தெரிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 தேதி தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், மத்திய அரசு எந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறது என்பது குறித்து தமிழக அரசுக்கு பதில் அளிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் தமிழக மக்கள் பெரும் பயனடைவர்.

எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...